புதன், 22 ஜனவரி, 2014

மனிதநேயப் பொருளாதாரம்

Thanks to Hindu Magazine:
இராம.சீனுவாசன்


அக்கறை செலுத்துகிறோம் என்கிற பெயரில் குழந்தைகள் மீது அதிக ஆளுமை செலுத்தி அவர்களை சிதைக்க முற்படுவதுபோல, முதியோரையும் அதிக அலட்சியத்தால் பலரும் வதைக்கிறார்கள். கடந்த படிப்படியான ஆண்டு களில் இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துவருகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி நாட்டின் மக்கள்தொகையில் 65 வயதைக் கடந்தவர்கள் 4.8% பேர். இதில் ஆண்கள் 4.6%, பெண்கள் 5%. தமிழகத்தில் 65 வயதைக் கடந்தவர்கள் 5.4% பேர். இதில் 5.3% ஆண்கள், 5.5% பெண்கள். அரசுத் துறைகளில் 58 முதல் 60 வயது வரையிலும் தனியார் துறைகளில் 65 வயது வரையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலையில் இருப்பதும் ஊதியம் ஈட்டுவதும் இயலாத காரியம். ஆனால், இன்று பெரும்பாலான இடங்களில் உழைக்கும் முதியோரைப் பார்க்க முடிகிறது. இவர்களில் பலர் நிர்ப்பந்தத்தால் உடல், மனம் நோக உந்தித் தள்ளப்பட்டே உழைக்க நேரிடுகிறது. இவர்கள் மூலம் சமூகத்துக்குக் கிடைக்கப்பெறுவது பொருளாதாரம் அல்ல; இருளாதாரம்!
கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து தனிக் குடும்பங்கள் ஆனது ஒரு சமூக, பொருளாதார மாற்றம். இன்று ஒவ்வொரு தலைமுறையும் வெவ்வேறு இடங்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். இது கூட்டுக் குடும்பங்கள் சிதைவதற்கு ஒரு காரணம். ஆண், பெண் இருவரும் சேர்ந்து சம்பாதித்துதான் குடும்பத்தை நடத்தவேண்டும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தில் பாலின வேற்றுமை குறையும்போது கூட்டுக் குடும்பங்களால் அதைக் கையாள்வது கடினமாகி, உடையத் துவங்கின. குடும்பங்கள் பொருளாதாரச் சந்தையின் கருத்தை ஏற்று அதுவே குடும்ப நாகரிகம் என்றானபோது சிக்கல்கள் அதிகமாயின. குழந்தைகள் எதிர்கால நுகர்பொருட்களாகவும் அதற்கான கல்வி முதலீடாகவும் பேணப்படுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் அவரது ஏழு வயதுப் பிள்ளையை என்னிடம் அழைத்துவந்து, ‘இவனை பொறியாளனாக ஆக்கவேண்டும்’ என்றார். பிள்ளை துறுதுறுவென என் மேஜையில் இருந்த பொம்மையை எடுத்து விளையாட முற்பட்டான். ‘குழந்தை குழந்தையாக இருக்கட்டும். அவன் வளரும்போது பொறியாளனாவான்’ என்றேன். இவர் விடுவதாக இல்லை. சிறிது நேரம் பேசிவிட்டு, கணக்கு, விஞ்ஞானப் பாடங்களுக்கு கூடுதல் புத்தகங்களைப் பெற்றுச் சென்றார். இன்று அவன் பொறியாளன். ஆனால் பெற்றோரை கவனிப்பது இல்லை. இதையும் அவர் சமீபத்தில் என்னிடம் சொன்னார்.
அவனைப் பொறியாளனாக ஆக்க முயற்சித்த நண்பர் ஏனோ நல்ல மனிதனாக வளர்க்க நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு அறிவின் தாகத்துடன் நல்ல ஒழுக்கங்களையும் ஊட்ட வேண்டும். அறிவின் தாக்கத்தால் ஒருவர் ‘தனி மனிதனால் எல்லாம் முடியும்’ என்று எண்ணுகிற போக்கு ஆபத்தானது. நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம் என்பதுதான் உண்மை. எனக்கு நீங்கள் முக்கியம். உங்களுக்கு நான் முக்கியம். என் தேவைக்கு உங்களைப் பயன்படுத்திக்கொள்வதும், பின்பு தூக்கி எறிவதும் மனிதனை சந்தைப் பொருளாக பார்க்கிறோம் என்பதற்கு அடையாளம். இதன் நீட்சிதான் முதியோர்களை வதைப்பதும். இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். அதுவே உண்மையான - மனிதநேய பொருளாதார வளர்ச்சி!

விருதுகளின் அடிப்படை என்ன?

From Hindu Magainze : 

விருதுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி என்னதான் உறவோ?
‘‘விருதுகள் சராசரிகளைச் சிறப்பிக்கிறது, உயர்ந்தவர்களை வெட்கமடைய வைக்கிறது, தாழ்ந்தவர்களால் அவமானத்துக்குள்ளாகிறது’’ என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் வரிகளைவிட விருதுகளின் ‘பெருமையை’ சிறப்பாகக் கூறிவிட முடியாது. விருதுகள் மனிதர்களைக் கௌரவிப்பதைவிட, மனிதர்கள்தான் (சில சமயங்களில்) விருதுகளைக் கௌரவிக்கிறார்கள். மகத்தான மனிதர்கள் யாரும் அவர்கள் பெற்ற விருதுகளுக்காக மக்களால் போற்றப்படுவதோ, நினைவுகூரப்படுவதோ இல்லை. சொல்லப்போனால், அவர்கள் ஏதாவது விருதுபெற்றார்களா இல்லையா என்பது அவர்களுக்கோ அல்லது விருதுகளின் மதிப்பை அறிந்தவர்களுக்கோ ஒரு பொருட்டே இல்லை. ஆனாலும், பொதுமக்கள் மத்தியிலும், சில சமயங்களில் அறிவுஜீவிகள் மத்தியிலும் விருதுகள் பெரும் சலசலப்பை உண்டாக்குகின்றன. விருதுகளால் கிடைக்கும் ஒரே பலன், சில சமயங்களில் சரியாக வழங்கப்படுகிறபோது, அதிகம் பிரபலமாகாத மகத்தான மனிதர்களை அவை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவதுதான். அரசுகள் வழங்கும் விருதுகளில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் விருப்புவெறுப்புகள் வெளிப்படுவது இயல்பானது. உலகெங்கும் அரசுகள் விருதுகளைத் தங்களுக்குச் சாதகமானவர்களைக் கௌரவிக்கவே பயன்படுத்துகின்றன. இந்திய அரசும் அப்படியே. அபூர்வமாக விதிவிலக்குகளும் உண்டு.
தியான் சந்த், விஸ்வநாதன் ஆனந்த்?
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அறிவியல் அறிஞர் சி.என்.ஆர். ராவ் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, வழக்கம்போல் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், பொதுச்சேவை ஆகிய துறைகளில் மாபெரும் பங்களிப்பு செய்தவர்களுக்கே பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இந்த விருதைப் பெற்ற முதல் மூவரும் - ராஜாஜி, சி.வி.ராமன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலானதே.
சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளாகவே வந்துகொண்டிருந்தது. ஆனால், பாரத ரத்னா பெறுவதற்கான தகுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறை இல்லாதிருந்தது, அவருக்கு இந்த விருதை வழங்குவதற்கான தடையாக இருந்தது. ஆகவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த விருதுக்கு சச்சின் முழுத் தகுதியானவர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. இதுவரையிலான உலகின் ஆகச் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் என்ற பட்டியலை எந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணர் தயாரித்தாலும் அதில் சச்சினுக்கு ஓர் இடம் இருக்கும். ஆனால், சச்சினுக்கு எல்லாருடைய பட்டியலிலும் முதலிடம் இருக்குமா என்று சொல்ல முடியாது. அதைப் போலவே இதுவரையிலான ஆகச் சிறந்த ஹாக்கி வீரர்கள் ஐந்து பேர் என்ற பட்டியலை எந்த நாட்டைச் சேர்ந்த ஹாக்கி நிபுணர் தயாரித்தாலும் அதில் ஓர் இடம் மட்டுமல்ல, முதலிடமே தியான் சந்துக்குத்தான் இருக்கும். கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகளோடு ஒப்பிடுகிறபோது, ஹாக்கியில் தியான் சந்தின் சாதனைகள் ஒரு படி அதிகம் என்று வாதிடுவோர் உண்டு. விளையாட்டுத் துறையினருக்கு பாரத ரத்னா அளிப்பது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டவுடன் அந்த விருது அளிக்கப்பட்ட முதல் விளையாட்டு வீரராக தியான் சந்த் ஏன் இருந்திருக்கக் கூடாது? அவருக்கு அளிப்பதன் மூலம் தனக்கென்ன பெரிய லாபம் என்று இன்றைய ஆளும் கட்சி நினைத்திருந்தால் ஆச்சர்யம் இல்லை. இன்றைய இந்தியர்களால் மறக்கப்பட்டுவிட்ட, ஒதுக்கப்பட்டுவிட்ட விளையாட்டில் மேதையாக இருந்தது தியான் சந்தின் குற்றம்போலும்.
அதே போன்று நமது சமகாலத்திய மற்றொரு விளையாட்டு மேதையையும் பாரத ரத்னா விஷயத்தில் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இதுவரையிலான, உலகின் ஆகச் சிறந்த முதல் ஐந்து செஸ் வீரர்கள் என்ற பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் ஆனந்துக்கு ஓர் இடம் இருக்கும். ஆனால், சச்சின்போல் கோடிக் கணக்கான ரசிகர்கள் இல்லையென்ற காரணத்தினாலோ என்னவோ, இந்திய அரசாங்கம் அவரது பெயரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கோடிக் கணக்கான ரசிகர்களைப் பெற்றிருப்பது மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான தகுதிகளுள் ஒன்றாக இருக்க முடியுமா? விளையாட்டுத் துறை இதுவரை ஒதுக்கப்பட்டிருந்தது தவறே, அதற்காகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது சரியானது. ஆனால், தியான் சந்தும் ஆனந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு ஆளும் கட்சிக்கும் இருக்கும் அரசியல் கணக்குகளையே காட்டுகிறது.
இளையராஜா?
கலை உலகைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்ட விஷயத்திலும் அப்படியே. பாரத ரத்னா விருதுக்கு இந்தி சினிமா உலகப் பாடகியான லதா மங்கேஷ்கர் எவ்வளவு தூரம் தகுதியானவர் என்பதுபற்றிச் சில கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ் சினிமா இசை மட்டுமின்றி, மேற்கத்திய செவ்விய இசையுலகிலும் சாதனை புரிந்திருக்கும் இசை மேதை இளையராஜா இதுவரையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? ராயல் பில்ஹார்மனிக் இசைக் குழுவுக்கான சிம்பொனி இசையமைத்த, வெள்ளையர் அல்லாத முதல் இசை மேதை இளையராஜாதான். ஆனால், இவரது சாதனைகள் தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்களுக்குப் பெரிதாகத் தெரியாததற்கான காரணம்?
வெளிநாட்டினரின் அங்கீகாரம்
சினிமா மேதை சத்யஜித் ராய், பொருளாதார மேதை அமார்த்திய சென் ஆகியோர் விஷயங்களில், அவர்கள் மேலை நாடுகளால் கௌரவிக்கப்பட்ட பிறகே இந்திய அரசு விழித்துக்கொண்டது. வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட பின்னரே இந்திய அரசு விழுந்தடித்துக்கொண்டு, மரணப்படுக்கையில் இருந்த சத்யஜித் ராய்க்குப் பாரத ரத்னா விருது அளித்தது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பின்னரே சென்னுக்கு பாரத ரத்னா அளிக்கப்பட்டது. ஆக, வெளிநாட்டவர்கள் இந்திய அரசாங்கங்களுக்கு மேதைகளை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது போலும்.
அறிவியலாளர்களுக்குப் பாரத ரத்னா வழங்கும் விஷயத்தில்கூட சுப்ரமணியன் சந்திரசேகர், சத்யேந்திர நாத் போஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற மகத்தான அறிவியல் மேதைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.

சிந்திக்காமலிருக்கும் வழிகள்

Courtesy : Hindu Magazine

தேன்கூட்டுக்குள் அந்நியக் கூட்டைச் சேர்ந்த ஒரு தேனீயைப் பிடித்துப் போட்டால், அந்தத் தேன்கூட்டுக்குள் இருக்கும் மொத்தத் தேனீக்களும் கலைவதைக் காணலாம். சற்று நேரத்தில் அந்த அந்நியத் தேனீ கொல்லப்பட்டு வெளியே வீசப்படும். தேக்கமுற்ற மூளைகளும் இப்படித்தான் புதிய கருத்தை எதிர்கொள்கின்றன.
சிந்தனை முடக்கம்
நம் குழந்தைப் பருவத்தில் குடும்பச் சூழல், வெளிச் சமூகச் சூழலிலிருந்து இயல்பாகவே கொஞ்சம் கல்வி கிடைக்கிறது. அதன் பின்னர், கல்விக்கூடம் அளிக்கும் சிறிதளவு கல்வி. வாழ்க்கையில் எங்காவது ஓரிடத்தில் பதிந்து மேற்கொண்டு வாழப் பழகிவிட்டால், சிந்திப்பதை முற்றாகவே நிறுத்திவிடுகிறோம்.
நாம் ஏற்கெனவே அறிந்தவற்றைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே நாம் விரும்பிப் பார்க்கிறோம். நாம் ஏற்றுக்கொண்ட கருத்தைச் சொல்லும் உரைகளை விரும்பிக் கேட்கிறோம். அவற்றையே பிறரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவைதாம் நமக்குப் புரின்றன, நம்மை மகிழ்விக்கின்றன.
நாம் அறிந்திராத ஒரு புதிய கருத்து நம்முடைய அகத்தை நிலைகுலையச் செய்கிறது. நாம் அதுவரை உருவாக்கி வைத்திருந்த சிந்தனைகள் சரிகின்றன. ஆகவே, அது நமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கும். கோபம் கொள்ளச் செய்யும். நாம் நம்பிக்கொண்டிருப்பதில் ஆழமான உறுதி நமக்கிருக்கும் என்றால், புதிய சிந்தனை நமக்குக் கேலிக்குரியதாகவும் தோன்றும்.
மூன்று நிலைகள்
நம்முடைய அறிதலின் மூன்று படிநிலைகளை பௌத்த ஞானமரபு அடையாளப்படுத்துகிறது. ஒரு புதிய விஷயத்தை மனம் எதிர்கொள்ளும்போது நம் அகக் கட்டுமானமே அதிர்ச்சி அடைகிறது. அதை ‘அந்தக்கரண விருத்தி’ என்கிறது பௌத்தம். முதன்முதலில் கடலைப் பார்க்கும் குழந்தை திகைத்துச் சொல்லிழந்து அப்படியே விழித்துப் பார்த்து அமர்ந்திருப்பது அந்தக்கரண விருத்தி நிகழ்வதால்தான்.
அதன்பின் நாம் அந்தப் புதிய அனுபவத்தை நாம் ஏற்கெனவே அறிந்துவைத்திருக்கும் அறிவின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள முயல்கிறோம். ஏற்கெனவே நாம் அறிந்திருக்கும் அறிவெல்லாம் மொழியில் இருப்பதால் அந்தப் புதிய அனுபவத்தையும் மொழிக்குள் கொண்டுவருகிறோம். அந்தப் புதிய அறிதலுக்கு ஒரு பெயரிடுகிறோம். குழந்தை ‘பெரீய தண்ணி’ என்று சட்டெனக் கைநீட்டிக் கூவுகிறது. இதை ‘சப்தாகரண விருத்தி’ என்கிறது பௌத்தம்.
அந்தப் பெயர் வழியாக அந்தப் புதிய அறிதல் நாம் அறிந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதன் பிறகு, அந்தப் பெயருடன் நாம் அறிந்த அனைத்தையும் இணைக்க ஆரம்பித்துவிடுகிறோம். ‘இதுதான் அது’ என அடையாளப்படுத்துகிறோம். இதை பௌத்தம் ‘ததாகரண விருத்தி’ என்கிறது.
இந்த மூன்று படிநிலைகளாக நிகழும் அறிதல் என்பதுதான் மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள பேரின்பம். பௌத்த சிந்தனையும் சரி, வேதாந்தமும் சரி மனிதன் உடல்கொண்டு, உயிர்கொண்டு வந்து வாழ்ந்திருப்பதே படிப்படியாக மலரும் அறிவின் பொருட்டு மட்டும்தான் என்கின்றன.
மகத்தான நிமிடங்கள்
நம்முடைய வாழ்க்கையின் மகத்தான நிமிடங்கள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் பின்னால் திரும்பிப்பார்த்தால், அவையெல்லாமே நாம் புதியதாக எதையாவது கண்டு, அறிந்து, உணர்ந்த தருணங்கள் என்பதை அறியலாம். முதன்முதலாகப் பார்த்த மலை, முதலில் கண்ட கடல், முதற்காதல், முதல் காமம், முதல் குழந்தையை மார்போடு அணைத்த தருணம்... அதன்பின் எங்கோ அந்த ‘முதல்’ அனுபவம் என்பது நின்றுவிடுகிறது. எல்லாம் பழைய அனுபவங்களாக ஆகிவிடுகின்றன. அங்கே உண்மையில் வாழ்க்கையும் நின்றுவிட்டிருக்கிறது.
சிந்தனையில் இப்படி முற்றிலும் புதிய ஒன்றை எதிர்கொண்டு நிலைகுலைந்த கடைசித் தருணம் எது என்று யோசித்துப்பாருங்கள். நம் கல்லூரிக் காலத்துக்குப் பின் அப்படி ஒரு சலனமே நமக்குள் நிகழ்ந்ததில்லை என உணர்வீர்கள்.
மூளைச்சோம்பல்
புதுச் சிந்தனைகளைத் தவிர்ப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் ஏராளமான வழிகளைக் கண்டுவைத்திருக்கிறோம். நம்முடையது மூளைச்சோம்பல் மிக்க ஒரு சமூகமாதலால், நம் சூழலிலேயே புதிய சிந்தனைகளைத் தவிர்ப்ப தற்கான ஏராளமான பேச்சுக்கள் புழங்குகின்றன.
முதல் கேள்வி, “இதனால் என்ன பிரயோசனம்? இந்தச் சிந்தனைகளால் நம் உலகியல் வாழ்க்கைக்கு ஏதாவது பயனுண்டா?” வாழ்க்கை என்பது பணத்தை யும் அதிகாரத்தையும் ஈட்டுவது மட்டும்தான் என்ற நம்பிக்கையிலிருந்து எழக்கூடிய கேள்வி இது. அதே கேள்வியை அவர்களிடம் திருப்பிக் கேட்க முடியும். “உங்கள் பிள்ளைகளைப் பணக்காரர்களாக ஆக்கிவிட்டுச் செத்துப் போவதன் வழியாக நீங்கள் அடையும் இன்பம் என்ன?”
அறிதலின் பேரின்பம்
அறிதல் என்பது தன்னளவில் பேரின்பம். நுகர்வு மூலம் அதிகாரம் வழியாக அடையும் போலி இன்பங்கள் எவையும் அதற்கு நிகரல்ல. உலகியலில் உண்மையான இன்பம் என ஏதுமில்லை. ஓர் இன்பத்தை அடைந்ததுமே அது முக்கியமல்ல… அதற்கு அப்பால் உள்ள இன்னொன்றே இன்பம் என்று தோன்றவைத்து, கடைசிக்கணம் வரை ஓட வைத்துக்கொண்டே இருக்கும் ஒரு போதை அது.
என்ன பயன்?
“தேவையில்லாதவற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?” என்பது இரண்டாவது வாதம். “தேவையில்லாதவற்றின் மீது நம் கவனம் நிலைப்பதே இல்லை” என்பதே அதன் பதில். இலக்கியத்தில் ஆர்வம் உடையவன் ஒருபோதும் பங்குமார்க்கெட் நிலவரத்தைக் கூர்ந்து கவனிக்கப்போவதில்லை. ஒவ்வொரு வருக்கும் அவரது அகத்தின் இயல்புக்கு ஏற்ப ஒரு தேடல் உண்டு. அந்தத் தேடலுக்கு விடையாகும் விஷயங்களை மட்டுமே அவரால் கவனிக்க முடியும்.
இவை உலகியல் வினாக்கள். போலி ஆன்மிகத் தளத்திலிருந்து ஒரு வினா எழும். “இந்த மாதிரி எதையெதையோ தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போகிறது? மனுஷன் தன்னை அறியணும்... தன்னை அறியறது வழியா பரம்பொருளோட உண்மைய அறியணும்... அதுக்கு இதெல்லாம் தேவையே இல்லை.”
இந்தியாவின் எந்த ஞானமரபிலும் இந்தக் கூற்றுக்கு ஆதரவில்லை. இது வெறுமே மூளைச்சோம்பலுக்குச் சொல்லப்படும் சாக்குப்போக்கு மட்டுமே. பௌத்தம் கூறும் ஓர் உவமை; மனிதக் குலத்தில் எவருக்கும் மேலே நிமிர்ந்து நோக்கி சூரியனைப் பார்க்கும் பார்வை இல்லை என்று வைத்துக்கொள்வோம். மண்ணிலுள்ள பல்லாயிரம் பொருட்களில் ஒளிவிடும் பிரதிபலிப்புகள் வழியாகவே சூரியனைக் கண்டுணர முடியும். பரம்பொருள் என்ற ஓர் ஒற்றை உண்மை இருந்தாலும், நம்மைச் சூழ்ந்துள்ள பல கோடி உண்மைகளை அறிவதன் மூலமே அதை நாம் அறிய முடியும். அறிந்தவர்கள் எல்லாம் அப்படி அறிந்தவர்களே.
மகாதர்மம்
இங்குள்ள ஒவ்வொன்றிலும் உறையும் தர்மம் என்ற மாற்றமில்லா விதியின் ஒட்டுமொத்தப் பேருருவமே மகாதர்மம் என்றுதான் பௌத்தம் சொல்லும். இங்குள்ள அனைத்திலும் உறையும் சாராம்சத்தின் முழுமையே ஈசன் என்று ஈஸோவாஸ்ய உப நிடதம் சொல்லும். இவற்றை அறிவதன் உச்சமே அந்த அறிதல். சின்னச் சின்ன உண்மைகளை எதிர்கொள்வதற்குச் சோம்பல் கொள்ளக்கூடியவர்கள் எப்படிப் பேருண்மையை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முடியும்?
இருநூறாண்டு காலமாக, பிழைப்பது மட்டுமே வாழ்க்கை என்று நம்பக்கூடிய ஒரு பெருங்கூட்டமாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு அறிவுத் துறையிலும் இருக்கும் தரவீழ்ச்சிக்கான காரணம் இதுதான். இதை வெல்ல ஒரே வழி, சிந்தனைக்கு எதிராக நம் சூழல் நம்மிடம் சொல்லும் ஒவ்வொரு சாக்குப்போக்கையும் அறியாமையின் வெற்றுப் பசப்பு என அருவருத்து அகற்றுவது மட்டுமே.
ஜெயமோகன், எழுத்தாளர் 

அரசால் முடியாது என்று நாமே நம்புவதுதான் பிரச்சினை! - அமர்தியா சென் நேர்காணல்

Courtesy : Hindu Magazine

அடிப்படையில் தன்மதிப்பு உள்ள எந்த நாடும் மருத்துவப் பராமரிப்பு என்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்று கருதிவந்திருக்கிறது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த நேர்காணலிலிருந்து…
வேலை செய்வதற்கான உரிமை, உணவு பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்குப் பிறகு, இந்தியாவில் மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான உரிமைக்காகச் சட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக! நாம் இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பணக்கார நாடுகளில் அநேகமாக அமெரிக்காவைத் தவிர எல்லா நாடுகளிலும் மருத்துவப் பராமரிப்பைப் பெறும் உரிமை என்பதை மக்களின் மிக அடிப்படையான உரிமையாக அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இதை ஒரு சட்டத்தின் மூலம் கொண்டுவர வேண்டும் என்ற நிலையே நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
உலக வரலாற்றைக் கொஞ்சம் பாருங்கள். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் ஐரோப்பிய நாடுகள் மருத்துவப் பராமரிப்பைப் பெறும் உரிமையைத் தங்கள் மக்களுக்கு வழங்கின. ஆசிய நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளும் அந்தத் திசையில் சென்றன. ஜப்பானிடம் அதற்கு முன்பே வெற்றிகரமான ஒரு மருத்துவ அமைப்பு இருந்தது, அதை ஜப்பான் மேலும் விரிவுபடுத்தியது. சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்வான் ஆகியவற்றிலும் இது அமலில் இருந்தது.
சீனத்திலும் ‘எல்லாருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ என்பது அமலில் இருந்தது. 1979-ல் அதைச் சந்தைமயமாக்கியபோது குடிமக்கள் யாவரும் தங்கள் மருத்துவக் காப்பீட்டைத் தாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. 1979 வரை எல்லாருக்குமான மருத்துவக் காப்பீடு என்பது 100% இருந்த நிலை மாறி 12 % ஆக ஆனது. அது எப்பேர்ப்பட்ட பிழை என்பதை அவர்கள் 2004-ல் ஒப்புக்கொள்வதற்கு 25 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அனைவரையும் இதில் உள்ளடக்க முயன்று இப்போது 96% மக்கள்தொகையை உள்ளடக்கியிருக்கிறார்கள்.
அடிப்படையில் தன்மதிப்பு உள்ள எந்த நாடும் இது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்று கருதிவந்திருக்கிறது. எனவேதான், இந்திய அரசு இதைப் பற்றி நினைத்துப்பார்க்கவே இல்லை என்பது நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது. மனித ஆற்றல் வளர்ச்சியும், அதுதான் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் மிகவும் சாதகமானது என்று புரிந்துகொண்டதும்தான் ஆசியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்துவிசையாக இருந்திருக்கின்றன.
வளர்ச்சி வீதம் என்பதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது நம் நாடு. உயர் வளர்ச்சி வீதம் நீண்ட காலம் நீடிப்பதற்கு ஆரோக்கியமான, படிப்பறிவு மிக்க ஒரு சமூகத்தைவிட வேறெதுவும் காரணமாகிவிட முடியாது.
உங்கள் கேள்விக்கே நான் திரும்பி வருகிறேன். அரசாங்கம் இதைச் செய்யாத பட்சத்தில் மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான உரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் இதைச் செய்ய அரசாங்கத்தை வற்புறுத்தலாமா?
ஆமாம், அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால், அரசு இதை ஏன் செய்யவில்லை? இது மிகப் பெரிய பொதுப் பிரச்சினை இல்லையா? ஆம் ஆத்மி கட்சிகூட இதைப் பற்றிக் கேள்வி எழுப்பவில்லையே? இந்த விவகாரத்தில் ஊடகங்கள் முக்கியப் பங்குவகிக்க வேண்டும். பொதுவாக, ஊடகங்கள் இந்த விஷயம் குறித்து மேலதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
வளர்ச்சிக்கும் மனிதர்களின் திறன்மேம்பாட்டுக்கும் இடையிலான இருவழிப் பாதைபற்றிய கேள்வி இது. கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா என்பது மாதிரியான இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?
இல்லையில்லை. அப்படிப்பட்ட நிலையல்ல இது. இரு தரப்புக்குமே வெற்றி என்பது போன்ற நிலைதான் இது. வளர்ச்சியின் ஒவ்வொரு துளியும் வருமானத்தை மேலும்மேலும் பெருக்குகிறது. அதைக் கொண்டு மருத்துவத்துக்கும் கல்விக்கும் நாம் செலவிட முடியும். மருத்துவத்துக்கும் கல்விக்கும் எந்த அளவுக்குச் செலவு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு வளர்ச்சியின் அடித்தளம் உறுதியாக அமைகிறது. இவற்றில் நீங்கள் எங்கே தொடங்கினாலும் எப்போது தொடங்கினாலும் நிச்சயம் பலனளிக்கும்.
அரசியல் பொருளாதாரத்தை எதற்காக நாட வேண்டும் என்று ஆடம் ஸ்மித்திடம் கேட்டபோது, அவர் சொன்ன பதிலை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “அதுதான் ஒரு பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. அதனால் என்ன பலன்? முதலாவதாக, அது மக்களின் வருவாயைப் பெருக்குகிறது. அதிக வருவாய் என்பது, தாங்கள் செய்வது முக்கியம் என்று மக்கள் நினைக்கும் செயல்களைச் செய்வதற்கு வழிவகுக்கிறது. அது, அரசின் வருவாயை அதிகரிப்பதுடன் அதன்மூலம் கல்வி முதலான விஷயங்களில் அரசாங்கம் மேலும் அக்கறை செலுத்த உதவுகிறது.”
ஆனால், இந்தியாவில் விசித்திரமான ஒரு நிலைமை நிலவுகிறது. கல்வி, மருத்துவப் பராமரிப்பு போன்ற துறைகளில் அரசின் பங்கு என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய் அவை தனியார்வசம் விடப்பட்டிருக்கின்றன. தனியாரிடம் விடவேண்டிய எஃகு உற்பத்தி, எண்ணெய்ச் சுத்திகரிப்பு போன்ற துறைகளை அரசே நிர்வகிக்கிறது….
தெளிவற்ற சிந்தனை என்பது இதுதான். ஒவ்வொரு முறையும் நான் இந்தியாவுக்கு வரும்போது நிறைய பேர் என்னிடம் சொல்வார்கள்: “அரசாங்கத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே, கல்வியும் மருத்துவப் பராமரிப்பும் தனியார்வசம் விடப்பட வேண்டும்.” அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மருத்துவப் பராமரிப்புக்காக மக்கள் செய்யும் ஒட்டுமொத்தச் செலவில் இந்திய அரசின் பங்களிப்பு என்பது உலகிலேயே மிகக் குறைந்த மூன்று பங்களிப்புகளுள் ஒன்று; ஹைதியும் சியாரா லியோனும் பிற இரண்டு நாடுகள்.
மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம், சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அடிப்படை மருத்துவப் பராமரிப்பு விஷயத்தில் நடப்பதே வேறு. அரசின் சுகாதாரத் திட்டங்கள் தடுப்பு மருத்துவத்தையோ தடுப்பு மருத்துவப் பராமரிப்பையோ உள்ளடக்குவதில்லை. ஆனால், உங்கள் உடல்நலம் மிக ஆபத்தான நிலையை எட்டினால் அரசாங்கம் உங்களுக்காகப் பணம் கொடுக்கும், பெரும்பாலான சமயங்களில் இந்தப் பணம் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான், அதாவது உங்களுக்கு அவை சிகிச்சையளிப்பதற்காகப் போய்ச்சேரும்.
பொதுமக்களுக்கான மருத்துவப் பராமரிப்பை மேற்கொள்ளும் அழகல்ல இது. அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னால், தமிழ்நாடு, கேரளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய உதாரணங்களைப் பாருங்கள். இந்த மாநிலங்களெல்லாம், இந்த விஷயத்தில், நன்றாகச் செயல்படுகின்றன என்று வெகு நாட்களுக்கு முன் விவாதித்தபோது மோசமான பொருளாதார நிலைமைகளால் அவற்றால், முக்கியமாகக் கேரளத்தால், நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்று சொன்னார்கள். தற்போது, இந்தியாவிலேயே அதிகமான தனிநபர் வருமானத்தை (வரி நீங்கலாக) கொண்ட மாநிலம் கேரளம்தான்.
உங்கள் வாழ்க்கையின் தரத்தை அதிகரிக்கும் அதே விஷயம்தான் பொருளாதார முன்னேற்றத்துக்கும் காரணமாகிறது. இந்தச் செய்தியைக் கேட்க யாரும் தயாராக இல்லை. நரேந்திர மோடி மற்ற மாநிலங்களைவிட அதிக வளர்ச்சி வீதம் கொண்ட மாநிலமாகத் தன் மாநிலத்தை மாற்றியிருக்கிறார் என்ற கதையைத்தான் நாம் கேட்க விரும்புகிறோம். சமீபத்தில் ஒரு புயல் வந்தது. நம் ஊடகங்களில் ஒரு மாதத்துக்கு இடம்பெறும் அளவுக்கு இந்தப் புயல் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், பத்து லட்சம் மக்களைக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அரசாங்கம் அனுப்பியதால் புயல் பாதிப்பு முதல் நாளோடு ஓய்ந்துவிட்டது. காத்ரினா புயலைவிட ஐந்து மடங்கு பெரிய புயல் இது.
பிரச்சினை என்னவென்றால் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக்கொள்கிறோம்.
சமீபத்திய தேர்தல்களில் ஆச்சரியமூட்டும் சில நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக உருவெடுத்திருக்கும் கட்சி, வாக்காளர்களைத் தன்வசம் ஈர்த்திருப்பதைக் கண்டோம்; மிதமான வலதுசாரி அரசியலின் எழுச்சியை பா.ஜ.க-வின் வெற்றியில் கண்டோம். இதையெல்லாம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கடந்த காலத்தில் மக்கள் புறக்கணித்திருந்த பல விஷயங்களை முன்னுக்குக் கொண்டுவந்திருந்ததால் டெல்லி தேர்தல் மிகவும் சுவாரசியமான ஒன்றாக ஆகியிருக்கிறது. நாம் முக்கியத்துவம் கொடுக்க நினைத்த எல்லா விஷயங்களையும் அது முன்னுக்குக் கொண்டுவரவில்லை. கல்வி மீதான உதாசீனத்தையோ மருத்துவப் பராமரிப்பில் உள்ள குறைபாட்டையோ இன்னும் பிறவற்றையோ அது முன்வைக்கவில்லை.
ஏற்கெனவே இருக்கும் சேவைகளை, திறமை வாய்ந்த, ஊழலில்லாத முறையின் மூலமாக வழங்குவதிலேயே அது அதிக அக்கறை கொண்டிருந்தது. இதுவும் முக்கியமானதே, ஆனால் இன்னும் விரிவான ஒரு செயல்திட்டம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நான் விரும்புகிறேன். இருப்பினும், ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் செய்துவிட முடியாதுதான். தேர்தல் அரசியலுக்குள் சில பொது அக்கறைகளை ஆம்ஆத்மி கட்சி கொண்டுவந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. மதம், சாதி போன்றவற்றை மையமிடாமல் மக்களை இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தச் செய்தது ஆ.ஆ.க-விடம் உள்ள பாராட்டத் தக்க அம்சம். சாதி, மத அரசியலைக் கையிலெடுக்காமல் டெல்லியில் பல இடங்களை அவர்கள் வென்றதும் பாராட்டுக்குரியது.
மற்ற இடங்களில் நடந்த தேர்தல்களிலோ புதிதாக ஏதும் இல்லை. அந்தத் தேர்தல் முடிவுகளில் சாதியும் மதமும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. பா.ஜ.க-வின் தலைமை குறித்து பல்வேறு கேள்விகள் பலர் மனதிலும், என் மனது உட்பட, இருந்தபோதிலும், திறமையான கட்சி என்ற பிம்பத்தை ஊதிப்பெருக்க அதனால் முடிந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியோ கடிவாளம் இல்லாத குதிரை போன்று காட்சியளிக்கிறது. ஆர்வமூட்டும் அம்சங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் அடையாளமா? இது, காங்கிரஸை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரஸை எழுப்ப முடியுமா என்று உறுதியாகத் தெரியவில்லை.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை

வேளாண் விளைபொருள்களின் விலை சரிவது ஏன்?


Nandri Hindu Magazine : 

அசோக் குலாத்தி பிரபலமான வேளாண் பொருளியல் நிபுணர். கல்வியாளரான அவர் இந்தியாவிலும் உலக அளவிலும் வேளாண் சந்தைகளில் என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவர். வேளாண் உற்பத்திச் செலவு - விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர். அவருடைய அமைப்புதான் பல்வேறு வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது. உலக அளவில் விவசாயப் பொருள்களுக்கான விலைகளில் சரிவு ஏற்பட்டுவரும் சூழலில், இந்திய விவசாயிகள் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுகுறித்து விரிவாகப் பேசுகிறார்.
நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?
உலக அளவில் 2011-ல் உணவு தானியங்களின் விலை அதிகரித்ததால் எல்லா நாடுகளிலும் சாகுபடியாளர்கள் அதற்கேற்ப விளைச்சலைப் பெருக்கி சந்தைக்கு அனுப்பத் தொடங்கினார்கள். அதன் விளைவாக எல்லா வகை தானியங்களின் உற்பத்தியும் உச்சத்தை எட்டி அவற்றின் விலையைச் சரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக பாமாயில் உங்களுக்கு இப்போது ஒரு டன் 800 டாலருக்குக் கிடைக்கிறது. 2011-ல் அதன் விலை டன்னுக்கு 1,100 டாலராக இருந்தது. கோதுமையின் விலை டன்னுக்கு 400 டாலரிலிருந்து குறைந்து இப்போது 285 - 290 டாலர் வரை விற்கிறது.
உலக அளவில் விலை உயர்ந்து உச்சத்தை எட்டியபோது காலந்தாழ்ந்து நம் நாட்டிலும் எப்படி விலை உயர்ந்ததோ, அதேபோல விலை இறங்கும்போதும் காலந்தாழ்ந்து இறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல பருவமழையை அடுத்து விளைச்சல் அமோகமாக இருப்பதால் இந்தச் சரிவு மேலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எந்த வகைப் பயிர்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது?
சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் விலை அதிகமாக இருக்கிறது என்று இப்போது யாராவது புகார் செய்கிறார்களா? மக்காச்சோளமும் நிலக்கடலையும் (வேர்க்கடலை - மணிலா) இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கீழே சந்தையில் விற்கப்படுகின்றன. கடந்த கோடைப் பருவத்தில் கொண்டைக் கடலை அறுவடையின்போது இதேதான் நிகழ்ந்தது. பருப்பு வகைகள், புன்செய் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விலை இப்போது இறங்குமுகமாகவே இருக்கிறது. பருத்திகூட இந்த முறை அமோக விளைச்சல் கண்டுள்ளது.
உலக அளவில் விலை குறைந்துவிட்டதால் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நிலவுகிறது. சீனத்திலிருந்து பருத்திக்குக் கேட்பு இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிக விலைக்கு அது விற்பனையாகிறது. கடுகு, கொண்டைக் கடலை விளைச்சல் வரும் கோடைப் பருவத்திலும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், அவை சாகுபடியாகும் பிரதேசங்களில் மண்ணில் நல்ல ஈரப்பதம் காணப்படுகிறது.
எந்தப் பயிர்களில் இந்தப் பணவீக்கம் தொடர் கவலையாக நீடிக்கும்?
அரிசி, கோதுமை, காய்கறிகள், பழங்களில் இந்த நிலை நீடிக்கும். அரிசி, கோதுமை விலை உயர்வுக்குக் காரணம், அரசு தன் வசமிருந்த கையிருப்பை முறையாகச் செலவிடாததே ஆகும். அரிசி, கோதுமையில் அரசு உபரியாக 20 மில்லியன் டன்னைத் தன் கையிருப்பில் வைத்திருக்கிறது. இவற்றை ஏன் சந்தையில் நேரடியாக விற்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியே விற்றாலும் அவை மீண்டும் கொள்முதல் நிலையங்கள் வழியாக அரசுக் கிடங்குகளுக்கே வந்துவிடும் என்ற அச்சம் இருந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையிலேயே மக்களுக்கு விற்றிருக்கலாம். இது செயற்கையாக ஏற்றப்பட்டுள்ள புன்செய் தானியங்களின் விலையைக் குறைப்பதுடன், இந்த அளவுக்கு உணவு தானியத்தைக் கிடங்கில் வைத்து, பராமரிக்கும் செலவைக் கணிசமாகக் குறைத்திருக்கும். உபரியாக இருக்கும் தானியங்களை அரசு ஏற்றுமதிகூடச் செய்யலாம்.
ஒரு டன் கோதுமை இப்போது சர்வதேசச் சந்தையில் 285 டாலர் முதல் 290 டாலர் வரையில் விற்கப்படுகிறது. இதன் குறைந்தபட்ச ஆதரவு விலை 225 டாலர். பாசுமதி அல்லாத அரிசி ஒரு டன் ரூ.24,000 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே வேளையில், இதே ரக நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,600தான். குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,310. இவற்றைவிட்டால் மிஞ்சுவது பழங்களும் காய்கறிகளும்தான்.
இதை எப்படித் தீர்ப்பது?
பிரச்சினை எதுவென்றால் அரசின் கொள்கைதான். விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய முடியாது. எல்லா மாநிலங்களிலும் சந்தையில், கட்டாயக் கொள்முதல் (லெவி) அளவு மிக அதிகமாக இருக்கிறது. குஜராத் மட்டும்தான் விதிவிலக்கு. அங்குதான் தரகு வியாபாரிகளின் கமிஷன் குறைவாக இருக்கிறது. வேர்க்கடலை அல்லது பருத்தியைக் கொள்முதல் செய்தால் குஜராத் தரகர் 100 ரூபாய்க்கு வெறும் 50 பைசாவைத்தான் தரகாகப் பெற்றுக்கொள்கிறார். இது சதவீதக் கணக்கில் வெறும் 0.5%. குஜராத்தைப் பொருத்தவரை இந்தத் தரகு, இதர கட்டணம் என்று எல்லாவற்றையும் கூட்டினாலும் அது 3%-க்கு மேல் போவதில்லை. பஞ்சாபில் தரகருக்குத் தர வேண்டியதே 2.5%. இதர கட்டணங்களெல்லாம் சேர்ந்து கோதுமைக்கும் நெல்லுக்கும் அவற்றின் விலையில் 14.5% வந்துவிடுகிறது.
பழங்கள், காய்கறிகள் விஷயத்தில் இது மேலும் மோசம். டெல்லி ஆசாத்பூர் மண்டியில் 6%-ம் மும்பையின் வாஷி மார்க்கெட்டில் 8%-மாக இருக்கிறது. அதிகாரபூர்வமற்ற முறையில் இதுவே சமயங்களில் 10% முதல் 14% வரையில் இருக்கிறது.
வேளாண் விளைபொருள் விற்பனை கமிட்டியின் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அடித்தளக் கட்டமைப்புகளில் மாற்றியமைக்காமல் பழங்கள், காய்கறிகள் விலையில் உங்களால் எந்த மாற்றங்களையும் செய்துவிட முடியாது. மத்திய அரசு இதற்கு மாநிலங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போடலாம். காலத்துக்கு ஒவ்வாத வேளாண் விளைபொருள் சந்தைக் குழுச் சட்டங்களையும் மண்டிகளின் அதிகபட்சத் தீர்வைகளையும் மத்திய அரசு தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் தங்களுடைய கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் மாற்றியிருக்கலாமே?
தோட்டக்கலைப் பொருள்களை அப்படியே வயலிலிருந்து எடுத்து நேரடியாக நுகரும் இப்போதைய வழிமுறைகளில் நாமும் சில மாறுதல்களைச் செய்துகொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி இவற்றில் இதை முதலில் தொடங்க வேண்டும். சந்தைச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்வது அவசியம். வேளாண் விளைபொருள்களை வாங்கிப் பக்குவப்படுத்தவும் பதப்படுத்தவும் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்வதற்கேற்ற வகையில் நடைமுறைகளை அரசு திருத்த வேண்டும்.
பிசினஸ்லைன், தமிழில்: சாரி

About China

2014-ல் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு: அதுதான் சீனாவின் கடன். முழு வீச்சிலான பொருளாதார நெருக்கடி அங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
சாலைகள், பாலங்கள், நீர் பகிர்மான அமைப்புகள், கழிவுநீர்ப் பாதைகள், சுரங்க நடைபாதைகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் என்று பெரும் உள்கட்டுமானங்களில் சீனாவின் உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலவிடுவதாலும் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சியினாலும் சீனாவுக்கு ஏற்படும் கடன் வீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கிறது.
இந்தத் திட்டங்களால் கிடைக்கும் வருமானங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தப் போதுமானதாக இருக்காது என்று அஞ்சப்படுகிறது. இதனால் ‘கடன்செலுத்தா நிலை’ (டிஃபால்ட்) ஏற்பட்டு, வங்கிகள ்மீதான நம்பிக்கை குறைந்துபோய் எல்லாரும் ஒரே நேரத்தில் வங்கிகளிலிருந்து பணம் எடுக்கக்கூடிய நிலை (பேங்க் ரன்) உருவாகிவிடும். இது உலக அளவில் பொருளாதாரத்தை உலுக்கிவிடும்.
1997-க்குப் பிறகு…
இந்த அச்சத்தை அதிகரிக்கச் செய்வது அதிகாரபூர்வமான ஓர் அறிக்கை. டிசம்பர் 30 அன்று வெளியான இந்த அறிக்கை, சீனாவின் உள்ளாட்சி அமைப்புகளின் கடன் 2010-ன் இறுதிக்கும் 2013 ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் 67%. அதாவது, மூன்று லட்சம் கோடி டாலர்கள் அதிகரித்திருக்கிறது.
யூபிஎஸ் வங்கியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் டாவோ வாங்க், தங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக வெளியிட்ட அறிக்கையில், கடன் நிலைமையானது ‘சமாளிக்கக் கூடிய’ அளவில் இருக்கிறது என்றும், ஆனால் கடன் அதிகரிக்கும் வேகம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இப்போதைய உள்நாட்டுக் கடனானது சீனப் பொருளாதாரத்தில் (அதாவது, மொத்த உற்பத்தி மதிப்பில்) மொத்தம் 33% இருக்கிறது. இதுவே 2008-ல் 10% ஆகவும் 1997-ல்
பூஜ்ஜியமாகவும் இருந்தது.
2008-ன் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்காக சீனா புதிய கட்டுமானங்களை, அதாவது உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவிகளைப் பெற்ற கட்டுமானங்களைச் சார்ந்திருந்தது.
இது மாதிரியான முதலீட்டுச் செலவினங்களைச் சார்ந்திருப்பது சீனாவுக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று வாங்க் சொல்கிறார். கட்டுமானத்தையும் அதன் சார்பான கடனையும் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்தால், அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிப்படையும். அதே நேரத்தில், செலவினங்கள் மட்டுப்படுத்தப்படாவிட்டால் நிதி நெருக்கடிகள் பன்மடங்கு பெருகி, திட்டங்கள் யாவும் செயற்படுத்த முடியாதவையாக ஆகிவிடும்.
சுரங்க ரயில்பாதைத் திட்டங்கள்
பெரும்பாலான திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை பீட்டர்சன் நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் நிக்கோலஸ் லார்டி ஒப்புக்கொள்கிறார். “பெருமளவு பணம் சுரங்க ரயில்பாதைத் திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன. ஹாங்காங் சுரங்க ரயில்பாதைத் திட்டம் நீங்கலான எல்லா சுரங்க ரயில்பாதைத் திட்டங்கள் போலவே, இந்தத் திட்டங்களால் நஷ்டம்தான் ஏற்படப்போகிறது.
கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு நடைமுறைச் செலவுகளை மட்டுமே ஈடுகட்டலாம்” என்று அவர் சொல்கிறார். இறுதியில், மத்திய அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஏற்படும் என்று லார்டி எதிர்பார்க்கிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரிவருவாய்களில் பெருமளவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மடைமாற்றம் செய்யப்படும்; கூடவே, கட்டுமானங்களுக்கான கடனை உள்ளாட்சி அமைப்புகளே பார்த்துக்கொள்ள வேண்டும்.
சந்தேகம்தான்…
இதற்கிடையே, இந்தக் கடன்களால் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்படுவது சந்தேகம்தான் என்று லார்டி கருதுகிறார். மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றின் கடன்களை உள்ளடக்கிய, சீனாவின் ஒட்டுமொத்தக் கடனை மற்ற பெரிய நாடுகளின் கடனுடன் ஒப்பிட்டு பார்த்தால், சீனாவின் நிலை அவ்வளவு மோசமாக இல்லை என்பதே உண்மை.
2013-ன் மத்தியில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிட்டால் அதன் கடன் என்பது அதில் 56% என்று மதிப்பிடுகிறார் வாங்க். இதற்கு மாறாக, 2010-ல் அமெரிக்காவின் மத்திய, மாகாண, உள்ளாட்சி அரசுகளின் ஒட்டுமொத்தக் கடனானது, மொத்த உற்பத்தி மதிப்பில் 100% என்று மதிப்பிடுகிறார் லார்டியின் சகாவான ரையான் ருட்கோவ்ஸ்கி.
கடன் செலுத்தா நிலை
‘கடன் செலுத்தா நிலை’ ஏற்பட்டிருந்தால், வங்கிகள் மேல் மக்கள் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் அரசாங்கம் விரைந்து செயல்பட்டிருக்கும் என்று லார்டி கருதுகிறார். “வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்துபோய் எல்லாரும் ஒரே நேரத்தில் வங்கிகளிலிருந்து பணம் எடுக்கக்கூடிய நிலை ஏற்பட்ட சில சந்தர்ப்பங்களில் முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசாங்கம் வங்கிகளுக்குப் பணஊட்டம் கொடுத்திருக்கிறது” என்கிறார் லார்டி.
இருந்தாலும், கடன் பிரச்சினை என்ற அபாயம், அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சீனாவின் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சினையைப் படம்பிடித்துக்காட்டுகிறது. லார்டியும் பிறரும் வலியுறுத்தியதுபோலவே, அதிகமாக முதலீட்டுச் செலவினங்களில் ஈடுபடாமல் மேலும் அதிகமாக நுகர்வை நோக்கி நகர வேண்டும். அதிக அளவிலான முதலீடு என்பது ஏராளமான தொழிற்சாலைகள்,
வீட்டுவசதித் துறை, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். சீனாவின் முதலீட்டுச் செலவினம் என்பது அதன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு என்றும் மற்ற பெரிய நாடுகளைவிட இது மிக மிக அதிகம் என்றும் சொல்கிறார் லார்டி. நன்றாகச் சமன்படுத்தப்பட்ட பொருளாதாரமே சீனாவுக்கும் நல்லது உலகத்துக்கும் நல்லது.
© தி வாஷிங்டன் போஸ்ட், தமிழில்: ஆசை

Adverstisement and Business

http://www.nisaptham.com/2014/01/blog-post_4.html


From Hindu : 


உலகில் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தில் பாதியளவு 85 பெரும் பணக்காரர்கள் வசம் உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ள பாதி வளமே உலக மக்களிடம் பரவியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டு நிறுவனம் ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வறிக்கை “working for the few” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
டாவோஸ் நகரில் உலக பொருளாதார பேரவை (டபிள்யூஇஎப்) மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏழைகள், பணக்காரர்கள் இடையிலான இடைவெளியானது வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமின்றி வளரும் நாடுகளிலும் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
பெரும் பணக்காரர்கள் அரசியல் அதிகாரத்தின் துணையோடு பொருளாதார விளையாட்டை விளையாடுவதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சில பணக்காரர்களிடம் மட்டுமே பணம் குவிந்ததாதகவும் அதிலும் ஒரு சதவீத குடும்பங்களிடம் 46 சதவீத வளம் குவிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது..

******************************

What AD Does ?

* கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது... ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.
* மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரண்ட் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம்!
* ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நம்பர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல் மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!
* உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ செல்லுங்கள்.
* ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.
* கோலா பானங்கள் அனைத்துமே எல்லா வகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!
* சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.
* ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.
* குறிப்பிட்ட பால்பொருள் நல்ல பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
* மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.
* தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போது மட்டும்தான்.
* எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளை கோட் அணிந்திருப்பார்!