செவ்வாய், 16 ஜூன், 2015

mentors

புராண காலத்தில் குருநாதர் துரோணாச்சாரியாரின் சிலையை மானசீகமாக நினைத்து வில்வித்தை பயின்றான் ஏகலைவன். குருகுல கல்வி முடிந்து பாடசாலைக் கல்வி வந்துவிட்டது. நவீன காலத்தில் கணினி மூலமான படிப்பு சாத்தியமாகிவிட்டது.
இருந்தாலும் தொழில்துறையில் ஆலோசகர், வழிகாட்டி, குரு என எவராவது ஒருவர் இருந்துகொண்டேதான் இருக்கிறார். மென்டார் என்னும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் `குரு’ என்பதுதான் சாலப் பொருத்தம். தொழில்துறை முன்னோடிகளின் குரு யார் என்பதைப் பார்க்கலாம்.
பெஞ்சமின் கிரஹாம். (1894- 1976):
லண்டனில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய மிகச் சிறந்த பொருளாதார அறிஞர். கொலம்பியா பல்கலையில் பட்டம் பெற்றவுடன் பேராசிரியர் வாய்ப்பு கிடைத்தபோதிலும் வால் ஸ்டிரீட் பங்குச் சந்தையில் கிடைத்த பணிக்கு சேர்ந்தார். சிறந்த தொழில்முறை முதலீட்டாளரும்கூட. 1928-ம் ஆண்டிலிருந்து கொலம்பியா வணிகவியல் கல்வி மையத் தில் பேராசிரியராக பணியாற்றினார்.
இவரிடமிருந்துதான் மிகச் சிறந்த முதலீட்டா ளராக வாரன் பஃபெட் உருவாகியுள்ளார். தனது தந்தைக்குப் பிறகு தனது வாழ்வில் மிக முக்கிய பங்கு கிரஹாமுக்கு உண்டு என்று பஃபெட் கூறுவதிலிருந்தே இவரது பங்களிப்பு புலனாகும். யுசிஎல்ஏ ஆண்டர்சன் நிர்வாகவியல் கல்வி மையத்திலும் சில காலம் முதலீடுகள் குறித்து பாடம் நடத்தியுள்ளார் பெஞ்சமின் கிரஹாம்.
டாக்டர் ஹென்றி எட்வர்ட் ராபர்ட்ஸ் (1941 2010):
வீட்டு உபயோக கம்ப்யூட்டரை முதலில் உருவாக்கியவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸின் குரு இவர்தான். அமெரிக்க பொறியாளரான இவர் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். பர்சனல் கம்ப்யூட்டரின் தந்தை என்றழைக்கப்படுபவர். எம்ஐடிஎஸ் எனும் நிறுவனத்தை 1967-ல் உருவாக்கியவர்.
அந்த நிறுவனம் கால்குலேட்டர்களை தயாரித்தது. 1975-ல் இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர் கொண்ட ஆல்ட்ஏர் 8800 எனும் பர்சனல் கம்ப்யூட்டரை இவர் உருவாக்கினார். அது பெரும் வெற்றியைப் பெற்றது. இவரது நிறுவனத்தில் பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் சேர்ந்து கம்ப்யூட்டருக்கு சாஃப்ட்வேர் எழுதினர். அதுதான் மைக்ரோசாப்டின் முதலாவது சாஃப்ட்வேராகும்.
1977-ல் எம்ஐடிஎஸ் நிறு வனத்தை இவர் விற்றுவிட்டு ஜார்ஜியா சென்று மருத்துவம் படித்து பட்டம் பெற்று சிறிதுகாலம் மருத்துவ ராக பணியாற்றினார்.
டொனால்டு இ கிரஹாம்:
கிரஹாம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலை மைச் செயல் அதிகாரி. 70 வயதாகும் இவர்தான் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கின் குரு. இவர் ஃபேஸ்புக் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராக உள்ளார். ஹார்வர்டு கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் ராணுவத்தில் சில காலம் பணியாற்றியவர் 1967 மற்றும் 1968-ம் ஆண்டுகளில் வியட்நாம் போரின்போது இவர் ராணுவத் தில் பணியாற்றினார்.
ராணுவத்தில் தகவல்கள் அளிக்கும் பிரிவில் சிறப்பாக செயலாற்றியவர். 1969 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் வாஷிங்டன் நகர காவல்துறையில் பணியாற்றியுள்ளார். 1971-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியுள்ளார். 1976-ல் இந்த பத்திரிகையின் பொது மேலாளராக பொறுப்பேற்றார். 1979-ல் பத்திரிகையின் பதிப் பாளரானார்.
ஆண்ட்ரூ கர்னெகி (1835-1919):
ஸ்காட்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய தொழிலதிபர். அமெரிக்காவில் உருக்கு ஆலை உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் அமெரிக்க தொழிலதிபர் சார்லஸ் ஷ்வாபின் குரு. ஸ்காட்லாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். தந்தி பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி, அமெரிக்க நிறுவன பங்குகளை ஐரோப்பிய நாடுகளில் விற்கும் அளவுக்கு உயர்ந்தார்.
பிட்ஸ்பர்க்கில் கர்னெகி ஸ்டீல் நிறுவனத்தை உருவாக்கினார். கர்னெகி கார்ப்பரேஷன் எனும் நிறுவனம், சர்வதேச அமைதிக்கான கர்னெகி அறக்கட்டளை, கர்னெகி அறிவியல் மையம், ஸ்காட்லாந்தில் கர் னெகி பல்கலைக் கழகம், கர்னெகி ஹீரோ ஃபண்ட், கர்னெகி மெலன் பல்கலை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளார்.
லாரி பேஜ், செர்கி பிரின்:
அமெரிக் காவைச் சேர்ந்த இளம் கம்ப்யூட்டர் அறிவியலாளர்கள். இருவரும் கூட்டாக கூகுள் நிறுவனத்தை உருவாக்கினர். 42 வயதாகும் லாரி பேஜ் தற்போது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ). 40 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தில் 55,600 பணியாளர்கள் பணிபுரி கின்றனர். செர்கி பிரின், ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய கம்ப்யூட்டர் நிபுணர்.
நண்பர் லாரி பேஜுடன் உருவாக்கிய கூகுள் நிறுவனம்தான் இன்று அதிக லாபம் ஈட்டும் நிறு வனமாகும். உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள இவர்களிருவரும் யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிஸா மேயரின் மென்ட ராகக் கருதப்படுகிறார்.
லாரன்ஸ் சம்மர்ஸ்:
அமெரிக்காவின் பொருளாதார நிபுணர். சார்லஸ் டபிள்யூ எலியட் பல்கலைக் கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வருகை பேராசிரியர். ஃபேஸ்புக் தலைமை செயல் பாட்டு அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்ட் பெர்கின் குரு.
உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை பணியாற்றினார். கிளிண்டன் அதிபராக இருந்தபோது கருவூலத்தின் துணை செயலராக பணியாற்றியவர். 2009-ல் ஒபாமா அதிபரான போது ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியை தீர்ப்பதற்காக அமெரிக்க பொருளாதார கவுன்சிலில் இவர் இடம்பெற்றிருந்தார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு செய்திப் பத்திரிகை யில் சிறப்பு கட்டுரைகளை எழுதி வருகிறார்.
பிரடெரிக் டெர்மான் (1900 1982):
அமெரிக்காவின் மிகச் சிறந்த பேராசிரியர்களில் இவரும் ஒருவர். சிலிக்கான் பள்ளத்தாக்கின் தந்தை என்றழைக்கப்பட்டவர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும், மின் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1925-ம் ஆண்டு முதல் ஸ்டான்போர்டு பல்கலையில் பேராசிரி யராகப் பணியாற்றியவர். கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹியூலெட் பக்கார்ட் நிறு வனத்தை உருவாக்கிய வில்லியம் ஹியூலெட் மற்றும் டேவிட் பக் கார்டின் குரு.
வாரன் பஃபெட்:
அமெரிக்க தொழிலதிபர், மிகச் சிறந்த முதலீட்டாளர். சிறந்த நன்கொடையாளரும் கூட. பங்குச் சந்தை முதலீட்டில் 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த நிபுணர் என்று பெயரெடுத்தவர். 84 வயதாகும் இவரது சொத்து மதிப்பு 7,230 கோடி டாலராகும். இவரது குரு பெஞ்சமின் கிரஹாம்.
பில்கேட்ஸ்
(மைக்ரோசாப்ட் நிறுவனர்): அமெரிக்க தொழிலதிபர், சிறந்த நன்கொடையாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், முதலீட்டாளர் என பன்முகம் கொண்டவர். 59 வயதாகும் இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 7,910 கோடி டாலராகும்.
சார்லஸ் ஆர். ஷ்வாப்:
ஸ்டான்போர்டு பல்கலையில் முதுகலை நிர்வாகவியல் பட்டம் பெற்றவர். அமெரிக்க தொழிலதிபர். சிறந்த நன்கொடையாளர். சார்லஸ் ஷ்வாப் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர். இவரது சொத்து மதிப்பு 640 கோடி டாலராகும்.
மார்க் ஜுகர்பெர்க்:
ஃபேஸ்புக் நிறுவனத்தை உருவாக்கிய 5 நிறுவனர்களில் இவரும் ஒருவர். நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3,480 கோடி டாலராகும்.
மாரிசா மேயர்:
யாகூ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக 2012-ம் ஆண்டிலிருந்து இப்பொறுப்பை வகிக்கிறார். உலகின் மிகச் சிறந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவரான இவருக்கு ஆலோசகராக, உத்வேகம் அளித்தவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின்தான்.
டேவிட் பக்கார்டு (1912-1996)
1939ல் ஹியூலெட் நிறுவனத்தை உருவாக்கிய இவர், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சராக அதிபர் நிக்சன் காலத்தில் பணியாற்றியவர்.
வில்லியம் ரெடிங்டன் ஹியூலெட் (1913-2001)
அமெரிக்க பொறியியல் நிபுணர். ஸ்டான்போர்டு பல்கலையில் இளங்கலைப் பட்டமும், மாசசூசெட்ஸ் பல்கலையில் முதுகலையில் பொறியியல் பட்டமும் பெற்றவர்.
ஷெரில் சாண்ட்பெர்க்:
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 46 வயதாகும் இவரது சொத்து மதிப்பு 106 கோடி டாலராகும். ஹார்வர்ட் பல்கலையில் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
வில்லியம் ஹியூலெட், டேவிட் பக்கார்டு:
ஹெச்பி என்றழைக்கப்படும் ஹியூலெட் பக்கார்டு கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர்கள். லாரி பேஜ்.

TAX - VAT

உலகம் முழுவதுமே இப்போது அரசுகள் வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரிகளை விதிக்கவோ அஞ்சுகின்றன.
இந்தியா முழுவதற்கும் ஒரே ‘சரக்கு, சேவை வரி’ (ஜி.எஸ்.டி.) என்ற சீர்திருத்தம் பற்றி 10 ஆண்டு களாகப் பேசிவருகிறோம். ஏற்கெனவே, இந்திய மாநிலங்களில் அமலாகிவரும் ‘மதிப்புக் கூட்டப்பட்ட வரி’(‘வாட்’) முறைதான் இது. ஆனால், இன்னமும் விரிவானது. ‘வாட்’ என்பது விற்பனை வரிக்குப் பதிலாக, சரக்குகள் மீது மட்டும் விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி-யோ சரக்கு, சேவை இரண்டின் மீதும் விதிக்கப்படுவது.
இப்போதுள்ள வரி நிர்வாகத்தில் சரக்குகள் மீது மட்டும் மாநிலங்கள் விற்பனை வரி விதிக்கின்றன, சேவைகள் மீது அல்ல. மத்திய அரசு உற்பத்திப் பொருட்கள் மீதும் சேவைகள் மீதும் வரி விதிக்கிறது, மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம் மீது அல்ல. சரக்கு, சேவை வரியானது (ஜி.எஸ்.டி.) இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒரே விதமான வரி விதிப்பை உறுதி செய்யும். எல்லா பகுதிகளிலும் எல்லா சரக்குகள், சேவைகள் மீதும் வரி விதிப்பை விரிவுபடுத்தும். மத்திய அரசும் மாநில அரசுகளும் சரக்குகள், சேவைகள் மீது வரிவிதிக்க அதிகாரம் வழங்குவதற்காகத்தான் அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.
பாதிக்கப்படும் நிதி நிர்வாகம்
20 ஆண்டுகளுக்கு முன்னால் ‘மதிப்புக் கூட்டப்பட்ட வரி’க்கு (வாட்) ஆதரவாக என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டனவோ அதே வாதங்கள்தான் சரக்கு, சேவை வரிக்கு ஆதரவாகவும் வைக்கப்படுகின்றன. சரக்கு, சேவை வரியானது எல்லாவிதமான மறைமுக வரிகளையும் தனக்குள்ளே அடக்கிவிடுகிறது. வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துகிறது. வரி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய மூன்று கட்டங்களிலும் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் இடுபொருட்கள் மீது விதிக்கப்படும் வரியைக் கணக்கிட்டு, இறுதி நுகர்வோர் மட்டும் வரியைச் செலுத்த வேண்டியிருப்பதால் வரிச்சுமை கூடிக்கொண்டே போகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது. ஏற்றுமதிக்குப் போட்டி போட முடிகிறது. சரக்கு, சேவை வரி பொதுவாக அமல்படுத்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பே 2% உயர்ந்துவிடும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இது சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால், மாநிலங்களின் நிதி நிர்வாகமும் சுயாட்சித் தன்மையும் நிச்சயம் பாதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு இழப்பு?
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பொது சரக்கு, சேவை வரி மசோதா, அரசியல் சட்டத்தின் ‘122-வது திருத்த மசோதா 2014’ என்று அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒரே சரக்கு, சேவை வரி இல்லை, இரண்டு விதமாக உள்ளது. மத்திய அரசு நிர்வகிக்கப்போவது மத்திய சரக்கு, சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.) என்றும் மாநிலங்களால் நிர்வகிக்கப்படப்போவது மாநில சரக்கு, சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.) என்றும் அழைக்கப்படும். இதன் கண்காணிப்பு, நிர்வாகமும் இருவேறு நிலைகளில் இருக்கும். இந்த வரி விகிதத்தை ‘சரக்கு, சேவை வரி கவுன்சில்’ என்ற அமைப்பு நிர்ணயிக்கும். இதன் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். மாநிலங்களின் நிதி, வருவாய்த் துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்கள். இந்த கவுன்சில் வரி விகிதத்தை நிர்ணயித்த பிறகு, மாநிலங்கள் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. அதே வேளையில், இந்த வரி விகிதங்களை மாநிலங்களின் தேவைக்கேற்ப திருத்த வரி விகிதங்களில் ‘குறைந்தபட்சம் - அதிகபட்சம்’ என்ற அளவு நிர்ணயிக்கப்படும். இவ்விரு வரம்புக்குள் ஏதேனும் ஒரு விகிதத்தில் மாநிலங்களில் வசூலித்துக் கொள்ளலாம்.
சமூக பரிமாணம்
சரக்கு, சேவை வரியானது எல்லா சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதுடன் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். உற்பத்தி வரி என்பது உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படுவது. சரக்கு, சேவை வரியோ நுகர்வோரால் செலுத்தப்படுவது. சரக்கையோ சேவையையோ அளிப்பவர் ஏற்கெனவே செலுத்திய வரியைக் கழித்துக்கொண்டுதான் இந்த வரியைச் செலுத்துவார். இன்னொரு வகையில் சொல்வதென்றால் சரக்கு, சேவை வரி என்ற மறைமுக வரியானது எல்லா வகை நுகர்வுக்கும் ஒரே சீரான விகிதத்தை உறுதி செய்யும். இப்போது அமலில் இருக்கும் வெவ்வேறு வரி விகிதங்கள், சலுகைகள், விலக்குகள் போன்றவற்றுக்கு இடமே இருக்காது.
சரக்கு, சேவை வரி முறையைத் தேர்ந்தெடுத்த பல நாடுகள் அத்தியாவசியப் பண்டங்களை இந்த வரியிலிருந்து விலக்கிவைத்துள்ளன. சிலவகைப் பண்டங்கள் மீது மிகக் குறைவான பொது வரியையே விதித்துவருகின்றன. விலக்குகள் மிகக் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ இருப்பதுதான் பொது சரக்கு, சேவை வரி முறைக்கு நல்லது.
எது லட்சிய வரி விகிதம்?
சரக்கு, சேவை வரி பொதுவென்றால் எத்தனை சதவீதமாக அது இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 13-வது நிதிக்குழுவுக்காக நியமித்த பணிக்குழுவானது அது 12% ஆக இருக்க வேண்டும். இதில் மாநிலங்களின் பொது சரக்கு, சேவை வரியாக 7%-ம், மத்திய அரசின் பொது சரக்கு சேவை வரியாக 5%-ம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. 2014-ல் மாநில அரசின் பிரதிநிதிகள் இது 27% ஆக இருக்க வேண்டும் என்று கோரினர். இவ்விரண்டுமே சரியில்லை. 12% தான் வரி என்றால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு நிச்சயம். மதிப்புக் கூட்டப்பட்ட வரி விகிதம் 13% முதல் 14% ஆக இருக்கும்போது, 12% என்பது வருவாயைக் குறைத்துவிடும். 27% என்று விதித்தால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பெரும் சுமையாகிவிடும். இந்த அளவு 27%-க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று ஜேட்லி உறுதியளித்திருக்கிறார்.
மறைமுக வரிக்கு முக்கியத்துவம்
உலகம் முழுவதுமே இப்போது அரசுகள் வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரிகளை விதிக்கவோ அஞ்சுகின்றன. நேர்முக வரிகளைக் குறைத்துவிட்டு மறைமுக வரிகளை அதிகப்படுத்துகின்றன. வசதி படைத்த பணக்காரர்கள் அதிக பாரம் சுமக்க வேண்டும் என்ற காலம் மலையேறி, எல்லாச் சுமைகளையும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீது சுமத்துவதே வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தினால் அவை முதலீட்டை விலக்கிக்கொண்டு வேறு நாடுகளுக்குப் போய்விடும், அதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அத்தனையும் குறைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
2013-ல் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் நேர்முக வரிகள் மூலம் கிடைக்கும் பங்கு 37.7% தான். தென்னாப்பிரிக்காவில் இது 57.5% ஆகவும் இந்தோனேசியாவில் 55.85% ஆகவும் இருக்கிறது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் மறைமுக வரி விகிதம் இந்தியாவில் மேலும் அதிகரித்துவிடும்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி

உண்மையான எதிர்த் தரப்பு எப்படி இருக்க வேண்டும்?

நான் சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். நிறைவாழ்வை வாழ்ந்தவர்கள் என்றாலும் இந்த உலகைப் புரிந்துகொள்ள இன்னும் முயன்றுகொண்டிருப்பவர்கள். பிரமாதமான ஆசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், தொழில்முறைப் பணியாளர்கள் போன்றோர் இவர்களில் அடங்குவார்கள். தாங்களெல்லாம் மிகுந்த செயலூக்கம் கொண்டிருந்தாலும்கூட, உலகம் தங்களைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் இவர்கள். இவர்களில் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார், “நம்மில் பலரும் அரசியல் என்பதை நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவும், தனிநபர்களின் கனவுகளைப் பொது நன்மையோடு சேர்க்கும் வழிமுறையாகவும் கருதினோம். நாமெல்லாம் குழம்பிப்போயும், கற்றுக்குட்டிகளாகவும், முட்டாள்தனமாகவும் நடந்துகொண்டோம். கனவுகளை நனவுகளாக மிக எளிதாக மாற்றிவிட முடியும் என்று நம்பினோம். நாமெல்லாம் முட்டாள்களாக, ஆனால் மகத்தான முட்டாள்களாக இருந்தோம். நமது முட்டாள்தனத்திலும்கூட ஞானம் இருந்தது.”
இந்த உரையாடல்களுக்கிடையே கருத்தொற்றுமை இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன் என்றாலும் நிச்சயம் ஒரு பொதுத்தன்மை இருந்தது. அந்தப் பாணி அரசியலுக்குப் புத்துயிர் கிடைக்க வேண்டும் என்றும் சிலர் கருதினார்கள்.
வகைகளுக்கிடையிலான போர்
வகைகளுக்கிடையிலான பனிப்போருக்கு இடையில் இந்தத் தலைமுறையும் சிக்கிக்கொண்டுவிட்டது. இந்த வகைமைகளின் மீதான மோகத்தில் நாம் நம்மையே அழித்துக்கொண்டுவிட்டோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், நுட்பமான உணர்வுடையவர். நாங்களெல்லாம் மனதின் கமிஸார்களாகிவிட்டோம் (தணிக்கையாளர்) என்று அவர் கூறினார். “ஸ்டாலினைப் பற்றி எண்ணிப்பாருங்கள்! இன்றைய தேதியில் காலாவதியாகிவிட்டதைப் போலவும், கேலிக்குரியவர் போலவும் ஸ்டாலின் நமக்குத் தோன்றுகிறார். ஆனால், ஒருகாலத்தில் அவர்தான் நம் வாழ்க்கை மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். சத்தியத்துக்கான அக்னிப் பரிசோதனைதான் ஸ்டாலின். தகவல்தொடர்பு-தானியங்கி முறையின் மூலம் அதுதான் வரலாற்றைச் சரியான போக்கில் திருப்பியது. செஸ்லாவ் மிலாஸ்வ் எழுதிய ‘தி கேப்டிவ் மைண்டு’, ஆர்தர் கோஸ்ட்லருடைய ‘டார்க்னெஸ் அட் நூன்’, ஜார்ஜ் ஆர்வெல்லின்‘1984’ ஆகிய நூல்களையெல்லாம் நாங்கள் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவற்றை அதர்மம் குறித்த கதைகளாகப் படிக்காமல், அன்றாட நீதிக் கதைகள் போலவும், அன்றாட வாழ்க்கையின் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான எச்சரிக்கையாக மட்டுமே படித்துவிட்டோம். இதன் விளைவாக, இடதுசாரிகள் அவர்களின் கொள்கையிலேயே பொம்மலாட்டப் பாவைகளாக, அதாவது அவர்கள் அறியாமலேயே அவர்களாலேயே ஆட்டப்படும் பொம்மைகளாகிவிட்டார்கள்.”
என் நண்பர் ஒன்றை உணர்ந்திருக்கிறார். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த வர்களுக்கு இடையே இப்போது நிறைய ஒற்றுமையைக் காண முடிகிறது. அவர்களெல்லாம் இந்த உலகத்தைக் குறித்துத் தீவிரமான பார்வை கொண்டிருந்தவர்கள். இந்த உரையாடலில் ஒரு நெகிழ்ச்சி இருந்தது. “நேரு யுகம் என்பது லட்சியவாத யுகம்” என்று அறிவியலாளர் தினேஷ் மோகன் என்னிடம் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. கல்வி புதிய உலகொன்றைத் திறந்துவிட்டது. அந்த யுகத்தின் முதல் தலைமுறைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் கல்வியை நேசித்தார்கள். தேர்வுகள் குறித்தல்ல, புத்தகங்கள், கருத்துகளின் ரசவாதம் போன்றவைகுறித்த காதல் அது. “லட்சியம் என்பது கருத்துகளையும் இந்த உலகத்தையும் தாண்டிய கருத்துகளையும் துழாவிச் செல்லுதல், கண்டறிதல் என்று அர்த்தம். வெறுமனே திறன் மேம்பாடு சார்ந்ததோ, இயக்கம் சார்ந்ததோ அல்ல அது” என்று அவர் எச்சரித்தார்.
அரசியல் வறுமை
இன்னொருவர் சொன்னார், “சிறு நகரங்களிலிருந்து வந்த மக்களையெல்லாம் அப்போது சந்தித்தோம். அவர்களுடைய சிந்தனைகளெல்லாம் நமது கற்பனைச் சிறகுகளைக் கட்டவிழ்த்துவிட்டன. நம்பவே முடியாத உலகுகளை அவர்கள் உருவாக்கினார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் ஒரு பட்டியல் இருந்தது. ஓவியர்கள், அறிவியலாளர்கள், கதைசொல்லிகள், வடிவமைப்பாளர்கள் போன்றோரின் பட்டியல் அது. அவர்களெல்லாம் இப்போது மறைந்துவிட்டார்கள்.” அந்த உலகம் கற்பனாவாத உலகம்; அதில் தவறுகளும் இழைக்கப்பட்டன. இன்று அந்தத் தவறுகளையெல்லாம் நாம் பட்டியல் போட வேண்டும். நமது சித்தாந்தங்கள் நம் கண்ணை மறைத்து, சகிப்பின்மையை நோக்கி அழைத்துச்சென்றுவிட்டன.
லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் ஆகியோரைக் கடவுள்களாக, துரதிர்ஷ்டவசமாகத் தனிப்பெரும் கடவுளர்களாகக் கருதினோம். நமது மதங்களைப் போல நமது அரசியல் சித்தாந்தங்களும் கலவையாக இருந்திருக்க வேண்டும்.
நமது ஒருதலைப்பட்சமான நம்பிக்கைகள் ஒருதலைப் பட்சமான வரலாறுகளையே உருவாக்கின. 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசியல் கட்சிகளெல்லாம், முக்கியமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று வெறும் தொல்பொருட்கள் போன்று மாறிவிட்டன. அவையெல்லாம் அரசியல்ரீதியிலான ஆட்டிசம் போன்று ஆகிவிட்டன. எனினும், சிறப்பானவர்களில் பெரும்பாலானோரை அவை விழுங்கி, அழித்துவிட்டன. தாங்கள் கொடுத்த பலிகளுக்காக ஒப்பாரி வைப்பதற்கு இன்றைக்கு இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஒப்பாரிச் சுவர் தேவைப்படுகிறது.
தேச விடுதலையின்போது பேசப்பட்ட சுதந்திரம் என்ற கனவை நோக்கிய தேடலில் கடைசியில் எதிர்க் கருத்துகள், பித்துநிலை, விளிம்புநிலை ஆகியவற்றையெல்லாம் அழித்துவிட்டதுதான் விநோதம். அறிவியல்பூர்வமாகவே இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான வெறியில், உண்மைக்குப் பல மொழிகள் உண்டு என்பதைக் காணத் தவறிவிட்டோம். ‘திட்டம்’, ‘வடிவமைப்பு’, ‘திட்டப்பணி’, ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ போன்ற சொற்களையெல்லாம் ஆரம்ப நிலைப் பரிசோதனைகளாகக் கருதாமல் அதிகாரபூர்வமான திட்டங்களாகக் கருதிவந்திருக்கிறோம்.”
எனது விசித்திரமான நண்பர்களில் ஒருவர் மோடியை கிஃபென் சரக்கு என்றார். கிஃபென் சரக்கு என்பது ஒரு முரண்பாடான விஷயம். சரக்கின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் தேவையும் அதிகரிக்கும். ஆனால், விலை குறைந்தால் தேவை குறைந்துவிடும். சராசரியானவர்களையே மோடி ஈர்க்கிறார். அவர்களோ பொய்யான ஒரு வரலாற்றை உருவாக்குகிறார்கள். நமது தலைமுறையில் நமது தவறுகளெல்லாம் மிகவும் வெளிப்படையாக இருந்தன. ஆனால், இந்தத் தலைமுறையின் தவறுகள் படுகுழியில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நடைமுறைக்கு உதவாத தன்மையால் நமது தலைமுறை ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. நடைமுறை அறிவு காரணமாக இந்தத் தலைமுறையோ ஒரு துயர நாடகமாய் ஆகிவிடும்போல் இருக்கிறது. எங்கள் தலைமுறையின் பிரச்சினைகள் எல்லாம் பேய்களென்றால், இந்தத் தலைமுறையின் பிரச்சினைகளெல்லாம் ராட்சசர்கள் போன்றவை.
மாற்றுச் சக்தியின் விதை
முந்தைய தலைமுறை சகிப்புத்தன்மை அற்றும் கொஞ்சம் அரைகுறையாகவும் இருந்தது. எனினும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் புதிய சாத்தியங்களை அது உருவாக்கியது. உண்மையில், நமது தவறுகளை அடையாளமாகக் கொள்ளும் உணர்விலிருந்துதான் எங்கள் தலைமுறை இந்த சாத்தியத்தை உருவாக்கியது. சமீபத்திய இரண்டு நிகழ்வுகள் நமது யோசனையைத் தூண்டிவிட்டிருக்கின்றன. முதலாவது, சிபிஐ (எம்) பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. அடுத்தது, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பாஜகவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் போராட்டம். மோடியின் வருகை நிகழ்ந்திருப்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை இன்று, வரலாற்றின் ஒரு பகுதியாகவும் இது ஆகிவிடும்.
மோடியின் அரசியலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் மாற்று வரலாற்று சாத்தியத்துக்கான விதைகளைத் தூவும். குடிமைச் சமூகத்துடனும் பாஜக அரசுக்கு ஆக்கபூர்வமான, படைப்பூக்கத்துடன் கூடிய, விமர்சனபூர்வமான எதிர்த் தரப்பாக இருக்க வேண்டிய இடதுசாரிக் கட்சிகளில் உள்ள செயல்பாட்டாளர்களுடனும் நிகழ்த்திய நூற்றுக் கணக்கான உரையாடல்களின் விளைவாக எழுந்ததுதான் நமது எளிய யோசனை: படைப்பூக்கத்துடன் கூடிய பல்வேறு சாத்தியங்களைக் கொண்டிருக்கும் எதிர்த் தரப்பாக அது இருந்தாக வேண்டும். தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் உரிய பிரத்யேக செயல்பாடுகளைத் தவிர்க்கக் கூடியதாக அந்த எதிர்த் தரப்பு இருக்க வேண்டும். கடைசி விஷயம் மிகவும் முக்கியமானது. இதைப் பற்றி விளக்குகிறேன். நெருக்கடிநிலைப் பிரகடனத்தின்போது எல்லா சித்தாந்தங்களையும் சார்ந்திருந்த கட்சித் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டது, நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. துணிவும் எதிர்ப்புணர்வும் ஒரே ஒரு சித்தாந்தத்துக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை இடதுசாரிகளும் வலதுசாரிகளும் கண்டறிந்தது அப்போதுதான்.
நக்ஸலைட்டுகள், இடதுசாரித் தாராளவாதிகள், காந்தியர்கள், லோகியாவாதிகள், பெண்ணியவாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிபிஐ (எம்), சிபிஐ, சுதந்திர உணர்வை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகத் தரப்பு, இடதுசாரித் தலித்துகள் ஆகிய இடதுசாரிகளின் வெவ்வேறு வண்ணங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் சீதாராம் யெச்சூரிக்கும் இன்னபிற இடதுசாரிகளுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இடதுசாரிக் கட்சிகள் தேவையற்றவையாகக் கருதப்பட்டு புறந்தள்ளப்படுவதற்கு முன் இதையெல்லாம் செய்தாக வேண்டும்.
அடித்தட்டினர்சார்ந்த சிந்தனை என்பதை இடதுசாரிகள் தொடக்கத்தில் முன்னெடுத்திருந்தாலும் அது தேசியவாதம், மார்க்ஸிஸச் சிந்தனை என்பதையெல்லாம் தாண்டிப் போய்விட்டது. இந்த நிலையில் மாற்றுச் சக்திகளிடம், முக்கியமாக அறிவியல் சார்ந்த இயக்கங்களிடம் உரையாடல் நிகழ்த்த இடதுசாரிகள் தவறிவிட்டனர். மாற்றுச் சக்திகளின் இயக்கங்கள் எதிர்காலத்தின் உரிமைகள்குறித்தும் பேசின. அவற்றை சிந்தனாரீதியாகவும் அமைப்புரீதியாகவும் விரித்துச்செல்ல வேண்டியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருத்து மாறுபாடு, கிறுக்குத்தனம், மாற்றுகள், விளிம்புநிலையினர், சிறுபான்மையினர் ஆகியோரை உள்ளடக்கிய விதைநெல் களஞ்சியமாக இடதுசாரிகளின் பன்மைத்துவம் அவர்களை ஆக்க வேண்டும். இதற்கும் மேலாக, வீழ்த்தப்பட்டோர், நசுக்கப்பட்டோர், மறக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோர் மீது அக்கறை கொள்ளும் ஒரு பார்வையை அது உருவாக்க வேண்டும்!
- ஷிவ் விஸ்வநாதன், அரசு நிர்வாகம் மற்றும் பொதுக்கொள்கைகளுக்கான ஜிந்தால் கல்லூரியின் பேராசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

செவ்வாய், 9 ஜூன், 2015

தெளிவடையும் புளூட்டோவின் முகம்...

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவரை எந்த விண்கலமும் போய்ச் சேராத ஒரே கோள் புளூட்டோ. அமெரிக்காவின் நாசா நிறுவனம் நியூ ஹாரிசான் (New Horizons) விண்கலத்தை அங்கே அனுப்பியிருக்கிறது. வருகின்ற ஜுலை 14 ஆம் தேதி அது புளூட்டோவுக்கு அருகே போய்ச் சேரும்.
இதுவரை வெறும் ஒளிப்புள்ளியாக மட்டுமே புளூட்டோ தொலைநோக்கியில் காட்சி தந்துள்ளது. அதன் முக தரிசனத்தைக் காண விஞ்ஞானிகள் ஆசையாகக் காத்துக் கிடக்கின்றனர்.
நீரின் ஜன்மபூமி தேடி…
நியூ ஹாரிசான் விண்கலம் ஒரு மேஜை அளவு இருக்கும். சுமார் 2.5 மீட்டர் அகலம். எரிபொருள் உட்பட 480 கிலோகிராம்தான் எடை. ஆனாலும் காரம் குறையாத கடுகு அது. அதில், நிறமாலை பகுப்பு ஆய்வுக் கருவி, தரைப்பரப்பு ஆய்வு செய்யும் அகச்சிவப்புக் கதிர் கருவி உட்பட மிக நவீனமான ஏழு ஆய்வு கருவிகள் உள்ளன.
சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள வளையத்தை குய்ப்பர் எனும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். குய்ப்பர் வளையம் (Kuiper belt) எனும் அந்தப் பகுதியிலிருந்து புளூட்டோ வருகிறது. இந்தப் பகுதியிலிருந்துதான் வால்நட்சத்திரங்கள் உருவாகி, சூரியனை நோக்கி வருகின்றன என்று கருதப்படுகிறது.
இப்படி வந்த வால்நட்சத்திரங்கள்தான் பல கோடி ஆண்டுகளாக அவ்வப்போது பூமியில் மோதின. அந்த மோதல்களின் மூலம்தான் அவை நீரைக் கொண்டு வந்து பூமியில் சேர்த்தன என்றும் கருதப்படுகிறது. எனவேதான், புளூட்டோ மற்றும் குயிப்பர் வளையத்தை ஆராய நாசா இந்த விண்கலத்தை வடிவமைத்தது. 2006 ஜனவரி 19-ல் இதை விண்ணில் ஏவியது.
பனிக்கோள்
10 ஆண்டுகளாகப் பயணம் செய்கிற அது ஜுலை 14-ல் புளூட்டோவுக்கு மிக அருகில் வெறும் 12 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில் பறந்து செல்லும். புளூட்டோவுக்கு இருக்கிற ஐந்து நிலாக்களில் பெரிய நிலவான சரோன் (Charon) அருகே 28 ஆயிரத்து 800 கி.மீ. தொலைவில் செல்லும். அவ்வளவு பக்கத்திலிருந்து புகைப்படம் எடுத்தால் மேலும் தெளிவாகத் தரைப்பரப்பின் பகுதிகள் தெரியவரும். புளூட்டோவின் திரை விலகி அதன் முகம் நமக்குத் தென்படும்.
புளூட்டோ பனியால் ஆன ஒரு கோள். அதில் மைனஸ் 233 டிகிரி குளிர் இருக்கும். அங்கே உங்களின் எலும்பும் உறைந்துவிடும். அதைச் சுற்றியுள்ள வான்பகுதியில் மிகவும் மெல்லிய வளி மண்டலம் உள்ளது. அது பூமியின் வளி மண்டலத்தை விட லட்சத்தில் ஒரு பங்குதான். பூமியைப்போல அதில் நைட்ரஜன் மிகுந்து இருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் இல்லை. மீத்தேன் கார்பன்டை ஆக்ஸ்சைடு முதலியவை உள்ளன.
குடும்பத்தின் விளிம்பு
சூரியனை புளூட்டோவிலிருந்து பார்த்தால் பூமியிலிருந்து நாம் பார்க்கிற சூரிய வெளிச்சத்தை 900 ஆகப் பிரித்து அதில் ஒரு பங்கு அளவுதான் பிரகாசிக்கும். அதுவே முழு நிலவின் பிரகாசத்தை விட 300 மடங்கு அதிகம்.
சூரியனிலிருந்து 750 கோடி கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது புளூட்டோ. சூரியக் குடும்பத்தின் விளிம்பு அது. சூரிய ஒளி வெறும் எட்டு நிமிடத்தில் பூமிக்கு வந்து சேரும். ஆனால், புளூட்டோவுக்குப் போய்ச் சேர சுமார் ஐந்தரை மணி நேரம் எடுக்கும். அவ்வளவு தூரம். சக்தி வாய்ந்த தொலைநோக்கியில் கூட அதன் தரைப்பரப்பு தெளிவாகத் தெரியாது. எனவேதான், 1930 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்றும் மர்மக் கோளாக உள்ளது புளூட்டோ.
கோளா, இல்லையா?
ஒன்பதாவது கோள் என்று ஆரம்பத்தில் பெருமையாகச் சொல்லப்பட்ட புளூட்டோவின் அளவு நமது நிலாவைவிடச் சின்னது. அதன் சுற்றுப்பாதையில் அதனைப் போன்ற வேறு வான் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகும் புளூட்டோவை மட்டும் இன்னும் ‘கோள்’ என அழைக்கிறோம்.
வவ்வால் பறக்கும் என்றாலும் அது பாலூட்டிதான். பெங்குயின் நீந்தும் என்றாலும் பறவைதான். அதுதான் அறிவியல் பார்வை. அதுபோல, ‘கோள்’ என்ற அறிவியல் வரையறைக்கு உள்ளே புளூட்டோ வரவில்லை. அதனால் 2006-ல் சர்வதேச வானியல் கழகத்தின் தீர்மானப்படி ‘குள்ளக் கோள்’ என்ற புதிய வகையாகப் பதவி மாற்றம் செய்யப்பட்டது.
புல்லட் ப்ரூப் விண்கலம்
புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் கடினமான தரைப்பரப்பு உள்ள ‘பாறைக் கோள்கள்’. இவற்றில் இரும்பு முதலிய உலோகத் தனிமங்கள் உள்ளன. வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் முதலியன உருவில் பெரியவை. ஆனால், வெறும் காற்றடைத்த வாயுக் கோள்கள். ஹைட்ரஜன் மிகுந்தும் அடர்த்தி குறைவாகவும் உள்ள கோள்கள். புளூட்டோ மற்றும் அதன் நிலாவான சரோன் முதலியன பனிக் கோள்கள். இவற்றில் கார்பன்டை ஆக்ஸ்சைடு, நைட்ரஜன் முதலியன உறைந்து பனியாகிவிட்டன. இந்தப் பனிக்கோள்களை ஆராய்வதுதான் நியூ ஹாரிசான் திட்டம்.
மின்னணுச் சாதனங்கள் வேலைசெய்யக் குறைந்தபட்ச வெப்பநிலை வேண்டும். எனவே, அந்த விண்கலத்தில் ஹீட்டர்கள் வைத்துள்ளனர். ஹீட்டர்கள் வெளிப்படுத்தும் வெப்பம் விண்வெளியில் பரவி வீணாவதைத் தடுக்கப் பிளாஸ்க் (thermos bottle)வடிவில் கருவிகளைச் சுற்றிலும் வெப்பச் சேமிப்பு அமைப்பை அமைத்துள்ளனர். படுவேகத்தில் செல்லும் இந்த விண்கலத்தில் சிறு கல் மோதினால்கூடப் பெரும் சேதம் ஏற்படும். எனவே, ராணுவ வீரர்கள் அணியும் புல்லட் புரூப் கவசத்தை இந்த விண்கலத்துக்கு மாட்டிவிட்டுள்ளனர்.
கும்பகர்ண கருவிகள்
கடந்த சில வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கருவிகள் கடந்த ஏப்ரல் மாதம் இயக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டன. முதன் முதலாகப் புளூட்டோவை நெருங்கிப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 11.3 கோடி கி.மீ. தொலைவிலிருந்து தொலையுணர்வு தொலைநோக்கி கேமரா (telescopic Long-Range Reconnaissance Imager-LORRI) எனும் சிறப்புக் கருவி வழியாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் கருப்பு-வெள்ளைத் திட்டுகள் தென்பட்டன. இந்தப் புகைப்படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் புளூட்டோவின் துருவங்களில் பனிப்படலம் இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
புளூட்டோவை நெருங்கிச் செல்லச் செல்ல அதன் வளி மண்டலத்திலிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களை ஆராய்ந்து அவற்றின் வெப்ப நிலை கணக்கிடப்படும். மேலும், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு அலைநீளங்களில் புகைப்படங்கள் எடுத்து ஆராயப்படும். நிறமாலை பகுப்பு ஆய்வின் அடிப்படையில் புளூட்டோ மற்றும் செரான் கோள்களின் வெப்ப நிலை உள்ளிட்ட தரைப்பரப்பு கூறுகள் வெளிப்படுத்தப்படும். குறிப்பாக, மீத்தேன் வாயு வெளிப்படுத்தும் அலைநீளங்களை ஆய்வு செய்து மீத்தேன் செறிவு குறித்து ஆராயப்படும்.
வெறும் அரைமணி நேரம்
ஜூலை 14 அன்று சுமார் அரைமணி நேரம் புளூட்டோ அருகே விண்கலம் பறந்து செல்லும். அதன் அருகே செல்லும்போது 60 மீட்டர் அகலமுள்ள பொருட்களைக் கூடத் தெளிவாக காணமுடியும்.
10 ஆண்டுகள் பயணம் செய்து புளூட்டோவை அடைந்து ஏன் வெறும் அரைமணிநேரம் மட்டும்தான் என்று உங்களுக்கு தோன்றும். இந்தியாவின் மங்கள்யான் செவ்வாய்க்குச் சென்று அதன் நிலாவைப் போல அதைச் சுற்றிவருவதுபோலக் கொஞ்சம் நாள் புளூட்டோவைச் சுற்றலாமே என்றும் கேட்கலாம்.
750 கோடி கி.மீ. தொலைவில் உள்ள புளூட்டோவுக்கு ஜெட் விமான வேகத்தில் சென்றால் கூட 700 வருடம் பிடிக்கும். எனவே, விண்கலத்துக்கு மேலும் கூடுதல் முடுக்கு வேகம் தந்து அதனை மணிக்கு 43 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செலுத்துகின்றனர். இந்த வேகத்தில் சென்றால் ஒரு நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றுவிடலாம். அவ்வளவு வேகம்.
தலைதெறிக்கும் வேகத்தில் செல்லும் அந்த விண்கலத்தைப் புளூட்டோவைச் சுற்றிச் சுழலச் செய்யவேண்டும் என்றால் அதன் வேகத்தைச் சுமார் 90 சதவீதம் குறைக்க வேண்டும். இவ்வாறு வேகத்தைக் குறைக்க, விண்கலத்தில் உள்ள எரிபொருள் போல ஆயிரம் மடங்கு எரிபொருள் தேவைப்படும். எனவேதான், புளூட்டோ அருகே பறந்து செல்வதாகத் திட்டத்தை அமைத்துள்ளனர்.
தீராத காதல் ஏக்கம்
புளூட்டோவை விட்டு விலகிச் சென்றதும் அதன் வேலை முடிந்துவிடாது. காதலியைப் பிரியும்போது திரும்பித் திரும்பிப் பார்க்கும் காதலன் போலப் புளூட்டோவின் இரவுப் பகுதியை அது படம் பிடிக்கும். புளூட்டோவின் வளி மண்டலம், அதனைச் சுற்றி ஏதாவது வளையம் இருக்கிறதா போன்ற ஆய்வுகளைச் செய்யப் புளூட்டோவின் நிழல் பகுதியை புகைப்படம் எடுப்பது நமக்குப் புரிதலை ஏற்படுத்தும்.
புளூட்டோவை ஆய்வு செய்த பிறகு இந்த விண்கலம் சூரியக் குடும்பத்திலிருந்து வெளியே போகும். KBO எனப்படும் குயிப்பர் வளைய வான்பொருள்களை ஆராயும். எந்த KBOவை ஆராய்வது என இன்னமும் நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்யவில்லை. விண்கலத்தில் மிஞ்சும் எரிபொருளைக் கணக்கில் கொண்டுதான் அதை முடிவு செய்வார்கள். மேலும், ஒரு சில ஆண்டுகள் பயணம் செய்துதான் வேறு ஒரு KBOவை விண்கலம் அடைய முடியும்.
தொட்டு விளையாட முடியாத ஒருதலைக் காதலனைப் போல விண்கலம் அலைந்து ஓயும்!


தொடர்புக்கு: tvv123@gmail.com

திங்கள், 8 ஜூன், 2015

பவானி - Story of a River

பவானியின் முக்கிய நீர் ஆதாரமான புல்வெளிக் காடுகளுக்கு, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆபத்து தொடங்கி விட்டது. மலைச் சரிவுகளிலும் வனங்களிலும் பல கி.மீ. தொலைவுக்கு அப்போது புல்வெளிக் காடுகள் பரந்து வளர்ந்திருந்தன. ஆங்கிலேயர்களுக்கு அதுபோன்ற காடுகள் புதியவை.
அவற்றின் இயற்கையான உயிர்ச் சூழலை புரிந்து கொள்ளாத அவர்கள், அவற்றை தேவையில்லாத நிலப் பரப்பு (Waste Land) என்று குறிப் பிட்டனர். மேலும், அவை கால்நடை மேய்ச்சலுக்காக உள்ளூர் மக்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களிடையே ஒரு கருத்து இருந்தது. இதனால், புல்வெளிக் காடுகளை அழித்து பலன் தரும் (!) மரங்களை நடலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. பரப்பளவில் புல்வெளிக் காடுகள் அழிக்கப்பட்டன. அங்கு ஆஸ்தி ரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட சீகை (வேட்டல்), கற்பூரம் (யூகலிப்டஸ்), ஐரோப்பியாவை பூர்வீகமாகக் கொண்ட பைன் ஆகிய மரங்கள் நடப்பட்டன. இவை தவிர ஆங்கிலேயர்களின் வீடுகளில் வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஈப்பதோரியம், லேண்டினா கேமிரா உள்ளிட்ட அலங்கார மலர் தாவரங்களும் காடுகளில் பரவின. விதைப் பரவுதல் மூலம் விரைவாக காடு முழுவதும் ஆக்கிரமிக்கும் அவை, தாங்கள் வளரும் பகுதியில் பிற மரங்களையும் தாவரங்களையும் வளர அனுமதிக்காது. இதனால், நமது நாட்டு மரங்களும் தாவரங்களும் அழிந்து, வன உயிரினங்களின் உயிர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சமீப காலம் வரை நமது வனத் துறையும் இந்த பல்லுயிர் சீரழிவைப் புரிந்து கொள்ளாததுதான் சோகம். நமது வனத் துறை அந்த அந்நிய மரங்கள் நடும் திட்டத்தை தீவிரமாகச் செயல் படுத்தியது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 1988-ம் ஆண்டு மட்டும் சுமார் 11,000 ஹெக் டேரில் புல்வெளிக் காடுகள் அழிக்கப் பட்டு மேற்கண்ட அந்நிய மரங்கள் நடப்பட்டன. கடந்த 1990-களின் இறுதிவரை இந்த நிலை நீடித்தது. புல்வெளிக் காடுகளின் அழிப்பால் சுமார் 30 ஆண்டுகளில் பவானிக்கான நீர் வரத்து வெகுவாகக் குறைந்துபோனது.
அதன்பின்பே பல்வேறு ஆராய்ச்சி யாளர்கள் இந்த மரங்கள் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதையும், புல்வெளிக் காடுகளின் அழிப்பால் ஆறு களின் நீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதையும் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டினர். சுதாரித்துக் கொண்ட வனத் துறை, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கும் திட்டம் மற்றும் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் லட்சக் கணக்கான ரூபாய் செலவில் இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், அவற்றை முழுமையாக அழிக்க இயலவில்லை. இதனால், இன்றுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாமல் தவிக்கிறது வனத் துறை.
பவானியில் மட்டுமே உயிர் வாழும் அரிய மீன்
நீலகிரியின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களில் அவலாஞ் சியும் ஒன்று. ஆங்கிலத்தில் அவலாஞ்சி என்றால் பனிச் சரிவு என்று பொருள். 1840-களில் இங்கு அடிக்கடி நிலச் சரிவு ஏற்பட்டது. அதனால், ஆங்கிலேயர்கள் குளிர் பிரதேசமான இந்தப் பகுதிக்கு அவலாஞ்சி என்று பெயர் வைத்துவிட்டனர். அவலாஞ் சியின் பவானி ஆற்றுத் தண்ணீருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.ஆங்கிலே யர்களுக்கு பிடித்த மீன் உணவுகளில் ஒன்று டிரவுட் (Trout) நன்னீர் மீன். அவை, இங்கிலாந்து மற்றும் ஐரோப் பாவின் பனி சூழ்ந்த குளிர் பிரதேச நீர்நிலைகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன.
இங்கே ஆங்கிலேயர்கள் தங்கள் உணவுத் தேவைக்காக அந்த மீனை இமயமலை, சிம்லா, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்நிலைகளில் இனப் பெருக்கம் செய்ய முயற்சித்தனர். ஆனால், இமயம் உட்பட எங்கும் உயிர் பிழைக்காத அந்த மீன்கள் ஆச்சர்யமாக அவலாஞ்சியின் பவானியில் மட்டும் பெருகி வளர்ந்தன. பவானியின் பல்லுயிர் செறிவுத் தன்மைக்கு இது ஓர் உதாரணம். இன்றும் அவலாஞ்சியில் அந்த மீன் பண்ணை இருக்கிறது. அங்கு டிரவுட் இன மீன் குஞ்சுகள் இனப் பெருக்கம் செய்யப்பட்டு அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் விடப்படுகின்றன. ஆனால், இந்த மீன்கள் விற்பனைக்கு இல்லை.
படங்கள்: சுதா
மின் உற்பத்தியில் பவானியின் பங்கு
நீலகிரி மாவட்டத்தின் மின் தேவையை நிறைவு செய்வதில் பவானி ஆற்றின் பங்கு முக்கியமானது. இங்கு ஆண்டு முழுவதும் பவானி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் மின் உற்பத்தியும் தடை இல்லாமல் நடைபெறுகிறது.
இந்த வனப் பகுதியில் மட்டும் பவானி ஆற்றின் குறுக்கே 15 சிறு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரி வனத்தில் உச்சியில் இருந்து கீழ் நோக்கிப் பாயும் பவானி ஆற்றின் நீரைப் பயன்படுத்தி இந்த அணைக் கட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீலகிரியின் கிழக்குப் பகுதியில் முக் குருத்தி, பைக்காரா, சண்டிநல்லா, கிளன் மோர்கன், கிளன்மோர்கன் ஃபோர்பே, மரவக்கண்டி, மோயாறு ஃபோர்பே ஆகிய ஏழு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரியின் மேற்குப் பகுதியில் மேல்பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, போர்த்திமண்டு, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா ஃபோர்பே, பேகும்பஹல்லா, பில்லூர் ஆகிய எட்டு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணைக் கட்டுகளில் இருக்கும் நீர் இருப்பை வைத்து சராசரியாக 372.84 மில்லியன் யூனிட் மின்சாரம் (2015, ஜூன் 2 கணக்கின்படி) உற்பத்தி செய்ய முடியும்.
(பாய்வாள் பவானி)

***********

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/article7297556.ece?homepage=trueஒரு நதியின் வாக்குமூலம்: துடிக்கிறாள் படியளக்கும் பவானி!

டி.எல். சஞ்சீவிகுமார்
COMMENT   ·   PRINT   ·   T+  
சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்
சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்
கங்கையோ காவிரியோ பவானியோ- ஓர் ஆறு என்றால் அதன் முழுப்பதம், ஆறு மட்டுமல்ல; அந்த ஆற்றில் வசிக்கும் உயிரினங்கள், ஆற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள வனங்கள், வன உயிரினங்கள், ஆற்றங்கரையோர மனிதச் சமூகங்கள் எல்லாம் சேர்ந்தவையே. ஓர் ஆறு பல்லுயிர் வளமையாக இருந்தால் மட்டுமே இவை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
நீர் மின் திட்டங்களுக்காக ஆற்றில் பெரும் அணைகளைக் கட்டுவது, ஆற்றின் போக்கை திசை மாற்றுவது, தொழிற்சாலை ரசாயன, சாயக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகளை ஆற்றில் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், இன்று இந்தியாவில் பல ஆறுகள் இறந்துவிட்டன. உயிருள்ள ஆறுகள் (Perennial River) அருகிவிட்டன. பல இறந்து கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரையில் தோன்றிய மனித நாகரிகங்களான சிந்து சமவெளியின் ஹரப்பா, பண்டைய மொசபடோமிய சுமேரியர்கள், அமெரிக்காவின் மாயா, அனாசாஜி, வடஅமெரிக்காவின் ஹோகோகம் ஆகியவை ஆற்றின் அழிவையொட்டியே அழிந்தன என்பது வரலாறு. தமிழகத்தில் பவானியும் தாமிரபரணியும் மட்டுமே உயிருள்ள நதிகள் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், அது பழம் பெருமை. உண்மையில், அவற்றின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அவை, மூச்சுத் திணறி செத்துக் கொண்டிருக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இரு ஆறுகளும் கூவத்தைப்போல, நொய்யலைப்போல இறந்து போகும். ஓர் ஆற்றின் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல; நமது அழிவும்தான்.
பவானி எப்படி இருக்கிறது? பவானியைக் காக்க என்ன செய்யலாம்? பிரச்சினைகள் என்ன? தீர்வுகள் என்ன? என்று அறிவதற்காக மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில், பவானியின் நதிமூலம் தொடங்கி சமவெளியில் அது காவிரியில் கலக்கும் கூடுதுறை வரை நதியின் ஊடாக, நதிக்கரை வனங்கள் ஊடாக, நதிக்கரை மனித நாகரிக சமூகங்கள் ஊடாக ஊர்ந்திடும் குறும் பயணத் தொடர் இது. ஒரு நதியின் வாக்குமூலம்...
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 மீட்டர் உயரம். நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சரிவின் மீது ஏறிக் கொண்டிருக்கிறோம். ஊட்டி யிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலை வில் இருக்கும் அவலாஞ்சி வனம் அது.
கோடையிலும் பனி போர்த்தியிருக் கிறது வனம். நடுங்க வைக்கிறது குளிர். ஆங்காங்கே அடர்த்தியான சோலைக் காடுகள். இடையே ஆளுயர புல்வெளிக் காடுகள். உச்சியைப் பார்க்க முடியாத அளவுக்கு சுமார் 200 அடி உயரத்துக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றன மரங்கள். லேசாக ஊடுருவும் சூரியனின் கதிர்கள் பட்டு அரிய வகைக் காளான்கள் நீலம், சிவப்பு என பல வண்ணங்களில் ஒளிர்கின்றன. நடக்கும்போது கால்களில் ஏறி சத்தமில்லாமல் ரத்தம் குடிக்கின்றன அட்டைகள். சத்தம் கேட்டு மிரண்டு ஓடுகின்றன கடமான்கள். தரைப் பொந்துகளிலிருந்து தலையை நீட்டி, உள்ளிழுத்துக் கொள்கின்றன காட்டுப் பன்றிகள்.
தூரத்து மலைச்சரிவில் செந்நாய் கூட்டம். தமிழகத்தில் அருகிவிட்ட நரிகளை இங்கே காணமுடிவது ஆச்சர் யமே. மிக அரிய உயிரினமான மர நாய் குடும்பத்தைச் சேர்ந்த இலிங்கன் (Nilgiri Marten) இங்கே வசிக்கின்றன. தவிர, யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளுக்கான புகலிடமாக இருக்கிறது அவலாஞ்சி வனம்.
தண்ணீர் பிரதேசம்!
மலைச் சரிவுகளில், பாறை இடுக்குகளில் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சிறு அருவிகள், சிற்றோடை கள் சலசலக்கின்றன. நடக்கும்போது பதியும் பாதக் குழியில் ஊற்றெடுக்கிறது தண்ணீர். பூமிக்குள் ஓடும் நீரோட்டம் அது. தண்ணீர் சூழ்ந்த பிரதேசத்தில் இருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. உலகின் மிகத் தூய்மையான, தரமான, சுவையான தண்ணீர் அது. கிட்டத்தட்ட பவானியின் நதிமூலத்தை அடைந்துவிட்டோம்.
இதேபோன்ற பல்லுயிர் வளமை நிறைந்த புவி அமைப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி- முக்குருத்தி தொடங்கி அமைதிப் பள்ளத் தாக்கின் எல்லை வரை பவானியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் நீள்கின்றன. இந்தியாவில் மிகவும் அதிகமாக மழை பெய்யும் பகுதிகளில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமான நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமும் இங்கேதான் இருக்கிறது.
இங்கே பல இடங்களில் மனிதன் புக முடியாத- மலை உச்சியின் அடர் வனங்களில் பயணிக்கும் பவானி, ஊட்டி யிலிருந்து அவலாஞ்சிக்கு செல்லும் மலைப் பாதையில் ஓரிடத்தில் பாறை களுக்கு இடையே துள்ளி வெளியே வருகிறாள். அங்கே ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. பவானியம்மன் கோயில். யார் கட்டியது? எப்போது கட்டப் பட்டது? என்பதற்கான தரவுகள் இல்லை. அவலாஞ்சி அல்லது மேல் பவானி அணையை கட்டியபோது பொறியாளர் ஒருவர் கோயிலைக் கட்டினார் என்கிறார்கள். அந்த வழியாகச் செல்பவர்கள் கோயிலில் வழியும் தண்ணீரை தொட்டுக் கும்பிட்டு அதையே தீர்த்தமாக குடிக்கிறார்கள், தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சுமார் அரை கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் பவானியின் மீது அவ்வளவு பக்தி மக்களுக்கு!
எப்படி உருவாகிறாள் பவானி?
உலகில் இருவகை மழைக் காடுகள் இருக்கின்றன. ஒன்று, வெப்ப மண்டல மழைக் காடுகள் (Temperate Rain Forest). மற்றொன்று, மித வெப்ப மண்டல மழைக் காடுகள் (Tropical Rain Forest). நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 23.50 கடக ரேகை வரை தெற்கே 23.50 மகர ரேகை வரை அமைந்துள்ள பகுதியே மித வெப்ப மண்டலம். நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் அந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளன.
வட இந்தியாவில் பாயும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா எல்லாம் இமயமலையின் பனி உருகுவதால் உற்பத்தியாகின்றன. ஆனால், பவானி மட்டுமின்றி தென்னிந்தியாவின் அத்தனை நதிகளுக்கும் ஆதாரம் மித வெப்ப மண்டல மழைக் காடுகளில் இருக்கும் சோலைக் காடுகளும் புல்வெளிக் காடுகளும்தான். சொல்லப் போனால் தென்னிந்தியாவின் மொத்த உயிர் ஆதாரங்களும் இந்தக் காடுகளில்தான் அடங்கியிருக்கின்றன.
அவலாஞ்சி வனத்தில் நரி, காட்டுப் பன்றி மற்றும் கடமான்கள். | படம்: சுதா|
சோலைக் காடுகளும் புல்வெளிக் காடு களும் ஒன்றுக்கொன்று நெருக்க மான தொடர்புடையவை. பொதுவாக, சமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப் பொழிவு பல மடங்கு அதிகம். திடீர் திடீரென்று காட்டு வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன் வேகம் நம் கற்பனைக்கு எட்டாதது. அந்த நேரங்களில் எல்லாம் மலை உச்சிகளிலிருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி, சமவெளியைக் காக்கும் இயற்கை அரண்களாக விளங்குகின்றன புல்வெளிக் காடுகள்.
சோலைக் காடுகளின் தாவரங்கள், மரங்களின் வேர்ப்பகுதிகளில் உள்ள பிரத்தியேகமான கடற்பஞ்சு போன்ற அமைப்பு, நீரை உறிஞ்சி, தங்க ளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கசிய விடு கின்றன. இயற்கையான சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு முறை இது. இவையே மலைச் சரிவுகளிலும் பாறை இடுக்குகளிலும் கசிகின்றன. ஆயிரக் கணக்கான நீர்க் கசிவுகள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கணக்கான சிற்றோடை களாகவும் அருவிகளாகவும் உருவெடுக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகிறது ஆறு. இப்படிதான் பவானியும் உருவாகிறாள்.

******************
தென்னிந்தியாவில் ஆற்றைக் காக்க நடைபெற்ற முதல் போராட்டம், 1963-ல் கேரளத்தின் சாலி ஆற்றங்கரையில் நடைபெற்றது.
கோழிக்கோடு மாவட்டம், வாழக்காடு பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட பிர்லா நிறுவனத்தின் ரேயான் நைலான் ஆலைக் கழிவுகளால் சாலியாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மீன்கள் செத்தழிந்தன.
அப்துல் ரகுமான் என்பவர் தலைமையில் அப்பகுதி மீனவர் சமூக மக்கள், தொழிற்சாலைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடினர். தொழிற் சாலைக் கழிவுகளால் அப்துல் ரகுமானுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. 1999, ஜனவரி 10-ம் தேதி போராட்டக் களத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன் பிறகு, மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இறுதியில் ஆலை மூடப்பட்டது.
முதல் முறையாக களங்கப்பட்ட பவானி
பவானியைக் காக்க மேட்டுப்பாளை யத்தில் நடைபெற்ற போராட்டம்தான், தமிழகத்தில் ஆற்றைக் காக்க நடைபெற்ற முதல் போராட்டம். சுமார் 10 ஆண்டுகள் தன்னெழுச்சியாக- உணர்வுப்பூர்வமாக மக்கள் நடத்திய போராட்டங்கள் அவை.
1960-ல் தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டம். அப்போது, கோவை பகுதியில் பருத்தி நூலிழைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோவையில் அப்போதுதான் மில்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. இதனால், பருத்தி நூலிழைத் தட்டுப்பாட்டை போக்க மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பவானி ஆற்றின் கரையில் ரேயான் செயற்கை பட்டு இழை உற்பத்திக்காக ‘சவுத் இந்தியா விஸ்கோஸ்’ என்ற பெயரில் சுமார் 300 ஏக்கரில் மிகப் பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டது. 1980-களில் இந்தத் தொழிற்சாலையை வட இந்தியாவைச் சேர்ந்த வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கியது.
அவர்கள், உற்பத்தியை அதிகரிக்க அசுரத்தனமான- இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், 1990-களில் ஆலையிலிருந்து ஏராளமான ரசாயனக் கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்தது. எத்தனையோ தசாப்தங்களாக சுத்தமான தண்ணீர் மட்டுமே ஓடிய பவானி, முதல் முறையாக களங்கப்பட்டது அப்போது
தான். அதன் படுகையில் விஷம் ஏறியது. மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன. பவானி சாகர் அணை தண்ணீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரைக் குடித்த மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர்.
தொடங்கியது மக்கள் போராட்டம்
1992-ல் சிறுமுகையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுதந்திரம், முதல் முறையாக இந்தச் சீர்கேட்டை எல்லாம் விளக்கி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். தொடர்ந்து, டி.டி.அரங்கசாமி தலைமையில் மேட்டுப்பாளையம் ‘பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தக் குழு, ஆலைக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. பசுமைப் போராளிகளான மருத்துவர் ஜீவானந்தம், சத்திய சுந்தரி, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் போராட்டங்களை முன்னெடுக்க, அரசியல் பிரமுகர்கள் ரமணி, மு.கண் ணப்பன், கீதானந்தம், சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.எஸ்.ராமலிங்கம்,கே.சுப்பராயன், ஆர்.டி.மாரியப்பன் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஈரோட்டிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறுமுகை வரை சைக்கிள் பேரணி நடத்தி உண்ணாவிரதம் இருந்தனர். 1994-ல் விஸ்கோஸ் மற்றும் அந்தப் பகுதியிலிருந்த 3 சாய ஆலைகளுக்கு எதிராக நடந்த முழு அடைப்பு காரண மாக மேட்டுப்பாளையம், திருப்பூர், சத்தியமங்கலம் நகரங்கள் ஸ்தம்பித்தன.
இது, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. மேட்டுப்பாளையம், அவினாசி, கோவை மேற்கு, கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, “மாசுக் கட்டுப்பாடு வாரியச் சட்டப் பிரிவு 33 (அ) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து, அந்தத் தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதன் தொழிலதிபர்களுக்கு அறிவுறுத்தப்படும். இனி அங்கு அந்தத் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று அப்போதைய தொழில் துறை அமைச்சர் பதில் அளித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை
ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படாததால் 1995, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 50 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
1996-ல் கோவை நகரம் அவினாசி சாலையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். உச்சபட்ச மாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
தொடர் போராட்டங்களின் விளைவாக 8.5.1998 அன்று தமிழக அரசு ‘‘தமிழகத்தில் ஆற்றங்கரையிலிருந்து 5 கிலோமீட்டருக்குள் தொழிற்சாலை அமைக்கக் கூடாது” என்று தடை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அரசாணையை (எண்: 127) வெளியிட்டது. தமிழகத்தில் இன்று ஓரளவேனும் ஆறுகள் தப்பிப் பிழைத்து இருக்கின்றன எனில், அதற்கு பவானிக்காக மக்கள் நடத்திய போராட்டங்களும், அதன் விளைவாக வெளியிடப்பட்ட அரசாணையும்தான் காரணம்.
அதைத் தொடர்ந்து, 1999-ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. ஆற்றைக் காக்க மக்கள் நடத்திய உணர்வுப்பூர்வ போராட்டம் வென்றது. ஆனால், அன்றைக்கு இருந்த உணர்வு இன்றைக்கும் மக்களிடம் இருக்கிறதா?
(பாய்வாள் பவானி)

(பாய்வாள் பவானி)

ஞாயிறு, 7 ஜூன், 2015

http://www.asercentre.org/Keywords/p/218.html


Maggi

கையடக்க வாக்மேனிலிருந்து அதிவேகப் புல்லட் ரயில்வரை உலகுக்கு ஜப்பான் அளித்த கொடைகள் ஏராளம். ஜப்பான் மக்களிடம் 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஜப்பான் கண்டுபிடித்த பொருட்களிலேயே சிறப்பான பொருள் ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்'தான் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் பெரும்பாலானவர்கள் வாக்களித்திருந்தனர். ஜப்பான் மக்கள் மட்டுமல்ல, உலகைக் கவர்ந்த உடனடி உணவு வகைகளில் நூடுல்ஸுக்குத் தனியிடம் உண்டு.
ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு
இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஜப்பானில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அப்போது அவர்களுக்கு அந்நியமான பிரெட்டை சாப்பிட ஜப்பானிய மக்கள் வலியுறுத்தப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய, சுவையான, சீக்கிரம் கெட்டுப்போகாத, அதற்கெல்லாம் மேலாக ஜப்பானிய மக்கள் பாரம்பரியத்திலிருந்து விலகாத உணவு ஒன்று தேவை என்று உணர்ந்தார் மோமோஃபுகு அண்டோ. அப்போது அவர் கண்டறிந்ததுதான் உடனடி நூடுல்ஸ். இப்படியாக ஜப்பானில் அறிமுகமாகி, உலகம் முழுவதும் அவசரத்துக்குக் கைகொடுக்கும் உணவாக உடனடி நூடுல்ஸ் மாறிவிட்டது.
‘இரண்டே நிமிடங்களில் சமைத்துவிடலாம்' என்ற அடையாளத்துடன் எளிதான மாலை சிற்றுண்டியாக நெஸ்லே நிறுவனம் ‘மேகி' என்ற உடனடி நூடுல்ஸை 1980-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குழந்தைகளை இலக்காகக்கொண்டு உடனடி நூடுல்ஸ் விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் சமீபகாலமாக இதை விளம்பரப்படுத்தினர்.
காரீயம், எம்.எஸ்.ஜி. ஆபத்து
இன்றுவரை அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நூடுல்ஸ் பிராண்டான மேகியின் டேஸ்ட் மேக்கரில் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். காரீயம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது என்பதால், கற்றல் குறைபாடுகள், நடத்தை குறைபாடுகளை அது உருவாக்கலாம். மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
உடனடி நூடுல்ஸின் டேஸ்ட் மேக்கரில் காரீயம் மட்டுமல்லாமல் மோனோ சோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி.) என்ற உப்பும் அதிகப்படியாக இருப்பது தெரியவந்துள்ளது. உணவுப்பொருட்கள் தரம் மற்றும் உணவு கூட்டுப்பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் (2011)-ன்படி செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படக்கூடாது. அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும், இந்த மோனோ சோடியம் குளூட்டமேட் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.
வந்தது தடை
மேகி நூடுல்ஸில் காரீயம், எம்.எஸ்.ஜி. அளவுக்கு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதால் உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, டெல்லி, கேரள மாநிலங்களில் அரசு விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் மேகி நூடுல்ஸை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளன அம்மாநில அரசுகள்.
டெல்லியில் உள்ள அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) 2012-ல் நடத்திய பரிசோதனையில், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மேகி நூடுல்ஸில் கூடுதலான உப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு பாக்கெட் நூடுல்ஸில் 3 கிராம் உப்பு இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் நமக்குத் தேவையான உப்பின் அளவே ஆறு கிராம்தான்.
“ஒரு பாக்கெட் நூடுல்ஸை ஒருவர் சாப்பிட்டால், முழு நாளும் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் இருக்கும் அதிகபட்ச உப்பால் உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அவை தரும் சத்தில்லாத கலோரிகளும் உடலைப் பாதிக்கக்கூடியவை" என்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் திட்ட மேலாளர் அமித் குரானா.
இந்தியச் சந்தையில் விற்கப்படும் உடனடி நூடுல்ஸில் வைட்டமின் சத்துகள் உள்ளதாகவும் விளம்பரங்கள் வருகின்றன. சிறிதளவுகூட நார்ச்சத்து இல்லாத உணவால் மற்ற எந்தச் சத்தையும் தர முடியாது. 70 சதவீதம் மாவுச்சத்தைக் கொண்ட நூடுல்ஸை ஆரோக்கியமான உணவு என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் அமித்.
சாப்பிடுவதில் என்ன இருக்கிறது?
ஒரு டின்னிலோ, பாக்கெட்டிலோ, குப்பியிலோ அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட-செறிவூட்டப்பட்ட உணவில் கலந்திருக்கும் பொருட்கள் குறித்தும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் குறித்தும் லேபிளில் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். அத்துடன் தவிர்க்கப்பட வேண்டிய உப்பு, கொழுப்பு போன்றவற்றை ஒரு வாடிக்கையாளர் தினசரி எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் லேபிளில் இருந்தாக வேண்டும்.
நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகியும், தான் வாங்கும் ஒரு உணவுப் பொருளைப் பற்றி ஒரு வாடிக்கையாளர் முழுமையாகத் தெரிந்துகொண்டு தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் அரசு வகுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
குழந்தைகளே இலக்கு
உடனடி நூடுல்ஸ் தொடங்கி அனைத்து உடனடி உணவு வகைகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களும் குழந்தைகளையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எது ஆரோக்கியமான உணவு என்பதை முடிவுசெய்யும் முதிர்ச்சியற்றவர்கள் குழந்தைகள். அவர்களை முதன்மை வாடிக்கையாளர்களாகக்கொண்டு செய்யப்படும் விளம்பரங்கள் சார்ந்து, அரசு சில கட்டுப்பாடுகளை விதிப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை.
நாம் சாப்பிடும் உணவின் ஆரோக்கியம் தொடர்பாக அரசு மற்றும் உணவு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது இப்பிரச்சினைக்குத் தீர்வளிக்கப் போவது இல்லை. வண்ணமயமான விளம்பரங்களைப் பார்த்துப் பாக்கெட் பாக்கெட்டாகச் சமையலறையை நிறைக்கும் பெரியவர்களும் பெற்றோர்களும் இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது உடனடி நூடுல்ஸ் சர்ச்சை.
மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்? - படிக்க ‘மேகி' மட்டும்தான் குற்றவாளியா? - மருத்துவர் கு. சிவராமன்

------------------
மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்?:
ஓர் உணவுப் பொருளில் சுவை என்பது இயல்பாக வரவேண்டும். இயற்கையாகச் சில உணவுப் பொருட் களைச் சேர்க்கும்போது உருவாகும் சுவையைத் தாண்டி கூடுதலாகச் சுவையூட்டுவதற்கு, மருத்துவ, உணவியல் அடிப்படையில் நமது பாரம்பரியத்தில் சுவைகள் கூட்டப்பட்டன. ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை போன்ற சுவையூட்டிகளின் குணமறிந்து சேர்க்கப்பட்டன.
அடிப்படையே தவறு
இந்தப் புரிதலும் அக்கறையும் தூக்கியெறியப்பட்ட உணவுப் பொருள் பெருவணிகத்தில், வலிந்து சுவையைக் கூட்டும்போது, எந்தப் பொருட்களின் அடிப்படையில் அந்தச் சுவை கூட்டப்பட்டது என்பதை அறிய முடிவதில்லை. இப்படி வலிந்து சுவையூட்டுவது அடிப்படையிலேயே தவறு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாகவும், அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும் விற்பனையாகும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற செயற்கை சுவையூட்டியின் தயாரிப்பு முறை தெளிவற்றதாக இருக்கிறது. தாவரப் பொருட்களில் இருந்து குளூட்டமிக் அமிலம் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் தயாரிப்பு முறை ரகசியம் காக்கப்படுகிறது. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாது.
அடிமைப்படுத்தும்
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உள்ளிட்ட உடனடி உணவுப் பொருட்களில் அமிலத்தன்மை வாய்ந்த இந்த உப்பு சேர்க்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் புண், அல்சர் போன்ற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளைச் சாதாரணமாக இது ஏற்படுத்தலாம். இந்த உப்பு ஒருவித அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடியது. இந்த உப்புச்சுவையை உணர்ந்தவர்களுக்கு, மற்ற உணவு வகைகளின் மீதான நாட்டம் குறையும். டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான ‘தி டேஸ்ட் தட் கில்’ என்ற புத்தகத்தில், மோனோ சோடியம் குளூட்டமேட் மூளையின் ஹைப்போ தலாமஸ்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், வயிற்றுவலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பதுவரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேகி மட்டுமல்ல
அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல, வேறு பல உடனடி நூடுல்ஸ் வகைகள், ஹோட்டல்-ரோட்டு கடைகளில் விற்கப்படும் சீன, தந்தூரி உணவு வகைகள், சிக்கன், பனீர், கடாய் உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது.
திருமண வீடுகள், விசேஷங்களுக்குச் சமைக்கும்போதும் சாம்பார், ரசத்தில்கூட இதைக் கலந்துவிடுகிறார்கள். பர்கர், ரொட்டி, கோழி வறுவல் உள்ளிட்ட பிரபலப் பன்னாட்டு ஹோட்டல் சங்கிலித்தொடர் கடைகளில் பரிமாறப்படும் உணவு வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஒருவித தனிச்சுவை கிடைக்கிறது.
மேகி நூடுல்ஸை தடை செய்வதில் காட்டும் அக்கறையை, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைகளைத் தடை செய்வதிலும் அரசு காட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
*****
கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள், கெட்டுபோன இறைச்சி பார்சல்கள், சுகாதரமில்லாத சாலையோர உணவுகள் என நமது உடல் நல, ஆரோக்கியங்களோடு விளையாடும் வர்த்தக நடவடிக்கைகளை தினசரி பார்த்தே வருகிறோம். சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது இவற்றை கண்டுபிடித்து அழிப்பதும், மீண்டும் வழக்கமாக நடப்பதும் சகஜமாகிவிட்டது.
இது உள்ளூர் அளவிலான பிரச்சி னைகள். ஆனால் இந்த இடத்தில் மக்களின் நம்பிக்கை சார்ந்தவையாக இருக்கின்றன பெரு நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து உணவுப்பொருட்களும் தரமானவையாக இருக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.
சிறு வணிகர்கள், சிறு உற்பத்தி யாளர்கள் செய்யும் தவறுகள் உடனடியாக கண்ணுக்குத் தெரிவது போல பெரு நிறுவனங்களின் தவறுகள் தெரிவதில்லை. தொடர் கண்காணிப்பு மற்றும் பல அழுத்தங்களையும் தாண்டிதான் பெரிய நிறுவனங்களின் தவறுகள் தெரிய வருகின்றன, அந்த வகையில் சமீபத்தில் சிக்கலில் மாட்டியுள்ளது நெஸ்லே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான மேகி நூடுல்ஸ்.
மேகி நூடுல்ஸ் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயன உப்பு (மோனோசோடியம் க்ளூட்டமேட்) மற்றும் ஈயம் (லெட்) இருப்பதாக ஆய்வறிக்கை வெளிவர இந்தியாவின் பல மாநில அரசுகளும் மேகி நூடுல்சுக்கு தற்காலிக தடையும், தரப் பரிசோதனைக்கான பரிந்துரையும் செய்துள்ளன.
டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களிலும், நேபாளத்திலும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் அனுமதிக் கப்பட்ட அளவைவிட அதிக ரசாயனம் கலந்திருப்பது சட்ட ரீதியாக குற்றம் என உணவுத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேகி நூடுல்ஸை துரித உணவாக மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பிராண்டாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் விரும்பும் உணவிலேயே ரசாயனம் என்கிறபோது, அந்த குழந்தையின் ஆரோக்கியம் சமச்சீரான வளர்ச்சி எல்லாவற்றுக்கும் யார் பெறுப்பேற்பது?
முன்னணி நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமே இந்த தவறுகளை செய்கிற பட்சத்தில் இவர்களின் உணவுப்பொருட்கள் மீது எப்படி நம்பிக்கை வைப்பது? என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
சாக்லேட்டில் புழு
2003 ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கேட்பரீஸ் சாக்லேட் பாக்கெட்டில் புழுக்கள் இருப்பதாக மகாராஷ்டிர மாநில உணவுதுறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தவறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொண்டு 6 லட்சம் டெய்ரி மில்க் சாக்லேட் பாக்கெட்டுகளை நிறுவனம் திரும்ப பெற்றது.
நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது மகாராஷ்டிர அரசு. சில மாதங்களே டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சந்தையில் கிடைக்கவில்லை. நிறுவனத்தில் உற்பத்தி ஆலையையோ அல்லது உற்பத்தி அனுமதியையோ ரத்து செய்யவில்லை. சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்துவிட்டது அந்த நிறுவனம்.
குளிர்பானங்களில் ரசாயனம்
ஏற்ெகனவே இந்தியாவில் முன்ன ணியில் உள்ள பெப்சி மற்றும் கோக் குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஆசிட் மற்றும் ரசாயனங்கள் போன்றவை அதிகம் உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட 27 சதவீதம் அதிகமாக இந்த பானங்களில் ரசாயனம் இருக்கிறது என்றது அந்த அறிக்கை. இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாகக்கூட முடியலாம் என்றும் அந்த ஆய்வு சொன்னது. 2006-ல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அமைதியாகி விட்டது பிரச்சினை.
இது போன்று நுகர்வோரின் உயிரோடு விளையாடும் முன்னணி நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள நுகர்வோர் அமைப்பினரிடம் பேசினோம்.
உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் (2006) இந்தி யாவில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை தீவிரமாக கண்காணிக் கிறது. மக்களின் உடல்நலனுக்கு கேடாகும் எந்த உணவுகளையும் அனுமதிப்பதில்லை. உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் அந்த உணவு குறித்த, சேர்க்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் நுகர்வோர் தெரிந்து கொள்வதற்கு ஏற்ப அச்சிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் எந்த நிறுவனங்களும் இதை ஒழுங்காகக் கடைபிடிப்பதில்லை.
பொதுமக்களைப் பொறுத்தவரை துரித உணவுகள் தீங்கு விளைவிப்பவை என்கிற புரிதல் இருந்தாலும், அவற் றை தவிர்க்க முடியாத உணவுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இரண்டு நிமிட தயாரிப்பு என்றோ, குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள் என்றோ சமரசம் செய்து கொள்ளக்கூடாது. நமது உடல்நலம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நமக்குத்தான் இருக்க வேண்டும்.
துரித உணவுகள் இந்திய உணவு பழக்கத்துக்கு ஏற்றத்தல்ல, பாரம்பரிய உணவுகளே சிறந்தது என்று பலரும் இந்த நேரத்தில் சொல்லி வருவதையும் கவனிக்க வேண்டும்.
இன்னொரு புறம் அரசும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். விதிமுறைகளை மீறுகிற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதை அதிகாரிகள் செய்ய வேண்டும். பெருநிறுவனங்களுக்கு சாதகமாகக் செயல்படும் போக்கு இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் அரசு, நுகர்வோர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாவருக்குமே கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. இதை உணர்ந்து செயல்படும்போது இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கின்றனர்.
மற்றொரு சிக்கலில் நெஸ்லே
இதற்கிடையே நெஸ்லே நிறுவனத்தின் நான் ப்ரோ 3 பால் பவுடர் குறித்து இன்னொரு புகார் எழுந்துள்ளது. கோவையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைக்கு வாங்கிய பால்பவுடரில் புழுக்கள் இருந்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன் கோவையிலுள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தில் சோதனை செய்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில் பால் பவுடரில் உயிருடன் 28 புழுக்களும், 22 சிறு வண்டுகளும் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு துறையில் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரிக்க வந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பால் பவுடருக்கு பதிலாக வேறு பவுடர் டின்னை கொடுப்பதாகவும், புழுக்கள் உள்ள டின்னை திரும்ப பெறுவதாகவும் கூறியுள்ளனர். ஆய்வறிக்கை குறித்த தகவல்களுக்கு தகுந்த பதிலை சொல்லாமல் தங்களது தவறை மூடி மறைக்கவே முயற்சி செய்துள்ளனர். தற்போது இந்த பால் பவுடர் விவகாரம் விசாரணையில் உள்ளது.
தவறுகள் நேர்கிற பட்சத்தில் மட்டும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. சம்பந்தப்பட்ட (நெஸ்லே) நிறுவனமோ தாங்கள் தவறே செய்யவில்லை என்கிறது. நிறுவனங்கள் சமூக பொறுப்புக்கு (சிஎஸ்ஆர்) தனியாக கோடி கோடியாக கொட்டிக் கொடுக் கின்றன. சமூக பொறுப்பு என்பது தனியாக பணம் செலவு செய்வது மட்டுமல்ல, தரமான உணவுப்பொருட்களை தயார் செய்வதும் சமூக பொறுப்புதான் என்பதை நிறுவனங்கள் மறந்துவிடக் கூடாது
- ஆதி