திங்கள், 3 நவம்பர், 2014

ஜம்னாலால் பஜாஜ்

தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய காந்தியவாதி ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 ராஜஸ்தானில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உறவுக்கார பணக்கார தம்பதியின் பேரனாகத் தத்தெடுக்கப்பட்டார். தொழில் நுணுக்கங்களை கற்று, தாத்தா இறப்பதற்கு முன்பு குடும்பத் தொழிலை எடுத்து நடத்தும் அளவுக்கு முன்னேறினார். பின்னாளில் பஜாஜ் குழுமமாக புகழ்பெறவிருந்த தொழில் நிறுவனத்தை1926-ல் தொடங்கினார்.
 முதல் உலகப் போரின்போது நிதி வழங்கிய இவருக்கு பிரிட்டிஷ் அரசு ராய் பகதூர் விருது வழங்கியது. 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டபோது அதை திருப்பிக்கொடுத்துவிட்டார்.
 மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவுடன், அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். அனைவரும் சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துவதே நாட்டின் வறுமையைப் போக்கும் என்ற காந்தியின் தொலைநோக்கு இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 ஆங்கிலேயர்கள் இங்கிருந்து மலிவு விலையில் பருத்தியை வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கிருந்து விலை அதிகமான துணிகளாக இறக்குமதி செய்வதையும் கண்டார். சுதேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 காந்தியின் எளிய வாழ்க்கை பிடித்ததால், மனைவி, மக்களோடு சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார். 1923-ல் கொடி சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். காந்திக்கு மிகவும் நெருக்கமான சகாவாக, அவரைப் பின்பற்றினார். காந்தி இவரை தன் மகன்போலக் கருதினார்.
 காந்தி வார்தாவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இவரது விருப்பம். 1930-ல் வார்தா அருகே உள்ள சேவாகிராம் என்ற கிராமத்தில் காந்தி வசிக்கத் தொடங்கினார். காந்தி சேவா சங்கத்தின் தலைவராக ஜம்னாலால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும், 1933-ல் காங்கிரஸ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 தீண்டாமை ஒழிப்பு, இந்தி பிரச்சாரம், கதர் ஆடை மற்றும் கிராமத் தொழில் மேம்பாடு ஆகியவற்றில் முழு மூச்சுடன் பங்கேற்றார். கதர் அணிவதை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
 தேசப் பொது மொழி அவசியம் என்று காந்திபோலவே இவரும் கருதினார். இந்தியைப் பரப்ப, ராஜாஜியுடன் சேர்ந்து தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா தொடங்கினார்.
ஹரிஜன மக்களுக்காக வார்தாவில் 1928-ல் லட்சுமி நாராயண் மந்திர் என்ற கோயிலை சொந்த செலவில் கட்டினார். சமபந்தி போஜனங்களில் கலந்துகொண்டார். தனது வயல்கள், தோட்டங்களில் பொதுக் கிணறுகளை வெட்டினார்.
 தனது செல்வத்தில் பெரும் பங்கையும் தொழில் லாபத்தையும் சமுதாய நலன்களுக்காகவே செலவிட்டார். ‘தனிநபர் ஆதாயத்தைவிட சமுதாய நலன்தான் முக்கியம்’ என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். 53-வது வயதில் காலமானார்.

Know about Amerthia Sen

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதனில் பிறந்தவர். இவருக்குப் பெயர் வைத்தவர் தாகூர். விஸ்வபாரதி பள்ளியில் படித்தார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இந்தியா, இங்கிலாந்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
 பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன.
 ‘கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோஷியல் வெல்ஃபர்’ என்ற அவரது முதல் புத்தகம் 1970-ல் வெளிவந்தது. பொருளாதாரம், வாழ்வுரிமை, வாழ்வாதாரம் தொடர்பாக மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
 தனது ஆராய்ச்சி மூலம் அரசு நிர்வாகம், சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளின் தரத்தை மேம்படுத்தினார்.
 சமூகத் தேர்வு (Social Choice) என்ற கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும் தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே.
 ‘‘உணவு உற்பத்தி மட்டும் போதாது. அதை வாங்கும் சக்தி மக்களுக்கு வேண்டும். பஞ்சம், வறட்சி ஏற்பட்டால் மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் சென்.
 வறுமையை அளவிட இவர் வகுத்துத் தந்த வழிமுறைகள், ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவியாக அமைந்துள்ளன. இவரது பொருளாதார சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டன.
 மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பதை வலியுறுத்துபவர். பொருளாதாரத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, 1998-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரதிச்சி என்ற அமைப்பை உருவாக்கி, பரிசுத் தொகை முழுவதையும் பெண் குழந்தைகள் கல்விக்காக வழங்கிவிட்டார்.
 வளர்ச்சி சரியான விகிதத்தில் பங்கிடப்படுவதில்லை என்று ஆதங்கப்படுபவர். கல்வி, ஜனநாயகம் மட்டுமே மனிதகுலத்தை மேம்படுத்தும் என்ற உறுதியோடு செயல்படுபவர்.
 பொருளாதாரம் தவிர, மனித நேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பல களங்களில் இவருடைய சேவைகளைப் பாராட்டி பல நாடுகள் இவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. 1999-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Tamilndau Forming Day - Nov1

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில உருவாக்க நாள் என்பது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. நவம்பர் 1, கர்நாடகத்தில் மாநில உருவாக்க நாள் அல்லது ராஜ்ய உத்ஸவ தினம் என, இந்திய சுதந்திர தினத்தைவிட எள்ளளவிலும் குறையாத நாளாக, கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த நாளில் கர்நாடக வரைபடத்தைத் தாங்கிய மஞ்சள் கொடி கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் பறக்கும். அதே நாள் கேரளத்தில் கேரளப் பிறவி தினம் என்று கொண்டாடப்படுகிறது. அதைப் போலவே ஒடிஷாவில் ஏப்ரல் 1-ம் தேதி உத்கல் திவசமாகவும் பிஹாரில் மார்ச் 2 பிஹார் திவாஸாகவும் கொண்டாடப்படுகிறது. (ஆந்திராவும் தெலுங்கானாவும்தான் இப்போது குழப்பத்தில் இருக்கின்றன).
இதே நவம்பர் 1, 1956-ல்தான் நமது தமிழகமும் (சென்னை மாநிலம் என்கிற பெயரில்) புதிய எல்லை வரையறைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆனால், நாம் ஏன் நவம்பர் 1-ஐ மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடுவதில்லை? இதற்கான பதிலுக்குள் பல வரலாற்றுச் செய்திகள் ஒளிந்திருக்கின்றன.
மொழிவாரி மாகாணங்களின் ஒன்றியம்
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கை களின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது! தனி மாநில/மாகாண கோரிக்கை களின் தொடக்கம் ஒரிசாதான் என்பது பலருக்கு ஆச்சரிய மாக இருக்கலாம். 1895-ல் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதி யாக இருந்த ஒரிசாவில் பிரிட்டிஷ் அரசு நிர்வாக வசதிக்காக இந்தியை ஒரிசாவின்மீது திணித்தபோது, சம்பல்பூரில் போராட்டம் வெடித்தது. அதிலிருந்து ஒரிசா தனி மாகாண மாக ஆக்கப்படவேண்டும் என போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது. ஒரியர் களைப் போலவே மராத்தியரும் தமக்கான மொழிசார்ந்த புவி அடையாளத்தைக் கண்டடைவதில் பின்தங்கியிருக்க வில்லை. ஒரு கட்டத்தில் இந்தியாவில் எல்லாத் தரப்பினருமே மொழிவாரி மாகாணங்கள் என்கிற கருத்தாக்கத்தையே வந்தடைந்தனர்.
மத்திய சட்டசபை 1948-ல் எஸ்.கே. தர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை ஆராய்ந்தது. மொழிவாரி மாகாணங்கள் தொடர்பான யதார்த்தத்தை தர் கமிட்டி அங்கீகரித்தது. ஆனால், அது தேச நலன்களுக்கு எதிரானது என்று முடிவு செய்தது. ஆனால், 1952 டிசம்பர் 16-ல் பொட்டி ராமுலுவின் உயிர்க்கொடைக்குப் பின் நேரு அரசு தனது தூக்கத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று. 1953 அக்டோபர் 1-ல் ஆந்திர மாநிலம் உருவானது. இது இந்தியா முழுக்க, தனி மாநிலக் கனவுகளில் இருந்த மக்களுக்கு உற்சாகமளித்தது. 1953-ல் மத்திய அரசு மாநில மறுஒழுங்கமைப்புக் குழுவை அமைக்கும் நிலைக்கு உள்ளானது. 1955-ல் அந்தக் குழு 16 மொழிவழி மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங்களையும் அமைக்கப் பரிந்துரை செய்தது. அதன் அமலாக்கம் மாநில மறுஒழுங்கமைவுச் சட்டம்-1956 மூலமாக நடந்தேறியதெல்லாம் நாம் அறிந்த வரலாறு.
மலபார், திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானம், தென் கர்நாடக- மலையாளப் பகுதிகள் இணைந்து கேரள மாநிலம் உருவானது. அதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு குறிப்பிடத் தக்கவர். அதுபோலவே, மைசூர் சமஸ்தானம், சென்னை / பம்பாய் சமஸ்தானங்களில் அடங்கியிருந்த கன்னடர்கள் பெருவாரியாக வசித்த பகுதிகள், ஹைதராபாத் கர்நாடகப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மைசூர் மாநிலம் 1956 நவம்பர் 1-ல் உருவானது. இது 1973-ல் கர்நாடகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களான மொரார்ஜி தேசாயும் இந்துலால் யக்னிக்கும் மகாகுஜராத் இயக்கம் நடத்தி, பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பகுதிகளையும் செளராஷ்டிர, கட்ச் பகுதிகளையும் இணைத்து குஜராத் மாநிலத்தை உருவாக்கினார்கள்.
தமிழகம் செய்ததென்ன?
மொழிவாரி மாநிலப் பிரிவினை சூறாவளியாகச் சுழன்றடித்த வேளையில் தமிழகம் ஒரு விநோதமான சூழலைச் சந்தித்தது. மொழி அரசியலுக்கும் மாநில உரிமைகளுக்கும் முன்னோடி என்று கருதப்படும் தமிழகம் 1940-50-களில் இவ்விஷயத்தில் மிகவும் குழம்பிப்போயிருந்தது.
தமிழக தனி மாகாண அல்லது மாநிலக் கோரிக்கைக்கும் நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ்காரராக இருந்த சர் சி. சங்கரன் நாயர் 1926-ல் மத்திய சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்திலுள்ள பத்து தமிழ் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீ்ழ் டொமினியன் அந்தஸ்து உள்ள பிரதேசமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். கிட்டத்தட்ட ஒரு தனிநாடு கோரிக்கையாகவே அது இருந் தது. அது அப்போது ஏற்கப்படவில்லை. ஆனால், அதன் பிறகு, தமிழ்நாட்டில் தனி மாகாண அல்லது தனி நாடு கோரிக்கைகள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கின. முதன்முதலாக, “இந்தியா என்பது ஒரு நேஷனா?” என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பியது இதற்குப் பின்புதான். 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்குப் பிறகு திராவிட, தமிழ்த் தேசியவாதிகள் அல்லது தமிழறிஞர்கள் பிரிட்டிஷ் அரசுக்குட்பட்ட தமிழ் மாகாணம் ஒன்றை இந்திய எல்லைக்கு உட்பட்டோ அல்லது அதற்கு வெளியிலோ கேட்டார்கள். ஆனால், அவை எதுவுமே பெரும் போராட்டங்களாக வெடிக்கவில்லை. 1947-க்குப் பிறகு, இவை எல்லாம் இந்திய தேசியத்திலோ அல்லது திராவிட நாட்டுப் பெருங்கனவிலோ கரைந்துபோயின.
50-களில் மற்ற இடங்களில் ஐக்கிய கேரளம், சம்யுக்த மகாராஷ்டிரம், விசாலாந்திரம், கர்நாடக ஏகிகரண இயக்கம் என்றெல்லாம் இயக்கங்கள் தோன்றி மொழி அடை யாள அரசியல் பரவிய நேரத்தில், தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்கான வியூகத்தை வகுத்திருக்கவில்லை. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் எல்லைக் காப்புப் போராட்டங்களே மாநில உருவாக்கப் போராட்டமாக இருந்தது. மபொசி, நேசமணி போன்றோரின் போராட்டங்கள் எல்லைக் காப்பை மையமாகக் கொண்டிருந்தன.
திராவிட நாடு எங்கே?
30-களில் ஓரளவுக்காயினும் ஏற்கத் தக்க வரலாற்று யதார்த்தமாக இருந்த திராவிட நாடு கோரிக்கை 50-களில் காலப் பொருத்தமற்றதாகவே மாறியிருந்தது. நூற்றாண் டின் தொடக்கப் பதிற்றாண்டுகளிலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் சென்னை மாநிலத்தை உடைத்துத் தங்களுக்கான மாகாணங்களைக் கோரிப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருக்காக திராவிட இயக்கத்தினர் திராவிட நாட்டுக் கனவைக் கண்டுகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது. வடக்கின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, அல்லது புதியதோர் சமூக நீதிக்கான உருவகமாக திராவிட நாடு இருந்தது என்பது உண்மைதான். ஆனால், 50-களின் சூழல் அதை நிர்மூலமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் பெரியார் திராவிட நாட்டுக் கனவை 1956 நவம்பர் 1-ல் கலைத்துக்கொண்டுவிட்டார். ஆனால், அண்ணாவால் அது முடியவில்லை. 1962-ல்தான் அவர் அதைக் கைவிட்டார். இப்படி ஒரு திராவிட தேச மயக்கத்தில் தமிழகம் இருந்தபோதுதான், இந்தியா முழுக்க மொழிவாரியாக இடங்கள் பிரிக்கப்பட்டபோது, தேவிகுளமும் பீர்மேடும் மட்டும் ‘புவியியல்’ காரணங்களுக்காக கேரளத்திடமே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் இருப்பதால் அண்ணா சகித்துக்கொண்டார். காமராஜருக்கோ அவை இந்தியாவில்தானே இருக்கிறது என்பதால் கவலை இல்லை. பெரியாரோ, தான் சமூக முன்னேற்றத்துக்காகப் போராடுகிறவனே ஒழிய, விஸ்தீரணத்துக்காகப் போராடுபவன் இல்லை என்று அறிவித்துவிட்டார். இவ்வாறாக, சென்னை மாகாணத்தின் எச்சமாக தமிழ்நாடு வேறு வழியில்லாமல்- உருவானது. அதனால்தான், தமிழகத்தில் நவம்பர் 1, கொண்டாடப்படக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்ததில்லை.
இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது இந்தியாவின் பன்மைத்தன்மையை அங்கீகரித்த ஒரு செயல்பாடாகும். ஆகவே, நவம்பர் 1-ம் தேதியைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் நமக்கு இருக்கிறது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், ஒரு தமிழ் அரசாக, தமிழகப் பகுதி உருவான நாள் அந்த 1956 நவம்பர் 1-தான் என்கிற உண்மையை யாரால் மறுக்கவியலும்?
- செ.ச. செந்தில்நாதன், அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

Labor Laws and its importance

ஒப்பந்தத் தொழிலாளர் முறை, நலச் சட்டங்களில் திருத்தம் - யாருக்கான அரசு இது?
மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சில சட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொழில்துறை சார்ந்த திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை மோடி அரசு ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போதெல்லாம் தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியத் தொழிலாளி வர்க்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகத் தோன்றியவைதான் கீழ்க்கண்ட சட்டங்கள்: தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்-1923, இந்தியத் தொழிற்சங்கச் சட்டம்-1926, சம்பளப் பட்டுவாடாச் சட்டம்-1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு மற்றும் நிலையாணைச் சட்டம்-1946, தொழிற்தாவாச் சட்டம்-1947, தொழிற்சாலைச் சட்டம்-1948, மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம்-1961, பணிக்கொடைச் சட்டம்-1972. இது தவிர, போனஸ் பட்டுவாடாச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டப் பிரிவையும் அமல்படுத்தாதபோது, அவற்றைக் களஆய்வு செய்து, தட்டிக்கேட்கத் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. விரைவான தொழில் வளர்ச்சிக்கு அது இடையூறாக இருக்கிறது என்ற பெயரில், அத்தகைய ஆய்வுகள்குறித்த பிரிவுகளைத் தற்போது மத்திய அரசு நீக்கியிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது…
19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாகப் பொருள் உற்பத்தி பன்மடங்கானது. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டதால் உற்பத்தி வேகம் கூடி, உற்பத்தியின் அளவும் கூடியது. உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், உற்பத்தி அளவுக்கேற்ப ஊதியம் உயர வேண்டும் என்று குரல்கொடுக்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தியத் தொழிலாளி வர்க்கமும் ஊதிய உயர்வு கோரிக் குரல் எழுப்ப ஆரம்பித்தது.
இந்தியாவில் தொழிலாளர்கள் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. 1823-ல் பல்லக்கு தூக்குவோர் வேலைநிறுத்தம், 1862-ல் கல்கத்தா மாட்டு வண்டி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், 1866-ல் பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷ‌ன் இறைச்சி விற்பவர் வேலைநிறுத்தம், 1891-ல் கோவை நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 1895-ல் வங்கத்தில் பட்ஜ்-பட்ஜ் சணல் ஆலையில் வேலைநிறுத்தம் (மிகப் பெரிய கலவரத்தில் முடிந்தது), 1907-ல் கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், 1921-ல் நவம்பர் 17 முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை இந்தியா கண்டிருக்கிறது.
சம்பளப் பட்டுவாடாச் சட்டம்
இத்தகைய பல எழுச்சி மிக்க போராட்டங்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு, வேலைக்கேற்ற ஊதியமும், முறைப்படி குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் வழங்கப்படாத முறைகேட்டைப் பற்றியும் ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்க 1929-ல் ராயல் கமிஷ‌ன் ஒன்றை அமைத்தது. அந்த கமிஷ‌ன் தனது அறிக்கையை 1933-ல் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து 1936-ல் சம்பளப் பட்டுவாடாச் சட்டம் இயற்றப்பட்டது. இன்றளவும் மாவட்டந்தோறும் சம்பளப் பட்டுவாடாச் சட்டப்படி நிர்வாகம் செயல்பட வில்லை என்கிற தாவாக்கள் தொழிலாளர் துறை அலுவலர்களிடம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து, இயற்றப்பட்ட 1947-ம் வருடத்திய தொழில் தாவாச் சட்டம்தான் இன்றளவும் நிரந்தரப் பணிநீக்கத்திலிருந்து சிறிதள வாவது தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவிக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் என வர்ணிக்கப்பட்ட ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இத்தகைய தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்கள் நலனும், முதலாளிகள் நலனும் சம அளவில் கருத்தில் கொள்ளப்பட்டு ஷ‌ரத்துக்கள் அமைந்திருந்தன. ஆனால், சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்திய முதலாளிகள் வர்க்கம் இத்தகைய சட்டங்களைப் பின்பற்றாத நிலை தொடர்வதும், சட்டங்களையே ஒட்டு மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என வேண்டுகோள் வைப்பதும் வேதனைக்குரியது.
இரண்டு கோரிக்கைகள்
கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 15 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இடதுசாரிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி சார்ந்து செயல்பட்டுவரும் ஐ.என்.டி.யு.சி., பாஜக சார்ந்து செயல்பட்டுவரும் பி.எம்.எஸ். உள்ளிட்டவையும் பங்கெடுத்திருக்கின்றன. ஏறக்குறைய 15 வேலை நிறுத்தங்களின் போதும் முன்வைக்கப்பட்ட முக்கிய மான இரண்டு கோரிக்கைகள் இவைதான்: (1) தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது. (2) தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது.
2001-ல் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து, ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அப்போது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம்கூடத் தலையிட்டுப் பணிநீக்கத்தை விலக்கிக்கொள்ள வலி யுறுத்தியது. ஆனால், தொழில் தாவாச் சட்டத்தின் கீழ் முன்னறிவிப்பு கொடுத்து மேற்கொள்ளும் சட்டபூர்வ வேலைநிறுத்தம் என்கிற உரிமை அரசு ஊழியர்களுக்கு இல்லை என்று சொல்லப்பட்டு, இன்றளவும் சீராய்வு செய்யப்பட வேண்டிய தீர்ப்பாக அது உள்ளது.
பணிநிரந்தரம் எனும் எட்டாக்கனி
தொழிற்சாலைகள் பலவற்றில் ஒப்பந்த முறை என்பது அதிகரித்து, தொழிலாளர்கள் பணிநிரந்தரம் என்பதே எட்டாக் கனியாக மாறியிருக்கிறது. பலமுறை நீதிமன்றங்கள் தலையிட்ட பின்னரும், நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பது தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது. விவசாயத்தற்கொலை, வறட்சி, வறுமை காரணமாகப் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் நலம் பேணுவதற்காகத் தனியாகச் சட்டம் இருந்தபோதிலும் அதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு யாரென்று அறியாமல் இவர்களின் உழைப்பு சுரண்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.
இயந்திரமயமாக்கல்
ஒருபுறம் இயந்திரமயமாக்கல் என்ற வகையில் தொழிலாளர் எண்ணிக்கையைத் தொழில் நிறு வனங்கள் குறைத்திருக்கின்றன. இன்னொரு புறம் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துப் பல்வேறு பணிகளைச் செய்துகொண்டு, சட்ட வரம்பிலிருந்து எளிதாகப் பல நிறுவனங்கள் வெளியில் வந்துவிடுகின்றன.
தொழிலாளர் தரப்புப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நலச் சட்டங்களில் தேவையான திருத்தங்களுக்கான பரிந்துரைகள் செய்வதற்காக 1966-ல் பி.பி. கஜேந்திர கட்கர் தலைமையிலும், 2002-ல் ரவீந்திர வர்மா தலை மையிலும் தொழிலாளர் ஆணையங்கள் நிறுவப்பட்டன. இதில் 2-வது தொழிலாளர் ஆணையம் முன் கருத்து சொல்லும் கூட்டத்தில் கலந்துகொண்டபோது பெரும் பான்மையான தாவாக்களை ‘சமரச முறிவு’ என்ற பெயரில் தொழிலாளர் நீதிமன்றத்துக்குத் தள்ளாமல், சட்டமீறல் செய்யும் முதலாளிகள் / நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையே நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தொழிற்சங்கங்கள் தரப்பில் முன்வைத்தோம். அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை.
சட்டங்களின்படி நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு இல்லா விட்டால், முதலாளிகள் வர்க்கம் சர்வாதிகாரம் பெற்றவையாகி, தொழிலாளர் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறியாகிவிடும்.
- எஸ். சம்பத்,
போக்குவரத்துத் தொழிற்சங்க மாநில நிர்வாகி,
தொடர்பு: dss1961@gmail.com

Black Money -627

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்று கருதப்படும் 627 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலை மூடி முத்திரையிட்ட கவரில் உச்ச நீதிமன்றத்திடம் அளித்துவிட்டது மத்திய அரசு. இந்த விவகாரத்தை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அதை உச்ச நீதிமன்றமும் அளித்துவிட்டது. இத்தோடு முடிந்ததா கருப்புப் பண விவகாரம் என்ற கேள்வி எழுகிறது.
சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் பட்டியலில் உள்ள 627 பேர் மீதும் வழக்கு தொடுத்து பணத்தை மீட்க முடியுமா என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல் களைப் பற்றிப் பேசிய கையோடு, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச் சாட்டை நரேந்திர மோடியும் பாஜகவின் பிற தலைவர்களும் தேர்தலுக்கு முன் தொடர்ந்து பேசினார்கள். இவர்கள் பதவிக்கு வந்தால் கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்துவிடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை சிலரிடம் தோன்றியது. இப்போதோ, பாஜகவின் நேர்மை பல்லிளிக்கிறது.
முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது. வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம். முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனவே, கருப்புப் பணத்தை அதன் தோற்றுவாயிலிருந்தே கணக்கில் கொண்டுவருவதற்கான நிர்வாக நடைமுறைகளை அரசு கொண்டுவர வேண்டும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை விரைவாகவும் வலுவாகவும் நடத்த வேண்டும். வரிவிதிப்பு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். வரிச் சலுகைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். வரிகளை மதிப்பிடுவதையும் வசூலிப்பதையும் சீர்மைப்படுத்தினால் அரசுக்கும் வரிவருவாய் பெருகும். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு ஊக்குவிப்புகளையும் கவுரவங்களையும் அளிக்க வேண்டும். வரி ஏய்ப்பு நிரூபணமானால் தயவுதாட்சண்யம் பாராமல், வழக்கை இழுத்துக்கொண்டே போகாமல், கடுமையான தண்டனைகளை அளித்தால் கருப்புப் பணப் புழக்கம் தணியலாம்.
நோயைக் குணப்படுத்தாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் தணிக்கும் நடவடிக்கைதான் கருப்புப் பண ஒழிப்பு என்பது. நாம் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகளும் பொருளாதார அமைப்பும் தேர்தல் ஜனநாயகமும் வரி ஏய்ப்பையும் கருப்புப் பணத்தையும் அவ்வளவு லேசில் ஒழித்துவிடாது என்பதே உறுதி. அடிப்படையில் மாற்றம் இல்லாமல் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவது சாத்தியமே இல்லை.

Know about Indra Gandhi

இந்திரா காந்தியைப் பற்றி இரண்டு விதமாகச் சொல்வார்கள்: ஒன்று, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியவர். இரண்டு, துணிச்சல் மிகுந்த பெண்மணி. இந்த இரண்டு எதிர்நிலைகளையும் தாண்டி, இந்திரா காந்தியைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தைச் சமகால வரலாறு நமக்கு ஏற்படுத்துகிறது.
நேருவை விமர்சித்தவர்கள்கூட, துணிச்சலாக முடி வெடுப்பவர் என்று இந்திராவைப் பாராட்டியிருக் கிறார்கள். முற்போக்கான, அதிரடியான பல நடவடிக் கைகளை அவர் எடுத்ததுதான் இதற்குக் காரணம். மன்னர் மானியத்தை ஒழித்தது அதன் முதல் படி. 14 தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கியது பெரும் பாய்ச்சல். நிலக்கரி, இரும்பு, தாமிரம், எண்ணெய் சுத்திகரிப்பு, காப்பீடு ஆகிய தொழில்களை அரசுடைமையாக்கினார்.
எல்லாவற்றையும் தனி யாருக்குத் தாரைவார்க்க பாஜக, காங்கிரஸ் இரண்டுமே துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்திராவின் அப்போதைய நடவடிக்கைகள் அசாதாரணமானவை. நேற்றைய மன்மோகன் சிங்கோ இன்றைய மோடியோ ஒரு துரும்பைக்கூட அரசுடமை யாக்க முடியாத நிலைதான் இன்று.
வசந்த காலம்
அது மட்டுமா, இந்திராவின் காலம் ஐந்தாண்டுத் திட்டங்களின் வசந்த காலம். மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்தினார். அவற்றில் இரண்டு இலக்குகளை எட்டியது. அரிசி, கோதுமை போன்ற உணவுத் தானியங்களை இறக்குமதி செய்த நாட்டை ஏற்றுமதி செய்யும் நாடாகத் தன்னிறைவு காணச் செய்தது இந்திராவின் சாதனைகளுள் ஒன்று. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் ஊதியம் வழங்க சம வேலை, சம ஊதியச் சட்டத்தை நிறை வேற்றியது பெண்ணுரிமைகளுக்கான பயணத்தில் ஒரு மைல்கல்.
இந்தியா-பாகிஸ்தான் பகைமை உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக இருந்தது அப்போது நடந்த போர். அந்தப் போரில் கிடைத்த வெற்றி, இந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்குப் பேருதவி புரிந்தது. அதன் காரணமாகத்தான் மாற்றுப் பாசறை யிலிருந்த வாஜ்பாய், இந்திராவை “துர்கா தேவி” என்று உணர்ச்சி மேலிட வர்ணித்தார்.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, சோவியத் யூனியனுடன் 20 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டார். பொக்ரானில் முதல் அணுகுண்டை வெடித்து அமெரிக்காவை அதிர்ச் சிக்குள்ளாக்கினார். இவற்றின் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்தார் இந்திரா. இதெல்லாம் சர்வாதிகாரப் போக்குக்கு அவரை இட்டுச்சென்றதுதான் துரதிர்ஷ்டம்.
காங்கிரஸ் கட்சியின் பழமைவாதத் தலைவர்களை இந்திரா ஓரங்கட்டினார். அதிகாரங்களை மைய அரசில் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் குவியச் செய்தார். அரசில் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தி, தனி அதிகார மையமாக உருவெடுத்ததை ஆதரித்தார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் யாரும் தனிச் செல்வாக்கு பெற்றுவிடாமல் மறைமுகமாகத் தடுத்து
வந்தார். இதனால் கட்சி அமைப்புரீதியாகப் பலவீனம் அடையத் தொடங்கியது. தன் சொல்லைக் கேட்பவர் களையும் தன்னைப் புகழ்பவர்களையும் அருகில் வைத்துக்கொண்டார். இந்தியாவின் முழு அதிகாரம் படைத்த சக்ரவர்த்தினியாகத் திகழ்ந்தார்.
நெருக்கடி நிலை
தேர்தல் முறைகேடு வழக்கில் தோல்வியுற்ற பிறகு, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியதால், அவர்களை ஒடுக்க, உள்நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகப் பிரகடனம் செய்தார். மக்களுடைய சிவில் உரிமைகளைத் தற்காலிகமாக ரத்து செய்தார். அரசை எதிர்த்துப் போராட்டம், பொதுக் கூட்டம் நடத்தத் தடை விதித்தார்.
பத்திரிகைத் தணிக்கையைக் கொண்டுவந்தார். எதிர்க் கட்சித் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அதே வேளையில், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக, இருபது அம்சத் திட்டம் கொண்டுவந்தார். தேர்தல் வழக்குகளிலிருந்து பிரதமருக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
நெருக்கடி நிலை அறிவிப்பைத் தானாகவே விலக்கிக் கொண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வி கண்டார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்தத் தலைவர்களின் பதவி ஆசையைப் பயன்படுத்தி அந்தக் கட்சியை உடைத்தார். பிறகு நடந்த பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
அக்டோபர் 31, 1984
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளக் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கவும் சீக்கியர்களிடையே செல்வாக்கு பெறவும் அவர் ஆதரித்த பிந்தரன் வாலே, காலிஸ்தான் கோரிக்கையில் தீவிரமடைந்து தீவிரவாதிகளுடன் பொற்கோயிலில் ஒளிந்துகொண்டார். அவர்களை வெளியேற்ற ராணுவத்தைக் கொண்டு எடுத்த நீலநட்சத்திர நடவடிக்கையால் சீக்கியர்களின் அதிருப்திக்கு இந்திரா காந்தி காரணமானார். அதன் விளைவுதான், 1984 அக்டோபர் 31-ல் அவருடைய சீக்கிய மெய்க்காவலர்களாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டது.
நெருக்கடி நிலையை மட்டுமே காரணம் காட்டி நிராகரித்துவிட முடியாத ஆளுமை இந்திரா காந்தி. ஒரு கட்டத்துக்குப் பிறகு, தான் உருவாக்கிய கூண்டில் தானே அடைபட்டுக்கொண்டதுதான் அவரைப் பற்றி உருவான எதிர்மறை சித்திரத்துக்குக் காரணம். எல்லாவற்றையும் தாண்டி, இந்தியர்கள் அவரைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
நோஞ்சான் குழந்தையாக ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இந்தியாவைப் புவியரசியலில் முக்கிய சக்தியாக இடம்பெறச் செய்தவர் இந்திரா காந்திதான். அது மட்டுமல்லாமல், அரசியலிலும் பொது வெளியிலும் பெண்கள் முக்கிய சக்தியாக இடம்பெற ஆரம்பித்ததும் அவர் காலத்துக்குப் பிறகுதான். காலம்காலமாகப் பெண்ணுரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்களால் ஏற்பட்ட மாற்றத்தைவிட இது மிகவும் அதிகம்.

Nokia @ chennai

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?
நோக்கியன் விர்டா என்ற நதி, பின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, ஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டி, செல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டு, சந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.
2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியா நிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு, இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் 1 முதல் உற்பத்தி நிறுத்தம்குறித்த அறிவிப்பும், அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும், இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.
விற்பது - இணைப்பது புதிதல்ல
நோக்கியாவைப் பொறுத்த அளவில் தனது நிறுவனத்தை வேறொரு நிறுவனத்துடன் இணைப்பது புதிதல்ல. ஏற்கெனவே, செல்பேசித் தயாரிப்புக்குள் வருவதற்கு முன், ஃபின்னிஷ் ரப்பர் ஒர்க்ஸ் மற்றும் ஃபின்னிஷ் கேபிள் ஒர்க்ஸ் ஆகிய இரண்டு நிறு வனங்களுடன் இணைந்த வரலாறு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்திருக்கிறது. காகிதம், ரப்பர், கேபிள், மின்சாரம், மின்னணுச் சாதனங்கள் என ஐந்து தொழில்களில் ஈடுபட்டுவந்த நோக்கியா, பல்வேறு இணைப்புகளையும் விற்பனைகளையும் சந்தித்துதான் வளர்ந்திருக்கிறது. செல்பேசி தயாரிப்புக்குப் பின்னரே, குறிப்பாக 1994-க்குப் பின், உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக நோக்கியா மாறியது.
ஜி.எஸ்.எம். என்ற இரண்டாம் தலைமுறை செல்பேசிக்கான ஒழுங்குமுறையையும், சி.டி.எம்.ஏ. என்ற மூன்றாம் தலைமுறை ஒழுங்குமுறையையும் மிக சாமர்த்தியமாகக் கையாண்டு, சந்தையில் தங்கள் செல்பேசி விற்பனையை மேம்படுத்திக்கொண்ட அனுபவம், மற்ற செல்பேசி நிறுவனங்களைவிடவும், நோக்கியாவுக்குத்தான் அதிகம். சி.டி.எம்.ஏ. ஒழுங்கு முறை என்ற 3ஜி, இந்தியாவில் அறிமுகம் செய்யப் படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அமெரிக் காவிலும் ஐரோப்பாவிலும் நோக்கியா அறிமுகப்படுத்தி, தனது செல்வாக்கை நிலைநாட்டியிருந்தது.
ஒரு செல்பேசியைத் தயாரிப்பதற்கு, 300-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தேவை. இவை சரியான நேரத்தில் கிடைப்பதும், அதற்கான உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனங்களுடன் உடன்பாடு கொண்டு செயல்படுவதும் தவறில்லை என்று நோக்கியா தலைமை முடிவெடுத்து, வேலைகளைப் பிரித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஃபாக்ஸ்கான், சால்காம்ப், லைட் ஆன் மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பி.ஒய்.டி, ஃபிலெக்ஸ்ட்ரானிக்ஸ், ஆர்.ஆர்.டோனல்லி ஆகியவை அருகில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டுவருகின்றன.
நோக்கியா பல உதிரி பாகங்களை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பிரதான வடிவமைப்பைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு, பாகங்களை ஒன்று சேர்க்கும் வேலையில் தீவிரமாகக் கவனம் செலுத் தியது. நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பரந்ததாக இருந்த நிலையில், தனது தயாரிப்புப் பெயரைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், சிக்கனத்தைக் கையாளவும், மேற்குறிப்பிட்ட உற்பத்தி முறையில் தீவிரமாகச் செயல்பட்டது. இது மிகப் பெரிய பலனையும் நோக்கியாவுக்கு அளித்தது.
இந்தியாவில் முதலீடும் வருவாயும்
செல்பேசி விற்பனையில், இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற் பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் பெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005, ஏப்ரல் மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொடக்கத்தில் ரூ. 675 கோடியும், பின்னர் அடுத்த கட்டத்தில், சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது. இதற்காக சிப்காட் மூலம், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்து, ஏக்கர் ஒன்றுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும், பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணை தெரிவிக்கிறது. இதற்கு மேல், வணிக வரி, விற்பனை வரி ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.
மென்பொருள் இறக்குமதி, அதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசு, வாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்து, முடிவாகாமல் உள்ளது.
இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட், நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்துவிட்டதால், நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமை, ஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால், இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று வரும் நகைச்சுவையைப் போல், நோக்கியா செல்பேசி விற்பனையாகும்; ஆனால், நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.
கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்
இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையை, மைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவே, முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று 5,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு, ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும், பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இளம் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். அரசுகளும் 8 மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் சாதிக்கின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது, அவர்களின் எதிர்காலம், குடும்ப நிலை போன்றவை குறித்து அரசுகளிடம் எந்தப் பதிலும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, தன் மக்களை இப்படியா கைவிடுவது?
- எஸ். கண்ணன்,
மாநிலக் குழு உறுப்பினர், சிபி(ஐ)எம், தொடர்புக்கு: prekan07@gmail.com