ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

`Thriving on Chaos’

`Thriving on Chaos’. `த்தோடா, இங்கிலிஷ்ல பேசறாரு பீட்டரு’ என்கிறீர்களா. பீட்டர்தான். நான் இல்லை. இதைச் சொன்னவர். பெயர் ‘டாம் பீட்டர்ஸ்’!
`த்ரைவிங் ஆன் கேயாஸ்’ என்கிற புத்தகத்தின் ஆசிரியர். வேகமாக மாறி வரும் பிசினஸ் உலகம் கேயாஸ் (குழப்பங்கள்) நிறைந்தது என்கிறார். பிசினஸ் என்பது குழப்பங்கள் கொண்ட, கசமுசா நிறைந்த, புரிந்துகொள்ள முடியாத ஒரு புதைகுழியான அல்லோல கல்லோலம் என்கிறார்.
புதிய பொருள்வகைகள் பிறந்த வண்ணம் இருக்கின்றன. நாளொரு பிராண்ட் பொழுதொரு சப்-ப்ராண்ட் முளைத்தபடி உள்ளன. கலகலவென்று லோக்கல் போட்டி பத்தாது என்று லகலகவென்று மல்டினேஷனல் மல்யுத்தம் வேறு. மாறிவரும் வாடிக்கையாளர்கள், பெருகி வரும் தேவைகள் ஒரு பக்கம். புதிய டெக்னாலஜியால் வழக்கொழிந்து போகும் பிராண்டுகள் மறுபக்கம். அதோடு ஆடித் தள்ளுபடி, ஆன்லைன் ஆஃபர் என்ற கழுத்தறுப்பு. இது போறாதென்று இத்தனை கமிஷன் கொடு என்று முரண்டு பிடிக்கும் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் இம்சை.
சரி விளம்பரம் கொடுத்து சமாளிக்கலாம் என்றால் ஆயிரத்தெட்டு டீவி சேனல்கள், பத்திரிகைகள், எஃப்எம் ரேடியோக்கள். மலைக்கவைக்கும் விளம்பரச் செலவுகள். இந்த கூச்சலும், குழப்பங்களும், கூத்துகளும் நிறைந்த வியாபார உலகம் கேயாஸ்தானே.
இதில் எப்படி பிசினஸ் செய்து கொழிப் பது? காட்டுக் கத்தலுக்கிடையில் எப்படி கடை விரித்துக் கரையேறுவது?
கேயாஸை மறந்து பிசினஸ் செய்வது மடத்தனம். பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது. அதே போல் கேயாஸை அடக்கி தொழில் செய்ய முயல்வதும் முட்டாள்தனம். நம் சக்திக்குட்படாத கேயாஸை சாதிக்க நினைப்பது மடமை. கழுத்தறுக்கும் கேயாஸ் எப்படி என்று பார்த்து அதற்கேற்ப தொழில் செய்ய முயல்வதும் மூடத்தனம். அப்படி செய்தால் உத்திகள் ரீயாக்டிவாகத் தான் இருக்கும். கேயாஸ் சொல்பேச்சு கேட்டு தான் ஆடவேண்டி வரும்.
பிசினஸில் சிறக்க சிறந்த வழி கேயாஸ் மீது வளர்வது. கேயாஸ் மீதே கொழிப்பது. அது முதல் அடி எடுப்பதற்குள் உத்தியை ப்ரொஆக்டிவாக ரெடியாய் வைத்திருப்பது. அது தான் ‘த்ரைவிங் ஆன் கேயாஸ்’ என்கிறார் பீட்டர்ஸ்.
இதற்குத் தேவை நிர்வாகப் புரட்சி, பிசினஸ் ரெவல்யூஷன், மார்க்கெட்டிங் போராட்டம். தொழிலின் ஒவ்வொரு அம்சத்தையும் கேள்வி கேளுங்கள். பிசினஸின் எல்லா அம்சங்களிலும் புதுமையை புகுத்துங்கள். கேயாஸ் மீது உங்கள் பிசினஸ்.
கொழித்து வளர ப்ரொஆக்டிவாக நிர்வாகம் நடத்துங்கள். கீழேயுள்ள பஞ்ச பூதங்களை கொஞ்சினால் கேயாஸிடம் அஞ்சத் தேவையில்லை!
1. வாடிக்கையாளரை மானசீகமாக காதலியுங்கள்
அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதை பூஜை புனஸ்காரம்போல் பயபக்தியுடன் செய்யவேண்டியது கேயாஸ் உலகின் கட்டாயம். ஏசி ஆபிஸில் காலாட்டியவாறே கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு அழாமல் வாடிக்கையாளர்களை தேடிப் போய் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். தரமான பொருளைத் தராமல், தாறுமாறான சர்வீஸை தந்தால் வாடிக்கையாளர் சாமியாடி, சாட்டையடி கொடுப்பார். தெய்வ குத்தமாகிவிடும்.
ஒரு சின்ன டெஸ்ட்: டவுன்பஸ்ஸில் கடைசியாக எப்பொழுது பயணம் செய்தீர்கள். ரொம்ப நாள் ஆகிவிட்டதா? சாதாரண மக்களின் வீடேறிதான் பேசவில்லை, அட்லீஸ்ட் அவர்களோடு பயணிக்கக்கூட மனமில்லையா? அவர்களை எப்படி உணர்ந்து கொள்வதாக உத்தேசம்? அவர்களை எப்படி புரிந்துகொள்வதாக ப்ளான்?
2. புதுமைகளை மனமுவந்து புகுத்துங்கள்
பிசினஸ் முழுவதும் புதுமைகள் புகுத்துவதை ஒரு ஜுர வேகத்துடன் செய்யுங்கள். நேற்று பெய்த மழையில் முளைக்கும் காளான்கள் உங்களை காணாமால் ஆக்கும் கேயாஸ் உலகமிது. யூனிலீவரின் ‘ஏக்ஸ்’ டியோடரண்ட் நம்பர் ஒன் ஸ்தானத்தில் மமதையுடன் மல்லாக்க படுத்திருக்க, நேற்று முளைத்த ‘ஃபாக்’ டியோடரண்ட் ‘மற்றது போலில்லாமல் எங்களை ஆயிரம் முறை பயன்படுத்தலாம்’ என்று கூறி ஏக்ஸை பாக்ஸ் செய்துவிட்டதை நினைவில் வையுங்கள்.
மற்ற பொருள்வகைகளிலிருந்து காப்பியடித்தாவது புதுமைகளை புகுத்துங்கள். மார்க்கெட்டிங்கிற்கு தனி டீம் அமையுங்கள். முடிந்தால் மார்க்கெட்டிங் ஆலோசகரை அமர்த்திக்கொள்ளுங்கள். ’நானே ஒரு மார்க்கெட்டிங் எக்ஸ்பர்ட்’ தான் என்று நீங்களே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
உங்களிடம் ஒரு கேள்வி: பெருமைப்படத்தக்க வகையில் கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் செய்த புதுமை என்ன? எதுவும் இல்லையென்றால் புதுமை விரும்பி என்று இன்னொரு முறை சொல்லிக்கொள்ளாதீர்கள்.
3. வேலையாட்களை பார்ட்னர்களாக பாவியுங்கள்
கேயாஸ் உலகில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கப்போவது உங்கள் பணியாளர்கள்தான். அவர்களை பார்ட்னர்களாக பாவியுங்கள். செஸ் போர்டில் ராஜா, ராணி, குதிரை, பிஷப் இருந்தாலும் முன் நின்று போரிடுவது சிப்பாய்களே. அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். உற்சாகப்படுத்துங்கள். ஊக்கத் தொகை கொடுங்கள்.
1989ல் இந்திய டீமோடு பாகிஸ்தான் செல்கிறான் ஒரு பதினாறு வயது சிறுவன். முதல் டெஸ்ட்டின் முந்தின இரவு டீம் காப்டன் கிருஷ்ணமாச்சாரி காந்த் அவனை தனியே அழைத்து, ‘ஆடப்போவது பாகிஸ்தானிடம் என்று பயப்படாதே. உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்ன ஆனாலும் நான்கு டெஸ்டிலும் நீ ஆடுவாய். உன்னை ட்ராப் செய்யமாட்டேன். அதனால் தைரியமாக ஆடு’ என்றார். உத்வேகம் அளிக்கப்பட்டு ஆடிய அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் உலகையே தன் பேட்டின் காலடியில் கிடத்திய சச்சின் டெண்டுல்கர். உங்கள் டீமை அதுபோல் எப்படி உற்சாகப்படுத்தப் போகிறீர்கள்?
4. மாற்றத்தை ஏற்படுத்தும் லீடராக மாறுங்கள்
கவிஞர் கண்ணதாசன் சொன்னார், ‘தன்னை தானும் அறிந்துகொண்டு ஊருக்கு சொல்பவன் தலைவன்’. உங்களை புரிந்துகொண்டு உங்கள் கம்பெனிக்கும் விஷனை உருவாக் குங்கள். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிச் செல்ல உங்கள் டீமிற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். கம்பெனி முழுவதும் பர பரப்பை உண்டாக்குங்கள். போதும் என்கிற மனதை புதைத்தெறியுங்கள். லீடராய் லட்சணமாய் உங்கள் டீமிற்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டாக இருங்கள்.
1983 உலகக் கோப்பையில் ஐந்து விக்கெட் இழந்து 17 ரன்களே எடுத்து நிர்கதியாய் இந்திய அணி நிற்க உள்ளே நுழைந்த கேப்டன் கபில் தேவ் தனி ஆளாக 175 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றியடைச் செய்து ‘பார்த் தீர்களா, நினைத்
தால் முடியாததில்லை’ என்று அவர் களை உற்சாகப்படுத்தி கோப்பையை கைப்பற்றினார். உங்கள் டீமிற்கு நீங்கள் எப்படி எடுத்துக்காட்டாக இருப்பதாக உத்தேசம்?
5. கம்பெனியை வலுவுள்ளதாக மாற்றுங்கள்
வெறும் கையில் முழம் போட்டால் கை சிராய்த்து ரத்தம்தான் வரும். கம்பெனிக்குத் தேவையான சப்போர்ட் சிஸ்டங்களை உருவாக்குங்கள். 5% வளரணும், 6% போதும் என்று நினைத்தால் கேயாஸின் கோர பிடியில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான். அபரிமிதமான வளர்ச்சிக்கு அங்குலம் கூட குறைக்காதீர்கள். அதற்கு என்ன தேவையோ அதற்கு ஒரு படி மேலேயே செய்யுங்கள்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீர்கள். பரந்து விரிந்த உலகம் முழுவதும் உங்கள் மார்க்கெட். சிறகை விரியுங்கள். சேல்ஸ்மென்னை கூட்டுங்கள். சூப்பர்வைசர்களை நியமியுங்கள். வருடத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் திறனுக்கு புதிய ரத்தம் என்னும் பயிற்சியைப் பாய்ச்சுங்கள்.
இந்த பஞ்ச பூதங்களையும் கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் கொஞ்சினால் சக்ஸஸ் மட்டுமே மிஞ்சும். ஒன்று புரிந்துகொள்ளுங்கள். கேயாஸிடம் சிக்கி தூள் தூளாய் போவதும் கேயாஸ் மீதே ஏறி தூள் கிளப்புவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.
satheeshkrishnamurthy@gmail.com

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கனிம மணல்

கன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.
கனிம மணல் என்றால் என்ன?
தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது.
இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.
தமிழகக் கடற்கரைக்கு வந்த முதல் அபாயம்
தமிழகக் கடற்கரையில் இன்று நிறுவப்பட்டிருக்கும் எல்லா நவீனத் தொழிலகக் கட்டமைப்புகளுக்கும் தொடக்கப் புள்ளி மணவாளக்குறிச்சி ஆலை. “1908-ல் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்த ஹெர்ஸ் ஸ்கோன்பெர்க் என்பவர்தான் தமிழகக் கடற்கரைக்கு இந்த ஆலை வந்த கதையின் சூத்திரதாரி. வெகு விரைவில், ஆங்கிலேய அரசு இதைப் பெரிய அளவில் விஸ்தரித்தது. சுதந்திரத்துக்குப் பின், 1963-ல் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இந்திய அணுசக்தித் துறை கொண்டுவந்தது” என்று ஆலையின் வரலாற்றைச் சொல்கிறார் ஆய்வாளரும் ‘தாது மணல் கொள்ளை' நூலாசிரியருமான முகிலன். இன்றைக்குத் தென்தமிழகக் கடற்
கரையைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கனிம மணல் அள்ளுநர் களெல்லாம் இந்த ஆலையைப் பார்த்துதான் தொழில் கற்றிருக் கின்றனர்.
ஆண்டுக்கு 90,000 ஆயிரம் டன் இலுமனைட், 10,000 டன் சிர்கான், 10,000 டன் கார்னெட், 3,500 டன் ரூட்டைல், 3,000 டன் மோனசைட்டைக் கருமணலிலிருந்து பிரித்து இந்த ஆலை உற்பத்தி செய்கிறது. கோடிகளில் புரளும் இந்நிறுவனம், தொழிலை மேலும் விஸ்தரிக்க சுற்றுப்புறக் கிராமங்களைத் தேடுகிறது.
முதல் களபலி
ஒரு நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். எந்த ஒரு நவீனக் கட்டமைப்பும் இயற்கையின் சூழல் கட்டமைப்பில் சில சேதங்களை உருவாக்கவே செய்யும். ஆனால், அந்தக் கட்டமைப்புகள் முற்றிலுமாக இயற்கையைச் சிதைக்கும் அளவுக்கு மோசமானவையாக மாறி விடக் கூடாது. மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாக மாறிவிடக் கூடாது. ஒரு வரையறைக்குள் செயல்படுத்தப்படுவது அவசியம். இந்தியாவின் சாபக்கேடு என்னவென்றால், வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பலவும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் முதல் களபலி கேட்பதும் வரையறைக்கு அப்பாற்பட்டு சூறையாடுவதாக மாறுவதும்.
இந்திய அரிய மணல் ஆலை, தனக்காகத் தம் ஊரையும் நிலத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்களுக்குச் செய்தது என்ன? ஆலையையொட்டி உள்ள சின்னவிளை கிராமம் உதாரணம்.
சுரண்டல் கதைகள்
அடிப்படையில் கடலோடிகளின் கிராமமான சின்னவிளையில் ஆகப் பெரும்பான்மையினர் கத்தோலிக்க மக்கள். விரல் விட்டு எண்ணிவிடும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள் ஊரில் வசிக்கின்றன. ஊர் மக்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். என்றாலும், நல்லது கெட்டது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஊரின் மதகுரு அருட்தந்தை பெஞ்சமினை நோக்கி விரலைக் காட்டுகிறார்கள்.
“இந்த ஆலை இயங்குறதுக்கான இடம் கொடுத்ததுல ஆரம்பிச்சு, இங்கே கூலி வேலைக்குப் போய் இந்த ஆலை இயங்குறதுக்கான எல்லா அடித்தளமும் நம்ம ஊர் மக்கள்தான். ஆனா, பதிலுக்கு ஆலை என்ன பண்ணுச்சுன்னு மட்டும் நான் சொல்றேன்” என்று ஆரம்பித்தார் பெஞ்சமின்.
“ஆலை தொடங்குனப்போ ஊரோட எல்லா இடத்தையும் ஆலை எடுத்துக்கிட்டு, மக்களுக்கு குடும்பத்துக்கு ரெண்டரை சென்ட் மட்டும் கொடுத்துச்சு. இன்னைக்குத் தலைமுறை ஓடிப்போச்சு. அன்னைக்கு இப்படி ரெண்டரை சென்ட் எடத்துல வாழ ஆரம்பிச்சவங்களுக்கு இன்னைக்குப் பேரப்பிள்ளை ஆகிப்போச்சு. இன்னும் அந்த எடத்தைத்தான் உடைச்சி உடைச்சி வாழ்ந்துகிட்டிருக்காங்க. ஊருல வேற எடம் இல்லை. வயசுப் பிள்ளைங்களை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை சின்ன எடத்துல வாழ முடியும். ஒரு ரெண்டு ஏக்கர் நெலத்தை மக்களுக்குக் கொடுங்க; நாங்க பகிர்ந்துக்குறோம்னு ஆண்டுக் கணக்கா கேட்குறோம். ஆலை என்ன செய்யுது தெரியுமா? பதிலுக்கு எங்ககிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச எடத்தையும் கேட்குது.
மழை கொட்டுற நாள்லகூட இங்கே நெலத்துல கால் சுடும். அவ்வளவு கதிரியக்கம். இதோ, இப்பகூட செல்சியானு ஒரு குழந்தை புற்றுநோயால பாதிக்கப்பட்டிருக்கு. ஏழாவது படிச்சுக்கிட்டுருந்தது. நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளை. ரத்தப் புற்றுநோய்னு தாய் - தகப்பன் தூக்கிக்கிட்டு சென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் மாத்திமாத்தி அலையுறாங்க. அன்னாடம் நூறு இருநூறுக்குப் பிழைக்குற மக்கள், தொழிலை விட்டுட்டு ஊர் விட்டு ஊர் போய் அறை எடுத்துத் தங்கி, பல்லாயிரக் கணக்குல மருத்துவச் செலவு பாக்குறதுன்னா சாமானியமா? இந்த ஊர் மக்கள் எவ்வளவோ இழந்திருக்காங்க இந்த ஆலைக்காக.
ஆனா, இப்பவும் இந்த ஆலைக்கு எதிரா நானோ, ஊரோ பேசலை. ஆலை வேணாமின்னு சொல்லலை. காரணம், இந்த ஊரைச் சேர்ந்த பெரும்பாலானவங்க அங்கதான் கூலி வேலைக்குப் போறாங்க. பிழைப்புக்கு அதைத்தான் நம்பியிருக்காங்க. அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிறோம். ஆனா, குறைஞ்சபட்ச நியாயமின்னு ஒண்ணு இருக்கணுமா வேணாமா?
ஊர்லேர்ந்து கூலி வேலைக்குப் போறவங்க, சொற்பத் தொகைக்கு ஒப்பந்தக் கூலியாத்தான் போறாங்க. உள்ள நிரந்தரமா வெச்சிருக்குற தன்னோட அதிகாரிங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு மொறை கதிரியக்கப் பாதிப்புப் பரிசோதனை நடத்துது ஆலை. அவங்களுக்குக் கதிரியக்கப் பாதிப்பு அதிகமானா, தேவையான சிகிச்சைகளைத் தருது. புற்றுநோய் பாதிப்பு வந்தாக்கூடப் பணிப் பாதுகாப்பு அவங்களுக்கு உண்டு. கூலித் தொழிலுக்குப் போற எங்க ஊர் மக்கள்ல இப்படி ஒருத்தர் பாதிக்கப்பட்டா, அத்தோட அவர் கதை முடிஞ்சுது. வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஊர் வளர்ச்சி நிதின்னு சொல்லி பேர் பண்ணுறதோட ஆலையோட கடமை முடிஞ்சுது. வெளிய பாருங்க. இந்தச் சாலையைத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் மொறை பயன்படுத்துது ஆலை. என்ன லட்சணத்துல கெடக்குது பாருங்க” என்று சாலையைக் காட்டும் பெஞ்சமின் சொல்கிறார். “வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிற மக்களோட கதியே இப்படின்னா, எதிர்க்குற மக்களோட நெலைமை நம்ம நாட்டுல எப்படி இருக்குனு யோசிச்சுப்பாருங்க!”
சின்னவிளையிலிருந்து கடியப்பட்டினம் போனபோது கதிரியக் கத்தின் தாண்டவம் கலங்க வைத்தது.
(அலைகள் தழுவும்…)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Black Money - ரூ.1,12,60,800 கோடி

கருப்புப் பணத்தால்தான் இந்தியப் பொருளாதாரம் பாழாகிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், அந்தக் கருப்புப் பணம் எப்படி, யாரால் உருவாகிறது, அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது என்பதுகுறித்து யாரும் தெளிவாக விளக்க மறுக்கின்றனர்.
கருப்புப் பணம் எவ்வளவு என்ற மதிப்பீட்டிலேயே அரசுக்கும் அரசு சாராத அமைப்புகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை இல்லை. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி-சுமார் ரூ.1,12,60,800 கோடி) 75% என்று ‘பொது நிதி, கொள்கைக்கான தேசியக் கழகம்' (என்.ஐ.பி.எஃப்.பி.) என்ற அமைப்பு தெரிவிக்கிறது. அதாவது, இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்புத் தொகையின் 75% மதிப்புக்கு இணையாகக் கருப்புப் பணமும் உலவுகிறது.
கருப்புப் பணம் உருவாகும் இடங்கள் என்று நான்கு துறைகளை என்.ஐ.பி.எஃப்.பி. அடையாளம் கண்டுள்ளது. அவை: 1. நிலம், மனை, வீடு உள்ளிட்ட சொத்துகளின் பரிமாற்றத்தை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் துறை. 2. சுரங்கத் தொழில்துறை. 3. பள்ளிக்கூடங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்றவற்றை நடத்தும் தனியார். 4. அரசின் மானியங்களைத் திசைதிருப்புவதன் மூலம் பணப் பயன் பெறுவோர்.
கட்சி பேதமின்றி எல்லாக் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பெரிதும் நம்பியிருப்பது கருப்புப் பணத்தைத்தான். கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சிக்குக் கோரிக்கை விடுப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதாக ஆளுங்கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும் வெற்றுச் சம்பிரதாயம் என்பதே இதுவரை நடைமுறை.
வருமானத்தை மறைக்க முடியாத மாதச் சம்பளக்காரர்கள், சொத்துகளைத் தங்கள் பெயரில் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் தவிர, மற்றவர்களிடம் அரசு கடுமையாக நடந்துகொள்வதில்லை. வருமான வரித் துறையின் மதிப்பீட்டுக்கும் வரி செலுத்துவோர் தரும் கணக்குக்கும் உள்ள வித்தியாசத்தால் தீர்மானிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கும் தொகையின் மதிப்பே நாலரைலட்சம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்கு தெரிவிக்கிறது. அதேபோல், பத்திரப் பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு என்று ஒரே சொத்துக்கு இருவித மதிப்புகள் நிலவுகின்றன. இதைப் பயன்படுத்தி, பத்திரங்களைப் பதிவு செய்யும்போது, சொத்தின் உண்மையான மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டு கருப்புப் பணம் உருவாக வழி செய்யப்படுகிறது. சுரங்கத் துறையில் புரளும் கருப்புப் பணத்துக்குக் கணக்கே கிடையாது. தொழில் துறையிலும் சேவைத்துறையிலும் கருப்புப் பணம் உருவாகும் விதத்தையும் அதன் அளவையும் அரசின் வெவ்வேறு துறைகள் முனைந்தால் கண்டுபிடித்துவிட முடியும்.
புதிய அரசு, ‘வளர்ச்சி’ என்ற சொல்லை மந்திரம்போல் உச்சரித்துவருகிறது. ஆனால், அந்த வளர்ச்சியின் பேரில்தான் இவ்வளவு கருப்புப் பணமும் உருவானது என்பதை அரசு வசதியாக மறந்துவிட்டது. இவ்வளவு கருப்புப் பணத்தில் பாதி அளவை வெளிக் கொண்டுவந்தாலே இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் வறுமையையும் பெருமளவில் ஒழித்துவிட முடியும். இதையெல்லாம் மறந்துவிட்டு ‘வளர்ச்சி, வளர்ச்சி' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், அது யாருக்கான வளர்ச்சி?

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

http://data.un.org/ --- http://mospi.nic.in/Mospi_New/site/home.aspx

http://data.uis.unesco.org/


http://data.un.org

 http://mospi.nic.in/Mospi_New/site/home.aspx

ராஜீவைக் காப்பாற்றியிருக்க முடியுமா?

அரசுப் பதவிகளில் கொஞ்சம் செல்வாக்கான இடங்களில் இருந்தவர்கள் ஒரு புத்தகம் எழுதினால், அது சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
ஆர்.டி. பிரதான் எழுதியிருக்கும் ‘ராஜீவ், சோனியா வுடன் நான் இருந்த ஆண்டுகள்' புத்தகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகச் செயலராக ஒன்றரை ஆண்டுகள் பதவி வகித்தவர் பிரதான். பின்னாளில், சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் ஐந்தாண்டுகள் இருந்தவர்.
ராஜீவ், சோனியாவுடனான தன்னுடைய அனுபவங் களைப் பட்டியலிடும் பிரதான், ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு, புலிகளின் வியூகம், உளவுத் துறையின் தோல்வி என எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு விமர்சித்திருக்கிறார்.
ராஜீவுக்கு வந்த கோபம்
“தனக்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை ராஜீவ் காந்தி வெறுத்தார். 1985 ஜூன் 30-ம் தேதி விமானப் படை தலைமைத் தளபதி எல்.எம். கட்ரே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த சோனியாவுடன் ராஜீவ் சென்றார். அன்றைக்கு மழை கொட்டியது. பாதுகாப்புப் படையினர் அவரைப் பல வாகனங்களில் பின்தொடர்வது வழக்கம். இது ராஜீவுக்குப் பிடிக்காது. அன்றைக்குக் காவல் துறை அதிகாரி ஒருவரை அழைத்து, என் பின்னால் பாதுகாப்புப் படை வாகனங்கள் வரக் கூடாது என்று கட்டளையிட்டுவிட்டு காரில் ஏறி அமர்ந்தார்.
ஏராளமான வாகனங்களில் பாதுகாப்புப் படையினர் பின்னால் வருவதைக் கண்டு எரிச்சல் அடைந்தார். மழை கொட்டுவதைக்கூடப் பொருட்படுத்தாமல் காரிலிருந்து கோபமாக இறங்கினார். ஐந்து கார்களின் கதவுகளைத் திறந்து சாவிகளை வெளியே எடுத்தார். எல்லா சாவிகளையும் அருகிலிருந்த வாய்க்காலில் வீசி எறிந்துவிட்டு, தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
இன்னொரு முறை, அவருடைய தனி ஜீப்பில் காவலர்கள் யாரும் உடன் வராமலேயே வேகமாக ஓட்டிக்கொண்டு விஜய் சதுக்கம் வரை சென்றார். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த பக்கவாட்டுத் தெரு வழியாக வீட்டுக்கே வந்துவிட்டார்” என்று குறிப்பிடுகிறார் பிரதான்.
புலிகளின் ஆள்
ராஜீவ் காந்தியின் வீட்டிலேயே விடுதலைப் புலிகளுக்கு உளவுசொல்ல ஒருவர் இருந்தார் என்றும், ராஜீவின் நடமாட்டத்தையும் வெளியூர் பயணங்களையும் அவர்தான் கண்காணித்து விடுதலைப் புலிகளுக்குத் தகவல் தந்தார் என்றும் ஒரு சந்தேகம் நிலவியதாகச் சொல்கிறார் பிரதான்.
“விடுதலைப் புலிகளுக்காகத் தகவல் திரட்டிய ஒருவருக்கு எண்: 10, ஜன்பத் வீட்டிலிருந்தே யாரோ ஒருவர்தான் ராஜீவின் சுற்றுலாப் பயண விவரங்களைத் தந்திருக்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தச் சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. அப்படிச் சந்தேகப்பட்டவர் களில் சோனியாவும் ஒருவர். ராஜீவ் காந்தி படுகொலையின்போது முக்கியப் பிரமுகர்கள் யாரும் அவர் அருகில் இல்லை. அத்துடன் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் அதற்கும் முன்னதாகவே அவர் கலந்துகொண்ட கூட்டங்களுக்குச் சென்று, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஒத்திகை பார்த்திருப்பது பின்னர் தெரியவந்தது.
ராஜீவ் காந்தியின் வீட்டிலேயே இருந்த யாரோ, சதிகாரர்களுக்கு அவ்வப்போது தகவல் தந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் விசாரணைகள் வேகம் பெற்றபோதுதான் பலருக்கும் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு, செல் வாக்கு மிக்க பலர், தொலைவிடங்களில் இருந்தே சதித் திட்டம் தீட்டியுள்ளனர்” என்று சொல்கிறார் பிரதான்.
ராஜீவைக் காப்பாற்றியிருக்க முடியுமா?
இந்தப் புத்தகத்தில், ராஜீவ் காந்தியைக் காப்பாற்றியிருக்க முடியுமா என்று கேள்விகேட்டு ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் பிரதான். அதில், “விடுதலைப் புலிகளின் நோக்கம்குறித்து தமிழ்நாடு அரசுக்குத்தான் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்தது; யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் வராதபடிக்கு, அனைவரும் கவனக்குறைவாக இருக்கும் வகையில் விடுதலைப் புலிகள் நடந்துகொண்டனர். மத்திய அரசின் உளவுப்பிரிவும் (ஐ.பி.), தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கும் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டனர் என்பதே என் கருத்து” என்கிறார் பிரதான்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சமஸ்கிருத வாரம் - மொழிகள் பலவிதம்

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும்.
தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம்மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளுமன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:
அரசின் நிதி ஒதுக்கீடு
ஆண்டு
தமிழ் மேம்பாட்டுக்கு
சமஸ்கிருத மேம்பாட்டுக்கு
2008 - 09
4.47 கோடி
72.10 கோடி
2009 - 10
8.61 கோடி
99.18 கோடி
2010 - 11
10.16 கோடி
108.75 கோடி
மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்!
இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையாசிரியர், ‘தமிழ் வாழ்க’என எழுதிவைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை!
நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ்கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழிகளுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக்கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மைகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.
சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத்திலும் பேசப்படவில்லை என்னும் உண்மையையும் இங்கே பேசியாக வேண்டும்.
1961-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன. காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக் கணக்கானோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே!
அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி ‘வாரம்’கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா?
சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்.

தொடர்புக்கு: subavee11@gmail.com

**************
மொழிகள் பலவிதம்
இந்தியாவில் இன்று பேச்சுவழக்கில் 406 மொழிகள் உள்ளன. பல மொழிகளைப் பேசும் மக்கள் உள்ள நாடு இந்தியா மட்டுமல்ல. இந்தோனேசிய மக்கள் 706 மொழிகளைப் பேசுகிறார்கள். சீனாவில் பேச்சுவழக்கில் 298 மொழிகள் உள்ளன. மிகச் சிறிய காமரூன் நாட்டில்கூட 280 மொழிகள் உள்ளன. ஆனால், இந்த நாடுகளோடு இந்தியா மாறுபடுகிறது. மற்ற நாடுகளில் ஒரு மொழி பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
உதாரணமாக, சீனாவின் 130 கோடி மக்களில் 98 சதவீதத்தினர் சீன மொழியை (பல வடிவங்களில்) மட்டுமே பேசுகின்றனர். இந்தியா அப்படியல்ல. 42 கோடி மக்கள் இந்தி பேசுகிறார்கள். வங்க மொழியை 8 கோடி மக்களும் தெலுங்கை 7.4 கோடி மக்களும், தமிழை 6 கோடி மக்களும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அதாவது, இந்தி பேசும் மக்களைவிட, இந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் அதிகம் (40 : 60). இத்தகைய சூழலில், தங்கள் தாய்மொழியைத் தவிர, மற்றொரு மொழியை இந்தியர்கள் அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். அந்த மொழி ஆங்கிலமாக இருக்கும் என்றால், அதனுடைய பயனும் வாய்ப்புகளும் மிக அதிகம்.
இன்று உலகின் 99 நாடுகளில், 33.5 கோடி மக்கள் பேசும் மொழி ஆங்கிலம். இதுதவிர 50.5 கோடி மக்கள் இன்று உலகில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அறிவு பெற்றுள்ளவர்கள்.
2020-ம் ஆண்டு முடியும்போது, உலக மக்கள்தொகையில் 200 கோடி மக்கள் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தவர் களாக இருப்பார்கள். தொழில்துறைகள் தொடர்பான பரிமாற் றங்கள் உலக அளவில் 55% ஆங்கிலத்திலேயே இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், ஐ.ஏ.எஸ். தேறி, நாளை பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றச் செல்லவிருப்பவர்களுக்கு 10-ம் வகுப்பு மாணவர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆங்கில அறிவுகூடத் தேவையில்லை என்று எங்கள் பிரதமரே நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?

தேர்தல்கள் வரும், போகும். ஆனால், தலைமுறைகள் என்னவாகும்?
************************* 

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

எபோலா காய்ச்சல் தொற்றுநோய்

எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?”
இவை இரண்டுமே தவறான கருத்துகள்.
முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற சில தொற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்து இல்லை. அவை, மிக வேகமாகப் பரவக் கூடியவை. இந்தக் கொடூர நோய்களில் ஒன்றான கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல், சமீபத்தில் அகமதாபாதின் அருகே தோன்றியது என்றால், நம்மில் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
அகமதாபாத் அதிர்ச்சி!
டிசம்பர் 31, 2010 அன்று, அகமதாபாதின் ஷேல்பி மருத்துவமனையில் ஒரு பெண் தீவிரக் காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்டாள். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் தலைவலியும் மூச்சுத் திணறலுமாக இருந்த அந்தப் பெண், அதற்கு முன் மற்றொரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தவள். ஒரு சிகிச்சையும் பயனளிக்காமல் இறந்துபோனாள். 7 நாட்கள் கழித்து, ஷேல்பி மருத்துவமனையின் ஒரு செவிலி, அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரக் காய்ச்சல், தலைவலி, வாந்தி என அறிகுறிகள் பதிவாயின. இறந்துபோன பெண்ணுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிப்பு செய்துவந்ததால், மருத்துவர்களுக்குச் சந்தேகம் தோன்ற, அவரது ரத்த மாதிரியை, புணேவில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு (என்.ஐ.வி.) அனுப்பி வைத்தனர்.
இந்தியாவில் வைரஸ் குறித்த ஆய்வுகளில் என்.ஐ.வி. முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் அதற்கு உயிரிய பாதுகாப்பு நிலை 4 என்ற அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைவான ஆய்வகங்களே இந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் , மிக அபாயகரமான தொற்றுநோய்க் கிருமிகள் பராமரிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரியம்மை, எபோலா, சி.சி.ஹெச்.எஃப்., லிஸ்ஸா போன்ற தொற்றுநோய்களை உருவாக்கும் கொடிய நுண்ணுயிரிகள் இங்கு பாது காப்பாக வைக்கப்படுகின்றன. அத்துடன், எங் காவது இந்த நோய்கள் தோன்றினால், அவற்றை மரபணுரீதியாகக் கண்டறியும் ஆர்.டி. பி.சி.ஆர். போன்ற நவீனக் கருவிகள் இந்த ஆய்வகங்களில் இருக்கின்றன. ஆய்வக அறிக்கையின்படி, நாட்டின் பிற ஆய்வகங்களும், மருத்துவ, சுகாதார நிலையங்களும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
தொடர் மரணங்கள்
என்.ஐ.வி., அந்தச் செவிலியின் ரத்த மாதிரியின் சி.சி.ஹெச்.எஃப். வைரஸ் இருப்பதை மரபணு ஆய்வில் கண்டறிந்தது. ஷேல்பி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். உடலின் ஒவ்வொரு துவாரத்திலும் ரத்தம் கசிய, அவரும் எந்த சிகிச்சையும் பயனளிக்காது ஐந்தாம் நாளில் இறந்துபோனார். முதலாவதாக இறந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணித்த இளம் மருத்துவர் ஒருவர், மற்றொரு மருத்துவமனையில், அவள் இறந்த 7 நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் அதே அறிகுறிகள். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவரும் மிகுந்த வலியுடன், ரத்தக்கசிவில், உள்உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடைந்தார். தொற்றுநோய் சந்தேகம் வராததாலும், தகவல் பரிமாறப்படாததாலும் அவரது ரத்த மாதிரிகள் ஆராயப்படவில்லை. இதே நேரத்தில் மற்றொரு ஆண், காய்ச்சல், உடல் வலி, பேதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் அறிகுறிகள், ரத்தக்கசிவு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கையான மருத்துவர்கள், அவரது வீட்டு நிலையை ஆராய்ந்தனர். அவரது மனைவி 9 நாட் களுக்கு முன்புதான் பெயர் அறியாத ரத்தப்போக்குக் காய்ச்சலால் மரணமடைந்திருந்தார். அந்தப் பெண் ணுக்குப் பணிவிடை செய்த செவிலி ஒருவரும், மற்றொரு மருத்துவமனையில் ரத்தப்போக்குக் காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரையும் உடனடியாகத் தனி அறையில் வைத்துத் தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். அவரது ரத்த மாதிரியை என்.ஐ.வி. பரிசோதித்து சி.சி.ஹெச்.வி இருப்பதாக உறுதிப்படுத்தியது. அவருக்கு ரிபாவிரின் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, பல நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறினார். அந்தச் செவிலியோ சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக இறந்துபோனார்.
கால்நடை உண்ணிகள்
குஜராத் அரசுக்கு இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தொற்றுநோய் மையம் முடுக்கிவிடப்பட்டது. சி.சி.ஹெச்.எஃப். நோய், பொதுவாக உண்ணிகள் மூலம் பரவுகிறது. கால்நடை உண்ணிகள் இந்த வைரஸின் தாங்கிகள். அந்த உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இவை மனிதர்களுக்குப் பரவுகின்றன.
முதலில் இறந்துபோன பெண்ணின் வரலாற்றை ஆராய்ந்த அரசு அதிகாரிகள், அவள் சானந்த் என்ற இடத்தினருகே ஒரு கிராமத்திலிருந்து வந்தவள் எனவும், ஆடு மாடு மேய்ப்பில் ஈடுபட்டிருந்தவள் எனவும் அறிந்தனர். அங்கு உண்ணிகள் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், மாநில அளவிலும், தேச அளவிலும் எச்சரிக்கை விடுக் கப்படவில்லை. அதற்குப் பின் வேறு நிகழ்வுகள் நடந்த தாகத் தெரியவில்லை.
ஒரு வருடம் கழித்து, 2012 மே மாதம், மற்றொரு மருத்துவர், அகமதாபாதின் வாடிலால் மருத்துவ மனையில், இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார். மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, பத்து நாட்களுக்கு முன், அகமதாபாதை அடுத்த பாவ்லா கிராமத்திலிருந்து அதீதக் காய்ச்சல், ரத்தக்கசிவுடன் வந்த ஒரு பெண்ணுக்கு அவர் மருத்துவம் செய்திருக்கிறார் என்பதும், அவள் மூச்சுத் திணறியபோது, வாயில் குழாய் இட்டபோது ரத்தம் பீய்ச்சியடித்து அவரது கண்களில் தெறித்தது எனவும் அறிந்தனர். கண்களின் வழியே அந்த வைரஸ் அவருக்குள் புகுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணும் மரணமடைந்திருந்தாள்.
குஜராத் தொற்றுநோய்ப் பிரிவு மையத்தினரும், மாநில சுகாதார அதிகாரிகளும் பாவ்லா கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன், அங்கு தொழுவத்தில் இருந்த கால்நடைகளின் ரத்த மாதிரிகளையும் உண்ணிகளையும் சேகரித்து என்.ஐ.வி-க்கு அனுப்பிவைத்தனர். அவற்றை ஆராய்ந்த என்.ஐ.வி. ஒரு கன்றின் ரத்தத்திலும், சில உண்ணிகளிலும் சி.சி.ஹெச்.எஃப். நுண்ணுயிரி இருப்பதாகக் கண்டறிந்தது.
எங்கிருந்து?
எங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கக் கூடும்? 90-களில் பாகிஸ்தானில் சி.சி.ஹெச்.எஃப். பரவியது. அங்கிருந்து உண்ணிகள் காற்றிலோ, கால்நடைகள் மூலமாகவோ எல்லைப் பகுதிகள் வழியாக வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்கள். 1940-களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரிலும் தென்னக மாநிலங்களிலும் சி.சி.ஹெச்.எஃப். இருந்ததாக ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. சி.சி.ஹெச்.எஃப். எப்படி இந் நாட்டில் வந்தது என்பது புதிராகவே உள்ளது, அந்தக் காய்ச்சல்போலவே.
சி.சி.ஹெச்.எஃப். நோய்ப் பரவலைத் தடுக்க, குஜராத் மாநிலம் மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்ப நிலையிலானவை. பெரிய அளவில் அது பரவியிருந்தால், அந்த நடவடிக்கைகள் போதாது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்களின் தொற்று நோய்ப் பிரிவுகள் இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. அப்படி உணர்ந்த மாநிலங்களில், மிக வேகமாகப் பரவும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் இருக்கின்றன என்பது தெரியவில்லை (கர்நாடகம் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முன்னணியில் இருக்கிறது). ஒருங்கிணைந்த தகவல்தொடர்பையும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், பேரிடர் தடுப்புக் காப்பு முறைகளையும் மாநில அரசுகள் முக்கியமாகக் கருதிச் செயல்படுத்தும்வரை… நாம் ஒரு தீப்பற்றிய வெடிகுண்டின் மேல்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்!
- சுதாகர் கஸ்தூரி, அறிவியல் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர், ‘6174' என்னும் அறிவியல் புனைகதை நாவலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kasturi.sudhakar@gmail.com

**********
உலகமமே பீதியில் ஆழ்ந்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது எபோலா. மக்களும் சரி, அந்த நாடுகளின் அரசுகளும் சரி, என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக் கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில்தானே இந்த அபாயம் என்று உலக நாடுகள் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கினி நாட்டின் தென்கிழக்கு வனப் பகுதியில் யாரும் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் 2013 டிசம்பரில் இந்தக் காய்ச்சல் முதலில் தலைதூக்கியது. அங்கிருந்து லைபீரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதி வரையில் 1,779 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது. அவர்களில் 961 பேர் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டனர். இதற்கு முன்னர் எபோலா தாக்கியபோது இந்த அளவுக்கு அதிகம் பேர் உயிரிழக்கவில்லை. எனவே, வைரஸ் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பது தெரிகிறது. எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் மரணம் என்பது 70-90 சதவீதம் உறுதி!
இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு-தசை வலி, திடீர் குளிர், சோர்வு ஆகியவை ஏற்படும். நோய் தீவிரம் அடைந்தால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, கண் சிவத்தல், தோல் கொப்புளங்கள், மார்பில் வலி, கடுமையான இருமல், வயிற்றில் வலி, திடீர் எடையிழப்பு போன்றவையும், கண், மூக்கு, ஆசனவாய் போன்ற வற்றில் ரத்தக் கசிவும் ஏற்படும்.
இந்த வைரஸ் உடலில் புகுந்தால், விளைவுகள் வெளியில் தெரிய 2 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை ஆகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் காப்பாற்றுவதற்குச் சாத்தியங்கள் உண்டு. காலம் கடந்துவிட்டால் ஆபத்து. இந்த வைரஸ் காற்றுமூலம் பரவுவதாக இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. அதே சமயம், காய்ச்சல் வந்தவரின் சளி, தும்மல், உமிழ்நீர், சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் எளிதில் பரவிவிடும் என்பது உறுதியாகிவிட்டது. இந்தக் காய்ச்சல் வந்தவருக்கு உதவுவோர், சிகிச்சை அளிப்போர்கூட எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அவர்களுக்கும் காய்ச்சல் பரவிவிடும்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர், அது தெரியாமல் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர் மூலம் இந்தக் காய்ச்சல் அங்கே பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மருத்துவமனைகளுக்கு வரும் ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நோயாளிக்குத் தொற்றும் வாய்ப்பு இருக்கிறது. கையுறைகள், முகக் கவசம், சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சாதாரண உடையில் சிகிச்சை தரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்களுக்கு இது தொற்றும் வாய்ப்பு அதிகம். நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துவருகிறவர், வீட்டில் வைத்துப் பராமரிக்கிறவர்களுக்கும் தொற்ற வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஊசி மருந்தோ, மாத்திரைகளோ இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, சிகிச்சை தருவது மிகவும் சிக்கலாகிறது. அமெரிக்காவில், பிராணிகளுக்கு மட்டுமே கொடுத்துப் பரிசோதிக்கப்பட்ட தடுப்பு மருந்தை இரண்டு அமெரிக்க நோயாளிகளுக்குப் பரிசோதனை முறையில் கொடுத்துப் பார்த்ததில், அவர்களுடைய உடல் நிலையில் சற்றே முன்னேற்றம் தெரிந்தது. அப்படியும் அவர்கள் உட்கொண்ட மருந்தை மற்றவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த மருந்து மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அறிகுறி களுடன் உள்ளவரை பிற பயணிகள் செல்லும் விமானங்களில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மருத்துவமனைகளிலும் தனி வார்டுகளில் இவர்களை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கினி, லைபீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் சுமார் 5,000 இந்தியர்களும்... நைஜீரியாவில் சுமார் 40,000 இந்தியர்களும் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா வந்துபோக வாய்ப்பிருக்கிறது. இவர் களைக் கண்காணிக்கவும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது, ஆறுதலைத் தருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நமது கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, சிக்குன்குனியா, டெங்கு ஆகிய இரண்டையுமே நமது அரசு அணுகிய விதம் குறித்து நாம் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. நோய்த் தடுப்புக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, செய்தி பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையே நமது சுகாதாரத் துறை அதிகம் மேற்கொண்டது. சிக்குன்குனியா போலவோ, டெங்கு போலவோ எபோலாவிடம் மாயவிளையாட்டு ஆட முடியாது. விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டாக வேண்டும். ஆனால், சுகாதாரத் துறையை மிரட்டுவதன் மூலம் நாம் எபோலாவை எதிர்கொள்ள முடியாது. தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் நம்மை விடவும் முன்னணியில் இருக்கும் கர்நாடகத்தை நாம் கவனிக்க வேண்டும். எபோலா உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறியக்கூடிய அதிநவீன ஆய்வுக்கூடங்களை தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் நிறுவ வேண்டும். மத்திய அரசின் முழு உதவியையும் பெற்று, தயார் நிலையில் இருந்தால் மட்டுமே எபோலாவை எதிர்கொள்ள முடியும். இல்லையெனில், வேதனையான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.

கினி நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய தேனி மாவட்ட இளைஞர் ஒருவர், எபோலா சந்தேகத்தில் பரிசோதனைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இதுபோல் எத்தனை பேர் நாடு திரும்புவார்கள் என்று தெரியாது. இனியும் தாமதிக்க முடியாது. முதல்வர் அவர்களே, உடனடியாக உயர்நிலைக் குழுவை அமைத்து, சுகாதாரத் துறைக்கு வழிகாட்டுங்கள்! அத்துடன் மக்களிடமும் விழிப்புணர்வை ஊட்டி, நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
*****************