வியாழன், 8 மே, 2014

கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு 1989ல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்கப்பட்டபோது, கடலோர கட்டுப்பாட்டு மண்டலம் (1991), பொதுமக்கள் குறைகேட்பு அறிவிக்கை (1994), சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு அறிக்கை போன்ற சட்டங்கள் அமலில் இல்லை. மேலும், 1989க்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் விதிமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மேலும், இந்த அணு உலை தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே 1998ல் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஏராளமான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. 1989ல் வழங்கப்பட்ட சுற்றுச்சுழல் அனுமதியில், குறிப்பிட்ட விதிமுறை, பரிந்துரைகள் எதையும் தெளிவாக குறிப்பிடாமல், ‘தேவையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்‘ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.

பொதுத் தேர்தலுக்கு ஆன செலவு -2014

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு ஆன செலவு கிட்டத்தட்ட ரூ. 10.5 கோடி, 1977-ல் நடைபெற்ற ஆறாவது பொதுத் தேர்தலில் ஆன செலவு ரூ. 23 கோடி. அதாவது, முதல் தேர்தலைவிட இரு மடங்குக்கும் அதிகம். 2004-ல் நடைபெற்ற தேர்தலில் ஆன செலவு முதல் தேர்தலைவிட நூறு மடங்குக்கும் அதிகம்: ரூ 1,300 கோடி. ஆனால், தற்போதைய பொதுத் தேர்தலின் உத்தேசச் செலவு மதிப்பு ரூ. 30,000 கோடி. அதாவது, முதல் பொதுத் தேர்தலைவிட 3,000 மடங்குக்கும் அதிகம்.
நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் எடுத்துக்கொண்டால், கடந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக பா.ஜ.க. செலவிட்டதாகக் கணக்குக் காட்டிய தொகை ரூ. 448.66 கோடி. இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியின் உத்தேசச் செலவு ரூ. 5,000 கோடி, அதாவது, 10 மடங்கு அதிகம். காங்கிரஸ் இந்த அளவு இல்லை யென்றாலும் அந்தக் கட்சியும் மலைக்க வைக்கும் அளவில் செலவு செய்திருக்கிறது. தேர்தல் முடியும் வரை ‘ஸ்பான் ஏர்' என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஐந்து விமானங்களைத் தினமும் ரூ. 5.4 கோடி என்ற கணக்கில் குத்தகைக்கு விட்டிருக்கிறது. தேர்தல் பிரச்சார காலம் முழுவதையும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால், விமானங்களுக்குக் கொடுக்கும் கட்டணமே நம்மை வாய் பிளக்க வைத்துவிடும் என்றால் மற்ற செலவுகள்? இதெல்லாம் அதிகாரபூர்வக் கணக்குகள். உண்மையில் செய்யப்படும் செலவு இதைவிடப் பலபல மடங்கு அதிகம் என்பதே உண்மை. இந்தக் கணக்கு களைவிட நம்மை அதிகம் பயமுறுத்தும் விஷயம் தேர்தல் செலவுக்கு இவ்வளவு பணத்தைக் கட்சிகள் எங்கிருந்து பெறுகின்றன என்பது.
தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த தருணத்தில் பெருநிறுவனமான வேதாந்தாவிடமிருந்து காங்கிரஸும் பா.ஜ.க-வும் பெரும் தொகையை நன்கொடையாகப் பெற்றதாக டெல்லி நீதிமன்றம் அம்பலப்படுத்தியது. ஒரு பானை சோற்றில் இது ஒரே ஒரு பருக்கைதான்.

சூரிய மின் உற்பத்தி: இன்னொரு சுரண்டல்!

சூரிய மின் உற்பத்தித் திட்டத்துக்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பசி நிறைந்த நுண் அரசியலைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவர முனைந்த வால்மார்ட்டும், மரபணு மாற்றப் பயிர்களை இந்தியாவுக்குள் புகுத்திய மான்சாண்டோவும் இதன் பின்னணியில் இருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் உத்தி
தாராளமயக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று, மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவது. அதன் ஓர் அம்சமே சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவில் புகுத்தியது. 1980-களின் இறுதியில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தொடங்கிய சூரிய மின் உற்பத்தித் திட்டம், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோல்வி யடைந்தன. தொழிலில் முன்னணி யில் இருந்த வால்மார்ட் - ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம், மான்சாண்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை கடும் பின்னடைவைச் சந்தித்தன.
ஆனால், ஏற்கெனவே வாங்கிப்போட்ட மூலப் பொருட்களையும் வேதிப் பொருட்களையும் என்ன செய்வது? பூச்சிக்கொல்லி மருந்து தொடங்கி மரபணு மாற்றப் பயிர்கள் வரை உள்ளே தள்ளிவிடத் தோதான நாடு, பசுமைப் புரட்சி தொடங்கி, வெண்மைப் புரட்சி வரை அழிவை நோக்கித்தான் என்பதை உணர்ந்தும் உணராத நாடு இந்தியா; கூடவே, கேள்வி ஏதும் கேட்காத அரசியல்வாதிகளைக் கொண்ட நாடு; அது அந்த நிறுவனங்களின் இலக்கானதில் வியப்பேதும் இல்லை. முதலில் அதை இறுகப் பற்றிக்கொண்டவர் மோடி. பின்பு, 2010-ல் மத்திய அரசும் இந்தக் கொள்கையைக் கொண்டுவந்தது. அடுத்தடுத்து ராஜஸ்தான், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த வலையில் விழுந்தன. இப்போது தமிழகம்.
இதில் என்ன பொருளாதாரச் சிக்கல்?
தமிழக அரசின் சூரிய ஒளி மின்சக்திக் கொள்கையின் இலக்கு 2015-ம் ஆண்டுக்குள் 3,000 மெகா வாட் சூரிய மின்சக்தியை உற்பத்திசெய்வது. ஒரு மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திசெய்யும் நிலையம் அமைக்க சுமார் எட்டுக் கோடி ரூபாய் தேவை. 1,000 மெகா வாட்டுக்கு 8,000 ஆயிரம் கோடி ரூபாய். இதில் நஷ்டம் மட்டுமே அரசுக்கு 7,00 கோடி ஏற்படும். மேற்கண்ட கணக்குகளை தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி, திட்டம் தொடங்கப்பட்டபோதே ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார். ஆனால், பலன் இல்லை.
தமிழக மின்வாரியமோ, மின்சாரப் பயனீட்டாளர்களான தொழில்துறையினரிடம் சூரிய மின்சாரத்தை விற்று லாபம் ஈட்டுவோம் என்றது. அதாவது, கட்டாய விற்பனை. உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சூரிய மின்சாரமாக வாங்க வேண்டும். ஆனால், சாதாரண மின்சாரத்தின் விலை யூனிட் 5 முதல் 7 ரூபாய் வரை எனில், சூரிய மின்சாரத்தின் விலை 15 முதல் 17 ரூபாய் வரை. ஆனால், ‘தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன்' உள்ளிட்ட சில அமைப்புகள் மின்வாரியத்துக்கு எதிராக மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல்செய்தன. பயனீட்டாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ள சூழலில், மின்வாரியத்துக்கு இது கூடுதல் நஷ்டம்.
வளைத்துப்போட்ட நிலங்கள்
சூரிய ஒளி மின் உற்பத்திக்கான பாலி சிலிக்கான் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மான்சாண்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் நிறுவனம், தனது துணை நிறுவனமான சன் எடிசன் மூலம் தமிழகத்தில் கால்பதித்துள்ளது. அது கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பன்னாட்டு வங்கியின் கூரையில் 100 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தைச் சோதனை ஓட்டமாகச் செயல்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த நிறுவனம் 2014, பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் 18 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. திருநெல்வேலி அருகில் முனஞ்சிப்பட்டியில் 80 ஏக்கரில் மற்றுமொரு சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும் அந்த நிறுவனம் விரைவில் தொடங்கவிருக்கிறது.
சூரிய மின் உற்பத்திக்கான செல்கள் மற்றும் மாட்யூல் களை உற்பத்திசெய்வதில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது அமெரிக்காவின் வால்மார்ட்டின் - ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம். கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் ஜெர்மனியில் அது தனது தொழிற்சாலையை மூடிவிட்டது. அந்த நிறுவனமும் தமிழகத்தில் கால்பதிக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்கிறது. மேற்கண்ட நிறுவனங்கள் உட்பட வேறுசில பன்னாட்டு நிறுவனங்களும் ராமநாதபுரம், கடலாடி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளன.
பயனீட்டாளர்களிடம் சூரிய மின்சாரத்தைக் கட்டாயப் படுத்தி, அதிக விலைக்கு விற்க முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்ட பிறகும், மேற்கண்ட நிறுவனங்கள் இங்கு தொழில் செய்ய ஆர்வம் காட்டுகின்றன என்றால், அவர்களின் திட்டம் என்ன?
கொள்ளை லாபமே குறிக்கோள்
உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலைக்கு தமிழக மின்வாரியத்தின் தலையில் கட்டிவிடலாம் என்பது திட்டம். உதாரணத்துக்கு, மதுரை பேரையூரில் இயங்கிவரும் ஸ்பெயின் நாட்டின் நிறுவனம், ஒரு யூனிட் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு ரூ.18.45-க்கு விற்க ஒப்பந்தம் போட்டுள்ளது. கொள்ளை லாபம் இல்லையா?

Issue with Solar ?

சுற்றுச்சூழல் சிக்கல்கள் என்ன?
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா. காந்தி சொல்கிறார், “சூரிய ஒளி மின் உற்பத்தி வேண்டாம் என்று சொல்ல வில்லை. தற்போதைய சூரிய மின் உற்பத்தித் தொழில் நுட்பம் ஆபத்தானது. மேலும், அது 2020-க்குள் காலாவதியாகிவிடும். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், சூரிய ஒளியிலிருந்து ஒரு தாவரம் சக்தியைப் பெறும் இயற்கையான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தி குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ஆனால், இங்கு பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுவருகின்றனர். இது நஷ்டத்தையே ஏற்படுத்தும். சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதிப் பொருளான கேட்மியம் டெல்லுரைடு வெளிப்படுத்தும் கதிர்வீச்சால் காசநோய், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். பல்வேறு மேற்கத்திய நாடுகள் சூரிய மின் உற்பத்திக்குத் தடைவிதித்துவிட்டன. ஜெர்மனியில் கேட்மியம் டெல்லுரைடைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. ஜப்பானில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய ‘இட்டாய் இட்டாய்' நோய்க்குக் காரணம் கேட்மியம். மெல்லிய ஃபிலிம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் செலினியம் என்னும் வேதிப் பொருள் புற்றுநோய்களை உருவாக்கும். இதனைப் பல நாடுகள் தடைசெய்துள்ளன.”
பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், கூடுதல் மின் உற்பத்தி மிகவும் அத்தியாவசியம்தான். ஆனால், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. என்ன செய்யப்போகிறோம் நாம்?

செவ்வாய், 6 மே, 2014

நாட்டின் தலையாய பிரச்சினை தண்ணீர்தான்

இந்தியாவின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இந்தியாவிடமே இருக்கின்றன. இதை இந்தப் பயணத்தின்போது மேலும் ஆழமாக உணர்ந்தேன். நாட்டின் தலையாய பிரச்சினை தண்ணீர்தான். காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை நாடு முழுவதுமே தண்ணீர் பிரச்சினை பெரிய சவாலாக உருவெடுத்துவருகிறது. நீர்நிலைகள் படுகொலை நம் கண் முன்னே நடக்கிறது. ஆனால், அவற்றை எப்படிப் பாதுகாப்பது அல்லது மீட்டெடுப்பது? சில நம்பிக்கையூட்டும் முன்மாதிரிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒரு கிராமத்து உதாரணம்
அண்ணா ஹசாரேவைப் புறக்கணித்துவிட்டு இந்த அத்தி யாயத்தை எழுத முடியாது. இன்றைக்கும் நீர் மேலாண்மையில் தவிர்க்க முடியாத முன்னுதாரணம் ராலேகான் சித்தி. மகாராஷ்டிரத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில் வறட்சிக்கும் வறுமைக்கும் பேர்போனது. சுமார் 1,700 ஏக்கர் சாகுபடி நிலத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே முன்பு சாகுபடி நடந்திருக்கிறது. இன்றைக்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் இருபோக சாகுபடி நடக்கிறது. வயல்கள் மட்டுமல்லாமல் நிலமெங்கும் பசுமை போர்த்திக்கிடக்கிறது. காரணம், அண்ணா ஹசாரே முன்னெடுத்த நீர் மேலாண்மை. குளங்களே இல்லாத ஊரில், கிராமத்து மக்களாகச் சேர்ந்து 48 குளங்களை வெட்டி
யிருக்கிறார்கள். 16 வழிந்தோடும் கால்வாய்கள், 5 தடுப்பணைகளை உருவாக்கியிருக்கிறார்கள். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மரங்களை நட்டிருக்கிறார்கள். “இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் நதிநீர் ஆதாரம் கிடையாது. ஆனால், மழை எல்லோருக்கும் கிடைக்கிறது. எல்லோரும் வீணாக்கும் மழைநீரைத்தான் நாங்கள் ஆதாரமாக்கியிருக்கிறோம்” என்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு எவ்வளவு மகத்தான திட்டம் என்பதை உரக்கச் சொல்கிறது ராலேகான் சித்தி.
ஓர் ஆன்மிக உதாரணம்
நாட்டிலேயே நீர் வளம் மிகுந்த மாநிலம் பஞ்சாப். நாட்டின் உணவுக் கூடையான பஞ்சாபும் நதிகள் நஞ்சாவதை இப்போது பெரும் சங்கடமாக உணரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், பஞ்சாபிகள் சூழலை மாற்றக் களம் இறங்கிவிட்டார்கள். முதல் களம்... காலி பெய்ன் ஆறு.
சுமார் 160 கி.மீ. நீளமுள்ள இந்தச் சிற்றாறு பஞ்சாபிகளுக்கு எந்த நதியைவிடவும் மிகவும் முக்கியமானது. குருநானக் ஞானம் பெற்ற நதி இது. காலச் சூழலில், சாக்கடைபோல் ஆகிவிட்ட காலி பெய்னை மீட்டெடுக்கச் சில ஆண்டுகளுக்கு முன் சீக்கிய குருவான பாபா பல்பீர் சிங் சீச்சேவால் களம் இறங்கினார். வீடுகள்தோறும் கரசேவைக்கும் (தன்னார்வலர்கள் சேவை) தஸ்வந்துக்கும் (வருமானத்தில் 10% நன்கொடை) கோரிக்கை விடுத்த அவரோடு கரம்கோத்த மக்கள் சில ஆண்டுகளில் காலி பெய்னை அற்புதமாக மாற்றியிருக்கிறார்கள். நதி தூர்வாரப்பட்டு, கழிவுகள் உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு, இருபுறங்களிலும் கான்கிரீட் கரை கட்டப்பட்டு, ஆங்காங்கே கரையோரத்தில் வழிபாட்டுத்தலங்களும் கட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்தோ, குடியிருப்புகளிலிருந்தோ கழிவுநீர் உள்புகாதபடி மக்கள் வலுவாக எதிர்த்து நிற்கிறார்கள். “நம் நாட்டின் ஒவ்வொரு நதியும் ஆன்மிகரீதியில் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது. அந்தப் பிணைப்பை நாம் ஞாபகப்படுத்திக்கொண்டாலே போதும்; நதிகள் தம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்” என்கிறார்கள். பாபா அடுத்து புத்தாநள்ளாவை மீட்டெடுக்க கரசேவகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். லூதியானா தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சாறாகிவிட்ட காட்டாறு இது. கரசேவகர்கள் கரம்கோக்கிறார்கள்.
நாட்டின் பெரிய நதிகளில் ஒன்றான கங்கையை மீட்டெடுக்கவும் இதேபோல ஏராளமான அமைப்புகள் கைகோத்திருக்கின்றன. ஆனால், இது யானைப் பசிக்குச் சோளப்பொரி கதைதான். ஏனென்றால், இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் பாயும் கங்கையின் நீளம் 2,525 கிலோ மீட்டர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, உலகின் மாசுபட்ட நதிகளில் கங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது. அவ்வளவு மோசமாக நஞ்சாக்கப்படுகிறது கங்கை. ஆனால், கங்கை உச்சபட்சமாக மதிக்கப்படும் வாரணாசியிலேயே அதன் மோசமான நிலையை மாற்ற யாரிடம் எந்தத் திட்டமும் இல்லை.
ஓர் அரசாங்க உதாரணம்
குஜராத் அரசுத் திட்டங்களில் என்னைக் கவர்ந்த மூன்றில் இரண்டு நதிநீர் மேலாண்மை தொடர்பானவை. 1. சபர்மதி நதிமுக வளர்ச்சித் திட்டம். 2. நர்மதை கால்வாய்த் திட்டம்.
அகமதாபாத் செல்லும் எவரையும் வசீகரிக்கும் சபர்மதியின் தூய்மையான தோற்றம். சபர்மதி ஆற்றைத் தூய்மைப்படுத்தி, கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இரு கரைகளையும் கான்கிரீட் கட்டுமானங்களால் வலுப்படுத்தி, கரைகளையொட்டி நடைபாதைகளைப் போல மக்கள் பொழுதுபோக்குவதற்கேற்ற களங்கள் அமைத்து, நதிக்கரையை மக்களின் அன்றாட வாழ்வோடு பிணைக்கும் திட்டம் இது. 1960-களில் யோசிக்கப்பட்டு, 1997-ல் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகத்தால் இதற்கெனத் தனி அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், 2004-ல் மோடி அரசு திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியது. படிப்படியாக நிறைவேற்றிச் செல்கிறார்கள். தெளிந்த நீரோடையாக நதி பாய, மக்கள் மாலைப் பொழுதுகளில் குடும்பத்தோடு கரையோரத்தில் கூடிக்கழிக்கிறார்கள்.
நர்மதை கால்வாய்த் திட்டம் குஜராத் அரசின் இன்னோர் அருமையான திட்டம். காலமெல்லாம் வறண்ட நிலமாக இருந்த பகுதிகளுக்கு நர்மதையிலிருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டுசென்றிருக்கிறார்கள். குஜராத் 460 கி.மீ. நீளத்துக்கும் ராஜஸ்தான் 74 கி.மீ. நீளத்துக்கும் இத்திட்டத்தால் பயன் அடைகின்றன (குஜராத் அரசு இதோடு சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தையும் செயல்படுத்துகிறது என்றாலும், அது ஒரு மோசடித் திட்டம் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்). நர்மதை கால்வாய்த் திட்டத்தால், இதுவரை வெறும் முள்மரங்கள் மட்டும் நின்ற தரிசுகள் இப்போது வயல்களாக மாறியிருக்கின்றன. ஆயிரக் கணக்கான விவசாயிகள் புன்முறுவல் பூக்கின்றனர்.
பொதுவாக, இங்கெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். “நீராதாரங்களை வலுப்படுத்தும் கடமை ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. நதிகள் கடக்கும் ஊர்களில் இருப்பவர்கள் முதலில் நதிகளைக் கவனியுங்கள். நதிகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் ஏரி – குளங்களைக் கவனியுங்கள். அவையும் இல்லை என்றால், உருவாக்குங்கள். முதலில் உங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பைத் தொடங்குங்கள்!”​
சமஸ் - தொடர்புக்கு: samas@kslmedia.in

திங்கள், 5 மே, 2014

‘ரா' (ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்)

இந்தியத் தூதரகத்துக்குப் பெருஞ்சேதம் விளைவித்தவர் களையும் இதே முறையிலேயே தண்டித்துவிட வேண்டும் என்று ‘ரா' (ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத் தலைமை அதிகாரி அம்ருல்லா சாலேவுடன் இது தொடர்பாகப் பேசியபோது, அவரும் உதவுவதாக ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான ஜிஹாதி குழுக்களைக் கொண்டு லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹஃபீஸ் முகம்மது சய்யீதின் தலைக்குக்கூட குறி வைக்கப்பட்டது. இவ்வளவு விரைவாக இந்திய உளவுப்பிரிவுத் தலைவர் போட்ட திட்டம் நடக்கவில்லை. நாராயணன் விரும்பியபடிச் செயல்பட இந்தியாவின் ‘அரசியல் தலைமை’ அனுமதிக்கவில்லை. “குண்டுக்குக் குண்டு என்ற ரீதியில் நாம் பதிலடி கொடுத்தால் வன்முறைதான் அதிகமாகும். எனவே, நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறிவிட்டார்.
2010-ன் தொடக்கத்தில் நாராயணனின் பதவிக்கு வெளியுறவுத் துறை அதிகாரி சிவசங்கர் மேனன் நியமிக்கப் பட்டார். கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ‘சமாதானப் புறா’க்கள் அமர்த்தப்பட்டன.
மோடியின் வழிமுறையே வேறு
“பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட, பயங்கரவாதிகளுக்குப் புரிகிற மொழியில் பேச வேண்டும்” என்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி கடந்த வாரம் பேசியிருக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு இந்த விவகாரத்துக்கு முடிவுகட்டத் துணிச்சலான முடிவுகளை எடுத்தாக வேண்டும். கராச்சியில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க முயற்சிக்காமல் இன்னமும் தயங்கிக்கொண்டிருப்பது ஏன் என்று மோடி கேட்டது அர்த்தம் பொதிந்தது. பயங்கரவாதத்தை ஒடுக்கு வதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்று மையை அவர் பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக் காட்டினார். பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறிய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேவை அவர் கடுமையாகச் சாடினார். “பயங்கரவாதிகளை என்ன செய்யப்போகிறோம் என்று எந்த நாடாவது முன்கூட்டியே தெரிவிக்குமா?” என்று கேட்டார்.
“சர்வதேசப் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்று திட்டவட்ட மாகத் தெரிந்த பிறகு, பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டுக்கொண்டா அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக்கொன்றது? பின் லேடனைக் கொல் வதற்கு முன்னால் அமெரிக்கா எல்லாப் பத்திரிகை நிறுவனங் களுக்கும் செய்திக்குறிப்பு அனுப்பியா தமுக்கடித்தது? பத்திரிகைகளுக்குச் சொல்லிவிட்டா பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பார்கள்?” என்று மோடி அடுக்கடுக்காகக் கேட்டிருக்கிறார்.
மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்காகத்தான் மோடி அப்படிப் பேசினார் என்று கூறிவிட முடியாது. மோடிக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் சொல் லித்தான் அவர் அப்படிப் பேசினார் என்றாலும்கூட, அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களாக இருப்பது அவசியம். பயங்கரவாதிகள் விஷயத்தில் இந்தியாவின் மொழி, இனியும் ‘மென்மொழியாக’ இருக்காமல், ‘வன்மொழியாக’ மாற வேண்டும் என்றே பாது காப்புத் துறை வட்டாரங்களும் உளவு அமைப்புகளும் விரும்புகின்றன.
 
அமெரிக்க ஆதரவு?
1999 கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக யார் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்தாலும், அமெரிக்கா நமக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற அனுமானத்திலேயே பாதுகாப்புகுறித்த நிலைப்பாட்டை அரசு வகுக்கிறது. இந்த நம்பிக்கை சரியானதே என்று நிரூபிக்கும் வகையில் சில புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. 2002 முதல் 2013 வரையிலான காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்செயல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. மும்பை மீது நடந்த பயங்கரவாதிகளின் தாக்கு தலுக்குப் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-தான் இருந்தது என்பது சர்வதேசச் சமூகத்துக்கே சந்தேகமறத் தெரிந்து விட்டதால், ஜிகாதிகளை இந்தியாவுக்கு எதிராக ஏவிவிடுவதை அது குறைத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. இந்தியா மீது தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஜிகாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தோற்றுவருகின்றன. ஜிகாதிகளில் ஒரு பிரிவினரிடம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்த செல்வாக்கு சரிந்துவிட்டது. ஜிகாதிகளின் எண்ணிக்கை பெருகிவருவதால், பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் அவர்களைத் திருப்திப்படுத்த நினைக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஆதரிக்கும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளில் உள்ள பஞ்சாபிய முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க தலிபான்கள் முயற்சி செய்துவருகின்றனர்.
“பாகிஸ்தானில் ஷாரியா அமைப்பு முறையை ஏற்படுத்த நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாளை காஷ்மீரத்துக்கு விரிவுபடுத்துவோம். பிறகு, இந்தியாவுக்கும் கொண்டுசெல்வோம்” என்று தேரிக்-இ-தலிபான் தலைவர் வாலி-உர்-ரெஹ்மான் எச்சரித்திருக்கிறார்.


ஒரே கேள்வி
இப்போதைய எளிய கேள்வி இதுதான்: பாகிஸ்தான் ஜிகாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கெல்லாம் இந்தி யாவும் இனி இதே போலப் பதிலடி தருமா?
1980-களின் தொடக்கத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்குநரகம் ஆயுதங் களையும் தளவாடங்களையும் அளித்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உடனே பதிலடி தருமாறு உத்தர விட்டார். இந்த வேலைக்காக ‘டீம்-எக்ஸ்’, ‘டீம்-ஜே’ என்ற இரண்டு குழுக்களை ‘ரா’ ஏற்படுத்தியது. முதல் குழு பாகிஸ்தானைக் குறிவைத்தும், இரண்டாவது காலிஸ் தானிகளைக் குறிவைத்தும் செயல்பட்டன. இந்திய நகரங் களைக் குறிவைத்து காலிஸ்தானிகள் நடத்திய ஒவ்வொரு தாக்குதலுக்கும் லாகூரிலும் கராச்சியிலும் பதிலடி தரப்பட்டது. “இப்படிப் பதிலடி தர நாம் நிறைய விலைகொடுக்க வேண்டியிருந்தது” என்று ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரி பி. ராமன் 2002-ல் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி உளவு அமைப்புகளின் வேலைகளுக்கு எதிர்வேலை பார்க்கும் வழிமுறையில் இந்தியா மிகத் தாமதமாகத்தான் இறங்கியது.
1947-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரிட்டன், எதிர் உளவு வேலையில் புதிய அரசு ஈடுபடாதவாறு தடுக்க, முக்கியமான ஆவணங்களையெல்லாம் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது. எந்தவிதத் தடயமும் இல்லாமல் அழித்துவிட்டது. இந்திய அரசு உதித்தபோது, அதன் உளவுப்பிரிவுக்குக் கிடைத்ததெல்லாம் காலி மர பீரோக்களும், வெற்று ரேக்குகளும்தான்!
உளவுப்பிரிவில் பிரிட்டிஷ்-இந்திய அதிகாரியாகப் பணி யாற்றிய குர்பான் அலி கான், பாகிஸ்தானில் உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணிசெய்யப் போனபோது, பிரிட்டிஷ் அதிகாரிகள் அழிக்கத் தவறிய மிச்சமிருந்த ரகசிய ஆவணங் களையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டார். “காலி பீரோக்களையும் வெற்று ரேக்குகளையும் வைத்துக்கொண்டு இந்திய உளவுத் துறை செயல்படத் தொடங்கியது ஒரு வகையில் சோகமாகவும் ஒரு வகையில் நகைச்சுவையாகவும் இருந்தது” என்று உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் எல்.பி. சிங் பதிவுசெய்திருக்கிறார். டெல்லியில் இருந்த ராணுவ உளவுப்பிரிவு இயக்குநரகத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் காட்டும் ஒரு வரைபடம்கூட மிச்சம் இல்லாமல் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. 1947-48-ல் பாகிஸ்தான் படைகள் ஊடுருவுவதை அவர்களுடைய வானொலித் தகவல்களை இடைமறித்துக் கேட்டபோது உறுதிசெய்துகொள்ளவும், இந்தியத் துருப்புகளை எங்கிருந்து எங்கே அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கவும் கைவசம் வரைபடம்கூட இல்லாமல் திண்டாட நேர்ந்தது!
 
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது நாசவேலைகளை ரகசியமாகச் செய்து முடிப்பதே அதன் போர்த் தந்திரமாக இருந்துவருகிறது. உளவுத் துறை மூலம் சேதத்தை ஏற்படுத்துவதை அது பலமான ஆயுதமாகவே இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆயுதங்களிலும் ஆள்பலத்திலும் தன்னைவிடப் பெரிதான இந்திய ராணுவத்தைக் களத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற முடியாது என்பதால், அவ்வப்போது திடீர்த் தாக்குதல்களை நடத்தி, கடும்சேதத்தை விளைவிப்பதையே சிறந்த தற்காப்பு உத்தியாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இந்தத் தாக்கு தல்களை ‘வழக்கமற்ற போர்’ என்று பிரதமர் நேரு வர்ணித்தார்.
சீனாவுடன் மோதல் ஏற்பட்ட 1962-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியாவும் ‘இப்படி எதிர்த் தாக்குதல்’ நடத்தும் உத்தியில் திறனை வளர்த்துக்கொண்டது. அமெரிக்கா அதற்குப் பயிற்சி தந்தது. சீனத்தின் உள்ளே வெகுதூரம் ஊடுருவிச் சென்று உளவு பார்க்க ‘ரா’ அப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது.
 
எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த உத்தியை இந்தியா கையாண்டது. மேஜர் ஜெனரல் சுர்ஜீத் சிங் ஊபன் தலை மையில் ஏற்படுத்தப்பட்ட 'எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22' என்று சங்கேதப் பெயரிடப்பட்ட படைப்பிரிவு, வங்கதேசம் என்று இப்போது அழைக்கப்படும் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் வெற்றிகரமாகச் செயல்பட்டது. இந்திய யூனியனில் சிக்கிம் சேர அப்பிரிவு காரணமாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. மியான்மரில் சீன ஆதரவு அரசுக்கு எதிராகப் போரிட்ட சில ஆயுதக் குழுக்களுக்கும் பயிற்சியளித்தது.
குஜ்ரால், ராவ் காலத்தில்…
‘ரா' அமைப்பு இதுபோலப் பதில் தாக்குதல் நடவடிக் கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று கூறி பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, “நாட்டின் கிழக்குப் பகுதியில் இனி ‘ரா' செயல்பட வேண்டாம்” என்று உத்தரவிட்டார். 1999 கார்கில் போருக்குப் பிறகு உளவுத் துறை அதிகாரிகள் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், “உளவுப்பிரிவின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன, அதை அவிழ்த்துவிட வேண்டும்” என்று மன்றாடினர். வாஜ்பாய், வேண்டாம் என்றும் மறுக்கவில்லை, சரி என்றும் அனுமதிக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களுக்குப் பாடம்புகட்ட இந்தியாவிடம் எந்த ஆயுதமும் இல்லை. “போர் தொடுக்க நேரும்” என்று பாகிஸ்தானை வெட்டியாக மிரட்டினார் வாஜ்பாய். போர் என்பது செலவு அதிகம் பிடிக்கும், உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படும் பெரிய நடவடிக்கை. உளவுப்பிரிவின் பதிலடி அப்படிப்பட்டதல்ல.

பேட்டி : விஜயகுமார் ஐ.பி.எஸ்

ஆனால், இவ்வளவு கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும் சூழலிலும் இன்னமும் இந்தியக் காவல் துறை காலனியாதிக்க அணுகுமுறையோடுதானே மக்களை அணுகுகிறது?
நம்முடைய அடிப்படையிலேயே உள்ள பிரச்சினை இது. பிரிட்டிஷார் கொடுத்த கட்டமைப்பைக் கொண்டுதான் நம்முடைய எல்லாத் துறைகளும் கட்டப்பட்டன. ஏனைய துறைகளை எல்லாம் பிரிட்டனில் எப்படி அமைத்தார்களோ அதேபோல அமைத்த பிரிட்டிஷார், காவல் துறையை மட்டும் லண்டனில் ஒரு மாதிரியும் டெல்லியில் ஒரு மாதிரியும்தான் அமைத்தார்கள். சுதந்திரத்தின்போதே நாம் மாற்றம் கொண்டுவந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கிறது. அப்புறம் நம்முடைய ஊடகங்களும் பொது அமைப்புகளும்கூட ஒரு காரணம் என்று சொல்வேன். சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி, காவல் துறையின் பிம்பத்தை மோசமாக்கி விட்டார்கள். இவ்வளவு பரந்து விரிந்த நாட்டில், மொத்த மக்கள்தொகைக்கு இருக்கும் காவல் துறையினர் எத்தனை பேர், எல்லா இடங்களிலும் அவர்கள் இருப்பது சாத்தியம்தானா என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு சங்கிலிப் பறிப்பைக்கூட ஒட்டுமொத்தக் காவல் துறையின் தோல்வியாக விமர்சிக்கும் சூழல் இங்கே நிலவுகிறது. ஒரு குற்றம் என்பது அது சம்பந்தப்பட்ட சமூகத்தின் பல்வேறு கட்டுமானங்களோடும் சம்பந்தப்பட்டது. அங்கே சரியில்லை என்றால், இங்கேயும் அது எதிரொலிக்கும். ஆனால், ஒட்டுமொத்தத்தையும் சேர்த்துச் சிந்திப்பதில்லை.
நம்முடைய காவல் துறையின் பெரிய பலம் என்ன? பெரிய பலவீனம் என்ன? அதன் மிகப் பெரிய தேவை என்ன?
ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.
எதைச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறீர்கள்?
நம்முடைய காவல் துறை 19, 20, 21 இந்த மூன்று நூற்றாண்டு களுக்கும் இடையில் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் பெண்களை உயிரோடு கொளுத்தும் போன நூற்றாண்டுக் குற்றவாளிகளை எதிர்கொள்கிறோம்; இன்னொருபுறம், அடுத்த நூற்றாண்டின் சைபர் குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ஆனால், அதற்கேற்ற நவீனக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். 1. தேர்தல் ஆணையம்போல, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இரண்டுக்கும் அப்பாற்பட்டுச் செயல்படும் சுதந்திரம் இருக்க வேண்டும். 2. ஆட்களை அதிகரிக்க வேண்டும். 3. காலத்துக்கேற்ப நவீனமயமாக்க வேண்டும். 4. காவல் துறையுடன் ஏனைய துறைகளுடனான செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்... இப்படி நிறைய வேண்டும்கள் இருக்கின்றன.