புதன், 25 பிப்ரவரி, 2015

1956 பிப்ரவரி 25: ஸ்டாலின் வழிபாட்டைத் தகர்த்து உரையாற்றினார் குருச்சேவ்!

தங்களை முன்னிறுத்தும் விதமாக நடந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள், சமகாலத்திலோ அல்லது தங்கள் காலத்துக்குப் பின்னரோ விமர்சிக்கப்படுகின்றனர். அதற்கு உதாரணம் இந்த வரலாற்றுப் பதிவு. 1956-ல் இதே நாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டின் முடிவில் நடந்த கூட்டத்தில் தனிநபர் வழிபாட்டை ஊக்குவித்ததாக சோவியத் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார், நிகிட்டா குருச்சேவ். கிட்டத்தட்ட ரகசியமாக நிகழ்த்தப்பட்ட உரை அது! கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மட்டும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
1937 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் ‘கிரேட் பர்ஜ்’ எனும் பெயரில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், விவசாயிகள், செஞ்சேனைப் படையினர் அடக்குமுறைகளுக்கு ஆளான நிகழ்வைப் பற்றி விசாரிக்க, 1955-ல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான பியோத்தர் போஸ்பெலோவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், குருச்சேவின் உரை அமைந்தது. ‘தனிநபர் வழிபாடும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள்:
தோழர்களே! கட்சியின் 20-வது மாநாட்டில் வெளியிடப்பட்ட மத்தியக் குழு அறிக்கையிலும், மாநாட்டில் பேசியவர்களின் உரைகளிலும் தனிநபர் வழிபாடுகுறித்து நிறைய கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டாலினின் மரணத்துக்குப் பிறகு, ‘ஒரு தனிநபரை அற்புத ஆற்றல்கள் நிறைந்த அசாதாரண மனிதராக முன்னிறுத்துவதும், கடவுளைப் போன்றவராகக் காட்டுவதும் மார்க்சிஸம் - லெனினிஸத்தின் ஆன்மாவுக்கு அந்நியமானது’ என்று மத்தியக் குழு விளக்கமளிக்கத் தொடங்கியது. அதாவது, எல்லாவற்றையும் அறிந்தவராக, அனைத்தையும் காணும் சக்தி படைத்தவராக, அனைவருக்காகவும் சிந்திப்பவராக, எதையும் செய்துகாட்டக் கூடியவராக, களங்கமற்ற நடத்தை கொண்டவராக, தனிநபரை முன்னிறுத்துவது பற்றி!
தற்சமயம், ஸ்டாலின் மீதான தனிநபர் வழிபாடு படிப்படியாக எப்படி வளர்கிறது, அந்தத் தனிநபர் வழிபாடு கட்சி விதிகளிலும், கட்சி ஜனநாயகத்திலும், புரட்சிகர சட்டதிட்டங்களிலும் வக்கிரத்தை விதைத்தது எப்படி எனும் கவலை நமக்கு இருக்கிறது. புரட்சியின் அறிவுஜீவியான விளாடிமிர் லெனினின் சிறந்த பண்பு பணிவு என்பது எல்லோரும் அறிந்ததே. மக்களின் பங்கேற்புதான் வரலாற்றை உருவாக்கும் என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தினார். தனிநபர் வழிபாட்டின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் இரக்கமே இல்லாமல் நிராகரித்தார் லெனின். தனது கருத்தை ஒருபோதும் அவர் திணிக்கவில்லை. தனது கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்கவே முயல்வார். தனது கருத்துகளை, பொறுமையாக மற்றவர்களுக்கு விளக்குவார்.
ஸ்டாலினிடம் இருந்த தீய குணங்களை லெனின் கண்டுகொண்டார். பின்னாட்களில் ஸ்டாலினின் தீய குணங்களால் பயங்கரமான பின்விளைவுகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் எதிர்காலம் பற்றி அச்சமடைந்த லெனின், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஸ்டாலின் நீக்கப்பட வேண்டியதுகுறித்து பரிசீலிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். ஏனெனில், கட்சியின் உறுப்பினர்களைச் சரியாக நடத்தும் குணம் ஸ்டாலினிடம் இல்லை என்று லெனின் கருதினார்…
- இப்படித் தொடரும் அந்த உரை மிகவும் புகழ்பெற்றது. 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ இதழ் இதைத் தேர்வுசெய்திருக்கிறது.

Galileo Galilei

கணிதவியலாளர், பொறியாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி என பன்முகப் பரிமாணம் கொண்ட கலிலியோ கலிலி (Galileo Galilei) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
* இத்தாலியின் பைசா நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே எதையும் மிக நுணுக்கமாக கவனிக்கும் திறன் கொண்டிருந்தார்.
* ‘ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள். பின்னர் இவர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்தார். ‘அரிஸ்டாட்டில் சொன்னது தவறு, இருவருக்குமே 32 பற்கள்தான்’ என்று தெளிவுபடுத்தினாராம்.
* அப்பாவின் ஆசைப்படி, மருத்துவம் படிக்க பைசா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உண்மையில், இவருக்கு கணிதம், இயந்திரவியல், இசை, ஓவியத்தில்தான் ஆர்வம். கல்லூரியில் பயின்றுகொண்டே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ‘பெண்டுலம்’ விதியைக் கண்டறிந்தார். தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ் கருவியைக் கண்டறிந்தார். அதைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதினார். அறிவியலாளர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார்.
* மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு கணிதம் பயின்றார். பின்னர், அதே ஊரில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, ‘பாடுவா’ என்ற ஊரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.
* அண்டவெளியில் காணும் பொருட்கள், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், வியாழன் கிரகத்தைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், சூரியனில் காணப்படும் புள்ளிகள் ஆகியவற்றை தான் கண்டறிந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ஆராய்ந்தார்.
* கோள்களைப் பற்றிய பல கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சிகள் தகர்த்தன. இவரது கருத்துகள் வானியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தின. இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி மேலும் பிரபலமானார். வெப்பமானியை உருவாக்கினார்.
* பொருட்கள் இயக்கவியலில் புதிய கோட்பாட்டை நிரூபித்தார். தொடர்ச்சியாக பல நூல்கள் எழுதினார். அவை உலகப் புகழ் பெற்றன.
* சூரியனும் மற்ற கோள்களும் பூமியைச் சுற்றுவதாகவே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டது. பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன என்று கலிலியோ, கோபர்நிகஸ், ஜோகன்னஸ் கெப்ளர் ஆகியோரின் ஆய்வுகள்தான் முதன்முறையாக கூறின.
* இவரது கண்டுபிடிப்புகள் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவரது கருத்துகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. நீண்டகாலம் இவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், கல்லால் அடித்து, தீவைத்துக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
* நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, அறிவியலின் தந்தை என்றெல்லாம் போற்றப்படும் கலிலியோ 78 வயதில் மறைந்தார். கலிலியோ இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை தண்டித்தது தவறு என்று 1992-ல் போப் மன்னிப்பு கோரினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa)

இந்தியாவின் ஆன்மிக குரு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) பிறந்ததினம் இன்று (பிப் 18). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:
 மேற்குவங்க மாநிலம் காமார் புகூர் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் கதாதர் சட்டோ பாத்யா. சிறு வயதில் ஆடல், பாடல், படம் வரைவது, மண் சிலை செய்வதில் ஆர்வமாக இருந்தார்.
 பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. இயற்கையை ரசிப் பதிலும், புராணக் கதை கேட் பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதையுமே அதிகம் விரும்பினார். அதே நேரம், ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார்.
 தந்தை காலமானதும் தாய் மற்றும் அண்ணன்களின் பராமரிப்பில் வளர்ந்தார். நண்பர்களுடன் சேர்ந்து நாடகக் குழு நடத்திவந்தார்.
 இவரை தன்னுடன் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கு அவரது பாடசாலையில் கல்வி கற்றதுடன் அவருக்கு உதவியாக வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். தட்சிணேஸ்வரம் பவதாரிணி காளி கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைத்தது. தங்குவதற்கு அறையும் ஒதுக்கப்பட்டது. ராமகிருஷ்ணர் தன் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்தது இங்குதான்.
 காளியை நேரில் காணவேண்டும் என்ற ஏக்கம், ஆவல் தீவிரமானது. கடும் தியானம் மேற்கொண்டும், அது கைகூடாததால் காளி கையில் இருந்த வாளை உருவி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயன்றார். உடனே சுயநினைவை இழந்ததாகவும் ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தன. பித்து பிடித்துவிட்டதாக பயந்துபோன அம்மா, திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார்.
 பிற்காலத்தில் உலகமே அன்னையாகப் போற்றவிருந்த சாரதாதேவி எங்கு இருக்கிறார் என்று சொன்னதோடு அவரையே மணம் செய்துவைக்குமாறும் கேட்டுக்கொண் டார் ராமகிருஷ்ணர். அனைத்து பெண்களையும் காளியின் அம்சமாகவே போற்றியவர், தன் மனைவியையும் அலங் கரித்து பூஜை செய்து, அவரது காலில் விழுந்து வணங்குவார்.
 பைரவி பிராம்மணி என்ற பெண்ணிடம் தாந்த்ரீகமும், தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தமும் கற்றார். சமாதி நிலையில் 6 மாதங்கள் இருந்தார். ராமர், கிருஷ் ணர், சீதை, ராதையின் காட்சி கிடைத்ததாக கூறியுள்ளார்.
 இவரது புகழ் பரவியது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர்.
 நாடி வருவோருக்கு எளிமையான ஆன்மிக, தத்துவ, யதார்த்த கதைகளைக் கூறி மகத்தான விஷயங்களைப் புரியவைப்பது ராமகிருஷ்ணரின் வழக்கம். இவரது உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமம் என்பார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை காளியாகவும், சிவனாக வும் பார்த்ததாக சீடர்கள் கூறியுள்ளனர். ‘ராமனாக, கிருஷ்ணனாக வந்தவன்தான் இப்போது ராமகிருஷ்ணனாக வந்துள்ளேன்’ என்று தன்னிடம் அவர் கூறியதாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மிக குருவும் வங்கம் தந்த ஆன்மிகப் பேரொளியுமான ராமகிருஷ்ணர் 50 வயதில் மறைந்தார்.

இந்தியாவின் கவிக்குயில்’

சரோஜினி நாயுடு
‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, பாரசீக மொழியில் வல்லவர்.
 சென்னை பல் கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயது. இவர் கணித மேதை அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இவருக்கோ கவிதை எழுதுவதில் நாட்டம். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
 இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார்.
 கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தன. ‘தி கோல்டன் த்ரஷோல்ட்’ (The Golden Threshold), ‘தி பேர்ட் ஆஃப் டைம்’ (The Bird of Time), ‘தி ப்ரோக்கன் விங்’ (The Broken Wing) குறிப்பிடத்தக்கவை.
 ‘இந்தியாவின் கவிக்குயில்’ என்று வர்ணிக்கப்பட்டார். இவரது கவிதைகளுக்கு தாகூர், நேரு உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். 1905-ல் வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.
 காந்தி, நேரு, கோகலே, தாகூர், ஜின்னா, அன்னி பெசன்ட் ஆகிய முக்கியத் தலைவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை முன்னெடுத்தார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உரையாற்றினார். இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார்.
 1919-ல் ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார். காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது, பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து முதலில் களம் இறங்கினார். 1925-ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த முதல் பெண் இவர். காந்திஜி இவரை செல்லமாக ‘மிக்கி மவுஸ்’ என்பார்.
 சட்ட மறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டு பல மாத சிறைவாசம் அனுபவித்தார். காந்தியடிகளுடன் தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.
 நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.
 ‘கவிக்குயில்’ சரோஜினி நாயுடு 70 வயதில் மறைந்தார். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

U.Ve.Sa & Thevanaya Bavanar & Pamal Sampantha Muthaliyar

உ. வே. சாமிநாத ஐயர்
தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறி ஞருமான உ. வே. சாமிநாத ஐயர். பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
 கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (1855). தந்தை ஒரு இசைக் கலைஞர். அதே ஊரில் தொடக்கக் கல்வி யும், இசையும் கற்றார்.
 இவருக்கு தமிழில் இருந்த பேரார்வத்தைக் கண்டு, எங் கெல்லாம் தமிழ்ப் பாடம் கற்றுத் தருபவர்கள் இருந்தார் களோ அங்கெல்லாம் சென்று குடியேறி மகனுக்கு கல்வி கற்பிக்கச் செய்தார், தந்தை! புகழ்பெற்ற மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 17-ஆவது வயதில் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்.
 1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1903 முதல் 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணி புரிந்தார்.
 பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பல இடர்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ல் சிந்தாமணியை வெளியிட்டார்.
 அன்று முதல் இறுதி மூச்சு வரையில், ஆங்காங்கே மறைந்து கிடந்த தமிழ்த் தாயின் ஒவ்வொரு அணி கலனாகத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து தமிழன்னையை அலங்கரித்தார். இவரது காலத்துக்கு முன்பு பெரும் புலவர்களின் படைப்புகள், சங்க நூல்கள், அகநானூறு, புறநானூறு, மணிமேகலை ஆகியவை வெறும் பெயரளவிலேயே இருந்தன.
 அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன் மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து பிரதிகளையும் அரும்பாடுபட்டு சேகரித்தார்.
 சமண இலக்கியங்களோடு சங்க இலக்கியங்கள், காப்பி யங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளையும் தேடித் தேடி , அவற்றை பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சிலேற்றினார். இதன் மூலம் இவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.
 பின்னாளில் அவற்றுக்கு உரையும் எழுதினார். சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும், பழையதும் புதியதும், நல்லுரைக் கோவை உள்ளிட்ட பல உரைநடை நூல்களை யும் எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தாழமும், நகைச்சுவை யும் கலந்து இழையோடப் பேசும் திறன் கொண்டவர்.
 தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனை வர் பட்டம் வழங்கியது. இதைத் தவிர மகாமகோபாத்தியாய, தக்ஷிண கலாநிதி ஆகிய பட்டங்களும் பெற்றார்.
 இவரைச் சிறப்பித்து இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சென்னை பெசன்ட் நகரில் இவரது பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா என்று போற்றப்படும் இவர், 1940-ஆம் ஆண்டு 84-ஆம் வயதில் மறைந்தார்.***
****
மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
 பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.
 பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.
 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.
 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ் கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
 ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
 ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.
 கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
 தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.
*****
தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் (Pammal Vijayaranga Sambandha Mudaliar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந் தவர். இவரது அப்பா தமிழ் ஆசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளி யிட்டுவந்தார். அவர்கள் வீட்டில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன.
 சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத் துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறு வார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.
 பிறகு, சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார். ஆங்கில நாடகங்கள் அதிகம் பார்ப்பார். 1891-ல் பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் இருப்பதை அறிந்ததும், இவருக்கு நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது.
 சுகுண விலாஸ் சபா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். சென்னைக்கு வந்த பார்சி நாடகக் குழுவினரின் பிரம்மாண்டமான திரை மற்றும் மேடை அமைப்புகள், சிறப்பான உடை அலங்காரம் இவரைப் பெரிதும் கவர்ந்தன. தீவிர முயற்சி எடுத்து தன் நாடகங்களிலும் அதை செயல்படுத்திக் காட்டினார்.
 தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.
 சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.
 22-வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட், ஆஸ் யு லைக் இட், மெக்பெத் உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.
 ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.
 இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.
 சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருது கள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.

Dell & Steve Jobs

கம்ப்யூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் (Michael Dell) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார் (1965). சிறு வயதில் தபால் தலைகள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கு வரவேற்பு இருப்பதை அறிந்து, யாருடைய உதவியுமின்றி, தானே விளம்பரம் கொடுத்து 10 வயதுக்குள் 2 ஆயிரம் டாலர் சம்பாதித்தார்.
 பள்ளியில் படிக்கும்போது செய்தித்தாள் முகவராக வேலை பார்த்தார். நகரில் புதிதாக குடியேறியவர்கள், புதுமணத் தம்பதிகளின் முகவரிகளை அரசு அலுவலகத்தில் பெற்று, அவர்களிடம் சந்தா பெற்றார். மற்றவர்களைவிட அதிகம் சம்பாதித்தார்.
 அப்பா அவருக்கு வாங்கித் தந்த புது ஆப்பிள் கணி னியை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி, பிறகு கச்சிதமாக பொருத்தி கணினி பற்றிக் கற்றுக்கொண்டார்.
 கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். கணினித் தொழிலில் இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் அடைகிறார்கள். வாடிக்கையாளர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப் படுவதில்லை என்று தெரிந்துகொண்டார்.
 டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையி லேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் தொடங் கினார். கணினி உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்றார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.
 தரகர்கள் இல்லாமல் நேரடியாக சேவைகளை வழங்கிய தால் கணினிகளை மலிவாகத் தரமுடிந்தது. போட்டி நிறுவனங்களும் வேறு வழியின்றி கணினி விலையைக் குறைத்தன.
 வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புகொண்டு தங்கள் தேவைகள், குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளைச் செய்தார். அவர்களது குறைகளைப் போக்க உடனுக்குடன் நட வடிக்கை எடுத்தார். வாடிக்கையாளரின் திருப்தியை முழுமையாகச் சம்பாதிக்கும் நிறுவனம் என்ற நற்பெயரும் கிடைத்தது.
 1987-ல் நிறுவனத்தின் பெயரை ‘டெல் கம்ப்யூட்டர் கார்ப் பரேஷன்’ என மாற்றினார். 1992-ல் ‘ஃபார்ச்சூன்’ இதழின் ‘டாப் 500’ நிறுவனங்கள் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. பட்டியலில் மிகவும் இளமையான தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) இவர்தான்.
 1999-ல் டெல் நிறுவன உத்தி பற்றிப் புத்தகம் எழுதி வெளியிட்டார். மைக்கேல் சூஸன் அறக்கட்டளை மூலம் ஏழை, எளியவர் கல்வி, மருத்துவத்துக்கு உதவிவருகிறார்.
 உலகப் பொருளாதாரப் பேரவை, சர்வதேச பிசினஸ் கவுன்சில், டெக்னாலஜி சிஇஓ கவுன்சில் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறார். ‘மக்களின் தேவை அறிந்து, வாய்ப்புகளைக் கண்டறியுங்கள். அதை வெற்றியாக மாற்றுங்கள்’ என்ற இவரது தாரக மந்திரத்தின் அடிப்படையில் டெல் நிறுவனம் தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது.

********
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், கம்ப்யூட்டர் துறையில் புரட்சியை உருவாக்கியவருமான ஸ்டீவன் பால் ஜாப்ஸ் (Steven Paul Jobs) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தவர் (1955). பல் கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த, திருமணமாகாத ஜோடிக் குப் பிறந்தவர். பால் ரெய்ன்ஹோல்ட் ஜாப்ஸ் கிளாரா தம்பதி இவரை தத்து எடுத்தனர். ‘நூறு சதவீதம் அவர்கள்தான் என் அப்பா, அம்மா’ என்று ஆணித்தரமாகக் கூறுவார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
 இவருக்கு 5 வயதாக இருந்தபோது குடும்பம் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தது. அப்பா மூலமாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் நாட்டம் ஏற்பட்டது. இவர் பள்ளி செல்லத் தொடங்கும் முன்பே எழுதப் படிக்கக் கற்றுத் தந்தார் அம்மா.
 பள்ளிப் படிப்பை முடித்தவர், பாதியிலேயே கல்லூரியில் இருந்து வெளியேறினார். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான வேலைகளைச் செய்துவந்தார்.
 1974-ல் ஆன்மிக அமைதியை நாடி இந்தியா வந்தார். நீம் கரோலி பாபாவைத் தரிசிக்க, உத்தரப் பிரதேசம், கைஞ்சி ஆசிரமத்துக்குத் தன் நண்பர்களுடன் வந்தார். இந்தியாவில் 7 மாதங்கள் தங்கிப் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார். பாபாவைத் தன் ஆன்மிக குருவாக ஏற்றார். இதுவே அவர் புத்த மதத்தைத் தழுவக் காரணமாக இருந்தது.
 1976-ல் வீட்டிலேயே நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினர். 1980-ல் ஆப்பிள் நிறுவனத்தின் மகின்டோஷ் (Macintosh) கணினியை அறிமுகம் செய்தார். கருத்து வேறுபாடுகளால் 1985-ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி நெக்ஸ்ட் (NeXT) கணினி நிறுவனத்தை தொடங்கினார்.
 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் சிறந்த நிபுணர்களைக் கொண்ட லூகாஸ் பிலிம் என்ற நிறுவனத்தை வாங்கினார். அந்த நிறுவனம் பிக்ஸர் என்ற பெயரில் அனிமேஷன் துறையில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் உயர்கணினித் தயாரிப்புகளில் ஈடுபடத் தொடங்கியது.
 1995-ல் முழு அனிமேஷன் திரைப்படம் உருவாக்கும் பணியை டிஸ்னி நிறுவனம் இவருக்கு வழங்கியது. ‘டாய் ஸ்டோரி’ என்ற அந்த முழு அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1996-ல் நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளில் இணைந்தார். 1998-ல் இவர் வடிவமைத்து பல வண்ணங்களில் வெளிவந்த ஐ-மாக் கணினி மாபெரும் வெற்றி பெற்றது.
 தொடர்ந்து கணினியின் வேகத்தைக் கூட்டி வடிவமைப்பிலும் பல மாற்றங்கள், புதுமைகளைப் புகுத்தினார். இதைத் தொடர்ந்து ஐ-பாட், ஐ-ட்யுன்ஸ், ஐ-பேட் மினி ஆகியவையும் வெற்றி பெற்றன.
 அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான மிக உயர்ந்த பதக்கம் உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகளை வென்றுள்ளார்.
 வறுமை நிலையில் இருந்து கடும் உழைப்பாலும், மேதைமையாலும் மிக உயர்ந்த நிலைக்கு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு 56 வயதில் மறைந்தார்.

LKG Admission

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.
ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது... 2 வயது தொடங்கியதுமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க? அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண்மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்
ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்லை. தமிழக அரசு பலமுறை குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
சில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடுப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண்ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
குழப்பும் பள்ளிகளின் விதிமுறைகள்
முன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.
சரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ்வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.
இதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா? அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா? என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மிஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளியில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.
சிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்
பள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேடவேண்டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு முறை. பிரபலங்கள் சிபாரிஸை எடுத்து கொள்ளும் சில பள்ளிகள் அரசியல்வாதியின் ரெக்கம்மண்டேஷனை மதிப்பதில்லை.
அதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசின் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்துவிடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
டொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்
விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.
சுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொனேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாயம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி இல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.
ஆர்.டி.இ. இடங்கள் குளறுபடி
பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது 'கல்வி உரிமைச் சட்டம்' இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா? என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளியிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.
சில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.
மாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்,கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மிஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.
அரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமுறைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.
இந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com

கருத்துச் சுதந்திரத்துக்கு 7 அச்சுறுத்தல்கள்

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6931796.ece?homepage=true&theme=true

ந்தியா என்பது 50:50 ஜனநாயக நாடுதான் என்பது என்னுடைய நீண்ட நாள் கருத்து. சுதந்திரமான-நியாயமான தேர்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடிவது போன்ற அம்சங்களில் மட்டுமே உலகின் பல நாடுகளைப் போல நாமும் ஜனநாயக நாடு; மற்ற அம்சங்களில் குறிப்பிடத் தக்க வகையில் பின்தங்கியிருக்கிறோம். கருத்துச் சுதந்திரம் அதில் ஒன்று.
கருத்துச் சுதந்திரத்துக்கான முதல் அச்சுறுத்தல் நம்முடைய அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னும் நீக்கப்படாமல் இருக்கும் காலனியாதிக்கக் காலத்துப் பழைய சட்டங்கள். வென்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: ஆன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய தீனநாத் பாத்ரா, இந்திய பீனல் கோடின் குறிப்பிட்ட 6 பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின்படி அந்த நூல் தடை செய்யப்பட வேண்டியது என்று வாதாடினார்.
அந்தச் சட்டப் பிரிவுகள்: 153 (கலவரத்தை ஏற்படுத்து வதற்காக வேண்டுமென்றே சீண்டுவது), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகிய காரணங்களுக்காக இரு வெவ்வேறு குழுக்களிடையே விரோதத்தை வளர்ப்பது, ஒற்றுமையைப் பராமரிப்பதற்கு ஊறு செய்வது), 295 (எந்த மதத்தையும் இழிவுபடுத்த வழிபாட்டிடத்தைச் சேதப் படுத்துவது அல்லது அசுத்தப்படுத்துவது), 295ஏ (வேண்டு மென்றே, தீய நோக்கத்துடன் ஒரு வகுப்பாரின் மத நம்பிக்கை களையும் உணர்வுகளையும் அவமதிக்க நினைப்பது), 298 (எந்த ஒருவரின் மத உணர்வையும் வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் பேசுவது), 505 (பொதுவாக விஷமத்தைத் தூண்டும் வகையில் பேசுவது அல்லது எழுதுவது) ஆகியவை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கட்டோடு வெறுக்கும் தாமஸ் பாபிங்டன் மெக்காலேதான் இந்தப் பிரிவுகளை வகுத்தவர். இந்தியக் கலாச்சாரத்தை பிரிட்டிஷ் ஆட்சி எப்படிக் கெடுத்துவிட்டது என்று ஆர்.எஸ்.எஸ். அடிக்கடி பகையுணர்வுடன் பேசுகிறது அல்லது எழுதுகிறது. அதே சமயம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது அதே காலனியாதிக்க அரசின் சட்டங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜனநாயக நாட்டுக்குப் பொருந்தாத பழைய சட்டங்களை அழிக்காமல் அதை அப்படியே சட்டப் புத்தகத்தில் வைத்திருக்கும் அரசுகளும் இதற்கு முக்கியக் காரணம். மேலே கூறிய சட்டப் பிரிவுகள் அல்லாமல் வேறு சில பிரிவுகளும், புத்தகங்களையும் திரைப்படங்களையும் தடை செய்வதற்கு ஏதுவாக இந்திய பீனல் கோடிலும் கிரிமினல் புரொசிஜர் கோடிலும் இன்னமும் நீடிக்கின்றன.
முதல் சட்டத் திருத்தம்
இந்திய அரசியல் சட்டம் எல்லையற்ற பேச்சு (கருத்து) சுதந்திரத்தைத்தான் முதலில் அளித்தது. ஜவாஹர்லால் நேரு பிரதமராகவும், பி.ஆர். அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இருந்தபோது 1951 மே மாதம் கொண்டுவரப்பட்ட முதல் சட்டத் திருத்தம்தான், ‘நாட்டின் பாதுகாப்புக்கும், வெளி நாடுகளுடனான நட்புறவுக்கும், பொது அமைதிக்கும்’ அச்சுறுத்தலாக விளங்கும் பருவ இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றையும், அதே காரணத்துக்காகப் புத்தகங்கள், செய்தித்தாள்கள், திரைப்படங்கள் போன்றவற்றையும் தடை செய்ய வழிவகுத்தது.
டி.எச். லாரன்ஸ் எழுதிய ‘லேடி சேட்டர்லியின் காதலன்’ என்ற நாவல், ‘ஆபாசமான வெளியீடுகளைத் தடை செய்யும் சட்டப்படி’ பிரிட்டனில் தடை செய்யப்பட்டது. அதே சட்டத்தின் மற்றொரு பிரிவு தரும் விலக்கைச் சுட்டிக்காட்டி, அந்தப் புத்தகத்தின் மீதான தடையை விலக்கக் கோரி வாதாடி வெற்றி பெறப்பட்டது. நாவலின் சில அத்தியாயங்கள் ஆபாசமாக இருந்தாலும் அறிவியல், இலக்கியம், கலை, கற்றல் அல்லது பொதுநலன் ஆகியவற்றுக்கு அந்த நூல் உதவுமென்றால் அதை அனுமதிக்கலாம் என்று அதே சட்டத்தின் பிற்பகுதி அனுமதிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்தியச் சட்டத்தில் இப்படி அனுமதிக்கும் பிற்பகுதி எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் டோனிகரின் நூல் மீதான தடையையும் விலக்கியிருக்க முடியும். இலக்கியத் தரமுள்ள அந்த நூல் பொது அறிவை வளர்ப்பதற்கும் மிகவும் பயனுள்ளது.
நீதித்துறை
கருத்துச் சுதந்திரத்துக்கு அடுத்த அச்சுறுத்தல் நீதித் துறை மூலம் வருகிறது. திரைப்படங்கள், புத்தகங்கள், ஓவியங்கள் போன்றவற்றுக்குக் காலனியாதிக்கக் காலச் சட்டத்தின் கீழ் தடை கோரி யாராவது மனு செய்தால், கீழமை நீதிமன்றங்கள் துடிப்பாக மனுவை விசாரித்து, தடையை விதித்துவிடுகின்றன. எந்த நீதிமன்றத்தில், எந்த நீதிபதியிடம் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்காடுபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டெல்லியில் பிரசுரமாகும் ‘தி கேரவான்’ இதழுக்கு எதிராக அசாம் மாநிலத்தின் சில்சார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. பாத்ராவும் பல வழக்குகளை தேரா பஸ்ஸி என்ற ஊரில் உள்ள நீதிமன்றத்தில்தான் தொடுப்பார்.
உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதில் கவனமாகச் செயல்படுபவை என்பது உண்மைதான் என்றாலும், தடை விதிக்கப்பட்ட பிறகு வழக்கு மேல் விசாரணைக்கு வந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்து இறுதித் தீர்ப்பு வர அல்லது தடை விலக்கப்பட பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. ஒருசில பதிப்பாளர்களும், தனிநபர்களும்தான் நல்ல தீர்ப்பைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் அளவுக்குப் பண வசதி, பொறுமை அல்லது துணிச்சல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஓவியர் எம்.எஃப். ஹுசைனின் ஓவியத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதென்று தீர்மானித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் நாட்டின் வெவ்வேறு ஊர்களில் மனுக்களைத் தாக்கல் செய்தன. ஹுசைனின் வழக்கறிஞர்கள் மிகவும் முயன்று அனைத்து மனுக்களையும் ஒருசேர உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனுசெய்து வெற்றி பெற்றார்கள். அதற்குள் மாதங்கள் பல ஓடிவிட்டன. 90 வயதை எட்டிவிட்ட ஹுசைன் வருத்தத்தில் ஆழ்ந்து, விரக்தி காரணமாக அனைவரையும் விட்டு விலகி தனித்து வாழத் தொடங்கிவிட்டார்.
காவல் துறை
கருத்துச் சுதந்திரத்துக்கு மூன்றாவது அச்சுறுத்தலாகத் திகழ்வது காவல் துறையினரின் நடத்தை. எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அணிவகுத்தாலும் குண்டர்கள், சகிப்புத்தன்மையற்ற முரடர்களுக்கு ஆதரவு காட்டுவதைப் போல காவல் துறையினரின் செயல்கள் அமைந்துவிடுகின்றன. மராட்டிய மன்னர் சிவாஜியைப் பற்றி ஜேம்ஸ் லெய்ன் எழுதிய அறிவார்த்தமான புத்தகத்தின் மீதான தடையை உயர் நீதிமன்றம் விலக்கினாலும்கூட, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களெல்லாம் பதிப்பாளரின் மும்பை அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தாக்குவார்கள் அதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கைதான் பார்ப்பார்கள் என்ற அச்சத்தில் புத்தகத்தை விற்பனைக்கு விடவே நிறுவனத்தார் அஞ்சினார்கள். அகமதாபாதில் ஹுசைன் தோஷியின் கூஃபா என்கிற (குகை) தரையடி ஓவியக் கண்காட்சிக் கூடத்தை பஜ்ரங்தளத் தொண்டர்கள் சேதப்படுத்தியபோது குஜராத் போலீஸார் அவர்களைத் தடுக்கவில்லை.
கருத்துச் சுதந்திரத்தை போலீஸார் வேறு வழிகளிலும் தடைசெய்கிறார்கள். 1988-ல் என்னுடைய சொந்த மாநிலமான உத்தராகண்டில் சாராய சாம்ராஜ்யம் குறித்துப் பத்திரிகை களில் எழுதிய இளம் பத்திரிகையாளர் உமேஷ் தோபால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உயிருக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் வந்தன. போலீஸார் அதை பொருட்படுத்தவேயில்லை. அவரது கொலைக்குப் பிறகுகூட கொலைகாரர்களைக் கைதுசெய்யவோ, வழக்கு போடவோ அக்கறை காட்டவேயில்லை. சமீப காலத்தில் அதே மாநிலத்தில் ஹேம் பாண்டே என்ற பத்திரிகையாளர் ‘போலி மோதலில்’ சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்களின் சுதந்திரச் செயல்பாட்டுக்குக் கடிவாளம் போடவே காவல் துறை விரும்புகிறது.
அஞ்சி நடுங்கும் அரசியல் தலைவர்கள்
கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக எந்தப் பிரதமரும் எந்த முதலமைச்சரும் வலுவாகக் கருத்து தெரிவித்ததில்லை. பல முதல்வர்களும் சில பிரதமர்களும்கூட தடைகோரும் கும்பல்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளார்கள். சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைத் தடை செய்யக் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. தஸ்லிமா நஸ்ரினின் படைப்புக்குத் தடை விதித்த மேற்கு வங்கத்தின் இடதுசாரி அரசு, அவர் அந்த மாநிலத்தில் வசிப்பதற்குக்கூட அனுமதிக்கவில்லை. குஜராத்தின் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் அதிகாரபூர்வமாகவும் வேறு விதங்களிலும் புத்தகங்கள், திரைப்படக் காட்சிகள், ஓவியக் கண்காட்சிகளுக்குத் தடை விதித்திருக்கிறார் மோடி.
நாவலாசிரியர் பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நூல் விவகாரம் சமீபத்திய உதாரணம். தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சி எதுவும் அவருக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கவில்லை. பெருமாள்முருகனுக்குப் பாதுகாப்பு தருவதற்குப் பதிலாக அவரை மிரட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வைத்தது உள்ளூர் நிர்வாகம்.
அரசை நம்பியிருக்கும் ஊடகங்கள்
மாநில ஊடகங்கள் தங்களுடைய வருவாய்க்கு அரசு தரும் விளம்பரங்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன. இதனால் ஆளும் கட்சியின் தவறுகளையும் அமைச்சர்களின் ஊழல்களையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டத் தயங்குகின்றன. இது இன்னொரு அச்சுறுத்தல்.
அச்சு ஊடகமானாலும் காட்சி ஊடகமானாலும் தனியார் நிறுவனங்கள் தரும் விளம்பரங்கள் மூலம்தான் அதிக வருவாயைப் பெறுகின்றன. இது ஆங்கிலப் பத்திரிகை களுக்கும் ஊடகங்களுக்கும் மிகவும் பொருந்தும். உயர் மத்தியதர வகுப்பினர்தான் இவற்றின் புரவலர்கள். கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள், குளிர்சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் என்று பல்வேறு நுகர்வுப் பண்டங்களின் தயாரிப்பாளர்கள்தான் அதிக விளம்பரங்களை அளிக் கிறார்கள். அவர்களுடைய வியாபார நலனுக்கு ஏற்பத்தான் ஊடகங்கள் செயல்பட வேண்டியதாகிவிட்டது. இது மற்றொரு அச்சுறுத்தல். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான விஷயங்களைப் பற்றிய செய்திகளைகூட வெளியிட அஞ்சி சுய தணிக்கை செய்துகொள்கின்றன ஊடகங்கள். சுரங்கத் தொழில், ரசாயனத் தொழில், எண்ணெய் நிறுவனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டால், விளம்பர வருவாய் போய்விடுமே என்று அஞ்சி வெளியிடுவதே இல்லை பல ஊடகங்கள்.
அடிமை எழுத்தாளர்கள்
“எழுத்தாளர் என்பவர் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசத் தொண்டராக இருக்கக் கூடாது” என்றார் ஜார்ஜ் ஆர்வெல். இந்தியாவில் ஏராளமான எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்கள் போன்றோரிடம் தங்களுக்குள்ள விசுவாசத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கிறார்கள். இது அரசியல் தளத்திலும் பிரதிபலிக்கிறது. பாஜகவின் பிரச்சாரகர்கள், காங்கிரஸின் பத்திரிகைத் தொடர்பாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்காகப் பரிந்து பேசுகிறவர்கள், நக்சலைட்களுக்காகக் குரல்கொடுப்பவர்கள் என்று எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் களில் பலர் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு இவர்களும் அச்சுறுத்தல்களே.
இத்தகைய 7 விதமான அச்சுறுத்தல்கள்தான் இந்திய ஜனநாயகத்தின் தார்மிக, அமைப்புரீதியான அடித்தளங்களை வலுவிழக்கச் செய்கின்றன. சீனா, ரஷ்யாவைவிட நம் நாட்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப் பாளர்களுக்குச் சுதந்திரம் அதிகம்தான் என்றாலும் கனடா, சுவீடன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது முழுச் சுதந்திரம் இல்லையென்று கூறிவிடலாம்.
- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்;
| தமிழில்: சாரி |


புதன், 18 பிப்ரவரி, 2015

Air show bangalore

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6909168.ece?homepage=true&ref=slideshow#im-image-0

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6909168.ece?homepage=true&ref=slideshow#im-image-0

India Super Power

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6902864.ece?homepage=true

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6902864.ece?homepage=true

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஃபர்னிச்சர் கம்பெனி ஐக்கியா!

பொதுமக்கள் முதலீடே இல்லாமல், முழுக்க முழுக்க ஒரே குடும்பத்துக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய நிறுவனம் எது தெரியுமா? ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஃபர்னிச்சர் கம்பெனி ஐக்கியா!
ஸ்வீடனில் அஹூனியார்ட் (Agunnaryd) எனும் நகரம். இதன் அருகே எல்ம்டார்ட் (Elmtaryd) என்னும் சிறிய பண்ணை இருக்கிறது. இங்கே ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இங்வார் காம்ப்ராத் (Ingvar Kamprad) பிறந்தார். அவர் பின்புலத்தில் பல சோகங்கள் உண்டு.
பலனில்லா உழைப்பு
இங்வாரின் தாத்தா ஜெர்மனியிலிருந்து பிழைப்பு தேடி ஸ்வீடனுக்குக் குடியேறினார். ஒரு பண்ணையில் வேலை பார்த்தார். அஹூனியார்ட் இருந்த பகுதி நிலம் அத்தனை வளமையானதல்ல. நிலத்தை ஆழமாகத் தோண்டவேண்டும், உரம் போடவேண்டும், நீர் பாய்ச்சவேண்டும், களை எடுக்கவேண்டும், பண்ணையில் பால் தரும் பசுக்கள் உண்டு. இவற்றைப் பராமரிக்கவேண்டும், பால் கறக்கவேண்டும். விளைபொருட்கள், பால் ஆகியவற்றை உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்யவேண்டும். முதுகு உடையும்படி உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும், இதனால், அஹூனியார்ட் மக்கள் அனைவருமே கடும் உழைப்பாளிகளாக இருந்தார்கள்.
இங்வாரின் தாத்தாவும் கடுமையாக உழைத்தார். எளிமையான வாழ்க்கை நடத்திப், பணம் சேமித்தார். இதை மூலதனமாகப் போட்டு, வங்கிக் கடன் வாங்கி எல்ம்டார்ட் பண்ணையை வாங்கினார். அவர் கெட்ட காலம், சில வருடங்கள் விவசாயம் பொய்த்தது. வங்கிக் கடனுக்கான வட்டியை அவரால் கட்ட முடியவில்லை. மானம் பெரிதென்று நினைத்த தாத்தா தற்கொலை செய்துகொண்டார்.
வாழ்க்கைப் பாடம்
இங்வாரின் பாட்டி இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டார். குடும்பத்தோடு இன்னும் கடுமையாக உழைத்தார். குடும்பம் தலை நிமிரத் தொடங்கியது. இந்தப் பின்புலத்தால், பணத்தைவிட மானம் பெரியது, பணத்தைச் சிக்கனமாகச் செலவிடவேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும் என்னும் விலை மதிப்பில்லாத வாழ்க்கைப் பாடங்கள் இங்வார் மனதில் ஆழமாகப் பதிந்தன.
சிறுவயதில் இங்வாருக்குத் தூக்கம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிகாலையில் அவர் அப்பாவும், அம்மாவும் ஆறு மணிக்கு எழுந்திருப்பார்கள், இங்வாரை எழுப்புவார்கள். அவர் எழுந்திருக்கவே மாட்டார். அம்மாவும், அப்பாவும் ``தூங்குமூஞ்சி” என்று தினமும் திட்டுவார்கள். தங்கள் மகன் உதவாக்கரை என்று முடிவு செய்துவிட்டார்கள்.
பரிசு ஏற்படுத்திய மாற்றம்
இப்போது ஒரு ஆச்சரியம் நடந்தது. இங்வாரின் அப்பா மகனின் பிறந்த நாளுக்கு அலாரம் கடிகாரம் வாங்கித் தந்தார். அம்மா, அப்பா ஆறு மணிக்குத்தானே கண் விழிப்பார்கள்? இங்வார் 5.50 – க்கு அலாரம் வைத்தார். எழுந்தார். அம்மா, அப்பாவை எழுப்பிவிட்டார். அவர்களோடு பண்ணைக்குள் போனார். மாடுகளுக்குத் தீனி வைப்பது, பால் கறப்பது, களை பறிப்பது என்று அத்தனை விஷயங்களையும் எட்டு வயதிலேயே தானாகச் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டார்.
தொழில் முனைவு
சிறுவயதிலேயே இங்வாரிடம் தொழில் முனைப்பு இருந்தது. ஸ்வீடனின் நிலப்பரப்பில் சுமார் 69 சதவிகிதம் காடுகள். ஆகவே, மரங்களைப் பயன்படுத்தி தீக்குச்சிகள், ஃபர்னிச்சர் தயாரிப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக இருந்தன. இங்வார் தன் பத்து வயதில் முதல் பிசினஸ் தொடங்கினார். தீக்குச்சிகளை மொத்த விலை வியாபாரிகளிடமிருந்து வாங்குவார். உள்ளூர் சில்லறைக் கடைகளுக்கு லாபத்தில் விற்பார்.
ஐக்கியா பிறந்த கதை
தீக்குச்சியில் தொடங்கிய வியாபாரம் நன்றாகப் பற்றிக்கொண்டது. இங்வார் தன் வியாபாரத்தை விரிவுபடுத்தினார். நகைகள், கடிகாரங்கள், உடைகள் எனப் பல பொருட்களை விற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில், இங்வார் அவரே கடைகளுக்குப் போய் விற்பார். இத்தோடு தபால் மூலமாக விற்கும் மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். தன் கம்பெனிக்கு IKEA கார்ப்பரேஷன் என்று பெயர் வைத்தார். எப்படி இந்தப் பெயர் அவர் மனதில் தோன்றியது? Ingvar Kamprad என்னும் தன் பெயரிலிருந்து IK, தன் வீடு இருந்த பண்ணையான Elmtaryd என்பதிலிருந்து E, Agunnaryd என்னும் சொந்த ஊர்ப் பெயரிலிருந்து A. மொத்தத்தில் IKEA.
புதிது புதிதாக எந்தப் பொருட்களை விற்கலாம், வியாபாரத்தை வளர்க்கலாம் என்று இங்வாருக்குத் துடிப்பு அதிகம். ஸ்வீடன் காடுகள் அடர்ந்த நாடு என்பதால், மரங்கள் கணிசமாக இருக்கும். மர ஃபர்னிச்சர்கள் முக்கிய தொழிலாக இருந்தது. மேசை, நாற்காலிகள், சோபா செட்கள், டைனிங் டேபிள், கட்டில், தொட்டில் போன்ற மர சாமான்களை விற்க ஆரம்பித்தார். பிசினஸ் அமோகமாக வளர்ந்தது.
இங்வார் மிக எளிமையான மனிதர். பணம் கொட்டியபோதிலும், பழைய மாடல் காரைத்தான் பயன்படுத்தினார். விமானத்தில் முதல் வகுப்புப் பயணமே கிடையாது. இப்படி எளிமையில் திருப்தி கண்ட மனிதருக்குத் திருப்தி தராத ஒரே விஷயம் – ஐக்கியாவின் வளர்ச்சி. மர ஃபர்னிச்சர்கள் துறையில் ஐக்கியா உலகத்தின் நம்பர் 1 கம்பெனியாக வேண்டும் என்னும் வெறி அவருக்கு இருந்தது.
என்ன செய்யலாம்?
விற்பனையை அதிகரிக்க ஸ்வீடனில் ஃபர்னிச்சர்கள் விற்பனை ஏன் உச்சம் தொடவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று இங்வார் ஆராய்ந்தார். ஸ்வீடனில் மரம் மலிவாகக் கிடைத்தது. ஆனால், தச்சர்களின் கூலி மிக அதிகம். தச்சர்களுக்கு ஏகக் கிராக்கி. நல்ல மரவேலை செய்பவர்கள் கிடைப்பதே சிரமமாக இருந்தது. சாதாரணமாக மரத் தட்டுமுட்டுச் சாமான்கள் அளவில் பெரியவை. கடைகளிலிருந்து வாங்கினால், வீட்டுக்குக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவு, ``தேங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்” என்னும் நம் ஊர்ப் பழமொழியை உண்மையாக்குவதாக இருந்தது.இந்தக் காரணங்களால், ஸ்வீடன் நாட்டு மக்கள் மர ஃபர்னிச்சர்கள் வாங்குவதைத் தவிர்த்தார்கள், அல்லது தள்ளிப் போட்டார்கள். விற்பனை மந்தமானது.
இந்தத் தடைக் கற்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டுவிட்டால் ஃபர்னிச்சர் விற்பனையைப் பல நூறு மடங்கு அதிகரிக்கலாம் என்று இங்வார் மனதில் பொறி தட்டியது. ``ஃபர்னிச்சர் என்றால் விலை உயர்ந்த பொருள்” என்று மக்கள் மனங்களில் இருந்த பொசிஷனிங்கை முதலில் மாற்றவேண்டும் என்று முடிவுசெய்தார். தன் கம்பெனி பற்றி அவர் உருவாக்க முடிவு செய்த பொசிஷனிங்: ஐக்கியா,நன்கு டிசைன் செய்யப்பட்ட, எண்ணிலடங்காத வகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களை, எல்லோருக்கும் கட்டுப்படியாகக்கூடிய மலிவான விலையில் தரும் கடை.
இந்தப் பொசிஷனிங்கை நிஜமாக்க இரண்டு வித நடவடிக்கைகள் தேவை – கச்சிதமான டிசைன், விலைக் குறைப்பு. இவை இரண்டிலும் இங்வார் முழுமூச்சோடு இறங்கினார்.
புதிய உத்தி
இங்வார் மூளையில் ஒரு மின்வெட்டல். Foldable Furniture என்னும் மடக்கு மேசை, நாற்காலி, கட்டில்களை அறிமுகப்படுத்தினார். இவற்றின் கால்கள் போன்ற பல்வேறு பாகங்களைத் தனித் தனியாகக் கழற்றினார். ஒரு பொட்டலமாக்கினார். இவற்றோடு, ஒரு பாக்கெட்டில் பல்வேறு பாகங்களை இணைக்கும் ஸ்க்ரூக்கள், பாகங்களை இணைக்கும் எளிமையான, விலாவாரியான செயல்முறை ஒரு குட்டிப் புத்தகத்தில்.
வாடிக்கையாளர் ஐக்கியா கடைக்கு வருவார். மேசையைப் பொட்டலமாக வாங்குவார். காரில் பாந்தமாக இந்தப் பொட்டலம் உட்காரும். வழியில் எந்த உரசலும் ஏற்படாது. வீட்டுக்கு வந்து சில ஸ்க்ரூக்களை முடுக்குவார். மேசை ரெடி. தச்சருக்குத் தரும் கூலியில் ஏகப்பட்ட மிச்சம், வாடிக்கையாளருக்கு ஏகப்பட்ட சேமிப்பு.
பிற நாடுகளுக்கு
விலைகளைக் குறைக்க இங்வார் இன்னொரு வழியையும் கையாண்டார். கூலி குறைவான சீனா, போலந்து ஆகிய நாடுகளுக்குத் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்தார். இன்று ஐக்கியாவின் 90 சதவிகித விற்பனை அவுட்சோர்ஸ் செய்த உற்பத்திப் பொருட்களிலிருந்து வருகிறது.
பிரம்மாண்ட வளர்ச்சி
ஐக்கியாவுக்கு இன்று 46 நாடுகளில் 351 கடைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பல லட்சம் சதுர அடிகள் பரப்புள்ள பிரம்மாண்ட விற்பனையகங்கள். 12,000 – துக்கும் மேற்பட்ட ஃபர்னிச்சர் வகைகள் விற்பனையாகின்றன. மொத்த ஆண்டு விற்பனை 28 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,72,624 கோடி ரூபாய்). விரைவில் இந்தியாவிலும் ஐக்கியா கடைகள் திறக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இங்வார் காம்ராத் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருக்கு இப்போது வயது 89. 2010 – இல், வாரன் பஃபட், பில் கேட்ஸ் இருவரையும் பின்தள்ளி, இங்வார் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். அடுத்த வருடமே, மகனிடம் பிசினஸை ஒப்படைத்தார். தன் சொத்துகளில் பெரும்பகுதியை அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்தார்.தான் காணும் கனவுகள் நிஜமாவதைப் பார்க்கும் பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலிகளில் இங்வார் முக்கியமானவர்.
- slvmoorthy@gmail.com

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சரோஜினி நாயுடு (Sarojini Naidu)

‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, பாரசீக மொழியில் வல்லவர்.
 சென்னை பல் கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயது. இவர் கணித மேதை அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இவருக்கோ கவிதை எழுதுவதில் நாட்டம். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
 இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார்.
 கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தன. ‘தி கோல்டன் த்ரஷோல்ட்’ (The Golden Threshold), ‘தி பேர்ட் ஆஃப் டைம்’ (The Bird of Time), ‘தி ப்ரோக்கன் விங்’ (The Broken Wing) குறிப்பிடத்தக்கவை.
 ‘இந்தியாவின் கவிக்குயில்’ என்று வர்ணிக்கப்பட்டார். இவரது கவிதைகளுக்கு தாகூர், நேரு உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். 1905-ல் வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.
 காந்தி, நேரு, கோகலே, தாகூர், ஜின்னா, அன்னி பெசன்ட் ஆகிய முக்கியத் தலைவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை முன்னெடுத்தார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உரையாற்றினார். இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார்.
 1919-ல் ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார். காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது, பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து முதலில் களம் இறங்கினார். 1925-ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த முதல் பெண் இவர். காந்திஜி இவரை செல்லமாக ‘மிக்கி மவுஸ்’ என்பார்.
 சட்ட மறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டு பல மாத சிறைவாசம் அனுபவித்தார். காந்தியடிகளுடன் தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.
 நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.
 ‘கவிக்குயில்’ சரோஜினி நாயுடு 70 வயதில் மறைந்தார். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

புதன், 11 பிப்ரவரி, 2015

AAP

மக்களவைப் பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைக் குவித்துவந்ததற்காக பாஜக கடந்த மாதம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு புளகாங்கித மடைந்தது. இவ்வெற்றிகளால் பெரும்பான்மையின வாதத்தை அக்கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் அச்சப்பட்டனர். ஆனால், அது ஏற்கெனவே அப்பணியைத் தொடங்கிவிட்டது. தான் ஏற்படுத்திய பிம்பத்தைக் கண்டு எல்லோரும் பிரமிப்பதை, ஒரு கொள்கை வகுப்பாளர் என்ற முறையில் அது வெகுவாக ரசித்தது. உலகத் தலைவர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அளித்த பரிந்துரைகள் அதற்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டின. இருந்தாலும், டெல்லியில் அரசியல் சூழல் இடம் மாறுகிறது என்று அதற்குத் தெரிந்தது.
ஆஆக தன்னைத்தானே கரைத்துக்கொண்டு காணாமல் போய்விடும் என்று அதன் விமர்சகர்கள் நினைத்ததற்கு மாறாக அது புதிய வலுவுடன் தன்னை மீண்டும் களத்தில் நிறுத்திக்கொண்டது. டெல்லி அரசியல் களத்தில் முதலிடத்தில் இப்போது அதுதான் நிற்கிறது. அரசியல் சதுரங்கத்தில் விற்பன்னர் என்று பெயர் வாங்கிய அமித் ஷாவை அது மிஞ்சிவிட்டது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அரசியல் களம் வற்றிவிடவில்லை
இந்திய அரசியலில் எல்லாவிதமான பரிசோதனைகளும் இப்போதிருக்கும் இந்தியக் கட்சிகளால் முழுக்கச் செய்துபார்க்கப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எல்லாம் பழமைக் கட்டுமானங்களைக் கொண்ட, புதிய சிந்தனை, புதிய செயல்முறை, புதிய பரிசோதனை முயற்சிகள் இல்லாத கட்சிகள். ஆஆக உருவானபோது அது புதிய வகையில் அர்த்தமுள்ள அரசியல் சிந்தனைகளை முன்வைத்தது. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகளைச் செய்து இயக்கங்களை நடத்தியதுடன் அரசியல் கட்சியாகவும் நிலைத்து நின்றது. அதனுடைய வெற்றி அபாரமானதாக இருந்ததால், அது திடீரென்று உற்சாக மிகுதியில் அப்போதைக்கு மட்டும் செயல்பட்ட துடுக்கான கட்சியா, மக்களுடைய மனங்களில் இடம்பிடித்த அற்புதத் திரைக்காவியமா என்று யாராலும் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு நாடு முழுக்க மக்களுடைய மனங்களில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, விமர்சகர்கள் எதிர்பார்த்தபடியே தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது.
அந்தக் கட்சியை உயிர்ப்புடன் தக்கவைத்தது அதன் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான். அவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டது. இந்தக் குழுக்கள் அரசியலின் அடியாழத்தில் உள்ள சில அம்சங்களைப் பிரதிபலித்தன. இப்போதைய வெறுக்கத்தக்க அரசியலின் வெற்றுக்கூச்சலுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த அமைதியை நோக்கிச் செல்லக்கூடிய வித்தியாசமான அரசியலைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்.
புதிய அரசியலுக்கான சாத்தியங்கள்
அரசியல் களத்தில் தான் நிகழ்த்திய முதல், திடீர் தாக்குதல் மூலம் ஒரு புதுவகை அரசியலுக்கு ஆஆக வித்திட்டது. அரசியலில் நடப்பதைக் கவனிக்க வேண்டும், பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அது முதலில் ஊட்டியது. அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெறுவது வேறு; அரசியலையே ஒரு கடமையாகக் கருதி அதில் ஈடுபடுவது வேறு. முதலாவது, சுய லாபத்துக்காக அரசியலில் ஆர்வம் காட்டுவது. அடுத்தது, பொது நன்மை கருதி ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.
ஆஆகவின் முக்கிய அம்சமே ஆர்வமுள்ள ஏராளமான இளைஞர்கள் அரசியலால் ஈர்க்கப்பட்டும் அதன் மூலம் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மைகளைக் கருதியும் அதில் பங்கேற்றதுதான். அடுத்ததாக, வழக்கமான அரசியல்வாதிகளின் மொழியில் அது பேசவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உள்ள உரிமைகள்குறித்தோ, சட்டப்பேரவையின் முன்னுரிமைகள் குறித்தோ அது பேசவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான புதிய மொழியை உருவாக்குவதுகுறித்துப் பேசியது. அரசியல்வாதிகளே மக்களுக்கான திட்டங்களை முன்மொழிந்து, பிறகு அதை முடித்துவைக்கும் பாணியை அது கையாளவில்லை. மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் என்னவென்று விவரித்து அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கும் புதிய அரசியல் நெறியை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறையைத்தான் அராஜகவாதம் என்று பலர் தவறாகப் புரிந்துகொண்டனர். இத்தகைய பாணி அரசியலில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவு என்பதால், அரசியல்வாதிகள் முதலிலேயே இதன் போக்கைக் கவனித்து, அராஜகவாதம் என்று கண்டித்தனர். அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு அதிகாரம் வழங்க ஆஆக விரும்பியது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆஆகவின் செயலை நக்ஸல்களின் செயலுடன் ஒப்பிட்டு அரசுக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்தார்.
ஒருவர் தவறுகள் செய்து அந்தத் தவறுகள் தொடர் வினைகளை ஏற்படுத்தி அது சோகமான நகைச்சுவையாக முடிவதுண்டு. ஆஆகவின் சிறப்பம்சமே நெருக்கடியான நேரங்களில், நுனிக்காலை ஊன்றியாவது தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுதான். தங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு டெல்லி மிகவும் அவசியமான இடம் என்பதால், முழு பதவிக் காலமும் இல்லாமல் ஆட்சியைவிட்டு ஓடியதற்காக அது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
பாஜக பிரச்சினைகளைத் தீர்க்காது
பாஜக தன்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுடைய பிரச்சினைகளை அப்படியொன்றும் மாயாஜாலம் செய்து தீர்த்துவிடவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதுவரை ஆஆகவின் சாதனை என்று குறிப்பிட எதுவும் இல்லாவிட்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே அதிகரித்தது. அந்தக் கட்சிக்கு மற்றொரு வாய்ப்பைத் தர வேண்டும் என்று டெல்லி மாநகர நடுத்தர மக்களும் ஏழைகளும் தீர்மானித்துவிட்டார்கள்.
காங்கிரஸ் அல்ல; உண்மையான எதிரி ஆஆக என்று பாஜக அடையாளம் கண்டுகொண்டது. அது அரசியலுக்கே ஒரு விறுவிறுப்பை ஊட்டியது. வலுவான கட்சியை, வலு குறைந்த கட்சி பலமாக எதிர்ப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு.
ஆஆகவின் அரசியல் நடவடிக்கையை பாஜக அப்படியே காப்பியடித்தது. முதல்வர் பதவி வேட்பாளருக்கு கட்சியைச் சாராத கிரண் பேடியைத் திடீரெனக் களம் இறக்கியது. சாவி கொடுத்த இயந்திரம்போல பேடி பேசினார், செயல்பட்டார். அவருடைய வருகையைக் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், தலைவர்கள் பலர் விரும்பவில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் மக்களுடைய ஆதரவு தந்த உற்சாகத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்தபோது, கிரண் பேடி உணர்ச்சி ஏதும் காட்டாமல் பொம்மைபோல் அமைதியாகச் செயல் பட்டார். ஒருவரிடம் பேசி, தன்னுடைய கருத்தை அவர் ஏற்பதை வலியுறுத்துவதைவிட, தடியால் நாலு தட்டுத் தட்டி வழிக்குக் கொண்டுவருவதே அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேஜ்ரிவாலுக்கு நிகரான ஆளுமையுள்ள தலைவர் டெல்லி பாஜகவில் இல்லை என்பதையே பேடியின் தேர்வு பறைசாற்றிக்கொண்டிருந்தது.
ஆஆகவின் எதிர்காலம்
ஆஆக மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துவிட்டது என்பது தெளிவு. இப்போதைய கேள்வி அந்தக் கட்சி எதிர்காலத்தில் எப்படிச் செயல்படும், அதன் உத்திகள் என்னவாக இருக்கும் என்பதுதான். ஒரு விமர்சகனாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் அக்கட்சி தொடர்ந்து புதுப்புது கொள்கைகளையும் வழிமுறைகளையும் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதைத்தான்.
ஆஆக தன்னுடைய கட்சிச் செயல்பாட்டைக் கண்காணித்து வழிநடத்த ஒரு ‘ஆம்புட்ஸ்மேன்’ தேவை என்று உணர்ந்து, ஒருவரை அப்பதவியில் நியமித்திருப்பது ஆக்கபூர்வமான சிந்தனை. ஊழல், போதைப்பொருள் நடமாட்டம் என்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளை மிகத் திறமையாக மக்கள் மனதில் ஆஆக பதியவைத்தது. கல்வி, தண்ணீர், மின்சாரம் போன்றவை பொதுமக்களுக்கான பண்டங்களாகவே திகழ வேண்டும் என்ற உணர்வை அது ஊட்டியது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அது வலியுறுத்தியது. இவையெல்லாம் இதுவரை எந்தப் பெரிய அரசியல் கட்சியாலும் செய்யப்படாதது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ளது.
மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைக்கூடப் பொருளாதார நிர்வாகிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் அவர்களுடைய நோக்கில் மட்டுமே பார்க்கின்றனர். ஆஆக இவற்றையும் மீட்டு அதற்கு மக்களுடைய நலன் சார்ந்த கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதைவிடச் சிக்கலானது, மக்களுடைய வாழ்வாதாரங்கள் கெடாமல் பாதுகாப்பது. ஒரு பிரச்சினையை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பார்க்கும் பார்வை, சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மனிதருடைய நிலையை உணர்ந்த பார்வையாக இருப்பதில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பக் கண்ணோட் டத்தில் பார்த்து, தொழில்நுட்பரீதியாகத் தீர்வுகண்டு, தொழில்நுட்பத்துடன் தீர்த்துவிடுவதால் பெரும்பான்மை மக்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுவிடாது.
அணுசக்திப் பயன்பாடு தொடர்பான விவாதங்களில் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையைத் தேசிய நிலைக்குக் கொண்டுசென்றதன் மூலம், ஒரு ஊரில் பேசப்படும் பிரச்சினை உள்ளூர்ப் பிரச்சினை அல்ல, அது இந்த சமுதாயத்தின், நாட்டின் பிரச்சினை என்பதை அது உலகுக்குக் காட்டியது. அணு மின் நிலையம் எங்கே அமைய வேண்டும் என்று சொல்லும் உரிமை, அந்தப் பகுதியில் மீன்பிடிக்கும் கடல் மீனவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று அது தெரிவித்தது. ஆஆகவின் ஆம்புட்ஸ்மேனாகச் செயல்படுகிறவர் ஓய்வுபெற்ற கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ். நாட்டின் (ராணுவ) பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு மக்களுடைய வாழ்வாதாரம், தொடர்ந்து செயல்படல், ஜனநாயகம் ஆகிய கோணங்களும் இருப்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவையெல்லாம் இப்படியே தொடர வேண்டும்.
கட்சி அரசியலைப் பிற கட்சிகளைப் போலக் கட்டி எழுப்புவது ஆஆகவுக்கு முக்கியமில்லை. டெல்லி மாநகரைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். டெல்லி மாநகர நிர்வாகம் நகருக்கு வேலைதேடி வரும் புதிய தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் தேவைகளை அறிந்து செயல்பட வழிவகுக்க வேண்டும். டெல்லி என்பது எல்லோருக்குமான நகரம் என்ற உணர்வு அரசு நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அரசியலுக்குப் புதுவிளக்கம் தருவதிலும் ஜனநாயகத்துக்கு புதிய வடிவத்தைத் தருவதிலும்தான் ஆஆகவின் எதிர்காலம் இருக்கிறது!
- ஷிவ். விஸ்வநாதன்
(அரசு, பொதுக் கொள்கை தொடர்பான ஜிண்டால் உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)
© 'தி இந்து' (ஆங்கிலம்) தமிழில்: சாரி

****************
இந்திய அரசியலுக்கு ஒரு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆஆக.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி-அமித் ஷா இருவர் கூட்டணி சந்தித்திருப்பதைக் குறிப்பிட தோல்வி என்ற வார்த்தை போதுமானதல்ல. பொதுவாக, இந்திய அரசியலில் ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் அந்தக் கட்சியைப் பற்றிய தோற்றம் வகிக்கும் பங்கைவிட, அந்தக் கட்சிக்கு எதிராகக் களத்தில் இருக்கும் கட்சியைப் பற்றிய தோற்றமே அதிகப் பங்கு வகிக்கிறது. மோடி-ஷா விஷயத்திலும் இதுவே உண்மை என்பதே டெல்லி தேர்தல் முடிவுகள் சுட்டும் முதன்மையான பாடம்.
மிடாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகுமா?
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற பெரும் வெற்றியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் உதவியுடன் மோடி தன்னைப் பற்றி வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்ட ‘வளர்ச்சிக்கான மனிதர்’ என்ற பிம்பத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றபோதிலும், முதன்மையான காரணம் ஐ.மு.கூ-வின் மிக மோசமான ஆட்சியே. மிடாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப் போல மோடி-ஷா தொடுவதெல்லாம் வெற்றியே என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஏதோ யாருக்கும் தெரியாத தேர்தல் உத்திகளைக் கரைத்துக்குடித்த நேர்நிகரற்ற மாமேதை ஷா என்பதைப் போன்ற சித்திரமும் உருவாக் கப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரும்பான்மையான மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்ற முடிந்ததற்குக்கான காரணங்கள் இரண்டு: 1.சீர்கேடுகளின் உச்சமாக இருக்கும் அகிலேஷ் யாதவின் அரசாங்கம். 2.இந்து ஜாட் சமூக மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிப் பெரும் கலவரத்தை சங் பரிவாரம் உருவாக்கியதும், அதில் தங்களுக்கும் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றெண்ணி அதற்குத் துணைபோன அகிலேஷ் அரசாங்கம். மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட் என சமீபத்தில் மோடி-ஷா இருவர் அணி பெற்ற பெரும் வெற்றிக்குப் பின்னணியில் இருந்ததும் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு இருந்த பெரும் அதிருப்தியே.
மத்திய பாஜக அரசின் மீது மக்களுக்கு அத்தகைய அதிருப்தி ஏதும் இல்லாத நிலையிலும், ஆஆக பெற்றுள்ள மகத்தான வெற்றி வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டு கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை, கொள்கை முடிவுகளில் மக்களுக்கும் பங்கிருக்கக் கூடிய ஓர் அரசாங்கத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அந்த முக்கியமான மாற்றம்.
முடிவுகள் சொல்லும் பாடங்கள்
டெல்லியில் காங்கிரஸின் அழித்தொழிப்பு முழுமை அடைந்திருப்பதை இந்த முடிவுகள் காட்டும் அதே நேரத்தில், மோடியின் ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. 2013 சட்டசபைத் தேர்தலில் தாங்கள் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடுகிற போது, இப்போது எந்த வாக்கிழப்பும் ஏற்படவில்லை என்று பாஜக வெளியில் சொல்லித் தன்னைத் தேற்றிக்கொண்டாலும், 2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் தாங்கள் பெற்ற வாக்குகளைவிட 14% வாக்குகள் இப்போது குறைவு என்பதும், அப்போது ஆஆக பெற்ற வாக்குகளைவிட, இப்போது அந்தக் கட்சி 35% வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதும் மோடி-ஷா வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இதன் பாதிப்புகள் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நன்றாகவே பிரதிபலிக்கும் என்பதும், பிஹாரில் ஓரளவு எதிரொலிக்கும் என்பதும் இருவர் அணியின் அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
டெல்லியில் பாஜக சந்தித்திருக்கும் பிரம்மாண்டமான தோல்விக்கு முக்கியமான காரணங்கள் மூன்று: 1.முடிவுகளை எடுப்பதில் மோடி-ஷா தவிர, வேறு யாருக்கும் இடமில்லை என்ற நிலை பாஜகவில் உருவாகியிருப்பது. அதன் காரணமாக, சாந்தமானவர், நல்லவர் என்ற பிம்பம்கொண்ட டாக்டர் ஹர்ஷவர்தன் உட்பட டெல்லி பாஜக தலைவர்கள் அனைவரும் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி கொண்டுவரப்பட்டது. 2. ‘வளர்ச்சிக்கான மனிதராக’ தன்னைக் காட்டிக்கொண்ட மோடி, கடந்த 8 மாதங்களில் எந்த வளர்ச்சியையும் காட்டாதது மட்டுமல்ல; இந்துத்துவா செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர் காட்டிவரும் முனைப்பு மோடியின் பிம்பத்தை நம்பி 2014-ல் வாக்களித்த டெல்லி நடுத்தர வர்க்க மக்களில் கணிசமானவர்களை அவரிடமிருந்து விலக வைத்திருக்கிறது. 3. தனது எதிரி ஊழலின் வடிவமாக இருக்கும் காங்கிரஸாக இருந்த வரை வெற்றி பெறுவது பாஜகவுக்கு எளிதாக இருந்தது. இருவர் அணியின் அதிகார போதையை இந்தத் தோல்வி கொஞ்சமேனும் குறைக்கும் என்றால், அது பாஜகவுக்கு நல்லது. நல்ல மாற்று கிடைக்குமெனில், அதை ஆதரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டும் அதி முக்கியமான பாடம்.
ஆஆக முன்னுள்ள சவால்கள்
யோகேந்திர யாதவ் குறிப்பிட்டதைப் போல ஆஆக வினரே கனவிலும் நினைத்திராத வெற்றி இது. இந்த வெற்றியிலிருந்து ஆஆக கற்க வேண்டிய முக்கியமான பாடம் என்ன என்பதை அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது முதல் பேச்சிலேயே தெளிவுபடுத்திவிட்டார். ‘இந்த வெற்றி எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது நமக்கு அகங்காரத்தைத் தந்து விடக் கூடாது’ என்று அவர் சொல்லியிருப்பதை நடை முறையில் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
இன்றைய இந்திய அரசியலுக்கு ஒரு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆஆக, வெகு விரைவில் இன்றைக்கிருக்கும் கட்சிகளுள் ஒன்றாக மாறினால் அதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஏதுமில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போதே ஆஆகவில் தென்படுகின்றன. நேற்று வரை எந்த மனத்தடையும் இல்லாமல் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளில் உற்சாகமாக இருந்துவிட்டு, இப்போது ஆஆவில் சேர்ந்த பலரை வெற்றிவாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதற்காக தேர்தலில் நிறுத்தியது ஆஆக தலைமை. எல்லாக் கட்சிகளும் பின்பற்றும் இந்த வழக்கமான அணுகுமுறையை ஆஆக பின்பற்றியதன் காரணமாகவே, அற அரசியலை முன்னிறுத்தும் பிரசாந்த் பூஷண் ஆஆகவிலிருந்து இப்போது விலகி நிற்கிறார். கேஜ்ரிவால் எந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கப்போகிறார், தான் அளித்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றா விட்டாலும், அவற்றை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்கு உண்மையான முனைப்பைக் காட்டப்போகிறார் என்பதுவுமே ஆஆகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
‘வர்க்க அரசியலை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால், எங்களுடையது வர்க்கப் போராட்ட அரசியல் அல்ல’ என்றும்... தாங்கள் ‘சித்தாந்த அரசியலுக்குள் அடைபட மறுப்பவர்கள், அதற்கு அப்பாற்பட்டவர்கள்’ என்றும் யோகேந்திர யாதவ் தொடர்ந்து கூறிவருவகிறார். இது யதார்த்தத்தில் சாத்தியமற்ற நிலை. இந்த போலியான நிலைப்பாடு அந்தக் கட்சியின் நீண்ட கால அரசியலுக்கு ஆபத்தாகவே முடியும். ஒரு கட்சிக்கு சித்தாந்தம் அல்லது கோட்பாடுகள் என்பது வரைபடம் போன்றதல்ல, கைவிளக்கு போன்றது. ஆஆக கற்க வேண்டிய முக்கிய பாடங்களுள் ஒன்று இது.
க. திருநாவுக்கரசு, அரசியல் விமர்சகர், கட்டுரையாளர்

தொடர்புக்கு: kthiru1968@gmail.com
*****************

ஆஆகவின் வெற்றி - மாற்றத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெற்றி.
இது ஒரு தேவதைக் கதை! அர்விந்த் கேஜ்ரிவால் என்கிற இளவரசனின் கதை. இந்திரப் பிரஸ்தத்தின் இளவரசியை மணம் முடிப்பதற்கான கதையின் முடிவு சுபமாகவே ஆகியிருக்கிறது. மோதல், காதல், ஊடல் என ஓராண்டுக் காலம் நடந்த நாடகம் முடிந்துவிட்டது. டெல்லி சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை காணாத வெற்றியை மஃப்ளர் மனிதர் பெற்றிருக்கிறார். 70-ல் 67 இடங்களைக் கவர்ந்து ஆஆக வெற்றி பெற்றிருக்கிறது. ஆஆக-வே எதிர்பாராத பெரும் வெற்றி இது. சரி, வெற்றியாளர்களைப் பற்றி அப்புறம் பேசிக்கொள்வோம். முதலில் தோல்வியாளர்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கேஜ்ரிவாலுக்கு என்றால், மிகப் பெரிய தோல்வி யாருக்கு? தேர்ந்தெடுங்கள்: 1. நரேந்திர மோடி, 2. அமித் ஷா, 3. கிரண் பேடி, 4. ராகுல் காந்தி.
விடை: மேற்கண்ட யாருமில்லை.
அப்போது யார்தான் நெ.1 தோல்வியாளர்? சந்தேகமேயில்லை திருவாளர் நோட்டாதான். நடுத்தர வர்க்கத்தின் சிடுமூஞ்சிவாதிகளும் அரசியல்வாதி களின் மிரட்டல்களுக்குப் பயப்படும் அப்பாவி ஜனநாயகவாதிகளும் தேர்தல் ஜனநாயகத்தைக்கூடக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் குரோனி கேபிடலிஸ்ட்களும் எப்போதுமே நோட்டாவைத் தங்கள் தலையில் தூக்கிக்கொண்டு அலைவார்கள். எல்லோரையும் நிராகரியுங்கள் என்று பாடமெடுப்பார்கள். மக்கள் தங்களுடைய உரிமைகளின் மீது நம்பிக்கை இழக்க வேண்டும், சர்வாதிகார ஆட்சி வர வேண்டும் என்று ஏங்க வேண்டும் என்பது அவர்களில் பலரது கருத்து. ஆனால், மாற்றத்தின்மீது நம்பிக்கை இல்லாதவர்களின் அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களின் மந்திரச் சொல்லான நோட்டாதான் டெல்லியில் இன்று நெ.1 தோல்வியாளர்!
இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆயிரம் பேருக்கு நான்கு அல்லது ஐந்து பேர்தான் நோட்டாவைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். அதாவது, 0.4% மக்கள்தான் நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். டெல்லி 2015 தேர்தலின் சுவிசேஷம் இதுதான்: மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. வெற்றி பெற்ற கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்றது என்பதைவிடப் பெரிய சேதி, நரேந்தர் பாயும் அமித் ஷாவும் தங்களுக்கு எதிரான இந்த அலையை உறுதியாக எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான். பாஜகவுக்கு 3 இடங்கள்! இந்தியத் தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி பிடித்த ஒரு கட்சி, ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளாகவே, அதுவும் அதன் நேரடிப் பார்வையில் உள்ள தலை நகரத்திலேயே, இப்படி மண்ணைக் கவ்வியது என்பது அசாதாரணமானது! காங்கிரஸுக்குத்தான் உண்மையில் இது தெம்பளித்திருக்கும். ஆனால், தேர்தல் முடிவு வர வர, டெல்லியில் காங்கிரஸ் ஆண்ட காலம் ஒளரங்கசீப் ஆண்ட காலத்துக்குச் சற்று முன்னே சென்றுவிட்டதைப் போல ஒரு தோற்றம் எழுந்தது. ‘ராகுல்! மை டியர் சன்!’
தன் கட்சியின் வெற்றிக்கு அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட பங்களிப்பைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. இந்த மனிதரைப் பாருங்கள்: 2012-ல் கட்சியைத் தொடங்கினார். 2013-ல் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70-ல் 28 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்துக்கு வந்தார். முதல்வர் பதவியை ஏற்க முரண்டுபிடித்தார். பின்பு, பதவியை ஏற்றார். தர்பாரைத் தெருக்களில் நடத்தினார். ‘சின்ன புள்ளத்தனமாக’ சட்டப்பேரவையை நடத்தினார்.
மின்பகிர்வு கம்பெனிகளைத் தணிக்கை செய்ய முயன்றார். மல்டி-பிராண்டு ரீடெய்லிங் ராட்சதர்களான வால்மார்ட்களின் கனவில் பெருச்சாளிகளை விட்டுப் பார்த்தார். அம்பானிகளை வம்புக்கிழுத்தார். ‘ஒருநாள்’ முதல்வர் போலச் செய்திகளை உருவாக்கினார். பிறகு சட்டென்று, இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை என்று ராஜினாமா செய்தார். பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் நாடெங்கும் பரவினார். டெல்லியில் படுதோல்வி அடைந்து சுயமாயை கலைந்தார். நாடெங்கும் கேலிக்கூத்தானார். ஆனால், அவரது இருமலும் நின்றபாடில்லை, அவரது வைராக்கியமும் குறைந்தபாடில்லை. உடனடியாகத் தவறுகளிலிருந்து பாடம் கற்றார். முழுத் தீர்ப்பு வேண்டும் என்றார். மீண்டும் மக்களை வாக்குச்சாவடிக்கு வரவைக்கும்படி செய்தார். தேர்தல் கூட்டங்களில் “இந்த சின்னப் பையனின் தவறை மன்னிக்க மாட்டீர்களா” என்று மக்கள் தாள்பணிந்தார். வைஃபையை இலவசமாகத் தருகிறேன் என்றார். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இணையத்துக்குச் செலவழிக்கிற மக்கள் வாழும் மாநகரத்தில், இது ரூபாய்க்கு மூன்று படி அரிசியைவிடப் பெரிய வாக்குறுதிதான்!
எப்படிப்பட்ட வெற்றி! டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு இடங்களைப் பெற்றதில்லை. இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெல்லவும் இல்லை. டெல்லியில் முதலில் ஆட்சியமைக்கும் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஆட்சி இது. பாஜக முதன்முதலாக ஒற்றை இலக்கத்துக்குச் சரிகிறது, காங்கிரஸுக்குச் சுழியம். தேர்தல் கணிப்பியல் நிபுணரும் ஆஆக தலை வர்களில் ஒருவருமான யோகேந்திர யாதவ், கடந்த வாரம் தன் கட்சி 50 இடங்களைப் பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியிருந்தார். அவரது சொந்தக் கணக்கையும் மீறி அவரது கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. “இது கிளாஸிக்கான தமிழ்நாடு வகைப்பட்ட தீர்ப்பு” என்று பின்பு தொலைக்காட்சியில் பேசும்போது அவர் கூறினார்.
இந்தத் தீர்ப்பு அதிசயமானது. இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியிலும் மோடி அலைதான் வீசியது. ஆனால், ஓராண்டுகூட ஆக வில்லை. மோடி படுதோல்வி அடைந்திருக்கிறார். இடையில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் தனது ஆட்சிக்கான ‘ஏற்புத்தேர்வாக’ காட்ட மோடி - அமித் ஷா இரட்டையர்கள் நினைத் திருந்தார்கள். ஆனால், டெல்லி அவர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டது. அவர்களே வலுக்கட்டாயமாக இந்தத் தேர்தலைத் தங்களுடைய மானப் பிரச்சினையாக நினைத்துக்கொண்டார்கள். கேஜ்ரிவாலைத் தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள். ஆனால், கேஜ்ரிவால் தனது வெற்றிக்கு, நிச்சயம் தன் முன்னாள் சகா கிரண் பேடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முகமாக இருந்த கிரண் பேடி, பாஜக முதல்வர் வேட்பாளரானது மக்களிடம் எடுபடவில்லை. காங்கிரஸுக்கு எதிராக அண்ணா ஹசாரேவையும் கிரண் பேடியையும் அர்விந்த் கேஜ்ரிவாலையும் களமிறக்கியது டெல்லியின் ஆர்.எஸ்.எஸ். சாணக்கியர்கள்தான் என்று கூறுவதுண்டு. அது உண்மையென்றால், இப்போது ஆப்பசைத்த குரங்காக உட்கார்ந்துகொண்டிருப்பதும் அவர்களாகத்தான் இருக்கும்.
கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை இது அவரது சகாப்தத்தின் தொடக்கம். கடந்த கால வெற்றி தோல்வி களின்போது நிலையாக நின்ற நண்பர்களையும் அலையாக வந்த சந்தர்ப்பவாதிகளையும் அவர் சந்தித் திருப்பார். 2013-ல் அவர் ஏற்கெனவே சரிந்திருந்த காங்கிரஸைத்தான் வீழ்த்தினார். இப்போது நிலைமை வேறு. ராட்சத பலம்பொருந்திய அடிபட்ட புலியான நரேந்திர மோடியைச் சமாளித்து, அவர் இனி ஆட்சி புரிய வேண்டியிருக்கும். பதற்றத்துக்குப் பலியாகக் கூடாது. ஆத்திரப்பட்டுவிட்டால் மற்றொரு வாய்ப்பைக் காலம் அவருக்குத் தராது.
இப்போதைக்கு, ஆஆக பெற்றிருக்கும் வெற்றி, நாம் கொண்டாட வேண்டிய வெற்றியே. நாடாளு மன்ற ஜனநாயகத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் ஒழித்துக்கொண்டிருக்கும் அல்லது பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் நரேந்திரமோடி - அமித் ஷா சாம்ராஜ்ய காலத்தில், மக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழக்காமலிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல!
- ஆழி செந்தில்நாதன், தொடர்புக்கு: zsenthil@gmail.com

********

ஊடகங்களுக்கு ஏதேனும் கிறுக்குப் பிடித்து விட்டதா என்று கேட்டார் நண்பர் ஒருவர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு குட்டித் தேர்தல். இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், டெல்லி வாக்காளர்களின் விகிதம் 1.5%-க்கும் குறைவு. அதுவும் இது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்த வெற்றி - தோல்விகளை எப்படி தேசிய அளவில் ஒப்பிட முடியும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் பின்னடைவாகக் கருத முடியும் என்பது அவருடைய வாதம்.
ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, டெல்லியின் வாக்குப் பங்களிப்பு சொற்பம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். டெல்லியின் பெரும்பான்மை அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. அதிகாரத்துக்கு மிக முக்கியமானது நிலம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால்கூட, அதற்கான நிலத்துக்கு டெல்லி அரசு, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டெல்லியைப் பொறுத்தவரை நிலம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அடுத்து, நிதி. இதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். அப்புறம், சட்டம் - ஒழுங்கு. டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரத்துக்கு உட்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலே முன்னர் ஒருமுறை சொன்னதுபோல, “டெல்லி முதல்வர் என்பது அதிகாரம் இல்லாத அரியணைதான்.”
கேள்வி என்னவென்றால், இவ்வளவு துச்சமான ஒரு பதவிக்கான தேர்தலை வசமாக்க பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு துடித்தார்கள் அல்லது ஏன் டெல்லி தேர்தல் அவர்களுக்கு அத்தனை முக்கியமானதாக இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி வெற்றிக்கான முக்கியத்துவம் இருக்கிறது.
இரு சுலோகங்கள்
நரேந்திர மோடி தொடர்பாக குஜராத்தில் புகழ்பெற்ற இரண்டு சுலோகங்கள் உண்டு.
1. மோடி எதையும் மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார். 2. மோடி, எதிரிகள் இருப்பதையே விரும்ப மாட்டார்.
குஜராத்தில் மோடி நிகழ்த்திய / வெளி உலகுக்கு அதிகம் தெரிய வராத முக்கியமான சாதனைகளில் ஒன்று, அங்கு வலுவான எதிர்க் கட்சி என்று ஒன்றையே இல்லாமலாக்கியது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க் கட்சித் தலைவர் இல்லாத நாடாளுமன்றத்தின் பிரதமராக அவர் இருக்கிறார் என்பதும் இங்கு பொருத்திப் பார்க்கக் கூடியது.
ஜனநாயகத்தில் எதிரிகளை இல்லாமலாக்கத் தேர்தலைவிடவும் சிறந்த வழி ஏது? மோடிக்கு இத்தனை நெருக்கமானவராக அமித் ஷா இருக்க இதுவும் முக்கியக் காரணம். “ஷா அமைச்சராக இருந்தபோது, அவர் வசம் 12 துறைகளை மோடி கொடுத்திருந்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஷா பதவியில் இல்லாதபோதும் அவர்வசம் இருந்த துறை தேர்தல்கள். அந்த அளவுக்குத் தேர்தல்களில் அவர் கில்லாடி; மோடிக்கு அவர் மீது நம்பிக்கை” என் கிறார்கள் குஜராத்திகள். ஷா தன் சொந்தத் தொகுதிகளை எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பது ஓர் உதாரணம். 1997-ல் தன்னுடைய முதல் தேர்தலில் சர்கேஜ்ஜில் நின்றபோதே 56% ஓட்டுகளை வாங்கியிருக்கிறார் ஷா. அதற்குப் பிந்தைய 4 தேர்தல்களிலுமே 65%-க்கும் குறையாத ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். கடைசியாக, 2012 தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுகள் 69%.
வெற்றிக்குத் தூரமாக இருப்பவர்கள் மோடிக்கு நெருக்கமாக முடியாது. ஷா இதை உணர்ந்தவர். அதனால் தான் ஒருமுறை சொன்னார்: “என்னால் செய்ய முடிந்ததைச் செய்தால் நான் சிறந்தவன். ஒருவேளை வேறு ஒருவர் அதைச் செய்தால், அவர் மோடியின் வலதுகரமாக இருக்கக் கூடியவர்.”
வெளியே பலரும் நினைக்கிறபடி, பாஜக தலைவர் பதவி ஷாவின் கடந்த காலச் செயல்பாடுகளுக்கான பரிசு மட்டும் அல்ல; மோடியின் எதிர்காலத் திட்டங்களுக்கான கட்டுமானத்துக்கான கருவி. நாட்டின் மிகப் பெரிய கட்சி என்பது அந்தக் கனவில் நமக்குத் தெரியும் நுனி; நாட்டின் ஒரே கட்சி என்பது நமக்குத் தெரியாத கடலடி பனிமலையாக இருக்கலாம்.
மோடியலை எனும் மந்திரம்
நாம் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால், டெல்லியின் வியூக சூட்சமத்தைப் பிடித்துவிடலாம். பொதுத்தேர்தல் முடிந்து 8 மாதங்கள் ஆகின்றன. இன்னும் மோடியலை எனும் வார்த்தை இளஞ்சூட்டோடு துடிப்பாக இருக்கிறதே, எப்படி?
அந்த வார்த்தை ஒரு மந்திரம். இந்த மாபெரும் கனவைச் சென்றடைவதற்கான மந்திரம். பொதுத்தேர்தல் வெற்றி என்பது பொதுத்தேர்தலோடு முடிந்த கதை அல்ல; அது இந்தியா முழுவதற்கும் தொடரக்கூடிய ஒரு தொடர்கதை எனும் பிம்பத்தை உயிரோடு வைப்பதற்கான மந்திரம். அந்த மந்திரம் உயிரோடு இருக்க, தோல்விகள் தவிர்க்கப்படுவது முக்கியம்; மாற்றுகள் கண் முன் தெரியாமலிருப்பது முக்கியம்; எதிரிகள் இல்லாமலிருப்பது முக்கியம்.
மாபெரும் கனவில் டெல்லி பொத்தல் போட்டுவிட்டது போலத்தான் தெரிகிறது. தேர்தல் முடிவு தொடர்பாக உமர் அப்துல்லா அடித்திருக்கும் ட்விட் இது: “இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் பாடம் ஏதாவது உண்டென்றால் அது, நீங்கள் கடுமையாகப் போராடினால் மோடியும் பாஜகவும் வெல்லப்பட முடியாதவர்கள் அல்ல; அவர்களுடைய தவறு களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான்.’’
மோடிக்கும் ஷாவுக்கும் டெல்லி அவ்வளவு முக்கியமானதாக இருக்கக் காரணம் எதுவோ, அதுவே அர்விந்தின் வெற்றியின் முக்கியத்துவத்துக்கான காரணமாக இருக்கிறது!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

************
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, தனிச்சிறப்பான, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் வெற்றியை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்திருக்கிறது. அரசியலில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சாமானியர்களின் பெருவிருப்பம் பிரதிபலித்திருக்கிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டும் பெருக்கித் தூர வீசப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் என்பது எளிதில் அணுகும் வகையிலும், தங்களுடைய பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு செயல்படும் விதத்திலும், வெளிப்படையாகச் செயல்படும் தன்மையிலும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையே இந்தத் தேர்தல் முடிவு அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தகவல் அறியும் உரிமைக்காகவும் ஊழலை எதிர்த்தும் அர்விந்த் கேஜ்ரிவால் நிகழ்த்திய போராட்டங்களைக் கேலிச்சித்திரங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பகடி செய்தனர். ஆனால், அந்தப் போராட்டங்கள்தான் அவரை முழுநேர அரசியல்வாதியாக உருவாக்கின. மக்களவைப் பொதுத் தேர்தலின்போது டெல்லியில் ஒரு தொகுதியிலும் ஆஆக வெற்றி பெறவில்லை. அப்படியிருந்தும் அர்விந்த் கேஜ்ரிவால் மனம் தளராமல் தொடர்ந்து மக்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவந்தார். மக்களிடமிருந்த அதிருப்தியை அறிந்து, அவர்களை வழக்கமான அரசியல் பாணியில் ஒன்று திரட்டினார்; அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்; தூய்மையான, மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசைத் தருவேன் என்று உறுதியளித்தார். மக்கள் அவரை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
தனக்கு ‘அஞ்சி நடக்கும்’முதல்வருக்கு டெல்லி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தின்போது கேட்டுக் கொண்டார். மக்களோ, மோடியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்டவரே தங்கள் தேர்வு என்று சொல்லிவிட்டனர். ஜனநாயகக் களத்தில் அஞ்சுவோருக்கு இடமே இல்லை என்பதை இதன் மூலம் நிரூபித்துவிட்டனர். கூடவே, மோடி - அமித் ஷா கூட்டுத் தலைமையின் கீழ், மக்கள் மீது ஒருதலைப்பட்சமாக முதல்வர் பதவிக்கான தலைவர்களும் வேட்பாளர்களும் திணிக்கப்படுவதை மக்கள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.
மக்களவைப் பொதுத் தேர்தலின்போது டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் வென்ற கட்சி பாஜக. தவிர, மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 60-ல் முதலிடத்தில் இருந்தது. வெறும் 8 மாதங்களுக்குள் எப்படி இப்படி ஒரு சரிவு ஏற்பட்டது என்று பாஜக தலைமை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்து சிறுமைக்கு ஆளாகியிருக்கிறது. வெகு விரைவாகவும் வலுவாகவும் அது தன்னைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.
அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நாம் வசந்த கால வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். மக்கள் எளிதில் அணுகும்படியான, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப அவர் நிர்வாகத்தை நடத்திச்செல்ல வேண்டும். அப்படியிருந்தால்தான் அது சாமானிய மக்களின் ஆட்சியாக இருக்கும்!

*********

மக்களவைப் பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைக் குவித்துவந்ததற்காக பாஜக கடந்த மாதம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு புளகாங்கித மடைந்தது. இவ்வெற்றிகளால் பெரும்பான்மையின வாதத்தை அக்கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் அச்சப்பட்டனர். ஆனால், அது ஏற்கெனவே அப்பணியைத் தொடங்கிவிட்டது. தான் ஏற்படுத்திய பிம்பத்தைக் கண்டு எல்லோரும் பிரமிப்பதை, ஒரு கொள்கை வகுப்பாளர் என்ற முறையில் அது வெகுவாக ரசித்தது. உலகத் தலைவர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அளித்த பரிந்துரைகள் அதற்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டின. இருந்தாலும், டெல்லியில் அரசியல் சூழல் இடம் மாறுகிறது என்று அதற்குத் தெரிந்தது.
ஆஆக தன்னைத்தானே கரைத்துக்கொண்டு காணாமல் போய்விடும் என்று அதன் விமர்சகர்கள் நினைத்ததற்கு மாறாக அது புதிய வலுவுடன் தன்னை மீண்டும் களத்தில் நிறுத்திக்கொண்டது. டெல்லி அரசியல் களத்தில் முதலிடத்தில் இப்போது அதுதான் நிற்கிறது. அரசியல் சதுரங்கத்தில் விற்பன்னர் என்று பெயர் வாங்கிய அமித் ஷாவை அது மிஞ்சிவிட்டது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அரசியல் களம் வற்றிவிடவில்லை
இந்திய அரசியலில் எல்லாவிதமான பரிசோதனைகளும் இப்போதிருக்கும் இந்தியக் கட்சிகளால் முழுக்கச் செய்துபார்க்கப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எல்லாம் பழமைக் கட்டுமானங்களைக் கொண்ட, புதிய சிந்தனை, புதிய செயல்முறை, புதிய பரிசோதனை முயற்சிகள் இல்லாத கட்சிகள். ஆஆக உருவானபோது அது புதிய வகையில் அர்த்தமுள்ள அரசியல் சிந்தனைகளை முன்வைத்தது. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகளைச் செய்து இயக்கங்களை நடத்தியதுடன் அரசியல் கட்சியாகவும் நிலைத்து நின்றது. அதனுடைய வெற்றி அபாரமானதாக இருந்ததால், அது திடீரென்று உற்சாக மிகுதியில் அப்போதைக்கு மட்டும் செயல்பட்ட துடுக்கான கட்சியா, மக்களுடைய மனங்களில் இடம்பிடித்த அற்புதத் திரைக்காவியமா என்று யாராலும் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு நாடு முழுக்க மக்களுடைய மனங்களில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, விமர்சகர்கள் எதிர்பார்த்தபடியே தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது.
அந்தக் கட்சியை உயிர்ப்புடன் தக்கவைத்தது அதன் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான். அவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டது. இந்தக் குழுக்கள் அரசியலின் அடியாழத்தில் உள்ள சில அம்சங்களைப் பிரதிபலித்தன. இப்போதைய வெறுக்கத்தக்க அரசியலின் வெற்றுக்கூச்சலுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த அமைதியை நோக்கிச் செல்லக்கூடிய வித்தியாசமான அரசியலைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்.
புதிய அரசியலுக்கான சாத்தியங்கள்
அரசியல் களத்தில் தான் நிகழ்த்திய முதல், திடீர் தாக்குதல் மூலம் ஒரு புதுவகை அரசியலுக்கு ஆஆக வித்திட்டது. அரசியலில் நடப்பதைக் கவனிக்க வேண்டும், பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அது முதலில் ஊட்டியது. அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெறுவது வேறு; அரசியலையே ஒரு கடமையாகக் கருதி அதில் ஈடுபடுவது வேறு. முதலாவது, சுய லாபத்துக்காக அரசியலில் ஆர்வம் காட்டுவது. அடுத்தது, பொது நன்மை கருதி ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.
ஆஆகவின் முக்கிய அம்சமே ஆர்வமுள்ள ஏராளமான இளைஞர்கள் அரசியலால் ஈர்க்கப்பட்டும் அதன் மூலம் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மைகளைக் கருதியும் அதில் பங்கேற்றதுதான். அடுத்ததாக, வழக்கமான அரசியல்வாதிகளின் மொழியில் அது பேசவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உள்ள உரிமைகள்குறித்தோ, சட்டப்பேரவையின் முன்னுரிமைகள் குறித்தோ அது பேசவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான புதிய மொழியை உருவாக்குவதுகுறித்துப் பேசியது. அரசியல்வாதிகளே மக்களுக்கான திட்டங்களை முன்மொழிந்து, பிறகு அதை முடித்துவைக்கும் பாணியை அது கையாளவில்லை. மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் என்னவென்று விவரித்து அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கும் புதிய அரசியல் நெறியை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறையைத்தான் அராஜகவாதம் என்று பலர் தவறாகப் புரிந்துகொண்டனர். இத்தகைய பாணி அரசியலில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவு என்பதால், அரசியல்வாதிகள் முதலிலேயே இதன் போக்கைக் கவனித்து, அராஜகவாதம் என்று கண்டித்தனர். அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு அதிகாரம் வழங்க ஆஆக விரும்பியது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆஆகவின் செயலை நக்ஸல்களின் செயலுடன் ஒப்பிட்டு அரசுக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்தார்.
ஒருவர் தவறுகள் செய்து அந்தத் தவறுகள் தொடர் வினைகளை ஏற்படுத்தி அது சோகமான நகைச்சுவையாக முடிவதுண்டு. ஆஆகவின் சிறப்பம்சமே நெருக்கடியான நேரங்களில், நுனிக்காலை ஊன்றியாவது தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுதான். தங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு டெல்லி மிகவும் அவசியமான இடம் என்பதால், முழு பதவிக் காலமும் இல்லாமல் ஆட்சியைவிட்டு ஓடியதற்காக அது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
பாஜக பிரச்சினைகளைத் தீர்க்காது
பாஜக தன்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுடைய பிரச்சினைகளை அப்படியொன்றும் மாயாஜாலம் செய்து தீர்த்துவிடவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதுவரை ஆஆகவின் சாதனை என்று குறிப்பிட எதுவும் இல்லாவிட்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே அதிகரித்தது. அந்தக் கட்சிக்கு மற்றொரு வாய்ப்பைத் தர வேண்டும் என்று டெல்லி மாநகர நடுத்தர மக்களும் ஏழைகளும் தீர்மானித்துவிட்டார்கள்.
காங்கிரஸ் அல்ல; உண்மையான எதிரி ஆஆக என்று பாஜக அடையாளம் கண்டுகொண்டது. அது அரசியலுக்கே ஒரு விறுவிறுப்பை ஊட்டியது. வலுவான கட்சியை, வலு குறைந்த கட்சி பலமாக எதிர்ப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு.
ஆஆகவின் அரசியல் நடவடிக்கையை பாஜக அப்படியே காப்பியடித்தது. முதல்வர் பதவி வேட்பாளருக்கு கட்சியைச் சாராத கிரண் பேடியைத் திடீரெனக் களம் இறக்கியது. சாவி கொடுத்த இயந்திரம்போல பேடி பேசினார், செயல்பட்டார். அவருடைய வருகையைக் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், தலைவர்கள் பலர் விரும்பவில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் மக்களுடைய ஆதரவு தந்த உற்சாகத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்தபோது, கிரண் பேடி உணர்ச்சி ஏதும் காட்டாமல் பொம்மைபோல் அமைதியாகச் செயல் பட்டார். ஒருவரிடம் பேசி, தன்னுடைய கருத்தை அவர் ஏற்பதை வலியுறுத்துவதைவிட, தடியால் நாலு தட்டுத் தட்டி வழிக்குக் கொண்டுவருவதே அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேஜ்ரிவாலுக்கு நிகரான ஆளுமையுள்ள தலைவர் டெல்லி பாஜகவில் இல்லை என்பதையே பேடியின் தேர்வு பறைசாற்றிக்கொண்டிருந்தது.
ஆஆகவின் எதிர்காலம்
ஆஆக மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துவிட்டது என்பது தெளிவு. இப்போதைய கேள்வி அந்தக் கட்சி எதிர்காலத்தில் எப்படிச் செயல்படும், அதன் உத்திகள் என்னவாக இருக்கும் என்பதுதான். ஒரு விமர்சகனாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் அக்கட்சி தொடர்ந்து புதுப்புது கொள்கைகளையும் வழிமுறைகளையும் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதைத்தான்.
ஆஆக தன்னுடைய கட்சிச் செயல்பாட்டைக் கண்காணித்து வழிநடத்த ஒரு ‘ஆம்புட்ஸ்மேன்’ தேவை என்று உணர்ந்து, ஒருவரை அப்பதவியில் நியமித்திருப்பது ஆக்கபூர்வமான சிந்தனை. ஊழல், போதைப்பொருள் நடமாட்டம் என்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளை மிகத் திறமையாக மக்கள் மனதில் ஆஆக பதியவைத்தது. கல்வி, தண்ணீர், மின்சாரம் போன்றவை பொதுமக்களுக்கான பண்டங்களாகவே திகழ வேண்டும் என்ற உணர்வை அது ஊட்டியது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அது வலியுறுத்தியது. இவையெல்லாம் இதுவரை எந்தப் பெரிய அரசியல் கட்சியாலும் செய்யப்படாதது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ளது.
மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைக்கூடப் பொருளாதார நிர்வாகிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் அவர்களுடைய நோக்கில் மட்டுமே பார்க்கின்றனர். ஆஆக இவற்றையும் மீட்டு அதற்கு மக்களுடைய நலன் சார்ந்த கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதைவிடச் சிக்கலானது, மக்களுடைய வாழ்வாதாரங்கள் கெடாமல் பாதுகாப்பது. ஒரு பிரச்சினையை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பார்க்கும் பார்வை, சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மனிதருடைய நிலையை உணர்ந்த பார்வையாக இருப்பதில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பக் கண்ணோட் டத்தில் பார்த்து, தொழில்நுட்பரீதியாகத் தீர்வுகண்டு, தொழில்நுட்பத்துடன் தீர்த்துவிடுவதால் பெரும்பான்மை மக்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுவிடாது.
அணுசக்திப் பயன்பாடு தொடர்பான விவாதங்களில் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையைத் தேசிய நிலைக்குக் கொண்டுசென்றதன் மூலம், ஒரு ஊரில் பேசப்படும் பிரச்சினை உள்ளூர்ப் பிரச்சினை அல்ல, அது இந்த சமுதாயத்தின், நாட்டின் பிரச்சினை என்பதை அது உலகுக்குக் காட்டியது. அணு மின் நிலையம் எங்கே அமைய வேண்டும் என்று சொல்லும் உரிமை, அந்தப் பகுதியில் மீன்பிடிக்கும் கடல் மீனவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று அது தெரிவித்தது. ஆஆகவின் ஆம்புட்ஸ்மேனாகச் செயல்படுகிறவர் ஓய்வுபெற்ற கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ். நாட்டின் (ராணுவ) பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு மக்களுடைய வாழ்வாதாரம், தொடர்ந்து செயல்படல், ஜனநாயகம் ஆகிய கோணங்களும் இருப்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவையெல்லாம் இப்படியே தொடர வேண்டும்.
கட்சி அரசியலைப் பிற கட்சிகளைப் போலக் கட்டி எழுப்புவது ஆஆகவுக்கு முக்கியமில்லை. டெல்லி மாநகரைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். டெல்லி மாநகர நிர்வாகம் நகருக்கு வேலைதேடி வரும் புதிய தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் தேவைகளை அறிந்து செயல்பட வழிவகுக்க வேண்டும். டெல்லி என்பது எல்லோருக்குமான நகரம் என்ற உணர்வு அரசு நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அரசியலுக்குப் புதுவிளக்கம் தருவதிலும் ஜனநாயகத்துக்கு புதிய வடிவத்தைத் தருவதிலும்தான் ஆஆகவின் எதிர்காலம் இருக்கிறது!
- ஷிவ். விஸ்வநாதன்
(அரசு, பொதுக் கொள்கை தொடர்பான ஜிண்டால் உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)
© 'தி இந்து' (ஆங்கிலம்) தமிழில்: சாரி
***************
ஆஆகவின் முகம் அர்விந்த் கெஜ்ரிவால் என்றால், அதன் மூளை யோகேந்திர யாதவ். கட்சியின் வியூக வகுப்பாளரும் தேசியத் தலைமை ஊடகவியல் தொடர்பாளருமான யாதவிடம் தீர்ப்பு நாளில் பேசினேன்.
இப்படியொரு அசாதாரணமான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?
மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி, எங்களுக்கு 51 இடங்கள் கிடைக்கக்கூடும். அது 57 வரை போகக்கூடும் என்று கூறினோம். மேலும், அதிக வாக்குகளைப் பெற நாங்கள் பிரச்சாரம் செய்வதாகப் பலர் நினைத்தனர். உண்மையில், எங்கள் கட்சியை நாங்களே குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். 57 என்று சொன்னோம், 67-ல் வெற்றி பெற்றிருக்கிறோம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமான வெற்றி. வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. முன்பு தமிழ்நாட்டில் அதிமுகவும் சிக்கிமில் சிக்கிம் சங்ராம் பரிஷத்தும் இப்படி அமோக வெற்றி பெற்றுள்ளன.
வாக்கு சதவீதத்தின்படி?
சிக்கிம் சங்ராம் பரிஷத் இதில் சாதனை படைத்திருக்கிறது. இல்லையென்றால், ஆஆகவின் 54% மிக உயர் அளவாக இருந்திருக்கும்.
ஒரு வகையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே டெல்லி பிரதேச அரசியலில் நீடிப்பது கடினம் என்றாகிவிட்டதல்லவா?
காங்கிரஸ் கட்சியைப் பற்றி வேண்டுமானால் இப்படிச் சொல்வது பொருத்தமாக இருக்கலாம். தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களைப் போல டெல்லியிலும் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்து விட்டது. நாட்டின் பல மாநிலங்களில் அது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பாஜக தோற்றிருக்கிறது. ஆனால், துடைக்கப்பட்டுவிட்டது என்று கருத இடமில்லை. அது அமைப்புரீதியாக வலுவானது, மீண்டும் எழுந்து நிற்கும். பாஜக என்ற பெரும் தேர், முட்டுக்கட்டை போட்டு நிறுத்தப் பட்டிருக்கிறது. இது பல்வேறு வாய்ப்புகளைப் பலருக்கும் அளித்திருக்கிறது. பாஜகவுக்குள்ளும் செய்தி ஊடகங்களுக் குள்ளும் ஆத்மபரிசோதனை செய்துகொள்ளலாம். கர் வாப்ஸி, கோட்சேவுக்குச் சிலை போன்ற விவகாரங்களால் எரிச்சல் அடைந்துதான் மக்கள் அதற்கு வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கின்றனர். இது அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. இந்தத் தீர்ப்பு மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானதாகவும் அமைந்திருக்கிறது; பொருளாதாரரீதியாகவும் தாங்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்கிற மக்களின் உணர்வையும் உணர்த்துகிறது.
இந்த வெற்றி ஆஆக மீது மிகப் பெரிய பொறுப்பைச் சுமத்தியிருக்கிறது?
ஆமாம், ஒரு வகையில் மக்களுடைய எதிர்பார்ப்புகளும் நியாயமான ஆசைகளும் இதில் இருக்கின்றன. இதுதான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். தீர்ப்புக்குத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதுதான் அடுத்த வேலை. இதைத்தான் அர்விந்த் கேஜ்ரிவாலும் தெரிவித்துள்ளார்.
உங்களுக்குச் சாதகமாக இருந்தது எது?
மக்களவைப் பொதுத் தேர்தல் முடிந்த உடனேயே டெல்லி சட்டப் பேரவைக்குத் தேர்தலை நடத்தவில்லை. இது கட்சியை வலுப்படுத்த கேஜ்ரிவாலுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. பாஜகவின் ஸ்தாபன பலம் மிகப் பெரியது என்று எங்களுக்குத் தெரியும். அதற்கு இணையாக வலுப்பெற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு உழைத்தோம். ‘டெல்லி டயலாக்’என்ற பெயரில் வாக்காளர்களுடன் நாங்கள் தொடர்ந்து நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டோம். ‘நீங்கள் துணிச்சல் மிக்கவர்கள், ஊழலற்றவர்கள். ஆனால், நிர்வாகம் செய்ய உங்களால் முடியுமா?’ என்று மக்கள் எங்களைக் கேட்டார்கள். குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய தேவைகள் தொடர்பாக அவர்களுடைய கேள்விகளுக்கு நாங்கள் பதிலைச் சொன்னோம்.
இந்தத் தீர்ப்பு மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசின் மீதான கருத்தறியும் வாக்கெடுப்பா, 49 நாட்கள் ஆட்சியில் இருந்த ஆஆக அரசின் மீதான கருத்தறியும் வாக்கெடுப்பா?
நிச்சயம் எங்களுடைய 49 நாள் ஆட்சியின் மீதான வாக்கெடுப்புதான். செய்தி ஊடகங்களும் மாற்றுக் கட்சிகளும் நம்ப மறுத்தாலும் நாங்கள் நல்ல ஆட்சி நடத்தியதாகவே மக்கள் கருதினார்கள். பாஜக ஆட்சியின் சில அனுபவங்கள், எங்களுடைய 49 நாள் ஆட்சியை நினைவுகூர அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. மாநிலங்களுக்கு நடக்கும் தேர்தலை அதுவும் டெல்லி போன்ற சிறிய பிரதேசத்துக்கு நடைபெறும் தேர்தலை மத்திய அரசின் செயல்பாடு மீதான கருத்தறியும் வாக்கெடுப்பாகக் கருதத் தேவையில்லை. ஆனால், பிரதமர் இந்தத் தேர்தலை அப்படி மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். டெல்லியில் நடப்பது தேசத்தின் பிரதிபலிப்பு என்றார். இந்தத் தேர்தலில் தன்னுடைய சொந்த கவுரவத்தைப் புகுத்தினார். கேஜ்ரிவால் மீது வசைபாடினார். ஒரு பிரதமருக்கு இப்படிப்பட்ட பேச்சு அழகல்ல. அது அந்தப் பதவியின் மாண்பையே குறைத்து விட்டது. மத்திய அரசின் மீது கருத்தறியும் வாக்கெடுப்பாக இருந்திருக்க முடியாத இதை, அப்படிப்பட்ட ஒன்றாக அவர் ஓரளவுக்கு மாற்றிவிட்டார். இப்போதும்கூட அவர் செல்வாக்கிழந்துவிட்ட பிரதமர் என்று நான் கூற மாட்டேன். மக்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை, தான் விரும்பும் திசையில் - காலி நாற்காலிக்குக்கூட - திருப்பும் ஆற்றலை அவர் இழந்துவிட்டார் என்றே கூறுவேன்.
கிரண் பேடியை முதல்வர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அவர்களுடைய தேர்வு அவர்கள் முகத்திலேயே வந்து தாக்கிவிட்டது. பாஜக தோற்றதற்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நான் கருதவில்லை. இந்தத் தேர்தலில் தாங்கள் பின்தங்குகிறோம் என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான், அவர்கள் கிரண் பேடியைத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்தல் முடிவைத் தங்களுக்குச் சாதகமாக அவரால் திருப்பி விட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அவருடைய தேர்வு, முடிவை எங்கள் பக்கம் மேலும் சாதகமாகத் திருப்பி விட்டுவிட்டது.
நாட்டில் உங்களுடைய கட்சியை மேலும் விரிவுபடுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
தேசிய நோக்கம் கொண்ட கட்சியாக எங்கள் கட்சியை உருவாக்குவதே எங்கள் லட்சியம். இது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான கட்சியல்ல. கொள்கை சார்ந்த மாற்று அரசியலை மக்களுக்கு அளிக்கும் சோதனை முயற்சிதான் எங்களுடைய கட்சி. நாங்கள் எங்கே ஆரம்பித்தோம், எங்கே போக விரும்பு கிறோம் என்பதை அமர்ந்து பேசி, வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு கவனமுடன் திட்டமிட வேண்டும். இப்போதைக்கு நாங்கள் அப்படிப்பட்ட உத்தி எதையும் வகுக்கவில்லை.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் நீங்கள் கூட்டணி அமைக்கப்போவதாக வதந்தி நிலவுகிறதே?
அது எப்படிச் சாத்தியம் அல்லது அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் ஏதோ காங்கிரஸ் எதிர்ப்பு அல்லது பாஜக எதிர்ப்புக் கட்சி அல்ல. இப்போதுள்ள அரசியல் கட்சிகளையே கூடாது என்கிறோம். அதில், மாநிலங்களில் ஆட்சியில் இருந்த / இருக்கும் எல்லாக் கட்சிகளுமே அடக்கம். நாளை நாங்கள் லாலு பிரசாத்துடன் சேர்ந்து மேடை ஏறினால், நேர்மையான அரசியல் நடத்துவோம் என்று சொல்ல எங்களுக்கு என்ன தகுதி இருக்கும்?
உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற காலக்கெடு எதையும் நீங்கள் நிர்ணயித்துக்கொள்ளவில்லையே?
மக்கள் எதையும் உடனே செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்ப தில்லை. நிச்சயம் செய்ய வேண்டும் என்றுதான் எதிர் பார்க்கி றார்கள் என்பதை எங்களுடைய அனுபவத்திலிருந்து உணர்ந் திருக்கிறோம். நாம் நினைப்பதைவிட மக்கள் பொறுமைசாலிகள்.
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து இல்லாமல், நீங்கள் விரும்புகிற வகையில் நிர்வாகம் செய்ய முடியுமா?
இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடு. மத்திய அரசு இந்த உணர்வோடு செயல்படும் என்ற உணர்வோடு நாம் செயல்பட ஆரம்பிப்போம்!
- © ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி
************
ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றி டெல்லி மக்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்து முகங்களில் புன்னகையை வரவழைத்துள்ளது. நம்முடைய மகிழ்ச்சிகளுக்கெல்லாம் காரணங்கள் வெவ்வேறு; இடதுசாரிகளும் சமத்துவ - சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படக் காரணம், மதச்சார்பற்ற சக்திகளுக்குத் தேவைப்படும் ஆற்றலை இந்த வெற்றி அளித்திருக்கிறது. மத்தியவாத அரசியல் சார்புள்ளவர்களுக்கு, பிரதமர் வசிக்கும் சொந்த வீடான டெல்லியிலேயே பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி.
பாஜகவிலேயே முக்கியத்துவம் இழந்த கட்சித் தலைவர்களும் இந்தத் தோல்வி இப்போதைய தலைவர் களின் கண்களைத் திறக்க உதவும் எச்சரிக்கை என்ற அளவில் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். எல்லாவற்றை யும்விட ஆஆக வெற்றியின் முக்கியமான அம்சம்; நாட்டு மக்களின் ஜனநாயக உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டி யிருக்கிறது. அரசியல் சாதனைகளுக்காக அல்ல, இந்த ஒரு ஆக்கபூர்வமான அம்சத்துக்காகவே நானும் இதை வரவேற்கிறேன்.
ஆஆக ஆதரவாளன் அல்ல
முதலிலேயே ஒரு விஷயத்தைக் கூறிவிடுகிறேன். நான் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளன் அல்ல - அவருடைய ஆலோசகர்களில் சிலர் மதிக்கத் தக்கவர்கள் என்றாலும்கூட. அவருடைய எடுத்தேன் - கவிழ்த்தேன் போக்கு, வழக்கத்துக்கு மாறான அறிவிப்புகள், சமூகரீதியாக வலதுசாரிக் கொள்கைகளில் சார்பு, ஒரு தலைவராக சமூக - அரசியல் பார்வை இல்லாத குணம் போன்றவை எனக்குப் பிடிக்காது. ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் என்பது மட்டுமே அவரிடம் உள்ள சாதகமான அம்சம்.
இவ்வளவு தயக்கங்கள் இருந்தபோதிலும் 2013-ல் அவர் டெல்லியில் முதலமைச்சராகப் பதவியேற்றபோது மகிழ்ச்சி அடைந்தேன். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தார். ஒரு சாதாரண மனிதர், விசுவாசமான தொண்டர்களின் உதவியோடு முதலமைச்சர் பதவியில் போய் அமர்வது சாதாரணமாக நடக்கக்கூடிய செயலா? சமூகத்திலோ அரசியலிலோ எது நடந்தாலும் - நமக்கென்ன என்று - வேடிக்கை பார்க்கும் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிப்படையான, நேர்மையான அரசியலும் வலுவானதுதான் என்று நாட்டுக்கே நிரூபித்துக் காட்டினார். நாம் கண்டிக்கும் பதவி, பணம், அதிகாரம் அனைத்தும் கொண்ட ஒருவரை முதல்வர் பதவியிலிருந்தே தூக்கி எறிந்தார். அரசியல் தலைவர்களின் வாரிசுகள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற மாயையை உடைத்து, சாதாரண மக்களும் ஆட்சிக்கு வர முடியும் என்று புதிய மாற்று அரசியலை அடையாளம் காட்டினார்.
நம்முடைய மாநிலத்திலும் அரசியல் கலாச்சாரமும் காட்சிகளும் இனி மாறாதா என்று துணிச்சலுடன் நம்பத் தொடங்கினோம். அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடைபாதையில் வடை சுடும் நபரிலிருந்து நாட்டில் சமூக அந்தஸ்து பெற்ற தொழிலதிபர் வரை பலரும், நம் நாட்டில் மீண்டும் ஜனநாயகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று உணர்ந்தார்கள். அதுவரை தேசிய அரசியலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற ஜாம்பவான் களுக்கும் மாநிலங்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி போன்றவர்களுக்கும்தான் வாய்ப்பு என்று முடிவு கட்டியிருந்தோம்.
சாதி, மத அடிப்படையில் அல்ல
கடைசியாக ஒரு தலைவரும் அவருடைய கட்சியும் நமக்குப் புதியதொரு மாற்று வாய்ப்பையும் வழியையும் காட்டினர். இருண்ட குகையின் எதிர் முனையில் வெளிச்சம் - மங்கலாக இருந்தாலும் - தோன்றியது. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் நிதீஷ் குமார், மாயாவதி போன்று பலர் உள்ளனர். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் வித்தியாசமானவர். அந்த வித்தியாசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதி அல்லது மத அடை யாளத்தைச் சொல்லிக்கொண்டு கேஜ்ரிவால் அரசியல் வெற்றியைப் பெறவில்லை. ஊழலுக்கு எதிராக அனைத்து இந்தியர்கள் உள்ளத்திலும் கனிந்துகொண்டிருக்கும் கோபத்தை விசிறிவிட்டு ஆதரவைப் பெருக்கிக்கொண்டார்.
பிறகு வீழ்ச்சி ஆரம்பித்தது. ஆட்சியில் 49 நாட்கள் இருந்தபோது அரசு நிர்வாக இயந்திரத்தைக் கையாள முடியாமல் அசௌகரியமாக இருந்ததைப்போலத் தெரிந்தது. இதனாலேயே பதவியிலிருந்து விலகியது ஆஆக. ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் கேலிகளும் கிண்டல்களும் உலவத் தொடங்கின. இந்த கேலி கிண்டல்களுக்கு அப்பால், அவருடைய பதவி விலகல் டெல்லிக்கு அப்பாலிருந்த அவருடைய ஆதரவாளர்களை வெகுவாகப் பாதித்தது. ஆஆக அரசை, மாற்றத்துக்கான முன்மாதிரியாகப் பலர் பார்த்தார்கள், ஊழலற்ற எதிர்காலத்துக்கு அச்சாரம் என்று நினைத்தார்கள். அந்தக் கனவு கலைந்துவிட்டது. அதற்குப் பிறகு நடந்தது அதைவிட மோசமானது. மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆஆக 432 தொகுதிகளில் போட்டியிட்டது. சாமானிய மனிதர்களை மீட்க வந்த ரட்சகராகவே அர்விந்த் கேஜ்ரிவால் காட்டிக்கொண்டார். நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோரைப் போல அவரையும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகச் செய்தி ஊடகங்கள் பார்த்தன. ஆஆகவுக்கு ஆணவம் தலைக்கேறியது, தன்னம்பிக்கை பொங்கி வழிந்தது, தன்னை தேசியக் கட்சியாகவே நினைக்கத் தொடங்கியது. ஆனால், நீர்க்குமிழி போல அந்த ஆர்வம் வெடித்துவிட்டது. தேசிய அரங்கிலிருந்து ஆஆக துடைத்து எறியப்பட்டது. பஞ்சாபில் மட்டும் அந்தக் கட்சியின் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சியின் மையக் களமான டெல்லியிலிருந்து ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
தோல்வி யாருடையது?
பொறுப்புகளைக் கைவிட்டதன் மூலம் அர்விந்த் கேஜ்ரிவாலும் அவருடைய சகாக்களும் பலருடைய கனவுகளை நொறுக்கிவிட்டனர். ஆம் ஆத்மியின் தோல்வி என்பது ஆஆகவினுடையதோ, தனி நபருடையதோ அல்ல - இந்திய மக்களுக்கு அவர்கள் செய்யத் தவறிய கடமைதான் என்று நினைத்தேன். அவர்களால் மாற்று அரசை, மாற்று நிர்வாகத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தனர். அதைச் செய்ய முடியாமல் அவர்கள் உள்ளுக்குள்ளேயே நொறுங்கியதன் மூலம் சாதி, மதச் சார்பு இல்லாமல் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பையும் பாழாக்கிவிட்டார்கள் என்று கருதினேன். மக்கள் மீண்டும் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள், தொழில்முறை அரசியல் வாதிகளை விட்டால், தங்களுக்கு வேறு கதியில்லை என்று. பழைய கட்சிகளின் முகங்களிலும், “அப்போதே நாங்கள் சொல்லவில்லை” என்ற கேலி தெரிந்தது.
இப்போது, டெல்லி விரும்பியது - விரும்புகிறது ஆஆக வெற்றிபெற வேண்டுமென்று; கேஜ்ரிவாலின் கூட்டணியில் புதிய வழியை டெல்லி கண்டது. அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்திருப்பதன் மூலம் புதிய துணிச்சலான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டெல்லி வழங்கியிருக்கிறது. கேஜ்ரிவால் லட்சியவாதி அல்ல; ஆனால், உண்மையான மனிதர் என்று அடையாளம் கண்டது டெல்லி. அதன் விளைவு தேர்தல் களமே வியத்தகு மாற்றத்தைக் கண்டது. நம்முடைய கண்களிலிருந்து மறைந்துகொண்டிருந்த ஒளிப்பொறியை மீட்டு மீண்டும் பிரகாசிக்கச் செய்யும் வகையில் டெல்லிவாசிகள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
டெல்லிக்கு மட்டுமல்ல
இது டெல்லிக்கு மட்டுமல்ல, நமக்கும் நாம் எப்படி அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் பார்க்கிறோம் என்பதையும் பற்றியது. பெரிய கட்சிகளைக் காணாமல் அடிப்பதைப் பற்றியதல்ல. நாட்டுக்கு முக்கியமான ஒரு கடமையை டெல்லிவாசிகள் நிறை வேற்றியிருக்கின்றனர். கட்சிகளுடைய செயல்பாட்டில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இருந்தால், அவர்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் அதை மன்னித்து ஏற்றுக்கொண்டுவிடலாம் என்று உணர்த்தியிருக்கிறார்கள். மாற்றங்களில் நம்பிக்கை வேண்டும் என்பது அடுத்த அம்சம். மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்திருந்தாலும் அவர்கள் செய்த நன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பது அடுத்தது. மிகப் பிரம்மாண்டமான பிரச்சாரம், அடுத்தடுத்த விளம்பரம் என்றெல்லாம் களத்தில் இடம்பெற்றாலும், தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட அக்கறையுள்ள அரசியல் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
நேர்மையான, வெளிப்படையான அரசியல் என்ற லட்சியத்தைப் பற்றவைத்துவிட்டு அணைத்த ஆஆகவுக்கு வாக்களித்து, அந்தச் சுடரை மீண்டும் டெல்லி மக்கள் தூண்டி யிருக்கிறார்கள். லட்சியவாதம் மீண்டும் மையத்துக்கு வந்திருக்கிறது அது நிலைக்குமா, மறையுமா என்பது கேஜ்ரிவால் அரசின் வெற்றியைப் பொருத்திருக்கிறது. அவருக்கு இப்போது எதிர்க் கட்சியே இல்லை. எனவே, அவரே அவருக்கு எதிர்க் கட்சிபோலச் செயல்பட்டுக்கொள்ள வேண்டும். இது சாதாரண வேலையல்ல, டெல்லி மக்களுக்காக அல்ல; இந்திய மக்களுக்காக இந்தக் கடமையை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அப்படி நடக்குமா? காலம் மட்டும்தான் பதில் சொல்ல முடியும், அதுவரையில் - நன்றி டெல்லி!
- டி.எம். கிருஷ்ணா, இசைக் கலைஞர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: tm.krishna@gmail.com

தமிழில்: சாரி