புதன், 18 நவம்பர், 2015

பூமி அப்படி என்ன ஒசத்தி?

பூமி அப்படி என்ன ஒசத்தி?

என். ராமதுரை
COMMENT   ·   PRINT   ·   T+  
சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!
குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.
முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.
பனிக்கட்டி, பாறை: கோள்கள்
மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.
மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.
பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.
நீர்சூழ் உலகு!
மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.
நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.
ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.
ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.
வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.
சாத்தியமற்ற கிரகங்கள்
புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.
வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.
செவ்வாய் தேறுமா?
சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.
ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.
பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.
- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
வியாழன்தோறும் தொடர்வோம்…

வ.உ.சி.யும் தமிழ்ப் பணிகளும்!

வ.உ.சி.யும் தமிழ்ப் பணிகளும்!

அ.கா. பெருமாள்
COMMENT (5)   ·   PRINT   ·   T+  
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
விடுதலைப் போராட்ட வீரர் என்ற பொது முகத்தையும் தாண்டி தமிழறிஞர் எனும் முகமும் வ.உ.சி.க்கு உண்டு!
மொழிப்பற்று வழி நாட்டுப் பற்று உருவாகும்; அதனால் தலைவர்கள் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என வ.உ.சி. வேண்டுகோள் விடுத்தார்; மேடைகளிலும் பேசினார்.
கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி. (1872 - 1936) ஆறாண்டு சிறைத்தண்டனையிலிருந்து, 1912 டிசம்பர் 24 அன்று விடுதலை பெற்றார். அதன் பின் புதுமனிதராக மாறிவிட்டார். “மகாபாரதக் கதை முடிவில் காண்டீபத்தைத் துறந்து இமயம் நோக்கி நடந்த அர்ஜுனனைப்போலத் தம் வீரம் - பெரும் அரசியல் தலைமை துறந்து பொதுப்பணியில் ஆழ்ந்தார்” என்று அப்போதைய நிலையை வர்ணிக்கிறார் அ. னிவாசராகவன். தமிழறிஞரும் பேராசிரியருமான வையாபுரிப்பிள்ளை, “தேசிய விஷயங்களில் உழைத்துவந்தவர் இப்போது தாய்மொழியாகிய தமிழின் பொருட்டு உழைக்க முன்வந்து சென்னையில் தங்கினார்” என்கிறார். சிறைவாழ்க்கை வ.உ.சி.யை மொழியின் பக்கம் திரும்பும்படியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. இதன் பின்னர் தன் 24 ஆண்டுகளை இலக்கியம், இலக்கணம், சைவம் படிப்புக்காக ஆராய்ச்சிக்காக வ.உ.சி. செலவிட்டார்.
தமிழ்ப் பற்று
வ.உ.சி. தமிழறிஞரானதோ இலக்கியப் பதிப்பாசிரியரானதோ தற்செயலாய் வந்ததல்ல. அவர் பிறந்த தென்பாண்டி நாடு தமிழ், சைவம் இரண்டுக்கும் களமாக இருந்த இடம். அவர் சிறையிலிருந்த போதே திருக்குறள் உரைகளைப் படித்திருக்கிறார்.
19-ம் நூற்றாண்டில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். இதனால் பெரிய கூட்டங்களுக்குச் சாதாரண மக்கள் வருவதில்லை. வேடிக்கை பார்க்க சிலர் வந்தனர். அந்தக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் ஒரு வாசகர் “நமது ஜனத்தலைவர்கள் இங்கிலீசில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை” என்று எழுதியதை பாரதி மேற்கோள் காட்டினார். வ.உ.சி இதைத் தலைவர்களிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மொழிப்பற்று வழி நாட்டுப் பற்று உருவாகும்; அதனால் தலைவர்கள் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என வ.உ.சி. வேண்டுகோள் விடுத்தார்; மேடைகளிலும் பேசினார்.
தமிழ் ஆராய்ச்சி
வ.உ.சி. பதிப்பாசிரியர் கட்டுரையாசிரியர். மொழி பெயர்ப்பாளர்; உரையாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் பதிப்பித்தவற்றில் தொல்காப்பியம், சிவஞான போதம், திருக்குறள் ஆகிய மூன்றும் முக்கியமானவை. தொல்காப்பியம் இளம்பூரணத்தை வ.உ.சி. பதிப்பித்ததை வையாபுரிப்பிள்ளை எழுதியிருக்கிறார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயலை வ.உ.சி வெளியிடும் போது செல்வக்கேசவராய முதலியார் உதவியிருக்கிறார். பின்னர் வ.உ.சி.யும் வையாபுரிப்பிள்ளையும் இணைந்து பொருளதிகாரம் முழுவதையும் பதிப்பித்திருக்கின்றனர்.
திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையில் சில இடங்களில் பிழை உள்ளது என்ற கருத்துடையவர் வ.உ.சி. அவருக்குப் பிடித்த உரையாசிரியர் மணக்குடவர். இந்த உரை தமிழ்ப் பண்பாடு கருதி எழுதப்பட்டது என்று கருதினார் அவர். 1918-ல் வ.உ.சி.யின் மணக்குடவர் உரை வெளிவர தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உதவியிருக்கின்றனர்.
இன்னிலையால் ஏமாந்தார்
பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் இன்னிலையும் ஒன்று என நம்பி அதைப் பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது; தவறானது என மயிலை சீனி வெங்கடசாமி, மு. அருணாசலம் போன்றோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம அய்யர் பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று ‘கைந்நிலை’ என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும், கு. அருணாசலக்கவுண்டரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திருநெல்வேலியைச் சார்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் ‘இன்னிலை’ என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சியிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க் கணக்கு நூற்களில் ஒன்று என கூறியிருக்கிறார். வ.உ.சி. யிடம் இதற்கு கணிசமாகப் பணமும் பெற்றிருக்கிறார். வ.உ.சி. அந்த ஏட்டை வெளியிட்டிருக்கிறார். சொர்ணம்பிள்ளை இது போலவேறு சிலரையும் ஏமாற்றியிருக்கிறார் அவர்களில் ஒருவர் வ.வே.சு. அய்யர்.
சிவஞான போதம்
வ.உ.சி. சிவஞானபோதத்தை 1935-ல் உரையுடன் வெளியிட்டிருக்கிறார். இதன் இரண்டாம் பதிப்பை முன்னுரை, பின்னிணைப்புகள், படங்களுடன் ஆ. வெங்கடாசலபதி - வெளியிட்டிருக்கிறார் (1999) இப்பதிப்பில் வ.உ.சி சைவசித்தாந்தம் தொடர்பாக எழுதி வெளிவராத ஒரு கட்டுரையும் உள்ளது.
வ.உ.சி. ஆரம்பத்திலிருந்தே சைவசமயம் தொடர்பான செய்திகளில் தீவிரமாய் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின் சென்னையிலும் (1913-1920) கோயம்புத்தூரிலும் (1920-24) வாழ்ந்தபோது சைவம் / தமிழ் இரண்டும் அவரை விடவில்லை. இக்காலங்களில் யோக வாசிஷ்டத்தை முறையாகப் படித்ததைச் சொல்லியிருக்கிறார். வ.உ.சி.யின் சிவஞானபோத இரண்டாம் பதிப்புக்கு அணிந்துரை எழுதிய சி.சு.மணி” வ.உ.சி கடும் சைவத்தைக் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார். அவருடைய சீர்த்திருத்த எண்ணங்கள் வேதாந்தத்தோடு சித்தாந்தத்தை சமரசம் காண வைத்துள்ளன” என்கிறார். பொதுமக்கள் புரியும்படியான உரை வேண்டும் என்பதற்காக சிவஞானபோத நூலுக்கு உரை எழுதியதாக வ.உ.சி. கூறுகிறார்.
வ.உ.சி. ‘மனம் போன வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என்ற நூற்களை மொழிபெயர்த்திருக்கிறார். வ.உ.சியை பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் (1864 - 1912) பெரிதும் கவர்ந்திருக்கிறார். ஆலன் கீழைநாட்டு தத்துவங்களில் ஈடுபாடுடையவர். வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போன வாழ்வு’ என்ற நூல் 13 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. வ.உ.சி. வாழ்ந்தபோதே இப்பதிப்புகள் வந்தன. ‘வலிமைக்கு மார்க்கம்’ நூல் 9 பதிப்பும் அகமே புறம் 6 பதிப்பும் பெற்றன. ஒருவகையில் வ.உ.சியின் வாழ்வாதாரத்துக்கு கடைசி காலத்தில் ஜேம்ஸ் ஆலன் உதவியிருக்கிறார்.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
இன்று வ.உ.சி-யின் நினைவுநாள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

crowd funding

கிக்ஸ்டார்ட்டர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கிரவுட் ஃபண்டிங் தளமான கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதி கோரப்பட்ட திட்டங்களுக்கு இதுவரை 200 கோடி டாலர் அளவுக்கு நிதி உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது கிக்ஸ்டார்ட்டரின் சாதனை மட்டும் அல்ல. இணையத்தின் சாதனையும் கூட! கிரவுட் ஃபண்டிங் எனும் கருத்தாக்கத்திற்கான வெற்றியின் அடையாளமும்தான். உலகில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இது உணர்த்துகிறது. கேட்டால் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது இந்தப் புள்ளி விவரம்.
இந்தச் சாதனை எண்ணிக்கையை எட்ட கிக்ஸ்டார்ட்டருக்கு ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால் 2009-ல் அறிமுகமான கிக்ஸ்டார்ட்டர் முதல், 100 கோடி டாலர் நிதி அளவை எட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது என்ற நிலையில், இரண்டாவது 100 கோடியை எட்ட 19 மாதங்களே ஆகியிருக்கிறது என்பது கிக்ஸ்டார்ட்டரின் வளர்ச்சியை மட்டும் அல்ல, இணையம் மூலம் நிதி திரட்டும் கோட்பாடு எந்த அளவுக்குப் பரவலாகி, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.
இணையத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான் இது.
புதிய திட்டங்கள் அல்லது புதிய தயாரிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் அதற்கான நிதி தேடி அங்கும் இங்கும் அலையும் தேவை இல்லாமல், இணையம் மூலமே நிதி திரட்டிக்கொள்ளும் வசதியே கிரவுட் ஃபண்டிங் என்று சொல்லப்படுகிறது.
புதிய முயற்சிக்காக நிதி கோருபவர்கள் தங்கள் மனதில் உள்ள எண்ணத்தை விரிவாக விவரித்து, இணையவாசிகளிடமிருந்து அதற்கு ஆதரவு கேட்கலாம். அந்த எண்ணத்தை நம்புகிறவர்கள் தங்களால் இயன்ற தொகையை அளிக்க முன்வரலாம். இப்படி இணையவாசிகள் பலர் கூடிக் கைகொடுத்தால் கேட்ட நிதி திரண்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த கருத்தாக்கத்தைப் பிரபலமாக்கிய முன்னோடி தளமாக கிக்ஸ்டார்ட்டர் அறியப்படுகிறது. கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதி திரட்டலுக்கு பெப்பிள் ஸ்மார்ட்வாட்ச் உட்பட பல வெற்றிக்கதைகள் இருக்கின்றன. தோல்விக் கதைகளும் அநேகம் உண்டென்றாலும் இணையத்தை மட்டுமே நம்பிக் காரியத்தில் இறங்கலாம், நல்ல முயற்சியாக இருந்தால் முகம் தெரியாத இணையவாசிகள் கைகொடுத்துக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை கிக்ஸ்டார்ட்டர் ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடையாளம்தான் கிக்ஸ்டார்ட்டர் பெருமைப்பட்டுள்ள மைல்கல்.
இதைக் கொண்டாடும் வகையில் கிக்ஸ்டார்ட்டர் தனி இணையப் பக்கத்தை அமைத்து (https://www.kickstarter.com/2billion) அதில் சாதனை விவரங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளது. மொத்தம் 95 லட்சம் இணையவாசிகள் இதுவரை பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளனர். அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்தியா உள்ளிட்ட 230 நாடுகளைச் சேர்ந்தவர்களும் நிதி அளித்துள்ளனர்.
இவர்களில் 30 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை ஆதரித்துள்ளனர். 49 பேர் தனித்தனியாக 1,000 திட்டங்களுக்கு மேல் நிதி அளித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலானோர் 100 டாலர் மற்றும் அதற்குக் குறைவாக நிதி அளிக்க முன்வந்துள்ளனர்.
10 கோடி டாலர் அளவுக்கான நிதி எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியும் கிக்ஸ்டார்ட்டர் போன்ற தளங்களில் நிதி அளிப்பவர்கள் பெரிதாக எதையும் பதிலுக்கு எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்கு அதிகபட்சமாக கிடைப்பது ஒரு மன‌மார்ந்த நன்றியும், டி-ஷர்ட் அல்லது இன்னும் பிற பரிசுப் பொருட்கள் மற்றும் நிதி கோருபவர்களின் தயாரிப்புகளும்தான்.
உண்மையில் புதிய முயற்சியை ஆதரிக்கும் எண்ணமே நிதி அளிப்பவர்களை இயக்குகிறது.
கிக்ஸ்டார்ட்டரில் 2.60 லட்சத்திற்கும் மேலான திட்டங்களுக்கு நிதி கோரப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் திட்டங்கள் வரை வெற்றிகரமாக நிதி இலக்கை அடைந்துள்ளன. கிக்ஸ்டார்ட்டரில் வெற்றிகரமாக நிதி திரட்டுவதற்கான முக்கிய அம்சங்கள் என்ன என்று ஆய்வு செய்யும் அளவுக்கு இந்த நிதி திரட்டும் மேடை செல்வாக்குப் பெற்றிருக்கிறது.
கிக்ஸ்டார்ட்டர் திட்டங்கள் பல வகை, பல ரகம் என்றாலும், அவற்றின் ஆதார அம்சத்தைப் புரிந்து கொள்வதற்கான உதாரணமாக சமீபத்திய நிதி திரட்டும் முயற்சி ஒன்றைப் பார்க்கலாம்.
‘தி மான்ஸ்டர் பிராஜக்ட்' (http://www.gomonsterproject.com/faq) எனும் அந்தத் திட்டம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கலையில் ஆர்வம் உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளி நிர்வாகிகளும் சரி, பெற்றோர்களும் சரி பிள்ளைகளின் கலை ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே பள்ளிகளில் பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பிள்ளைகளின் கற்பனை ஆற்றலை வளர்ப்பது பற்றி எல்லாம் பலரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் மனித குலத்தின் வளர்ச்சிக்குப் படைப்பாற்றல் முக்கியமானது. இந்தக் கருத்தை வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கற்பனை ஆர்வத்தை வளர்த்தெடுக்க 'கோ மான்ஸ்டர் பிராஜக்ட்' விரும்புகிறது.
அதன்படி பள்ளிக் குழந்தைகளை பூதங்களை ஓவியமாக வரைய வைக்கின்றனர். பிஞ்சுக்கரங்கள் வரையும் அந்த ஓவியங்களைத் தேர்ச்சி பெற்ற ஓவியக் கலைஞர்களிடம் கொடுத்து அவர்கள் அதை மெருகேற்றி வரைந்து தரும் முழு ஓவியத்தை பிரேம் போட்டு அதை வரைந்த குழந்தையிடம் அளிக்க உள்ளனர். தங்கள் கற்பனை எப்படி வடிவம் எடுத்துள்ளது என்பதைப் பார்க்கும்போது பிள்ளைகள் மனதில் படைப்பாற்றல் கீற்று வலுவாகி தாங்களும் இதில் தீவிரமாக ஈடுபடலாம் என்ற எண்ணம் உண்டாகும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நம்பிக்கை.
இந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக, பள்ளிக் குழந்தைகளைச் சென்றடைய, அவர்கள் படைப்புகளை உலகம் முழுவதும் உள்ள ஓவியர்கள் கொண்டு மேம்படுத்தத் தேவையான நிதி கோரி இந்தத் திட்டத்தின் பின்னே உள்ள குழு கிக்ஸ்டார்ட்டரை நாடியுள்ளது.
வளரும் தலைமுறை கற்பனை, கலை, படைப்பாற்றல் போன்றவற்றை வாழ்வின் முக்கிய அம்சமாக நினைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் இதைச் செயல்படுத்தி சமூகத்தின் போக்கில் சின்னதாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர இணையவாசிகள் மீது நம்பிக்கை வைத்து கிக்ஸ்டார்ட்டருக்கு வந்திருக்கிறது.
கிக்ஸ்டார்ட்டர் போலவே இந்திய இணையப் பரப்பிலும் விஷ்பெரி, கெட்டோ போன்ற இணையதளங்களும் இருக்கின்றன.

நேருவின் புத்தகத்திலிருந்தே

மக்களும் வரலாறும் இணை பிரியாதவை. மக்களைப் பற்றிப் பேசாத வரலாறு வரலாறே அல்ல
என் வயதில் இருக்கும் தமிழர்களில் பெரும் பாலானவர்களுக்கு உலக வரலாற்றைப் பற்றிய அறிமுகம் நேருவின் புத்தகத்திலிருந்தே கிடைத்திருக்கும். ஓ வி அழகேசன் மொழிபெயர்ப்பு என்று எண்ணுகிறேன். திருநெல்வேலி சந்திப்பு மேலரதவீதியில் இருந்த நூலகத்தில் எனக்கு நானே ஒதுக்கிக்கொண்ட ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு படித்த ஞாபகம். 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவர் சொன்னது நினைவில் நிற்கிறது. ‘நாம் கன்னியாகுமரியில் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தது உனக்கு நினைவிருக்கிறதா, என்னுடைய எண்ணத்தில் நிறைந்திருந்தது இமயமலை. இரண்டுக்கும் இடையில் எத்தனை வறுமை, எத்தனை துன்பம்.’ என்று நேரு இந்திராவுக்கு எழுதியிருந்தார். மக்களும் வரலாறும் இணைபிரியாதவை. மக்களைப் பற்றிப் பேசாத வரலாறு வரலாறே அல்ல என்ற அடிப்படை உண்மையை அவரது புத்தகத்திலிருந்தே தெரிந்துகொண்டேன். முழுக்க முழுக்க மார்க்சியப் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு உலக வரலாற்றின் அரிச்சுவடியாக அது அமைந்தது.
நேருவின் முதலிரண்டு புத்தகங்கள்
1927-ல் நேரு மாஸ்கோவுக்கு நான்கு நாட்கள் பயணம் செய்தார். அந்த அனுபவத்தை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிலும் ‘யங் இந்தியா’ பத்திரிகையிலும் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பாக 1928-ல் ‘சோவியத் ரஷ்யா’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்தது. நேருவுக்கு அதிகம் மகிழ்ச்சி தராத புத்தகம் அது. ‘ஒன்றுக்கொன்று ஒட்டாத, மேலோட்டமான கட்டுரைகள்’ என்று அவரே சொன்னார்.
நேருவின் இரண்டாவது புத்தகம் 1929-ல் வெளிவந்தது. 10 வயது இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு ‘ஒரு தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்’ என்று புத்தகத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. உலகம் எவ்வாறு உருவானது, தாவரங்கள், மிருகங்களின் தோற்றம், மனிதனின் பிறப்பு போன்றவற்றை மிக எளிய முறையில் விளக்கும் புத்தகம். ‘விவசாயி கருப்பாக இருக்கிறான் என்றால் அவன் வெயிலில் ஆடைகள் அதிகமின்றி கடுமையாக உழைக்கிறான். மனிதனின் நிறம் அவன் இருக்கும் சூழலைச் சார்ந்தது. நிறத்துக்கும், மனிதனுடைய திறமை, நல்ல குணங்கள் மற்றும் அழகு போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்கிறார் நேரு.
உலக வரலாறு
1930 ஏப்ரலில் சிறை சென்ற நேரு அக்டோபரில் விடுதலையானார். ஒரு வாரத்துக்குள் ராஜதுரோகக் குற்றச்சாட்டில் (நமது கோவன் மீது சாட்டப்பட்டிருக்கும் அதே குற்றம்!) கைதானார். இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் நிச்சயம் என்ற எண்ணத்தில் 13 வயதான இந்திராவுக்கு உலக வரலாற்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஒரு புதிய கடிதத் தொடரை எழுத ஆரம்பித்தார். ஆனால், மூன்று மாதங்களில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். மறுபடியும் சிறை செல்லும் வாய்ப்பு 1933-ல் கிடைத்தது. நான்கே மாதங்களில் மகளுக்கு எழுதிய 176 கடிதங்களின் மூலம் உலக வரலாற்றை நேரு நமக்குத் தந்தார். சிறையில் கிடைத்த மிகச் சில புத்தகங்களின் துணை கொண்டும் பெரும்பாலும் ஞாபகத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்ட வரலாறு அது. அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்றிருந்தது ஹெ.ஜி.வெல்ஸ் எழுதிய ‘உலக வரலாறு - ஒரு வரைவு’ என்ற புத்தகம். ஆனால், அது மேற்கத்திய நோக்கிலிருந்து எழுதப்பட்டது. மாறாக, நேருவின் புத்தகம் இந்தியா, சீனா, பெர்சியா, அரேபியா போன்ற நாடுகளும், இந்து, புத்த, இஸ்லாமிய மதங்களும் உலக வரலாற்றில் ஆற்றிய பங்கைப் பற்றி விரிவாகப் பேசியது. அடிமையாக இருக்கும், விடுதலையை விரும்பும் மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட முதல் உலக வரலாற்றுப் புத்தகம் இது. வெறுப்பை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, இன மத, சர்வாதிகார வெறித்தனங்களுக்கு எதிராக ஆசியாவிலிருந்து வந்த முதல் வரலாற்றுப் புத்தகமும் இதுவே.
சுயசரிதை
1933-லிருந்து 1935 வரை நேரு சிறைக்குச் செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். இதனாலேயே அவர் தனது சுயசரிதைக்கு வைத்த முதல் தலைப்பு ‘சிறைக்கு உள்ளேயும் வெளியேயும்’! நேருவின் சுயசரிதையை அவரது வாழ்க்கை வரலாறு என்று சொல்வதைவிட, அவரது பார்வையில் 1934 வரையான விடுதலைப் போராட்டத்தின் வரலாறு என்று சொல்லலாம். முதல் 40 பக்கங்கள் மட்டும் அவரது சொந்த வாழ்க்கையைப் பேசுகிறது. அடுத்த 550 பக்கங்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்தைப் பற்றி. இன்று படித்தாலும் அதிலிருந்து வீசும் உண்மையின் ஒளி நமது கண்களைக் கூச வைக்கும். உதாரணம்: ‘இந்திய அரசியல் ஒற்றுமை என்பது பிரித்தானியப் பேரரசின் முன்னேற்றப் பாதையில் தற்செயலாகத் தோன்றிய உப பொருள். பின்னால் தேசியம் வலுவடையும்போது ஒற்றுமையின்மை, பிரிவினைவாதம் போன்றவைதான் (அவர்களால்) ஊக்குவிக்கப்பட்டன.’
உலக அளவில் பெருவெற்றியடைந்த முதல் இந்தியப் புத்தகம் நேருவின் சுயசரிதை என்று சொல்லலாம். இங்கிலாந்தில் 1936 மே மாதம் வெளியான புத்தகம் விற்றுத் தீர்ந்து, ஆண்டு முடிவதற்குள் 10 முறை மறுபதிப்புகள் கண்டது. ‘டைம்ஸ்’ பத்திரிகை ‘படிக்க வேண்டிய புத்தகம்’ என்றது. ‘அவர் பிரிட்டனுக்கு எதிரியல்ல. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆளலாம் என்ற கொள்கைக்கு எதிரி’ என்றது ‘எகானமிஸ்ட்’. சென்ற நூற்றாண்டின் 40-களிலும் 50-களிலும் காலனிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய பல தலைவர்கள் - குறிப்பாக ஆப்பிரிக்காவில் - படித்த புத்தகமும் இதுவே.
“இந்திய வரலாற்றில், முதன்முதலாக நாட்டின் அரசியல், நாட்டுக்கு வெளியிலிருந்து இயக்கப்பட்டது பிரித்தானியர் வந்த பிறகுதான். நமது பொருளாதார மையம் நாட்டுக்கு வெளியில் எங்கேயோ இருந்தது.”
இஸ்லாமிய ஆட்சிக்கும் பிரித்தானிய ஆட்சிக்கும் இடையே இருந்த முக்கியமான வேறுபாட்டை இதைவிடத் துல்லியமாக வேறு யாராலும் எழுதியிருக்க முடியுமா என்பதும் ஐயம்தான். இந்தப் புத்தகம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கைதாகி, அகமது நகர் கோட்டையில் நேரு சிறையிருந்தபோது எழுதப்பட்டது. அவர் இந்திய மண்ணைப் பற்றி ஏதும் தெரியாதவர் என்று சொல்பவர்கள் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் இது. கடந்த காலத்தில் நிகழ்காலம் புதைந்திருக்கிறது, எனவே கடந்த காலத்தைப் பற்றி தெளிவான புரிதலோடு நமது வருங்காலச் சந்ததியினர் பெருமை கொள்ளக் கூடிய நிகழ்காலம் ஒன்றை நாம் நடத்திக் காட்ட வேண்டும் என்ற உட்கனலின் வெளிச்சத்தில் எழுதப்பட்டது ‘இந்தியாவின் கண்டுபிடிப்பு’.
அமெரிக்கப் பயணம்
நேருவின் பெயரில் வேறு புத்தகங்கள் ஏதும் வரவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த முறை நான் அமெரிக்காவில் இருந்தபோது நண்பர் அரவிந்தன் கண்ணையன் எனக்கு 1950-ல் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட ‘அமெரிக்கப் பயணம்’ என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார். 1949-ல் நேருவின் அமெரிக்கப் பயணத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு களின் தொகுப்பு. நேருவின் தெளிவுக்கு அதிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு: “ஒரு நாடு வெறுப்புகளையும் தடைகளையும் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் பதிலடியாக அவர்கள் செய்வதையே செய்ய முடியுமா? அந்த வலையில் நாம் விழக் கூடாது.” நாடுகளைப் பற்றிச் சொன்னது நமது நாட்டுக்குள் நடப்பவற்றுக்கும் பொருந்தும். வலதுசாரி வெறுப்புக்குப் பதில் இடதுசாரி வெறுப்பு அல்ல.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
இன்று நேருவின் 126-வது பிறந்த நாள்

செவ்வாய், 10 நவம்பர், 2015

பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது

பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது
மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார்.
மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால், அப்படியான வேற்றுலகவாசிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் உண்டு. நாம் கற்பனைப் பயணமாக அண்டவெளிக்குச் சென்றால், இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
ஆபத்தான அண்டவெளி
நீங்களும் நானும் ஒரு விண்கலத்தில் ஏறி, பூமியிலிருந்து ஏதோ ஒரு திசையில் கிளம்புகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். பூமி நமது பார்வையிலிருந்து மறைகிறது. ஏறத்தாழ 8,000 கோடி கி.மீ. தொலைவுக்குச் சென்ற பிறகு, திரும்பிப் பார்க்கிறோம். சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. எவ்வளவு மாதங்கள் ஆனாலும் அதே கும்மிருட்டுதான். விண்கலத்துக்கு வெளியே கடும் குளிர். அத்துடன் ஆபத்தான கதிர்கள். அதுதான் அண்டவெளி.
அங்கிருந்து பார்த்தால் சூரியன் தெரியவில்லை. மிகத் தொலைவு வந்துவிட்ட காரணத்தால் சூரியன் ஒரு சிறிய நட்சத்திரமாகத்தான் தெரியும் போலும். குறிப்பிட்ட திசையில் பார்க்கிறோம். நம்மிடம் உள்ள கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால் அந்த நட்சத்திரம் சூரியனாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூரியனைச் சுற்றுகிற பூமி உட்பட ஒன்பது கிரகங்களில் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.
நாம் பூமியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றே மறந்துவிட்டு சுற்றிலும் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை நோட்டமிடுகிறோம். நட்சத்திரமாகக் காட்சி அளிக்கிற சூரியன் இருக்கிற திசையில் கையை நீட்டி அதோ அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற ஒரு கிரகத்தில், அதாவது பூமியில் உயிரினங்கள் உள்ளன என்று அங்கிருந்தபடி உறுதியாகச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.
இதிலிருந்து சில விஷயங்கள் புலனாகின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதை உணர்கிறோம். மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டால், பூமி இருக்கிற இடத்தையே கண்டுபிடிக்க முடியாது என்பதுபோலவே பூமியில் இருந்து பார்த்தால் எங்கோ இருக்கிற வேறு பூமிகளை எளிதில் கண்டறிய இயலாது என்பதையும் புரிந்து கொள்கிறோம். சூரியனுக்கு ஒரு பூமி இருப்பதைப் போலவே வேறு பல நட்சத்திரங்களுக்கும் பூமி மாதிரி கிரகங்கள் இருக்கலாம் என்பது புரிகிறது. அவ்விதம் எங்கோ இருக்கிற பூமிகளிலும் உயிரினங்கள் இருக்கலாம்.
இயற்கைக்குப் பாரபட்சம் இல்லை
இயற்கையானது அண்டவெளியில் ஒரு மூலையில் இருக்கிற பூமியை மட்டும் விசேஷமாகத் தேர்ந்தெடுத்து, மனிதன் உட்பட உயிரினங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத முடியாது. இயற்கைக்கு அவ்விதமான பாரபட்சம் இருக்க முடியாது.
பூமியை எடுத்துக்கொண்டால், உயிரினங்கள் நிலப் பகுதியில் இருக்கின்றன, தரைக்கு அடியில் இருக்கின்றன, தரைக்கு மேலும் இருக்கின்றன. கடல்களிலும் இருக்கின்றன, சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும் உள்ளன. பனிக்கட்டியால் மூடப்பட்டு கடும் குளிர் வீசுகின்ற அண்டார்ட்டிகாவின் பாதாள ஏரிகளிலும் இருக்கின்றன. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களில் தொடங்கி ராட்சத திமிங்கிலங்கள் வரையிலான இந்தப் பல்வகையான உயிரினங்களை யாரும் ஒரே நாளில் உண்டாக்கிவிடவில்லை. கடந்த பல நூறு கோடி ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி மூலம் இவை உண்டாகின.
பூமியில் உள்ள சூழ்நிலைகள் வேறு எங்கேனும் உள்ள ஒரு கிரகத்தில் இருக்குமானால், அங்கும் இதே போன்று பலவகையான உயிரினங்கள் இருக்க முடியும். ஆனால், அவற்றை நம்மால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்பதால், பூமி தவிர வேறு எங்கும் உயிரின வகைகள் கிடையாது என்று அடித்துக் கூறுவது அறிவுடைமை ஆகாது.
நாம் இதுவரை வெளியே போய் எங்கும் பார்க்கவில்லை. அதனால் நமக்குத் தெரியவில்லை. நாம் பூமியின் கைதிகளாக வாழ்ந்துவந்துள்ளோம். விண்வெளி யுகம் பிறந்ததற்குப் பிறகுதான் நமக்குக் கால் முளைத்தது. மனிதன் சந்திரனுக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். ஆனாலும், நாம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே சென்றதாகக் கூற முடியாது. ஏனெனில், சந்திரனும் பூமியின் பிடிக்குள் தான் இருக்கிறது. ஆகவேதான் அது பூமியைச் சுற்றி வருகிறது. வருகிற நாட்களில் செவ்வாய்க்குச் செல்கிறவர்கள்தான் பூமியிலிருந்து விடுபட்டுச் செல்கிற முதல் நபர்களாக இருப்பர்.
நாஸாவிலிருந்து புளூட்டோவுக்கு…
பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு மனிதன் சென்றது கிடையாது என்றாலும் மனிதன் அனுப்பிய பல ஆளில்லா விண்கலங்கள் சென்று ஆராய்ந்துள்ளன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்பது ஆண்டுப் பயணத்துக்குப் பிறகு, இப்போது புளுட்டோவை ஆராய்ந்து தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ உள்ள தூரம் சுமார் 500 கோடி கி.மீ. கிட்டத்தட்ட சூரிய மண்டலத்தின் எல்லை.
சூரிய மண்டலத்துக்கும் அப்பால் மிக விஸ்தாரமான அண்டவெளி உள்ளது. அந்த அண்டவெளியில் சூரியன் மாதிரி கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கும் கிரகங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் நாம் காணும் நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமல்லாமல், பல வகையான கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரேடியோ அலைகளும் அவற்றில் அடங்கும். இயற்கையாகத் தோன்றும் அந்த ரேடியோ அலைகள் காலம் காலமாகப் பூமிக்கு வந்துகொண்டிருக் கின்றன. அவற்றை நம் கண்களால் காண முடியாது.
இயற்கையாகத் தோன்றும் ரேடியோ அலைகளைப் போலவே செயற்கையாக ரேடியோ அலைகளை உண்டாக்க மனிதன் கற்றுக்கொண்டுள்ளான். ஒலியை அவ்வித ரேடியோ அலைகளாக மாற்றவும் மறுபடி அந்த அலைகளை ஒலியாக மாற்றவும் மனிதன் கற்றுக்கொண்டபோது வானொலிப்பெட்டி தோன்றியது.
நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ரேடியோ அலை களைப் பெற்று ஆராய்வதற்காக பெரிய பெரிய ஆன்டெனாக்களைக் கொண்ட ரேடியோ டெலஸ் கோப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே இருக்கின்ற கிரகத்தில் வாழக்கூடிய புத்திசாலி மனிதர்கள் ரேடியோ அலைகள் வடிவில் செய்திகளை அனுப்பினால் அவற்றையும் அந்த டெலஸ்கோப்புகள் மூலம் பெற முடியும்.
நட்சத்திரங்களிலிருந்து வருகிற ரேடியோ அலைக ளுக்கும் வேற்றுக்கிரகப் புத்திசாலி மனிதர்கள் அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஆகவேதான், அண்டவெளியிலிருந்து வித்தியா சமான சிக்னல்கள் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.
- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com
வியாழன்தோறும் தொடர்வோம்...

கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன், மாமன்னர் பகதூர்ஷா

கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன், மாமன்னர் பகதூர்ஷா
'நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் (பலி) கொடுப்பார்கள். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே, நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர்பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்!’
இது, டெல்லியை ஆண்ட முகலாயர்களின் கடைசி மன்னர் பேரரசர் பகதூர்ஷா ஜாபரின் ஆட்சியைச் சீர்குலைக்க, இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் நோக்கத்தில் ஆங்கில அதிகாரி கெய்த் தனது மனைவிக்கு 1847-ல் எழுதிய கடித வாசகம்.
பிரிட்டிஷார் தங்கள் ஆட்சி விரிவாக்கத்துக்காக, டெல்லி மொகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். இந்தச் சூழலில்தான் 1837-ல் பகதூர்ஷா ஜாபர் டெல்லி அரியணையில் அமர்ந்தார். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டிஷார் செய்த முயற்சிகளில் ஒன்றுதான் மாடுகளைப் பலியிடுவதை முன்னிறுத்திய அரசியல்.
முந்திக்கொண்ட பகதூர்ஷா
இந்த நாசப் பின்னணியை அறிந்த பகதூர்ஷா, ஈத் பெருநாளுக்கு முந்தைய நாள் இரவு, “ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும். மாடுகளை வெட்டக் கூடாது” என்று பிரகடனப்படுத்தினார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த், தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், ‘என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதூர்ஷா முந்திக்கொண்டார்’ என்று எழுதியுள்ளார்.
பிரிட்டிஷாரை விரட்டியடிக்க பகதூர்ஷாவின் தலைமையில் திட்டம் தயாரானது. “இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும். அவர்களை முடித்து, உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்ப்பட்டுள்ள அபாயங்களிலிருந்தும் காப்போம்!” - என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.
தேசத்தின் விடுதலை விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிற்றரசர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, பிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட போர் தொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
“…இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போர் புரிவது என்றும்; சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.”
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்சிராணி லட்சுமிபாய், நானா சாஹிப், தாந்த்யா தோப், ஔத் பேரரசி பேகம் ஹஜ்ரத் மஹல், பிஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாக், ஹரியாணா - ராஜஸ்தான் - மகாராஷ்டிர மன்னர்கள் மே 31-ம் தேதிக்காகக் காத்திருந்தனர்.
ஆனால், மே 10-ம் தேதியே சிப்பாய் புரட்சி வெடித்தது. இதனால், பகதூர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும், கூட்டாகவும் சிப்பாய் புரட்சிக் காலகட்டத்தில் பிரிட்டிஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர். தங்களுக்குள் இருந்த கருத்து வேறு பாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பகதூர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாவை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல. மாமன்னர் பகதூர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.
கலங்காத பகதூர்ஷா… அதிர்ந்த ஹட்சன்!
ஒரு நாள் காலைப் பொழுதில், பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு உணவு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு!
“பகதூர்ஷா! நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை!” என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே... பகதூர்ஷாவின் மகன்கள் மிரிஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக் கொன்று, தலைகளை வெட்டித் தட்டுகளில் ஏந்தி வந்ததோடு... ‘‘இவை பிரிட்டிஷ் கம்பெனியாரின் பரிசுகள்!” என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து பகதூர்ஷா சொன்னார், “தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறுதான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!” அவருடைய கம்பீரமான வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தான் ஹட்ஸன். மகன்களின் மரணத்தை தேசத்துக்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதூர்ஷா கலங்கவில்லை.
“கேப்டன் ஹட்ஸன், பகதூர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் கழுகுகளுக்கு ஆகாரமான பின்னர்தான் ஆற்றில் இழுத்தெறியப்பட்டன” என்று எரிமலை நூலில் குறிப்பிட்டார் வீரசாவர்க்கர்.
பசுவின் கொழுப்பும் பெர்ஹாம்பூர் சிறையும்
பன்றிக் கொழுப்பும் பசுக் கொழுப்பும் தடவப்பட்ட என்பீல்டு ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றுபட்டு எழுந்த இந்தியச் சிப்பாய்கள், பெர்ஹாம்பூர், மீரட் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
சிறைச்சாலைகளை உடைத்துவிட்டு, ரிஸால்தார் ஹுசைன் அலி தலைமையில் ஒன்று திரண்ட இந்தியச் சிப்பாய்கள், பேரரசர் பகதூர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷத்துடன் மாபெரும் புரட்சியை ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இப்புரட்சியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது.
சிப்பாய் புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார், 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களை பகதூர்ஷா மேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்பதால் மாதம் ரூ.600 உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. “என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீ யார்?” என்று அதை ஏற்க மறுத்துவிட்டார் பகதூர்ஷா.
தாய் மண்ணை இனி தரிசிக்கும் பாக்கியம் தனக்குக் கிடைக்காது என்று வருந்தியவராக, இறந்தபின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ, ஒரு பிடி இந்திய மண்ணைக் கையில் அள்ளிக்கொண்டு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-ல் தனது 92-ம் வயதில் ரங்கூனில் காலமானார்.
தங்க வாளில் இந்திய மண்
தேச விடுதலைக்காக பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக்கொண்டிருந்த காலத்தில், ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதூர்ஷாவின் சமாதியைப் பல லட்ச ரூபாய் செல்வில் புதுப்பித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, “நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மஹானிடம் இருந்ததுபோல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” என்று சபதமேற்றார். இந்திய விடுதலை வரலாற்றில் கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே, ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதூர்ஷா.
தேசத்தின் முதல் விடுதலைப் போரான சிப்பாய் புரட்சியைத் தூண்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக நாடு கடத்தப்பட்ட பேரரசர் பகதூர்ஷா ஜாபர் நினைவு நாள் இன்று!
- மு. அப்துல் சமது, தமிழ்த் துறைப் பேராசிரியர்,
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்.
தொடர்புக்கு: ab.samad@yahoo.co.in

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: ஆயிஷா இரா. நடராசன்

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: லட்சுமியாக மாறிய சரஸ்வதி

ஆயிஷா இரா. நடராசன்
COMMENT   ·   PRINT   ·   T+  
பெற்ற அறிவைத் தேர்வுகளில் எழுத்து வடிவமாக்கி மதிப்பெண்ணாக உருமாற்றும் கட்டாயம் இருக்கும்வரை கல்வி கசக்கவே செய்யும். - கல்வியாளர் டெபாஷிஸ் சாட்டர்ஜி
தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வது, தேர்வை நடத்துவது, விடைத்தாளைத் திருத்துவது என்று ஆசிரியர்களின் வேலையை இன்று மூன்றே வாக்கியங்களில் அடக்கிவிடலாம். இத்தகைய தேர்வு அடிப்படையிலான கல்வி முறைமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882- ல் ஹண்டர் கமிஷன் எனும் கல்விக் குழுவின் பரிந்துரைகளின்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான கணக்காயர், எழுத்தர் பதவிகளுக்கான தேவைகளுக்காகவே இப்படி ஒரு கல்வி முறைமை திணிக்கப்பட்டு, சித்ரவதையாய் நீடிக்கிறது.
எழுது, எழுது, எழுது
உங்களுக்கு ஒரு விஷயம் பற்றிய அறிவு இருந்தால் போதாது. அதை எழுதிக் காட்ட வேண்டும். இல்லையேல் அப்படி ஒரு அறிவை நீங்கள் பெற்றுள்ளதை இந்தக் கல்விமுறை ஏற்பது கிடையாது. உதாரணமாக, நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது எது என்று ஒரு குழந்தைக்குத் தெரியும். அதாவது யானை. அதற்காக மதிப்பெண் கிடையாது. அந்தக் குழந்தைக்கு அதை எழுதிக் காட்டத் தெரிய வேண்டும். ஆங்கில மீடியமாக இருந்தால் ‘எலிஃபண்ட் (Elephant)’ என்று எழுத்துக்கூட்டி சொல் (spelling) வடிவ தவறு இல்லாமல் எழுதினால் மட்டுமே மதிப்பெண். இந்த ஸ்பெல்லிங் (தமிழோ, ஆங்கிலமோ) நம் கல்வியின் கையில் உள்ள ஒரு பிரம்பு ஆகிவிட்டது. அது குழந்தைகள் மீது ஏற்படுத்தும் வலி நம் கல்விக்கே உரிய பலவீனம்.
இன்று நீங்கள் கணினியில் (அல்லது உங்கள் கைபேசியில்) தவறாக ஒரு சொல்லைத் தட்டச்சு செய்தாலும் அந்தக் கருவிகள் தானாகவே அந்தச் சொல்லின் எழுத்துப் பிழையைத் திருத்திக்கொள்கின்றன. ஆனாலும் நம் கல்வி இன்னும் மாறாமல் இருக்கிறது. சரியாக எழுதுவது என்பதை மட்டும் வைத்து ஒரு குழந்தையின் புத்திக் கூர்மையை எடை போட முடியாது என்பதை எனக்குக் காட்டியவர்தான் சரஸ்வதி.
கற்றல் குறைபாடு
இப்படிச் சொல்லாக்கத்தைப் புரிந்து எழுதுகிற எண்ணத்தை எழுத்து வடிவமாக ஆக்குகிற திறனை இழப்பது என்பது ஒரு உளவியல் குறைபாடு என முதலில் அறிவித்தவர் ரெனெ-ஸாஸோ (Rene ZaZzO). பிரான்ஸ் நாட்டின் கல்வி-உளவியல் அறிஞர். எழுதுவதற்கு சிரமப்படும் குழந்தைகளை ‘முட்டாள்கள்’ என உலகம் கைவிட்டபோது ரெனெ-ஸாஸோ அந்தக் குழந்தைகளுக்கு இருப்பது டிஸ்லெக்ஸியா (Dyslexia) எனும் கற்றல் குறைபாடு மட்டுமே என நிருபித்தார்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வேகத்தில் கல்வி கற்கிறது என்றார் அவர். 10 சதவீதக் குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே டிஸ்லெக்ஸியா வந்துவிடும். அதற்கு வளர்ப்பு முறையும் ஒரு காரணம். வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் இருக்கும் கற்பித்தல் குறைபாடு காரணமாகச் சிறு வயதில் 7 சதவீதம் பேருக்கு டிஸ்லெக்ஸியா வருகிறது. இவை எல்லாம் ரெனெ-ஸாஸோவின் கண்டுபிடிப்புகள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் உலகம் டிஸ்லெக்ஸியா குறைபாட்டை விவாதித்துப் புரிந்துகொண்டது. இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் வேகமாகச் சிந்திப்பார்கள். ஆனால், அவர்களை எழுத வைக்கவே முடியாது. இத்தகைய குறைபாடுள்ளவராக இருந்து பிற்பாடு பெரும் புகழ்பெற்ற அறிவாளிகளாக மாறியவர்கள் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், விஞ்ஞானி மைக்கேல் பாரடே மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று பலர். அத்தகையவர்களின் பட்டியல் நீளமானது. பிரபல எழுத்தாளர் அகதா கிறிஸ்டியும் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவரே. தனது நாவல்கள் எதையும் அவர் எழுதவில்லை. டிக்டேட்தான் (சொல்லி மற்றவரை எழுத வைப்பது) செய்தார் என்பதை அறிந்து உலகம் அதிர்ந்தது.
அது வேற சரஸ்வதி
1960- களில் இந்தக் குறைபாடு கல்வியின் அங்கமாக ஏற்கப்பட்டது. இவர்களுக்காக ரெனெ-ஸாஸோ கண்டுபிடித்து அறிமுகம் செய்ததுதான் நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதும் (Objective - type) வினா- விடை முறை. இது இன்று குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் முறை. என்றாலும் இந்தத் தேர்வு முறை உண்மையான அறிவைப் பரிசோதிக்கும் வல்லமை மிக்கது அல்ல என்பதை எனக்குக் காட்டியவர்தான் சரஸ்வதி.
சரஸ்வதி எனக்கு முதலில் அறிமுகமானது ஒரு தேர்வு அறையில்தான். எட்டாம் வகுப்புக்கு முழு ஆண்டுத் தேர்வு நடந்தபோது அந்தத் தேர்வு அறைக்குக் கண்காணிப்பாளர் நான். தேர்வு முடிந்துவிட்டதற்கான மணி ஒலித்தபோதும் ஒரே பக்கத்தைத் திணறலோடு எழுதிக்கொண்டிருந்தார் அவர். விடைத் தாளைச் சமர்ப்பிக்கவும் தயங்கி கண் கலங்கினார். எல்லா ஆசிரியர்களையும் போலவே நானும் அவரைக் கிண்டலோடு நடத்தினேன். ‘‘தேர்வுக்கு ஒழுங்கா தயார் செய்தால் இப்படி பேந்த பேந்த முழிக்க வேண்டாமே” என்றேன். எனக்கு இப்போதும் ஞாபகம் வந்து மனதைப் பிசைவது அவரது “சாரி சார்” எனும் எனும் கெஞ்சல்தான். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே வேறு வகையான சரஸ்வதியை நான் பார்க்க நேர்ந்தது.
அந்த சரஸ்வதி திணறும் சரஸ்வதி அல்ல. திறன் மிகுந்த சரஸ்வதி. மாலையில் யதேச்சையாகப் பள்ளி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் குமாஸ்தாவுக்கு அருகே பெரிய லெட்ஜருக்கு முன்பாக அவர் உட்கார்ந்திருந்தார். அவரை குமாஸ்தா மகள் என்றே முதலில் நான் நினைத்தேன். ஆனால், நீண்ட வரிசையில் உள்ள பெரிய பெரிய கணக்குகளை ‘மள மள’வென சரியாகக் கூட்டினார் அவர். அந்த குமாஸ்தா அவரை அடிக்கடி அழைத்து, கால்குலேட்டராகப் பயன்படுத்துவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.
லட்சுமிகரமாய் சரஸ்வதி
அதையும்விடப் பெரிய அதிசயமும் நடந்தது. பள்ளி நடத்துவதிலேயே சிக்கலான வேலை ஆசிரியர் மற்றும் வகுப்புவாரி கால அட்டவணை (டைம்-டேபிள்) போடுவது. அந்த வேலையை ஒரு விடுமுறை நாளில் சில மணி நேரத்தில் லாவகமாக உதவித் தலைமை ஆசிரியர் மேஜையில் சரஸ்வதி செய்வதைப் பார்த்து நம்ப முடியாமல் வியந்தேன். டிஸ்லெக்ஸியா பற்றி அதிகம் கல்வித் துறை அறியாத காலம் அது. இன்று அந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தேர்வில் கூடுதல் நேரம் வழங்குதல், எழுத்துப் பிழைகளோடு மதிப்பெண் சமரசம் என்று கல்வித் துறை சில சலுகைகளைத் தந்திருக்கிறது. அப்போது கல்வி உரிமைச் சட்டமும் இல்லை.
அதனால், சரஸ்வதி எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பள்ளியிலிருந்தும் நின்றுவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் எனது, ஆசிரியர் கால அட்டவணையை, வாங்கும்போது சரஸ்வதியை நினைப்பேன். அவர் என்ன ஆனார் என்று மனம் நொந்ததும் உண்டு.
சமீபத்தில் கடலூர் ‘ஆதார் அட்டை முகவரி மாற்றத்துக்கு இங்கே அணுகவும்: சரஸ்வதி கணினி மையம்’ என அறிவிப்புப் பலகையைப் பார்த்து எனது ஆதார் அட்டையோடு உள்ளே நுழைந்தேன். நம் கல்வி முறையால் கைவிடப்பட்ட அந்த சரஸ்வதி ‘கல்லாப் பெட்டி’ எனும் சிம்மாசனத்தில் லட்சுமிகரமாக வீற்றிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com