வெள்ளி, 20 மார்ச், 2015

பொதுச் சார்பியல் கோட்பாடு - ஐன்ஸ்டைன்

பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்த 100-வது ஆண்டும் பிரசுரித்த 99-வது ஆண்டும் இதுதான்
‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ எனும் அற்புதமான கட்டமைப்பில் முதல் தடவையாக ஒரு சிறு பிழையைக்கூட ஒருவர் கண்டறியலாம்.
அறிவியல் வரலாற்றில் பொதுச் சார்பியல் கோட்பாடு அளவுக்குக் கொண்டாடப்பட்ட, வழிபடப்பட்ட கோட்பாடு ஏதும் இல்லைதான். ஆனாலும், அந்தக் கோட்பாடு தவறானது என்று நிரூபிக்கப்படுமானால், குதூகலத்தில் துள்ளிக் குதிப்பவர்களும் அதே இயற்பியலாளர்கள்தான். விசித்திரமாக இருக்கிறதல்லவா? அதுதான் அறிவியல்! பிரமாதமான கருதுகோள் ஒன்றை முன்வைப்பதும், அதற்குப் பிறகு அதை விடாமல் இறுதிவரை பரிசோதித்துப் பார்ப்பதும்தான் அறிவியல்.
முரண்டுபிடிக்கும் 2 நண்பர்கள்
பிழைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தை அவநம்பிக்கையாகவோ, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற குரூரமான எண்ணமாகவோ கருதிவிட முடியாது. ஈர்ப்புவிசையைப் பற்றி ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ சொன்னதை இயற்பியலாளர்கள் யாரும் வேத வாக்கியமாகக் கருதவில்லை என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. அதற்குக் காரணமும் இருக்கிறது. விண்மீன்கள், விண்மீன் திரள் போன்ற பிரம்மாண்டமான அளவில் துல்லியமாகப் பொருத்திப் பார்க்கக்கூடிய இந்தக் கோட்பாடு, குவாண்டம் கோட்பாட்டுடன் மட்டும் இயைந்துபோக மாட்டேன் என்கிறது. பொதுச் சார்பியல் கோட்பாட்டைப் போலவே குவாண்டம் கோட்பாடும் நவீன இயற்பியலின் மற்றொரு பெரும் தூண். பொதுச் சார்பியல் கோட்பாடு, பிரம்மாண்டமானவற்றுக்கானது என்றால், குவாண்டம் கோட்பாடு அணு, அணுத்துகள்கள் போன்ற நுண்மையின் உலகுக்கானது. இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் அடிப்படையாக ‘குவாண்டம் ஈர்ப்புவிசைக் கோட்பாடு’ இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
பொதுச் சார்பியல் கோட்பாடு பிழையாவதற்கு வாய்ப்பிருக்கக் கூடிய ஒரு இடம் பிரபஞ்சத்தின் ஏதாவது மூலை முடுக்கில் இருந்து அதை நாம் கண்டுபிடிப்போம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது ஈர்ப்புவிசையைப் பற்றி விளக்குவதற்குக் கூடுதலாக வேறு என்னதான் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியலாம் என்று இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். அந்தக் கூடுதல் அம்சம் குவாண்டம் ஈர்ப்புவிசைக் கோட்பாடாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
நிறை வளைக்கும் இடம்
பொதுச் சார்பியல் விதி என்பது ஐன்ஸ்டைனின் அற்புதமான கருத்தாக்கங்களில் இறுதியானது மட்டுமல்ல, மிகச் சிறந்ததும் அதுதான். ஐன்ஸ்டைனின் ‘அற்புதங்களின் ஆண்டு’ என்று வழக்கமாக 1905-ம் ஆண்டைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த ஆண்டில்தான் குவாண்டம் கோட்பாட்டுக்கான உந்துவிசையை அவர் கொடுத்தார்; சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். ஒளிவேகத்துக்கு அருகில் பயணம் செய்தால் காலமும் இடமும் சுருங்கும் என்பதை அந்தக் கோட்பாட்டில் அவர் முன்வைத்தார். ஆனால், 1915-ல் முன்வைத்த பொதுச் சார்பியல் கோட்பாட்டின் மூலமாக அவர் இன்னும் விசாலமான ஒரு சித்திரத்தைத் தந்தார். வேகத்தை மாற்றக்கூடிய இயக்கத்தை உள்ளே கொண்டுவந்தார். ஈர்ப்புவிசை செறிந்திருக்கும் ஒரு புலத்தின் வழியே விழும் பொருளொன்றில் ஏற்படும் முடுக்கம் இதுபோன்ற இயக்கத்துக்கு ஓர் உதாரணம். ஒரு நிறையின் காரணமாக காலம், வெளி (இடம்) என்ற ஒருங்கிணைந்த அமைப்பில் ஏற்படும் வளைவுதான் ஈர்ப்புவிசை என்று ஐன்ஸ்டைன் இந்தக் கோட்பாட்டின் மூலம் விளக்கினார். இதுவும் காலத்தை மாற்றியமைக்கிறது: வெறும் வெளியில் ஓடுவதைவிட ஈர்ப்புவிசை வலுவாகச் செறிந்திருக்கும் புலத்தில் கடிகாரம் மெதுவாகவே ஓடுகிறது. காலம் மாறுதலடைகிறது என்ற இந்தக் கூற்று பல தடவை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விண்கலங்களில் துல்லியமான கடிகாரங்களைக் கொண்டு இந்தக் கூற்றை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லப்போனால், ‘புவிநிலை அறிதல் முறை’யில் (ஜிபிஎஸ்) நேரத்தை இந்த மாற்றத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சாப்ளினும் ஐன்ஸ்டைனும்!
பிரஷ்யன் அறிவியல் மன்றத்தின் முன்னே 1915-ல் நவம்பர் மாதத்தில் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டை முன்வைத்தார். எனினும், அந்தக் கோட்பாடு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது 1916, மார்ச்-20 அன்றுதான். ஈர்ப்புவிசை வலுவாகச் செறிந்திருக்கும் புலங்களில் ஒளியானது வளையும் என்றும் அந்தக் கோட்பாடு சொன்னது. பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் ஆர்தர் எடிங்டன் 1919-ம் ஆண்டு இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தினார். பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்குப் பின்னால் அமைந்திருக்கும் விண்மீன்களின் ஸ்தானங்களை சூரிய கிரகணத்தின்போது ஆய்வுசெய்து ஒளி வளையும் என்ற கணிப்பை எடிங்டன் உறுதிப்படுத்தினார். (படிக்க: கீழே உள்ள 'ஐன்ஸ்டைனைக் கடவுளாக்கிய 1919-ம் ஆண்டு  ') இந்தக் கண்டுபிடிப்புதான் சர்வதேச அளவில் ஐன்ஸ்டைனின் புகழை உறுதிப்படுத்தியது. 1931-ல் சார்லி சாப்ளினை ஐன்ஸ்டைன் சந்தித்தபோது தமாஷாக சாப்ளின் இப்படிக் குறிப்பிட்டதாகச் சொல்வார்கள்: “பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் நம் இருவரையும் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்றார்கள். எல்லோருக்கும் புரியும் என்பது நான் பிரபலமானதற்குக் காரணம்; யாருக்குமே புரியாதவர் என்பது நீங்கள் பிரபலமானதுக்குக் காரணம். நமக்குக் கிடைத்த இந்த வரவேற்புக்கு இதுதான் காரணம்.”
10,00,000,00,00,000 கிலோ
எரிபொருள் தீர்ந்து அணையும் நிலையில் இருக்கும் விண்மீன்கள் தங்கள் ஈர்ப்புவிசையாலேயே குலைந்துபோகக் கூடும் என்று பொதுச் சார்பியல் கோட்பாடு கணித்தது. அந்த விண்மீன்கள் மிகமிக அதிகமான அடர்த்தியையும் ஒருசில மைல்கள் மட்டுமே விட்டத்தையும் கொண்டிருக்கும். அந்த விண்மீன்களில் ஒரு தேக்கரண்டி அளவு வெட்டி எடுத்து நிறுத்துப்பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அது 10,00,000,00,00,000 கிலோ நிறை கொண்டதாக இருக்கும். அப்படியென்றால், அது எவ்வளவு அடர்த்தியோடு இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். இப்படிப்பட்டவற்றுக்கு நியூட்ரான் விண்மீன்கள் என்று பெயர். நியூட்ரான் விண்மீன்களாக ஆகவில்லை என்றால், அவை ‘ஒருமைக்கணத்தை’ (Singularity) எட்டிவிடும். அதாவது, ஒளியைக்கூடத் தப்பவிடாத அளவுக்கு ஈர்ப்புவிசையைக் கொண்டிருக்கும் கருந்துளைகளாக அந்த விண்மீன்கள் மாறிவிடும் என்று இதற்கு அர்த்தம். கருந்துளையைச் சுற்றியுள்ள வெளி மிகவும் வளைந்து இருப்பதால்தான் விடுபட முடியாத வகையில் ஒளியும் வளைந்துகொள்கிறது.
பல்சார், கருந்துளைகள்…
வானியல் வல்லுநர்கள் நிறைய நியூட்ரான் விண்மீன்களைக் கண்டிருக்கிறார்கள். இவற்றில் சிலவற்றுக்கு பல்சார் என்று பெயர். இவை சுழன்றுகொண்டே இருப்பவை; தங்கள் காந்தத் துருவங்களிலிருந்து வலுமிக்க மின்காந்த அலைக் கற்றைகளை வெளியிடக் கூடியவை; இந்த அலைக் கற்றைகள் சீரான இடைவெளியில் மினுங்கக்கூடியவை. கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. கருந்துளைகளைச் சுற்றி அளவுக்கதிகமான வெப்பவாயு சூழந்திருக்கும். இந்த வாயுக்களைக் கருந்துளைகள் கபளீகரம் செய்துவிடும். சூழ்ந்திருக்கும் இந்த வெப்பவாயுக்கள் வெளியிடும் ஊடுகதிர்களையும் (எக்ஸ்-ரே), பிற கதிர்வீச்சுக்களையும் கொண்டுதான் கருந்துளை இருப்பதை மறைமுகமான வழியில் கண்டறிய முடியும். இப்படிச் சுற்றிவளைத்துத்தான் கருந்துளைகளைக் கண்டறிய முடியும் என்றாலும், வானியற்பியலாளர்கள் அவை இருப்பது உறுதி என்றே நம்புகிறார்கள்.
சூரியக் குடும்பத்தின் இயக்கங்கள்குறித்து விளக்குவதற்குப் பெரும்பாலும் நியூட்டனின் ‘ஈர்ப்புவிசைக் கோட்பாடே’ போதுமானது. ஆனால், பல்சார்கள், கருந்துளைகள் போன்ற அதீத அடர்த்தி கொண்டவற்றைப் பற்றி விளக்குவதற்கு ஐன்ஸ்டைனின் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ இல்லாமல் முடியாது. அவற்றைக் கொண்டுதான் இந்தக் கோட்பாட்டின் எல்லைகள் எவை என்ற வானியல் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
கண்ணாமூச்சி காட்டும் ஈர்ப்பலைகள்
பொதுச் சார்பியல் கோட்பாடுகுறித்த உச்சபட்ச சோதனைகளுள் ஒன்றுதான் ஈர்ப்பலைகள்குறித்த தேடல். ஏனென்றால், பெருநட்சத்திர வெடிப்பு (சூப்பர்நோவா), பல்சார்களை விண்மீன்கள் சுற்றிவருதல் போன்ற வானியற்பியல் நிகழ்வுகள் கால-வெளியில் (கால-வெளி = காலமும் வெளியும் பிணைந்திருக்கும் நிலை) அலைகளை உருவாக்கும் என்றும், அந்த அலைகள் விரிந்துகொண்டே செல்லும் என்றும் பொதுச் சார்பியல் கோட்பாடு கணித்திருக்கிறது. அதனால், ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிப்பது என்பது பொதுச் சார்பியல் கோட்பாட்டின் நிரூபணத்துக்கு மிகவும் அவசியமாகிறது.
ஈர்ப்பலைகள் உணர்மானிகளைக் கொண்டு இதுபோன்ற ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அமெரிக்காவின் லிகோ, ஐரோப்பாவின் விர்கோ ஆகிய இரண்டு ஈர்ப்பலைகள் உணர்மானிகளின் உணர்திறன் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கிறது. புவியைக் கடந்துசெல்லக் கூடிய ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டையை இந்த இரண்டு உணர்மானிகளும் தொடங்கும். அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய விண்வெளி மையம் விண்வெளியில் ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிப்பதற்காக லிஸா பாத்ஃபைண்டர் என்ற விண்வெளித் துழாவியை (ஸ்பேஸ் புரொப்) இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்புகிறது.
அழகானது; எளிமையானது
நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பொதுச் சார்பியல் கோட்பாட்டின் மேன்மைகளும் போதாமைகளும் எவையென்று இந்த ஆண்டில் அறிந்துகொள்ளலாம். எதுவாக இருந்தாலும், இந்தக் கோட்பாட்டின் மேல் உள்ள மரியாதை சற்றும் குறைந்துவிடப்போவதில்லை. “இருக்கும் கோட்பாடுகளிலேயே மிகவும் அழகானது இதுதான்!” என்று ஆஸ்திரிய-ஸ்விஸ் இயற்பியலாளர் வூல்ஃப்கேங் பவுலி இந்தக் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார். பெரும்பாலான இயற்பியலாளர்கள் (ஐன்ஸ்டைன் உட்பட) இந்தக் கோட்பாட்டை நம்பியதற்குக் காரணம், பல்வேறு ஆய்வுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல, அந்தக் கோட்பாடு மிகவும் அழகானது, எளிமையானது என்று அவர்கள் கருதியதால்தான்.
- ஃபிலிப் பால், அறிவியல் எழுத்தாளர், ‘நேச்சர்’ இதழின் முன்னாள் ஆசிரியர்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ - | சுருக்கமாகத் தமிழில்: ஆசை |
ஐன்ஸ்டைனைக் கடவுளாக்கிய 1919-ம் ஆண்டு 
‘மிகவும் அதிகமான நிறையைக் கடக்கும்போது ஒளி வளையும்’ முதலான கணிப்புகளுடன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை 1915-ல் ஐன்ஸ்டைன் முன்வைத்தார். எனினும் அந்தக் கோட்பாடு உறுதியாக நிரூபிக்கப்பட்டது 1919-ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போதுதான்.
ஐன்ஸ்டைனின் இந்தக் கணிப்பு சரியானதா என்பதை நிரூபிக்க 1917-ல் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் சர் ஃபிராங்க் வாட்சன் டைசன் ஒரு யோசனையை முன்வைத்தார். 1919-ம் ஆண்டில் மே மாதம் 29-ல் முழுமையான சூரிய கிரகணம் நிகழவிருந்தது. அந்தக் கிரகணத்தின்போது சூரியன், ஹயாடெஸ் விண்மீன் கொத்தை (அதாவது ஹயாடெஸ் விண்மீன் கொத்துக்கும் பூமிக்கும் இடையே) கடந்துசெல்லும் என்று கணிக்கப்பட்டது. சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தை அந்த விண்மீன் கொத்தின் ஒளி கடந்துசெல்லும்போது கிரகணத்தின் காரணமாக அந்த விண்மீன் ஒளி நமக்குப் புலனாகும்; சூரியனின் ஈர்ப்புப் புலத்தைக் கடக்கும்போது ஒளியின் பாதையில் ஏதாவது விலகல் தென்படுகிறதா என்பதைக் கண்டறியலாம் என்றும் யோசனை கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1919-ல் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் எடிங்டன் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது. கிரகணத்துக்கு முன்னதாக 1919-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஹயாடெஸ் விண்மீன்கள் அண்டவெளியில் அமைந்திருக்கும் உண்மையான ஸ்தானங்கள் குறித்துக்கொள்ளப்பட்டன. ஹயாடெஸ் விண்மீன்களின் ஒளி பூமியை நோக்கி வரும் பாதைக்கு அருகே சூரியன் இல்லாத சமயம், அந்த ஒளியில் விலகல் இருக்காது என்பதால் ஒப்பீட்டுக்காக அந்த விண்மீன்களின் உண்மையான ஸ்தானங்களைக் குறித்துவைத்துக்கொண்டார்கள்.
ஐன்ஸ்டைனின் கணிப்பு உண்மையாக இருந்தால், அந்த சூரிய கிரகணத்தின்போது விண்மீன்களின் ஒளி சூரியனைக் கடக்கும் தருணத்தில் விலகல் இருக்குமல்லவா, அதையும் குறித்துக்கொண்டு இரண்டு அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடுமல்லவா? அதுதான் திட்டம்! (முழுமையான சூரிய கிரகணத்தின்போது நிலா மறைப்பதால் சூரியன் நமக்குத் தெரியாதே தவிர, சூரியன் அந்த இடத்தில்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்).
ஹயாடெஸ் விண்மீன் கொத்து, சூரியன், பூமி இந்தக் கோட்டில் கிரகண நிகழ்வின்போது ஒளிவிலகல் ஏற்படும் என்றால், அதைத் தெளிவாகப் பார்க்கக் கூடிய இடமாக மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையை ஒட்டி இருக்கும் பிரின்சிபி தீவைத் தேர்ந்தெடுத்து, தகுந்த உபகரணங் களோடு எடிங்டன் அங்கே பயணமானார். ஆய்வில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்காக வேறொரு குழுவை பிரேசிலின் சோப்ராலுக்கு எடிங்டன் அனுப்பினார்.
நல்லவேளையாக, தடங்கல் இல்லாமல் சூரிய கிரகணத் தின்போது ஆய்வை மேற்கொண்டு தன் அவதானங்களை எடிங்டன் பதிவுசெய்தார். லண்டனுக்குத் திரும்பியவுடன் அவரது அவதானங்கள் பரிசோதிக்கப்பட்டன. சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தைக் கடக்கும்போது ஒளி மிகச் சிறு அளவில் வளைகிறது என்பது உறுதியானது. நவம்பர் 6, 1919 அன்று தனது ஆய்வின் முடிவை எடிங்டன் உலகத்துக்கு அறிவித்தார். அப்புறமென்ன, மறு நாள் உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. ஒரு புதிய கடவுளும் உலகத்துக்குக் கிடைத்துவிட்டார். அவர் பெயர் ஐன்ஸ்டைன்!
- ஆசை
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

வியாழன், 19 மார்ச், 2015

ரேஷன் இணையதளம் மூலம் சாத்தியம்

http://www.consumer.tn.gov.in/fairprice.htm என்ற வலைத்தள முகவரிக்குச் சென்று பக்கத்தில் நோ யுவர் ஷாப் அலாட்மெண்ட் (Know your shop allotment), நோ த கரண்ட் ஸ்டாக் இன் யுவர் ஷாப் (Know the current stock in your shop) போன்றவற்றில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், அதே இணையதளத்தில் இருந்தே புகார் செய்யும் வசதியும் உள்ளது. அல்லது அந்த பகுதிக்குரிய உயர் அதிகாரிகளின் தொடர்பு எண்ணை இணையம் வழியாகத் தெரிந்து கொண்டு புகார் செய்யலாம்.
பேஸ்புக் உள்ளிட்ட விஷயங்களுக்காக இன்டர்நெட்டை தாராளமாகப் பயன்படுத்தும் நாம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஏழைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விஷயத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து ஒரு இளைஞன் கிளம்பினால் போதும், ரேஷன் கடை முறைகேடுகளை முற்றிலும் தடுத்து விடலாம் என்றார்..

மங்கள்யான்’ விண்கலம் - விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்

அண்மையில் திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா நடந்தது. அதில் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் பற்றிய அரிய தகவல்களை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் குதூகலமாகப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், பொதுவாகப் பூமியில் இருந்து மேல் நோக்கி ஒரு பொருளை 200 கிமீ.தூரத்துக்கு நொடிக்கு 6.5 கிமீ.வேகத்தில் செலுத்தினால் அது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கும். இதுபோலதான், செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. இந்த வேகத்தில் விமானத்தில் சென்றால் டெல்லியிலிருந்து திண்டுக்கல்லுக்கு நான்கு நிமிடங்களில் வந்துவிடலாம். ஒரு மணி நேரத்தில் 25ஆயிரம் கிமீ தூரம் செல்லலாம்.
நொடிக்கு 11.5 கி.மீ வேகத்தில் மேல்நோக்கிச் சென்றால் புவியின் சுற்றுப்பாதையைக் கடந்து அடுத்த கோளின் சுற்றுப்பாதைக்குச் செல்ல முடியும். இந்தவகையில்தான், மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மங்கள்யானை அனுப்பும் திறன் கொண்ட ராக்கெட் இந்தியாவில் இல்லை. எனவே பி.எஸ்.எல்.வி.ராக்கெட் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இது உலகின் ராக்கெட் திறன் வரிசையில் நடுத்தரத்தில் உள்ளது. அப்படி உள்ள ராக்கெட் எப்படி நொடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் சென்று புவிச்சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் சுற்றுப்பாதைக்கு மங்கள்யானை அனுப்பியது. இதற்காக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட தந்திரம் அபாரமானது.
ஒரு கல்லை நேரடியாக எறிவதால் கிடைக்கும் உந்துசக்தியைவிடக் கயிற்றில் கட்டி பலமுறை சுற்றி பின் விடுவித்தால் கூடுதல் சக்தியுடன் அது இலக்கை நோக்கிச் செல்லும். இந்தத் தந்திரத்தையே விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். பிஎஸ்எல்வி.ராக்கெட் மூலம் புவியை ஆறுமுறை சுற்றி பின்பு மங்கள்யானை செவ்வாய் கிரக வட்டப்பாதையை நோக்கி விடுவித்தது. விஞ்ஞானிகளின் இந்த சாதுர்யம் உலக அறிவியலாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்று பெருமிதப்பட்டார்.
செவ்வாயை நோக்கி என்றால்..
அவர் மேலும் “செவ்வாயை நோக்கி மங்கள்யானை எப்படி அனுப்புவது?” என்று அவர் மாணவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கினார்.
சூரியச் சுற்றுப்பாதையில் செவ்வாய் சுற்றிக் கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கும். அந்தச் சுற்றுப்பாதையில் செவ்வாயின் வேகம், எந்த மாதத்தில், நேரத்தில், நொடியில் எந்த இடத்தில் இருக்கும் என்பதைக் கணக்கிட்டுத்தான் மங்கள்யானை நாம் அனுப்பினோம். பறவையைச் சுடுபவர்கள் அது பறந்து வரும் இடத்தில் இருந்து சிறிது முன்னதாக சுடுவதைப்போன்ற நிலைதான் இது. இதற்கு ஏற்ப மங்கள்யானைப் பூமியில் தயார்படுத்தினோம். கடந்த 2013 நவம்பரில் மங்கள்யானை நம்மால் ஏவியிருக்க முடியாவிட்டால் 2016-ல்
தான் அதை அனுப்ப முடியும். அந்தவகையில் செவ்வாயின் சுற்றுப்பாதை அமைந்திருந்தது. மேகம், இடி, மின்னல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் நிர்ணயித்த நேரத்தை விட 10 நாள் தாமதமாகத்தான் மங்கள்யான் புவியைவிட்டுக் கிளம்பியது.
செவ்வாயின் பாதையில்
மங்கள்யான் செவ்வாயை நோக்கிச் செல்லும்போது சூரியக் கதிர்களின் தாக்கத்தால் இலக்கை நோக்கிய அதன்பாதை விலகும். இதையும் கணக்கிட்டே விஞ்ஞானிகள் ஏவுபாதையை வடிவமைத்திருந்தனர். இதற்காக 5 முறை பாதை திருத்தம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் 3 முறை மட்டுமே பாதை திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.
செவ்வாய் கிரகத்துக்கு அருகில் சென்றதும் 36 கி.மீ வேகத்தில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் மங்கள்யான் செவ்வாயில் மோதிச் சிதறிவிடும் என்ற அபாயத்தை விஞ்ஞானிகள் எப்படிச் சமாளித்தனர் என்பதை அவர் விளக்கினார். “அதன் வேகத்தை எப்படிக் குறைப்பது? பைக் என்றால் பிரேக் பிடிக்கலாம். முதல் கட்டமாக அதன் இன்ஜின் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும். புவியில் இருந்து 2 கோடி கி.மீ தூரத்தில் செல்லும் மங்கள்யானின் வேகத்தை எப்படித்தான் குறைப்பது?
இதற்காக மங்கள்யானில் எட்டு குட்டி ராக்கெட்டுகளைப் பொருத்தியிருந்தோம். மங்கள்யானின் எதிர்திசையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ராக்கெட்டுகள் நிர்ணயித்த நேரத்தில் இயங்க, சென்று கொண்டிருந்த வேகத்துக்கு எதிராக அந்த ராக்கெட்டுகளின் உந்து சக்தி செயல்பட மங்கள்யானின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. செவ்வாய் கிரகத்தில் இருந்து 250 கி.மீ தூரத்தில் இந்தக் குட்டி ராக்கெட்டுகள் செயல்பட்டால்தான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் மிகச் சரியாக மங்கள்யான் பொருந்தும். மிக மிக நுட்பமாக நிர்ணயித்த மைக்ரோ செகண்ட் நேரத்தில் அவை செயல்பட்டன.” என்றார் அவர்.
கணினி மூலம் கட்டளை
அவர் மேலும் பேசுகையில் “ கார் பொம்மையை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போல மங்கள்யானை இயக்க முடியாது. ரேடியோ சிக்னலில் மங்கள்யானைத் தொடர்பு கொண்டால் 12 நிமிடத்தில் அது போய்ச்சேரும். அங்கிருந்து கிடைக்கும் பதில் திரும்ப வர 12 நிமிடம் ஆகும். அவ்வளவு தாமதமானால் மைக்ரோ செகண்ட் நேரத்தில் கட்டளைகளைப் பிறப்பித்து மங்கள்யானை வழிநடத்த முடியாது. இவற்றை எல்லாம் முன்னரே கணக்கிட்டுக் கணினி மூலம் கட்டளைகளாகப் பதிவு செய்து மங்கள்யானுக்குள்ளேயே வைத்திருந்தனர்.
இதன்படி வேகம் குறைந்த மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையில் மிகச் சரியாகப் பொருந்தி தானாகவே செவ்வாயை வலம் வரத் தொடங்கியது. செவ்வாயின் குறுகியச் சுற்றுப்பாதை 250 கி.மீ.முதல் 80ஆயிரம் கிமீ.வரையிலான நீள்வட்டத்தைக் கொண்டிருக்கும். இதையும் கணக்கிட்டே
மங்கள்யான் பாந்தமாக அதன் சுற்றுப்பாதையில் இறங்கியது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலன்கள் அனைத்தும் குளோசப் ஷாட் படங்களையே அனுப்பி வருகின்றன. ஆனால் மங்கள்யான் மட்டுமே கோள் முழுமையும் தெரியும் வகையில் லாங்ஷாட் படங்களை எடுக்க முடியும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது” என்றும் தெரிவித்தார்.
தூசுக்கோளம்
பூமியைப் போன்றே செவ்வாயும் அச்சு சாய்ந்த கோளாகும். எனவே பூமியைப்போலவே செவ்வாயில் குளிர், வெப்பம் உண்டு. செவ்வாயைத் தூசுக்கோளம் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்குப் பருவமாற்றத்தால் தூசுப்படலம் செவ்வாயைக் கலங்கடிக்கும். இதை லாங்ஷாட் படங்கள் மூலம் மங்கள்யான் போட்டோ எடுத்துள்ளது. இந்தத் தூசுப்படலத்தை வைத்துச் செவ்வாயின் பருவநிலையையும் எளிதாகக் கணித்து விடலாம். மங்கள்யானைப் பொறுத்த அளவில் முதல்முயற்சியே வெற்றி.
மங்கள்யான் விண்ணில் ஒரு பக்கம் கடுமையான சூரியத் தாக்கத்தையும், மறுபுறம் மைனஸ் 200 டிகிரி குளிரையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதாவது ஒரு கையை பிரிஜ்ஜிக்குள்ளும், மறுகையை தீக்குள்ளும் வைப்பதுபோன்ற நிலை அது. பலமாதங்கள் விண்கலனில் இன்ஜின்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் மீண்டும் திரவ எரிபொருளை இயக்குவதில் பிரச்சினைகள் ஏற்படும். இந்தத் தொழில்நுட்பத்தையும் இந்தியாவே கண்டறிந்திருந்தது. இது போன்ற செயல்பாடுகளால் மங்கள்யானுக்கான செலவு வெகுவாகக் குறைந்தது.” என்றும் அவர் விளக்கினார்.
முயன்றால் எல்லோரும் விஞ்ஞானி ஆகலாம் என்று வெங்கடேஸ்வரன் மாணவர்களை உற்சாகமூட்டினார்.

புதன், 18 மார்ச், 2015

1922 மார்ச் 18: தேசத் தந்தையின் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு

தேசத் தந்தையாக இந்தியர்களால் போற்றப் படும் காந்தி, தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட கதை தெரியுமா? 1922-ல் இதே நாளில் வன்முறையைத் தூண்டி விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் காந்தி.
1919-ல் ரவுலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. ஒரு நபர் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகம் ஏற்பட்டால், விசாரணையின்றி அவரைச் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு அளித்தது. 1919 ஏப்ரல் 13-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையும் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஒத்துழையாமை இயக்கத்தை 1920-ல் காந்தி தொடங்கினார்.
ஆங்கிலேய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கவும், அந்நியப் பொருட்களை வாங்காமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அரசுப் பணியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர்; பிரிட்டிஷ் அரசு அளித்த கவுரவப் பட்டங்களைப் பலர் துறந்தனர். இந்தப் போராட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனினும், கட்சியின் இளைய தலைமுறையினரும், பெருவாரியான இந்தியர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்தியா முழுவதும் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தால், நாடே ஸ்தம்பித்தது. அரசு நிறுவனங்கள் செயலற்றுப் போயின. இதனால், ஆங்கிலேய அரசு கடும் அதிருப்தி அடைந்தது.
அதேசமயம், கோடிக் கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தை காந்தி கைவிட வேண்டிய சூழலும் உருவானது. அதுதான் செளரி செளரா சம்பவம். ஐக்கிய மாகாணத்தின் (தற்போதைய உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் ஒன்றிணைந்த பிரதேசம்) கோரக்பூர் மாவட்டத்தின் செளரி செளரா நகரில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் சிறைவைக்கப்பட்ட காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தங்களைத் தாக்கவருவதைக் கண்ட போலீஸ்காரர்கள் காவல் நிலையத்துக்குள் போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். ஆர்ப்பாட்டக் காரர்கள் காவல் நிலையத்துக்குத் தீவைத் தார்கள். இதில், 23 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
“கடவுள் என் மீது அளவற்ற கருணை கொண்டிருக்கிறார். மென்மையான, உண்மை யான, பணிவான எண்ணங்களுடன் கூடிய மக்கள் பங்கேற்கும் மகத்தான போராட்டம் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் நம்பகத் தன்மையும், வன்முறையற்ற சூழலும் உருவாகவில்லை என்று கடவுள் என்னை எச்சரித்திருந்தார். இப்போது செளரி செளரா சம்பவத்தின் மூலம், அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்” என்று காந்தி குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்துக்குத் தான்தான் முழுப் பொறுப்பு என்று கருதிய காந்தி, அதற்குப் பிராயச்சித்தமாக 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
எனினும், தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில், 1922 மார்ச் 10-ல் காந்தி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1922-ல் இதே நாளில் காந்தி மீதான குற்றச்சாட்டு உண்மை எனக் கூறி அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, 1924-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

2 G & 3 G

ஸ்பெக்ட்ரம்’ அலைக்கற்றைக்கான பொது ஏலத் தொகை இதுவரை ரூ. 1,02,215 கோடியைத் தாண்டியிருக்கிறது. தொடக்கத்தில் இந்த ஏல இலக்கு ரூ. 82,000 கோடியாக இருந்ததால், இந்த ஏலம் வெற்றி என்பதை மறுக்கவியலாது. எனினும், நுகர்வோரின் நிலையிலிருந்து பார்த்தால், அவர்கள் இந்தச் சேவைகளைப் பெறக் கூடுதல் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அலைக்கற்றைகளைப் பெறுவதற்குத் தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்தால், லாபம் சம்பாதிப்பதற்காக சேவைக் கட்டணத்தை அவை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையென்றால், புதிய அடித்தளக் கட்டமைப்பில் செய்யும் முதலீடுகளை அந்த நிறுவனங்கள் தள்ளிவைக்க வேண்டும் அல்லது ஒரேயடியாகக் கைவிட வேண்டும். இந்தியாவை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் லட்சியத்துக்கு இது ஏற்புடையதாக இருக்காது.
2010-ல் அலைக்கற்றைகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்ததால் தான் 3-ஜி மற்றும் செல்பேசி அகலக் கற்றை சேவையின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. அப்போதும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் கோரப்பட்டது. சேவை அளிப்பவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ஏலத் தொகையை உயர்த்திக்கொண்டே போனார்கள். அப்படிப் பணம் செலவழித்து அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றவர்களால், அடித்தளக் கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்ய முடியாமல் போனதால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் 3-ஜி பிரிவில் நுகர்வோரால் தரமான சேவையை இன்னமும் பெற முடியவில்லை. சராசரி இணைப்பு வேகம் 1.3 எம்.பி.பி.எஸ்-களாகவே (எம்.பி.பி.எஸ். = மெகாபைட் பெர் செகண்ட்) இருக்கிறது. ஆசிய நாடுகளில் இதுதான் மிகமிகக் குறைந்த திறன்!
நாடு முழுக்க 100 அதிநவீன நகரங்களை ஏற்படுத்தும் திட்டம், மின்-ஆளுமைத் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தக் குறைந்தபட்சம் 2 எம்.பி.பி.எஸ். வேகம், அதுவும் நுகர்வோரால் எளிதில் செலுத்தக்கூடிய விலையில் இருக்க வேண்டும். இதற்கு, தொலைத்தொடர்பு சேவை அளிப்பவர்களுக்குப் போதிய அளவு அலைக்கற்றைகள், நியாயமான விலையில் அளிக்கப்பட வேண்டும். முதலில் வந்தவருக்கே முன்னுரிமை, நுகர்வோரை மையமாகக் கொண்ட அணுகுமுறை போன்ற கடந்த கால விற்பனை வழிகளைவிட ஏலமுறை வெளிப்படையானது. ஆனால், அந்த ஏலத்தைப் பிசகான நடைமுறைகளுடன் கையாண்டதற்கான பழியை இப்போதைய மத்திய அரசுதான் ஏற்றாக வேண்டும். 2,100 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை பேண்டில் 5 மெகாஹெர்ட்ஸை மட்டும் ஏலம் விடுவது என்ற முடிவு அப்படிப்பட்டது. 5 மெகாஹெர்ட்ஸ் பிளாக் ஒரு சேவைதாரர் 3ஜி சேவை அளிக்கப் போதுமானது. களத்தில் 8 பேர் இருந்ததால் போட்டிபோட்டு ஏலத்தொகையை ஏற்றிவிட்டனர்.
இந்தியாவை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றால், வருவாயை மட்டும் பார்க்காமல் குறைந்த செலவில் அது அனைவரின் கைகளுக்கும் போய்ச்சேர்வதற்கான வழியைப் பார்க்க வேண்டும். அலைக்கற்றை ஏலம் மூலம் அதிக வருவாய் அரசுக்குக் கிடைக்கும் அதே வேளையில், டிஜிட்டல்மயம் என்ற கனவுக்கு முட்டுக்கட்டை விழுந்துவிடும் போலிருக்கிறது!

செவ்வாய், 17 மார்ச், 2015

http://www.cmi.ac.in/


Story about "Save Trees" - Ancient India

வகுப்பறைக்குள் உட்காராமல் காடு, மலை எனச் சுற்றித்திரிந்து இளைப்பாற ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்தபோதுதான்பிறந்தான் நியூட்டன்.
இப்படித் தொடங்கத் தோன்றுகிறது. வகுப்பறைக்கு உள்ளேதான் முறையான கல்வியைக் கற்பிக்கவும் கற்கவும் முடியும் என நம்பிவந்த கல்வி உலகை உலுக்கியது உளவியல் நிபுணர் கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு. இயற்கை ரீதியான அறிவுத்திறன் கொண்டவரின் மூளை அமைப்பே இயற்கையைக் கொண்டாடும் விதத்தில்தான் அமைந்திருக்கும் என அறிவியல் ரீதியாக விளக்கினார் கார்டனர்.
மூளை செய்யும் வேலை
இயற்கை ரீதியான அறிவுத்திறனாளிகளின் வலது பக்க மூளையின் பண்புகள் இவை
1.திறந்த வெளியில் இருக்கும்போது உற்சாகமான உணர்வை ஏற்படுத்தும்.
2.இயற்கை, மனம், உடல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்க முயலும்.
3.பிராணிகளிடத்தில் அன்பு செலுத்தச் சொல்லும்.
4.சாகசங்களில் ஈடுபடத் தூண்டும்.
5.சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டச் சொல்லும்.
6.மிருக வதை அல்லது சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கண்டால் துடித்தெழச் செய்யும்.
இயற்கை ரீதியான திறனாளிகளின் இடது பக்க மூளையின் பண்புகள் இவை :
1.தகவல்களை அலசி ஆராயும்.
2.புள்ளி விவரங்களைத் துல்லியமாக நினைவில் கொள்ளும்.
3.தகவல்களை வகைப்படுத்த விரும்பும்.
4.சூழலியல், உயிரியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகள் மிகவும் பிடிக்கும்.
கணித அறிவும், இசை ஞானமும்தான் பிறப்பிலேயே வரும் என நம்பிவந்த அறிவுலகை அதிரவைத்த ஆய்வு இது. இந்த ஆய்வை உற்று நோக்கும்போது இன்னும் சில அற்புதமான உண்மைகள் புலப்படுகின்றன. ஆராய்ச்சி கூடத்திலும், ஆய்வுப் புத்தகங்களிலும் மட்டும் மூழ்கிக்கிடந்தால் இயற்கை ரீதியான அறிவுத்திறனை அடைந்துவிட முடியாது. சூழலியலை விரும்பச் சொல்லி ஒருவருடைய மூளையே அவருக்குச் சொல்லும். கணிதம் மற்றும் மொழித் திறனில் சிறந்து விளங்குபவர்களை மட்டுமே மூளைக்காரன், புத்திசாலி, அறிவாளி எனக் கொண்டாடுவது அறிவிலித்தனம்.
மரத்தைக் கட்டிப்பிடி
ஆனால் யதார்த்த உலகில் இதை நிரூபிக்க முடியுமா என நீங்கள் கேட்கலாம். மலைக் காடுகளில் வாழ்ந்து வந்த சித்தர்கள் இயற்கை மருத்துவமான சித்த மருத்துவத்தை எப்படி அருளினார்கள்? நீரோட்டம் பார்க்கும் வழக்கம் நம் சமூகத்தில் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றில்லையா? தோட்டக் காரர்களுக்கும், விவசாயிகளுக்கும் இருப்பது இயற்கை ரீதியான அறிவுத்திறன்தானே! இப்படி எழுதும்போது அடர்ந்த வனத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவம்தான் மனதில் ஒரு படம்போல ஓடுகிறது.
சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக முதல் முறையாக உலகில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது என்றால் அதுதான். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் புதிதாக ஒரு அரண்மனையைக் கேஜர்லி வனப்பகுதியில் கட்டி எழுப்ப முடிவெடுத்தார். அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த ‘பிஷ்ணோய்’ என்ற பூர்வகுடிகள் மன்னரின் ஆணையைக் கேட்டு திடுக்கிட்டனர். தங்கள் உயிரினும் மேலான காட்டு மரங்களைப் படை பலத்தோடு வெட்ட வந்த வீரர்களை வழி மறித்தனர். ஆனால் அவர்களை மீறி மரத்தருகில் வீரர்கள் சென்றனர். அப்போது பழங்குடிகளில் ஒருவரான அம்ரிதா தேவி தன் மூன்று பெண் குழந்தைகளோடு முதலில் இருந்த மரத்தைக் கட்டி அணைத்துக் கொண்டார். மன்னரின் உத்தரவை நிறைவேற்ற நான்கு பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அந்த மரத்தையும் வெட்டித் தள்ளினர் வீரர்கள். ஆனால் உடனிருந்த ஆதிவாசிகள் பின் வாங்கவில்லை.
அத்தனை பேரும் அவர்களால் முடிந்தவரை மரங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். இப்படியே 363 மரங்களையும் அதனைக் கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டித் தள்ளினர். ஒரு கட்டத்தில் “போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்” என்று போர் வீரர்களைத் திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார் மன்னர். 1730-ல் நிகழ்ந்த இந்தத் தியாகச் சம்பவம்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடத்தப்பட்ட முதல் போராட்டம். மரங்களைக் கட்டித் தழுவிய இந்த நிகழ்வு ‘சிப்கோ இயக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இதன் தாக்கம் உலகெங்கும் பரவியது. அதன்பின் இயற்கையைக் காக்க மேலும் பல சிப்கோ இயக்கங்கள் உயிர்த்தெழுந்தன.
கோபமும் அறிவுதான்
தங்கள் வனம் அழிக்கப்படுவதைத் தடுக்க அகிம்சை வழியில் போராடி தங்கள் உயிரை நீத்த அந்தப் பூர்வகுடிகள் இயற்கை மீது கொண்டிருந்த அளவு கடந்த பற்றையும், சுற்றுச் சூழலைக் காக்கும் பொறுப்பையும் இயற்கை ரீதியான அறிவுத்திறன் இல்லை என்ன சொல்லிவிட முடியுமா? காலங்காலமாக உணர்வும், அறிவும் எதிர் எதிரானவை எனச் சொல்லப்படுகிறது. ஒருவர் உணர்ச்சிவசப்படும்போது அறிவை இழக்கிறார் என்று நினைக்கிறோம்.
ஆனால் அத்தகைய வேறுபாட்டைக் களைந்து எறிகிறது இயற்கை ரீதியான அறிவுத்திறன். அறிவின் பிறப்பிடமான மூளையின் ஒரு பகுதி சுற்றுச்சூழல் அழிவைக் கண்டால் துடித்தெழச் சொல்லும்போது அது அறிவு இன்றி வேறென்ன? கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூறியதைப் போல, “கோபம் கொள்ளுவது சுலபம்தான். ஆனால் சரியான காரணத்துக்காக, நியாயமான வழியில், சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான நபரிடம் கோபம் கொள்வது எளிதல்ல”. தார்மிகக் கோபம் என்பதும் அறிவுதான்.