புதன், 5 ஆகஸ்ட், 2015

RBI Interest Rate

வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசும் ஆதரிப்பது வியப்பாக இருக்கிறது.
மத்திய அரசும் தொழில் - வர்த்தக சமூகங்களும் கொடுத்த நெருக்குதலால் ஜூன் 10-ல், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) பிற வங்கிகளுக்குத் தரும் நிதிக்கான (ரெபோ) வட்டி வீதத்தை 7.5%-லிருந்து 7.25% ஆக - அதாவது 0.25% - குறைத்தது. இது தொழில் - வர்த்தகத் துறையை உற்சாகப்படுத்துவதற்காக.
இப்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு முன்பிருந்த டி.பி. சுப்பா ராவ் காலத்திலிருந்தே இந்த ‘ரெபோ ரேட்டை’ குறைக்க வேண்டும் என்பதே பலருடைய பல்லவியாகத் தொடர்ந்துவருகிறது. வட்டி வீதம் என்பது பணத்துக்கான தேவை அளவுக்கும், நிறுவனத்தின் உற்பத்திச் செலவுக்கும் மட்டும் தொடர்புள்ள அம்சம் அல்ல, வேறு பலவற்றுக்கும் அதனுடன் தொடர்பு இருக்கிறது.
பண்டங்களுக்கும் சேவைகளுக்குமான தேவை, வட்டி வீதத்தைக் குறைப்பதால் அதிகரிக்கும்; அப்போது பணத்துக்கும் தேவை அதிகரிக்கும். வங்கிகள் விடுவிக்கும் பணம் முழுக்க இப்படி உற்பத்தியாகும் பண்டங்களுக்கும் சேவைகளுக்கும்தான் செலவிடப்படும் என்பது நிச்சயம் இல்லை. சில சமயம் இந்தப் பணத்தை வங்கிகளிடமிருந்து வாங்கி, சில பண்டங்களைக் கொள்முதல் செய்து பதுக்கி வைக்கவும் பயன்படுத்துவார்கள். பண சப்ளை அதிகரித்தால், பண்டங்களின் விலையையும் தயாரிப்புக்குத் தேவைப்படும் இடுபொருட்களின் விலையையும்கூட உயர்த்துவார்கள்.
பண சப்ளை அதிகமாக இருக்கும் காலத்தில், பணத்தை சாலை அமைப்பது, பாசன வசதிகளை மேம்படுத்துவது, உரம், மின்சாரம் போன்றவற்றைத் தயாரிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்தினால் விலைவாசி சற்றே உயரும். காரணம், இதர இடுபொருட்கள் போதிய அளவில் கிடைக்காது. இந்த அனுபவம் 1970-களில் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
வட்டியின் பங்கு குறைவு
தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கையில் மொத்தத் தயாரிப்புச் செலவில், வட்டிகளுக்காக மட்டும் செலவிடுவது 2% முதல் 3% வரைதான் இருக்கும். வட்டி உயர்ந்தாலும் உற்பத்திச் செலவு அதிகமாகிவிடாது. பண சப்ளை அதிகரிக்கும்போது ஏற்படும் பணவீக் கத்தால் பண்ட உற்பத்திக்கான முதலீட்டுச் செலவு அதிகரித்து, முதலீட்டு வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது; அத்துடன் ஏழைகளையும் பாதிக்கிறது. ஏழைகளின் வாங்கும் சக்தி சுரண்டப்படுகிறது.
இந்த நிலையைச் சமாளிக்க பொது விநியோக முறையில் வழங்கும் உணவு தானியங்களுக்கு மானியத்தை அதிகரி்ப்பது முதல் பல்வேறு வகையிலும் மானியச் செலவை அதிகப்படுத்த நேர்கிறது. இவற்றுக்குக் காரணமே வட்டி வீதக் குறைப்பும் பணத்துக்கான தேவை அதிகரிப்பும்தான்.
இப்படி நேர்ந்தால் ரிசர்வ் வங்கிதான் லகானை இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே தொழிலதி பர்கள், வியாபாரிகள் மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வட்டி வீதத்தை அது குறைக்கக் கூடாது.
அடிக்கடி வட்டி வீதத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தால், எல்லோரும் பணத்தை அதிக அளவில் கையில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். வங்கிகளில் வைப்புத்தொகைக்குக் கிடைக்கும் வட்டி குறைவதால் முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு இருக்காது. வட்டியே கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தாலும்கூட எல்லோரும் ரொக்கத்தை வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். தொழிலதிபர்களும் வியாபாரிகளும் வங்கியில் அதிகம் கடன் வாங்கி, ரொக்க இருப்பை அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
ரூபாயின் மாற்று மதிப்பு
இப்போதைய நிலையைச் சற்று ஊன்றிக் கவனிப்போம். ரூபாயின் செலாவணி மதிப்பு குறைகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையைவிட்டு வெளியேறுகின்றனர். தங்களிடம் இருக்கும் ரூபாயை அமெரிக்க டாலர்களாக மாற்றிக்கொள்கின்றனர். டாலருக்கு கிராக்கி அதிகமாவதால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிகிறது. பணவீக்கம் மேலும் அதிகமாகிறது.
வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசும் ஆதரிப்பது வியப்பாக இருக்கிறது. வங்கிகளின் வட்டி வீதம் குறைந்துகொண்டே வந்தால் உள்நாட்டுச் சேமிப்பும் குறையும். ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ரொக்கத்துக்குக் கிடைக்கும் வட்டியில்தான் காலம் தள்ளுகிறார்கள். அவர்களுடைய பணத்துக்கு மதிப்பு குறைவதுடன் வட்டியும் குறைவது அவர்களுக்கு இரட்டை இழப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் ஏறிவரும் விலைவாசியால் அவர்களுடைய வாங்கும் சக்தி மேலும் பறிக்கப்படுகிறது. இது ஓய்வூதியதாரர்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
வட்டி வீதம் குறைந்தால் மத்திய அரசு வாங்கும் கடன்களுக்கான வட்டி குறைகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளூர் சந்தையில் அதிகம் கடன் வாங்கும் அமைப்பு அரசுதான். எனவே, அது தன்னுடைய செலவைக் குறைக்க இதை விரும்பக்கூடும். ஆனால், ஒட்டுமொத்தப் பொருளாதார நலனுக்கு இது நல்லதல்ல.
இதற்குப் பதிலாக, அரசு தன்னுடைய செலவுக்கேற்ப வருவாயைப் பெருக்கும் வழிகளை நாட வேண்டும். உள்நாட்டுச் சந்தையில் கடன் வாங்கக் கூடாது. தனியார் துறையினருக்குத் தேவைப்படும் கடனை உள்நாட்டுச் சந்தையில் வாங்கிக்கொள்ள விட்டுவிட வேண்டும்.
தனியார் துறையினர் தங்களுடைய உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். சீனத்துடனும் அமெரிக் காவுடனும் ஒப்பிட்டுப் பார்த்து, உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தொழில்துறையில் நுகர்வோர்களை ஈர்க்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நம்மால் உலகப் பொருளாதார அரங்கில் முன்னேற முடியாது.
உலக வர்த்தகத்தில் வட்டிக்காகும் செலவு, மொத்தச் செலவுடன் ஒப்பிடும்போது வெறும் 2% தான். எனவே, வட்டி வீதத்தைக் குறைக்காவிட்டால் உற்பத்திச் செலவு கூடிவிடும், உற்பத்தியே நடக்காது என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. மாறாக, இந்தியப் பொருளாதாரத்தில் அதிலும் குறிப்பாக இந்தியாவின் பெருந்தொழில்துறையில் வேறு என்ன கோளாறுகள் என்று பார்த்து, அவற்றைச் சரி செய்ய வேண்டும். கோஷங்களைப் போட்டுக்கொண்டிருப்பதால் மட்டும் உற்பத்தி பெருகிவிடுமா என்ன?
(கட்டுரையாசிரியர் ‘செபி’ அமைப்பின் முன்னாள் ஆலோசகர்) © தி பிசினஸ்லைன், சுருக்கமாகத் தமிழில்: சாரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக