இமெயிலைக் கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர், ஒரு தமிழர். ராஜபாளையத்தில் முகவூரைச் சொந்த ஊராகக் கொண்ட சிவா அய்யாதுரை மும்பையில் ஏழு வயது வரை வசித்தார். அதன் பிறகு தனது பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1978-ல் தனது 14-வது வயதில் இமெயிலைக் கண்டுபிடித்தார்.
இமெயிலைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையைப் பெற்று 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் அவர் கவுரவிக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து அவர் அளித்த பேட்டி:
கமலோடு என்ன பேசினீர்கள்?
கமல் ஹாசன் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது பல விஷயங்களை ஆழமாக விவாதிப்போம். சமீபத்தில் சந்தித்தோம். இந்த உலகில் எப்படிப் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் மாற்ற முடிகிறது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அதைத் தவிர, வரலாறு, மருத்துவம், கலை எனப் பல விஷயங்களைப் பேசினோம். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளோம். அது கண்டிப்பாக லாப நோக்கு கொண்ட முயற்சியாக இருக்காது.
நீங்கள்தான் மின்னஞ்சலை கண்டுபிடித்தீர்களா?
நான் இமெயிலை கண்டுபிடித்தது தற்செயலானதுதான். எனக்குக் கணிதத்தின் மீது அதீத ஆர்வம் உண்டு. ஒன்பதாம் வகுப்பிலேயே கல்லூரிப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது என் அம்மா, எனது குரு மைக்கெல்சனிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது எனது கவனம் எல்லாம் மருத்துவத் துறையில்தான் இருந்தது. எனது குருவான மைக்கெல்சென் எனக்கு மருத்துவம் சார்ந்து ஏதாவது பணி கொடுப்பார் என்றுதான் காத்திருந்தேன். ஆனால், எனக்கு அவர் இமெயில் உருவாக்கும் பணியை அளித்தார்.
அலுவலகங்களில் கடிதப் போக்குவரத்தைக் கணினிமயமாக்க வேண்டும் என்பதுதான் 1970-களில் எனக்குக் கொடுக்கப்பட்ட சவால். இன்று உங்கள் மெயிலில் இருக்கும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஷ் உள்ளிட்டவை அப்போது காகிதங்களாக இருக்கும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டியது அங்குள்ள உதவியாளரின் பொறுப்பாகும். அந்தப் பணிகளை எளிமைப்படுத்துவதற்காகவே இமெயில் உருவாக்கினேன்.
எனக்கு அப்போது 14 வயது. இமெயிலுக்கான காப்புரிமை பெற்றிருந்தாலும் அதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று நான் கூறிக்கொள்ளவில்லை. அதன் பிறகு நான் எனது மருத்துவ ஆராய்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். 2011-ம் ஆண்டில் எனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் டைம் பத்திரிகையின் நிருபர் எனது ஆவணங்களைச் சரிபார்த்து ‘இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று கட்டுரை எழுதினார். அதற்குள் இமெயிலை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பெருமை தேடிக்கொள்ள ஆரம்பித்தன.
ஏன் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை?
உலகெங்கும் பயன்படுத்தப்படும் இமெயிலை ஒரு இந்தியன், கருப்பு நிறத் தமிழன் கண்டுபிடித்தான் என்று அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களும் அதை எளிதாக நம்புவதில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மேலை நாட்டுக்காரர்களால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தை நம்மிடமேகூட அவர்கள் விதைத்துள்ளனர். இந்தியர்கள் புதிதாக எதையும் செய்ய முடியாதவர்கள் என்ற எண்ணத்தை இந்தியர்களின் எண்ணங்களிலும் விதைத்துள்ளனர். இது நவீன காலனியாதிக்கம்.
மருத்துவத்தில் உங்களின் சாதனை என்ன?
எனக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் எனது பாட்டிதான். அவர் நோயாளியின் முகத்தைப் பார்த்தே மருந்தைக் கொடுப்பார். நான் சிறுவயதிலேயே எனது பாட்டி வைத்தியத்தின் மந்திரத்தை அறிந்து அதை உலகுக்குக் கொடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அதை நோக்கித்தான் இப்போதும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
நமது நாட்டில் உள்ள சித்த வைத்தியம் உடலை ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமாகப் பார்க்கிறது. ஒரு விமானத்தை விமானப் பொறியாளர் பார்ப்பதுபோல. இதனைப் பொறியியல் வார்த்தைகளில் ஆங்கில மொழியில் நான் கொடுத்தேன்.
எங்களது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, சைட்டோ சால்வ் என்ற கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம். அது அனைத்து ஆய்வக ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கிய புதிய ஆய்வுமுறை. இதன் மூலம் உடலின் இயக்கத்தையும் அதற்கு ஏற்ற மருந்துகளையும் கணினியின் மூலமே பொருத்திப் பார்க்க முடியும். கணையப் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளின் இயக்கத்தையும் ஆராய்ந்து, சரியான, அதிகப் பயன் கொடுக்கிற மருந்தைத் தேர்வு செய்துள்ளோம். அதனைச் சோதித்துப் பார்ப்பதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
எக்கோ மெயில் என்று புதிதாக கண்டுபிடித்துள்ளீர்களா?
புகழ்மிக்க எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கானவாய்ப்பு கிடைத்தபோது, அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டன் அலுவலகத்தில் உள்ள மெயில்களை முறைப்படுத்துவதற்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பிறகு உருவாக்கப்பட்டது எக்கோ மெயில். இதன் மூலம் ஒருவருக்கு வரக்கூடிய மெயில்கள் தானாகவே ஒழுங்குபடுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்துக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக