புதன், 22 ஜூலை, 2015

முழு மதுவிலக்கு - Tamilnadu ? Possible?

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவைத் திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், '' உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘‘சொன்னதை செய்யும் கழக அரசு முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும்’’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
அதைப் படித்ததும் திமுகவின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
இவை மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால் இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?
2. 1971 ஆம் ஆண்டில் ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?
3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை... வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?
4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?
5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி, அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி இப்போது மட்டும் நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?
6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?
7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?
8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?
9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?
10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள். 2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில் 150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே.... இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?
இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பெண்கள் மற்றும் குழந்தைகளும் மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கிய உங்களையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த நீங்கள் இப்போது மது விலக்கு பற்றி பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான் என்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது. இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.
பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
தொடர்புடையவை

***********
அது 1971-ம் வருடம். கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த ராஜாஜி, மதுவிலக்கை ரத்து செய்தால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என கடுமையாக வாதாடினார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என கருணாநிதி கூறியபோது, அவர் மதுவிலக்கு கொள்கையில் அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்றே பெரும்பாலானோர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
1971 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தமிழக அரசியல் என்ன நடந்தது. மாநிலத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எப்படி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் நினைவு கூர்ந்துள்ளனர்.
அந்த வருடம்தான் (1971), மாநிலத்தின் பொருளாதார சூழலை காரணம் காட்டி அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது நாடு முழுவதிலும் குஜராத், தமிழகம் என இரு மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது.
மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்த போது கருணாநிதி, "நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், அது சாத்தியப்படாத சூழலில், தமிழக அரசு இந்த முடிவுக்கு வருகிறது. அதுவும் வருவாய் இழப்பை சரிகட்டுவதற்காகவே. மாநிலத்தின் வருவாய் இழப்பை மத்திய அரசு இழப்பீடு மூலம் சமன் செய்யாதபோது இதைத்தவிர வேறு வழி அரசுக்கு இல்லை" என்ற வாதத்தை முன்வைத்தார்.
கருணாநிதியின் முடிவு திமுக பொதுக்குழுவின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், திமுக அரசுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸ் மற்றும் ராஜகோபாலச்சாரியின் சுவதந்தரா கட்சிகள் கருணாநிதியின் முடிவை வலுவாக எதிர்த்தன. (1937-ல் சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதே ராஜாஜிதான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.)
இந்தச் சூழ்நிலையில்தான், 1971 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை மாலை கொட்டும் மழையில் கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ராஜாஜி கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார். அப்போது, மதுவிலக்கை ரத்து செய்வது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என கருணாநிதியிடம் மன்றாடியிருக்கிறார்.
இது குறித்து அப்போது செய்தி வெளியிட்ட தி இந்து, "கருணாநிதி - ராஜாஜி சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை இரு தலைவர்களுமே செய்தியாளர்களுக்கு தெரிவிக்கவில்லை" எனக் குறிப்பிட்டது.
மதுவிலக்கு ரத்தானது. அடுத்தடுத்த வாரங்களில் திமுக அதிகமாக விமர்சிக்கப்பட்டது. கட்சியின் நிறுவனர் அண்ணாதுரையின் அசைக்கமுடியாத மதுவிலக்கு கொள்கையை கருணாநிதி நசுக்கிவிட்டார் எனக் கூறப்பட்டது. இதற்க்கு சட்டப் பேரவையில் பதிலளித்த கருணாநிதியோ, "காங்கிரஸ் ஆளும் பல்வேறு மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை. அப்படியென்றால் காங்கிரஸ்காரர்கள் காந்திய கொள்கையை கைவிட்டுவிட்டார்கள் என்று அர்த்தமா" என வினவினார்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் காமராஜர், கருணாநிதியின் முடிவை 'பாசிஸ கொள்கை' என சாடியபோது, காமராஜர் ஏன் மைசூர், ஆந்திராவில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
கறுப்பு தினம்:
ஆகஸ்ட் 30, மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட தினத்தை தமிழ்நாடு மதுவிலக்கு செயலாக்க குழு கறுப்பு தினமாக அறிவித்தது. காங்கிரஸ், சுவதந்தரா கட்சிகள் கள்ளுக்கடைகளை சூறையாட முடிவு செய்தன. இதன் எதிர்வினையாக, 1973 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கிய எம்.ஜி.ஆருக்கு ராஜாஜியின் "நல்லாசி" கிடைத்தது.
ஆனால், பின்நாளில் முதல்வராக பதவியேற்ற பிறகு எம்.ஜி.ஆர். மது விற்பனையை அனுமதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக