புதன், 11 பிப்ரவரி, 2015

AAP

மக்களவைப் பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைக் குவித்துவந்ததற்காக பாஜக கடந்த மாதம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு புளகாங்கித மடைந்தது. இவ்வெற்றிகளால் பெரும்பான்மையின வாதத்தை அக்கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் அச்சப்பட்டனர். ஆனால், அது ஏற்கெனவே அப்பணியைத் தொடங்கிவிட்டது. தான் ஏற்படுத்திய பிம்பத்தைக் கண்டு எல்லோரும் பிரமிப்பதை, ஒரு கொள்கை வகுப்பாளர் என்ற முறையில் அது வெகுவாக ரசித்தது. உலகத் தலைவர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அளித்த பரிந்துரைகள் அதற்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டின. இருந்தாலும், டெல்லியில் அரசியல் சூழல் இடம் மாறுகிறது என்று அதற்குத் தெரிந்தது.
ஆஆக தன்னைத்தானே கரைத்துக்கொண்டு காணாமல் போய்விடும் என்று அதன் விமர்சகர்கள் நினைத்ததற்கு மாறாக அது புதிய வலுவுடன் தன்னை மீண்டும் களத்தில் நிறுத்திக்கொண்டது. டெல்லி அரசியல் களத்தில் முதலிடத்தில் இப்போது அதுதான் நிற்கிறது. அரசியல் சதுரங்கத்தில் விற்பன்னர் என்று பெயர் வாங்கிய அமித் ஷாவை அது மிஞ்சிவிட்டது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அரசியல் களம் வற்றிவிடவில்லை
இந்திய அரசியலில் எல்லாவிதமான பரிசோதனைகளும் இப்போதிருக்கும் இந்தியக் கட்சிகளால் முழுக்கச் செய்துபார்க்கப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எல்லாம் பழமைக் கட்டுமானங்களைக் கொண்ட, புதிய சிந்தனை, புதிய செயல்முறை, புதிய பரிசோதனை முயற்சிகள் இல்லாத கட்சிகள். ஆஆக உருவானபோது அது புதிய வகையில் அர்த்தமுள்ள அரசியல் சிந்தனைகளை முன்வைத்தது. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகளைச் செய்து இயக்கங்களை நடத்தியதுடன் அரசியல் கட்சியாகவும் நிலைத்து நின்றது. அதனுடைய வெற்றி அபாரமானதாக இருந்ததால், அது திடீரென்று உற்சாக மிகுதியில் அப்போதைக்கு மட்டும் செயல்பட்ட துடுக்கான கட்சியா, மக்களுடைய மனங்களில் இடம்பிடித்த அற்புதத் திரைக்காவியமா என்று யாராலும் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு நாடு முழுக்க மக்களுடைய மனங்களில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, விமர்சகர்கள் எதிர்பார்த்தபடியே தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது.
அந்தக் கட்சியை உயிர்ப்புடன் தக்கவைத்தது அதன் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான். அவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டது. இந்தக் குழுக்கள் அரசியலின் அடியாழத்தில் உள்ள சில அம்சங்களைப் பிரதிபலித்தன. இப்போதைய வெறுக்கத்தக்க அரசியலின் வெற்றுக்கூச்சலுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த அமைதியை நோக்கிச் செல்லக்கூடிய வித்தியாசமான அரசியலைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்.
புதிய அரசியலுக்கான சாத்தியங்கள்
அரசியல் களத்தில் தான் நிகழ்த்திய முதல், திடீர் தாக்குதல் மூலம் ஒரு புதுவகை அரசியலுக்கு ஆஆக வித்திட்டது. அரசியலில் நடப்பதைக் கவனிக்க வேண்டும், பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அது முதலில் ஊட்டியது. அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெறுவது வேறு; அரசியலையே ஒரு கடமையாகக் கருதி அதில் ஈடுபடுவது வேறு. முதலாவது, சுய லாபத்துக்காக அரசியலில் ஆர்வம் காட்டுவது. அடுத்தது, பொது நன்மை கருதி ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.
ஆஆகவின் முக்கிய அம்சமே ஆர்வமுள்ள ஏராளமான இளைஞர்கள் அரசியலால் ஈர்க்கப்பட்டும் அதன் மூலம் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மைகளைக் கருதியும் அதில் பங்கேற்றதுதான். அடுத்ததாக, வழக்கமான அரசியல்வாதிகளின் மொழியில் அது பேசவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உள்ள உரிமைகள்குறித்தோ, சட்டப்பேரவையின் முன்னுரிமைகள் குறித்தோ அது பேசவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான புதிய மொழியை உருவாக்குவதுகுறித்துப் பேசியது. அரசியல்வாதிகளே மக்களுக்கான திட்டங்களை முன்மொழிந்து, பிறகு அதை முடித்துவைக்கும் பாணியை அது கையாளவில்லை. மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் என்னவென்று விவரித்து அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கும் புதிய அரசியல் நெறியை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறையைத்தான் அராஜகவாதம் என்று பலர் தவறாகப் புரிந்துகொண்டனர். இத்தகைய பாணி அரசியலில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவு என்பதால், அரசியல்வாதிகள் முதலிலேயே இதன் போக்கைக் கவனித்து, அராஜகவாதம் என்று கண்டித்தனர். அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு அதிகாரம் வழங்க ஆஆக விரும்பியது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆஆகவின் செயலை நக்ஸல்களின் செயலுடன் ஒப்பிட்டு அரசுக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்தார்.
ஒருவர் தவறுகள் செய்து அந்தத் தவறுகள் தொடர் வினைகளை ஏற்படுத்தி அது சோகமான நகைச்சுவையாக முடிவதுண்டு. ஆஆகவின் சிறப்பம்சமே நெருக்கடியான நேரங்களில், நுனிக்காலை ஊன்றியாவது தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுதான். தங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு டெல்லி மிகவும் அவசியமான இடம் என்பதால், முழு பதவிக் காலமும் இல்லாமல் ஆட்சியைவிட்டு ஓடியதற்காக அது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
பாஜக பிரச்சினைகளைத் தீர்க்காது
பாஜக தன்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுடைய பிரச்சினைகளை அப்படியொன்றும் மாயாஜாலம் செய்து தீர்த்துவிடவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதுவரை ஆஆகவின் சாதனை என்று குறிப்பிட எதுவும் இல்லாவிட்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே அதிகரித்தது. அந்தக் கட்சிக்கு மற்றொரு வாய்ப்பைத் தர வேண்டும் என்று டெல்லி மாநகர நடுத்தர மக்களும் ஏழைகளும் தீர்மானித்துவிட்டார்கள்.
காங்கிரஸ் அல்ல; உண்மையான எதிரி ஆஆக என்று பாஜக அடையாளம் கண்டுகொண்டது. அது அரசியலுக்கே ஒரு விறுவிறுப்பை ஊட்டியது. வலுவான கட்சியை, வலு குறைந்த கட்சி பலமாக எதிர்ப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு.
ஆஆகவின் அரசியல் நடவடிக்கையை பாஜக அப்படியே காப்பியடித்தது. முதல்வர் பதவி வேட்பாளருக்கு கட்சியைச் சாராத கிரண் பேடியைத் திடீரெனக் களம் இறக்கியது. சாவி கொடுத்த இயந்திரம்போல பேடி பேசினார், செயல்பட்டார். அவருடைய வருகையைக் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், தலைவர்கள் பலர் விரும்பவில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் மக்களுடைய ஆதரவு தந்த உற்சாகத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்தபோது, கிரண் பேடி உணர்ச்சி ஏதும் காட்டாமல் பொம்மைபோல் அமைதியாகச் செயல் பட்டார். ஒருவரிடம் பேசி, தன்னுடைய கருத்தை அவர் ஏற்பதை வலியுறுத்துவதைவிட, தடியால் நாலு தட்டுத் தட்டி வழிக்குக் கொண்டுவருவதே அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேஜ்ரிவாலுக்கு நிகரான ஆளுமையுள்ள தலைவர் டெல்லி பாஜகவில் இல்லை என்பதையே பேடியின் தேர்வு பறைசாற்றிக்கொண்டிருந்தது.
ஆஆகவின் எதிர்காலம்
ஆஆக மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துவிட்டது என்பது தெளிவு. இப்போதைய கேள்வி அந்தக் கட்சி எதிர்காலத்தில் எப்படிச் செயல்படும், அதன் உத்திகள் என்னவாக இருக்கும் என்பதுதான். ஒரு விமர்சகனாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் அக்கட்சி தொடர்ந்து புதுப்புது கொள்கைகளையும் வழிமுறைகளையும் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதைத்தான்.
ஆஆக தன்னுடைய கட்சிச் செயல்பாட்டைக் கண்காணித்து வழிநடத்த ஒரு ‘ஆம்புட்ஸ்மேன்’ தேவை என்று உணர்ந்து, ஒருவரை அப்பதவியில் நியமித்திருப்பது ஆக்கபூர்வமான சிந்தனை. ஊழல், போதைப்பொருள் நடமாட்டம் என்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளை மிகத் திறமையாக மக்கள் மனதில் ஆஆக பதியவைத்தது. கல்வி, தண்ணீர், மின்சாரம் போன்றவை பொதுமக்களுக்கான பண்டங்களாகவே திகழ வேண்டும் என்ற உணர்வை அது ஊட்டியது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அது வலியுறுத்தியது. இவையெல்லாம் இதுவரை எந்தப் பெரிய அரசியல் கட்சியாலும் செய்யப்படாதது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ளது.
மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைக்கூடப் பொருளாதார நிர்வாகிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் அவர்களுடைய நோக்கில் மட்டுமே பார்க்கின்றனர். ஆஆக இவற்றையும் மீட்டு அதற்கு மக்களுடைய நலன் சார்ந்த கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதைவிடச் சிக்கலானது, மக்களுடைய வாழ்வாதாரங்கள் கெடாமல் பாதுகாப்பது. ஒரு பிரச்சினையை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பார்க்கும் பார்வை, சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மனிதருடைய நிலையை உணர்ந்த பார்வையாக இருப்பதில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பக் கண்ணோட் டத்தில் பார்த்து, தொழில்நுட்பரீதியாகத் தீர்வுகண்டு, தொழில்நுட்பத்துடன் தீர்த்துவிடுவதால் பெரும்பான்மை மக்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுவிடாது.
அணுசக்திப் பயன்பாடு தொடர்பான விவாதங்களில் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையைத் தேசிய நிலைக்குக் கொண்டுசென்றதன் மூலம், ஒரு ஊரில் பேசப்படும் பிரச்சினை உள்ளூர்ப் பிரச்சினை அல்ல, அது இந்த சமுதாயத்தின், நாட்டின் பிரச்சினை என்பதை அது உலகுக்குக் காட்டியது. அணு மின் நிலையம் எங்கே அமைய வேண்டும் என்று சொல்லும் உரிமை, அந்தப் பகுதியில் மீன்பிடிக்கும் கடல் மீனவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று அது தெரிவித்தது. ஆஆகவின் ஆம்புட்ஸ்மேனாகச் செயல்படுகிறவர் ஓய்வுபெற்ற கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ். நாட்டின் (ராணுவ) பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு மக்களுடைய வாழ்வாதாரம், தொடர்ந்து செயல்படல், ஜனநாயகம் ஆகிய கோணங்களும் இருப்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவையெல்லாம் இப்படியே தொடர வேண்டும்.
கட்சி அரசியலைப் பிற கட்சிகளைப் போலக் கட்டி எழுப்புவது ஆஆகவுக்கு முக்கியமில்லை. டெல்லி மாநகரைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். டெல்லி மாநகர நிர்வாகம் நகருக்கு வேலைதேடி வரும் புதிய தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் தேவைகளை அறிந்து செயல்பட வழிவகுக்க வேண்டும். டெல்லி என்பது எல்லோருக்குமான நகரம் என்ற உணர்வு அரசு நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அரசியலுக்குப் புதுவிளக்கம் தருவதிலும் ஜனநாயகத்துக்கு புதிய வடிவத்தைத் தருவதிலும்தான் ஆஆகவின் எதிர்காலம் இருக்கிறது!
- ஷிவ். விஸ்வநாதன்
(அரசு, பொதுக் கொள்கை தொடர்பான ஜிண்டால் உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)
© 'தி இந்து' (ஆங்கிலம்) தமிழில்: சாரி

****************
இந்திய அரசியலுக்கு ஒரு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆஆக.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி-அமித் ஷா இருவர் கூட்டணி சந்தித்திருப்பதைக் குறிப்பிட தோல்வி என்ற வார்த்தை போதுமானதல்ல. பொதுவாக, இந்திய அரசியலில் ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் அந்தக் கட்சியைப் பற்றிய தோற்றம் வகிக்கும் பங்கைவிட, அந்தக் கட்சிக்கு எதிராகக் களத்தில் இருக்கும் கட்சியைப் பற்றிய தோற்றமே அதிகப் பங்கு வகிக்கிறது. மோடி-ஷா விஷயத்திலும் இதுவே உண்மை என்பதே டெல்லி தேர்தல் முடிவுகள் சுட்டும் முதன்மையான பாடம்.
மிடாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகுமா?
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற பெரும் வெற்றியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் உதவியுடன் மோடி தன்னைப் பற்றி வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்ட ‘வளர்ச்சிக்கான மனிதர்’ என்ற பிம்பத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றபோதிலும், முதன்மையான காரணம் ஐ.மு.கூ-வின் மிக மோசமான ஆட்சியே. மிடாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப் போல மோடி-ஷா தொடுவதெல்லாம் வெற்றியே என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஏதோ யாருக்கும் தெரியாத தேர்தல் உத்திகளைக் கரைத்துக்குடித்த நேர்நிகரற்ற மாமேதை ஷா என்பதைப் போன்ற சித்திரமும் உருவாக் கப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரும்பான்மையான மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்ற முடிந்ததற்குக்கான காரணங்கள் இரண்டு: 1.சீர்கேடுகளின் உச்சமாக இருக்கும் அகிலேஷ் யாதவின் அரசாங்கம். 2.இந்து ஜாட் சமூக மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிப் பெரும் கலவரத்தை சங் பரிவாரம் உருவாக்கியதும், அதில் தங்களுக்கும் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றெண்ணி அதற்குத் துணைபோன அகிலேஷ் அரசாங்கம். மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட் என சமீபத்தில் மோடி-ஷா இருவர் அணி பெற்ற பெரும் வெற்றிக்குப் பின்னணியில் இருந்ததும் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு இருந்த பெரும் அதிருப்தியே.
மத்திய பாஜக அரசின் மீது மக்களுக்கு அத்தகைய அதிருப்தி ஏதும் இல்லாத நிலையிலும், ஆஆக பெற்றுள்ள மகத்தான வெற்றி வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டு கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை, கொள்கை முடிவுகளில் மக்களுக்கும் பங்கிருக்கக் கூடிய ஓர் அரசாங்கத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அந்த முக்கியமான மாற்றம்.
முடிவுகள் சொல்லும் பாடங்கள்
டெல்லியில் காங்கிரஸின் அழித்தொழிப்பு முழுமை அடைந்திருப்பதை இந்த முடிவுகள் காட்டும் அதே நேரத்தில், மோடியின் ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. 2013 சட்டசபைத் தேர்தலில் தாங்கள் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடுகிற போது, இப்போது எந்த வாக்கிழப்பும் ஏற்படவில்லை என்று பாஜக வெளியில் சொல்லித் தன்னைத் தேற்றிக்கொண்டாலும், 2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் தாங்கள் பெற்ற வாக்குகளைவிட 14% வாக்குகள் இப்போது குறைவு என்பதும், அப்போது ஆஆக பெற்ற வாக்குகளைவிட, இப்போது அந்தக் கட்சி 35% வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதும் மோடி-ஷா வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இதன் பாதிப்புகள் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நன்றாகவே பிரதிபலிக்கும் என்பதும், பிஹாரில் ஓரளவு எதிரொலிக்கும் என்பதும் இருவர் அணியின் அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
டெல்லியில் பாஜக சந்தித்திருக்கும் பிரம்மாண்டமான தோல்விக்கு முக்கியமான காரணங்கள் மூன்று: 1.முடிவுகளை எடுப்பதில் மோடி-ஷா தவிர, வேறு யாருக்கும் இடமில்லை என்ற நிலை பாஜகவில் உருவாகியிருப்பது. அதன் காரணமாக, சாந்தமானவர், நல்லவர் என்ற பிம்பம்கொண்ட டாக்டர் ஹர்ஷவர்தன் உட்பட டெல்லி பாஜக தலைவர்கள் அனைவரும் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி கொண்டுவரப்பட்டது. 2. ‘வளர்ச்சிக்கான மனிதராக’ தன்னைக் காட்டிக்கொண்ட மோடி, கடந்த 8 மாதங்களில் எந்த வளர்ச்சியையும் காட்டாதது மட்டுமல்ல; இந்துத்துவா செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர் காட்டிவரும் முனைப்பு மோடியின் பிம்பத்தை நம்பி 2014-ல் வாக்களித்த டெல்லி நடுத்தர வர்க்க மக்களில் கணிசமானவர்களை அவரிடமிருந்து விலக வைத்திருக்கிறது. 3. தனது எதிரி ஊழலின் வடிவமாக இருக்கும் காங்கிரஸாக இருந்த வரை வெற்றி பெறுவது பாஜகவுக்கு எளிதாக இருந்தது. இருவர் அணியின் அதிகார போதையை இந்தத் தோல்வி கொஞ்சமேனும் குறைக்கும் என்றால், அது பாஜகவுக்கு நல்லது. நல்ல மாற்று கிடைக்குமெனில், அதை ஆதரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டும் அதி முக்கியமான பாடம்.
ஆஆக முன்னுள்ள சவால்கள்
யோகேந்திர யாதவ் குறிப்பிட்டதைப் போல ஆஆக வினரே கனவிலும் நினைத்திராத வெற்றி இது. இந்த வெற்றியிலிருந்து ஆஆக கற்க வேண்டிய முக்கியமான பாடம் என்ன என்பதை அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது முதல் பேச்சிலேயே தெளிவுபடுத்திவிட்டார். ‘இந்த வெற்றி எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது நமக்கு அகங்காரத்தைத் தந்து விடக் கூடாது’ என்று அவர் சொல்லியிருப்பதை நடை முறையில் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
இன்றைய இந்திய அரசியலுக்கு ஒரு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆஆக, வெகு விரைவில் இன்றைக்கிருக்கும் கட்சிகளுள் ஒன்றாக மாறினால் அதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஏதுமில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போதே ஆஆகவில் தென்படுகின்றன. நேற்று வரை எந்த மனத்தடையும் இல்லாமல் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளில் உற்சாகமாக இருந்துவிட்டு, இப்போது ஆஆவில் சேர்ந்த பலரை வெற்றிவாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதற்காக தேர்தலில் நிறுத்தியது ஆஆக தலைமை. எல்லாக் கட்சிகளும் பின்பற்றும் இந்த வழக்கமான அணுகுமுறையை ஆஆக பின்பற்றியதன் காரணமாகவே, அற அரசியலை முன்னிறுத்தும் பிரசாந்த் பூஷண் ஆஆகவிலிருந்து இப்போது விலகி நிற்கிறார். கேஜ்ரிவால் எந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கப்போகிறார், தான் அளித்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றா விட்டாலும், அவற்றை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்கு உண்மையான முனைப்பைக் காட்டப்போகிறார் என்பதுவுமே ஆஆகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
‘வர்க்க அரசியலை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால், எங்களுடையது வர்க்கப் போராட்ட அரசியல் அல்ல’ என்றும்... தாங்கள் ‘சித்தாந்த அரசியலுக்குள் அடைபட மறுப்பவர்கள், அதற்கு அப்பாற்பட்டவர்கள்’ என்றும் யோகேந்திர யாதவ் தொடர்ந்து கூறிவருவகிறார். இது யதார்த்தத்தில் சாத்தியமற்ற நிலை. இந்த போலியான நிலைப்பாடு அந்தக் கட்சியின் நீண்ட கால அரசியலுக்கு ஆபத்தாகவே முடியும். ஒரு கட்சிக்கு சித்தாந்தம் அல்லது கோட்பாடுகள் என்பது வரைபடம் போன்றதல்ல, கைவிளக்கு போன்றது. ஆஆக கற்க வேண்டிய முக்கிய பாடங்களுள் ஒன்று இது.
க. திருநாவுக்கரசு, அரசியல் விமர்சகர், கட்டுரையாளர்

தொடர்புக்கு: kthiru1968@gmail.com
*****************

ஆஆகவின் வெற்றி - மாற்றத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெற்றி.
இது ஒரு தேவதைக் கதை! அர்விந்த் கேஜ்ரிவால் என்கிற இளவரசனின் கதை. இந்திரப் பிரஸ்தத்தின் இளவரசியை மணம் முடிப்பதற்கான கதையின் முடிவு சுபமாகவே ஆகியிருக்கிறது. மோதல், காதல், ஊடல் என ஓராண்டுக் காலம் நடந்த நாடகம் முடிந்துவிட்டது. டெல்லி சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை காணாத வெற்றியை மஃப்ளர் மனிதர் பெற்றிருக்கிறார். 70-ல் 67 இடங்களைக் கவர்ந்து ஆஆக வெற்றி பெற்றிருக்கிறது. ஆஆக-வே எதிர்பாராத பெரும் வெற்றி இது. சரி, வெற்றியாளர்களைப் பற்றி அப்புறம் பேசிக்கொள்வோம். முதலில் தோல்வியாளர்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கேஜ்ரிவாலுக்கு என்றால், மிகப் பெரிய தோல்வி யாருக்கு? தேர்ந்தெடுங்கள்: 1. நரேந்திர மோடி, 2. அமித் ஷா, 3. கிரண் பேடி, 4. ராகுல் காந்தி.
விடை: மேற்கண்ட யாருமில்லை.
அப்போது யார்தான் நெ.1 தோல்வியாளர்? சந்தேகமேயில்லை திருவாளர் நோட்டாதான். நடுத்தர வர்க்கத்தின் சிடுமூஞ்சிவாதிகளும் அரசியல்வாதி களின் மிரட்டல்களுக்குப் பயப்படும் அப்பாவி ஜனநாயகவாதிகளும் தேர்தல் ஜனநாயகத்தைக்கூடக் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் குரோனி கேபிடலிஸ்ட்களும் எப்போதுமே நோட்டாவைத் தங்கள் தலையில் தூக்கிக்கொண்டு அலைவார்கள். எல்லோரையும் நிராகரியுங்கள் என்று பாடமெடுப்பார்கள். மக்கள் தங்களுடைய உரிமைகளின் மீது நம்பிக்கை இழக்க வேண்டும், சர்வாதிகார ஆட்சி வர வேண்டும் என்று ஏங்க வேண்டும் என்பது அவர்களில் பலரது கருத்து. ஆனால், மாற்றத்தின்மீது நம்பிக்கை இல்லாதவர்களின் அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களின் மந்திரச் சொல்லான நோட்டாதான் டெல்லியில் இன்று நெ.1 தோல்வியாளர்!
இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆயிரம் பேருக்கு நான்கு அல்லது ஐந்து பேர்தான் நோட்டாவைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். அதாவது, 0.4% மக்கள்தான் நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். டெல்லி 2015 தேர்தலின் சுவிசேஷம் இதுதான்: மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. வெற்றி பெற்ற கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்றது என்பதைவிடப் பெரிய சேதி, நரேந்தர் பாயும் அமித் ஷாவும் தங்களுக்கு எதிரான இந்த அலையை உறுதியாக எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான். பாஜகவுக்கு 3 இடங்கள்! இந்தியத் தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி பிடித்த ஒரு கட்சி, ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளாகவே, அதுவும் அதன் நேரடிப் பார்வையில் உள்ள தலை நகரத்திலேயே, இப்படி மண்ணைக் கவ்வியது என்பது அசாதாரணமானது! காங்கிரஸுக்குத்தான் உண்மையில் இது தெம்பளித்திருக்கும். ஆனால், தேர்தல் முடிவு வர வர, டெல்லியில் காங்கிரஸ் ஆண்ட காலம் ஒளரங்கசீப் ஆண்ட காலத்துக்குச் சற்று முன்னே சென்றுவிட்டதைப் போல ஒரு தோற்றம் எழுந்தது. ‘ராகுல்! மை டியர் சன்!’
தன் கட்சியின் வெற்றிக்கு அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட பங்களிப்பைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. இந்த மனிதரைப் பாருங்கள்: 2012-ல் கட்சியைத் தொடங்கினார். 2013-ல் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70-ல் 28 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்துக்கு வந்தார். முதல்வர் பதவியை ஏற்க முரண்டுபிடித்தார். பின்பு, பதவியை ஏற்றார். தர்பாரைத் தெருக்களில் நடத்தினார். ‘சின்ன புள்ளத்தனமாக’ சட்டப்பேரவையை நடத்தினார்.
மின்பகிர்வு கம்பெனிகளைத் தணிக்கை செய்ய முயன்றார். மல்டி-பிராண்டு ரீடெய்லிங் ராட்சதர்களான வால்மார்ட்களின் கனவில் பெருச்சாளிகளை விட்டுப் பார்த்தார். அம்பானிகளை வம்புக்கிழுத்தார். ‘ஒருநாள்’ முதல்வர் போலச் செய்திகளை உருவாக்கினார். பிறகு சட்டென்று, இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை என்று ராஜினாமா செய்தார். பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் நாடெங்கும் பரவினார். டெல்லியில் படுதோல்வி அடைந்து சுயமாயை கலைந்தார். நாடெங்கும் கேலிக்கூத்தானார். ஆனால், அவரது இருமலும் நின்றபாடில்லை, அவரது வைராக்கியமும் குறைந்தபாடில்லை. உடனடியாகத் தவறுகளிலிருந்து பாடம் கற்றார். முழுத் தீர்ப்பு வேண்டும் என்றார். மீண்டும் மக்களை வாக்குச்சாவடிக்கு வரவைக்கும்படி செய்தார். தேர்தல் கூட்டங்களில் “இந்த சின்னப் பையனின் தவறை மன்னிக்க மாட்டீர்களா” என்று மக்கள் தாள்பணிந்தார். வைஃபையை இலவசமாகத் தருகிறேன் என்றார். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இணையத்துக்குச் செலவழிக்கிற மக்கள் வாழும் மாநகரத்தில், இது ரூபாய்க்கு மூன்று படி அரிசியைவிடப் பெரிய வாக்குறுதிதான்!
எப்படிப்பட்ட வெற்றி! டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு இடங்களைப் பெற்றதில்லை. இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெல்லவும் இல்லை. டெல்லியில் முதலில் ஆட்சியமைக்கும் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஆட்சி இது. பாஜக முதன்முதலாக ஒற்றை இலக்கத்துக்குச் சரிகிறது, காங்கிரஸுக்குச் சுழியம். தேர்தல் கணிப்பியல் நிபுணரும் ஆஆக தலை வர்களில் ஒருவருமான யோகேந்திர யாதவ், கடந்த வாரம் தன் கட்சி 50 இடங்களைப் பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியிருந்தார். அவரது சொந்தக் கணக்கையும் மீறி அவரது கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. “இது கிளாஸிக்கான தமிழ்நாடு வகைப்பட்ட தீர்ப்பு” என்று பின்பு தொலைக்காட்சியில் பேசும்போது அவர் கூறினார்.
இந்தத் தீர்ப்பு அதிசயமானது. இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியிலும் மோடி அலைதான் வீசியது. ஆனால், ஓராண்டுகூட ஆக வில்லை. மோடி படுதோல்வி அடைந்திருக்கிறார். இடையில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் தனது ஆட்சிக்கான ‘ஏற்புத்தேர்வாக’ காட்ட மோடி - அமித் ஷா இரட்டையர்கள் நினைத் திருந்தார்கள். ஆனால், டெல்லி அவர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டது. அவர்களே வலுக்கட்டாயமாக இந்தத் தேர்தலைத் தங்களுடைய மானப் பிரச்சினையாக நினைத்துக்கொண்டார்கள். கேஜ்ரிவாலைத் தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள். ஆனால், கேஜ்ரிவால் தனது வெற்றிக்கு, நிச்சயம் தன் முன்னாள் சகா கிரண் பேடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முகமாக இருந்த கிரண் பேடி, பாஜக முதல்வர் வேட்பாளரானது மக்களிடம் எடுபடவில்லை. காங்கிரஸுக்கு எதிராக அண்ணா ஹசாரேவையும் கிரண் பேடியையும் அர்விந்த் கேஜ்ரிவாலையும் களமிறக்கியது டெல்லியின் ஆர்.எஸ்.எஸ். சாணக்கியர்கள்தான் என்று கூறுவதுண்டு. அது உண்மையென்றால், இப்போது ஆப்பசைத்த குரங்காக உட்கார்ந்துகொண்டிருப்பதும் அவர்களாகத்தான் இருக்கும்.
கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை இது அவரது சகாப்தத்தின் தொடக்கம். கடந்த கால வெற்றி தோல்வி களின்போது நிலையாக நின்ற நண்பர்களையும் அலையாக வந்த சந்தர்ப்பவாதிகளையும் அவர் சந்தித் திருப்பார். 2013-ல் அவர் ஏற்கெனவே சரிந்திருந்த காங்கிரஸைத்தான் வீழ்த்தினார். இப்போது நிலைமை வேறு. ராட்சத பலம்பொருந்திய அடிபட்ட புலியான நரேந்திர மோடியைச் சமாளித்து, அவர் இனி ஆட்சி புரிய வேண்டியிருக்கும். பதற்றத்துக்குப் பலியாகக் கூடாது. ஆத்திரப்பட்டுவிட்டால் மற்றொரு வாய்ப்பைக் காலம் அவருக்குத் தராது.
இப்போதைக்கு, ஆஆக பெற்றிருக்கும் வெற்றி, நாம் கொண்டாட வேண்டிய வெற்றியே. நாடாளு மன்ற ஜனநாயகத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் ஒழித்துக்கொண்டிருக்கும் அல்லது பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் நரேந்திரமோடி - அமித் ஷா சாம்ராஜ்ய காலத்தில், மக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழக்காமலிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல!
- ஆழி செந்தில்நாதன், தொடர்புக்கு: zsenthil@gmail.com

********

ஊடகங்களுக்கு ஏதேனும் கிறுக்குப் பிடித்து விட்டதா என்று கேட்டார் நண்பர் ஒருவர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு குட்டித் தேர்தல். இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், டெல்லி வாக்காளர்களின் விகிதம் 1.5%-க்கும் குறைவு. அதுவும் இது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்த வெற்றி - தோல்விகளை எப்படி தேசிய அளவில் ஒப்பிட முடியும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் பின்னடைவாகக் கருத முடியும் என்பது அவருடைய வாதம்.
ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, டெல்லியின் வாக்குப் பங்களிப்பு சொற்பம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். டெல்லியின் பெரும்பான்மை அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்கின்றன. அதிகாரத்துக்கு மிக முக்கியமானது நிலம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால்கூட, அதற்கான நிலத்துக்கு டெல்லி அரசு, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டெல்லியைப் பொறுத்தவரை நிலம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அடுத்து, நிதி. இதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். அப்புறம், சட்டம் - ஒழுங்கு. டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரத்துக்கு உட்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலே முன்னர் ஒருமுறை சொன்னதுபோல, “டெல்லி முதல்வர் என்பது அதிகாரம் இல்லாத அரியணைதான்.”
கேள்வி என்னவென்றால், இவ்வளவு துச்சமான ஒரு பதவிக்கான தேர்தலை வசமாக்க பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஏன் இவ்வளவு துடித்தார்கள் அல்லது ஏன் டெல்லி தேர்தல் அவர்களுக்கு அத்தனை முக்கியமானதாக இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி வெற்றிக்கான முக்கியத்துவம் இருக்கிறது.
இரு சுலோகங்கள்
நரேந்திர மோடி தொடர்பாக குஜராத்தில் புகழ்பெற்ற இரண்டு சுலோகங்கள் உண்டு.
1. மோடி எதையும் மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார். 2. மோடி, எதிரிகள் இருப்பதையே விரும்ப மாட்டார்.
குஜராத்தில் மோடி நிகழ்த்திய / வெளி உலகுக்கு அதிகம் தெரிய வராத முக்கியமான சாதனைகளில் ஒன்று, அங்கு வலுவான எதிர்க் கட்சி என்று ஒன்றையே இல்லாமலாக்கியது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க் கட்சித் தலைவர் இல்லாத நாடாளுமன்றத்தின் பிரதமராக அவர் இருக்கிறார் என்பதும் இங்கு பொருத்திப் பார்க்கக் கூடியது.
ஜனநாயகத்தில் எதிரிகளை இல்லாமலாக்கத் தேர்தலைவிடவும் சிறந்த வழி ஏது? மோடிக்கு இத்தனை நெருக்கமானவராக அமித் ஷா இருக்க இதுவும் முக்கியக் காரணம். “ஷா அமைச்சராக இருந்தபோது, அவர் வசம் 12 துறைகளை மோடி கொடுத்திருந்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஷா பதவியில் இல்லாதபோதும் அவர்வசம் இருந்த துறை தேர்தல்கள். அந்த அளவுக்குத் தேர்தல்களில் அவர் கில்லாடி; மோடிக்கு அவர் மீது நம்பிக்கை” என் கிறார்கள் குஜராத்திகள். ஷா தன் சொந்தத் தொகுதிகளை எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பது ஓர் உதாரணம். 1997-ல் தன்னுடைய முதல் தேர்தலில் சர்கேஜ்ஜில் நின்றபோதே 56% ஓட்டுகளை வாங்கியிருக்கிறார் ஷா. அதற்குப் பிந்தைய 4 தேர்தல்களிலுமே 65%-க்கும் குறையாத ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். கடைசியாக, 2012 தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுகள் 69%.
வெற்றிக்குத் தூரமாக இருப்பவர்கள் மோடிக்கு நெருக்கமாக முடியாது. ஷா இதை உணர்ந்தவர். அதனால் தான் ஒருமுறை சொன்னார்: “என்னால் செய்ய முடிந்ததைச் செய்தால் நான் சிறந்தவன். ஒருவேளை வேறு ஒருவர் அதைச் செய்தால், அவர் மோடியின் வலதுகரமாக இருக்கக் கூடியவர்.”
வெளியே பலரும் நினைக்கிறபடி, பாஜக தலைவர் பதவி ஷாவின் கடந்த காலச் செயல்பாடுகளுக்கான பரிசு மட்டும் அல்ல; மோடியின் எதிர்காலத் திட்டங்களுக்கான கட்டுமானத்துக்கான கருவி. நாட்டின் மிகப் பெரிய கட்சி என்பது அந்தக் கனவில் நமக்குத் தெரியும் நுனி; நாட்டின் ஒரே கட்சி என்பது நமக்குத் தெரியாத கடலடி பனிமலையாக இருக்கலாம்.
மோடியலை எனும் மந்திரம்
நாம் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால், டெல்லியின் வியூக சூட்சமத்தைப் பிடித்துவிடலாம். பொதுத்தேர்தல் முடிந்து 8 மாதங்கள் ஆகின்றன. இன்னும் மோடியலை எனும் வார்த்தை இளஞ்சூட்டோடு துடிப்பாக இருக்கிறதே, எப்படி?
அந்த வார்த்தை ஒரு மந்திரம். இந்த மாபெரும் கனவைச் சென்றடைவதற்கான மந்திரம். பொதுத்தேர்தல் வெற்றி என்பது பொதுத்தேர்தலோடு முடிந்த கதை அல்ல; அது இந்தியா முழுவதற்கும் தொடரக்கூடிய ஒரு தொடர்கதை எனும் பிம்பத்தை உயிரோடு வைப்பதற்கான மந்திரம். அந்த மந்திரம் உயிரோடு இருக்க, தோல்விகள் தவிர்க்கப்படுவது முக்கியம்; மாற்றுகள் கண் முன் தெரியாமலிருப்பது முக்கியம்; எதிரிகள் இல்லாமலிருப்பது முக்கியம்.
மாபெரும் கனவில் டெல்லி பொத்தல் போட்டுவிட்டது போலத்தான் தெரிகிறது. தேர்தல் முடிவு தொடர்பாக உமர் அப்துல்லா அடித்திருக்கும் ட்விட் இது: “இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் பாடம் ஏதாவது உண்டென்றால் அது, நீங்கள் கடுமையாகப் போராடினால் மோடியும் பாஜகவும் வெல்லப்பட முடியாதவர்கள் அல்ல; அவர்களுடைய தவறு களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான்.’’
மோடிக்கும் ஷாவுக்கும் டெல்லி அவ்வளவு முக்கியமானதாக இருக்கக் காரணம் எதுவோ, அதுவே அர்விந்தின் வெற்றியின் முக்கியத்துவத்துக்கான காரணமாக இருக்கிறது!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

************
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, தனிச்சிறப்பான, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் வெற்றியை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்திருக்கிறது. அரசியலில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சாமானியர்களின் பெருவிருப்பம் பிரதிபலித்திருக்கிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டும் பெருக்கித் தூர வீசப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் என்பது எளிதில் அணுகும் வகையிலும், தங்களுடைய பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு செயல்படும் விதத்திலும், வெளிப்படையாகச் செயல்படும் தன்மையிலும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையே இந்தத் தேர்தல் முடிவு அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தகவல் அறியும் உரிமைக்காகவும் ஊழலை எதிர்த்தும் அர்விந்த் கேஜ்ரிவால் நிகழ்த்திய போராட்டங்களைக் கேலிச்சித்திரங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பகடி செய்தனர். ஆனால், அந்தப் போராட்டங்கள்தான் அவரை முழுநேர அரசியல்வாதியாக உருவாக்கின. மக்களவைப் பொதுத் தேர்தலின்போது டெல்லியில் ஒரு தொகுதியிலும் ஆஆக வெற்றி பெறவில்லை. அப்படியிருந்தும் அர்விந்த் கேஜ்ரிவால் மனம் தளராமல் தொடர்ந்து மக்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவந்தார். மக்களிடமிருந்த அதிருப்தியை அறிந்து, அவர்களை வழக்கமான அரசியல் பாணியில் ஒன்று திரட்டினார்; அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்; தூய்மையான, மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசைத் தருவேன் என்று உறுதியளித்தார். மக்கள் அவரை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
தனக்கு ‘அஞ்சி நடக்கும்’முதல்வருக்கு டெல்லி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தின்போது கேட்டுக் கொண்டார். மக்களோ, மோடியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்டவரே தங்கள் தேர்வு என்று சொல்லிவிட்டனர். ஜனநாயகக் களத்தில் அஞ்சுவோருக்கு இடமே இல்லை என்பதை இதன் மூலம் நிரூபித்துவிட்டனர். கூடவே, மோடி - அமித் ஷா கூட்டுத் தலைமையின் கீழ், மக்கள் மீது ஒருதலைப்பட்சமாக முதல்வர் பதவிக்கான தலைவர்களும் வேட்பாளர்களும் திணிக்கப்படுவதை மக்கள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.
மக்களவைப் பொதுத் தேர்தலின்போது டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் வென்ற கட்சி பாஜக. தவிர, மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 60-ல் முதலிடத்தில் இருந்தது. வெறும் 8 மாதங்களுக்குள் எப்படி இப்படி ஒரு சரிவு ஏற்பட்டது என்று பாஜக தலைமை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்து சிறுமைக்கு ஆளாகியிருக்கிறது. வெகு விரைவாகவும் வலுவாகவும் அது தன்னைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.
அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நாம் வசந்த கால வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். மக்கள் எளிதில் அணுகும்படியான, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப அவர் நிர்வாகத்தை நடத்திச்செல்ல வேண்டும். அப்படியிருந்தால்தான் அது சாமானிய மக்களின் ஆட்சியாக இருக்கும்!

*********

மக்களவைப் பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைக் குவித்துவந்ததற்காக பாஜக கடந்த மாதம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு புளகாங்கித மடைந்தது. இவ்வெற்றிகளால் பெரும்பான்மையின வாதத்தை அக்கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் அச்சப்பட்டனர். ஆனால், அது ஏற்கெனவே அப்பணியைத் தொடங்கிவிட்டது. தான் ஏற்படுத்திய பிம்பத்தைக் கண்டு எல்லோரும் பிரமிப்பதை, ஒரு கொள்கை வகுப்பாளர் என்ற முறையில் அது வெகுவாக ரசித்தது. உலகத் தலைவர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அளித்த பரிந்துரைகள் அதற்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டின. இருந்தாலும், டெல்லியில் அரசியல் சூழல் இடம் மாறுகிறது என்று அதற்குத் தெரிந்தது.
ஆஆக தன்னைத்தானே கரைத்துக்கொண்டு காணாமல் போய்விடும் என்று அதன் விமர்சகர்கள் நினைத்ததற்கு மாறாக அது புதிய வலுவுடன் தன்னை மீண்டும் களத்தில் நிறுத்திக்கொண்டது. டெல்லி அரசியல் களத்தில் முதலிடத்தில் இப்போது அதுதான் நிற்கிறது. அரசியல் சதுரங்கத்தில் விற்பன்னர் என்று பெயர் வாங்கிய அமித் ஷாவை அது மிஞ்சிவிட்டது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அரசியல் களம் வற்றிவிடவில்லை
இந்திய அரசியலில் எல்லாவிதமான பரிசோதனைகளும் இப்போதிருக்கும் இந்தியக் கட்சிகளால் முழுக்கச் செய்துபார்க்கப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எல்லாம் பழமைக் கட்டுமானங்களைக் கொண்ட, புதிய சிந்தனை, புதிய செயல்முறை, புதிய பரிசோதனை முயற்சிகள் இல்லாத கட்சிகள். ஆஆக உருவானபோது அது புதிய வகையில் அர்த்தமுள்ள அரசியல் சிந்தனைகளை முன்வைத்தது. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகளைச் செய்து இயக்கங்களை நடத்தியதுடன் அரசியல் கட்சியாகவும் நிலைத்து நின்றது. அதனுடைய வெற்றி அபாரமானதாக இருந்ததால், அது திடீரென்று உற்சாக மிகுதியில் அப்போதைக்கு மட்டும் செயல்பட்ட துடுக்கான கட்சியா, மக்களுடைய மனங்களில் இடம்பிடித்த அற்புதத் திரைக்காவியமா என்று யாராலும் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு நாடு முழுக்க மக்களுடைய மனங்களில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, விமர்சகர்கள் எதிர்பார்த்தபடியே தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது.
அந்தக் கட்சியை உயிர்ப்புடன் தக்கவைத்தது அதன் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான். அவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டது. இந்தக் குழுக்கள் அரசியலின் அடியாழத்தில் உள்ள சில அம்சங்களைப் பிரதிபலித்தன. இப்போதைய வெறுக்கத்தக்க அரசியலின் வெற்றுக்கூச்சலுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த அமைதியை நோக்கிச் செல்லக்கூடிய வித்தியாசமான அரசியலைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்.
புதிய அரசியலுக்கான சாத்தியங்கள்
அரசியல் களத்தில் தான் நிகழ்த்திய முதல், திடீர் தாக்குதல் மூலம் ஒரு புதுவகை அரசியலுக்கு ஆஆக வித்திட்டது. அரசியலில் நடப்பதைக் கவனிக்க வேண்டும், பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அது முதலில் ஊட்டியது. அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெறுவது வேறு; அரசியலையே ஒரு கடமையாகக் கருதி அதில் ஈடுபடுவது வேறு. முதலாவது, சுய லாபத்துக்காக அரசியலில் ஆர்வம் காட்டுவது. அடுத்தது, பொது நன்மை கருதி ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.
ஆஆகவின் முக்கிய அம்சமே ஆர்வமுள்ள ஏராளமான இளைஞர்கள் அரசியலால் ஈர்க்கப்பட்டும் அதன் மூலம் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மைகளைக் கருதியும் அதில் பங்கேற்றதுதான். அடுத்ததாக, வழக்கமான அரசியல்வாதிகளின் மொழியில் அது பேசவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உள்ள உரிமைகள்குறித்தோ, சட்டப்பேரவையின் முன்னுரிமைகள் குறித்தோ அது பேசவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான புதிய மொழியை உருவாக்குவதுகுறித்துப் பேசியது. அரசியல்வாதிகளே மக்களுக்கான திட்டங்களை முன்மொழிந்து, பிறகு அதை முடித்துவைக்கும் பாணியை அது கையாளவில்லை. மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் என்னவென்று விவரித்து அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கும் புதிய அரசியல் நெறியை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறையைத்தான் அராஜகவாதம் என்று பலர் தவறாகப் புரிந்துகொண்டனர். இத்தகைய பாணி அரசியலில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவு என்பதால், அரசியல்வாதிகள் முதலிலேயே இதன் போக்கைக் கவனித்து, அராஜகவாதம் என்று கண்டித்தனர். அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு அதிகாரம் வழங்க ஆஆக விரும்பியது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆஆகவின் செயலை நக்ஸல்களின் செயலுடன் ஒப்பிட்டு அரசுக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்தார்.
ஒருவர் தவறுகள் செய்து அந்தத் தவறுகள் தொடர் வினைகளை ஏற்படுத்தி அது சோகமான நகைச்சுவையாக முடிவதுண்டு. ஆஆகவின் சிறப்பம்சமே நெருக்கடியான நேரங்களில், நுனிக்காலை ஊன்றியாவது தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுதான். தங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு டெல்லி மிகவும் அவசியமான இடம் என்பதால், முழு பதவிக் காலமும் இல்லாமல் ஆட்சியைவிட்டு ஓடியதற்காக அது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
பாஜக பிரச்சினைகளைத் தீர்க்காது
பாஜக தன்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுடைய பிரச்சினைகளை அப்படியொன்றும் மாயாஜாலம் செய்து தீர்த்துவிடவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதுவரை ஆஆகவின் சாதனை என்று குறிப்பிட எதுவும் இல்லாவிட்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே அதிகரித்தது. அந்தக் கட்சிக்கு மற்றொரு வாய்ப்பைத் தர வேண்டும் என்று டெல்லி மாநகர நடுத்தர மக்களும் ஏழைகளும் தீர்மானித்துவிட்டார்கள்.
காங்கிரஸ் அல்ல; உண்மையான எதிரி ஆஆக என்று பாஜக அடையாளம் கண்டுகொண்டது. அது அரசியலுக்கே ஒரு விறுவிறுப்பை ஊட்டியது. வலுவான கட்சியை, வலு குறைந்த கட்சி பலமாக எதிர்ப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு.
ஆஆகவின் அரசியல் நடவடிக்கையை பாஜக அப்படியே காப்பியடித்தது. முதல்வர் பதவி வேட்பாளருக்கு கட்சியைச் சாராத கிரண் பேடியைத் திடீரெனக் களம் இறக்கியது. சாவி கொடுத்த இயந்திரம்போல பேடி பேசினார், செயல்பட்டார். அவருடைய வருகையைக் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், தலைவர்கள் பலர் விரும்பவில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் மக்களுடைய ஆதரவு தந்த உற்சாகத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்தபோது, கிரண் பேடி உணர்ச்சி ஏதும் காட்டாமல் பொம்மைபோல் அமைதியாகச் செயல் பட்டார். ஒருவரிடம் பேசி, தன்னுடைய கருத்தை அவர் ஏற்பதை வலியுறுத்துவதைவிட, தடியால் நாலு தட்டுத் தட்டி வழிக்குக் கொண்டுவருவதே அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேஜ்ரிவாலுக்கு நிகரான ஆளுமையுள்ள தலைவர் டெல்லி பாஜகவில் இல்லை என்பதையே பேடியின் தேர்வு பறைசாற்றிக்கொண்டிருந்தது.
ஆஆகவின் எதிர்காலம்
ஆஆக மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துவிட்டது என்பது தெளிவு. இப்போதைய கேள்வி அந்தக் கட்சி எதிர்காலத்தில் எப்படிச் செயல்படும், அதன் உத்திகள் என்னவாக இருக்கும் என்பதுதான். ஒரு விமர்சகனாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் அக்கட்சி தொடர்ந்து புதுப்புது கொள்கைகளையும் வழிமுறைகளையும் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதைத்தான்.
ஆஆக தன்னுடைய கட்சிச் செயல்பாட்டைக் கண்காணித்து வழிநடத்த ஒரு ‘ஆம்புட்ஸ்மேன்’ தேவை என்று உணர்ந்து, ஒருவரை அப்பதவியில் நியமித்திருப்பது ஆக்கபூர்வமான சிந்தனை. ஊழல், போதைப்பொருள் நடமாட்டம் என்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளை மிகத் திறமையாக மக்கள் மனதில் ஆஆக பதியவைத்தது. கல்வி, தண்ணீர், மின்சாரம் போன்றவை பொதுமக்களுக்கான பண்டங்களாகவே திகழ வேண்டும் என்ற உணர்வை அது ஊட்டியது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அது வலியுறுத்தியது. இவையெல்லாம் இதுவரை எந்தப் பெரிய அரசியல் கட்சியாலும் செய்யப்படாதது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ளது.
மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைக்கூடப் பொருளாதார நிர்வாகிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் அவர்களுடைய நோக்கில் மட்டுமே பார்க்கின்றனர். ஆஆக இவற்றையும் மீட்டு அதற்கு மக்களுடைய நலன் சார்ந்த கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதைவிடச் சிக்கலானது, மக்களுடைய வாழ்வாதாரங்கள் கெடாமல் பாதுகாப்பது. ஒரு பிரச்சினையை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பார்க்கும் பார்வை, சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மனிதருடைய நிலையை உணர்ந்த பார்வையாக இருப்பதில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பக் கண்ணோட் டத்தில் பார்த்து, தொழில்நுட்பரீதியாகத் தீர்வுகண்டு, தொழில்நுட்பத்துடன் தீர்த்துவிடுவதால் பெரும்பான்மை மக்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுவிடாது.
அணுசக்திப் பயன்பாடு தொடர்பான விவாதங்களில் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையைத் தேசிய நிலைக்குக் கொண்டுசென்றதன் மூலம், ஒரு ஊரில் பேசப்படும் பிரச்சினை உள்ளூர்ப் பிரச்சினை அல்ல, அது இந்த சமுதாயத்தின், நாட்டின் பிரச்சினை என்பதை அது உலகுக்குக் காட்டியது. அணு மின் நிலையம் எங்கே அமைய வேண்டும் என்று சொல்லும் உரிமை, அந்தப் பகுதியில் மீன்பிடிக்கும் கடல் மீனவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று அது தெரிவித்தது. ஆஆகவின் ஆம்புட்ஸ்மேனாகச் செயல்படுகிறவர் ஓய்வுபெற்ற கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ். நாட்டின் (ராணுவ) பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு மக்களுடைய வாழ்வாதாரம், தொடர்ந்து செயல்படல், ஜனநாயகம் ஆகிய கோணங்களும் இருப்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவையெல்லாம் இப்படியே தொடர வேண்டும்.
கட்சி அரசியலைப் பிற கட்சிகளைப் போலக் கட்டி எழுப்புவது ஆஆகவுக்கு முக்கியமில்லை. டெல்லி மாநகரைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். டெல்லி மாநகர நிர்வாகம் நகருக்கு வேலைதேடி வரும் புதிய தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் தேவைகளை அறிந்து செயல்பட வழிவகுக்க வேண்டும். டெல்லி என்பது எல்லோருக்குமான நகரம் என்ற உணர்வு அரசு நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அரசியலுக்குப் புதுவிளக்கம் தருவதிலும் ஜனநாயகத்துக்கு புதிய வடிவத்தைத் தருவதிலும்தான் ஆஆகவின் எதிர்காலம் இருக்கிறது!
- ஷிவ். விஸ்வநாதன்
(அரசு, பொதுக் கொள்கை தொடர்பான ஜிண்டால் உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)
© 'தி இந்து' (ஆங்கிலம்) தமிழில்: சாரி
***************
ஆஆகவின் முகம் அர்விந்த் கெஜ்ரிவால் என்றால், அதன் மூளை யோகேந்திர யாதவ். கட்சியின் வியூக வகுப்பாளரும் தேசியத் தலைமை ஊடகவியல் தொடர்பாளருமான யாதவிடம் தீர்ப்பு நாளில் பேசினேன்.
இப்படியொரு அசாதாரணமான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?
மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி, எங்களுக்கு 51 இடங்கள் கிடைக்கக்கூடும். அது 57 வரை போகக்கூடும் என்று கூறினோம். மேலும், அதிக வாக்குகளைப் பெற நாங்கள் பிரச்சாரம் செய்வதாகப் பலர் நினைத்தனர். உண்மையில், எங்கள் கட்சியை நாங்களே குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். 57 என்று சொன்னோம், 67-ல் வெற்றி பெற்றிருக்கிறோம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமான வெற்றி. வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. முன்பு தமிழ்நாட்டில் அதிமுகவும் சிக்கிமில் சிக்கிம் சங்ராம் பரிஷத்தும் இப்படி அமோக வெற்றி பெற்றுள்ளன.
வாக்கு சதவீதத்தின்படி?
சிக்கிம் சங்ராம் பரிஷத் இதில் சாதனை படைத்திருக்கிறது. இல்லையென்றால், ஆஆகவின் 54% மிக உயர் அளவாக இருந்திருக்கும்.
ஒரு வகையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே டெல்லி பிரதேச அரசியலில் நீடிப்பது கடினம் என்றாகிவிட்டதல்லவா?
காங்கிரஸ் கட்சியைப் பற்றி வேண்டுமானால் இப்படிச் சொல்வது பொருத்தமாக இருக்கலாம். தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களைப் போல டெல்லியிலும் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்து விட்டது. நாட்டின் பல மாநிலங்களில் அது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பாஜக தோற்றிருக்கிறது. ஆனால், துடைக்கப்பட்டுவிட்டது என்று கருத இடமில்லை. அது அமைப்புரீதியாக வலுவானது, மீண்டும் எழுந்து நிற்கும். பாஜக என்ற பெரும் தேர், முட்டுக்கட்டை போட்டு நிறுத்தப் பட்டிருக்கிறது. இது பல்வேறு வாய்ப்புகளைப் பலருக்கும் அளித்திருக்கிறது. பாஜகவுக்குள்ளும் செய்தி ஊடகங்களுக் குள்ளும் ஆத்மபரிசோதனை செய்துகொள்ளலாம். கர் வாப்ஸி, கோட்சேவுக்குச் சிலை போன்ற விவகாரங்களால் எரிச்சல் அடைந்துதான் மக்கள் அதற்கு வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கின்றனர். இது அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. இந்தத் தீர்ப்பு மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானதாகவும் அமைந்திருக்கிறது; பொருளாதாரரீதியாகவும் தாங்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்கிற மக்களின் உணர்வையும் உணர்த்துகிறது.
இந்த வெற்றி ஆஆக மீது மிகப் பெரிய பொறுப்பைச் சுமத்தியிருக்கிறது?
ஆமாம், ஒரு வகையில் மக்களுடைய எதிர்பார்ப்புகளும் நியாயமான ஆசைகளும் இதில் இருக்கின்றன. இதுதான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். தீர்ப்புக்குத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதுதான் அடுத்த வேலை. இதைத்தான் அர்விந்த் கேஜ்ரிவாலும் தெரிவித்துள்ளார்.
உங்களுக்குச் சாதகமாக இருந்தது எது?
மக்களவைப் பொதுத் தேர்தல் முடிந்த உடனேயே டெல்லி சட்டப் பேரவைக்குத் தேர்தலை நடத்தவில்லை. இது கட்சியை வலுப்படுத்த கேஜ்ரிவாலுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. பாஜகவின் ஸ்தாபன பலம் மிகப் பெரியது என்று எங்களுக்குத் தெரியும். அதற்கு இணையாக வலுப்பெற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு உழைத்தோம். ‘டெல்லி டயலாக்’என்ற பெயரில் வாக்காளர்களுடன் நாங்கள் தொடர்ந்து நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டோம். ‘நீங்கள் துணிச்சல் மிக்கவர்கள், ஊழலற்றவர்கள். ஆனால், நிர்வாகம் செய்ய உங்களால் முடியுமா?’ என்று மக்கள் எங்களைக் கேட்டார்கள். குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய தேவைகள் தொடர்பாக அவர்களுடைய கேள்விகளுக்கு நாங்கள் பதிலைச் சொன்னோம்.
இந்தத் தீர்ப்பு மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசின் மீதான கருத்தறியும் வாக்கெடுப்பா, 49 நாட்கள் ஆட்சியில் இருந்த ஆஆக அரசின் மீதான கருத்தறியும் வாக்கெடுப்பா?
நிச்சயம் எங்களுடைய 49 நாள் ஆட்சியின் மீதான வாக்கெடுப்புதான். செய்தி ஊடகங்களும் மாற்றுக் கட்சிகளும் நம்ப மறுத்தாலும் நாங்கள் நல்ல ஆட்சி நடத்தியதாகவே மக்கள் கருதினார்கள். பாஜக ஆட்சியின் சில அனுபவங்கள், எங்களுடைய 49 நாள் ஆட்சியை நினைவுகூர அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. மாநிலங்களுக்கு நடக்கும் தேர்தலை அதுவும் டெல்லி போன்ற சிறிய பிரதேசத்துக்கு நடைபெறும் தேர்தலை மத்திய அரசின் செயல்பாடு மீதான கருத்தறியும் வாக்கெடுப்பாகக் கருதத் தேவையில்லை. ஆனால், பிரதமர் இந்தத் தேர்தலை அப்படி மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். டெல்லியில் நடப்பது தேசத்தின் பிரதிபலிப்பு என்றார். இந்தத் தேர்தலில் தன்னுடைய சொந்த கவுரவத்தைப் புகுத்தினார். கேஜ்ரிவால் மீது வசைபாடினார். ஒரு பிரதமருக்கு இப்படிப்பட்ட பேச்சு அழகல்ல. அது அந்தப் பதவியின் மாண்பையே குறைத்து விட்டது. மத்திய அரசின் மீது கருத்தறியும் வாக்கெடுப்பாக இருந்திருக்க முடியாத இதை, அப்படிப்பட்ட ஒன்றாக அவர் ஓரளவுக்கு மாற்றிவிட்டார். இப்போதும்கூட அவர் செல்வாக்கிழந்துவிட்ட பிரதமர் என்று நான் கூற மாட்டேன். மக்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை, தான் விரும்பும் திசையில் - காலி நாற்காலிக்குக்கூட - திருப்பும் ஆற்றலை அவர் இழந்துவிட்டார் என்றே கூறுவேன்.
கிரண் பேடியை முதல்வர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அவர்களுடைய தேர்வு அவர்கள் முகத்திலேயே வந்து தாக்கிவிட்டது. பாஜக தோற்றதற்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நான் கருதவில்லை. இந்தத் தேர்தலில் தாங்கள் பின்தங்குகிறோம் என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான், அவர்கள் கிரண் பேடியைத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்தல் முடிவைத் தங்களுக்குச் சாதகமாக அவரால் திருப்பி விட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அவருடைய தேர்வு, முடிவை எங்கள் பக்கம் மேலும் சாதகமாகத் திருப்பி விட்டுவிட்டது.
நாட்டில் உங்களுடைய கட்சியை மேலும் விரிவுபடுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
தேசிய நோக்கம் கொண்ட கட்சியாக எங்கள் கட்சியை உருவாக்குவதே எங்கள் லட்சியம். இது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான கட்சியல்ல. கொள்கை சார்ந்த மாற்று அரசியலை மக்களுக்கு அளிக்கும் சோதனை முயற்சிதான் எங்களுடைய கட்சி. நாங்கள் எங்கே ஆரம்பித்தோம், எங்கே போக விரும்பு கிறோம் என்பதை அமர்ந்து பேசி, வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு கவனமுடன் திட்டமிட வேண்டும். இப்போதைக்கு நாங்கள் அப்படிப்பட்ட உத்தி எதையும் வகுக்கவில்லை.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் நீங்கள் கூட்டணி அமைக்கப்போவதாக வதந்தி நிலவுகிறதே?
அது எப்படிச் சாத்தியம் அல்லது அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் ஏதோ காங்கிரஸ் எதிர்ப்பு அல்லது பாஜக எதிர்ப்புக் கட்சி அல்ல. இப்போதுள்ள அரசியல் கட்சிகளையே கூடாது என்கிறோம். அதில், மாநிலங்களில் ஆட்சியில் இருந்த / இருக்கும் எல்லாக் கட்சிகளுமே அடக்கம். நாளை நாங்கள் லாலு பிரசாத்துடன் சேர்ந்து மேடை ஏறினால், நேர்மையான அரசியல் நடத்துவோம் என்று சொல்ல எங்களுக்கு என்ன தகுதி இருக்கும்?
உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற காலக்கெடு எதையும் நீங்கள் நிர்ணயித்துக்கொள்ளவில்லையே?
மக்கள் எதையும் உடனே செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்ப தில்லை. நிச்சயம் செய்ய வேண்டும் என்றுதான் எதிர் பார்க்கி றார்கள் என்பதை எங்களுடைய அனுபவத்திலிருந்து உணர்ந் திருக்கிறோம். நாம் நினைப்பதைவிட மக்கள் பொறுமைசாலிகள்.
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து இல்லாமல், நீங்கள் விரும்புகிற வகையில் நிர்வாகம் செய்ய முடியுமா?
இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடு. மத்திய அரசு இந்த உணர்வோடு செயல்படும் என்ற உணர்வோடு நாம் செயல்பட ஆரம்பிப்போம்!
- © ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி
************
ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றி டெல்லி மக்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்து முகங்களில் புன்னகையை வரவழைத்துள்ளது. நம்முடைய மகிழ்ச்சிகளுக்கெல்லாம் காரணங்கள் வெவ்வேறு; இடதுசாரிகளும் சமத்துவ - சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படக் காரணம், மதச்சார்பற்ற சக்திகளுக்குத் தேவைப்படும் ஆற்றலை இந்த வெற்றி அளித்திருக்கிறது. மத்தியவாத அரசியல் சார்புள்ளவர்களுக்கு, பிரதமர் வசிக்கும் சொந்த வீடான டெல்லியிலேயே பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி.
பாஜகவிலேயே முக்கியத்துவம் இழந்த கட்சித் தலைவர்களும் இந்தத் தோல்வி இப்போதைய தலைவர் களின் கண்களைத் திறக்க உதவும் எச்சரிக்கை என்ற அளவில் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். எல்லாவற்றை யும்விட ஆஆக வெற்றியின் முக்கியமான அம்சம்; நாட்டு மக்களின் ஜனநாயக உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டி யிருக்கிறது. அரசியல் சாதனைகளுக்காக அல்ல, இந்த ஒரு ஆக்கபூர்வமான அம்சத்துக்காகவே நானும் இதை வரவேற்கிறேன்.
ஆஆக ஆதரவாளன் அல்ல
முதலிலேயே ஒரு விஷயத்தைக் கூறிவிடுகிறேன். நான் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளன் அல்ல - அவருடைய ஆலோசகர்களில் சிலர் மதிக்கத் தக்கவர்கள் என்றாலும்கூட. அவருடைய எடுத்தேன் - கவிழ்த்தேன் போக்கு, வழக்கத்துக்கு மாறான அறிவிப்புகள், சமூகரீதியாக வலதுசாரிக் கொள்கைகளில் சார்பு, ஒரு தலைவராக சமூக - அரசியல் பார்வை இல்லாத குணம் போன்றவை எனக்குப் பிடிக்காது. ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் என்பது மட்டுமே அவரிடம் உள்ள சாதகமான அம்சம்.
இவ்வளவு தயக்கங்கள் இருந்தபோதிலும் 2013-ல் அவர் டெல்லியில் முதலமைச்சராகப் பதவியேற்றபோது மகிழ்ச்சி அடைந்தேன். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தார். ஒரு சாதாரண மனிதர், விசுவாசமான தொண்டர்களின் உதவியோடு முதலமைச்சர் பதவியில் போய் அமர்வது சாதாரணமாக நடக்கக்கூடிய செயலா? சமூகத்திலோ அரசியலிலோ எது நடந்தாலும் - நமக்கென்ன என்று - வேடிக்கை பார்க்கும் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிப்படையான, நேர்மையான அரசியலும் வலுவானதுதான் என்று நாட்டுக்கே நிரூபித்துக் காட்டினார். நாம் கண்டிக்கும் பதவி, பணம், அதிகாரம் அனைத்தும் கொண்ட ஒருவரை முதல்வர் பதவியிலிருந்தே தூக்கி எறிந்தார். அரசியல் தலைவர்களின் வாரிசுகள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற மாயையை உடைத்து, சாதாரண மக்களும் ஆட்சிக்கு வர முடியும் என்று புதிய மாற்று அரசியலை அடையாளம் காட்டினார்.
நம்முடைய மாநிலத்திலும் அரசியல் கலாச்சாரமும் காட்சிகளும் இனி மாறாதா என்று துணிச்சலுடன் நம்பத் தொடங்கினோம். அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடைபாதையில் வடை சுடும் நபரிலிருந்து நாட்டில் சமூக அந்தஸ்து பெற்ற தொழிலதிபர் வரை பலரும், நம் நாட்டில் மீண்டும் ஜனநாயகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று உணர்ந்தார்கள். அதுவரை தேசிய அரசியலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற ஜாம்பவான் களுக்கும் மாநிலங்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி போன்றவர்களுக்கும்தான் வாய்ப்பு என்று முடிவு கட்டியிருந்தோம்.
சாதி, மத அடிப்படையில் அல்ல
கடைசியாக ஒரு தலைவரும் அவருடைய கட்சியும் நமக்குப் புதியதொரு மாற்று வாய்ப்பையும் வழியையும் காட்டினர். இருண்ட குகையின் எதிர் முனையில் வெளிச்சம் - மங்கலாக இருந்தாலும் - தோன்றியது. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் நிதீஷ் குமார், மாயாவதி போன்று பலர் உள்ளனர். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் வித்தியாசமானவர். அந்த வித்தியாசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதி அல்லது மத அடை யாளத்தைச் சொல்லிக்கொண்டு கேஜ்ரிவால் அரசியல் வெற்றியைப் பெறவில்லை. ஊழலுக்கு எதிராக அனைத்து இந்தியர்கள் உள்ளத்திலும் கனிந்துகொண்டிருக்கும் கோபத்தை விசிறிவிட்டு ஆதரவைப் பெருக்கிக்கொண்டார்.
பிறகு வீழ்ச்சி ஆரம்பித்தது. ஆட்சியில் 49 நாட்கள் இருந்தபோது அரசு நிர்வாக இயந்திரத்தைக் கையாள முடியாமல் அசௌகரியமாக இருந்ததைப்போலத் தெரிந்தது. இதனாலேயே பதவியிலிருந்து விலகியது ஆஆக. ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் கேலிகளும் கிண்டல்களும் உலவத் தொடங்கின. இந்த கேலி கிண்டல்களுக்கு அப்பால், அவருடைய பதவி விலகல் டெல்லிக்கு அப்பாலிருந்த அவருடைய ஆதரவாளர்களை வெகுவாகப் பாதித்தது. ஆஆக அரசை, மாற்றத்துக்கான முன்மாதிரியாகப் பலர் பார்த்தார்கள், ஊழலற்ற எதிர்காலத்துக்கு அச்சாரம் என்று நினைத்தார்கள். அந்தக் கனவு கலைந்துவிட்டது. அதற்குப் பிறகு நடந்தது அதைவிட மோசமானது. மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆஆக 432 தொகுதிகளில் போட்டியிட்டது. சாமானிய மனிதர்களை மீட்க வந்த ரட்சகராகவே அர்விந்த் கேஜ்ரிவால் காட்டிக்கொண்டார். நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோரைப் போல அவரையும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகச் செய்தி ஊடகங்கள் பார்த்தன. ஆஆகவுக்கு ஆணவம் தலைக்கேறியது, தன்னம்பிக்கை பொங்கி வழிந்தது, தன்னை தேசியக் கட்சியாகவே நினைக்கத் தொடங்கியது. ஆனால், நீர்க்குமிழி போல அந்த ஆர்வம் வெடித்துவிட்டது. தேசிய அரங்கிலிருந்து ஆஆக துடைத்து எறியப்பட்டது. பஞ்சாபில் மட்டும் அந்தக் கட்சியின் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சியின் மையக் களமான டெல்லியிலிருந்து ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
தோல்வி யாருடையது?
பொறுப்புகளைக் கைவிட்டதன் மூலம் அர்விந்த் கேஜ்ரிவாலும் அவருடைய சகாக்களும் பலருடைய கனவுகளை நொறுக்கிவிட்டனர். ஆம் ஆத்மியின் தோல்வி என்பது ஆஆகவினுடையதோ, தனி நபருடையதோ அல்ல - இந்திய மக்களுக்கு அவர்கள் செய்யத் தவறிய கடமைதான் என்று நினைத்தேன். அவர்களால் மாற்று அரசை, மாற்று நிர்வாகத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தனர். அதைச் செய்ய முடியாமல் அவர்கள் உள்ளுக்குள்ளேயே நொறுங்கியதன் மூலம் சாதி, மதச் சார்பு இல்லாமல் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பையும் பாழாக்கிவிட்டார்கள் என்று கருதினேன். மக்கள் மீண்டும் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள், தொழில்முறை அரசியல் வாதிகளை விட்டால், தங்களுக்கு வேறு கதியில்லை என்று. பழைய கட்சிகளின் முகங்களிலும், “அப்போதே நாங்கள் சொல்லவில்லை” என்ற கேலி தெரிந்தது.
இப்போது, டெல்லி விரும்பியது - விரும்புகிறது ஆஆக வெற்றிபெற வேண்டுமென்று; கேஜ்ரிவாலின் கூட்டணியில் புதிய வழியை டெல்லி கண்டது. அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்திருப்பதன் மூலம் புதிய துணிச்சலான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டெல்லி வழங்கியிருக்கிறது. கேஜ்ரிவால் லட்சியவாதி அல்ல; ஆனால், உண்மையான மனிதர் என்று அடையாளம் கண்டது டெல்லி. அதன் விளைவு தேர்தல் களமே வியத்தகு மாற்றத்தைக் கண்டது. நம்முடைய கண்களிலிருந்து மறைந்துகொண்டிருந்த ஒளிப்பொறியை மீட்டு மீண்டும் பிரகாசிக்கச் செய்யும் வகையில் டெல்லிவாசிகள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
டெல்லிக்கு மட்டுமல்ல
இது டெல்லிக்கு மட்டுமல்ல, நமக்கும் நாம் எப்படி அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் பார்க்கிறோம் என்பதையும் பற்றியது. பெரிய கட்சிகளைக் காணாமல் அடிப்பதைப் பற்றியதல்ல. நாட்டுக்கு முக்கியமான ஒரு கடமையை டெல்லிவாசிகள் நிறை வேற்றியிருக்கின்றனர். கட்சிகளுடைய செயல்பாட்டில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இருந்தால், அவர்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் அதை மன்னித்து ஏற்றுக்கொண்டுவிடலாம் என்று உணர்த்தியிருக்கிறார்கள். மாற்றங்களில் நம்பிக்கை வேண்டும் என்பது அடுத்த அம்சம். மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்திருந்தாலும் அவர்கள் செய்த நன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பது அடுத்தது. மிகப் பிரம்மாண்டமான பிரச்சாரம், அடுத்தடுத்த விளம்பரம் என்றெல்லாம் களத்தில் இடம்பெற்றாலும், தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட அக்கறையுள்ள அரசியல் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
நேர்மையான, வெளிப்படையான அரசியல் என்ற லட்சியத்தைப் பற்றவைத்துவிட்டு அணைத்த ஆஆகவுக்கு வாக்களித்து, அந்தச் சுடரை மீண்டும் டெல்லி மக்கள் தூண்டி யிருக்கிறார்கள். லட்சியவாதம் மீண்டும் மையத்துக்கு வந்திருக்கிறது அது நிலைக்குமா, மறையுமா என்பது கேஜ்ரிவால் அரசின் வெற்றியைப் பொருத்திருக்கிறது. அவருக்கு இப்போது எதிர்க் கட்சியே இல்லை. எனவே, அவரே அவருக்கு எதிர்க் கட்சிபோலச் செயல்பட்டுக்கொள்ள வேண்டும். இது சாதாரண வேலையல்ல, டெல்லி மக்களுக்காக அல்ல; இந்திய மக்களுக்காக இந்தக் கடமையை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அப்படி நடக்குமா? காலம் மட்டும்தான் பதில் சொல்ல முடியும், அதுவரையில் - நன்றி டெல்லி!
- டி.எம். கிருஷ்ணா, இசைக் கலைஞர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: tm.krishna@gmail.com

தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக