செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இமெயில் தமிழர்: சிவா அய்யாதுரை நேர்காணல்

இமெயிலைக் கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர், ஒரு தமிழர். ராஜபாளையத்தில் முகவூரைச் சொந்த ஊராகக் கொண்ட சிவா அய்யாதுரை மும்பையில் ஏழு வயது வரை வசித்தார். அதன் பிறகு தனது பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1978-ல் தனது 14-வது வயதில் இமெயிலைக் கண்டுபிடித்தார்.
இமெயிலைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையைப் பெற்று 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் அவர் கவுரவிக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து அவர் அளித்த பேட்டி:
கமலோடு என்ன பேசினீர்கள்?
கமல் ஹாசன் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது பல விஷயங்களை ஆழமாக விவாதிப்போம். சமீபத்தில் சந்தித்தோம். இந்த உலகில் எப்படிப் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் மாற்ற முடிகிறது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அதைத் தவிர, வரலாறு, மருத்துவம், கலை எனப் பல விஷயங்களைப் பேசினோம். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளோம். அது கண்டிப்பாக லாப நோக்கு கொண்ட முயற்சியாக இருக்காது.
நீங்கள்தான் மின்னஞ்சலை கண்டுபிடித்தீர்களா?
நான் இமெயிலை கண்டுபிடித்தது தற்செயலானதுதான். எனக்குக் கணிதத்தின் மீது அதீத ஆர்வம் உண்டு. ஒன்பதாம் வகுப்பிலேயே கல்லூரிப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது என் அம்மா, எனது குரு மைக்கெல்சனிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது எனது கவனம் எல்லாம் மருத்துவத் துறையில்தான் இருந்தது. எனது குருவான மைக்கெல்சென் எனக்கு மருத்துவம் சார்ந்து ஏதாவது பணி கொடுப்பார் என்றுதான் காத்திருந்தேன். ஆனால், எனக்கு அவர் இமெயில் உருவாக்கும் பணியை அளித்தார்.
அலுவலகங்களில் கடிதப் போக்குவரத்தைக் கணினிமயமாக்க வேண்டும் என்பதுதான் 1970-களில் எனக்குக் கொடுக்கப்பட்ட சவால். இன்று உங்கள் மெயிலில் இருக்கும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஷ் உள்ளிட்டவை அப்போது காகிதங்களாக இருக்கும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டியது அங்குள்ள உதவியாளரின் பொறுப்பாகும். அந்தப் பணிகளை எளிமைப்படுத்துவதற்காகவே இமெயில் உருவாக்கினேன்.
எனக்கு அப்போது 14 வயது. இமெயிலுக்கான காப்புரிமை பெற்றிருந்தாலும் அதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று நான் கூறிக்கொள்ளவில்லை. அதன் பிறகு நான் எனது மருத்துவ ஆராய்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். 2011-ம் ஆண்டில் எனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் டைம் பத்திரிகையின் நிருபர் எனது ஆவணங்களைச் சரிபார்த்து ‘இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று கட்டுரை எழுதினார். அதற்குள் இமெயிலை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பெருமை தேடிக்கொள்ள ஆரம்பித்தன.
ஏன் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை?
உலகெங்கும் பயன்படுத்தப்படும் இமெயிலை ஒரு இந்தியன், கருப்பு நிறத் தமிழன் கண்டுபிடித்தான் என்று அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களும் அதை எளிதாக நம்புவதில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மேலை நாட்டுக்காரர்களால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தை நம்மிடமேகூட அவர்கள் விதைத்துள்ளனர். இந்தியர்கள் புதிதாக எதையும் செய்ய முடியாதவர்கள் என்ற எண்ணத்தை இந்தியர்களின் எண்ணங்களிலும் விதைத்துள்ளனர். இது நவீன காலனியாதிக்கம்.
மருத்துவத்தில் உங்களின் சாதனை என்ன?
எனக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் எனது பாட்டிதான். அவர் நோயாளியின் முகத்தைப் பார்த்தே மருந்தைக் கொடுப்பார். நான் சிறுவயதிலேயே எனது பாட்டி வைத்தியத்தின் மந்திரத்தை அறிந்து அதை உலகுக்குக் கொடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அதை நோக்கித்தான் இப்போதும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
நமது நாட்டில் உள்ள சித்த வைத்தியம் உடலை ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமாகப் பார்க்கிறது. ஒரு விமானத்தை விமானப் பொறியாளர் பார்ப்பதுபோல. இதனைப் பொறியியல் வார்த்தைகளில் ஆங்கில மொழியில் நான் கொடுத்தேன்.
எங்களது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, சைட்டோ சால்வ் என்ற கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம். அது அனைத்து ஆய்வக ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கிய புதிய ஆய்வுமுறை. இதன் மூலம் உடலின் இயக்கத்தையும் அதற்கு ஏற்ற மருந்துகளையும் கணினியின் மூலமே பொருத்திப் பார்க்க முடியும். கணையப் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளின் இயக்கத்தையும் ஆராய்ந்து, சரியான, அதிகப் பயன் கொடுக்கிற மருந்தைத் தேர்வு செய்துள்ளோம். அதனைச் சோதித்துப் பார்ப்பதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
எக்கோ மெயில் என்று புதிதாக கண்டுபிடித்துள்ளீர்களா?
புகழ்மிக்க எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கானவாய்ப்பு கிடைத்தபோது, அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டன் அலுவலகத்தில் உள்ள மெயில்களை முறைப்படுத்துவதற்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பிறகு உருவாக்கப்பட்டது எக்கோ மெயில். இதன் மூலம் ஒருவருக்கு வரக்கூடிய மெயில்கள் தானாகவே ஒழுங்குபடுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்துக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக 

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ப. ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் ‘இந்த தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடமைக் கொள்கைக்காகப் பாடுபட்டவருமான ப. ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் (1907). அந்த கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து என்ற பெயரை பெற்றோர் இட்டனர். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் இவர் எழுதிய முதல் கவிதையே காந்தியையும் கதரையும் பற்றியது.
l பத்தாம் வகுப்பு படித்த சமயத்தில் ‘சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்’ என்ற நாவலை எழுதினார். அடுத்து ‘ஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து, நடித்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
l அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் இந்த இளைஞர்.
l அப்போது 17 வயதுதான். 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார்.
l அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
l இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
l மார்க்சிய கருத்துகளை தமிழில் கூற பல புதிய பதங்களை உருவாக்கினார். 1940களின் இறுதியிலும் 50களிலும் ஜீவா எழுதிய ‘சோஷலிச சரித்திரம்’ மற்றும் ‘சோஷலிச தத்துவம்’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஏராளமான சோவியத் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
l ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959-ல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
l 1961-ல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
l தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார். 

Sathyam Nathella - Siva Aiyadurai - Sundar Pichai

வீட்டுக்கு வாங்கப்பட்ட பழைய காலத்துத் தொலைபேசியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சென்னை மாநகரின் ஒரு பள்ளி மாணவர். கைவிரலால் சுழற்றிப் பேசக்கூடிய அதில் யாரோடு பேசினாலும் அந்த எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். நடமாடும் தொலைபேசி டைரக்டரியாக இருந்த அந்த மாணவர் இன்று உலகின் மிக நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் எனப்படும் திறன்பேசிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை வெளியிடும் கூகுள் நிறுவனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். அதன் கூட்டங்களில் விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு அலசுபவராக இருக்கிறார்.
அவர்தான் சுந்தர் பிச்சை. அவரது உலகளாவிய புகழ் அவர் தனது வேலையில் காட்டிய கடும் உழைப்பில் இருக்கிறது.
பாதியில் விட்ட படிப்பு
சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரின் மகன் அவர். பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்தது உலோகவியல் பொறியியல். உலோகங் களின் தன்மைகளை ஆராயும் படிப்பு அது. இந்தியாவில் அதைப் படித்தவருக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. முனைவர் பட்ட மேற்படிப்புக்காக அங்கே போனார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் போவதற்கான விமானப் பயணத்துக்கான செலவு மட்டும் அவரது அப்பாவின் ஒரு ஆண்டு வருமானத்துக்கும் மேல். அமெரிக்காவுக்குப் போய்விட்டாலும் அங்கே 400 ரூபாய் கொடுத்து (60 டாலர்) ஒரு தோள் பை வாங்க முடியாத நிலை.
பணம் போதாமையோ அல்லது படிப்பு பிடிக்கவில்லையோ தெரியவில்லை. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் வெற்றிபெற முடியவில்லை. பாதியிலேயே நின்றுவிட்டார். அதற்குப் பிறகு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார்
வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கு
படித்து முடித்ததும் எலெக்ட்ரானிக் சிப்புகளைத் தயாரிக்கும் அல்லய்ட் மெட்டீரியல் எனும் கம்பெனியின் உற்பத்திப் பிரிவில் இன்ஜினீயராகச் சேர்ந்தார், அதன் பிறகு மெக்கன்ஸி கம்பெனி எனும் நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றினார்.
2004-ல் கூகுளில் உற்பத்தி மேலாளராகச் சேர்ந்த சுந்தர், இணையத்தின் தேடுதளங்களான (பிரவுசர்) ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’, ‘பயர்பாக்ஸ்’ போன்றவற்றையே ஏன் நாம் பயன்படுத்த வேண்டும்? கூகுள் தனக்கான சொந்தமான தேடுதளத்தை ஏன் உருவாக்கக் கூடாது என்ற விவாதத்தைக் கிளப்பினார்.
அப்போதைய கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி அதை வீண் முயற்சி என்று கருதினாலும் கூகுள் க்ரோம் பிறந்தது. உலகளாவிய வெற்றியைப் பெற்றது. இன்று உலகில் உள்ள கணினிகளில் நான்கில் மூன்று பங்கில் தற்போது அதுதான் செயல்படுகிறது. ஜெர்மனி, ஜப்பான், பெரும்பாலான ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகளில் அதன் ஆதிக்கம்தான் என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள்.
விரியும் கூகுள்
அதன் பிறகு க்ரோம் இயங்குதளத்தையும் மேகக் கணினி தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவான க்ரோம் புக் கணினிகள் நல்ல விற்பனையில் உள்ளன. கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் உருவாக்கப்பட்டதில் அவரின் பங்கு முக்கியமானது. அடுத்ததாக, கைபேசிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் அறிவிக்கப்பட்டது.
கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இன்று கைபேசி நிறுவனங்கள் பலவற்றால் பயன்படுத்தப்படுகிறது. சோனி நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் டிவிகளை வெளியிட்டுள்ளது. கைபேசிகளைத் தாண்டி கார் உள்ளிட்ட மேலும் பல பொருள்களில் அது பயன்படுத்தப்படலாம்.
வெறும் கூகுள் தேடுபொறியின் பணிகளை மட்டும் செய்து கொண்டிருந்த அந்த நிறுவனம் தன்னை வேறுபல பணிகளிலும் விரித்துக்கொள்ள உதவியவராகச் சுந்தர் பிச்சை இருக்கிறார். தற்போது கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய தாக்கத்தின் மையமாக அவர் மாறியிருக்கிறார்.
ஜாம்பவான்
கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் களில் ஒருவரான லாரி பேஜ், சுந்தர் பிச்சையை “தொழில்நுட்ப அறிவில் மட்டுமல்லாமல் சந்தைப்படுத்தலிலும் திறன்படைத்தவர்” என்கிறார். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ எனும் நமது முன்னோர்களின் வணிக அறிவின் தொடர்ச்சி சுந்தர் பிச்சையின் மரபணுக்களில் ஓடுகிறது போலும்!
வன்பொருள் எனப்படும் ஹார்ட்வேர் தொடர்புடைய படிப்புகளைப் படித்த சுந்தர் மென்பொருள் எனப்படும் சாப்ட்வேர் துறையில் மிகப் பெரிய உச்சிக்குப் போயிருப்பது வேலையில் அவரது அர்ப்பணிப்பையும், கற்றல். செயல்படுத்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் செய்திருப்பதையும் காட்டுகிறது,
இன்றைய தொழில்நுட்ப உலகின் மகாஜாம்பவான்களாக இருக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வரிசையில் இதோ சுந்தர் பிச்சையும் சேர்ந்திருக்கிறார்.
தார்மிக ஆதரவு
சுந்தர் பிச்சையின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடக்கின்றன. தற்போது அமெரிக்கராக இருக்கும் அவர் இந்தியாவுக்கு என்ன செய்தார் என்ற அளவிலும் பல கருத்துகள் மோதுகின்றன. ஆனால், ஹாலிவுட் படங்களில் புரூஸ் லீ எனும் ஆசியப் போர்க்கலை நிபுணன் நடிகராக வந்த பிறகுதான் வெளிநாட்டுப் படங்களில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை மரியாதையாகச் சித்தரிக்கும் மாற்றம் வந்தது.
அதுபோல இத்தகைய மாபெரும் நிறுவனங்களின் உச்சிகளுக்கு இந்திய வம்சாவளியினர் போவதேகூட இந்திய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமான தார்மிக ஆதரவாகவே இருக்கும். அதுவே விலைமதிப்பற்றதாகும்.
இந்தியாவின் அற்புதமான மனிதர்கள் நமது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படாமல் வெளிநாடுகளில் குடியேறுகிறார்களே என்ற உணர்வு நாட்டை நேசிப்பவர்களுக்கு வரும். அந்த ஆதங்கத்தை இளைய தலைமுறைதான் சரிசெய்ய முடியும். ஏன் இந்தியாவிலேயே, அல்லது தமிழ்நாட்டிலே ஒரு கூகுள் உருவாகக் கூடாதா? அமெரிக்காவில் உள்ள சுந்தர் பிச்சையின் அனுபவங்களில் பாடம் கற்றுக்கொண்டு ஆயிரம் சுந்தர் பிச்சைகள் தமிழகத்தில் உருவாக மாட்டார்களா என்ன? நிச்சயம் உருவாகுவார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் உருவமாக சுந்தர் பிச்சை இருக்கவே செய்வார்.
ஜிமெயில் மட்டுமல்ல, ஈமெயிலும்தான்
சுந்தர் பிச்சைக்கு முன்னதாக உலகின் கவனத்தை ஈர்த்திருந்த தமிழர் வி.ஏ. சிவ அய்யாத்துரை. ‘ஈமெயில்’ தொழில்நுட்பத்தையும் அந்தச் சொல்லையும் கண்டுபிடித்தவர், பல்துறை அறிவுகொண்டவர், தொழில் முனைவோர் என்று பல முகங்களைக் கொண்டவர் அவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பவர், பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர். ஆனால், இன்று அவருடைய பெயர் உலக அளவில் அறியப்படுவதற்கு ‘ஈமெயில்’ கண்டுபிடிப்பாளர் என்பதுதான் முக்கியக் காரணம். அவர் கண்டுபிடித்த ‘ஈமெயில்’ வேறு, தற்போதைய ‘ஈமெயில்’ வேறு என்றும், அவருக்கு முன்பே டாம்லிம்ஸன் ‘ஈமெயி’லைக் கண்டுபிடித்திருந்தார் என்றும் வாதங்கள் நிலவுகின்றன. எனினும், உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளுள் ஒருவரான நோம் சாம்ஸ்கியே தனது மாணவர் சிவ அய்யாத்துரையின் பக்கம்தான் நிற்கிறார்.
வி.ஏ. சிவ அய்யாத்துரை
சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். சிவ அய்யாத் துரையின் சாதனைகள் எல்லாம் எங்கே தொடங்கின? சிறு வயது ஆர்வத்திலிருந்துதான். அவரது வாழ்க்கையில் அவருக்கு முதல் தாக்கம் அவருடைய பாட்டியிடமிருந்துதான் கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த முகவூரில் இருந்த அவருடைய பாட்டி சித்த வைத்தியத்தில் தேர்ந்தவர்; விவசாயியும் கூட. பல்வேறு துறை அறிவையும் ஒன்றுசேர்க்கும் சிவ அய்யாத்துரையின் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. சிறு வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்கா சென்ற சிவ அய்யாத்துரை அங்கேயும் கல்வியில் பிரகாசிக்கிறார். 1978-ல், அதாவது தனது 14 வயதில் ஒரு புராஜெக்டாக அவர் கண்டுபிடித்த விஷயம்தான் ‘ஈமெயில்’. அலுவலகத்துக்குள்ளேயே அனுப்பக்கூடிய வகையில் அவர் ‘ஈமெயி’லைக் கண்டுபிடித்திருந்தார்.
அவரது ஈமெயிலில், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தான் கண்டு பிடித்திருந்த புதிய வழிமுறைக்கு ‘ஈமெயில்’ என்றும் பெயர் வைத்து அதற்கு காபிரைட்டைப் பதிவுசெய்தார். அப்போது மென்பொருட்களுக்கு பேடன்ட் வழங்கும் வழக்கம் இல்லாததால் காபிரைட் மட்டுமே செய்ய முடிந்தது. 1978-ல் சிவ. அய்யாத்துரை ‘ஈமெயில்’ கண்டுபிடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘www’ என்றழைக்கப்பட்ட உலகளாவிய வலையமைப்பின் வருகை நிகழ்ந்தது. அதற்குப் பிறகு இணையத்தின் விரிவோடு சேர்ந்து ‘ஈமெயி’லும் விரிவடைந்தது. அதன் அடுத்த பரிமாணம் கூகுளின் ‘ஜிமெயில்’. இன்று நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்றுக்குப் பின்னால் தமிழர் ஒருவரும் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே!
- தம்பி

Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

Education Loan to Students - 13 Banks in ONe Place - https://www.vidyalakshmi.co.in/Students/

https://www.vidyalakshmi.co.in/Students/

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

எரிசக்தி: ஒரு புள்ளிவிவரம்

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7521721.ece?widget-art=four-all



சாராய ஆலைகளின் தயவு இல்லாமல் சர்க்கரை ஆலைகளின் சங்கடங்களைத் தீர்க்க வழிகள் நிறைய இருக்கின்றன. அதில் ஒரு வெற்றிகரமான வழி இது. மொத்தக் கரும்பையும் சர்க்கரை உற்பத்திக்கு மட்டும் பயன்படுத்துவதால்தானே கூடுதல் உற்பத்திப் பிரச்சினை ஏற்படுகிறது.
உற்பத்தியைக் கொஞ்சம் மடைமாற்றினால் சமநிலை ஏற்படும் இல்லையா. கரும்பிலிருந்து சர்க்கரை மட்டும்தான் தயாரிக்க முடியுமா? எத்தனால் தயாரிக்கலாமே. எத்தனால் என்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத ஓர் எரிபொருள். கரும்புச் சாற்றுடன் Saccharomyces cerevisiae என்கிற நுண்ணுயிரி சேர்க்கப்படும்போது உருவாகிறது.
ஒரு டன் கரும்பிலிருந்து 70 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். அதாவது, ஒரு கிலோ சர்க்கரைக்குப் பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை விலை வைக்கலாம். இதன்படி ஒரு டன் கரும்புக்கு ரூ.2,450 முதல் ரூ.3,150 வரை விலை கிடைக்கும். இது கரும்பிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் எத்தனால் மூலம் கிடைக்கும் வருவாய். இன்னொரு பக்கம், சர்க்கரை உற்பத்தியின்போது கிடைக்கும் கழிவான மொலாசஸிலிருந்தும் எத்தனால் தயாரிக்கலாம். இதன்படி ஒரு டன் மொலாசஸிலிருந்து 10 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யலாம். இது உபரி வருவாய். உபரி லாபம்.
உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசலில் லிட்டருக்கு 25% முதல் 85 % வரை கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம். மத்திய அரசு கடந்த 2012-ல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஓர் உத்தரவிட்டது. அதில், ஒரு லிட்டர் பெட்ரோலில் முதல்கட்டமாக 5% எத்தனாலை கலக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. இதன் மூலம் சுமார் 105 கோடி லிட்டர் (1.8 மி.பேரல்) கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியும்.
முன்னதாக 2010, ஆகஸ்ட் 16-ல் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எத்தனாலுக்கு குறைந்தபட்ச விலையாக லிட்டருக்கு ரூ.27-ஐ நிர்ணயித்தது. தொடர்ந்து 2014 டிசம்பரில் ரூ.48.50 - 49.50 என விலையை உயர்த்தி நிர்ணயித்துள்ளது. இதனால், தற்போது நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களில் சுமார் 25 % மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் வகையிலான Flexible fuel engine கொண்டவையாக வடி வமைக்கப்படுகின்றன.
இவை எல்லாவற்றையும்விட எத்தனால் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எத்தனாலில் 35% ஆக்ஸிஜன் உள்ளது. எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி 34% வரை (பெட்ரோல், டீசல் ஓப்பீட்டு அளவில்) குறைகிறது. காற்றில் மாசு அளவும் குறைகிறது. 6,800 முதல் 8,000 லிட்டர் எத்தனால் உற்பத்தி மூலம் 87 முதல் 97% வரை பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முடியும் என்கின்றன ஆய்வுகள். தவிர, 4.5 லிட்டர் எத்தனால் உற்பத்திக்கு 12.15 லிட்டர் மட்டுமே மறைநீர் தேவை. இது ஒரு கோப்பை காபிக்கு ஆகும் மறை நீர் தேவையைவிட (180 லிட்டர்) பலமடங்கு குறைவு.
இதனால் அமெரிக்கா, பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எத்தனால் பயன்பாட்டுக்கு மாறிவிட்டன. 1976-ல் எத்தனால் பயன்பாட்டைத் தொடங்கிய பிரேசில், இன்று 100% எத்தனாலை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான வாகனங்களை உற்பத்திசெய்கிறது. அமெரிக்கா கடந்த 2009-ல் 10.6 பில்லியன் கேலன்கள் எத்தனால் உற்பத்தி மூலம் 4,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது; உபரியாக 30.5 மில்லியன் மெட்ரிக் டன் கால்நடைத் தீவனத்தை உற்பத்தி செய்தது; 364 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது.
நாம் நமது கச்சா எண்ணெய் தேவையில் 80% இறக்குமதி செய்கிறோம். ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களால் புவி வெப்பமயமாதல் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது. மறுபக்கம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நிலையாக இருப்பதில்லை. மதுவிலக்கு என்கிற ஒற்றை ஆயுதத்தில் இத்தனை இடர்ப்பாடுகளையும் களைய முடியும்.
தெளிவோம்...
- டி.எல்.சஞ்சீவிகுமார், 

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

Democracy Essence

India’s fundamental belief in democracy is often taken as a given, but it is instructive to understand the basis and strength of this belief. A new national survey by the Centre for the Study of Developing Societies shows that in 2013, under half the country unequivocally preferred democracy as the best form of government in all cases; the outcome was the same when a similar survey was conducted in 2005. The proportion of those who believe that an authoritarian government is acceptable in some cases has grown, but at 11 per cent it remains a minority view, and significantly lower than those with the same view in neighbouring Pakistan. Among the poor, the Scheduled Castes and the Scheduled Tribes, the preference for democracy was not what was significantly higher, but indifference as to the type of government. Satisfaction in the functioning of democracy has declined sharply in India, and with it, presumably, the belief that a form of government in which one notionally has a voice is the most desirable. Preference for authoritarianism was higher among those with the highest media exposure, those who lived in metros, those who were rich and those who were college-educated — groups for which democracy has delivered much more than for the marginalised sections, yet among whom such conservative views are growing. Even among those who identify themselves as democrats, many believe a strong leader would do well to take decisions on his or her own and do away with elections and Parliament, the survey reveals. Perhaps this reflects frustration with a system which while representative is simply not delivering equally and efficiently to all.
India would do well to watch out for the growth of such authoritarian tendencies, especially when they come in the garb of patriotism. This is evident, for instance, in the branding of criticism of the death penalty as “anti-national” and in support, even among some journalists, for the government’s move to go after television channels which aired views against Yakub Memon’s hanging. Simultaneously, the government would do well to not misunderstand the nature of its democratic compact with its people, especially the poor. Top among the essential characteristics of democracy as rated by respondents in the survey was the freedom to take part in protests and demonstrations, evidence of a country that holds the right to dissent dear. Several welfarist ideals — provision of basic necessities such as food, clothing and shelter, as well as a narrowing gap between the rich and the poor and job opportunities for all — came next in the list of most cherished tenets of democracy. The everyday experience of dealing with the state for these is no doubt frustrating — ration shops are ranked as being among the most corrupt, and the police are seen as the least trusted. Majoritarian and jingoistic notions of democracy are not what the people of India are looking for, but a welfarist democracy that delivers.

Law and Justice

வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் இந்தியாவில் சேவையாற்ற, வரம்புக்கு உட்பட்ட அளவில் அனுமதிக்கும் முடிவை நோக்கி அரசு நகரும் சமிக்ஞைகள் தெரிகின்றன. அதாவது, இந்திய நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட வெளிநாட்டினரை அனுமதிப்பதில்லை என்ற முந்தைய அரசுகளின் முடிவு அப்படியே தொடரும். அதேசமயம், அவர்கள் அங்கிருந்து சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு அனுமதிப்பது நடக்கும்.
சட்டத் துறைக்குள் இது விவாதத்தைக் கிளப்பியிருப்பதில் வியப்பில்லை. “சர்வதேச அளவில் இன்றைக்குச் சட்டத் தொழில் என்பது, ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூ. 1.30 லட்சம் கோடி புரளும் ஒரு துறை.
'ஆகையால், இதில் வெளியாரும் உள்ளே வரக் கூடாது, நாங்களும் வெளியே போகவில்லை' என்ற அணுகுமுறை ஆக்கபூர்வமானது அல்ல. மருத்துவம், பொறியியல்போல சட்டத் துறையிலும் உலகச் சந்தையில் போட்டியிடும் களத்தை நோக்கி நாம் நகர வேண்டும். சட்ட சேவைத் துறையிலும் இந்தியாவுக்குரிய பங்கைப் பெற வேண்டும்” என்பது வெளிநாட்டு வங்கிச் சேவையை ஆதரிப்பவர்களின் வாதம். “வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்கிருக்கும் பண வசதி, செல்வாக்கு, வீச்சு காரணமாக நாளடைவில் தொழிலில் ஆதிக்கம் செலுத்தக் கூடும். வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்களை அனுமதிப்பதால், வழக்குச் செலவுகள் பல மடங்காக உயரக் கூடும். இந்திய வழக்கறிஞர்களுக்கும் வருவாய்க் குறைவு ஏற்படும்” என்பது எதிர்ப்பவர்களின் வாதம்.
இன்றைய சூழலில், இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதிடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. தேசிய அடிப்படையில் நடைபெறும் இந்திய வழக்காடு மன்றங்களில் வாதிட வெளிநாட்டுச் சட்ட நிபுணர்கள் பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நாளைய நிலைமைகள் நம்மால் யூகிக்க முடியாதது அல்ல. இப்போதே, புதிய நிறுவனங்கள் தொடங்குதல், ஏற்கெனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களை வாங்குதல், இருவேறு நிறுவனங்களை இணைத்தல், புதிய முதலீடுகள் போன்ற விஷயங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் / தனிப்பட்ட வகையில் இப்படியான சேவைகளைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. நாளடைவில், இத்தகைய பணிகள் அதிகாரபூர்வமாக நடக்கும்போது, வெளிநாட்டவர்களின் சேவை மேலும் மேலும் அதிகரிக்கும்போது, யாருடைய ஆதிக்கம் மேலே வரும் என்பது நமக்குத் தெரியும்.
இந்தியாவின் ஆகப் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இன்னமும் உறுதியான / குறைந்தபட்ச வருமானம் எனும் இலக்கையே தொட முடியாத சூழலில் இருக்கிறார்கள். ஆரம்ப ஆண்டுகளில் மூத்த வழக்கறிஞர்கள், இளைய வழக்கறிஞர்களைச் சில ஆண்டுகளுக்குத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நீதிபதிகள் பேசும் நிலைதான் இங்கு நிலவுகிறது. மேலும், தொழில்திறன் சார்ந்து நம்மவர்களில் பெரும்பாலானவர்களை மேலே தூக்கிவிடவும் நம் அமைப்பில் இதுவரை இடம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், வெளிநாட்டுச் சட்ட சேவை என்பது அச்சுறுத்தலாக இல்லாமல் எப்படியிருக்கும்?
வர்த்தகம், சேவை தொடர்பான பொது ஒப்பந்தத்தில் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டு உலக வர்த்தக அமைப்பில் எப்போது உறுப்பினர்கள் ஆயினவோ, அப்போதே இந்த எல்லை தாண்டல் விஷயங்கள் நம் கையை மீறிவிட்டன என்பதே உண்மை. ஆனால், வெளிநாட்டினர் உள்ளே நுழையும் முன் நாம் நம் பக்கத்தை வலுவாக்கிக்கொள்வது முக்கியம். இந்திய அரசு முதலில் இந்த விஷயத்தில் தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்! 

Clean India

இந்தியாவை ஒரு பெரும் கிராமங்களின் தொகுப்பாகப் பார்த்தார் தேசப்பிதா காந்தி. ஆனால், இன்றைக்கோ உலகிலேயே நகர்மயமாக்கலை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடு இது. சர்வதேச அளவில் ஏனைய நாடுகளின் நகரங்களின் சுத்த ஒப்பீட்டில் நம்முடைய நகரங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்ததுதான். நமக்குள்ளான ஒப்பீட்டுக்கு பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உதவுகிறது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நகரங்களை வைத்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை நடத்தியிருக்கும் இந்த ஆய்வின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பட்டியலில், நாட்டின் 476 நகரங்களில் முதல் இடத்தை மைசூரு பெற்றிருக்கிறது. திருச்சி, நவி மும்பை, கொச்சி, ஹசன், மாண்டியா, பெங்களூரூ, திருவனந்தபுரம், அலிசாகர், காங்டாக் ஆகியவை அடுத்த இடங்களைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கின்றன. இதேபோல, சுத்தமாக உள்ள தலைநகரங்களில் பட்டியலில் பெங்களூரூ முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. திருவனந்தபுரம், காங்டாக், டெல்லியின் சிறு குறிப்பிட்ட பகுதியான புது டெல்லி மாநகராட்சிப் பகுதி, சண்டீகர், புதுச்சேரி, அகர்தலா, போர்ட் பிளேர், அய்ஜால், குவாஹாட்டி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கின்றன.
நாட்டின் தலைநகரம் டெல்லியின் பெரும் பகுதி 379-வது இடத்தில் இருக்கிறது இந்தப் பட்டியலில். அதேபோல, மும்பையின் பெரும்பகுதி 147-வது இடத்தில் இருக்கிறது. பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ள நகரங்களில் 25 மேற்கு வங்கத்தைச் சார்ந்தவை. நாட்டிலேயே அதிகமான மாநகராட்சிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்திலோ இட்டாவா மட்டுமே 100 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்கும் ஒரே மாநகரம். இந்தத் தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கும் நகரம் மத்தியப் பிரதேசத்தின் தாமோ. இதேபோல தலைநகரங்களில் மோசமான நகரம் பிகாரின் பாட்னா. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி குப்பைக்கூளங்கள் நிரம்பிய ஊர்களின் பட்டியலில்தான் முன்னணியில் இருக்கிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 476 நகரங்களில் 418-வது இடத்தில் வாரணாசி இருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்த அளவில் திருச்சி நீங்கலாக, சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று நகரங்கள் முதல் 200 இடங்களுக்குள் வந்திருக்கின்றன. மதுரை 20-வது இடத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னை 61-வது இடத்தில் இருக்கிறது. கோவை 196-வது இடத்தில் இருக்கிறது.
இந்தத் தரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இவை நம்முடைய நகர்மயமாக்கல் சிந்தனைகளை அப்படியே புரட்டிப்போடக் கூடியவை என்பவைதான். அதாவது, நகர்மயமாக்கலில் நவீன வளர்ச்சி என்று நாம் எதைச் சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, எதை நம்பிக்கொண்டிருக்கிறோமோ அதைச் சுக்குநூறாக உடைக்கின்றன இவை. சுத்தம் என்பது இங்கே அழகோ, அலங்காரமோ அல்ல. நாம் வாழ்வதற்கு ஏற்ற சூழலைத்தான் அது குறிக்கிறது. எத்தனை நூறு கோடிகளைக் கொட்டினாலும், சுத்தம் சுகாதாரத்துக்கும் வெற்றுப்பகட்டுக்கும் இடையே உள்ள தூரத்தை இந்தத் தரவுகள் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகின்றன. என்ன செய்யப்போகிறோம்? பெங்களூரு, மைசூரு வரலாறு தெரிந்தவர்களுக்கு வெற்று முழக்கங்களுக்கும் தொலைநோக்குப்பார்வைக்கும் உள்ள வித்தியாசம் புரியவரும்!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

M.S.Swaminathan பசுமைப் புரட்சியின் தந்தை

இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் (M.S.Swaminathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த தும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை.
l ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
l ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
l அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.
l 1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.
l சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார்.
l உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார். ‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என்பார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார்.
l இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.
l கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
l வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார்.

புதன், 5 ஆகஸ்ட், 2015

RBI Interest Rate

வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசும் ஆதரிப்பது வியப்பாக இருக்கிறது.
மத்திய அரசும் தொழில் - வர்த்தக சமூகங்களும் கொடுத்த நெருக்குதலால் ஜூன் 10-ல், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) பிற வங்கிகளுக்குத் தரும் நிதிக்கான (ரெபோ) வட்டி வீதத்தை 7.5%-லிருந்து 7.25% ஆக - அதாவது 0.25% - குறைத்தது. இது தொழில் - வர்த்தகத் துறையை உற்சாகப்படுத்துவதற்காக.
இப்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு முன்பிருந்த டி.பி. சுப்பா ராவ் காலத்திலிருந்தே இந்த ‘ரெபோ ரேட்டை’ குறைக்க வேண்டும் என்பதே பலருடைய பல்லவியாகத் தொடர்ந்துவருகிறது. வட்டி வீதம் என்பது பணத்துக்கான தேவை அளவுக்கும், நிறுவனத்தின் உற்பத்திச் செலவுக்கும் மட்டும் தொடர்புள்ள அம்சம் அல்ல, வேறு பலவற்றுக்கும் அதனுடன் தொடர்பு இருக்கிறது.
பண்டங்களுக்கும் சேவைகளுக்குமான தேவை, வட்டி வீதத்தைக் குறைப்பதால் அதிகரிக்கும்; அப்போது பணத்துக்கும் தேவை அதிகரிக்கும். வங்கிகள் விடுவிக்கும் பணம் முழுக்க இப்படி உற்பத்தியாகும் பண்டங்களுக்கும் சேவைகளுக்கும்தான் செலவிடப்படும் என்பது நிச்சயம் இல்லை. சில சமயம் இந்தப் பணத்தை வங்கிகளிடமிருந்து வாங்கி, சில பண்டங்களைக் கொள்முதல் செய்து பதுக்கி வைக்கவும் பயன்படுத்துவார்கள். பண சப்ளை அதிகரித்தால், பண்டங்களின் விலையையும் தயாரிப்புக்குத் தேவைப்படும் இடுபொருட்களின் விலையையும்கூட உயர்த்துவார்கள்.
பண சப்ளை அதிகமாக இருக்கும் காலத்தில், பணத்தை சாலை அமைப்பது, பாசன வசதிகளை மேம்படுத்துவது, உரம், மின்சாரம் போன்றவற்றைத் தயாரிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்தினால் விலைவாசி சற்றே உயரும். காரணம், இதர இடுபொருட்கள் போதிய அளவில் கிடைக்காது. இந்த அனுபவம் 1970-களில் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
வட்டியின் பங்கு குறைவு
தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கையில் மொத்தத் தயாரிப்புச் செலவில், வட்டிகளுக்காக மட்டும் செலவிடுவது 2% முதல் 3% வரைதான் இருக்கும். வட்டி உயர்ந்தாலும் உற்பத்திச் செலவு அதிகமாகிவிடாது. பண சப்ளை அதிகரிக்கும்போது ஏற்படும் பணவீக் கத்தால் பண்ட உற்பத்திக்கான முதலீட்டுச் செலவு அதிகரித்து, முதலீட்டு வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது; அத்துடன் ஏழைகளையும் பாதிக்கிறது. ஏழைகளின் வாங்கும் சக்தி சுரண்டப்படுகிறது.
இந்த நிலையைச் சமாளிக்க பொது விநியோக முறையில் வழங்கும் உணவு தானியங்களுக்கு மானியத்தை அதிகரி்ப்பது முதல் பல்வேறு வகையிலும் மானியச் செலவை அதிகப்படுத்த நேர்கிறது. இவற்றுக்குக் காரணமே வட்டி வீதக் குறைப்பும் பணத்துக்கான தேவை அதிகரிப்பும்தான்.
இப்படி நேர்ந்தால் ரிசர்வ் வங்கிதான் லகானை இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே தொழிலதி பர்கள், வியாபாரிகள் மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வட்டி வீதத்தை அது குறைக்கக் கூடாது.
அடிக்கடி வட்டி வீதத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தால், எல்லோரும் பணத்தை அதிக அளவில் கையில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். வங்கிகளில் வைப்புத்தொகைக்குக் கிடைக்கும் வட்டி குறைவதால் முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு இருக்காது. வட்டியே கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தாலும்கூட எல்லோரும் ரொக்கத்தை வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். தொழிலதிபர்களும் வியாபாரிகளும் வங்கியில் அதிகம் கடன் வாங்கி, ரொக்க இருப்பை அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
ரூபாயின் மாற்று மதிப்பு
இப்போதைய நிலையைச் சற்று ஊன்றிக் கவனிப்போம். ரூபாயின் செலாவணி மதிப்பு குறைகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையைவிட்டு வெளியேறுகின்றனர். தங்களிடம் இருக்கும் ரூபாயை அமெரிக்க டாலர்களாக மாற்றிக்கொள்கின்றனர். டாலருக்கு கிராக்கி அதிகமாவதால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிகிறது. பணவீக்கம் மேலும் அதிகமாகிறது.
வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசும் ஆதரிப்பது வியப்பாக இருக்கிறது. வங்கிகளின் வட்டி வீதம் குறைந்துகொண்டே வந்தால் உள்நாட்டுச் சேமிப்பும் குறையும். ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ரொக்கத்துக்குக் கிடைக்கும் வட்டியில்தான் காலம் தள்ளுகிறார்கள். அவர்களுடைய பணத்துக்கு மதிப்பு குறைவதுடன் வட்டியும் குறைவது அவர்களுக்கு இரட்டை இழப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் ஏறிவரும் விலைவாசியால் அவர்களுடைய வாங்கும் சக்தி மேலும் பறிக்கப்படுகிறது. இது ஓய்வூதியதாரர்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
வட்டி வீதம் குறைந்தால் மத்திய அரசு வாங்கும் கடன்களுக்கான வட்டி குறைகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளூர் சந்தையில் அதிகம் கடன் வாங்கும் அமைப்பு அரசுதான். எனவே, அது தன்னுடைய செலவைக் குறைக்க இதை விரும்பக்கூடும். ஆனால், ஒட்டுமொத்தப் பொருளாதார நலனுக்கு இது நல்லதல்ல.
இதற்குப் பதிலாக, அரசு தன்னுடைய செலவுக்கேற்ப வருவாயைப் பெருக்கும் வழிகளை நாட வேண்டும். உள்நாட்டுச் சந்தையில் கடன் வாங்கக் கூடாது. தனியார் துறையினருக்குத் தேவைப்படும் கடனை உள்நாட்டுச் சந்தையில் வாங்கிக்கொள்ள விட்டுவிட வேண்டும்.
தனியார் துறையினர் தங்களுடைய உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். சீனத்துடனும் அமெரிக் காவுடனும் ஒப்பிட்டுப் பார்த்து, உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தொழில்துறையில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நம்மால் உலகப் பொருளாதார அரங்கில் முன்னேற முடியாது.
உலக வர்த்தகத்தில் வட்டிக்காகும் செலவு, மொத்தச் செலவுடன் ஒப்பிடும்போது வெறும் 2% தான். எனவே, வட்டி வீதத்தைக் குறைக்காவிட்டால் உற்பத்திச் செலவு கூடிவிடும், உற்பத்தியே நடக்காது என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. மாறாக, இந்தியப் பொருளாதாரத்தில் அதிலும் குறிப்பாக இந்தியாவின் பெருந்தொழில்துறையில் வேறு என்ன கோளாறுகள் என்று பார்த்து, அவற்றைச் சரி செய்ய வேண்டும். கோஷங்களைப் போட்டுக்கொண்டிருப்பதால் மட்டும் உற்பத்தி பெருகிவிடுமா என்ன?
(கட்டுரையாசிரியர் ‘செபி’ அமைப்பின் முன்னாள் ஆலோசகர்) © தி பிசினஸ்லைன், சுருக்கமாகத் தமிழில்: சாரி 

இன்று ஹிரோஷிமாவின் 70-வது நினைவுதினம்

ஜஸ்டின் மெக்கரி
Comment   ·   print   ·   T+  
அந்தச் சம்பவம் நடந்தபோது, பல்கலைக்கழக மாணவராக இருந்த சுனாவோ சுபோய்க்கு வயது 20. ‘பூமியிலேயே நரகத்தில் வாழ்வது’என்பதற்கு இணையாக வேறொரு பயங்கரமான சம்பவத்தை அவரால் குறிப்பிட முடியாது. 70 ஆண்டுகளாகத் தனது முகத்தில் அவர் சுமக்கும் தழும்புகளே இதற்குச் சாட்சி. எனினும், அணுகுண்டுப் போர் பயங்கரத்தின் சாட்சியாகத் தான் இருந்ததை நினைவுகூர, ஒரு கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தை எடுத்துக்காட்டுகிறார் சுபோய். அதில் மொட்டைத் தலையுடன் கேமராவின் திசைக்கு எதிராக வேறெங்கோ பார்த்தபடி இருக்கும் இளைஞரைச் சுட்டிக்காட்டுகிறார்.
“அது நான்தான். ஏதேனும் மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எந்த வித சிகிச்சையும் கிடைக்கவில்லை. உணவு, தண்ணீர் எதுவுமில்லை. முடிவு நெருங்கிவிட்டது என்றே நான் நினைத்தேன்” என்கிறார்.
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ஹிரோஷிமாவில் உள்ள மியுக்கி ப்ரிட்ஜ் பகுதி. 1945 ஆகஸ்ட் 6-ல் ‘எனோலா கே’ எனும் அமெரிக்காவின் பி-29 போர் விமானம் 15 கிலோ டன் எடை கொண்ட அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது வீசிய பின்னர், மூன்று மணி நேரம் கழித்து எடுக்கப்பட்ட படம் அது. சுமார் 60,000 முதல் 80,000 பேர் உடனடியாகக் கொல்லப்பட்டனர்; சில மாதங்களில் பலி எண்ணிக்கை 1,40,000 ஆக உயர்ந்தது.
அந்த நாளில் ஹிரோஷிமாவில் எடுக்கப்பட்ட மிகச் சில புகைப்படங்களில் எஞ்சியிருக்கும் படங்களில் அதுவும் ஒன்று. அப்படத்தில் வேறு பலருடன் சாலையில் அமர்ந்திருக்கிறார் சுபோய். நொறுங்கிப்போன கட்டிடங்களின் திசையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார்கள் அனைவரும். மறுபக்கம், காயமடைந்த பள்ளிக் குழந்தைகளின் வலியைக் குறைக்க அவர்களின் காயங்களின் மீது சமையல் எண்ணெயை ஊற்றுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.
“தங்கள் அனுபவத்தைப் பற்றிப் பேசவும் அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும் தேவையான பலத்தை என்னைப் போன்றவர்கள் இழந்துவருகிறார்கள்” என்கிறார் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியரான சுபோய். அணு ஆயுதப் போரின் பயங்கரம் பற்றி எச்சரிக்க உலகம் முழுவதும் பயணம் செய்திருப்பவர் அவர்.
‘ஹிபாகுஷா’
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சு சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்கள் என்று பதிவுசெய்யப்பட்ட 1,83,000 பேரின் சராசரி வயது, முதன் முறையாகக் கடந்த மாதம் 80 ஆக உயர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 6 அன்று காலை நடந்த அச்சம்பவம் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பாக ‘ஹிபாகுஷா’என்ற பெயரில் அழைக்கப்படும் அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நினைவுகள் உண்டு.
ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டதையும் அதைத் தொடர்ந்து 10 மீட்டர் தொலைவில் காற்றில் தான் தூக்கி வீசப்பட்டதையும் நினைவுகூருகிறார் சுபோய். நினைவு திரும்பியபோது தனது உடலின் பெரும்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்ததையும், வெடிப்பின் வேகத்தில் தனது சட்டையின் கைப் பகுதியும் கால்சட்டையின் ஒரு பகுதியும் பிய்த்துக்கொண்டு சென்றிருந்ததும் அவருக்குத் தெரியவந்தது. “எனது கைகளில் கடுமையான தீக்காயங்கள் இருந்தன. என் கைவிரல்களிலிருந்து ஏதோ வழிந்ததுபோல் இருந்தது” என்கிறார் சுபோய். அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டு வீச்சுகளில் உயிர் தப்பியவர்களுக்கான தேசிய அளவிலான அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவின் துணைத் தலைவர் அவர்.
“எனது முதுகு கடுமையாக வலித்தது. எனினும், என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. வழக்கமான, ஆனால் பெரிய அளவிலான வெடிகுண்டு என் அருகில் வெடித்தது என்று கருதினேன். ஆனால், வெடித்தது அணுகுண்டு என்றும் எனது உடலில் கதிர்வீச்சு பாய்ந்திருக்கிறது என்றும் எனக்குத் தெரியாது. 100 மீட்டர் தொலைவுக்குக்கூட எதுவும் தெரியாத வகையில் அத்தனை புகை மண்டியிருந்தது. எனினும், பூமியின் நரகத்துக்குள் நுழைந்துவிட்டேன் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. எங்கும் கருகிய உடல்கள் கிடந்தன. சதை கருகிய வாடை எங்கும் பரவியிருந்தது” என்கிறார் சுபோய்.
இரண்டு புற்றுநோய்கள்
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் ஒரு மாதத்துக்கும் மேலாகச் சுயநினைவின்றி இருந்தார். அவருக்கு நினைவு திரும்பியபோது போரில் ஜப்பான் தோற்றிருந்தது. அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அதன்பிறகு 11 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சுபோய். மூன்று முறை அவர் இறக்கும் தறுவாய்க்குச் சென்றதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு புற்றுநோய்களுக்காகவும் பல்வேறு நோய்களுக்காகவும் பல மருந்துகளை அவர் உட்கொள்கிறார். அந்த இரண்டு புற்றுநோய்களும் கதிரியக்கத்தின் மூலம் தனக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
வட கொரியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுத மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அணுகுண்டு வீச்சில் தப்பியவர்களின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படும் நிலையில், தாங்கள் அனுபவித்தவை தங்களுடன் மறைந்துவிடக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
“அணு ஆயுதங்களுக்கு எதிராக ‘ஹிபாகுஷா’ சமூகம் தொடர்ந்து பேசிவந்தால், அதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள். எனவேதான், நாங்கள் உடல்ரீதியாகச் செயல்படும் காலம் வரை நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் அந்த அமைப்பின் அதிகாரியான ஹிரோஷி ஷிமிசு. சம்பவத்தின்போது அவருக்கு மூன்று வயது. ஹிரோஷிமாவில் அவரது வீட்டிலிருந்து 1.6 கி.மீ. தொலைவில் அணுகுண்டு வெடித்தது.
அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களில் சிலர் வசிக்கும் மேற்கு டோக்கியோ அருகில் உள்ள சிறிய நகரமான குனிட்டாச்சி மற்றும் ஹிரோஷிமா நகரங்களின் அமைப்புகள், இச்சம்பவத்தால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் மற்றும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லாதவர்களிடம் இவர்களின் அனுபவங்களைக் கதை சொல்லும் வகுப்புகள் மூலம் தக்கவைக்க முயற்சி செய்கின்றன.
தளராத உறுதி
இச்சம்பவத்தில் உயிர் தப்பிய 84 வயதான பெண் ஒருவர், கடந்த மாதம் ‘ஸ்கைப்’ மூலம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களில் சிலர், சமீபத்தில் ஜப்பானியத் தொண்டு நிறுவனத்தின் கப்பலான ‘பீஸ் போட்’டில், 24 நாடுகளுக்கு அமைதி கோரும் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கணக்குப்படி, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,000-ஐத் தாண்டியது(ஹிரோஷிமாவில் 2,92,325 நாகசாகியில் 1,65,409). ஹிரோஷிமாவுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது. ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் சரணடைவதாக பேரரசர் ஹிரோஹூட்டோ அறிவித்தார்.
“போராட்டத்தைத் தொடர என்னிடம் சக்தி இல்லை. நான் சாவுக்காகப் பயப்படவில்லை. ஆனால், அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் என்ற முறையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றிய நினைவுகளை முன்னெடுத்துச் செல்வது எனது கடமை” என்கிறார் ஹிரோகோ ஹடாகேயமா. ஹிரோஷிமா சம்பவத்தின்போது அவருக்கு ஆறு வயது.
ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வார் சுபோய். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கு வழிகாட்ட, அன்று மாலை, மோடோயாசு நதி மீது விளக்கை மிதக்கவிடுவார். அணுகுண்டு வெடிப்பின்போது ஏற்பட்ட வெப்பத்திலிருந்து தப்பிக்க அந்த நதியைத்தான் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தினர்.
அணு ஆயுதத்துக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிவரும் சுபோய், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்துப் பேசுவார். போருக்குப் பிந்தைய அமைதி முயற்சியை ஷின்சோ அபே குலைக்கிறார் என்று குற்றம்சாட்டுபவர் சுபோய். “தனது பதவியைப் பயன்படுத்தி அணு ஆயுத உலகை விட்டொழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொள்வேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை அணு ஆயுதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன்” என்கிறார் சுபோய்.