திங்கள், 30 நவம்பர், 2015

வான் கொடையான பருவ மழை!

பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் முக்கியக் காரணம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் - நவம்பர் மாதங்கள் மழைக் காலமாகும். உலகின் மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் இந்தியத் துணைக் கண்டம் மழை விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.
மழைக் காலம் என்பது ஓரளவு வரையறுக்கப்பட் டிருப்பதால், விவசாயிகளும் மற்றவர்களும் தத்தமது செயல்பாடுகளை அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ள முடிகிறது. பருவ மழை பொய்ப்பது அரிதாக நடைபெறுகிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்று கொண்டுவரும் மழைக்குத் தென்மேற்குப் பருவ மழை என்றும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்றின் மூலம் வரும் மழை வடகிழக்குப் பருவ மழை என்றும் குறிப்பிடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குக் கரையோரங்களிலும் வட கிழக்குப் பருவ மழை கிழக்குக் கரைப் பகுதிகளிலும் பொழிகிறது. தென்மேற்குப் பருவம் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.
பருவ மழையின் பலன்கள்
ஏறத்தாழ ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளாகத்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பருவ மழைகள் பெய்கின்றன. இமய மலைத் தொடர்களும் திபெத்தியப் பீடபூமியும் உருவான பிறகுதான் பருவ மழைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால அட்டவணையில் பெய்யத் தொடங்கின. இந்தியத் துணைக் கண்டம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, யூரேசியக் கண்டத்துடன் மோதியபோது அவற்றின் விளிம்புகள் மேல்நோக்கி மடிந்து இமய மலைகளும் திபெத்தியப் பீடபூமியும் எழுந்தன. திபெத்தியப் பீடபூமி கோடையில் சூடாகி வறண்ட வளிமண்டலமுள்ளதாக மாறும். அதற்குத் தெற்கேயுள்ள இந்துமாக்கடல் அதைவிடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். சூடான நிலப் பரப்புகளிலிருக்கும் காற்று சூடாகி வானை நோக்கி மேலே எழும்பும். அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்காக இந்துமாக் கடலிலிருந்து குளிர்ந்த காற்று நீராவியைச் சுமந்தபடி தென்மேற்குப் பருவக் காற்றாக வீசுகிறது.
குளிர் காலத்தில் வடகிழக்கிலுள்ள நிலப் பரப்புகளிலிருந்து குளிர்ச்சியுற்ற காற்று, ஒப்பீட்டளவில் உயர் வெப்ப நிலையில் உள்ள கடலை நோக்கி வீசத் தொடங்குகிறது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வங்கக் கடலைக் கடந்து வரும் இக்காற்று, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசங்களில் மழையைப் பெய்விக்கிறது.
தெற்காசியாவின் சிறப்பு
இமய மலைத் தொடர் இன்றிலிருந்து சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வளரத் தொடங்கியதாக நிலவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவை ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றிருக்கும் உயரங்களை எட்டின. இன்றளவும் அவை மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை வளர்ந்த பிறகு, தென்மேற்கிலிருந்தும் வட கிழக்கிலிருந்தும் வீசிய ஈரமான காற்றை அவை இந்தியத் துணைக் கண்டத்துக்குள் திருப்பிவிடத் தொடங்கின. அந்தக் காற்று பருவ மழைகளைச் சுமந்து வந்து பொழிவித்தன. இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன.
தென்மேற்குத் திசையிலும் வடகிழக்குத் திசையிலும் குறிப்பிட்ட காலகட்டங்களில் பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது கடக ரேகைப் பகுதியும் மகர ரேகைப் பகுதியும் மாறி மாறி சூரியனுக்கு நேராக வருகின்றன. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் நடுவிலுள்ள பகுதியில் கோடையில் நிலப் பரப்பு கடலைவிட அதிக வெப்பத்தைப் பெற்றுச் சூடாகிறது. குளிர் காலத்தில் நிலப் பரப்பு கடலைவிட அதிகக் குளிர்ச்சியடைகிறது. வளிமண்டலத்தின் வெப்பச் சலனம் காரணமாக கோடையில் கடலிலிருந்து நிலத்துக்கும் குளிர் காலத்தில் நிலத்திலிருந்து கடலுக்கும் முறையே தென் மேற்குத் திசையிலிருந்தும் வட கிழக்குத் திசையிலிருந்தும் காற்று வீசுகிறது.
மெளசிம், மெளசம் - மான்சூன்!
தீவிரமான மழைப் பருவக் காற்றுகள் தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவின. பருவ மழைக் காலத்தைக் குறிக்க அரபியர்களும் இந்தியர்களும் பயன்படுத்திய மௌசிம், மௌசம் என்ற சொற்கள் ஆங்கிலத்தில் ‘மான்சூன்’ என உருமாறின. அரபிய வணிகர்கள் மிளகு, லவங்கம் வாங்க இந்தியாவுக்கு வரவும், தாயகம் திரும்பவும், தென்னகத்தின் வணிகர்கள் கீழ்த்திசை நாடுகளில் தமது வியாபாரத்தையும் கலாச்சாரத்தையும் பரப்பவும் பருவக் காற்றுகள் பாய்மரக் கப்பல்களை உந்தித்தள்ளி உதவியிருக்கின்றன. அதன் காரணமாக அவற்றை வணிகக் காற்றுகள் எனக் குறிப்பிடுவார்கள்.
பொய்த்தால் என்னாகும்?
பருவ மழை பொய்த்தால் எல்லாமே குலைந்துபோகும். 1970-ல் அவ்வாறு நிகழ்ந்து பெரும் வறட்சி ஏற்பட்டது. அடிக்கடி கனமழை கொட்டும் வடகிழக்கு மாநிலங்களில்கூட வறட்சி ஏற்பட்டது உண்டு. சில ஆண்டுகளில் ராஜஸ்தான் பாலைவனத்தில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழைக் கால அட்டவணையை உறுதியாக நிர்ணயிக்க முடியாததால், பழங்காலத்திலிருந்தே மக்கள் ஏரிகளையும் குளங்களையும் தடுப்பணைகளையும் அமைத்து மழை நீரைச் சேமித்து வைத்தார்கள்.
தவறாத பருவம்
ஜூன் மாதம் ஆரம்பித்தவுடன் இந்திய விவசாயிகள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவி டுகிறார்கள். எது தவறினாலும் ஜூன் மாதம் 20-ம் தேதி மும்பை பகுதியில் மழை பொழிவது தவறாது என்று அங்கிருந்து வந்த நண்பர் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார். அசாம், வங்காளம், ஒடிஷா, பிஹார் ஆகிய இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னல்கள் முழங்கப் பலத்த புயல்கள் வீசும். அதற்குக் ‘காலா பைசாகி’என்று பெயர். சில ஆண்டுகளில் அத்துடன் பெரும் மழையும் சேர்ந்துகொள்ளும். பருவ மழை தொடங்கிவிட்டதா இல்லையா என்று வானிலை ஆய்வர்கள் குழம்பிப்போவார்கள்.
பொதுவாக, அரபிக் கடல் வகை, வங்கக் கடல் வகை எனப் பருவ மழை பிரித்துப் பார்க்கப்படுகிறது. அரபிக் கடல் வகை சாதாரணமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளக் கரையை அடைந்து, இரண்டாவது வாரத்தில் மராட்டியக் கரையை எட்டும். வங்கக் கடல் வகை வடமேற்காக நகர்ந்து அசாம், வங்காளம் ஆகியவற்றை ஜூன் முதல் வாரத்தில் எட்டிய பிறகு, இமய மலை மதில்களால் மேற்கே திருப்பிவிடப்படும். ஜூன் மாத நடுவில் அரபிக் கடல் வகையும் வங்கக் கடல் வகையும் மத்திய நிலப் பகுதியில் சந்தித்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் மழையைப் பொழிவிக்கும். ஜூலை நடுவில் மழை காஷ்மீருக்கும் இமாசலப் பிரதேசத்துக்கும் பரவும். தென்னிந்தியாவில் ஒன்று முதல் இரண்டு கி.மீ. உயரமுள்ள முகடுக ளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக் கடல் வகை மழையைப் பெருமளவில் கறந்துகொண்டு விடுகின்றன. நல்வினைப் பயனாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மூலம் அம்மழை நீர் ஓரளவாவது தமிழகத்துக்கும் தக்காணத்துக்கும் கிடைக்கிறது!
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்

சனி, 28 நவம்பர், 2015

மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ! - சிவா அய்யாதுரை நேர்காணல்

மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ! - சிவா அய்யாதுரை நேர்காணல்

ந.வினோத் குமார்
COMMENT   ·   PRINT   ·   T+  
‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!' என்று மேற்கத்திய ஊடக செய்திகளில் சமீபத்தில் இடம்பிடித்தார் சிவா அய்யாதுரை. ‘இ மெயில் தமிழன்' என்பதுதான் இவருடைய அடையாளம். ஆனால், இப்போது மரபணு மாற்றப் பயிர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்து, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும் மாறியுள்ளார் சிவா.
மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற தனது ஆய்வைப் பொய் என நிரூபித்தால், 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 60 கோடி) மதிப்புள்ள தன்னுடைய கட்டிடம் ஒன்றை மான்சான்டோவுக்குப் பரிசாக அளிப்பதாகச் சவால் விட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் அவருடன் தொலைபேசி மூலம் பேசியதிலிருந்து...
மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது?
உலகின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பத்திரிகைகளில் அமெரிக்காவின் ‘எம்.ஐ.டி. ரிவ்யூ' (மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) இதழ் புகழ்பெற்றது. அந்தக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவன் நான்.
அந்த இதழில் ‘மரபணு மாற்றப் பயிர்கள் மிகவும் பாதுகாப்பானவை' என்கிற ரீதியில் ஒரு கட்டுரை கடந்த ஆண்டு வெளியானது. அந்தக் கட்டுரை ஒரு விளம்பரதாரரின் கட்டுரையைப் போலிருந்தது. உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்று, இதுபோன்ற செயலில் ஏன் ஈடுபட வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்ற கேள்விகள் எனக்கு எழுந்தன. அப்படியானால், அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானவை என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆய்வில் இறங்கினேன், என்னோடு 15 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அடிப்படையில் நீங்கள் ஒரு கணினி நிபுணர். ஆனால், உயிரியல் தொடர்பான ஆய்வை எதன் அடிப்படையில் மேற்கொண்டீர்கள்?
என்னுடைய பட்டப் படிப்பு கணினி தொடர்பானதுதான். ஆனால், என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை ‘சிஸ்டம்ஸ் பயாலஜி' துறையில் மேற்கொண்டேன்.
உடலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால், அந்தப் பிரச்சினையை மட்டும் தனியாக அணுகாமல், ஒட்டுமொத்த உடல்நலனையும் அணுகுவதுதான் சிஸ்டம்ஸ் பயாலஜி. உதாரணத்துக்கு, நமது தோலில் சின்னச் சின்னதாகப் புள்ளிகள் தோன்றுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதைத் தோல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அந்தப் பிரச்சினைக்கான மூலம் எது என்று ஆராய்ந்து, அதற்குத் தீர்வு தருவதுதான் இந்தத் துறையின் சிறப்பம்சம். அந்த அடிப்படையில்தான் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.
எம்.ஐ.டி.யில் நீங்கள் மாணவராக இருந்தபோது உருவாக்கிய ‘சைட்டோ சால்வ்' எனும் கருவியைக் கொண்டுதான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறீர்கள். அது குறித்து...
‘சைட்டோ சால்வ்' என்பது ஒரு மென்பொருள் போன்றது. இந்தக் கருவியின் செயல்பாட்டை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். வெள்ளைப்பூண்டை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஒரு மாடல் தயாரித்திருப்போம். அதேபோல இஞ்சியை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு ஏற்ப உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய இன்னொரு மாடல் தயாரித்திருப்போம்.
‘சைட்டோ சால்வ்' என்பது ஒரு மென்பொருள் போன்றது. இந்தக் கருவியின் செயல்பாட்டை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். வெள்ளைப்பூண்டை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஒரு மாடல் தயாரித்திருப்போம். அதேபோல இஞ்சியை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு ஏற்ப உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய இன்னொரு மாடல் தயாரித்திருப்போம்.
ஆனால், இவை இரண்டையும் ஒருவர் ஒரே நேரத்தில் எவ்வளவு உட்கொள்கிறார், அந்த அளவுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்குத் தனியாக ஒரு மாடல் இல்லாமல் இருக்கும். எனவே, இந்த இரண்டையும் கலந்து ஒரு புதிய மாடல் உருவாக்க முயற்சிப்போம், இல்லையா?
அது தேவையில்லை. ஏற்கெனவே பூண்டுக்கும் இஞ்சிக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் மாடல்களை ஒன்றிணைத்தாலே, நமக்குத் தேவையான தகவல் கிடைத்துவிடும். இப்படித்தான் ‘சைட்டோ சால்வ்' செயல்படுகிறது.
மரபணு மாற்றப் பயிர்கள் குறித்து, ஏற்கெனவே நம்மிடம் உள்ள தகவல்களை ஒன்றாக இணைத்து, அதன்மூலம் கிடைக்கும் புதிய தகவலை 'சைட்டோ சால்வ்' ஆய்வு முடிவாகத் தரும். சிக்கலான மூலக்கூறு விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்தக் கருவி பெரிதும் பயன்படும்!
மரபணு மாற்றப் பயிர்களைப் புழக்கத்தில் அனுமதிக்கும்போது, ‘substantially equivalent to a non-GMO' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் உள்ளர்த்தம் என்ன?
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மருத்துவக் கருவிகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று 1976-ம் ஆண்டில் அமெரிக்க அரசு ஒரு சட்டத்தை இயற்றியது.
உதாரணத்துக்கு ஸ்டெதஸ்கோப் ஒன்றை 7 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு புழக்கத்தில்விட விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைப் புழக்கத்தில் விடுவதற்கு மேற்கண்ட சட்டத்தின்படி அனுமதி பெற வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஸ்டெதஸ்கோப்பில் சின்னதாக மாற்றம் செய்து நீல நிறத்தில் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நிறத்தை மாற்றியதால், மேற்கண்ட சட்ட நடைமுறைகளின்படி மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அப்போது ‘substantially equivalent to the earlier product' (ஏற்கெனவே இருக்கும் பொருளுக்கு, இணையான பொருள்) என்று கூறி அதை அனுமதிப்பார்கள்.
மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்கும்போது, இதே ‘கான்செப்ட்'டை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் வாதம்.
அமெரிக்காவில் இத்தகைய பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் ‘ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன்' எனும் அமைப்புக்கு உண்டு. இந்த அமைப்பின் ‘டெபுடி கமிஷனர் ஆஃப் புட்ஸ்' பதவியில் மைக்கேல் டெய்லர் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்திருக்கிறார். இந்த மைக்கேல் டெய்லர் மான்சான்டோவின் முன்னாள் துணைத் தலைவர் என்பது நகைமுரண்!
மரபணு மாற்ற சோயாவில் உள்ள ‘ஃபார்மல்டிஹைட்' என்ன வகையான பாதிப்புகளைச் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தும்? ‘க்ளூட்டதியானி'ன் பங்கு என்ன?
‘ஃபார்மல்டிஹைட்' வேதிப்பொருள் இயற்கையாக விளையக்கூடிய பயிர்களிலும் குறைந்த அளவு இருக்கும். மரபணு மாற்ற நடவடிக்கையில், ஒரு பயிரில் இருக்கக்கூடிய அந்த வேதிப்பொருளின் சதவீதம் அதிகரிக்கும். இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள்.
அதேநேரம், இயற்கையாக விளையும் பயிர்களில் ‘க்ளூட்டதியான்' எனும் பொருள் உண்டு. இது ஒரு ஆன்டி ஆக்சிடன்ட். மனிதர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது. மரபணு மாற்ற நடவடிக்கையின்போது, இந்த வேதிப்பொருளின் சதவீதம் குறைந்துவிடும்.
உங்களது ஆய்வுக் கட்டுரை வெளியான ‘அக்ரிகல்சுரல் சயின்சஸ்' ஆய்விதழ், பணம் பெற்றுக்கொண்டு கட்டுரைகளை வெளியிடும் இதழ் என்று விமர்சிக்கப்படுகிறதே? இந்தப் பிரச்சினை எழுந்தபோது ‘ஓப்பன் ஆக்சஸ்' இதழ்கள் பற்றி நீங்கள் பேசினீர்களே...
இன்றைக்கு அறிவியல் உலகில் நேச்சர், சயின்ஸ் மற்றும் செல் ஆகிய மூன்று இதழ்கள்தான் மிகவும் பிரபலம். இந்த இதழ்களில் தங்களுடைய கட்டுரை வெளியாக வேண்டும் என்பது ஒவ்வொரு விஞ்ஞானியின் கனவு. ஆனால், இவற்றில் வெளியாகும் கட்டுரைகளை ஒரு சாமானிய மனிதர் படிக்க வேண்டும் என்றால், ரூ. 5 ஆயிரமோ அல்லது ரூ.15 ஆயிரமோ செலவழிக்க வேண்டும்.
ஆனால், ‘அக்ரிகல்சுரல் சயின்சஸ்' போன்ற ‘ஓப்பன் ஆக்சஸ்' இதழ்களில் ஒருவர் தனது கட்டுரையை வெளியிட வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அது பதிவுக் கட்டணம் போன்று, ஒரே ஒரு முறை செலுத்தப்பட வேண்டியது! ஆனால், அதைக் கட்டுரையை வெளியிடுவதற்கு லஞ்சம் கொடுப்பதுபோலச் சிலர் சித்திரிக்கிறார்கள்.
மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பாக இந்தியாவில் எழுந்து வரும் எதிர்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்புகளுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? அந்தப் பயிர்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் திட்டம் இருக்கிறதா?
நிச்சயமாக! அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறேன். அப்போது மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்திய அமைப்புகளுடன் இணைந்து, இத்தகைய பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதற்கான ‘தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை' உருவாக்குவது குறித்து விவாதிக்க இருக்கிறேன்.
மனித வாழ்வின் அடிப்படையே உணவையும் விவசாயத்தையும் மையமாகக் கொண்டதுதான். பன்னாட்டு நிறுவனங்கள், அதில் கை வைக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?
மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் ஒரு நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு, அந்த நாட்டின் மண்ணைக் கட்டுப்படுத்துகின்றன. பிறகு அந்த நாட்டைக் கைப்பற்றுகின்றன. இதுபோன்ற நிறுவனங்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைப் போன்று ஓர் இயக்கம், மீண்டும் தோன்ற வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சில விஞ்ஞானிகளும் ஊழல் கறைபடிந்தவர்களாக உள்ளனர். நாம் அனைவரும் இயற்கையின் ஓர் அங்கம் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருந்தால், மரபணு மாற்றப் பயிர்களுக்கு அவசியமே இல்லை!

தாக்குப்பிடிக்குமா சென்னை? பெருமழையா?

தாக்குப்பிடிக்குமா சென்னை?

எஸ்.கோபிகிருஷ்ண வாரியார்
COMMENT   ·   PRINT   ·   T+  
சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
சென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுப்பாடற்ற வளர்ச்சியுடன், அதிவேகமாக மாறிவரும் இந்தப் பெருநகரம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவுள்ள கடுமையான இயற்கை நிகழ்வுகளால் (extreme weather event) எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியங்கள் தெரிகின்றன.
பெருமழையா?
நவம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 236 மி.மீ. என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் விடாமல் மழை பெய்தது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகமாகப் பெய்த மழையின் அளவு 150 மி.மீ. மட்டுமே. அது நடந்தது 2009 நவம்பர் மாதம்.
சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,468 மி.மீ. நவம்பர் மாதத்தில் சராசரியாக 374 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் பெய்த மழைப்பொழிவு மாதச் சராசரியில் 63 சதவீதமும், ஆண்டு சராசரியில் 16 சதவீதமும், இந்தப் பருவமழைக்கான சராசரியில் 80 சதவீதமும் ஆகும்.
சென்னையின் நிலஅமைப்பு
சென்னை மாநகரம் தட்டையான கடற்கரை சமவெளிப் பகுதியின் மீது எழுந்துள்ளது. இந்தச் சமவெளிப் பகுதிகள் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளில் முடிவடைகின்றன. சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றில் தண்ணீர் ஓடுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தடை ஏற்படுத்தப்பட்டு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆறுகளின் பக்கவாட்டில் இருக்கும் வெள்ள வடிநீர் பகுதிகள் முழுவதும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அது மட்டுமில்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்களை மணல்மேடு தொடர்ச்சியாக அடைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மழை பெய்யும்போது வெள்ளம் வரத்தானே செய்யும்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளபடி, 1976 நவம்பர் மாதம்தான் அதிகபட்சமாக 452.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அன்றைக்கு அந்தப் பெருமழையைச் சென்னை தாங்கியிருந்தாலும், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெருமழைப் பொழிவுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைச் சென்னை பெருநகரம் படிப்படியாக இழந்து வந்திருக்கிறது.
தாக்கமும் விளைவும்
கடந்த சில பத்தாண்டுகளில் சென்னை, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துப் பகுதிகள் இணைந்து ஒரு பெருநகராக உருவெடுத்துள்ளது. மக்கள்தொகை பெருமளவு அதிகரித்த இந்திய நகரங்களில் சென்னை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் சேர்த்துச் சென்னையின் மக்கள்தொகை 86.5 லட்சம். 2001-ல் இருந்த 65.6 லட்சத்தைவிட, இது 31 சதவீதம் அதிகம். இந்த மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பங்கு, தகவல் தொழில்நுட்பப் பணிக்காகப் பெருமளவு சென்னை வந்தவர்களாலேயே ஏற்பட்டது.
அதையொட்டிச் சென்னையையும் மாமல்லபுரத்தையும் இணைக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, அதையொட்டியுள்ள சதுப்புநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுவழி, நான்குவழி அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையை ஒட்டி அலுவலகங்கள், உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எழுந்தன. இந்தப் பகுதியை நகரத்தின் மற்ற பகுதியுடன் இணைக்கும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டன. அவற்றையொட்டியும் கட்டுமானங்கள் வளர்ந்தன. தெற்குப் பகுதி பெருத்து வீங்கிக்கொண்டே போனது.
கட்டிடக் கழிவும் குப்பையும்
தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம், அத்துடன் இணைந்த நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த பெருங்குடியில் பிரச்சினைகளை மோசமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தது. மாநகராட்சி தரும் புள்ளிவிவரத்தின்படி சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு 45,00,000 கிலோ குப்பையும், 70,000 கிலோ கட்டிடக் கழிவும் உற்பத்தியாகிறது. இதில் பாதிக்கு மேல் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன.
சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2007-ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் 317 ஹெக்டேர் பரப்பைப் பாதுகாக்கப்பட்ட காடாகத் தமிழக அரசு அறிவித்ததால், அந்தப் பகுதி மட்டும் கட்டுமானங்களிலிருந்து தப்பித்து இருக்கிறது.
சென்னை மாநகரில் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்பது, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் கடைசிக் கண்ணியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்தது. முந்தைய பத்தாண்டுகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த குளங்களும் நீர்நிலைகளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன அல்லது குப்பை, கட்டிடக் கழிவு கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.
வெள்ளம் சூழ்ந்து நிற்கும் சென்னை புறநகரின் பறவைப் பார்வை
சமநிலை சீர்குலைவு
சென்னைநிலஅமைப்பியல் ரீதியில் தட்டையான ஒரு நகரம். கடல் மட்டத்திலிருந்து இந்த நகரத்தின் உயரம் 2 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே. இந்தப் பின்னணியில் நீர்நிலைகள் மட்டுமே, சென்னையின் நீர் சமநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. அதிகப்படியான கனமழையைத் தாங்கிக்கொண்ட அவை, அந்த நீரைத் தக்கவைத்துக்கொண்டு கோடைக் கால நீர்த்தேவையையும் பூர்த்தி செய்தன. எவ்வளவு காலத்துக்கு என்று கேட்டால், சில நேரம் 10 மாதங்கள்வரைக்கும்.
இப்படியாக நீர் சமநிலையைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெருமழை பெய்யும்போது ஒன்று வெள்ளம் வரும் அல்லது மழைநீர் கடலைச் சென்றடையும். நகரில் ஓடும் ஆறுகளின் கரைகளும், வெள்ள வடிநிலப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், நகரில் இருக்கும் ஆறுகள் வெள்ளத்தைச் சுமந்து சென்றிருக்கும். ஆனால் அடையாறு, கூவம் கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆற்றின் வழியாக வெள்ளநீர் செல்வதைத் தடுக்கின்றன. அதன் காரணமாகக் கரைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக வெள்ளம் ஊருக்குள் நுழைந்து வெள்ளக் காடாக்குகிறது.
கூடுதல் பிரச்சினை
சென்னை துறைமுகப் பகுதியில் 1960-களில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், வெள்ளம் ஏற்படுவதற்குக் கூடுதல் சாத்தியத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நகரின் வடக்குப் பகுதியில் உள்ள மணல் அடித்துவரப்பட்டு, துறைமுகத்துக்குத் தெற்கில் உள்ள கரைப் பகுதியில் மணல் சேர்கிறது. இதன் காரணமாகவே நாட்டிலேயே மிகவும் அகலமான மெரினா கடற்கரை உருவானது.
ஒரு பக்கம் அகலமான கடற்கரை அழகாக இருப்பதாகத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் கூவம், அடையாறு ஆற்று முகத்துவாரங்களை மணல்மேடுகள் தடுப்பதால் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆற்று முகத்துவாரத்தை மணல்மேடு அடைக்காமல் பார்த்துக்கொள்வதும், மழைநீர் வடிகால் அமைப்பைப் பராமரிப்பதும் பெருமளவு நேரம், மனித உழைப்பு, பணத்தைக் கோரும் செயல்பாடுகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
கடும் வானிலை நிகழ்வு
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் இணைந்து சென்னை நகரை எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியதாக மாற்றுகின்றன. பருவநிலை மாற்றத்தால் சென்னை எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நவம்பர் மாதப் பெருமழையைப் போலக் கடும் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.
அத்துடன் வங்கக் கடல் பகுதியில் ஓராண்டில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் காற்று, கடுமையான புயல் காற்று போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 1950 முதல் 2014 வரையிலான தரவுகளின்படி, 1966-ல் அதிகபட்சமாக 16 இயற்கைச் சீற்றங்களும், அதற்கு அடுத்த ஆண்டு 14 இயற்கைச் சீற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமீபத்திய பத்தாண்டுகளில் 2006-ல்தான் அதிகபட்சமாக 10 இயற்கைச் சீற்றங்கள் வந்துள்ளன. எனவே, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கவில்லை.
சமாளிப்பது கடினம்
தமிழக அரசின் பருவநிலை மாற்றச் செயல்திட்ட அமைப்பின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் புயல்களின் எண்ணிக்கை குறையும் என்றாலும், அவற்றின் தீவிரமும் காற்று திசைவேகமும் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் கடல்மட்ட உயர்வால், வெள்ளம் ஏற்படுவது மேலும் அதிகரிக்கும். 2100-ம் ஆண்டுக்குள் தமிழகக் கடற்கரையோரம் 0.19 முதல் 0.73 மீட்டர்வரை கடல்மட்டம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
நமது நகரங்களும், சமூகங்களும் இதுபோன்ற வானிலை நிலையில்லாமல் போகும் பெருமழை நிகழ்வுகளுக்குத் தகவமைத்துக்கொள்வதே, எதிர்காலப் பருவநிலை மாற்றத்துக்குத் தகவமைத்துக் கொள்வதற்கு அடையாளமாக அமையும். சமீபத்தில் வெள்ளத்தைக் கையாள்வதில் சென்னை மாநகரம் பெரிதளவு திணறியது. இனிமேலாவது பெருமழை நேரங்களில் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதை, சென்னை மாநகர நிர்வாகமும் மக்களும் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யப் பணிபுரிய வேண்டும். அந்தச் செயல்பாடு மட்டுமே எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் கடும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நமக்கு உதவும்.
- கட்டுரையாளர், பானோஸ் தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர் தொடர்புக்கு:gopiwarrier@gmail.com 
நன்றி: India Climate Dialogue 
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

வியாழன், 26 நவம்பர், 2015

ஜப்பானியத் தமிழறிஞருமான நொபோரு கரஷிமா

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான நொபோரு கரஷிமா காலமானார். தமிழுக்கு அவரது பங்களிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழக தமிழ்த்துறையின் வருகை தரு பேராசிரியர் அண்ணாமலை எழுதும் குறிப்பு

நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர்.
சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.
தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.
அன்றைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே அவர் கல்வெட்டுகளைப் பார்த்தார்.
அரசர்களின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் சாதனமாக மட்டும் அவற்றை அவர் பார்க்கவில்லை.
கல்வெட்டுகளிலிருந்து அரச வெற்றிகள் பற்றி நாம் கேட்கும் உரத்த குரலை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வரும் முனகல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த முனகல்களில்தான் சாதாரண மக்களின் குரலைக் கேட்கலாம்.
அதே நேரத்தில், தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலைபெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துச் சொன்னார். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர் கரஷிமா. அவருடைய ஆய்வு பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆனாலும், அது சிங்கநோக்காக சோழருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் பார்க்க இன்றியமையாதது. கரஷிமாவின் விஜயநகர ஆட்சி பற்றிய ஆராய்ச்சியில் இதைக் காணலாம்.
தமிழ் மீது காதல் கொண்ட கரஷிமா
இவருடைய ஆராய்ச்சியின் தரவுகள் பெரும்பாலும் கல்வெட்டுகளிலிருந்து வருபவை. தொடர்ந்து கல்வெட்டுகளில் மற்ற ஆய்வாளர்களும் இளம் தலைமுறை ஆய்வாளர்களும் ஈடுபடப் பல தரவுகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கரஷிமா. இவற்றைப் பயன்படுத்தாமல் செய்யும் எந்தத் தமிழக வரலாற்று ஆராய்ச்சியும் மேலோட்டமானதாகவே இருக்கும்.
கரஷிமா தமிழ்க் கலாச்சாரத்தின்மீதும் மக்களின் மீதும் காதல் கொண்டவர். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தன்னுடைய ஜப்பானிய மாணவர்களுக்காக ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.
கரஷிமா உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அந்தத் துறையில் தென்னிந்திய வரலாற்றைப் படிக்க இடம் தேடித் தந்தவர். இந்த ஆராய்ச்சிக்குப் பல ஜப்பானிய மாணவர்களை உருவாக்கியவர், ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெயர்போன தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உண்டு. அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் உள்ள வரலாற்று அறிஞர்களிடம் அதிகம், அந்த மேல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிப் போக்கில் கரஷிமாவின் அணுகுமுறையின் தாக்கத்தைக் காணலாம். இந்தத் தாக்கம் தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர்களிடமும் நேரடியாக ஏற்பட வேண்டும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்
கரஷிமா உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நான் அதன் செயலாளாராக இருந்தேன். அப்போது அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் மனம் செயல்படும் விதம் தெரியும். தஞ்சை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிறகு அடுத்த மாநாட்டை நடத்தக் காலம் தாழ்த்தியதற்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தது எனக்குத் தெரியும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிச் சில சிந்தனைகள் அவரிடம் இருந்தன. தமிழ் ஆய்வை இக்காலத் தமிழ் அரசியலிலிருந்து பிரிப்பது அவற்றில் ஒன்று. அதையே அவருடைய வாழ்க்கைச் செய்தியாக நாம் கொள்ளலாம்.
கரஷிமா என்னுடைய அறிவுலக நண்பர் மட்டுமல்ல; குடும்ப நண்பரும்கூட. அவரை நான் கடைசியாக 2013 டிசம்பரில் டோக்கியோவில் அவர் வீட்டில் பார்த்தேன். ஜப்பானிய கலாச்சாரமும் தமிழ்க் கலாச்சாரமும் கலந்த வீடு அது. அவருடைய மனைவி தக்காக்கோவோடும் மூன்று மகன்களோடும் கரஷிமாவை இழந்த துயரத்தை பகிர்ந்துகொள்கிறோம்.
(கட்டுரையாளர் - டாக்டர் இ.அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், தமிழ்த்துறை, சிகாகோ பல்கலைக்கழகம்)

புதன், 25 நவம்பர், 2015

இன்று சட்ட தினம்

கே. சந்துரு
COMMENT (5)   ·   PRINT   ·   T+  
சட்ட தினம் கொண்டாடப்படும் தருணத்தில் அம்பேத்கரின் சிந்தனைகளை நினைவுகூர்வது அவசியம்
இதே தேதியில் 1949-ல் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்துக்கு முழு ஒப்புதல் அளித்தது. அச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ம் தேதியைத்தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 65 வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீதிபதிகள் நியமனத்துக்காகக் கொண்டுவரப்பட்ட 99-வது சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்த தீர்ப்பு இன்று பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டுவருகிறது.
இச்சூழ்நிலையில், அரசமைப்புச் சட்ட வடிவைத் தயாரித்து, அதற்கான ஒப்புதலைப் பெற, அரசியல் நிர்ணய சபை தொடர்ந்து விவாதங்களில் பங்கேற்ற பின்னர் உருவான, ஜனநாயகக் குடியரசின் முதல் அமைச்சரவையில் பதவி வகித்த டாக்டர் அம்பேத்கரை நினைவுகூராமல் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 17-ன்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அன்றைய சமூக நிலைமை பற்றி டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் தனது மனக் குமுறலை இவ்வாறு வெளிப்படுத்தினார்:
“1950 ஜனவரி 26-ம் தேதியன்று, நாம் முரண்பாடுகளுற்ற வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்குச் சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு நெறி என்பதை அங்கீகரிப்போம். ஆனால் நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில் நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்து வருவோம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறைகளுடன் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம்? நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப்போகிறோம்? இப்படித் தொடர்ந்து மறுத்துவருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்துக்குப் பேரிடர் மட்டுமே விளைவிப்போம். இம்முரண்பாடுகளை நாம் முடியும் வரை குறைந்த காலத்துக்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப்பட்டுவிடும்.”
புத்தரின் கருத்துகளே வழிகாட்டி
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத் கர் அதன் முகப்புரையை இவ்வாறு வடிவமைத்தார்:
சுதந்திரம் - சிந்தனை, கருத்துரைத்தல், நம்பிக்கை, சமய உணர்வு மற்றும் வழிபாடு இவற்றுக்கான சமத்துவம் - படிநிலை மற்றும் வாய்ப்புகளுடன் அனைவரையும் மேம்படுத்துதல்.
சகோதரத்துவம் - தனிப்பட்ட ஒருவரின் கண்ணியத்துக்கான உத்தரவாதம்.
‘என்னுடைய வாழ்க்கைத் தத்துவம்’ என்கிற தலைப்பில் அகில இந்திய வானொலி உரையில் (3.10.1954) அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு தத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். தத்துவம் என்பது தன்னை அளந்தறிவதற்கான ஓர் அளவுகோலாகும்” என்று கூறிய அவர் என்னுடைய சமூக தத்துவம், ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற மூன்று வார்த்தைகளில் பொருந்தும். அவை பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து இரவல் பெற்ற என்னுடைய தத்துவமென்று யாரும் கருத வேண்டாம். என்னுடைய தத்துவங்களின் வேர் அரசியல் விஞ்ஞானத்தால் ஏற்பட்டதல்ல, அவை சமயம் சார்ந்தவை. நான் அவற்றை என்னுடைய குருநாதர் புத்தரின் போதனைகளில் இருந்துதான் பெற்றேன். என்னுடைய தத்துவங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் புத்த மதமாற்றத்துக்குப் பணிசெய்யக் கடமைப்பட்டவன்” என்று உரையாற்றினார்.
மதமாற்றம் ஏன்?
“தாயகம் திரும்புவோம்” (கர் வாப்சி) என்று இந்து அல்லாதவர்களிடம் பரப்புரை செய்யும் பாஜகவினரிடம் இது பற்றி அம்பேத்கரின் கருத்து என்னவென்று உணர்த்த வேண்டும். 1944-ல் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாநாட்டில் அம்பேத்கர் இவ்வாறு கூறினார்:
“நேரடியாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கும் போராட்டம் நிரந்தரமானது. அது எப்போதும் முடிவில்லாதது. ஏனெனில், அம்மதம் அச்சமூகத்தில் உன்னைக் கடைசி மட்டத்தில் வைத்திருப்பது காலம், சூழ்நிலைகளைப் பொருத்து எப்போதுமே நிரந்தரமானது. அச்சமூகத்தின் ஏணிப்படிகளின் கடைசிப் படியில்தான் நின்றுகொண்டிருக்கிறாய். அதிலேயே என்றென்றும் நின்றுகொண்டிருப்பாய். அதனால், இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே உள்ள போராட்டம் என்றென்றும் தொடரும்.”
சாதி ஒழிப்பு தேவை
அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் 1949 நவம்பர் 11-ல் அம்பேத்கர் ஆற்றிய உரையில், “இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். பல ஆயிரம் சாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத் தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள்ளே ஆழமாக வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப்போகிறது. அதுவும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப்போகிறது. ஏனெனில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சாதிகள் இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. சாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், சாதிகளை முடிவுக்குக் கொண்டுவந்தாக வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு
உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்காக அதிதீவிரமாக உழைக்கும் மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமாகச் செயல்பட்டுவருகிறது. 1975-ல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்த இந்திரா காந்தி அரசமைப்புச் சட்டத்தைத் தனக்கேற்றவாறு திருத்தியமைக்க முயன்றார். புரட்சித் தலைவியாகச் சித்தரித்துக்கொள்ள முயன்ற அவர், அரசமைப்புச் சட்டத்தின் அறிமுக வரிகளில் ‘சோஷலிசம்’ என்ற வார்த்தையைச் சேர்த்து இந்தியா ஒரு இறையாண்மை பெற்ற சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்தார். ஆனால், அத்தகைய சித்தரிப்பு வருவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலமைப்புச் சட்டத்தில் சோஷலிசச் சிந்தனைகளை விதைத்தவர் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டத்தின் 39-வது ஷரத்தில் அரசு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “மக்கள் அனைவருக்கும் சமூக-பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக்கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க அரசாங்கம் முயல வேண்டும். தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும் அவ்வுணர்வு பரவ வகை செய்ய வேண்டும் என்ற நெறிமுறைக் கோட்பாடுகளின் அடித்தளமாக விளங்கும். ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், பலமும், சிறாரின் இளம்பிராயமும் தவறாகப் பயன்படுத்தாமலும், பொருளாதாரத் தேவைகளின் காரணமாகக் குடிமக்கள் தமது வயதுக்கும், வலுவுக்கும் பொருத்தமில்லாத வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படாமலும் ; சிறாரும் இளைஞரும் சுரண்டப்படாமல் காக்குமாறும் அரசு தன்னுடைய கொள்கைளை நெறிப்படுத்த வேண்டும்.”
உணவு உண்ணும் உரிமை
உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதைச் சமயக் கட்டுப்பாட்டாக்கவும் அதை யொட்டி மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதும் ஏற்கத்தக்கதல்ல.
அம்பேத்கரின் நினைவாலயங்களை லண்டனிலும், மும்பையிலும் அமைத்துவருகிறது பாஜக அரசு. அவர்களது நடவடிக்கைகளை மதிப்பிட அம்பேத்கரின் சிந்தனைகளையும், அரசமைப்புச் சட்டத்தையும், அதையொட்டி எழுந்த விவாதங்களையும் இன்று நாம் நினைவு கூர்வோம்.
கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
இன்று சட்ட தினம்

பொதுவாழ்வுக்காக சொந்த வாழ்வையே துறந்தவர்: எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள் ‘அக்கா

பொதுவாழ்வுக்காக சொந்த வாழ்வையே துறந்தவர்: எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள் ‘அக்கா’

ஒய். ஆண்டனி செல்வராஜ்
COMMENT (12)   ·   PRINT   ·   T+  
ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரண மாக வாழ்ந்து காட்டியவர் திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னம்மாள் (88). இவர் 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர். பொது வாழ்வில் கக்கனுக்கு அடுத்து அப்பழுக்கற்ற, நேர்மையான, எளிமையான காங்கிரஸ் எம்எல்ஏ எனப் பெயரெடுத்தவர்.
காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இவரை ‘அக்கா’ என்றுதான் அழைப்பார்கள். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி மட்டு மல்லாது காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆறு தமிழக முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர். கருணாநிதிக்கு தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
முதுமை காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாகவே தீவிர அரசிய லில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே இருந்தார். கடந்த மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பொன்னம் மாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ராகுல்காந்தி ஆறுதல்
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அலைபேசி மூலம் பொன்னம்மாளுக்கு ஆறுதல் கூறிய தோடு, அவரை ஆமதாபாத் புற்று நோய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
ஆனால், விமானத்தில் செல்ல அவரது உடல்நிலை ஒத்துழைக்காத தால் மதுரை அரசு மருத்துவ மனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்றார். கடந்த வாரம் வீட்டுக்குத் திரும்பிய நிலையில் பொன்னம்மாளுக்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமடைந்து நேற்று இறந்தார்.
தியாகம்
பொன்னம்மாள் திருமணம் செய்துகொண்டாலும், தனது தங்கை செல்லத்தாயை கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து பொது வாழ்வுக்காக தனது சொந்த வாழ்க் கையையே தியாகம் செய்தவர்.
பொன்னம்மாளின் ஆரம்பகால அரசியலில் அவருடன் இருந்த சுதந்திரப் போராட்ட தியாகி வத்தல குண்டுவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை(91), அவரைப் பற்றிய நினைவுகளை ‘தி இந்து’ வுடன் பகிர்ந்து கொண்டார்.
எளிய விவசாய குடும்பம்
ஏ.எஸ்.பொன்னம்மாள் நிலக் கோட்டை அருகே அழகன்பட்டியில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு 1947-52ம் ஆண்டு வரை, பழநியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் வார்டனாக வேலை பார்த்தார். இவரது சித்தப்பா பழநி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பாலகிருஷ்ணன். அப்போது ஒரு முறை பழநிக்கு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வந்திருந்த போது சித்தப்பா பாலகிருஷ்ண னுடன் சென்று அவரை நேரில் சந்தித்து பேசும் அரிய வாய்ப்பு பொன்னம்மாளுக்கு கிட்டியது. நேருவுடனான சந்திப்பே காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு அளவற்ற ஈர்ப்பு ஏற்படவும், அரசியலில் ஈடு படும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
ஒரு பெண்ணாக இவரது அரசியல் ஈடுபாட்டை அறிந்த காமராஜர், இவருக்கு 1957-ம் ஆண்டு நிலக்கோட்டை தொகுதி யில் போட்டியிட வாய்ப்பளித்தார். தொடர்ந்து பழநி, சோழவந்தான், மீண்டும் நிலக்கோட்டை என மாறி மாறி போட்டியிட்டு 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 1996-ல் அதிமுக கூட்டணியை விரும்பாமல் காங்கிரஸை எதிர்த்து தமாகாவை தொடங்கிய ஜி.கே. மூப்பனாருக்கு பொன்னம்மாள் பக்கபலமாக இருந்தார். மூப்பனார் மறைவுக்குப் பின் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
ஆடம்பரமற்ற எளிமை
பொன்னம்மாள், எப்போதும் சாதாரண கிராமத்து பெண்கள் அணியும் சேலையைத்தான் உடுத்து வார். எங்கு சென்றாலும் பஸ்ஸில் தான் பயணம் செய்வார். இவரது ஆடம்பரமில்லாத எளிமை, மக்கள் பிரச்சினைகளை அவர் எதிர் கொண்ட விதம், எல்லோரும் அவரை எளிதாக அணுக முடிந்த தால் காங்கிரஸிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி பொன்னம்மாளை தனியாக அடையாளப்படுத்தியது.
ஈழத் தமிழர்களுக்காக ராமேசுவரத்தில் கடலில் இறங்கி போராடியவர். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இவரது தொகுதி யான நிலக்கோட்டை. இப்பகுதி யில் இன்று அதிகமான பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெண்கள் கல்லூரி, கிராமங்கள் தோறும் சாலை அமையக் காரண மாக இருந்தவர் பொன்னம்மாள். மஞ்சளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வத்தலகுண்டு பாலம், ஆடிசாபட்டி பாலம், ராமநாயக்கன்பட்டியில் வைகை ஆற்றுப் பாலம் ஆகிய வற்றை கொண்டு வந்தவர். இந்த பாலங்கள் வருவதற்கு முன் விவசாயிகள், சுற்றுவட்டார கிராம மக்கள், பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றனர் என்றார்.
பொன்னம்மாளுடன் பணியாற் றிய தமாகா திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் ராமதாஸ் கூறும்போது, ‘பொன்னம்மாள் எப் போதும், எங்கு சென்றாலும் தனது தொகுதி சம்பந்தமான வளர்ச்சித் திட்ட கோப்புகளுடனேயே பயணம் செய்வார். தனது தொகுதிக்கு பிடிவாதமாக பல திட்டங்களைக் கொண்டு வந்தவர்.
1996-ல் முதல்வராக இருந்த கருணாநிதி, ஒரு பெண்கள் கல்லூரியை அறிவிக்க இருந்தார். அதை தங்கள் தொகுதிக்கு பெறுவதில் திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கும், பொன்னம்மாளுக்கும் போட்டியே ஏற்பட்டது. பிடிவாதமாக நின்று, அந்த கல்லூரியை நிலக்கோட் டைக்கு கொண்டு வந்தார் பொன்னம் மாள். இன்று தாழ்த்தப்பட்ட, ஏழை பெண் குழந்தைகள் பட்டதாரிக ளாக உயர வழிவகுத்தது பொன்னம் மாளின் பிடிவாத முயற்சியே’ என்றார்.
‘அக்கா’ அடைமொழி வந்தது எப்படி?
1984-ம் ஆண்டு பழநி தொகுதியில் பொன்னம்மாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு வந்த எம்ஜிஆர் பொன்னம்மாளைப் பார்த்ததும் ‘‘அக்கா இங்க வாங்க” என அழைத்துப் பேசினார். எம்ஜிஆரைத் தொடர்ந்து மற்ற தலைவர்களும், பொதுமக்களும் இவரை ‘அக்கா’ என அழைக்கத்தொடங்கி அதுவே கடைசிவரை நிலைத்துவிட்டது.
ஒருமுறை பொன்னம்மாளை வீட்டுக்கு அழைத்து கவுரவித்த எம்ஜிஆர், அதிமுகவில் இணைந்துவிடுங்கள். அமைச்சர் பதவி தருகிறேன் என்றாராம். அதற்கு அவரோ, ‘ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கொள்கைகளுடன் வாழ்ந்து பழகிவிட்டேன், என்னால் சட்டென்று திராவிடக் கொள்கைக்கு மாற முடியாது’ என்று அன்புடன் மறுத்துள்ளார்.