பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவர்களுக்கான அஞ்சலி!
இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு! பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
நீண்ட காலம் சிறையில் வாழ்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு. “தூக்கு தண்டனைக் கைதி களில் பலர், சிறையில் தூக்குமேடைக்குக் கொண்டு போவதற்கு முன்பே அதிர்ச்சியில் ஏறக்குறைய இறந்துவிடுவார்கள். உயிர் இல்லாத உடல்களைத் தூக்கு போடுவதுபோலத்தான் தூக்கு தண்டனைகள் நிறைவேறும்” என்கிறார்.
ஆனால், பகத் சிங்கின் சிறை வாழ்வும் உயிர்த் தியாகமும் தனித்தன்மையானவை.
புரட்சிவாதிகள் இறக்க வேண்டும்
பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்களது சிறை அறை களுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார், பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“புரட்சிவாதிகள் இறக்க வேண்டும்” என்று பதிலளித் தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடை யும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
“நான் விடுதலை அடைந்தால் அது பெரும் பிழையாக மாறிவிடும். நான் புன்னகையுடன் மரணத்தை எதிர்கொண்டால், இந்தியாவின் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளும் பகத் சிங்கைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உறுதியான சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தவுடன் புரட்சியின் வெற்றிநடையைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது” என்றார் அவர்.
‘எப்போது விடுதலை அடைவோம்’ என்ற ஏக்கத்துக்கும் முழுச் சம்மதத்துடன் உயிர்த் தியாகம் செய்யும் மனநிலைக்கும் என்ன இடைவெளி?
நாட்டுக்குச் செய்தி
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய அவரது வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா, பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக அவரைச் சந்தித்தார். செல்லுக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போலக் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யூஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தீர்களா என்று கேட்டார்.
புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார் பகத் சிங். “நாட்டுக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள். எதேச்சாதிகாரம் ஒழியட்டும்... புரட்சி ஓங்கட்டும்.”
“நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும்போல.”
“ஏதாவது ஆசை இருக்கிறதா?” என்று மேத்தா கேட்டார்.
“ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
மீண்டும் சந்திப்போம்!
பகத் சிங்கைச் சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுக்தேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு, அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர் கள் தூக்கிலிடப்படப்போவதாகத் தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்குப் பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்தப் புத்தகத்தின் ஒரு சில பக்கங் களையே படித்து முடித்திருந்தார். “ஒரு அத்தியாயத்தை முடிக்கவிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடையில் “யாரை முதலில் தூக்கிலிட வேண்டும்” என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுக்தேவ் தான் போக விரும்புவதாகச் சொன்னார்.
அவர்களது தைரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரி சடலங்களை அடையாளம் காட்டுமாறு தனக்கு இடப்பட்ட கட்டளையை ஏற்க மறுத்தார். அவர் அந்த இடத்திலேயே இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் அவருக்குக் கீழிருந்த வேறொரு அதிகாரி அந்த வேலையைச் செய்தார்.
நாயகர்களின் சிதைக்குக் காவல்
முதலில் இறுதிச் சடங்கை ராவி ஆற்றின் கரையில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நதியின் ஆழம் மிகவும் குறைவாக இருந்ததால் சட்லஜ் நதிக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. சட்லஜ் நதிக்கு அருகில் இருந்த பெரோஸ்பூர் நகருக்கு லாரி சென்றபோது லாரியில் சில பிரிட்டிஷ் படையினரும் இருந்தார்கள். சட்லஜ் நதிக்கரையில் சடலங்களுக்குத் தீ மூட்டப்பட்டவுடனேயே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
கிராமப்புறத்தில் குறிப்பாக கந்தா சிங் வாலா கிரா மத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், தீ ஜுவாலை களைப் பார்த்து அந்த இடத்துக்கு விரைந்தார்கள். அவர்களைப் பார்த்த படைவீரர்கள் சடலங்கள் பாதி எரிந்துகொண்டிருந்தபோதே விட்டுவிட்டு வண்டியில் ஏறி லாகூருக்கு விரைந்துவிட்டார்கள். அந்தத் தனிமையான இரவு முழுவதும் தங்கள் நாயகர்களின் உடல்களின் அருகில் அமர்ந்திருந்தார்கள் அந்தக் கிராமத்தினர்.
ஆயிரம் மடங்கு வணங்குவோம்
‘யங் இந்தியா’வில் காந்தி, ‘பகத் சிங்கும் தோழர்களும் தூக்கில் போடப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வீணாகிவிட்டன. அவர்கள், மாவீரர்கள். அவர்களை 1,000 மடங்கு வணங்குவோம். ஆனால், அவர்களைப் பின்பற்ற முடியாது. நமது மக்கள் நொறுங்கிப்போனவர்கள்; ஆதரவற்றவர்கள். வன்முறையை நாம் நமது வழியாகக் கொண்டால் நிலைமை மோசமாகிவிடும்’ எழுதினார்.
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக் கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா, வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதே போல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.
ஒருமுறை பகத் சிங், தன்னுடைய தாய் வித்யாவதி கவுருக்கு எழுதிய கடிதம், இந்தியாவைப் பற்றியும் உண்மையான சுதந்திரத்தைப் பற்றியும் பகத் சிங் கொண்டிருந்த எண்ணத்தைக் கச்சிதமாகச் சொல்லிவிடுகிறது:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரம் அடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”
த. நீதிராஜன்,
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
பகத் சிங் மறைந்த தினம் - 23 மார்ச் 1931
தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான எழுச்சி நாயகன். பகத் சிங்கின் மரணத்தில் இன்றுவரை சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. ‘காந்தி விரும்பியிருந்தால் பகத் சிங்கின் மரண தண்டனையை ரத்துசெய்திருக்க முடியும்; அரை மனதுடன்தான் அவர் முயன்றார், ஏமாற்றினார்’ என்பது போன்ற விமர்சனங்கள் இன்றுவரை அவர்மீது வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் எந்த அளவுக்கு நியாயமானவை?
பகத் சிங்கின் மரணத்துக்குச் சில வாரங்களுக்கு முன்னர்தான் காந்தி இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டினார் என்பது பொய். பகத் சிங் கைதுக்கு ஒரு நாள் முன்னர், மே 4, 1930 அன்றே காந்தி வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லாகூர் சதி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறார். “குறுக்கு வழியில் விசாரணையை முடிக்கும் முயற்சி என்றும், இது அடக்கு முறை சட்டத்துக்கு ஒப்பானது” என்றும் குற்றம்சாட்டுகிறார்.
பிப்ரவரி 17 தொடங்கி மார்ச் 5-ல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை காந்தி, வைஸ்ராய் இர்வினோடு பகத் சிங்குக்காக மன்றாடியபடியே இருந்திருக்கிறார். காந்தி மற்றும் இர்வின், இருவரின் குறிப்புகளை நாம் வாசிக்கும்போது, பகத் சிங் உள்ளிட்டோரின் மரண தண்டனையைத் தள்ளிப்போடவோ இடைநிறுத்தவோ காந்தி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார் என்பது தெரிகிறது. இதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காந்தி, உண்மையில் தண்டனையைத் தள்ளிப் போடத்தான் முயன்றாரா? இதற்கான காரணங்களை, உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக நாம் அணுக வேண்டும்.
காந்தியின் திட்டம்
பிரிவி கவுன்சில் முறையீடு மரண தண்டனையை ரத்து செய்ய மறுத்தது. வைஸ்ராய் நினைத்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்னும் சூழலில் பிரிவி கவுன்சில் முடிவை மீறித் தன்னால் செயல்பட முடியாது என வைஸ்ராய் மறுத்துவிட்டார். சட்ட வல்லுநரான காந்தி, சட்டரீதியிலான எல்லா வாய்ப்புகளையும் அலசிய பின்னர், பொதுமக்களின் கருத்துக்கு வலுவளித்து, அரசை நிர்ப்பந்திக்கச் செய்வதே ஒரே வழி என்னும் முடிவுக்கு வருகிறார். அவருக்கு மற்றொரு திட்டமும் இருந்தது. மார்ச் 23 அன்று வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் “இந்த மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும் பட்சத்தில், புரட்சிப் படையினர் ஆயுதங்களைக் கைவிடத் தயாராக உள்ளனர் என்று என்னிடம் உறுதியளித்ததை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்” என்று எழுதுகிறார். சிறையில் இருந்த பகத் சிங் மற்றும் சக போராளிகளிடம் அத்தகைய உறுதிமொழியைப் பெறுவதற்கு ஆசஃப் அலி மூலம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. போதிய அவகாசம் கிடைத்தால், அந்த உறுதிமொழியைக் கொண்டு அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவிக்க முடியும் எனக் கருதினார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தம்
காந்தியின் விமர்சகர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. பகத் சிங்கையும் அவரது சகாக்களையும் மரண தண்டனையி லிருந்து காப்பது காந்திக்கு நன்மையே விளைவிக்கும். மரண தண்டனையை ரத்துசெய்ய முடியாமல் போவது பொதுமக்க ளையும், காங்கிரஸின் இளைஞர்களையும் கோபப்படுத்தும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், நாயகத் தன்மையின் காரண மாக வன்முறைப் புரட்சி பற்றிய நம்பிக்கைகளை அது பரவலாக்கும் அபாயமும் உண்டு என்பதையும் அவர் அறிந்திருந்தார். சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான வன்முறை சக்திகளுக்கு எதிரான அவரது போராட்டத்தில் அது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும். ஒருவேளை காந்தியின் முயற்சியால் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரின் மரண தண்டனையும் ரத்துசெய்யப்பட்டிருந்தால், வன்முறைக்கு எதிராக அகிம்சை அடைந்த வெற்றியாகவும், புரட்சியாளர்கள் மீது காந்தி கொண்ட தார்மிக வெற்றியாகவுமே அது சித்தரிக்கப்பட்டிருக்கும்.
காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இந்தப் பிரச்சினையை முன்நிபந்தனையாக விதித்திருக்கலாம்தான். ஆனால், ஆரம்பத்திலிருந்தே காந்தி அதற்கு ஒப்பவில்லை. ஒரு அடிமை தேசத்தின் வரலாற்றில் எப்போதாவது ஒருமுறை மட்டுமே அபூர்வமாக நிகழக் கூடியதும், கோடிக் கணக்கான இந்தியர்களுக்குப் பயனளிக்கக் கூடியதுமான முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும் சமயத்தில் அதை வீணாக்கிவிட அவர் விரும்பவில்லை.
ஆளுநர், அதிகாரிகளின் மிரட்டல்
சாண்டர்சின் மரணமும், அதையொட்டி எழுந்த வன் முறையும், பகத் சிங்கின் செல்வாக்கும் இந்தியாவில் பணி புரியும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாக அவர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில், காந்தி யின் தொடர் கோரிக்கைகளுக்கும் பொதுமக்களின் நிர்ப்பந்தத் துக்கும் அடிபணிந்து, தண்டனையை நிறுத்திவைக்கும் முடிவை நோக்கி வைஸ்ராய் இர்வினின் மனம் ஊசலாடியது. ஆனால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால், பஞ்சாப் மாகாண ஆளுநரும் அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். வேறுவழியின்றி அவர்களுடைய நிர்ப்பந்தத்துக்கு வைஸ்ராய் பணிந்தார். திட்டமிட்ட தேதிக்கு முதல் நாள் அதாவது 23-ம் தேதியே அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
முன்கூட்டியே அவர்கள் தூக்கிலிடப்படுவதுகுறித்து அறியாத காந்தி, மார்ச் 23 அன்று வைஸ்ராய்க்கு இறுதிக் கட்டமாக ஒரு கடிதத்தை எழுதுகிறார். அதில், பகத் சிங்கின் தண்டனையை ரத்துசெய்ய ‘பொதுமக்களின் விருப்பு, உள்நாட்டு அமைதி, புரட்சியாளர்களை அமைதிக்குத் திருப்புதல், சந்தேகத்தின் பயன்’ என நான்கு காரணிகளைப் பட்டியலிடுகிறார். கடிதத்தின் இறுதியில் ‘கருணைக்குத் தோல்வியில்லை’ எனும் மகத்தான சொற்களுடன் முடிக்கிறார். ஆனால், அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. காந்தி பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்.
பகத் சிங் எதை விரும்பினார்?
இவையெல்லாம் ஒருபுறம் எனில், பகத் சிங்கும் அவரது சகாக்களும் உண்மையில் எதை விரும்பினார்கள் என்ற கேள்வியும் முக்கியமானதே. பகத் சிங்கும் சகாக்களும் மார்ச் 20, 1931 அன்று பஞ்சாப் ஆளுநருக்கு எழுதிய ‘கோரிக்கை’ மடல் அதைத் தெளிவாக்குகிறது:
‘உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, நாங்கள் உங்கள் மீது போர் தொடுத்தவர்கள், ஆகவே நாங்கள் போர்க் கைதிகள். ஆகவே, எங்களை நீங்கள் அப்படியே நடத்த வேண்டும் என்று கோருகிறோம். அதாவது, எங்களைத் தூக்கிலிடாமல் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கோருகிறோம்.’
பகத் சிங், தன் வீரமரணத்தையே ஆயுதமாகக் கொண்டு புரட்சித் தீ ஏற்றிவிட முடியும் என்று கனவுகண்டார். பழி தீர்க்கத் துடிக்கும் ஆங்கிலேய அதிகார வர்க்கம், தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள முயலும் ஆங்கிலேய அரசு, சமரசமற்று வீரமரணத்தை விழைந்த புரட்சி நாயகர்கள் என்று பல்வேறு காரணிகள் இருக்க, உண்மையில் அவர்களுடன் முரண்பட்ட கொள்கைகள் கொண்ட காந்தி இதற்கு மேல் என்னதான் செய்திருக்க இயலும்?
காந்தி - அம்பேத்கர், காந்தி பகத் சிங், காந்தி நேதாஜி, நேரு - படேல் என அவரவர் அரசியல் சார்புக்கு ஏற்ப எதிரெதிர் நிலைகளை உருவாக்கி, ஒரு தரப்பை எதிரியாகவும் துரோகியாகவும் சித்தரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்திய விடுதலை என்பது பல்வேறு நிகழ்வுகளின், விசைகளின் தொகுப்பில் மலர்ந்த மகத்தான நிகழ்வு. எவரையும் சிறுமைப்படுத்துவதன் வழியாக மற்றவரைப் பெருமைப்படுத்திவிட முடியும் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் இழிவன்றி வேறில்லை.
- சுனில் கிருஷ்ணன்,
ஆயுர்வேத மருத்துவர் ‘காந்தி இன்று’ (www.gandhitoday.in) இணையதளத்தின் ஆசிரியர்.
தொடர்புக்கு: forgandhitoday@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக