தம்பா பே டைம்ஸ் - அமெரிக்க நாளிதழ்
*
பாரிஸில் நடந்துவரும் பருவநிலை மாறுதல் தொடர்பான உச்சி மாநாடு, வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெறவிருக்கிறது. இந்நிலையில், பருவநிலை மாறுதல் தொடர்பான முழக்கங்களையும் தாண்டி சில உறுதிமொழிகளை உலகத் தலைவர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. எனினும், எதிர்காலத்தில் உலக அளவிலான வெப்ப நிலை 3.6 டிகிரி பாரன்ஹீட் உயரவிருக்கும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் தொடர்பாக, தீர்க்கமான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கி தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளும் வளர்ந்துவரும் நாடுகளும் பயணப்பட வேண்டியிருக்கிறது.
புவி வெப்பமயமாதல் பிரச்சினை பூதாகாரமாகி யிருக்கும் நிலையில், அதுதொடர்பாக எளிய மற்றும் துரித தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் போதுமான அளவில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், வளர்ந்துவரும் நாடுகள் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக பொறுப்புடன் நடந்துகொள்வதில் இன்னும் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.
எனினும், 170-க்கும் அதிகமான நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் தன்னார்வத் திட்டங்கள் அர்த்தமுள்ள நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் அதைக் கட்டுப்படுத்துவதில், சர்வதேச அளவில் பிற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கட்டாயத்தை இம்மாநாட்டில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் உருவாக்கியிருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் நாடுகள், மிக மோசமான தங்கள் தொழில்துறை செயல்பாடுகளால் மனித உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதை ஒப்புக்கொள்ளுமாறு இந்தப் பேச்சுவார்த்தைகள் நிர்ப்பந்தித்திருக்கின்றன. வளர்ச்சியடைந்துவரும் சிறிய நாடுகள், தங்கள் வளர்ச்சிக் கொள்கையில் இந்த விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிர்ச்சினையில் முக்கிய முடிவு எடுப்பதில் இன்னும் தடைகள் இருக்கின்றன. எனினும், பருவநிலை கொள்கை மேம்பாடு அடையும், தொழில்நுட்பம் மற்றும் பொது தனியார் பங்களிப்பு போன்றவற்றின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்பதான நம்பிக்கைகளை பாரிஸ் மாநாடு தந்திருக்கிறது.
பாரிஸ் மாநாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் காரணமாக, பருவநிலை மாறுதல் தொடர்பான விவாதம் பெரிய அளவில் நடந்துவருகிறது. பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக உள்நாட்டுத் தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிலை உருவாகியிருக்கிறது.
பருவநிலை மாறுபாடு விஷயத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதில் உலகத் தலைவர்கள், கூட்டு முயற்சியின் பலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எழும் வண்ணம் இந்த மாநாட்டை அவர்கள் நிறைவுசெய்ய வேண்டும். நூறாண்டுகளைக் கடந்த இந்தப் பிரச்சினைக்கு, வளர்ச்சியடைந்த நாடுகளோ வளர்ந்துவரும் நாடுகளோ சில வாரங்களில் தீர்வுகாண வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வின் பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், கடினமான பல முடிவுகளை அவை எடுக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், பருவநிலைக் கொள்கையை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதும், இவ்விஷயத்தில் பணக்கார மற்றும் ஏழை நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய விளைவுகள் எனலாம். பாரிஸ் மாநாடு இறுதிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும் தருணத்தில் நமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை இதுதான்!
தமிழில்: வெ. சந்திரமோகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக