ஞாயிறு, 4 ஜனவரி, 2015

மரபணுத் திருத்தம்

சிகை திருத்தம் செய்துகொள்வதுபோல மரபணுத் திருத்தம் செய்துகொள்ளலாமா?
யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது.
பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை
களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பிறக்கிற பிள்ளைகளைக்கூட நம்மால் அடை யாளம் காண முடிகிறது. இதற்குத் தனித்துவம் என்று பெயர்.
மரபணுக்களின் மாய உலகம்
பாரம்பரியத்துக்கும் தனித்துவத்துக்கும் காரணமாவது மரபணு (ஜீன்) எனப்படுகிற அடிப்படைக்கூறு. இயற்பி யலிலும் வேதியியலிலும் அணு என்பது அடிப்படைக் கூறாக இருப்பதைப் போல உயிரியலில் மரபணு ஓர் அடிப்படைக் கூறாக விளங்குகிறது. தலைமயிர் கருப்பா, சிவப்பா, பொன்னிறமா, சுருட்டையா, நீளமா, மூக்கு சப்பையா, கிளி மூக்கா என்பன போன்ற அம்சங்களை நிர்ணயிப்பது மரபணுதான்.
தலை வழுக்கை, பார்வைக் கோளாறுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனநோய் போன்ற பல வேண்டாத விஷயங்களும் பெற்றோரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பிள்ளைகளுக்கு மரபணுக்கள் மூலமாகவே வந்து சேருகின்றன.
மேற்சொன்ன ஒவ்வொரு குணாம்சத்துக்கும் ஒரு மரபணு பொறுப்பு வகிக்கிறது. இவ்வாறான 25 ஆயிரம் குணாம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அதாவது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணு வகைகள் உள்ளதாகப் பொருளாகிறது.
மரபணுக்கள் சரம்போல வரிசையாக அமைந்து ‘டியாக்சிரிபோ நியூக்ளிக் அமிலம்’ (டி.என்.ஏ.) என்ற அமைப்பாக அணிவகுத்திருக்கும். அந்த அமைப்பு ‘குரோமோசோம்’ எனப்படும் புரத உறைக்குள் பொதிந் திருக்கும். ஏராளமான குரோமோசோம்கள் செல் கரு என்ற உருண்டையாகத் திரண்டிருக்கும். அது செல் எனப்படும் நுண்ணறையில் குடியிருக்கும்.
செல்களில் எத்தனை ரகங்கள்
செல் என்பது ஓர் அதிசய, அற்புதப் படைப்பு. வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியைத் தவிர, மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் செல்தான் கட்டுமான அலகு. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரி வைரஸ்தான்.
உயிர் உள்ளது என நிர்ணயிப்பதற்கு செல்களின் இனப்பெருக்கம்தான் சாட்சி. ஜெராக்ஸ் நகலெடுப்பதைப் போல ஒரு செல் இரண்டாகி, இரண்டு நாலாகி கணத்துக்குக் கணம் இரட்டித்துக்கொண்டே போகிற நிகழ்வுதான் உயிர். அது நின்றுபோவது மரணம்.
செல் மிக நுண்ணியது. அதன் உறையாக பிளாஸ்மா சவ்வு அமைந்துள்ளது. செல்களில் உடல் செல்கள், பாலின செல்கள் என இரு வகையுண்டு. பாலின செல்கள் ஆண்களின் விந்தகத்திலும் பெண்களின் முட்டையகத்திலும் மட்டுமே காணப்படும். உடல் செல்களில் 46 குரோமோசோம்களும் பாலின செல்களில் 23 குரோமோசோம்களும் இருக்கும்.
ஆண் பாலின செல், விந்து மூலம் பெண்ணின் கருப்பையில் நுழைந்து பெண் பாலின முட்டையைச் சந்திக்கிறபோது விந்து செல்லின் கரு முட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கருவில் ஒட்டிக்கொள்ளும். தன் கருவுக்குள் 46 குரோமோசோம்கள் வந்துவிட்டன என்பதை உணர்ந்ததும் பெண் முட்டை வியப்பூட்டும் மாற்றங்களை அடைகிறது. அதனுள் பல பொருட்கள் உருவாகின்றன. அதன் பருமன் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது இரண்டிரண்டாகப் பிரிந்து, எல்லா வகையிலும் ஒத்த நகல் செல்களாகப் பெருகுகிறது.
சினையுற்ற கரு சிசுவாகப் பரிணமிக்கிறபோது உருவாகிற உடல், மயிர், எலும்புகள் போன்ற எல்லா உறுப்புகளுமே அந்த ஆதியாரம்ப முட்டையின் சந்ததி களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு செல்லும் தான் இருக்கும் இடத்துக்குத் தக்கபடி குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்கிறது. இதயத் திசுவிலுள்ள செல்கள் சுருங்கியும் விரிந்தும் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றன. எலும்பில் உள்ள செல்கள் அசைவின்றிப் பொருந்தியிருக்கின்றன. தசைகளில் உள்ள செல்கள் மூளையின் ஆணைகளுக்கு இணங்கி அசைவுகளை உண்டாக்குகின்றன. மூளையில் உள்ள செல்கள் மிகப்பெரும் சிக்கலமைப்பு கொண்ட மின் வேதியியல் சுற்றுக்களடங்கிய கணினியாகச் செயலாற்றுகின்றன.
கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்பு
களிலுள்ள செல்கள் திறன் மிக்க வேதித் தொழிலகங் களாகச் செயல்பட்டு, விசேஷ வகை நொதிகளையும் இன்சுலின் போன்ற வேதிகளையும் உற்பத்தி செய்கின்றன.
குரோமோசோம்கள் பல தலைமுறைகளை இணைக் கிற பாலங்கள். அவற்றிலுள்ள டி.என்.ஏ-க்கள் பல நூற்றாண்டுகள் வரை மாறாமல் இருக்கின்றன. உதாரணமாக, மனித குலத்தில் இதுவரை சுமார் 2,500 தலைமுறைகள் கழிந்திருக்கும். எனினும், சில மேலோட்டமான மாற்றங்களைத் தவிர, மனித உடலின் அமைப்பில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. குறிப்பாக, மனித மூளையின் பரிமாணம் கூடவோ குறையவோ இல்லை.
டி.என்.ஏ. சங்கிலி
டி.என்.ஏ. என்பது ஒரு சங்கிலி. நியூக்ளியோடைடு என்னும் மூலக்கூறு அதன் கண்ணிகள். அது பாஸ்பேட், ரிபோஸ் சர்க்கரை, நைட்ரஜன் காரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. டி.என்.ஏ. ஒரு ஏணியை முறுக்கியது போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்து வாட்சன், கிரிக் என்ற இரண்டு விஞ்ஞானிகள் நோபல் பரிசைப் பெற்றுவிட்டார்கள். அந்த ஏணியின் கால்களாக பாஸ்பேட் சர்க்கரை இழைகளும் படிகளாக நைட்ரஜன் காரங்களும் அமைந் துள்ளன.
பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் வெள்ளை நிறமுள்ளவர்களாக இருக்கிறபோது, குழந்தை கருப்பாகப் பிறந்திருக்குமானால், அதற்கு டி.என்.ஏ-வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏதாவது காரணமாயிருக்கலாம். மயில், புலி போன்றவற்றில் வெள்ளை உடல் கொண்டவை தோன்றவும் இதுவே காரணம். மரபணு மாற்றத்தால் ஏற்படுவதுதான் புற்றுநோய். செல்லில் உள்ள குரோமோசோம்களின் அமைப்பு அல்லது எண்ணிக்கை செல் இரட்டிப்பின்போது மாறிவிடுவது, மரபணு மூலக்கூறில் வேறுபாடுகள் ஏற்படுவது போன்றவை மரபணு மாற்றங்களுக்கு உதாரணங்கள். டி.என்.ஏ-வில் ஒரே ஒரு நியூக்ளியோடைடு இடம் மாறி அமர்ந்தாலும் வெளிப்படையான மாற்றங்கள் தென்படும். அணுக்கதிர் வீச்சு, வெப்பம், வேதிகள் போன்ற காரணிகள் டி.என்.ஏ-வின் கட்டமைப்பை மாற்றி மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும்.
மரபணுக் கலப்பு
மரபணுவில் மாற்றங்களைச் செயற்கையாகவும் உண்டாக்கி கலப்பின உயிரினங்களை உருவாக்க முடியும். மாடுகள் முதல் நெல், கோதுமை வரை யான உயிரினங்களில் மரபணுக் கலப்புசெய்து சிறப்பான பண்புகளைக் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கத்தரி, பருத்தி போன்ற செடிகளில் கிருமிகளின் மரபணுக்களைப் புகுத்தி அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியுள்ளனர். மரபணுத் திருத்தங்களின் மூலம் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த முடிந்திருக்கிறது.
மனிதர்களின் 46 குரோமோசோம்களையும் சோதித்து ஒவ்வொரு குரோமோசோமிலுள்ள குறைகளால் இன்னன்ன உடல் நலக்கோளாறுகள் வர முடியுமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த சிசுவின் குரோமோசோம்களைப் பரிசோதித்து எதிர்காலத்தில் அதற்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஊகித்துக்கொள்வதன் மூலம், ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலப் பாதிப்புகளைத் தடுக்க இயலும்.
மரபணுக்களை இஷ்டப்படி மாற்றியமைத்து மன்மதனைப் போன்ற அழகுள்ள ஆண்களையும் ரதியைப் போன்ற பெண்களையும் கொண்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிவிடலாம் என்று அறிவியல் புனைகதை ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், மரபணுக்களைத் திருத்தியமைப்பதன் மூலமாகச் சமூகத்தில் பெரிதாக எதையும் மாற்றிவிட முடியாது. இதுவரை மனித உடல் செல்களில் மட்டுமே மரபணுத் திருத்தம் செய்ய முடிந்திருக்கிறது. அதன் மூலம் தனிநபர்களின் சில குறைகளை நிவர்த்தி செய்தாலும் பாலின செல்களிலுள்ள மரபணுக்களைச் சரிப்படுத்தாதவரை அவர்களுடைய சந்ததிகளுக்கு மரபுப்பிழை மூலமான கோளாறுகள் வந்துகொண்டேதான் இருக்கும். பாலின செல்களில் உள்ள கோளாறுகளைச் சரிப்படுத்தாமல், உடல் செல்களை மட்டும் சரி செய்தால் ஓர் ஆபத்து வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, ஒருவரது வலிப்பு நோயை மரபணுத் திருத்தம் செய்து குணப்படுத்தி விட்டால், அவர் ஊக்கமும் வலுவும் பெற்றுத் திருமணம் செய்துகொண்டு அதே மரபணுக் கோளாறுள்ள பிள்ளைகளைப் பெற்றுத்தள்ளி விடலாம். அவர்களில் பலருக்கு வலிப்பு நோய் வரும்.
ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்ளும் முன் தமது மரபணுக்களைப் பரிசோதிப்பதன் மூலம் மரபுக் கோளாறுள்ள சந்ததிகளைப் பெறுவதைத் தவிர்க்க முடியும்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

(Forward march to Nature)

நவீன இயற்கை வேளாண்மையின் மறுமலர்ச்சிக் காலம் கடந்த 20 ஆண்டுகளில் தொடங்கியது. அதற்கு முந்தைய நிலைகளைப் பற்றியும் பார்த்திருந்தோம். ஆனால், அந்த முயற்சி உரிய பாதையில் செல்கிறதா என்ற ஆய்வு தேவைப்படுகிறது.
மரபைப் போற்றுதல் என்பதும், இயற்கைக்குத் திரும்புதல் என்ற ஃபுகோகா, நம்மாழ்வார் ஆகியோரின் கருத்துகள் ரசாயன வேளாண்மை ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இவர்கள், மக்களைக் கி.மு. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னுக்கு இழுக் கிறார்கள் என்று குறை கூறப்படுகிறது. கிராமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் சாதிகளைப் பாதுகாக்கத் துணைபோகின்றனர் என்றும், ரசாயனங்களை மறுக்கிறோம் என்று அறிவியலைப் புறந்தள்ளுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இயற்கையை நோக்கி...
உண்மையில் ‘இயற்கைக்குத் திரும்புதல்' என்ற ஃபுகோகாவின் கருத்தை வழிமொழிவதில் சில சிக்கல்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக இயற்கையை அழித்து வெற்றி கொள்வோம் என்பதை ஏற்பதற்கும் இல்லை. ‘இயற்கையை நோக்கி முன்னேறிச் செல்வோம்' என்பதே நமது கருத்து. மரபைக் காப்போம் என்ற பெயரில் சாதி ஏற்றத்தாழ்வு போன்ற கழிசடைக் கருத்துகளை ஏற்க இயலாது. நவீன இயற்கை வேளாண்மையில், அதற்குச் சற்றும் இடமில்லை.
சாணத்தை எல்லாரும் கையாள வேண்டும் என்பதே நவீன இயற்கை வேளாண்மையின் கருத்து, அதை எவ்வாறு நுட்பமாக, நோய்க்கு இடம் கொடுக்காமல் கையாள வேண்டும் என்பது இன்றியமையாதது. ஏற்றத் தாழ்வற்ற இயற்கை நேயமான சிற்றூர்கள் உருவாக வேண்டும். வேளாண்மையை இழிதொழிலாகப் பார்க்கும் நிலையை மாற்றி அது ஒரு கண்ணியமான, நீடித்த வருவாயைத் தரும் வாழ்வாதாரமாக உருவாக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.
வேளாண்மையை மையமாகக் கொண்டு சிற்றூர் பொருளாதாரம் இயங்க வேண்டும். அதற்குத் துணையாகப் பிற தொழில்கள் இருக்க வேண்டும். நீடித்த வேளாண்மை இருக்க வேண்டும் என்றால், அதற்கு இயற்கைவளங்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
எது இயற்கை வேளாண்மை?
ஆனால், ‘இயற்கைக்குத் திரும்புதல்' என்ற பெயரில் சில பழமைவாதிகள் அறிவியலுக்குப் புறம்பான பல கருத்து களை முன்வைப்பதும் நடக்கிறது. குறிப்பாக ஹோமம் வளர்ப்பது, பசுக்களை மட்டும் புனிதப்படுத்துவது, மற்ற கால்நடைகளைப் புறக்கணிப்பது, தொழில்நுட்பப் பெயர்களைக்கூடப் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் என்று சமஸ் கிருதமாக்கி அதற்கு ஒரு புனிதத்தைக் கற்பிப்பது, அதன் அறிவியல் செயல்பாடுகளை விளக்காமல் சடங்குகளாகக் கற்பிப்பது போன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. இதுதான் இயற்கை வேளாண்மை என்று கருதிக்கொண்டு பல இயக்கங்கள் இதை வெறுக்கின்றன. அல்லது பாராமுகமாக இருந்துவிடுகின்றன.
சாணமா? புளியா?
உண்மையில் நவீன இயற்கை வேளாண்மை என்பது, பன்னாட்டு நிறுவனப் படையெடுப்புக்கு மாற்றான அரசியல் செயல்பாடு. நீங்கள் சாணத்தைக் கரைக்கிறபோது, பன்னாட்டு கும்பணியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள் என்று பொருள்.
நான் ஒரு ஊரில் இயற்கை வேளாண்மைப் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தேன். இடதுசாரித் தோழர்கள் நிறைந்த தஞ்சை மண் அது. என் மீது அன்பும் பற்றும் கொண்ட தோழர்கள் பலர் இருந்தனர். 'தோழர், சாணத்தைக் கரைப்பதை விட்டுவிட்டுப் புரட்சி நடத்த வாருங்கள், ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்' என்று ஒரு தோழர் நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால், உண்மையில் சாணத்தைக் கரைப்பதன் உட்பொருளை விளக்கிய பின் அவர் மவுனமானார். சாணத்தைக் கரைப்பது என்பது தற்சார்பின் அடிப்படைச் செயல்பாடு. அது மக்களை மையப்படுத்திய செயல்பாடுகளின் ஆதாரம்.
தற்சார்பின் வேர்
ரசாயன உரங்களுக்கான மானியத்தை ஒருவர் ஆதரிப்பதும்கூடப் பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆதரவுக் குரலாக இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த நுண்ணரசியலை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
நவீன இயற்கை வேளாண்மை ரசாயன மாசுபாட்டுக்கு எதிரானது, நோயற்ற வாழ்வுக்கு உதவுவது என்பதுடன் நீடித்த மேம்பாட்டுக்கு - வளங்குன்றாத வளர்ச்சிக்கு, இதைவிட்டால் வேறு வழியில்லை. இது பிறரை அண்டி வாழும் அடிமை வாழ்வுக்கு எதிராகத் தற்சார்புடன் வாழத் துணைச் செய்வது, விதை, எரு, தொழில்நுட்பம் என யாவற்றையும் உள்ளூரிலேயே உருவாக்கிக்கொண்டு வாழ வழி செய்வதாகும்.
ஆகவே, தற்சார்பை உறுதி செய்ய இயற்கைக்குத் திரும்புவோம் என்பதைவிட ‘இயற்கையை நோக்கி முன்னேறுவோம்' (Forward march to Nature) என்பதே பொருத்தமானதாக ல்இருக்கும்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

2014: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும்

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் மனிதர்கள் புதுப் புது சாதனைகளை நோக்கிப் பயணப்படவே விரும்புவார்கள். பெண்களும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களைச் சமாளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சமாளித்து எழுகிறவர்களை இந்தச் சமூகம் கொண்டாடும், சில சமயம் சர்ச்சைக்கும் உள்ளாக்கும். ஆனால் சுழலில் அடித்துச் செல்லப்படாமல் உறுதியாக நிற்கும் பெண்களே தடம்பதிக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் அப்படி தனித்து நின்று கவனம் ஈர்த்த சில பெண் ஆளுமைகள் இவர்கள்.
விளையாட்டு
தங்க மங்கைகள்
விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு பெண்களுக்கான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். தொடர்ச்சியான வெற்றிகளும் பதக்கங்களுமே அதற்கு சாட்சி.
2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை பிரிவில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை பிரிவில் முதல் பதக்கம் பெற்ற இந்தியர் இவரே. மணிப்பூரின் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த மேரி கோம், வெற்றியின் உச்சம் தொட இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணம். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மேரி கோம்’ என்ற இந்தித் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
காமன்வெல்த் போட்டியில் 55 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பபிதா குமாரி தங்கம் வென்று இந்தியாவின் வெற்றி மகுடத்தின் பிரகாசத்தைக் கூட்டினார். காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக ஜோடி ஜோஷ்னா சின்னப்பா-தீபிகா பள்ளிக்கல் தங்கம் வென்று வரலாறு படைத்தனர்.
காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார். ஓபன் மற்றும் வேர்ட்ல்டு டூர் பைனலில் பெண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான்.
பாட்மிண்டன் அரங்கிலும் இந்தியாவின் கொடி உயரப் பறந்தது. சாய்னா நேவால், பி.வி. சிந்து இருவரும் குறிப்பிடத்தகுந்த அளவில் பதக்கங்ளைக் குவித்தனர்.
சளைக்காத சரிதா
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவரின் ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, தனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். சரிதாவின் அதிரடி முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான சரிதாவின் முடிவு, தவறிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.
*************
லக அளவில் பல துறைகளிலும் பெண்கள் தடம்பதித்தனர். மேரி பாரா, உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமைச் செயல் அலுவலராகப் (சி.இ.ஓ.) பொறுப்பேற்றார். சர்வதேச கார் நிறுவனத்தின் தலைமைப் பதவி வகிக்கும் முதல் பெண் இவர். அதுவும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கு தலைமைப் பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல. பல போராட்டங்களைத் தாண்டியே மேரிக்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
அவளுக்காக அவன்
ஹாலிவுட் மாயாஜால படமான ஹாரிபாட்டரில் ஒன்பது வயதில் அறிமுகமான எம்மா வாட்சன் இன்று இளம் நடிகையாக மட்டுமல்ல, ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராகவும் அறியப்படுகிறார். ‘அவளுக்கான அவன்’ என்ற பரப்புரையைத் தொடங்கிய எம்மா, ‘பெண்ணியம் என்பது பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல. பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுப்பது’ என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் கவனத்தை எம்மா மீண்டும் தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.
வலைத்தள வெற்றி
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஷெரில் காரா சாண்ட்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரியாகக் (C.O.O) கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே பேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராகவும் ஷெரில் பதவி வகித்திருக்கிறார். போட்டி நிறைந்த சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் வெளிப்படுகிறது ஷெரில் காராவின் திறமை.
உலகம் மலாலா
தலிபான்களுக்கு எதிராக எழுத்தையும் கல்வியையும் உயர்த்திப் பிடித்த மலாலா, நோபல் பரிசுக்காகக் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொதுமக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜாத்’ எனும் தைரியமான பெண் விருது பெற்ற பெருமையும் மலாலாவுக்கு உண்டு. மலாலா கடந்துவந்த எத்தனையோ விருதுகளுக்கு மகுடம் சூட்டும்விதமாகத் தற்போது கிடைத்திருக்கும் நோபல் பரிசை, பெண் கல்விக்கும் பெண்ணுரிமைகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாம்

Layoff - India

முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில் 25,000 மூத்த வல்லுனர்கள் பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ். நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், மென்பொருள் நிறுவனங்களில் கட்டாய பணிநீக்கம் விவகாரத்தை வேடிக்கப் பார்க்கமால், அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்திய மற்றும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் மூத்த பணியாளர்களை கட்டாய பணிநீக்கம் செய்து வெளியேற்றி வருகின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காமல் மென்பொருள் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். (Tata Consultancy Services) தான் அதிக எண்ணிக்கையிலான வல்லுனர்களை வேலைநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மொத்தம் 25,000 வல்லுனர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை வெளியேற்றி விட்டது. மீதமுள்ளவர்களை அடுத்த மாத இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப டி.சி.எஸ். முடிவு செய்திருக்கிறது.
அதேபோல், ஐ.பி.எம். நிறுவனம் இந்தியாவில் 2500 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்களை வெளியில் தெரியாமல் வேலைநீக்கம் செய்து வருகின்றன.
வேலை நீக்கப்படும் பொறியாளர்கள் அனைவரும் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இடைநிலை மற்றும் முதுநிலை பொறுப்புகளில் இருப்பவர்கள். மென்பொருள் நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதாலும், குறைந்த ஊதியம் பெறத் தயாராக உள்ள இளைஞர்களை\ தான் மென்பொருள் நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் என்பதாலும் இவர்கள் பணி நீக்கப்பட்டால் வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது கடினம். 30 வயதைக் கடந்து ஏராளமான குடும்பப் பொறுப்புகளுடனும், பொருளாதார சுமைகளுடனும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் திடீரென பணிநீக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலம் நரகமாகிவிடும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
பணியாளர்களை பணியில் அமர்த்தும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதைப் போலவே, பணியிலிருந்து ஒருவரை நீக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உள்ளன. அதேபோல், ஒருவரை பணியிலிருந்து நீக்கவும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், எந்த காரணமும் இல்லாமல், எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் ஒரு மணி நேர இடைவெளியில் வேலையை விட்டு வெளியில் போகும்படி ஆணையிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத டி.சி.எஸ். நிர்வாகம், "இவையெல்லாம் சாதாரணம்; சில நேரங்களில் கட்டாய வேலை நீக்கம் செய்து தான் ஆக வேண்டும். ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை" என்று கருத்து தெரிவித்திருக்கிறது.
இதில் இருந்தே அந்த நிறுவனம் எவ்வளவு திமிரான அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்பதை அறிய முடியும்.
அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்; அவர்களை நீக்கி விட்டால் அவர்கள் ஒருவருக்கு தரும் ஊதியத்தில் இருவரை பணியில் அமர்த்திக்கொள்ள முடியும் என்ற முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில் தான் 25,000 மூத்த வல்லுனர்களை டி.சி.எஸ். பணிநீக்கம் செய்து வருகிறது.
அதேநேரத்தில், 55,000 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்பதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை அனுமதிக்கக்கூடாது.
திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை இழந்தனர். பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டதால் 2,000 பேர் வேலை இழந்துள்ளனர். இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், அதைவிட பெரிய துரோகத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செய்ய முடியாது.
மென்பொருள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
எனவே, மென்பொருள் நிறுவன தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளும் தலையிட்டு இந்த அநீதியை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

வியாழன், 1 ஜனவரி, 2015

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.
காத்திருக்க முடியுமா?
அப்படியென்றால், மொத்தம் 85 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலை இல்லாமல்தானே கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள்? (இதில் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரங்கள் வேறு). ஏதோ கண்துடைப்பு வேலையாக ஊர், பேர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களிலெல்லாம் வேலைக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டு, பின்னர் ‘எங்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று கைவிரிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது.
சரி, கல்லூரிகளையும் பாடத்திட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய ‘அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம்’ என்ன சொல்கிறது? “கவலைப் படாதீர்கள், தரமற்ற கல்லூரிகளையெல்லாம் காலப் போக்கில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் அவர்களே மூடிவிடுவார்கள். தரமான கல்வியைக் கொடுக்கும் நல்ல கல்லூரிகள் மட்டுமே நிலைக்கும். அதுவரைக்கும் சற்றுப் பொறுமையாகக் காத்திருங்கள்” என்கிறது.
இளைஞர்களின் கதி என்ன?
ஏதோ நினைத்த மாத்திரத்தில் திறந்து மூடும் சாலையோர உணவகங்கள்போல, அவர்களே மூடிவிடு வார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து உழைத்த பெற்றோரின் உழைப்பினால் வந்த காசைக் கொடுத்து, தங்கள் இளம் பருவத்தைத் தொலைத்து, எந்தத் திறமையும் அறிவும் இல்லாமல் பட்டம் பெற்று வெளியில் வந்து வேலை கிடைக்காமல் தெருவில் நிற்கும் இளைஞர்களின் கதி என்ன? வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்?
2013-ல் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களில் பலர் முதல் செமஸ்டர் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சித் தகவல். 12-ம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்றவர்கள், கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது பேரதிர்ச்சி.
பள்ளிகளை விட்டுக் கல்லூரிக்கு வந்தால் அங்கும் அதே கதைதான். பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்களைவிட மாணவர்களை மிகவும் கடுமையாக நடத்துகின்றன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பல்கலைக்கழக ரேங்க். எப்படியாவது செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் முதல் ரேங்க் பெற்றுவிட வேண்டும், கல்லூரி வாசலில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும். இதுதான் பிரதானக் குறிக்கோள்.

ஹெர்மன் போர்ஹாவே

ஐரோப்பாவின் தலைசிறந்த மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்வித் தந்தையாகப் போற்றப்பட்ட ஹெர்மன் போர்ஹாவே பிறந்த நாள் இன்று (டிசம்பர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 ஹாலந்தில் பிறந்தவர். அப்பா மதபோதகர். பள்ளிப் படிப்போடு பல மொழிகளையும் கற்றார். அறிவுக் கூர்மையால் 3 ஆண்டு உயர் கல்வியை ஒன்றரை ஆண்டுகளிலேயே முடித்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
 தத்துவம், கணிதம், இறையியல், வேதியியல், தாவரவியல் பயின்றார். உடலில் இருந்து மனம் வேறுபட்டிருப்பது குறித்து விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைக்காக 22-வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றார். இறையியலிலும் டாக்டர் பட்டம் பெற்றார்.
 உடலுக்கு மட்டுமல்லாது, ஆன்மாவுக்குமான மருத்துவராக சேவையாற்றும் இலக்கைக் கொண்டிருந்தார். லேடன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார். தலைசிறந்த ஆசிரியராக போற்றப்பட்டார்.
 மாணவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மாணவர்களை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுக் கும் முறையை அறிமுகப்படுத்தியது இவர்தான்.
 மருத்துவத் தகவல்களை முறையாகத் தொகுத்து வைத்ததில் இவரது பங்கு மகத்தானது. மாணவர்களும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் நோய்க்கான காரணங்களை ஆய்வு செய்து, அதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆலோசனை நடத்தும் கிளினிக்கோ-பாதலாஜிகல் கான்ஃபரன்ஸ் என்ற நடைமுறையை தொடங்கிவைத்தார்.
 தற்போதைய மருத்துவக் கல்விக்கு அடித்தளமான நவீன மருத்துவ போதனை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். ரஷ்யப் பேரரசர் பீட்டர், வால்டயர் ஆகியோர் இவரைச் சந்திக்க ஹாலந்து சென்றது இவரது திறமைக்கான அங்கீகாரம்.
 ஹாலந்து ரூபாய் நோட்டுகளில் இவரது உருவம் பொறிக்கப்பட்டது. லேடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2 முறை நியமிக்கப்பட்டார்.
 பல மருத்துவப் பாடப் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் எடுத்துக்கொண்ட குறிப்புகள் தொகுக்கப்பட்டு பல மருத்துவ நூல்களாக வெளிவந்துள்ளன.
 உணவுக்குழாய் பாதிப்பால் உயிரிழந்த ஒரு நோயாளியின் உடலைப் பரிசோதனை செய்த இவர், நோய் பாதிப்பு குறித்தும் அதற்கான காரணங்களையும் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தினார். இந்த பாதிப்பு இவர் பெயராலேயே ‘போர்ஹாவ் சிண்ட்ரோம்’ என இன்றும் குறிப்பிடப்படுகிறது.
 மருத்துவ வழிமுறைகளைவிட நோயாளிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். 18-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மருத்துவ மேதையாக, மருத்துவ ஆசிரியராக போற்றப்பட்ட ஹெர்மன் போர்ஹாவே 70-வது வயதில் மறைந்தார்.

நாஸ்ட்ரடாமஸ்

வரலாற்று முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
* பிரான்ஸ் நாட்டில் யூத வம்சாவளி தம்பதிக்குப் பிறந்தவர். பிறகு தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார். 15 வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
* இலக்கணம், பேச்சுத் திறன், தர்க்கம், கணிதம், இசை, ஜோதிடக்கலை ஆகியவற்றைக் கற்றார். அப்பகுதியில் கொள்ளை நோய் பரவியதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால், படிப்பு பாதியில் நின்றது.
* 1521 முதல் 8 ஆண்டுகளுக்கு கிராமங்களில் மூலிகை சிகிச்சை ஆராய்ச்சி செய்தார். மருந்துகளைத் தயாரித்து விற்றார். சில ஆண்டுகள் கழித்து, மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவக் கல்வி பயின்றார். இவர் மூலிகை வைத்தியர் என்று தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டார்.
* மூலிகை ஆராய்ச்சி மற்றும் மருந்து தயாரிப்பை மீண்டும் தொடங்கினார். இவரது ‘ரோஜா மாத்திரை’ பிளேக் நோய் வராமல் தடுத்ததாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டதால், பிரபலமானார்.
* பிளேக் வராமல் பலரைக் காப்பாற்றிய அவரால், தன் குடும்பத்தை அதில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இதில் விரக்தி அடைந்தவர் நாடோடியாகத் திரிந்தார்.
lஒரு பாதிரியாரிடம் சீடராகச் சேர்ந்தார். அப்போது இவரது மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. வெகுநேரம் வானத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். எதிர்காலக் கணிப்புத் திறன் வசப்பட ஆரம்பித்தது. இவர் சொன்னதெல்லாம் நடந்தது. புகழ் பரவியது. கூடவே பிரச்சினைகளும் எழுந்தன.
* இவரது கணிப்புகள், சாத்தானின் எச்சரிக்கைகள் என்றது கத்தோலிக்க திருச்சபை. இவர் மீது மதக் குற்றம் சுமத்தப்பட்டதால் தலைமறைவானார். தனது கணிப்புகளை குழப்பமான கவிதை வடிவில் இவர் எழுதியதற்கும் அதுவே காரணம்.
* இவரது கணிப்பு, வழக்கமான ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இதற்கு உதவியாக ஒரு பொறி இயந்திரத்தைப் பயன்படுத்தினார். அதை பார்த்துதான் ‘தி செஞ்சுரீஸ்’ என்ற புகழ்பெற்ற ஆரூட புத்தகத்தை எழுதினார். நாஸ்ட்ரெடாம் என்ற தன் பெயரை 1550-ல் நாஸ்ட்ரடாமஸ் என்று மாற்றிக்கொண்டார். பல பதிப்புகளாக வெளிவந்த இவரது புத்தகங்களில் 6,338 தீர்க்க தரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.
* பல ஜோதிட நூல்களை எழுதியுள்ளார். ‘லெஸ் புராஃபடீஸ்’ என்ற முக்கியமான நூலின் முதல் பதிப்பு 1555-ல் வெளியானது. அவரது மறைவுக்குப் பிறகு, புத்தகம் ஸ்டாக் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தொடர்ந்து பிரின்ட் செய்யப்பட்டது.
* லண்டனின் மாபெரும் தீ விபத்து, நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரின் எழுச்சி, இரண்டு உலகப் போர்கள், ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு பேரழிவு, அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே குறிப்புகளாகத் தெரிவித்திருக்கிறார். மாபெரும் தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் 63-வது வயதில் மறைந்தார்