வியாழன், 10 டிசம்பர், 2015

கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்”

பிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்தா, த்ரிஷா இல்லனா நயன்தாரா?

சமஸ்
COMMENT (7)   ·   PRINT   ·   T+  

அடிக்கடி நினைத்துப்பார்ப்பது உண்டு. உலகில் நம்மைப் போல வேறு எந்தச் சமூகமாவது சுயநலத்தையும் கோழைத் தனத்தையும் வீட்டுக்கல்வியாகக் கற்றுக்கொடுக்குமா என்று. கல்வியில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக நம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். செல்வத்தில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏன் வீரத்தில் மட்டும் அவர்கள் நம்மைவிடவும் கோழைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? எது போராட்டக் குணத்தைப் பொறுக்கித்தனம் என்றும் அரசியலை ஒரு சாக்கடை என்றும் சிறுமைப்படுத்திக் காட்டி அவர்களை ஒதுக்கி வளர்க்கச் சொல்கிறது?
ஊருக்கு ஊர், பள்ளிக்குப் பள்ளி, கல்லூரிக்குக் கல்லூரி மேடை போட்டு உரக்கக் கத்த வேண்டும்போல இருக்கிறது, “கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்” என்று. “உனக்கு கேரியர் முக்கியம்; உனக்கு எதிர்காலம் முக்கியம்!” எனும் வார்த்தைகளைப் போல பிள்ளைகளிடம் சுயநலத்தை விதைக்கும் ஆபாசமான வார்த்தைகள் ஏதுமில்லை. மேலும், உண்மையாகவே நம்முடைய பிள்ளைகள் மகத்தானவர்கள் ஆக வேண்டும் என்றால், அதற்கும் நாம் ஊட்டி வளர்க்கும் இந்தச் சுயநல வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமும் இல்லை.
1869-ல் போர்பந்தரில் காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. காந்தி ஏழையாகப் பிறந்தவர் அல்ல. 1893-ல் காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும்போது அவருடைய வயது 24. தென்னாப்பிரிக்காவுக்குப் புரட்சி செய்வதற்காக அவர் செல்லவில்லை. பொருளீட்டத்தான் சென்றார். ஓரிரு வருஷங்கள் தங்கி வழக்கறிஞர் பணியாற்றச் சென்றார். ஆனால், பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் பயணத்தில் அவருக்கு நேரிட்ட அவமானம் அவர் வாழ்க்கையை மாற்றியது. தான் எதிர்கொண்ட பிரச்சினை தன்னுடையது மட்டும் அல்ல; தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்தார். போராடினார். மாற்றத்தை உண்டாக்கினார். கோகலே அழைப்பின்பேரில் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 1915-ல் இந்தியா திரும்பியபோது காந்திக்கு வயது 45. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமையை அனுபவிப்பதற்கான, பொருளீட்டுவதற்கான, தன் வாரிசுகளுக்கான சொத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று நம்பும் காலகட்டம் அவர் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இந்தியா வந்த காந்தி சொத்துகளோடு வரவில்லை. அதன் பின்னரும் சாகும் வரை தன் குடும்பத்துக்காகச் சொத்து சேர்க்கவில்லை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல காந்தி.
1916-ல் கமலாவைத் திருமணம் செய்துகொண்டபோது நேருவுக்கு வயது 27. 1936-ல் இறந்தபோது, கமலாவுக்கு வயது 36. நேரு-கமலா தம்பதியின் 20 ஆண்டு தாம்பத்திய வாழ்வில் பெரும் பகுதி நேரு சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்தார் அல்லது சிறையில் இருந்தார். அலகாபாத்தில் அரண்மனை போன்ற மாளிகையில் பிறந்த நேரு, ஒருகட்டத்தில் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் விற்கும் முடிவுக்கு வந்தார். காந்தியிடம் ஆலோசனை கேட்டு நேரு எழுதிய கடிதங்களில் முக்கியமானவை தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பானவை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல நேரு.
கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸிலும் கிரேஸ் இன்னிலும் பொருளியலும் சட்டமும் படித்துவிட்டு வந்த அம்பேத்கர் காலமெல்லாம் சேரி சேரியாக அலைய தனிப்பட்ட தேவை ஏதும் அவருக்கு இல்லை. நாம் சொல்லும் ‘கேரியர்’ தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல அம்பேத்கர். எல்லாச் சொத்துகளையும் இயக்கத்துக்காக எழுதிவைத்துவிட்டு, 94 வயது வரை ஊர் ஊராக மூத்திரக் குடுவையுடன் பேசித் திரிந்த பெரியார் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல. இறக்கும் நிலையில் கையில் வெறும் ரூ.110 மட்டுமே வைத்திருந்த காமராஜரும், மாற்று உடை இல்லாமல் இடுப்பில் துண்டுடன் ஒரே உடையைத் துவைத்துக் கட்டிக்கொண்டு அரசியல் நடத்திய ஜீவாவும் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர்கள் அல்ல.
இந்தியாவில் மட்டும் அல்ல; அரசியலில் மட்டும் அல்ல; இன்னும் அறிவியலில் பொருளியலில் என எந்தத் துறையிலும் மகத்தான மாற்றங்களை உண்டாக்கியவர்கள் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர்கள் அல்ல. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் நியூட்டனும் ஐன்ஸ்டினும் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர்கள் அல்ல. அப்படியென்றால், நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவம்’ யாராக நம் பிள்ளைகளை உருவாக்கும்? ஏகாதிபத்தியத்துக்கும் அதிகாரத்துக்கும் சேவையாற்றும் அடிமைகளையே உருவாக்கும். தன் சட்டைப்பையில் கை வைத்தால்கூட எதிர்த்துக் கேள்வி கேட்கும் திராணியற்ற சோற்றுக்கு அடிவாங்கும் பிண்டங்களையே உருவாக்கும்!
காந்தி தன் வாழ்வில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்தார். நேரு தன் வாழ்வில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்திய வரலாற்றில் கலகக்காரர்களின் சின்னமாகவே ஆகிவிட்ட பகத் சிங் மொத்தமாக வாழ்ந்ததே 23 ஆண்டுகள்தான். தான் என்னவாக வேண்டும் என்பதை 12 வயதிலேயே பகத் சிங் தீர்மானித்துவிட்டார். ஆனால், பள்ளி-கல்லூரி வாழ்க்கை முடித்து இந்தச் சமூகத்தில் காலடி எடுத்துவைக்கும் வரை எந்தப் போராட்டத் திலும் ஈடுபடுத்திக்கொள்ளாத, சிறைகள் அல்ல; காவல் நிலையங்களைக்கூட மிதித்திடாதவர்களாக வளர்பவர் களையே ‘நல்ல பிள்ளைகள்’ என்று நாம் அழைக்கிறோம். நாட்டுக்கும் சமூகத்துக்கும் உழைக்க ஊரார் யாரேனும் தன் பிள்ளைகளை நேர்ந்துவிட வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். மாற்றம் எப்படி வரும்?
இப்படியெல்லாம் பொத்திப் பொத்தி ஏட்டுக் கல்வி ஒன்றே முக்கியம் என்று சுயநலமாக வளர்க்கப்படுவர்கள் எந்த அளவுக்கு சமூக அறிவு வளர்ச்சியில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்? சுழற்சி முறையில் குழுவாகச் சென்று படங்கள் பார்த்து விமர்சனம் எழுதுவது ‘தி இந்து’வில் வழக்கம். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்குச் சென்ற குழுவில் நானும் ஒருவன். என்னை அவ்வளவு அதிரவைத்த ஒரு படம் கிடையாது. ‘மேட்டர்தான் காதல்’ என்பதுதான் படத்தின் ஒரு வரி. படம் முழுக்க இதுபற்றித்தான் பேச்சு. பெண்களை இத்தனை கீழ்த்தரமாக இழிவுபடுத்தும் படத்தை நான் பார்த்ததில்லை. ஒரு காட்சியில் கதாநாயகன் கேட்கிறான், “நான் வெர்ஜின் பையன். எனக்கு வெர்ஜின் பொண்ணுதான் வேணும்.” அதற்கு அவனுடைய சித்தப்பா சொல்லும் பதில்: “வெர்ஜின் பொண்ணா? டேய், அதெல்லாம் டைனோசர் காலத்துலேயே அழிஞ்சுப்போச்சுதுடா.”
ஆர்ப்பரித்துக் கை தட்டுகிறது திரையரங்கம். 90/100 பேர் இளைஞர்கள். பெரும்பகுதியினர் மாணவர்கள். படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். படம் சக்கைப்போடு போட்டது. அடிப்படையில் இது ஒரு படத்தின் வெற்றி அல்ல; இன்றைக்கு நம் சமூகம் வந்தடைந்திருக்கும் இழிநிலையின், அதன் ஆன்மாவைப் பீடித்திருக்கும் நோய்க்கூறின் அப்பட்டமான வெளிப்பாடு. அரசியலற்றவர்களாக நம் பிள்ளைகளை எந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் நாம் என்பதற்கான சாட்சியம்! ஆண் வாழ்வின் சகஜீவி பெண். ஆனால், சகலத்தையும் காசாகப் பார்க்கக் கற்று வளர்பவர்கள் பெண்ணை வெறும் சதைப்பிண்டமாக மட்டும் பார்ப்பதில் வியக்க என்ன இருக்கிறது? இந்த வட்டத்துக்கு வெளியே வருபவர்களே விதிவிலக்குகளாக நம் முன் தெரிகிறார்கள்.
உண்மையான அரசியலின் ஆரம்பம் சக மனிதர் மீதான அன்பில் தொடங்குகிறது. தன் பிரச்சினைகளைச் சமூகப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் சமூகப் பிரச்சினைகளை தன் பிரச்சினைகளின் மையமாகவும் பார்க்கும் புரிதலில் தொடங்குகிறது. உண்மையான அன்பும் உண்மையான சுதந்திரமும் உண்மையான ஜனநாயகமுமே உண்மையான அரசியல். உண்மையான அன்பும் உண்மையான சுதந்திரமும் உண்மையான ஜனநாயகமும் ஒரு பெரும் புரட்சி. போராட்டத்தால் மட்டுமே அதை அடைய முடியும். அதற்கான கல்வி என்ன? “நீ காண விரும்பும் மாற்றமாக நீ இரு” என்கிறார் காந்தி!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

வானில் எவ்வளவு நட்சத்திரம்?

வானில் எவ்வளவு நட்சத்திரம்?

என்.ராமதுரை
COMMENT   ·   PRINT   ·   T+  
பஞ்சாங்கத்தைப் புரட்டினால் அஸ்வினி, பரணி, . . என்று தொடங்கி 27 நட்சத்திரங்களின் பெயர்கள் போடப்பட்டிருக்கும். இந்த 27 நட்சத்திரங்கள்தான் வானில் இருக்கின்றனவா? இரவில் வானைப் பார்த்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிகின்றனவே என்று கேட்கலாம்.
சூரியன் உதித்தது முதல் அஸ்தமிக்கின்ற வரையில் அது தினமும் வானில் பயணிக்கின்ற பாதை என ஒன்று உள்ளது. வானில் இந்தப் பாதையில்தான் குரு (வியாழன்) பெயர்ச்சியும் சனிப் பெயர்ச்சியும் நிகழ்கின்றன. இந்தப் பாதையில்தான் மற்ற கிரகங்கள் நகர்ந்து செல்கின்றன. 12 ராசிகளும்
இந்தப் பாதையில்தான் உள்ளன. அந்தக் காலத்தில் ஜோசிய சாஸ்திர வல்லுநர்கள் அந்தப் பாதையில் இருக்கின்ற நட்சத்திரங்களை மட்டும் கணக்கில்கொண்டு இவ்விதம் 27 நட்சத்திரங்களின் பட்டியலைத் தயாரித்தனர். மற்றபடி வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன.
இரட்டை நட்சத்திரங்கள்
நமது சூரிய மண்டலத்துக்குள் சூரியன் என்கிற ஒரே ஒரு நட்சத்திரம்தான் உள்ளது. நல்ல வேளை. சூரியனுக்குப் பக்கத்திலேயே இன்னொரு நட்சத்திரம் இருந்திருக்குமேயானால் பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் இந்த இரண்டு நட்சத்திரங்களையும் சேர்த்து எப்படிச் சுற்றுவது என்று திண்டாடியிருக்கும்.
வானில் இரட்டை நட்சத்திரங்கள் நிறையவே இருக்கின்றன. உண்மையில் சூரியன் போன்று ஒண்டிக்கட்டை நட்சத்திரங்கள் மிக அபூர்வமே. ஒரு காலத்தில் ஒண்டிக்கட்டை நட்சத்திரத்துக்குத்தான் கிரகங்கள் இருக்கும் என்றும் இரட்டை நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றிராது என்றும் கருதப்பட்டது. ஆனால், தற்போது கிரகங்களைப் பெற்றுள்ள இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் ஒண்டிக்கட்டை நட்சத்திரம்தான் பூமி மாதிரியான கிரகத்தைப் பெற்றிருக்க முடியும்.
பூமி போன்ற கிரகத்தைப் பெற்றுள்ள வேறு ஒண்டிக்கட்டை நட்சத்திரங்கள் எங்கே உள்ளன என்று தேடுவதற்கு வானில் நிறையவே இடம் இருக்கிறது.
சூரிய மண்டலத்தின் எல்லை என்பது சுமார் 1,800 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. அதற்கு அப்பால் உள்ள இடம் அண்டவெளி ஆகும். சூரியன் மாதிரியான நட்சத்திரங்களைத் தேட வேண்டிய பிராந்தியம் இதுதான். அண்டவெளி என்பது என்ன?
கோடானு கோடி கிரகங்கள்
சென்னை நகரில் எண்ணற்ற கட்டிடங்கள் உள்ளன. அது மாதிரியில் எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்டது அண்டம் ஆகும். நமது சூரியன் அடங்கிய அண்டத்துக்கு ஆகாய கங்கை என்று பெயர். ஆகாய கங்கை அண்டத்தில் சூரியன் உட்படக் குறைந்தது 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நமது அண்டத்தில் மட்டும் நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பூமி மாதிரியான கிரகங்களின் எண்ணிக்கை 1,100 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அதாவது, இவை உயிரின வாய்ப்பு கொண்டவை. சிவப்புக் குள்ளன் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டால் பூமி மாதிரி கிரகங்கள் 4,000 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரபஞ்ச வெளியில் நமது அண்டம்போல 10 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி அண்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு அண்டத்திலும் நமது அண்டத்தில் உள்ளதுபோலவே கிரகங்கள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆகவே, நமது பிரபஞ்சம் முழுவதிலும் பூமி போன்று கோடானு கோடி கிரகங்கள் உள்ளன. எனவே, எங்கோ இருக்கின்ற வேறு பூமியில் அல்லது பூமிகளில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம்.
இதற்கிடையே ஆராய்ச்சியாளர்கள் பூமி சைஸில் எங்கோ ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கிரகம் சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தை உகந்த தூரத்தில் அமைந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த சிவப்புக் குள்ளன் நட்சத்திரம் சூரியன் சைஸில் பாதிதான் உள்ளது.
கெப்ளர்–186 எப்
கெப்ளர் எனப்படும் பறக்கும் டெலஸ்கோப் மேற்படி கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. அந்தக் கிரகத்துக்கு கெப்ளர்-186 எப் என்று பெயர் வைத்துள்ளனர். அந்தக் கிரகம் பாறைகளால் ஆனது. அதில் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வானில் பூமி சைஸில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்தக் கிரகம் குறித்து மேற்கொண்டு எந்தத் தகவலும் பெற முடியவில்லை. கெப்ளர் டெலஸ்கோப் கடந்த 2009-ம்
ஆண்டிலிருந்து கிரக வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகும். கெப்ளரின் வேட்டை பற்றி பின்னர் விரிவாகக் கவனிப்போம்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘இன்னொரு பூமி’ விஷயத்தில் உள்ள ஒரு பிரச்சினை, அது பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது என்பதாகும். இங்கு நாம் ஒளியாண்டு என்றால் என்ன என்பதை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.
ஒளியாண்டு தூரம்
ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். சின்ன ஊர்களில் சைக்கிள் கடை எங்கிருக்கிறது என்று கேட்டால் ‘‘இங்கிருந்து கூப்பிடு தூரம்” என்பார்கள். உரக்கக் கூப்பிட்டால் காதில் விழுகிற தூரம் என்பது அதன் பொருள். அதாவது, தூரத்தை நேரமாக மாற்றிக் கூறுவார்கள். ஏதோ ஒரு ஊர் உள்ள தூரத்தைக் குறிப்பிடும்போது ராத்திரி ரயில் ஏறினால் காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பார்கள். இப்படிச் சொல்லும்போது அடுத்தவர் நன்கு புரிந்துகொண்டுவிடுவாரே தவிர, எவ்வளவு தூரம் என்பதை கி.மீட்டரில் சொல்லுங்கள் என்று கேட்க மாட்டார். ஒளியாண்டு அது மாதிரியானதே.
ஒளியானது ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி. மீ. தூரத்தைக் கடந்துவிடும். இதுவே ஒளி வேகம் ஆகும். ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பி ஓராண்டு காலத்துக்குப் பிறகு இன்னோர் இடத்தை அடைவதாக இருந்தால், எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அதுவே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த அளவில் ஒளியாண்டு தொலைவு என்பது சுமார் 9,46,000 கோடி கி.மீ. ஆகும். இதை 500 ஆல் பெருக்கிக்கொள்ளுங்கள். கெப்ளர்-186 எப் கிரகம் அந்த அளவு தூரத்தில் உள்ளது.
மேற்படி கிரகம் உள்ள தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்ல முற்பட்டால் யாருக்கும் புரியாது.
பேண்ட் தைக்க ஜவுளிக் கடையில் துணி எடுக்கும் இளைஞர் இவ்வளவு மீட்டர் வேண்டும் என்று கூறுவார். பிளவுஸ் தைக்கத் துணி எடுக்கும் பெண்மணி எவ்வளவு துணி வேண்டும் என்பதை செ.மீ-ல் கூறுவார். இந்த இருவருமே எவ்வளவு துணி வேண்டும் என்பதை மி.மீ-ல் கூற மாட்டார்கள்.
நட்சத்திரங்கள் அனைத்துமே மிகமிகத் தொலைவில் உள்ளதால் எந்த நட்சத்திரமானாலும் அதற்குள்ள தூரத்தை ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர். பல ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்குக் கிரகங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க இயலுமா என்று கேட்கலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அப்படிக் கண்டுபிடிக்கின்ற கிரகத்துக்குக் காற்று மண்டலம் இருக்கிறதா என்பதையும் விரைவில் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் அந்தக் காற்று மண்டலத்தை இங்கிருந்தபடி ஆராய முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆராய்ச்சித் துறையில் அந்த அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. எல்லாம் சமீப ஆண்டுகளில்தான்.
ஆனால், வேற்றுலகவாசிகள் இருக்கிறார்களா என்ற தேடல் கடந்த நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
(வியாழன்தோறும் தொடர்வோம்)

திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னையின் வெள்ளம்

இயற்கைதான் மனிதனை உருவாக்கியது. மனிதன் இயற்கையை உருவாக்க முடியாது. இயற்கையை நாம் என்னதான் சீரழித்தாலும் அது தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும். ஆறுகளும் அப்படித்தான். நாம் ஆக்கிரமித்தாலும் அது தன் இடத்தை அடைந்தே தீரும். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. தினமும் நம் வீட்டில் இருந்து குப்பைகளை ஆற்றில் வீசினோம். இப்போது அந்தக் குப்பைகளை நம் வீட்டுக்குள் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது ஆறு. வருந்தி ஆகப்போவது ஒன்றுமில்லை; அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
சென்னையின் வெள்ளம்
சென்னையில் 1976, 1985, 1996, 1998, 2005, 2009-ம் ஆண்டுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு களில் வந்த வெள்ளத்துக்குப் புள்ளி விவரங்கள் இல்லை. 1976-ல் செம்பரம் பாக்கம் ஏரியில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய வீடுகள் மூழ்கின. 1985-ல் அடையாற் றில் 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கரையோர வீடுகள் மூழ்கின. 1996-ல் அடையாற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீரும்; பூண்டி ஏரியில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. கார னோடை பாலம் உடைந்தது. 1998-ம் ஆண்டு வெள்ளத்தில் கொடுங்கை யூர் - பக்கிக்காம் கால்வாய் உடைந்தது. 2005-ல் ஒரேநாளில் 40 செ.மீ மழை கொட்டியது. கூவத்தில் 19 ஆயிரம் கன அடியும் அடையாற்றில் 40 ஆயிரம் கன அடியும் தண்ணீர் ஓடியது. பக்கிம்காம் கால்வாய், விருகம்பாக்கம் - அரும் பாக்கம் கால்வாய் உடைப்பெடுத்து தண் ணீர் ஓடியது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள்.
அடையாறு வெள்ளம் ஏன்?
இப்போது வந்த வெள்ளத்தைக் கடைசியாக 2005-ம் ஆண்டு வந்த வெள் ளத்துடன் ஒப்பிடுவோம். 2005-ல் கொசஸ் தலை ஆற்றில் ஓடிய தண்ணீர் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி. இப்போது ஓடிய தும் கிட்டத்தட்ட அதே அளவுதான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆற்றுப் படுகையின் அளவு சுமார் 50 மீட்டர் குறுகிவிட்டது. அந்தக் கொள்ளளவுக் கான சுமார் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறிவிட்டது. திருவள்ளூர், திரு வாலங்காடு, எல்லாபுரம், திருக்கண்டலம் உள்ளிட்டப் பகுதிகளில் ஏற்பட்ட வெள் ளத்துக்கு முக்கிய காரணம் இது.
2005-ல் அடையாற்றில் ஓடிய வெள் ளம் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி. இப்போது 20 ஆயிரம் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஓடியிருக் கிறது. ஆனால், அடையாற்றின் சீற்றத் தைத் தணிக்கும் பல்லாவரம், குரோம் பேட்டை, போரூர் ஏரிகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால் தண்ணீர் அனகா புத்தூர், பள்ளிக்கரணை, பொழிச்சலூர், பம்மல், குரோம்பேட்டை குடியிருப்பு களை மூழ்கடித்து நேராக அடையாற் றுக்கு வந்துவிட்டது. அடையாற்றின் அகலம் 10.50 - 200 மீட்டர். ஆனால், பொத்தேரி தொடங்கி திருநீர்மலை வரை சுமார் 20 கி.மீ தொலைவுக்கு அடை யாறு 30 மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அந்த 30 மீட்டருக்கான வெள்ளம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளை மூழ்கடித்துவிட்டது. நந்தம்பாக்கம் தொடங்கி மணப்பாக்கம் வரை சுமார் 10 கி.மீ வரை அடையாற்றின் படுகைகளை அரசே பட்டா நிலங்களாக மாற்றியது. நந்தம்பாக்கம், மணப்பாக்கம் மூழ்கி விட்டது. சென்னை நகருக்குள் சைதாப்பேட்டை தொடங்கி அடையாறு முகத்துவாரம் வரை ஆக்கிரமிப்புகள். சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மூழ்க முக்கிய காரணம் இதுதான்.
கூவத்தில் வெள்ளம் ஏன்?
கூவம் ஆற்றில் 2005-ம் ஆண்டு ஓடிய வெள்ளம் வினாடிக்கு 21,500 கனஅடி. தற்போது கேசவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றுக்குத் திறந்து விடப்பட்ட வெள்ளம் 13,113 கனஅடி மட்டுமே. கூவம் ஆற்றுப்படுகை புறநக ரில் மதுரவாயலில் தொடங்கி திருவேற் காடு வரை 50 சதவீதம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. நகருக்குள் எம்.எம்.டி.ஏ. காலனி தொடங்கி பல்லவன் சாலை வரை 20-40 சதவீதம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டப் பகுதிகள் எல்லாம் இப்போது வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
அழிவுக்கு ஆக்கிரமிப்பு ஒரு காரணம் என்றால் ஆறுகளை நாம் பராமரிக்காதது இன்னொரு காரணம். அடையாறு மற்றும் கூவம் இரு ஆறுகளிலும் சுமார் 10 - 15 அடி ஆழம் வரை சேறு மற்றும் திடக் கழிவுகள் நிரம்பியிருக்கின்றன. இந்த ஆறுகளில் 60 சதவீதம் சேறு தேங்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது பொதுப்பணித்துறையின் ஆய்வு அறிக்கை. இதனால், ஆற்றின் கொள் ளளவும் 60 சதவீதம் குறைந்தது. அந்த அளவுக்கான தண்ணீர்தான் ஊருக்குள் புகுந்துவிட்டது.
கால்வாய்கள் தரும் வேதனை
குடியிருப்புகளுக்குள் சாக்கடை தண்ணீர் புகுந்ததற்கு முக்கியக் கார ணம் கால்வாய்களின் சீரழிவுதான். பக்கிம்காம் தொடங்கி சென்னையில் இருக்கும் ஒன்பது பிரதான கால்வாய் களும் மிகப் பழமையானவை. இதுவரை ஒருமுறைகூட அவை தூர் வாரப் படவில்லை அல்லது ஆவணங்களில் மட்டுமே தூர்வாரப்பட்டன. பக்கிம்காம் மின் மூன்று கால்வாய்களும் ஓட்டேரி நல்லா ஓடையும் அதீத ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கின்றன. கடந்த 15 ஆண்டு களில் பக்கிம்காம் கால்வாய்களில் இருந்து கடலுக்கு செல்ல அமைக்கப் பட்ட சிறு கால்வாய்கள் பொறியியல்ரீதியாக திட்டமிடப்படாதவை. அவை நீரியல் ஓட்டத்துக்கு எதிராக அமைக்கப்பட்டுள் ளன. பழைய மகாபலிபுரம் சாலையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் நிறு வனங்கள், குடியிருப்பு நகரங்களுக் காக புதிய கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. அங்கு உற்பத்தியாகும் கழிவு நீரும் பக்கிம்காம் கால்வாய்க் குக் கூடுதல் சுமையாக அமைந்து விட்டது.
மூடிக்கொண்ட முகத்துவாரங்கள்!
கொசஸ்தலை, கூவம், அடையாறு இவற்றின் முகத்துவாரங்கள் முறையே எண்ணூர் (120 மீட்டர் அகலம்), நேப்பியர் பாலம் (150 மீட்டர் அகலம்), பட்டினப்பாக்கம் (300 மீட்டர் அகலம்), முட்டுக்காடு (100 மீட்டர் அகலம்) ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன. இங்கிருக்கும் ஆறுகளின் மட்டமும் கடல் மட்டமும் சமநிலையில் இருக்கின்றன. இதனால், இயல்பாகவே ஆற்றின் தண்ணீர் வேகமாக கடலுக்குள் செல்லாது. சென்னை கடற்கரையில் வடக்கில் இருந்து அடித்துவரப்படும் மணல் துறைமுகத்தின் தெற்கே மணல் மேடாக குவிந்துக்கிடக்கிறது. இதுவும் ஆற்று நீரை தடுக்கிறது.
சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சீற்றம் அதிகம் கொண்டது. இங்கு எழும் அலைகள் வேகமானவை; உயரமானவை. ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே இங்குக் கடல் அலைகள் உள்வாங்கும். இது ஓதம் எனப்படும். கடல் ஓதம் வாங்கும்போது மட்டுமே ஆற்று நீர் உள்ளே செல்ல முடியும். அடுத்து, கடல் நீரோட்டங்கள் (Rip Currents). இங்கு அக்டோபர் - பிப்ரவரி வரை மங்கோலியா, பர்மா பகுதியில் இருந்து வீசும் வடகிழக்குப் பருவக் காற்று அபாயம் நிறைந்தது. இது கடற்கரையையொட்டியே கடலுக்குள் சுமார் 2 ஆயிரம் நீரோட்டங்களை உருவாக்குகிறது. கடலுக்குள் குறுக்கும் நெடுக்குமாக வேகமான ஆற்றைப் போலச் செல்லும் இந்த நீரோட்டங்கள் சமவெளியின் ஆற்று நீர் கடலுக்குள் புகுவதைத் தடுக்கின்றன. இவை எல்லாம் இயற்கையான காரணங்கள்.
அடுத்து மனிதப் பிழைகள். சென்னை யில் தினமும் சேகரமாகும் 45 லட்சம் கிலோ குப்பைகள் மற்றும் 70 ஆயிரம் கிலோ கட்டிடக் கழிவுகளில் 40 சதவீதம் கூவத்திலும் அடையாற்றிலும் கொட்டப்படுகிறது. இந்தக் கழிவுகள் முகத்துவாரங்களை அடைத்துள்ளன. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு அணைக்கட்டின் சுவரைப் போல கடலுக்கு நதிக்கும் இடையே தடைபோடு கிறது. 1960-களில் சென்னை துறைமுகம் அருகே கடலுக்குள் கட்டப்பட்டத் தடுப்புச் சுவர்கள் ஆற்று நீர் கடலுக்குள் செல்லத் தடையாக இருக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
மேற்கண்ட மனிதப் பிழைகள் களையப்பட வேண்டும். ஒன்பது பிரதான கால்வாய்களையும் தூர் வார வேண்டும். பொதுப் பணித்துறை தொடங்கி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வரை சுமார் 12 துறைகள் மேற்கண்ட ஆறுகளின் சீரமைப்பு ஆய்வுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.100 கோடியை செலவிட்டுள்ளன. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அடையாறு முகத்துவாரம் அகலப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனால், அடையாற்றைத் தூர் வாரும் திட்டம் எதுவுமில்லை.
2014-15 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டம் ரூ. 1934 கோடியே 84 லட்சம் மதிப்பில் அறிவிக்கப்பட்டது ஓர் ஆறுதலான விஷயம். முதல் கட்டமாக ஆவடி அருகே பருத்திப்பட்டு அணையில் இருந்து கூவம் முகத்துவாரம் வரை 27.3 கி.மீ தொலைவுக்கு கூவம் ஆற்றை தூர் வாரி சீரமைக்க, கடந்த செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கூவத்தில் கழிவு நீரை தடுப்பது, திடக் கழிவு மேலாண்மையை மேம் படுத்துவது, நதியின் கொள்ளளவை மேம்படுத்திப் பராமரிப்பது, நதிக்கரை மக்கள் மறுவாழ்வு, மறு குடியமர்வு, நதியில் பல்லுயிர் பெருக்கம் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். மேற் கண்ட பணிகளைத் தீவிரப்படுத்த வேண் டும். கூவத்தை விட அடையாற்றில்தான் வெள்ள அபாயம் அதிகம். எனவே, அடையாற்றிலும் சீரமைப்பு பணிகளைத் தொடங்க வேண்டும். போர்க் கால அடிப்படையில் இந்தப் பணிகளை எல்லாம் முடுக்கிவிட்டால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ள அபாயங்களில் இருந்து சென்னையைக் காப்பாற்ற இயலும்.
(நீர் அடிக்கும்)

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

paris Global Meet

தம்பா பே டைம்ஸ் - அமெரிக்க நாளிதழ்

*
பாரிஸில் நடந்துவரும் பருவநிலை மாறுதல் தொடர்பான உச்சி மாநாடு, வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெறவிருக்கிறது. இந்நிலையில், பருவநிலை மாறுதல் தொடர்பான முழக்கங்களையும் தாண்டி சில உறுதிமொழிகளை உலகத் தலைவர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. எனினும், எதிர்காலத்தில் உலக அளவிலான வெப்ப நிலை 3.6 டிகிரி பாரன்ஹீட் உயரவிருக்கும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் தொடர்பாக, தீர்க்கமான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கி தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளும் வளர்ந்துவரும் நாடுகளும் பயணப்பட வேண்டியிருக்கிறது.
புவி வெப்பமயமாதல் பிரச்சினை பூதாகாரமாகி யிருக்கும் நிலையில், அதுதொடர்பாக எளிய மற்றும் துரித தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் போதுமான அளவில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், வளர்ந்துவரும் நாடுகள் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக பொறுப்புடன் நடந்துகொள்வதில் இன்னும் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.
எனினும், 170-க்கும் அதிகமான நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் தன்னார்வத் திட்டங்கள் அர்த்தமுள்ள நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் அதைக் கட்டுப்படுத்துவதில், சர்வதேச அளவில் பிற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கட்டாயத்தை இம்மாநாட்டில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் உருவாக்கியிருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் நாடுகள், மிக மோசமான தங்கள் தொழில்துறை செயல்பாடுகளால் மனித உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதை ஒப்புக்கொள்ளுமாறு இந்தப் பேச்சுவார்த்தைகள் நிர்ப்பந்தித்திருக்கின்றன. வளர்ச்சியடைந்துவரும் சிறிய நாடுகள், தங்கள் வளர்ச்சிக் கொள்கையில் இந்த விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிர்ச்சினையில் முக்கிய முடிவு எடுப்பதில் இன்னும் தடைகள் இருக்கின்றன. எனினும், பருவநிலை கொள்கை மேம்பாடு அடையும், தொழில்நுட்பம் மற்றும் பொது தனியார் பங்களிப்பு போன்றவற்றின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்பதான நம்பிக்கைகளை பாரிஸ் மாநாடு தந்திருக்கிறது.
பாரிஸ் மாநாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் காரணமாக, பருவநிலை மாறுதல் தொடர்பான விவாதம் பெரிய அளவில் நடந்துவருகிறது. பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக உள்நாட்டுத் தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிலை உருவாகியிருக்கிறது.
பருவநிலை மாறுபாடு விஷயத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதில் உலகத் தலைவர்கள், கூட்டு முயற்சியின் பலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எழும் வண்ணம் இந்த மாநாட்டை அவர்கள் நிறைவுசெய்ய வேண்டும். நூறாண்டுகளைக் கடந்த இந்தப் பிரச்சினைக்கு, வளர்ச்சியடைந்த நாடுகளோ வளர்ந்துவரும் நாடுகளோ சில வாரங்களில் தீர்வுகாண வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வின் பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், கடினமான பல முடிவுகளை அவை எடுக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், பருவநிலைக் கொள்கையை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதும், இவ்விஷயத்தில் பணக்கார மற்றும் ஏழை நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய விளைவுகள் எனலாம். பாரிஸ் மாநாடு இறுதிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும் தருணத்தில் நமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை இதுதான்!
தமிழில்: வெ. சந்திரமோகன்

எங்கள் மண் சென்னை: ஒருபோதும் வெளியேற முடியாது!

எங்கள் மண் சென்னை: ஒருபோதும் வெளியேற முடியாது!

டி.எல்.சஞ்சீவிகுமார்
COMMENT   ·   PRINT   ·   T+  

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
சென்னையின் துயரம் தீரவில்லை. பாதிப் பகுதிகளில்தான் வெள்ளம் வற்றியிருக்கிறது. வற்றியப் பகுதிகளில் கதறல்கள் வெடிக்கின்றன. பிணங்களை கட்டிக்கொண்டு அழுது துடிக் கிறார்கள் மக்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன. வீடுகளை துவம்சம் செய்து விட்டது வெள்ளம். லட்சக் கணக்கான வாகனங்கள் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. வீடுகளுக்குள் சேறு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆவணங்கள், சான்றி தழ்கள், புத்தகங்கள் எதுவுமே இல்லை. ஆனாலும் வானம் இன்னும் ஓயவில்லை. கருமேகங்கள் திரண்டு வந்து மிரட்டுகின்றன. அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடந்தது பேரிடர்தான். நாம் மீள நாளாகும். காலம் நம் காயங்களை ஆற்றும். ஆனால், மீண்டும் ஒரு வெள்ளம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள் நண்பர்கள். சமூக வலைத்தளங்களில் சென்னையை விட்டு வெளியேறிவிடுங்கள். குறைந்தபட்சம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறார்கள். சென்னையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இனி எந்த முதலீட்டாளர்கள் இங்கே வருவார்கள்? எந்த தொழிலும் செய்ய முடியாது. கிடைத்ததை எடுத் துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து விடுங்கள் என்றெல்லாம் வந்துவிழு கின்றன எச்சரிக்கைகள்.
நல்லது நண்பர்களே, உங்கள் அறிவுரைக்கு நன்றி. ஆனால், அந்த அளவுக்கு நன்றி இல்லாதவர்கள் இல்லை நாங்கள். சென்னையின் உப்புக் காற்று எங்கள் நன்றி உணர்வை பெருக்கி யிருக்கிறது. வந்தாரை வாழவைத்த நகரம் இது. உச்சங்களை உலகுக்கு அடை யாளம் காட்டிய மண் இது. நாம் நேசிக்கும் பூமி இது. இங்கிருந்து யாரும் ஒருபோதும் வெளியேற முடியாது. அப்படியானால் அடுத்து என்ன செய்வது? தீர்க்கமாக யோசிப்போம். உணர்ச்சி வசப்படாமல் யோசிப்போம். அறிவியல் பூர்வமாக யோசிப்போம்.
சென்னைக்கு வெள்ளம் புதிது அல்ல. கால வரலாற்றின் பல பக்கங்களை அது புரட்டிப்போட்டிருக்கிறது. எனவே சென்னையின் வெள்ளம் இயற் கையானது. ஆனால், இம்முறை ஏற் பட்டது இயல்புக்கு மீறிய மிகை வெள்ளம். இது மனித பிழைகளால் ஏற்பட்டது. இந்த வெள்ளத்துக்கு காரணங்கள் என்ன? பிரச்சினைகள் என்ன? தீர்வுகள் என்ன? வாருங்கள் தேடு வோம். இயக்கமாக கைகோத்து தீர்வு காண குரல் கொடுப்போம். முதலில் சென்னையின் ஆறுகள், பிரதான கால்வாய்கள் ஆகியவற்றின் அடிப்படை என்ன என்று முதலில் பார்ப்போம்.
சென்னையின் ஆறுகள்
கொசஸ்தலை ஆறு
ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் தொடங்கி காவிரிப்பாக்கம் ஏரி வழியாக எண்ணூரில் கடலில் கலக்கிறது. இதன் நீர்ப் பிடிப்பு பகுதி 3,757 சதுர கி.மீட்டர். மொத்த நீளம் 136 கி.மீட்டர். சென்னை நகருக்குள் 16 கி.மீட்டர் ஓடுகிறது. ஆற்றுப் படுகையின் அகலம் 150 - 250 மீட்டர். நதியின் அதிகபட்ச கொள்ள ளவு விநாடிக்கு 1,25,000 கனஅடி. சராசரி கொள்ளளவு 1,10,000 கனஅடி. கடைசியாக 2005-ம் ஆண்டில் வெள்ளம் வந்தபோது ஓடிய வெள்ளம் விநாடிக்கு 90,000 கன அடி.
கூவம் ஆறு
திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் ஏரி தொடங்கி சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி 400 சதுர கி.மீட்டர். மொத்த நீளம் 72 கி.மீட்டர். புறநகரில் 40 கி.மீட்டரும் நகருக்குள் 18 கி.மீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப்படுகையின் அகலம் 40 - 120 மீட்டர். ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22,000 கனஅடி. சராசரி கொள்ளளவு 19,500 கனஅடி. கடைசியாக 2005-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 21,500 கன அடி.
அடையாறு
மாகாணியம் மலையப்பட்டு ஏரியிலி ருந்து உற்பத்தியாகி பட்டினப்பாக்கம் அருகிலும், முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி 1,142 சதுர கி.மீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர். புறநகரில் 24 கி.மீட்டரும் நகருக்குள் 15 கி.மீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப்படுகையின் அகலம் 10.50 - 200 மீட்டர். ஆற்றின் அதிகபட்ச கொள் ளளவு விநாடிக்கு 60,000 கனஅடி. சராசரி கொள்ளளவு 39,000 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 55,000 கன அடி.
பிரதான கால்வாய்கள்
வடக்கு பக்கிங்காம் கால்வாய்
எண்ணூர் தொடங்கி கூவம் ஆறு வடக்கு வரை 58 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 10,500 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 9,900 கனஅடி.
மத்திய பக்கிங்காம் கால்வாய்
தெற்கு கூவம் ஆறு தொடங்கி அடை யாறு வரை 7.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ள ளவு விநாடிக்கு 1500 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 1,500 கனஅடி.
தெற்கு பக்கிங்காம் கால்வாய்
அடையாறு தொடங்கி மரக்காணம் வரை 108 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 6000 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள் ளத்தில் ஓடிய தண்ணீர் 5,660 கன அடி.
ஓட்டேரி நல்லா கால்வாய்
கைவிடப்பட்ட பாடி, வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து பேசின் பாலம் பக்கிம்காம் கால்வாய் வரை 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு விநாடிக்கு 1800 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 1800 கனஅடி.
விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய்
கைவிடப்பட்ட விருகம்பாக்கம் ஏரியி லிருந்து நுங்கம்பாக்கம் கூவம் ஆறு வரை 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 2100 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 1700 கனஅடி.
கொடுங்கையூர் கால்வாய்
கொளத்தூர், மாதவரம் ஏரியிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு விநாடிக்கு 1060 கன அடி. 2005-ம் ஆண்டு இதில் வெள்ளம் வரவில்லை.
வீராங்கல் ஓடை
ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக் கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு விநாடிக்கு 654 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 654 கன அடி.
கேப்டன் காட்டன் கால்வாய்
வியாசர்பாடி ஏரியிலிருந்து தண் டையார்பேட்டை பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு 1950 கனஅடி. 2005-ல் இதில் வெள்ளம் வரவில்லை.
வேளச்சேரி கால்வாய்
வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக் கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு 655 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 750 கன அடி.
மேற்கண்ட 3 ஆறுகள் மற்றும் 9 பிரதான கால்வாய்களிலும் மொத்தம் 512 சிறு வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் கலக்கின்றன. இதில் 27% கூவம் ஆற்றிலும், 29 % பக்கிங்காம் கால்வாயிலும் 19 % அடையாற்றிலும் கலக்கின்றன.
இதுதான் சென்னையின் அடிப்படை நீரியல் - புவியியல் அமைப்பு. இவற்றில் எல்லாம் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன. ஆற்றின் முகத்துவாரங் கள் எல்லாம் எப்படி இருக்கின்றன. மனிதப் பிழைகள், தொழில்நுட்பப் பிழைகள் என்ன. அவற்றை எப்படி தீர்ப்பது, என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை நாளை பார்ப்போம்.
(நீர் அடிக்கும்)
சைதாப்பேட்டை ஆற்றங்கரையோர குடியிருப்புகளை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் அடையாறு.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

நீதிமன்றத்துக்கு உள்ளே... சட்டத்துக்கு வெளியே!

நீதிமன்றத்துக்கு உள்ளே... சட்டத்துக்கு வெளியே!

ஜெயந்த் ஸ்ரீராம்
COMMENT   ·   PRINT   ·   T+  
சட்டத் துறைக்குள் அறமும் நம்பகத்தன்மையும் நிலைநாட்டப்பட வேண்டும்
போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதலுக்கு 2009 பிப்ரவரி 19 அன்று சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம் மவுன சாட்சியாக நின்றது. 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல்நிலையம் முழுவதுமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும் தொடர்ந்து இரு வாரங்களாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கண்டனக்குரல் எழுப்பிய சம்பவத்தின் தொடர்ச்சிதான் இது.
வழக்கறிஞர்களின் இந்த ஆர்ப்பாட்டம் அன்றைய திமுக ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடியை உண்டுபண்ணியது. பிரச்சினையை முழுவதுமாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். கிருஷ்ணா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தப் பிரச்சினை தீவிரமடைய முக்கியக் காரணம், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் அடக்க முயன்றதே என கிருஷ்ணா குழு அறிவித்தது. அதே நேரத்தில், சிக்கலை முடுக்கிவிட்டதே வழக்கறிஞர்கள்தான் என்றும் தெரிவித்தது.
2009-ல் வெளியான இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட இன்னும் சில விஷயங்கள் கவனத்துக்குரியவை. “நீதிமன்றத்திலேயே வேலை பார்ப்பதால் எதைச் செய்தாலும் சட்டச் சிக்கலுக்கு ஆளாக மாட்டோம் என்னும் நினைப்பில் இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்” என்றும், “வழக்கறிஞர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்தப் போதுமான நடவடிக்கைகளை பார் கவுன்சில் எடுக்காததால், உச்ச நீதிமன்றம் தன் அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நெறிமுறைகளைப் பட்டியலிட வேண்டும்” என்றும் நீதிபதி கிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார். சட்டத் துறையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, வழக்கறிஞர் சட்டத்தையே திருத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப் பட்டது.
கிருஷ்ணா குழு அறிக்கை வெளிவந்து இத்தனை காலமாகியும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், அதில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாசகமும் தீர்க்கதரிசனம் என்பதைத் தமிழக அனுபவங்கள் தொடர்ந்து நிரூபிக்கின்றன. வேலை நாட்களில் பல நாட்களுக்கு ‘கல்தா’ கொடுப்பதால் எக்கச்சக்கமான வழக்குகள் நிலுவையிலேயே இருக்கின்றன.
2010-ல் ‘தி இந்து’ (ஆங்கிலத்தில்) பிரசுரமான ஒரு அறிக்கையில் 2009-ல் மட்டும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 32 நாட்கள், கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 56 நாட்கள் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 44 நாட்கள் வேலைக்கு வர மறுப்புத் தெரிவித்தனர் என அதிகாரபூர்வமான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 70 நாட்கள் வேலைக்கு வராததால் வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சக வழக்கறிஞர்களிடம் செப்டம்பர் 28-அன்று கேட்டுக்கொண்டனர்.
பேர்போன தமிழக வழக்கு
அரசியலையும் சட்டத்தையும் ஒன்றோடு ஒன்று கலப்பதன் விபரீத விளைவுதான் இது என மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிமுக, திமுக, பாமக போன்ற கட்சிகளைப் பின்புலமாகக் கொண்ட வழக்கறிஞர்கள் பலர் தங்கள் அரசியல் நோக்கங்களை அப்படியே சட்டத் துறையிலும் பிரதிபலிக்கின்றனர். இதனால் சட்ட நிபுணர்களின் சுதந்திரம், வழக்கறிஞர்களின் பணிச் சூழல், இன்னும் பல உண்மையான பிரச்சினைகளுக்காகப் போராடுவதற்கு பதிலாகக் கட்சிகளில் யார் பெரியவன் என்னும் போட்டா போட்டியில் இவை அரங்கேறுகின்றன.
“இம்மாதிரியான போராட்டங்கள் ஜனநாயக முறைப்படி நடப்பதே இல்லை. ‘வெளிநடப்பு செய்வோம்’ எனச் சங்கத் தலைவர் அறிவித்துவிட்டால், அதற்கு யாரும் மறுப்பே சொல்ல முடியாது. எதிர்த்தால் அவர்களுக்கும் எதிராக ‘ஒழிக’ கோஷம் எழும்” என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. அருண் கூறுகிறார்.
வழக்கறிஞர்களின் தரம்
சட்டத் துறைக்குள் அறமும் நம்பகத்தன்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கம். “இரண்டு விதமான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்னும் கருத்து பொதுமக்களிடையே நிலவுகிறது. தன் கட்சிக்காரருக்காகச் சரியாக வழக்காடும் வழக்கறிஞர்கள் ஒரு தரப்பினர். இன்னொன்று, தங்கள் பதவியைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான பல விஷயங்களைச் சாதித்துக்கொள்ளும் வழக்கறிஞர்கள்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.
சட்டத் துறையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலும் விதிகளை மீறும் வழக்கறிஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பிலும் தற்போது இருப்பது இந்திய பார் கவுன்சில்தான். அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து அதனிடம் இந்திய பார் கவுன்சிலின் பொறுப்புகளை ஒப்படைக்கலாமே என அக்டோபர் 6-ல் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
கல்வியாளர்கள், சட்ட நிபுணர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றது நீதிமன்றம். அவர்களிடம் இந்திய பார் கவுன்சிலின் பொறுப்புகளை நிரந்தரமாக ஒப்படைத்துவிடலாம். குறைந்தபட்சம் வழக்கறிஞர்கள் சட்டம் திருத்தப்படும்வரையாவது இந்தக் குழு செயல்படலாம் என்றது. மேலும், முதல் கட்ட நடவடிக்கையாக, மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்பை நிறுத்த வேண்டும். ஐந்து ஆண்டு சட்டப் பட்டப்படிப்பை மட்டுமே இனி தொடர வேண்டும். அப்போதுதான் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புக்கு நிகரான படிப்பாகச் சட்டம் மாறும் என்றது.
இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் உரை இங்கு குறிப்பிடத்தக்கது. “இந்தியாவில் 30% வழக்கறிஞர்கள் போலி பட்டம் வைத்திருக்கிறார்கள். இங்கு வேலை நிறுத்தம் என்பது தொடர் நிகழ்வாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே அதுதான்” என அவர் கூறினார். இந்திய வழக்கறிஞர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 17 லட்சம். வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்துக்குப் பிரசித்திபெற்ற இடமாகத் தமிழகம் இருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தத் தேசத்துக்கும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பலாம். ஏனெனில், இந்தியா முழுக்க எதாவதொரு இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
நிலைநாட்ட வேண்டிய உத்தரவு
மொத்தத்தில், வழக்கறிஞர்களின் இத்தகைய நடவடிக்கையால் அதிகப்படியாகப் பாதிக்கப்படுவது தங்கள் வழக்குகளின் தீர்ப்புக்காகக் காத்துக்கிடக்கும் பொதுமக்களே. வழக்கறிஞர்களைப் போல வேறெந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இப்படி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதில்லை. இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய பார் கவுன்சிலுக்கு இல்லை என்பதையே இது காட்டுக்கிறது.
வழக்கறிஞர்கள் அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வது ஏற்புடையதா என்னும் விவாதம் 2005-ல் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதோ, வேலைநிறுத்தம் செய்வதோ வக்கீல் தொழிலுக்கான லட்சணமல்ல என்றது நீதிமன்றம். கூடவே, நிறைய அறிவுரைகளையும் கூறியது. அனால், இன்றுவரை அவற்றை நடைமுறைப்படுத்த பார் கவுன்சிலோ உச்ச நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அதற்கான காலம் இப்போது வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா © ‘தி இந்து’ (ஆங்கிலம்)