தன்னுடைய
ஆட்சியின் முதலாண்டை முடித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது
நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான தேஜகூ அரசு.
பொதுவாக,
ஆட்சியாளர்கள்தான் தங்களுடைய ஆட்சிப் பொறுப்பேற்பின் ஆண்டு நிறைவை மக்களுக்கு
நினைவூட்டுவார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்த அளவில், அரசாங்கத்தை முந்திக்கொண்டு
ஏனையோர் - முக்கியமாக எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் - முன்னிற்பதைப் பார்க்க
முடிகிறது. இதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மட்டும்
அல்லாமல், தேர்தல் முடிந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் அரசின் பிரச்சாரம் அப்படி.
ஒருவர் மேடையில் நின்று பார்வையாளர்களைப் பார்த்து, சதா தன் புஜபலத்தைத்
தட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும்போது, பார்வையாளர்களும் அவருக்கான நியாயத்தைச்
செய்யத் தருணம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்தானே? இதோ, ஓராண்டு முடிந்துவிட்டது,
தருணம் வந்துவிட்டது. மக்கள் தம் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள்.
மோடி அரசின் முதலாண்டு எப்படி?
ஆதரவாளர்களின்
விமர்சனம் இது: “ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிடப் பொருளாதாரம் இப்போது நல்ல
நிலையில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்திருக்கிறது.
மூலதன வருகை அதிகபட்ச அளவை எட்டியிருக்கிறது. மனு செய்வதும் அரசு அங்கீகரிப்பதும்
இணையத்தின் வழி நடைமுறையாக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி வயல்கள், அலைக்கற்றை
அலைவரிசை ஏலங்கள் வெளிப்படையாக நடைபெற்றன. கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக 8.3%
அளவுக்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதனால் பல மின்னுற்பத்தி
நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. விளிம்புநிலை மக்களை முறைசார்
நிதியாள்கைக்குள் கொண்டுவரும் ‘ஜன் தன்’ திட்டத்தின் மூலம் ஆறே மாதங்களில் 15
கோடிப் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய நாட்களில்
ரூ. 12 ஆண்டு சந்தாவுக்கு ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் ‘சுரக்ஷா பீம
யோஜனா’ திட்டத்தில் 5.57 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ரூ.330 ஆண்டு
சந்தாவுக்கு, ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் ‘ஜீவன் ஜோதி யோஜனா’
திட்டத்தில் 1.7 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல்
கடந்த 12 மாதங்களில் அரசின் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை.”
எதிரிகளின்
விமர்சனம் இது: “தன்னுடைய நிர்வாகக் கொள்கை யாக, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச
நிர்வாகம்’ என்பதை அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, இன்றைக்குக் கிட்டத்தட்ட ஒரு
நபர் அரசாகி விட்டது. பிரதமர் அலுவலகம் சர்வ அதிகாரங்களின் பீடமாகக் காட்சி
யளிக்கும் நிலையில், பிரதமரோ நாடாளுமன்றத்துக்கு அந்நியராக, விவாதங்களிலிருந்து
விலகியவராக இருக்கிறார். வளர்ச்சியின் பெயரால், பெருநிறுவனங்கள் /
பெருமுதலாளிகளுக்கான பிரதிநிதியாக அரச நிர்வாகத்தை மாற்றியமைத்திருப்பதோடு,
சீர்திருத்தத்தின் பெயரால் விளிம்புநிலை மக்களின் ஆதாரங்களை அழிக்கிறது. சமூக நலத்
திட்டங்களில் தன்னுடைய பொறுப்புகளை அரசு கைகழுவுகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு
உற்பத்தியில், மொத்த மானியச் செலவின் பங்கு 2.1%-லிருந்து 1.7% ஆகக்
குறைக்கப்பட்டிருக்கிறது. கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.82,771 கோடியிலிருந்து
ரூ.69,074 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப
நலனுக்கான ஒதுக்கீடு ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29,653 கோடியாகக்
குறைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் ரூ.5,000 கோடி;
பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டில் ரூ.12,000 கோடி; மகளிருக்கான ஒதுக்கீட்டில்
ரூ. 20,000 கோடி; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒதுக்கீட்டில் ரூ.
8,000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் எங்கும் காவிமயமாக்கல்
சூழ்கிறது; அரசு கொண்டுவரத் துடிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம்
காலாகாலத்துக்கும் இந்திய வேளாண்மையையும் விளிம்புநிலை மக்களையும் வஞ்சிக்கும்
கொடூரமான தாக்குதல்.”
இந்த
இரு விமர்சனங்களிலுமே உண்மை இருக்கிறது. இரு விமர்சனங்களையும் உற்றுநோக்குபவர்களுக்கு
ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். இந்த அரசாங்கம் செயல்படுகிறது; ஆனால், யாருக்காகச்
செயல்படுகிறது என்பதில் சிக்கல் இருக்கிறது. வளர்ச்சி, வளர்ச்சி என்று மூச்சுக்கு
முன்னூறு முறை கூறுகிறார்கள் பிரதமரும் அவருடைய சகாக்களும். அதற்காகக் கடுமையாக
உழைக்கவும் செய்கிறார்கள். ஆனால், எதை அவர்கள் வளர்ச்சியாகக் கருதி உழைக்கிறார்கள்
என்பதில் பெரும் சிக்கல் இருக்கிறது.
பிரதமர் மோடி தன்னுடைய முதல் ஆறு
மாதங்களில், ‘இந்த அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கேற்ற அரசாங்கமாகச் செயல்படுகிறது’
எனும் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னைத் தொழில்
துறையின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்வதில் அவரே பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனால், ஓராண்டு முடியும்போது, அந்த விமர்சனத்தின் சூடு அரசாங்கத்தைப் பொசுக்க
ஆரம்பிப்பதை உணர முடிகிறது. முதலாண்டு நிறைவையொட்டி, நாட்டு மக்களுக்கு மோடி
எழுதியிருக்கும் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும், ‘அடித்தட்டு மக்கள் நலனே எங்கள்
தாரக மந்திரம்’ எனும் வாக்கியம் அந்தச் சூட்டின் வெம்மையை நன்றாகவே
வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடியும் அவருடைய சகாக்களும் ஒரு விஷயத்தை உணர
வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் நிதி சம்பந்தபட்ட விஷயம் மட்டும்
அல்ல. சகலருக்குமான, சகலத்திலுமான வளர்ச்சியைத் தொழில் துறை மட்டுமே தந்துவிட
முடியாது. மன்மோகன் சிங் ஆட்சியின் மோசமான காலகட்டத்தின் விளைவாக மோடியைத்
தேர்ந்தெடுத்தார்கள் என்பதாலேயே இந்த ஆட்சியை என்றென்றைக்கும் அந்த ஆட்சியுடன்
ஒப்பிட்டு அரசாங்கம் ஆறுதலடைந்துகொள்ள முடியாது. மக்கள் நீங்கள் சொன்ன
வார்த்தைகளுக்கும் முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைப்பட்ட இடைவெளியைக்
கொண்டே உங்களை மதிப்பிடுவார்கள். தொழில் துறை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தேசமும்
நீங்கள் சொன்ன நல்ல நாட்களுக்காகக் காத்திருக்கிறது. அது வெற்று முழக்கங்களை அல்ல;
ஆக்கபூர்வமான செயல்பாடுகளையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது!
பிரதமர்
மோடியின் ஓராண்டு சாதனை என்ன என்று கேட்கிறார்கள். நாட்டு மக்களுக்குத்
தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் ஊட்டியதுதான் பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மிகப் பெரிய சாதனை.
பாஜக
தலைமையிலான அரசு எந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது
அவசியம்; நாடு முழுவதுமே திக்கு திசை தெரியாமல் தவித்த நேரம்; இதற்கு முந்தைய
பிரதமர், பதவியில் இருந்தார்; அதிகாரத்தில் இல்லை; முடிவெடுப்பது தேக்கநிலையில்
இருந்தது. நிர்வாகம் பலத்த அடி வாங்கியிருந்தது. மோசடிகள், சட்டவிரோத செயல்கள்,
லஞ்சம், ஊழல் போன்றவை வழக்கமாகியிருந்தன. உலக அளவில் இந்தியாவுக்குக் களங்கம்
ஏற்பட்டது. முதலீடு வற்றிவிட்டது.
இப்படிப்பட்ட
சூழலில்தான் ஆட்சியில் அமர்ந்தார் மோடி. 12 மாதங்கள் என்ற மிகக் குறுகிய
காலத்தில், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற தோற்றத்தை இந்தியாவுக்கு
மீட்டுத்தந்தது தேஜகூ அரசு; அது மட்டுமல்ல; நல்ல நிர்வாகம், விரைந்து
முடிவெடுத்தல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றையும் மீட்டெடுத்திருக்கிறது. 2015-ல்
நடந்த அலைக்கற்றை ஏலத்தில் மிக உயர் அளவாக ரூ.1.10 லட்சம் கோடி அரசுக்குக்
கிடைத்தது. முந்தைய ஆட்சியில் சில நிலக்கரி வயல்கள் மட்டுமே ஏலத்துக்கு
விடப்பட்டன. இப்போது பொது ஏலத்தில் விற்கப்பட்டதால் ரூ.2 லட்சம் கோடி அரசுக்குக்
கிடைத்தது. இதெல்லாம் அரசு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் சட்டப்படியும்
முடிவெடுத்ததால் நடந்த சாதனைகள். நல்ல நிர்வாகத்துக்கான உதாரணங்கள்.
இந்திய
வெளியுறவுத் துறைக்கும் கொள்கைக்கும் இதுவரை இருந்திராத வகையில் புத்துணர்வு
அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பக்கத்து நாடுகளிலும், ‘ஜி-20’ அமைப்பில்
இடம்பெற்றுள்ள நாடுகளிலும் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி முன்முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்பு
இருப்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உலக அரங்கில் இந்தியா வலுப்பெற்று
வருவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து
சீர்திருத்தம், வளர்ச்சிக்கு அழுத்தம் தரப்படுகிறது. மாநிலங்களுக்கு நிதி
ஊக்குவிப்பு தரப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுவதால், 14-வது நிதிக் குழுவின்
பரிந்துரையை ஏற்று, வரி வருவாயில் 42%-ஐ மாநிலங்களுக்குக் கொடுக்க அரசு
ஒப்புக்கொண்டது. தேச வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கேற்பு
வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘நிதி ஆயோக்’ அமைப்பில் மாநிலங்களுக்கு நேரடி
பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்கிறது. சரக்கு, சேவைகள் வரி விதிப்பு அமலில்
மாநிலங்களையும் மத்திய அரசு வெற்றிகரமாக இணைத்துக்கொண்டிருக்கிறது. இது விரைவில்
அமலாவது சாத்தியமாகியிருக்கிறது.
அரசின்
முன்னுரிமைப் பட்டியலில் இருப்பவர்கள் ஏழைகளும் எளியவர்களும்தான். அவர்களுக்கான
சமூகப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்கு வசதி
இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்க உதவுதல், நிதி இல்லாதவர்களுக்கு நிதி அளித்தல்,
முதியோர் ஓய்வூதியத்தை மேலும் பலருக்கும் அளித்தல் என்ற முன்முயற்சிகள் மூலம்
வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதை நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது அரசு.
வெறும் 6 மாதங்களில் 15 கோடிப் பேருக்கு ‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் ஆறு
மாதங்களுக்குள் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. விபத்தில் மரணம் அடையும்
வங்கிக் கணக்காளர்களுக்கு இழப்பீடு வழங்கும் காப்பீடு திட்டம் மே 9-ல்
தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே சந்தாவாகச் செலுத்த வேண்டிய
இத்திட்டத்தில், 5.57 கோடிப் பேர் சேர்ந்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.330 மட்டும்
செலுத்தும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதல் 18 நாட்களில் மட்டும் 1.7 கோடிப்
பேர் சேர்ந்துள்ளனர். சிறு, குறு தொழிலதிபர்களுக்காக புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள
‘முத்ரா’ வங்கி 5.77 கோடிப் பேருக்குக் கடன் வழங்கும்.
நான்
நிர்வகிக்கும் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மக்களிடயே தகவல்
தொடர்பு சாதனங்களின் வசதிகளைப் பெறுவதில் ஏற்றத் தாழ்வு கூடாது என்று ‘டிஜிடல்
இந்தியா’ திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்களுக்கு சேவை அளிப்பதில்
எதிர்ப்படும் சிவப்பு நாடா முறையும் மற்றவர்களின் இடையூறும் களையப்படும்.
நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்கும் வளர்ச்சி தொடங்க வேண்டும் என்பதற்காக சிறு
நகரங்களிலும் ‘கால்-சென்டர்கள்’ தொடங்கப்படுகின்றன. ‘டிஜிடல்’ இந்தியா, ‘ஸ்கில்’
இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ என்ற 3 லட்சியங்களும் நாட்டின் முகத்தையே
மாற்றிவிடும்.
அரசின்
சேவைகளை மொபைல் போன்கள் வழியாகத் தர வேண்டும் என்ற பிரதமரின் ஆணை
அமல்படுத்தப்படுகிறது. சாமானியர்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற ‘மை கவ்’ இணைய தளம்
உதவுகிறது. அரசு வழங்கும் ஓய்வூதியம், மானியங்கள் போன்றவற்றைப் பயனாளிகளுக்கு
நேரடியாகக் கொண்டுசேர்க்க ‘ஜன் தன்’, ‘ஆதார்’, ‘மொபைல்’ ஆகிய மூன்றும்
பயன்படுத்தப்படவிருக்கிறது.
மோடியின்
தலைமையில் இந்தியா நம்பிக்கை மிகுந்த நாடாக மாறியிருக்கிறது. வளமான
எதிர்காலத்துக்கு இது சிறந்த உத்தரவாதம்.
ரவிசங்கர்
பிரசாத், மத்தியத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான அமைச்சர்
மத்தியில்
பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் நாட்டில் சரிந்திருந்த
பொருளாதாரத்தை மீட்டெடுத் துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி
குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை
வளர்ச்சிப் பாதைக்கு திருப்பியுள்ளதோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி யுள்ளோம்.
இந்தியா மீது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் மோடி
குறிப்பிட்டுள்ளார். அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதை ஈடு
செய்யும் வகையில் வரும் நாள்களில் அரசின் செயல்பாடு அமையும் என்று அவர்
குறிப்பிட்டார்.
நாட்டு
மக்களுக்கு திறந்த மடல் மூலம் ஓராண்டு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள மோடி, அதில்
பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக் கப்பட்டுள்ளது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளின்
பட்டியலில் இந்தியாவும் இடம்பெற் றுள்ளது. கடந்த ஓராண்டில் நாட்டின் பணவீக்கம்
கட்டுப்படுத் தப்பட்டுள்ளது.
நிதி
நிர்வாகம் மேம்படுத்தப் பட்டுள்ளதால் அந்நிய முதலீட் டாளர்களுக்கு இந்தியா மீதான
நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவின்
வளர்ச்சி குறித்து தரச்சான்று நிறுவனங்கள் சாதகமான மதிப்பீடுகளை வெளி யிட்டுள்ளன.
இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளது.
அரசு
பல விஷயங்களில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
அதில்
குறிப்பிடத்தக்கது டீசல் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியதாகும்.
அத்துடன் காப்பீட்டுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய நேரடி
முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில்
ஒரே சீரான வரி விதிப்பைக் கொண்டு வருவ தற்காக சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்
கத்துக்கு தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஓராண்டு
முன்பு இந்தியாவை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பொரு ளாதார
சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் நம்பி என்னை தேர்வு செய்தீர்கள். இந்த
எதிர்பார்ப்பில் அதிகபட்சம் பூர்த்தி செய்துள்ளோம். இருந்தாலும் இது தொடக்கம்தான்.
வரும் காலங்களில் உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசின்
நடவடிக்கைகள் அமையும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு
நிதி ஆண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும்
என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி
7.4 சதவீதமாக இருந்ததையும் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.
ஓராண்டுக்கு
முன்பு நாட்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத
அளவுக்கு இருந்தது. இதை 3.9 சதவீதமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த
10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த சீர்திருத்த நடவடிக்கைகள்
மிகவும் துணிச்சலாக கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால்
கிடைக்கும் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பின ரையும் சென்று சேரும் வகையில்
அதிலும் குறிப்பாக ஏழைகள், விவசாயிகள் பெண்கள் பயன டையும் வகையில் நடவடிக் கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள்
தங்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்காக சர்வதேச
வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) ஒரு சமாதான பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம்
விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியம் தொடர வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும்
வங்கிச் சேவை கிடைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக 15 கோடி புதிய வங்கிக்
கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 15,800 கோடி புழக்கத்துக்கு
வந்துள்ளது.
அனைவருக்கும்
கட்டுபடி யாகும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், குறிப்பாக ஓய்வூதியம், ஆயுள்
காப்பீடு, விபத்து காப் பீட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டம்
தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் 6.75 கோடி மக்கள் இத்திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.
சிறு,
குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பயனடையும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி
முதலீட்டில் முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையினருக்கு எளிய
வகையில் கடன் கிடைக்க வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு
பணத்தை ஒழிப்பதற் காக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கருப்பு பண பதுக்கல் காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கான சட்டம்
கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமை யாக்குவதற்காக `மேக்
இன் இந்தியா’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய வேலை
வாய்ப்புகள் உருவாகும்.
சமையல்
எரிவாயு மானி யத்தை முதலீட்டாளர்கள் நேரடி யாகப் பெறும் வகையில் பயனீட்டாளர்களின்
வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
உரிய மக்களுக்கு மானியத் தொகை சென்றடைய வழியேற்பட்டுள்ளது.
காப்பீட்டுத்
துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வேத் துறை
மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளன.
வங்கித்
துறையில் அரசியல் குறுக்கீடு என்பது கடந்த கால சம்பவங்களாக மாறிவிட்டன. நிலக்கரி
சுரங்கங்கள் வெளிப் படையான முறையில் ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.
3.35 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
நடப்பாண்டில்
பொதுத் துறையில் அரசு ரூ. 1 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இத்தொகை டிஜிட்டல் இணைப்புக்காகவும், பிற இணைப்புகளுக்காகவும் செல விடப்பட உள்ளது.
சரக்கு
மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான வழிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முடங்கியுள்ள நெடுஞ்சாலைத் திட்டப்
பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. மின் உற்பத்தியும் முன்னெப்போதைக் காட்டிலும்
இப்போது அதிகரித்துள்ளது. தேசிய கட்டமைப்பு முதலீட்டு நிதியம்
உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதையும் மோடி
தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஃபிரான்ஸ்
மன்னர் 15-ம் லூயி இப்படிச் சொன்னதால் மிகவும் பிரபலமடைந்தார், “எனக்குப் பிறகு
பிரளயம்தான்”. பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்தின் ஓராண்டு ஆட்சி நிறைவுக்கு
வந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் முன்கண்ட மேற்கோளை மோடி சற்றே திருத்தி, “நான்
வருவதற்கு முன்பு சூனியம் இருந்தது; எனக்குப் பிறகோ பிரளயம்தான்” என்று
சொல்வதுபோல் இருக்கிறது. அவர் பதவிக்கு வருவதற்கு முன்பு அயல்நாடு வாழ்
இந்தியர்களெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்கே “வெட்கப்பட்டார்கள்” என்று இந்த
மாதத்திலேயே வெளிநாட்டு மண்ணில் இரண்டு முறை சொல்லியிருக்கிறார் மோடி.
ஆறு
தசாப்தங்களாக அடுத்தடுத்த அரசுகளால் சிதைவடைந்துபோயிருந்த இந்தியாவை மோடிதான்
புனரமைத்துக்கொண்டிருக்கிறார் என்று இந்த ஓராண்டு காலத்தில் நமக்கு வெறுப்பேற்றும்
அளவுக்கு எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கும். அந்தோ, அடல் பிஹாரி வாஜ்பாயின்
ஆறாண்டு கால தேஜகூ ஆட்சி மறக்கப்பட்ட வரலாறாக ஆக்கப்பட்டதே!
சாதாரண
இந்தியக் குடிமக்கள் இதுவரை போராடிப் பெற்றிருந்த ஏதோ கொஞ்சம் உரிமைகள் மீதும்
தாக்குதல் நிகழ்த்தும் முயற்சிகள்தான் இந்த ஓராண்டில் நிகழ்ந்திருக்கின்றன என்பது
தெளிவு. இந்த அரசு பின்னுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி,
சமூக நலத்திட்டங்கள், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள்
போன்றவற்றுக்கான நிதியை வரவு-செலவுத் திட்டத்திலிருந்து பெருமளவில்
குறைத்திருக்கிறார்கள்.
மூன்று
புதிய சவால்கள் இந்தியாவுக்கு முன்னும் இந்திய மக்கள் முன்னும்
எழுப்பப்பட்டிருக்கின்றன: நவதாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விடாப்பிடியாக
முன்னெடுத்தல், மதப் பிரிவினைவாதத்துக்குக் கொம்புசீவி விடுவதன்மூலம் இந்தியக்
குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளின் மீது தாக்குதல் நிகழ்த்துதல்,
சர்வாதிகார ஆட்சியை நோக்கி மெதுவாக ஆனால், உறுதியாகச் செல்லுதல். இவற்றில்
கடைசியாகச் சொல்லப்பட்டது, ஜனநாயக அமைப்புகளைச் சேதப்படுத்துவதிலும், நாடாளுமன்ற
ஜனநாயகத்தில் புனிதமாகக் கருதப்படும் நடைமுறைகளை மீறுவதிலும் கண்கூடாகத்
தெரிகிறது.
பொருளாதாரச் சவால்கள்
முன்னாள்
பிரதமர் மன்மோகன் சிங் பின்பற்றிய நவதாராள மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை
தேஜகூ அரசு மூர்க்கமாக முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. முன்னெப்போதும்
இல்லாத அளவில் பெருநிறுவனங்கள் கையிருப்புகளைக் குவித்து வைத்திருக்கின்றன. இது,
வேலையில்லாத் திண்டாட்டத்தை நோக்கி இந்தியாவை இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது.
இதெல்லாம் போதாதென்று அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல்
ஏறியிருக்கிறது.
விவசாயிகளின்
துயரம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம்
அடைந்ததிலிருந்து முதன்முறையாக ஒட்டுமொத்த விளைநிலங்களின் பரப்பு வெகுவாகக்
குறைந்திருந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. விவசாய இடுபொருட்களின்
விலை கிடுகிடுவென்று ஏறியிருக்கும் அதே நேரத்தில், மானியங்களின் அளவு வெகுவாகக்
குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகக் கடனுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பிக்
கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் விவசாயிகள். தொழிலாளிகளின் நிலை
மட்டும் என்ன வாழ்கிறதாம்? மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது ஊதிய
விகிதம் 10% இருக்கிறது. இதுவே 1990-1991-ல் 25% இருந்தது.
மறுபுறம்
பார்த்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்.
2011-ல் வெளியிடப்பட்ட பட்டியலில் 100 கோடி அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த
இந்தியர்களின் எண்ணிக்கை 55. இப்போதோ 100. இவர்கள் 100 பேரின் மொத்த சொத்து 34,600
கோடி டாலர்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் முதல் 10 இடங்களில்
இருப்பவர்களின் சொத்து மதிப்பு 2000-ல் 36.8% ஆக இருந்தது. 2014-ல் அது 49% ஆக
அதிரடியாக உயர்ந்திருக்கிறது. ‘நல்ல காலம் வரும்’ என்று வாக்களிக்கப்பட்டதல்லவா,
பெரும்பாலான மக்களுக்கு அது மாயை என்ற நிலையிலிருந்து துர்க்கனவாக
மாறியிருக்கிறது.
மதப்பிரிவினைவாதம்
அரசின்
ஆசிர்வாதத்துடன் மதப்பிரிவினைவாதமும் எந்நேரமும் கொதிநிலையிலேயே
வைக்கப்பட்டிருக்கிறது. நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசை
சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுதல் என்ற செயல்திட்டத்தை நோக்கி
ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக சென்றுகொண்டிருக்கிறது. ‘கர் வாப்ஸி’ என்ற
பெயரில் நிகழ்த்தப்படும் மதவாதப் பிரச்சாரம், வெவ்வேறு மதத்தினருக்கு இடையில்
நடைபெறும் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என்று பெயரிட்டு ஒடுக்கும் செயல் போன்றவற்றோடு
வரலாற்றின் இடத்தில் புராணங்களையும் தத்துவத்தின் இடத்தில் மதத்தையும் வைப்பதற்காக
வெறித்தனமான முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவற்றின் விளைவுகள்தான் பாடத்திட்டங்
களையும் ஆய்வு நிறுவனங்களையும் காவிமயமாக்குவதற்கான முயற்சிகளெல்லாம். முஸ்லிம்கள்
மீதான தாக்குதல்களும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் பெருமளவு
அதிகரித்திருக்கின்றன. இப்படியான வெறுப்பு அரசியலில் ஈடுபடுவோர் மீது அரசு எடுத்த
நடவடிக்கை என்ன?
ஒட்டுமொத்த
வாக்குகளில் வெறும் 31% மட்டுமே பெற்றிருந்தாலும் மக்களவையில் தனக்கிருக்கும்
பெரும்பான்மை பலத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 50 சட்டங்களை பாஜக
தரைமட்டமாக்கியிருக்கிறது, நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு உள்ளாக்காமலேயே.
நாடாளுமன்ற விவாதம் என்பது எல்லா சட்ட முன்வைப்புகளையும் நாடாளுமன்ற
நிலைக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த நிலைக்குழு,
நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சியிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டிருப்பது.
இப்படிச் செய்வது மசோதாக்களையெல்லாம் மெருகூட்டவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ
திருத்தி உருவாக்கவோ ஏதுவாகிறது.
15-ம்
லூயியின் வாக்கு, பிரெஞ்சுப் புரட்சியை முன்கூட்டியே கணித்ததாகப் பலரும்
நம்புவார்கள். அதேபோல் தனக்கு முந்தைய இந்தியாவை சூனியமாகச் சித்தரிக்க மோடி
முயல்வது எதில் கொண்டுபோய் விடும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
- சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)
பொதுச்செயலாளர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
கடந்த
ஓராண்டில் இந்தியாவை மாற்றிவிட்டதாக நரேந்திர மோடி நம்புகிறார். வெளிநாடுகளில்
குறிப்பாக அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசும்போது இதை அவர் வலியுறுத்துகிறார்.
ஆனால், இந்தியாவில் பேசுவதில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வளமான வாழ்க்கையைத்
தருவேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார். ஓராண்டு முடிவில் அவர்
வாக்குறுதி தந்தபடி மாறுதல்களைக் கொண்டுவந்துவிட்டாரா என்று பார்க்க வேண்டும்.
நான்
ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் 10% அல்லது அதற்கும் மேல் வளரும் என்று வாக்குறுதி
தந்தார். தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவேன் என்றார். ஓராண்டுக்குப்
பிறகும் அதே நிலைமைதான். 2014 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2,941 பெரிய
நிறுவனங்களின் லாப விகிதம் 16.9%. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது
குறைந்திருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் நிறுவனங்களின்
லாபத்துக்குக் காரணியாக இருக்கும் முதலீடு, மக்களின் நுகர்வு, பெரிய நிறுவனங்களின்
லாப-ஈவு போன்றவை தொடர்ந்து வலுவில்லாமலே இருக்கிறது. 2016 மார்ச் வரையில்
இப்படித்தான் இருக்கும் என்று பலரும் கணித்துள்ளனர்.
பொருளாதார
வளர்ச்சி தொடர்பாக அரசு பீற்றிக் கொள்ளும் சாதனைகள் அனைத்துமே அற்பமானவை. நிதி
அமைச்சகம் (2015 மார்ச்) வெளியிட்ட தரவு களின்படி ரூ.18.13 லட்சம் கோடி மதிப்புள்ள
2,099 மிகப்பெரிய திட்டங்கள், பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள திட்ட
மேலாண்மைக் குழுவிடம் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. அரசின்
வரவு-செலவுக்கு இடையிலான பற்றாக்குறையைவிட இந்த அளவு அதிகமாக - ரூ.7,12,000
கோடியாக (13.2%) - இருக்கிறது. 2013 செப்டம்பரில் ரூபாயின் மாற்று மதிப்பு
டாலருக்கு நிகராக 66 என்றிருந்தபோது, மன்மோகன் சிங் அரசின் நிர்வாகத்தால்தான்
ரூபாய் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன்
செலுத்தப்படுகிறது என்றார். இப்போதும் ஒரு டாலருக்கு 64 ரூபாய்தான் மாற்று மதிப்பாக
நீடித்து, அதே அவசர சிகிச்சைப் பிரிவில் ரூபாய் படுத்துக்கிடக்கிறது.
தேர்தலுக்கு
முன்னால் விலைவாசி உயர்வு உண்மையிலேயே பெரிய பிரச்சினையாக இருந்தபோது, தான்
ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன், குடும்பங்கள் தத்தளிக்க
வேண்டாம் என்று வாக்குறுதி தந்தார். அவருடைய அரசின் அதிர்ஷ்டம் சர்வதேசச்
சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது. 2014 மே மாதம் ஒரு
பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் 108 டாலர்களாக இருந்தது 60 டாலர்களாகக்
குறைந்தது. இதனால், நிதியமைச்சரால் பற்றாக்குறையை இட்டு நிரப்ப முடிந்தது.
மொத்த
விலைக் குறியீட்டெண்ணும் சரிந்தது. ஆனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியா
வசியப் பண்டங்களின் விலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
சாமானியர்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோதுமை மாவு, பருப்பு, பால், கடுகு எண்ணெய், வனஸ்பதி, வெங்காயம், உருளைக்கிழங்கு
ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
தெரிந்தே பேசினார்
வெளிநாடுகளில்
பதுக்கிய கோடிக் கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை மீட்போம்; கருப்புப் பணத்தை
மீட்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாயைப் போடுவோம்
என்றெல்லாம் சொன்னார்களே… என்னவாயிற்று? ஊழலை ஒழிப்பேன் என்றும் மோடி வாக்குறுதி
அளித்தார். 21.4.2014-ல் பேசியபோது, கிரிமினல் பேர்வழிகளை நாடாளுமன்றத்திலிருந்து
நீக்குவேன் என்றார். இதுவரை அப்படி எதையுமே அவர் செய்யவில்லை.
சமூக நலத் துறையில் பின்னடைவு
சமூக
நலனைப் புறக்கணித்திருப்பதுதான் இந்த அரசின் மிகப் பெரிய, உண்மையான தோல்வி.
விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளும் சிறு வணிகர்களின் கவலைகளும்
புறக்கணிக்கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக்
குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண் துறை கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
வேளாண் துறை வளர்ச்சி 2014-ல் 3.7% ஆக இருந்தது 1.1% ஆகக் குறைந்துவிட்டது. இதற்கு
முன் இருந்ததைவிட அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். 80.85% விவசாயிகள்
ஒரு ஹெக்டேருக்கும் குறைவான அளவு நிலங்களைத்தான் வைத்திருக்கிறார்கள் என்று மோடி
அறிய வேண்டும். அதாவது, நிலம்தான் அவர்களுக்கு ஒரே வாழ்வாதாரம். அதை அவர்கள்
இழந்தால் அவர்களுடைய வாழ்வுரிமையே பறிபோய்விடும்.
விவசாயத்தைத்
தொடர்ந்து பீடித்துள்ள பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பதும் இந்த அரசுக்குத்
தெரியவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே சலுகையைத்
தருகிறார் மோடி. இது மிக மோசமான சலுகைசார் முதலாளித்துவக் கோட்பாடாகும்.
அரசியலிலும்
நிறுவனங்களிலும் - குறிப்பாக கல்வித் துறையில் - காவியைப் புகுத்தும் தீய முயற்சி
மேற்கொள்ளப்படுகிறது. இது நம்முடைய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. லவ் ஜிகாத், கர்
வாப்ஸி என்ற கருத்துகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. இந்தியாவின் ஜீவன் என்ன விலை
கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டும். இதுவரை நம்முடைய சமூகம் எந்த நன்மைக்காக
எல்லாம் துணையாக நின்றதோ அவற்றையெல்லாம் நல்ல வழிமுறைகளிலும் மோசமான
வழிமுறைகளிலும் அழிக்கவே இந்த அரசு முயல்கிறது!
கபில் சிபல், காங்கிரஸின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: சாரி