வியாழன், 23 ஜனவரி, 2014

விவசாயிகள் என்ற விஞ்ஞானிகள்

NANDRI HINDU MAGAZINE

நமக்கு உணவு தரும் உழவுத்தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது?
ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும் காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.
ஆனால், அப்போது நிலம் வயலாக மாற்றப்பட்டிருக்க வில்லை. உழுவதற்கும் விதைப்பதற்கும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது. நிலங்களில் மரங்களும் பாறைகளுமே இருந்தன. பள்ளத்தாக்குகள், குன்றுகள் என்று ஏற்றத்தாழ்வான நிலஅமைப்பும் இருந்தது. மனிதர்கள் மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. ஏற்றத் தாழ்வான பகுதிகளைச் சமப்படுத்த வேண்டியிருந்தது.
மனிதர்கள் தங்கள் கடுமையான உழைப்பால் நிலத்தைப் பண்படுத்தினர். இப்படி மண்ணைப் பண்படுத்தி, உணவு உற்பத்தி செய்யும் முறையே விவசாயம். ஆதிகால விவசாயிகள் இயற்கையாக விளைந்த ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் இருந்து விவசாயத்துக்கு ஏற்றவற்றைக் கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பயிர் செய்து பெருக்கினர்.
இந்த வேலைகளைச் செய்வதற்கு மனித உழைப்பு மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமும் அறிவைப் பயன்படுத்தும் திறனும் வேண்டியிருந்தது. விவசாயத்தை எளிமைப்படுத்தத் தேவையான கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது.
நிலத்திலிருந்து உணவுப் பயிர்களை விளைவிக்கும் அறிவியல்தான் விவசாயம் என்று அறியப்படுகிறது. உலகில் அனைத்து நாகரிகங்களிலும் விவசாயத்துக்குப் பின்னரே எழுத்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சி இயற்கை யாக நடந்த ஒன்றல்ல: மற்ற அறிவியல் தொழில்நுட்பங்களைப் போல விவசாயமும் மனிதர்களின் கண்டுபிடிப்புதான்.
கி.மு. 8000க்கும்
கி.மு. 3000க்கும் இடையே விவசாயத்தையும் வீட்டு விலங்கு வளர்ப்பையும் சார்ந்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளைக் கல்லால் உருவாக்கினர். மரத்தாலும் தோலாலும் செய்யப்பட்ட கருவிகள் பின்னர் உருவாகின. அதற்குப் பிறகு இரும்பாலும் மற்ற உலோகங்களாலும் விவசாயக் கருவிகள் செய்யப்பட்டன.
அன்றைய சமூக நிலை
விவசாயத்துக்கு இந்தியாவில் நீண்ட வரலாறு உண்டு. மேய்ப்பர்கள் விலங்குகளைப் பழக்கி வளர்க்கத் தொடங்கியபோது இறைச்சியும் பாலும் பால் சார்ந்த உணவுப் பொருட்களும், தோல் மற்றும் கம்பளி போன்ற மற்றப் பயன்பாட்டு பொருட்களும் கிடைத்தன. அதேநேரத்தில் காளைகளும் எருமைகளும் உழவுக்கும் வண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்டன.
ஐரோப்பாவில் குதிரைகளைக் கொண்டு உழுதனர். இந்தியர்களோ இந்தக் கடினமான வேலைக்கு மாடுகளைப் பழக்கினர். வண்டி இழுக்க ஐரோப்பாவில் குதிரைகளும் இந்தியாவில் மாடுகளும் உதவின. குதிரைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.
இறக்குமதியான குதிரைகள் மீது சவாரி செய்த படைவீரர்களும் தேரோட்டிகளும் இன்றும் புகழப்படுகின்றனர். ஆனால், மாடுகளை நுகத்தில் பூட்டி உழுத உழவர்களுக்கு இன்றைக்கு மதிப்பில்லை. நிலத்தை உழுது உணவு தந்த சாதியினரும் சமூகக் குழுக்களும் ‘சூத்திரர்’ என்று அழைக்கப்பட்டுச் சமுதாயத்தின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டனர். பண்டிதர்கள் எனப்பட்டவர்கள் விவசாய வேலையை, அறிவிலிகள் செய்யும் தொழிலாகக் கருதினர். பயிர்களை உணவாக மாற்றியவர்களுக்கு, அவர்களது மனசில் மரியாதை இல்லை. நிலத்திலிருந்து உணவு தயாரிக்கிற உழைப்பையும் அது சார்ந்த திறன்களையும் மதிக்காத மதமும் தத்துவமும் ஒரு சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை அழித்துவிடும்.
தொடக்கத்தில் விவசாய வேலைகள் அனைத்தையுமே மனிதர்களே முழுமையாகச் செய்து வந்தனர். கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் விலங்குகள் விவசாய வேலைகளுக்குப் பழக்கப்பட்டன. இது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. அதேநேரம், கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் வேத யாகச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. பௌத்தர்களின் ஆதரவுடன் இந்த யாகப் பலிகளை விவசாயிகள் எதிர்த்தனர். மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவதையும் பால் பொருட்களின் உற்பத்திக்காக வளர்ப்பதையும் பௌத்த மதம் ஊக்குவித்தது.
விவசாயம் என்ற அறிவியல்
இன்று விவசாயம் ஓர் அறிவியலாக அறியப்பட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருக்கிறது. ஆனால் விவசாயிக்கு காலங்காலமாக நிலத்தை எப்போது, எப்படிப் பண்படுத்துவது என்று தெரிந்திருந்தது. கட்டாந்தரையில் மாடுகளை ஏரில் பூட்டி உழுவதற்குக் கடுமையான பயிற்சி தேவை. பல தலைமுறைகளாக விவசாயிகள் தங்கள் சந்ததிகளுக்கு இதுபோன்ற திறமைகளைப் பயிற்றுவித்துவந்தனர்.
அதேநேரம் அந்த விவசாயிகளின் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் படிக்கப் பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தடை செய்யப்பட்டன. விவசாய வேலைகளில் பெற்றோர் தந்த பயிற்சி மட்டுமே அவர்களுக்குக் கல்வியாக இருந்தது. விவசாயிகளுக்கு எழுதவோ, படிக்கவோ முடியாததால் அவர்களது பாரம்பரிய அறிவு, அறிவாக மதிக்கப்படவில்லை.
வயலை உழுவதற்கு அறிவும் திட்டமிடும் திறனும் தேவை. கடலை விதைக்கும்போது ஆழ உழுத சால் (furrow) அவசியம் என்று விவசாயிகளுக்குத் தெரியும். பச்சைப்பயற்றுக்கு அவ்வளவு ஆழமான சால் தேவையில்லை. அதேபோல, பருவத்துக்கு உகந்த பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்ய வேண்டும். விவசாயிக்குத் தன் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை தெரியும். தான் பழக்கும் விலங்குகளின் இயல்பு தெரியும். உடலும் மனமும் சார்ந்த திறன்களை விவசாயம் ஒருசேரப் பயன்படுத்துகிறது. சொல்லப்போனால், எல்லா உடல் உழைப்புக்கும் மூளை உழைப்பும் அவசியம் தேவை. ஆனால், மூளை உழைப்புக்கு உடல் உழைப்புத் தேவையில்லை.
விவசாயிகள் பல்வேறு பயிர்களைக் கவனமாகப் பயிரிட்டு, அறுவடை செய்திருக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பட்டினி கிடந்திருப்போம். விவசாயிகளும் அவர்களுடன் வயல்வேலை செய்பவர்களும் சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறியப்படுகிறார்கள். இவர்களும், தலித்துகளும், பழங்குடியினரும்தான் நிலத்தைப் பண்படுத்தி நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுடைய உழைப்பில் விளைந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அவர்களை மதிக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும்?
நன்றி: பானை செய்வோம் பயிர் செய்வோம்: நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு, தூளிகா பதிப்பகம்

அதிகம் விற்ற 10 புத்தகங்கள் -2014

அதிகம் விற்ற 10 புத்தகங்கள்
1. ஆறாம் திணை - கு.சிவராமன் - விகடன் பிரசுரம்
2. அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் - கண்ணதாசன் பதிப்பகம்
3. கொற்கை - ஜோ டி குரூஸ் - காலச்சுவடு பதிப்பகம்
4. இது யாருடைய வகுப்பறை? - ஆயிஷா நடராஜன் - பாரதி புத்தகாலயம்
5. வெள்ளை யானை - ஜெயமோகன் - எழுத்து பிரசுரம்
6. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - என்சிபிஹெச்
7. கிமு – கிபி - மதன் - கிழக்குப் பதிப்பகம்
8. பூமித்தாய் - கோ.நம்மாழ்வார் - இயல்வாகை
9. மழைக்காடுகளின் மரணம் - நக்கீரன் - பூவுலகின் நண்பர்கள் வெளியீடு
10. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - எஸ்.ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம்

புதன், 22 ஜனவரி, 2014

வழிகாட்டிகள்

From Hindu Magzine

இங்கே நமக்கு இருக்கும் வழிகாட்டிகள் எப்படிப்பட்டவர்கள்?

இவர்களை எடுத்துக்கொள்வோமா?
* நடிகர்கள் நடிக்க வேண்டும், விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் திறமையைக் காட்ட வேண்டும், ஒரு பொருளின் தரத்தைப் படித்து, உணர்ந்து தெரிந்துகொள்ள முடியாத கல்வித் தரத்தில், குறைகளை எதிர்த்து எளிதில் குரல் கொடுக்க முடியாத சமூகத்தில், உருவாக்கிய விஞ்ஞானியோ, உபயோகிக்கும் பாமரனோ கொடுக்க முடியாத உத்தரவாதத்தை எந்தப் பொருளுக்கும் இவர்கள் எப்படிக் கொடுக்கிறார்கள்?
* பட்டா இல்லாத நிலங்களை வாங்கச் சொல்லுகிறார்கள், கரியமில வாயு நிறைந்த பானத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்கள், வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டால் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்துப் பின்னே வருவார்கள் என்கிறார்கள்.
* கூவி கூவி விற்கும் நிலத்தில், ஏதோ ஒரு விவசாயியின் மறைந்திருக்கும் கண்ணீர் தெரிவதில்லை, நம் நீரை உறிஞ்சி, அதில் சந்ததி கொல்லும் விடம் கலந்து விற்பது தெரியவில்லை, நம் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்து ஆண்கள் பின்னே செல்பவர்களா என்ற சூடு உணர்ச்சிக் கூட இல்லை, பணத்துக்காக ஒரு கூட்டமும், அறியாமையில், ஏதோ ஓர் இயலாமையில் மற்றொரு கூட்டமும் இங்கே மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
* அடுத்துத் தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள். ஒரு கல்லை எறிந்து கூட்டத்தில் எளிதில் கலகம் உண்டாக்கி கட்சி மோதல் செய்கின்றனர், ஓர் ஊர்வலத்தில் ஒரு சிலையின் மேல் செருப்பை வீசி எறிந்து, மதக் கலவரம் உண்டாக்குகின்றனர். தனிப்பட்ட ஒரு விரோதத்தை, ஏதோ ஒரு வன்மத்தை தீர்க்க, ஏதோ ஓர் ஆதாயம் பெற, சாதிக் கலவரமாக மாற்றம் செய்கின்றனர், யாரோ ஒருவரை கொலை செய்கின்றனர், ஏதோ ஒரு காதலை கொலைக்களமாக மாற்றுகின்றனர். ஏதோ ஒரு கூட்டத்தில் அப்பாவிகளைக் கொல்ல வெடி வைக்கின்றனர், அந்தப் பற்றி எறியும் நெருப்பில் அரசியல் செய்கின்றனர், ஆட்சி நெருக்கடி செய்கின்றனர்.
* இப்படியான நெருக்கடியில் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும், இன்னொரு பலி கேட்கும் வன்மத்தை உருவாக்குகிறது, சாதிய அமைப்பு வலுப்பெறுகிறது, வாய்ச்சொல் வீரர்கள் போலி சாமியார்களாகவும், உடல் பலம், அமைப்புப் பலம் கொண்டவர்கள் ரௌடிகளாகவும் உருவாகின்றனர்.
* ஒவ்வொரு நிகழ்வும் வாக்குச் சாவடியில் விழும் வாக்குகளை மாற்றி அமைக்கிறது.
* மக்கள் எல்லோரும் தெளிவுப் பெற நல்ல கல்வி அவசியம். ஆனால் கல்வியின் திசை இங்கே மாற்றி அமைக்கப்படுகிறது, அடித்தட்டு மக்களுக்கு அதுவும் மறுக்கப்படுகிறது, படித்தவன் சுயநலவாதியாகவும், படிக்காதவன் உணர்ச்சியின் குவியலாகவும் மாறிப்போகின்றனர், இரண்டுமே ஒரு சமுதாயத்திற்கு நல்லதில்லை.
* இப்படிப்பட்ட கல்வித்தரம் அமைந்த சமுதாயத்தில் குற்றங்கள் உணர்ச்சி வேகத்தில் நடக்கின்றன, நீதி, பணம் ஆடும் ஆட்டத்தில் தள்ளாடி தள்ளாடி சில வேளைகளில் வெல்கிறது, பல நேரங்களில் குமுறிக் குமுறி சாகிறது.
* பயப்படும் மக்களைத் திசை திருப்பி, கேள்வி கேட்க துணியாவண்ணம் ஒரு நெருப்பை அவ்வப்போது கொளுத்திபோட்டால் போதும், உணர்ச்சி வசப்படுபவனைச் சாதி கொண்டு மதம் கொண்டு, இனம் கொண்டு கட்டிபோட்டால் போதும், படித்தவனுக்கு மேலும் வசதி, ஆதாயம், இல்லை ஒரு மிரட்டல் போதும்.
* திரைகாட்சியின் மாயையில் ஒரு பக்கமும், அச்சம் தரும் சமூக அமைப்பில் மறுபுறமும் இந்தத் தலைமுறைகள் தள்ளாடி கொண்டிருக்கிறது. சாதி மத, கட்சி அமைப்புகளில் பழைய தலைமுறைகள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கேள்விக் கேட்கும் திறன் இன்றி வருங்காலத் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
* யாரோ ஒரு சாமியார் கனவில், புதையல் இருக்கும் சேதி தெரிந்தது என்பதற்காக, விண்வெளியில் ஏவுகணை செலுத்தி சாதனை செய்யும் ஓர் அரசு, பொருட் செலவு செய்து புதையல் தேடுகிறது. நல்ல வாழ்க்கைச் செய்திகளை மட்டும் விட்டு விட்டு, மதங்களைக் கூட மூளைச்சலவைக்குதான் பயன்படுத்துகின்றனர்.
* இலவசம் என்று வருவதெல்லாம் மக்கள் பணமே, யாரும் அவர் பணத்தைத் தந்து எதையும் இலவசமாய்த் தரவில்லை என்ற உணர்வும் இல்லை, மக்கள் பணத்தை மக்களுக்காக என்று செலவு செய்து தரும் பொருட்களும் தரமானதாய் இல்லை.
* 2G, 3G என்று ஊழல் பட்டியல் படிப்பதோடு சில பத்திரிக்கைகளின் கடமை முடிந்து விடுகிறது.
* வேலை வெட்டி இல்லாமல் லுங்கியை மடித்துக் கொண்டு, காதல் செய்பவன், சாராயம் குடித்துக் கொண்டு, பெண்ணை இழிவுபடுத்திக் கானாப் பாடல் பாடிக்கொண்டு திரிபவன், ஒற்றை விரலில் பத்துப் பேரை சுழற்றி அடித்துத் துவசம் செய்து கொண்டு இருப்பவன் எல்லாம் பெரும் வீரன் என்றும், பொழுதுபோக்கு என்ற பெயரில் வன்முறையையும், விடலைபருவக் காதலை புனிதமெனவும் காட்டி பள்ளிக்கூடக் குழந்தைகளை, இளைஞர்களை வழி மாற்றி, திரைப்படமும் தன் சமூகக் கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.
* பகுத்தறிவு கொண்ட மனிதன் உண்மையில், சாதிக்காக, தன் முன்னேற்றத்தை சாய்த்துக் கொள்வதில்லை, மதத்துக்காகத் தன் மரணத்தை நிர்ணயிப்பதில்லை, எந்த ஓர் அரசியல் தலைவனும் ஒரு தொண்டனுக்காகத் தீக்குளித்ததில்லை.
* அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் சக மனிதனிடம் அன்பு காட்டியே வருகிறான், சாதி மதங்களைக் கடந்த ஒரு பிணைப்பில் இயைந்து வாழ்கிறான், இருந்தும் ஆய்ந்து அறியும் திறன் இல்லாமல், சக உயிரிடத்தில் அன்பு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வெறும் பொருட்களில் நிரம்பி விடும் ஒரு கலாசாரமாக, காட்சி மாயையில் மனம் நிரம்பி விடும் ஒரு சூதாக, வெறும் உணர்ச்சிக் கூப்பாட்டில் தணிந்து விடும் விடுதலையாக நீர்த்துப் போகிறது.
* இப்போதும், அந்த ஆப்பிள் மரம், அவனுடைய பொம்மைகளுக்காக அதன் கனிகளைத் தந்தது, பின் அவனுடைய வீட்டிற்காக, தன் கிளைகளைத் தந்தது, பின் அவன் சுற்றுலா செல்லும் கனவை நிறைவேற்ற, படகு செய்யத் தன் உடலினை தந்தது, கடைசியில் அவன் சாயத் தன் வேரினால் அவனைத் தாங்கியது என்ற பாடம் தான் பிள்ளைகளுக்குப் பாடத்திட்டத்தில் இருக்கிறது, ஒருநாளும் மரங்கள் இருக்க வேண்டிய அவசியத்தை, அவைகளில் வாழும் உயிர்களைப் பற்றி , அவைகளின் உணர்வுகளைப் பற்றி, எதையும் கேள்விக் கேட்டுத் தெளிய வேண்டும் என்ற அடிப்படையையும் நம் கல்விமுறை போதிப்பதேயில்லை.
* பெரும் பாடத்திட்ட சூழ்ச்சியில் நாம் பணம் செய்யும் எந்திரங்களாக, எல்லாவற்றையும் உணராமல் அசைப் போடும் மாடுகளாக, ஓட்டிற்குப் பின்னே, பிரியாணி ஆகும் ஆடுகளாகவே வாழ்கிறோம்.
காத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக!

Blogs I liked..



http://www.nisaptham.com/2014/01/blog-post_4.html

http://amudhamanna.blogspot.in

முரண்

Article from HINDU (8-Dec-13)

குற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்!

மு. அமுதா


வாழ்க்கைக்கு, சுதந்திரத்திற்கு ஆதாரமான எதையும் கேட்கவும், தெளிவுப்படுத்தி கொள்ளவும் நமக்கு நேரமில்லை. மாறாக இந்தச் சமுதாயம், நடிகையின் தொப்புளைப் பற்றிய கிசுகிசுப்பில் லயித்துக் கிடக்கும், திரைப்படம் வெளி வரவில்லை என்றால் பெரும் போராட்டம் நிகழ்த்தும், காந்தி ஜெயந்திக்குச் சாராயக் கடை திறந்தால் என்ன என்று விவாதிக்கும், வாங்கிய வரியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்தது என்று கேட்கத் தவறும், கேட்டாலும் சட்டங்கள் பாயும், சட்டம் படித்த வல்லுனர்களும் வாய்தா வாங்கிப் போராடிக் கொண்டிருப்பார்கள், சாதி மதம் எனப் பிளவுபட்டு, ஒற்றுமை இழக்கும், வளர்ச்சியை இழக்கும், நிலத் தரகர்களின் பிடியில் விவசாயியைக் கொல்லும், உள்ளூர் வியாபாரிகளைக் கொன்று விட்டு, சீனத்து வணிகம் வளர்க்கும், பிறகு சீனா, அருணாச்சலத்தை அளக்க பதற்ற நாடகம் செய்யும், தமிழர்களின் ஓட்டு கேட்கும், மறுபக்கம் ஆயுதம் தந்து அவர்களைக் கொல்லும், சாலை விதிகளைப் பற்றிய சட்டம் இயற்றும், சாராயக் கடைகளும் அதுவே நடத்தும், படித்தவனைக் கடினமாகப் பிழியும், அதிகாரி ஆக்கும், பதவி பெற்ற ஏதோ ஒரு ரௌடிக்கோ, ஊழல் செய்யும் ஒரு பெருசாளிக்கோ அவனைச் சேவகம் செய்யச் சொல்லும், மரம் வளர்க்கச் சொல்லும், மறுபக்கம் சுரங்கம் தோண்டி காடு அழிக்கும், வளங்கள் திருடும்.

I need Stories

Hindu Magazine

உளவியல் அறிஞரான சிக்மண்ட் ஃபிராய்ட் கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து ‘ஈடிபஸ்’கதையை வைத்தே மனிதனின் மனச் சிக்கலைக் காண்பித்தார். உலக அளவில் இன்றும் பேசப்படுகின்ற சிண்ட்ரல்லாவின் மனவியலை வர்ணிக்கும் கூறுகள் இன்றைய நவீன மனிதக் கூறுகளைக் காட்டுகின்றன. ஒருவேளை பிராய்ட், எரிக் எரிக்ஸன், ஆட்லர், யுங் போன்ற உளவியல் அறிஞர்கள், மரபார்ந்த நமது இந்தியக் கதை மரபுகளைக் கேட்டிருந்தால் மனித குணங்களை விவரிக்க இப்பாத்திரங்களின் பெயர்களைக்கூட அவர்கள் வைத்திருக்கக்கூடும். ஆனால், நமக்கோ எல்லாம் தேவையற்றவையாக மாறிவிட்டன.
கொடுத்தல், யார் கேட்டாலும் கொடுத்தல், எதைக் கேட்டாலும் கொடுத்தல், கொடுத்தலின் மூலமாகக் கிடைத்த தர்மங்களையெல்லாமும் தாரைவார்த்துக் கொடுத்தல் எனும் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றைக்கு நினைத்துப்பாருங்கள். இந்த நவீன உலகுக்கு கர்ணனின் கொடை ஏன் வேண்டாதது ஆகிவிட்டது என்று யோசித்துப்பாருங்கள். இந்த நவீன உலகம் ஏன் இவ்வளவு இரக்கமற்றுப்போய்விட்டது என்பதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும்.
அண்ணல் காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிவந்ததற்குக் காரணம், அவர் லண்டனில் படித்த பாரீஸ்டர் வக்கீல் படிப்பல்ல. தனது இளம்பிராயத்தில் கேட்ட ஹரிச்சந்திர புராணமும் தாய் - தந்தையர்களைக் காத்த சிரவணன் கதையும்தான். சத்ரபதி சிவாஜி வீர மகனாக உருவெடுத்ததற்குக் காரணம், சிறுபருவத்தில் அவருடைய அன்னை சொன்ன கதைகளே.
கதைகள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய படைப்புத் திறனுக்கு உயிர்கொடுக்கின்றன. உங்களுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போகலாம். கொஞ்சகொஞ்சமாக அறக்கூறுகள் யாவும் அழிந்துவரும் இவ்வுலகில், எல்லாம் அற்றுப்போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில், நிர்க்கதியான சூழலில் பற்றிக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பற்றுக்கோல் வேண்டும். அதற்காகவேனும் தயவுசெய்து கதைசொல்லிகளைத் தேடுங்கள்!
தேனுகா, மூத்த எழுத்தாளர், கலை விமர்சகர் 

ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும்

HIndu magazine
சில நாட்களுக்கு முன்னால் நான் படித்த, என் காதில் விழுந்த தகவல்கள் இவை: நமது வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 1,76,547. தொகை ரூ.31,000 கோடி. கடந்த 25 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கு மேல் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 61. தொகை ரூ.13,000 கோடி.
சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் சொத்து வரி ஒரு சதுர அடிக்கு ரூ. 4.30 சொத்து வரி இவ்வளவு அதிகமாக இருந்தாலும், அந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் ஏதும் கிடையாது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நேரில் சென்று பார்க்கவில்லை. சென்னை போட் கிளப் சாலையில் சொத்து வரி சதுர அடிக்கு ரூ. 4. அண்ணா நகரில் சதுர அடிக்கு ரூ. 1.25.
அண்ணா நகரில் இருக்கும் எனது சகோதரியின் வீட்டில் வேலை செய்யும் பெண் கூவத்துக்கு அருகில் இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறார். குடிசையின் பரப்பு ஒன்பதுக்கு எட்டு சதுர அடி. கழிப்பறை வசதி கிடையாது. வாடகை ரூ.3,000. சதுர அடிக்கு வாடகை ரூ. 40-க்கும் மேல். இணையத்தில் தேடினால், அண்ணா நகரில் நடுத்தரக் குடும்பத்தினருக்கான வீடுகள் மாதம் ரூ.20,000-த்துக்கு வாடகைக்குக் கிடைக் கின்றன. 1,000 சதுர அடி. இரண்டு படுக்கை அறைகளுடன். சதுர அடிக்கு வாடகை ரூ. 20.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி 10% உயர்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.18,000 கோடிக்கும் மேல். இந்த வருடம் மட்டும் 18% உயர்ந்திருக்கிறது. மொத்த செலவு ரூ. 34,000 கோடிக்கும் மேல். மாநில அரசு ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.70,000 கோடிக்குக் குறையாது. அரசுக்குப் பணத் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தத் தகவல்கள் நமக்குத் தெரிவிப்பது என்ன? வங்கி ஊழல்களில் இழந்த பணத்தில் 25%தான் மீட்க முடியும் என்று சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிடப் பெரிய ஊழல்களில் எந்தத் தொகையையும் மீட்க முடியாமலேயே போகலாம். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் நாடகம் ஆமையே ஆச்சரியப்படும் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக: ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் கடவுளைச் சந்திக்க 12 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சென்று விட்டார். வழக்குகள் இன்னும் தொடர்கின்றன.
ஊழல் நம் மீது நடத்தப்படும் மிகப் பெரிய வன்முறை என்பதில் நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அரசு பேரூழல் செய்பவர்களின் தரப்பில் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். ஆனால், நமது வட்டத்துக்கு வெளியே இயங்குபவர்கள் மீது நடக்கும் மறைமுகமான வன்முறைகளைப் பற்றி நமக்கு எந்தப் பிரக்ஞையும் கிடையாது. மாறாக, அரசு அவர்களுக்காகக் கொண்டுவரும் திட்டங்களைப் பற்றி நாம் தொடர்ந்து கடுமையாக விமரிசனம் செய்துவருகிறோம். பணத்துக்காக அரசு வீட்டுவரியை 50 பைசா உயர்த்தினால் புரட்சி வெடிக்கும் என்று பயமுறுத்துகிறோம். போட் கிளப்பில் வாழ்பவர்களுக்கு அண்ணா நகரில் இருப்பவர்களைப் பற்றிக் கவலை கிடையாது. அண்ணா நகரில் இருப்பவர்களுக்கு மாதவரத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. அருகில் இருக்கும் குடிசைகளில் வாடகை என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. ஆனால், வீட்டு வேலை செய்பவர் சம்பளம் அதிகம் கேட்டால் உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.
இந்திய மக்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல நிலைகளில், பல பரிமாணங்களில் இயங்குகின்றன. அரசு அதிக மாறுதல்களை விரும்புவதாகத் தெரியவில்லை. மிக்க வசதி படைத்தவர்க ளுக்கு அரசும் அரசு இயந்திரங்களும் மிகுந்த முனைப்போடு உதவி செய்கின்றன. மேல் நடுத்தர வகுப்பினர்களிடம் அரசுக்குப் பரிவு இருக்கிறது. ஊடகங்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. கீழ் நடுத்தர மக்கள் சார்பிலும் ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்கத் தயாராக இருக்கின்றன. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்களுக்கென்று தனியான அடையாளம் ஏதும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஊக்கத்தொகை, மிகை நேரக் கூலி போன்ற அதிக வருவாய்களை எதிர்பார்த்துக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இவர்க ளுக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மேற்கூறிய அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நமது மக்கள்தொகையில் 25% அல்லது 30% இருப்பார்கள்.
இவர்கள் எல்லோரும் இயங்குவது ஒரு தளத்தில் என்று வைத்துக்கொண்டால், மற்றொரு தளத்தில், பெரிய ஆதரவு ஏதும் இல்லாமல், அரசு மிகுந்த தயக்கத்தோடு தரும் சிறிய சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, அவற்றால் மகிழ்ச்சியைப் பெறலாம் என்ற கனவோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் நமது நாட்டின் பெரும் பகுதியினர்.
நமது தளத்துக்குள் உராய்வுகள் இருந்தாலும், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஏழைகளாகவே, அதிக எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால் நமக்கு ஆதாயம். அரசுக்கும் அதிகத் தொல்லைகள் இல்லை.
நம்மில் பலருக்கு - அரசு ஊழியர்கள் உட்பட - இந்தியாவில் அரசு நிர்ணயித்திருக்கும் சராசரி தினக்கூலி என்ன என்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கிராமங்களில் வேலை செய்யும் பயிற்சி பெறாத தொழிலாளி ஒருவரது சராசரித் தினக்கூலி 2012-ல் ரூ. 145. இது 2004-ல் ரூ. 70. எட்டு வருடங்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. தினக்கூலியாக வேலை செய்பவருக்கு மாதம் அதிகபட்சமாக 25 நாட்கள்தான் வேலை கிடைக்கும். எனவே, அவரது சராசரி மாதக் கூலி ரூ. 3,750.
இனி, அரசுக் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரை எடுத்துக் கொள்்வோம். 2004-ல் அவரது சம்பளம் சுமார் ரூ. 15,000. 2012-ல் குறைந்தது ரூ. 50,000. எட்டு வருடங்களில் மூன்று மடங்குக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அரசுக் கல்லூரி ஆசிரியர் தினக் கூலி வேலை செய்பவரைவிட 13 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். இது எங்கள் அறிவுக்குக் கொடுக்கும் விலை என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் உதாரணத்தைக் காட்டலாம். அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் ஆண்டுக்குச் சுமார் 15,000 டாலர்கள். அங்கு கல்லூரி ஆசிரியர்களின் (Assistant Professors) ஆண்டு சராசரி ஊதியம் 55,000 டாலர்கள். வித்தியாசம் நான்கு மடங்குக்கும் குறைவுதான். நியூயார்க்கில் துப்பரவுத் தொழிலாளரின் ஆண்டு வருமானம் ஆரம்பத்தில் 33,000 டாலர்கள். ஐந்து வருடங்களில் 70,000 டாலர்களாக உயர்கிறது. சென்னையில் துப்புரவுத் தொழிலாளரின் தினக்கூலி ரூ. 235.
அகவிலைப்படி ஆண்டுக்கு 18% உயர்த்தியிருப்பது போதாது என்று சொல்லும் எனது நண்பர்களில் பலர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் சோம்பேறிகளை உருவாக்கிவிட்டது என்று என்னுடன் வாதிடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மாறாமல் இருந்தால்தான் நமக்கு வசதி. நாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை!
பி.ஏ. கிருஷ்ணன், கட்டுரையாளர், எழுத்தாளர்.