புதன், 13 ஜூலை, 2016

தபால் தலை அளவில் ஒரு விண்கலம் - ‘ஸ்டார் சிப்’

சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள எந்த ஒரு கோளிலாவது ஜீவராசிகள் உள்ளனவா?
வானில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அவற்றில் நமது பூமிக்கு நெருக்கமாக இருப்பது ஆல்பா சென்டாரி. நெருக்கமாக என்று சொன்னாலும், தற்சமயம் கைவசமுள்ள சாதனங்களின் உதவியுடன் அதற்கு ஒரு விண்கலத்தை அனுப்பினால், அது ஆல்பா சென்டாரியைச் சென்றடைய 30,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
பிரபல அறிவியல் எழுத்தாளரான ஸ்டீபன் ஹாக்கிங், விண்வெளி ஆய்வில் ஆர்வம் கொண்ட யூரி மில்னர் என்ற ரஷ்ய நாட்டுக் கோடீஸ்வரருடன் இணைந்து, இருபதே ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியைச் சென்றடையக்கூடிய ஒரு விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தபால் தலை அளவுள்ள நுண் விண்கலங்களின் ஓர் அணியை, லேசர் கதிர்களின் உதவியுடன் ஒளியின் திசை வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்துக்கு முடுக்கிவிட்டு, இருபதே ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியில் போய் இறங்கச் செய்துவிடலாம் என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். அத்தகைய ஒரு விண்கலம் மூன்றே நாட்களில் சூரிய மண்டலத்தின் வெளி எல்லையான புளூட்டோ கிரகத்தின் ஓடு பாதையைக் கடந்து வெளியேறிவிடும். சூரிய மண்டலத்துக்கு வெளியில் ஏதாவது ஒரு கோளில் ஜீவராசிகள் உள்ளனவா என்று துப்பறிவதே இத்திட்டத்தின் நோக்கம்.
விண்மீன் பயணத்தின் சாதனைப் படி
“வெறுமனே நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தால் போதுமா! அவற்றில் போய் இறங்கப்போகிறோம்... அதற்கான முயற்சியின் முதல் படி இது” என்று கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் நாள் நியூயார்க் நகரில் இருவரும் அறிவித்தார்கள்.
அவர்களுடைய திட்டத்துக்கு ‘விண்மீன் பயணத்தின் சாதனைப் படி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சின்னதாக ஒரு விண்கலத்தை உருவாக்கி, அதை ஏவுவதற்காக மில்னர் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறார். பூமியிலிருக்கும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, விண்வெளியில் எங்காவது உயிரினம் உள்ளதா என்று கண்டறியும் முயற்சிகளுக்கு, கடந்த ஆண்டு சில கோடி டாலர்கள் நிதியுதவி செய்திருக்கிறார் மில்னர். அதோடு திருப்தியடையாமல் ஒரு படி மேலே போய், மனிதர் இயற்றிய சாதனங்களை விண்மீன்களுக்கு அனுப்பி உயிரினங்களைத் தேடும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
இந்த முயற்சியில் மில்னர், ஹாக்கிங் ஆகியோருடன் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட பிரபலங்களும் கோடீஸ்வரர்களும் கைகோத்துள்ளனர். இந்த முயற்சிக்கு ‘நாஸா’வின் விண்வெளி ஏவுகணை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான பீட் வோர்டன் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஒரு கிராம் எடையில் ஒரு விண்கலம்
ஆல்பா சென்டாரி பூமியிலிருந்து 4.37 ஒளியாண் டுகள் தொலைவில் அதாவது, 25 டிரில்லியன் மைல்கள் அல்லது 40.2 டிரில்லியன் கி.மீ. தொலை வில் உள்ளது. ( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) இப்போதுள்ள எரியன்களால் செலுத்தப்படுகிற விண்வெளிக் கலங்களைப் பயன்படுத்தினால், அங்கே போய்ச் சேரவே 30,000 ஆண்டுகளாகும். அதனால், நமக்கும் ஒன்றும் பயனில்லை. ஆனால், ஹாக்கிங்கும் மில்னரும் ஒளியின் உதவியுடன் நுண்ணிய விண்கலத்தை இயக்கத் திட்டமிடுகிறார்கள்.
அந்த விண்கலத்துக்கு ‘ஸ்டார் சிப்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது ஒரு தபால்தலையின் அளவே இருக்கும். அதன் எடை கிட்டத்தட்ட ஒரு கிராம்தான். ஆனாலும், அதில் ஒளிப்பதிவுக் கருவிகள், ஃபோட்டான் (ஒளித்துகள்) முடுக்கிகள், ஆற்றல் வழங்கிகள், வழிநடத்துக் கருவிகள், தகவல் பரிமாற்றக் கருவிகள், மின்சுற்றுகள் என்று பல உறுப்புகள் திணித்து வைக்கப்பட்டுள்ளன.
அந்த விண்கலத்துடன் ஒரு மீட்டர் அகல நீளமுள்ளதும், ஓரிரு கிராம் அளவே எடையுள்ளதும், ஒரு மீட்டரில் லட்சம் பங்கே தடிமனுள்ளதுமான இறக்கை இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சூரிய ஒளி படும்போது, அதன் ஃபோட்டான்கள் அதைத் தள்ளும். விண்கலத்துக்குக் கூடுதலாக உந்துதலை வழங்குவதற்காகப் பூமியிலிருந்து லேசர் கற்றைகளை அந்த விண்கலத்தை நோக்கிச் செலுத்த ஹாக்கிங்கும் மில்னரும் திட்டமிட்டுள்ளனர். 100 கிகாவாட் லேசர் ஆற்றலைச் செலுத்தி, அந்த விண்கலத்தை மணிக்கு 160 மில்லியன் கி.மீ. வரையிலான வேகத்தில் செலுத்த முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அந்த வேகத்தில் அந்த விண்கலம் 20 ஆண்டுகளில் ஆல்பா சென்டாரியைச் சென்றடைந்துவிட முடியும்.
காகிதக் கற்பிதங்கள் இல்லை
இது போன்ற பல நூறு நுண் விண்கலங்களை விண்ணில் ஏவிவிட்டால், அவை நாலா திசைகளிலும் பரவிப் பயணம் செய்து, மிக அருகிலுள்ள விண்மீன்களைச் சுற்றி இருக்கக்கூடிய கோள் மண்டலங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அனுப்பும் என்று ஹாக்கிங் ஆய்வுக் குழுவினர் நம்புகிறார்கள். என்றாவது ஒரு நாள், அப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாதகமான கோளில் போய், மனிதர்களைக் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கு அந்தத் தகவல்கள் உதவியாயிருக்கும்.
இப்போதைக்கு இவையெல்லாம் காகிதத்தில் எழுதப்பட்ட திட்டங்களாகவே உள்ளன. இதற்கு முன்பே லேசர்களால் இயக்கப்படுகிற விண்கலங்களைப் பற்றி விவரிக்கிற ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவற்றில் கூறப்பட்ட கருத்துகளை மறுதலிக்கவோ, அவற்றின் கணக்குகளில் தவறு காணவோ முடியவில்லை. எனவே, அவற்றை வெறும் காகிதக் கற்பிதங்கள் என ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், கடந்த கால அனுபவங்கள் அப்படி ஒரு கொள்கையை அல்லது கருத்தை லேசாகப் புறந்தள்ளிவிட முடியாது என்று காட்டுகின்றன. அத்துடன் தமது திட்டங்கள் யாவும் தற்போது அறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்வரும் சில பத்தாண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள தொழில்நுட்பங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன என்று மில்னர் கூறுகிறார். என்றாலும், அத்திட்டங்களை நிறைவுசெய்வதற்கு முன், பல தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். எந்த நேரத்தில், எந்த அளவில், எந்தப் பிரச்சினை தலைதூக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாதிருப்பதே ‘ஸ்புட்னிக்’ ஏவப்பட்டது தொடங்கி, நிலவில் மனிதர் காலெடுத்து வைத்தது வரை, எல்லா விண்வெளிப் பயணங்களிலும் உள்ள சிக்கல். ஒரு தனி மனிதராலோ, ஒரு சிறு ஆய்வர் குழுவினாலோ எல்லாவிதமான சிக்கல்களையும் யூகித்துவிட முடியாது. எனவே, மில்னர் குழுவினர் உலகிலுள்ள எல்லாவிதமான மக்களிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் தமது திட்டத்தை மேம்படுத்துவதற்கான கருத்துரைகளையும், ஆலோசனைகளையும் கோரியிருக்கிறார்கள்.
இது ஒரு பேராசை மிக்க திட்டம்தான். ஆனாலும் நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பித் தரையிறங்கச் செய்த திட்டங்களும் அப்படித்தான் விமர்சிக்கப்பட்டன. அதேபோல ஆல்பா சென்டாரிக்கும் ஒரு விண்கலம் அனுப்பப்படுவது உறுதி என ‘நாஸா’ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

திங்கள், 11 ஜூலை, 2016

உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா

வரலாற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நினைவு கூர்வது முக்கியமானது. எனினும், உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா என்று சிலாகிக்க ஏதும் இல்லை.
எனக்கு நரசிம்ம ராவ் இப்படித்தான் ஞாபகத்துக்கு வருகிறார். மைனாரிட்டி அரசாக இருந்தும் ஐந்து வருடங்கள் ‘சாமர்த்திய’மாக ஆட்சியில் நீடித்தவர் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடத்திய குதிரை பேரத்திலிருந்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக்கொடி காட்டியது வரையிலான அவரது போக்குகளின் உச்சம், அவரது நந்தியால் வெற்றி. நந்தியால் தொகுதியில் உள்ள பல வாக்கு மையங்களில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமான ஓட்டுகள் பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எப்படி மறப்பது, என்னவென்று எழுதுவது?
நரசிம்ம ராவ் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘இன்சைடர்’ (உள்ளாள்). அவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தபோது பல அரசியல் கட்டுரைகளை ‘இன்சைடர்’ என்கிற புனைபெயரில் ‘மெயின் ஸ்ட்ரீம்’ என்ற ஆங்கில அரசியல் இதழில் எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் ஆசிரியர் யார் என்பது பலருக்கும் அந்நாட்களில் புரிபடவில்லை. அவற்றை ஆராய்ந்து, நரசிம்ம ராவ்தான் புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதிவந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் என்.ராம். ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவில் இருந்துகொண்டே அக்குழுவின் முடிவுகளை புனைபெயரில் கட்டுரையாக விவாதிக்கும் ‘சாமர்த்தியம்’ நரசிம்ம ராவுக்கு மட்டுமே சாத்தியம்.
மறைக்கப்பட்ட ராவின் முகம்
நரசிம்ம ராவின் பல முகங்களை மறைத்துவிட்டு, தாராளமயமாக்கலின் தந்தை என்று இன்றைக்குப் பலர் அவரைப் பாராட்டிக் கொண்டாடுவது அறியாமை அல்லது புரட்டு என்றே சொல்ல வேண்டும். ராவ் மட்டும் அல்ல; வாஜ்பாய், மோடி இவர்கள் எல்லோரின் வரலாறுமே இப்படிப்பட்டதுதான். ‘சாமர்த்திய’ வரலாறு.
இந்தியாவை முழுமையாகத் தம் வசப்படுத்த ஏகாதிபத்தியம் நெடுநாட்களாகக் காத்திருந்தது. ராவ் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோது, ‘சாமர்த்திய’மாக அதைச் செய்துகொடுத்தார். மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார் மயக்கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சொற்கள் அரசின் தாரக மந்திரமாக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த புரட்சியும் உடன் சேர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொல்லைப்புறமாக மாறியது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தனியார்மயமாக்கல் பெருமளவில் சட்டத் தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டே உள் நுழைக்கப்பட்டது என்பதுதான். தனியார்மயமாக்கல் தொடர்பான கொள்கை அறிவிப்புகள் பொது மேடைகளில் பெரிய அளவில் வந்தனவே ஒழிய, நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் அதற்கான விவாதங்கள் ஒலிக்கவில்லை. விஷயம் அதோடு முடியவில்லை. சட்டம் இயற்றும் மன்றங்கள் சரியாகச் செயல்படாதபோது, மக்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றங்கள்தான்.
தனியார்மயம் விரோதம் இல்லையா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளில், இந்தியா ஒரு ‘சோஷலிஸ குடியரசு’ என்று போடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? அரசின் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமானது இல்லையா? இப்படியான கேள்விகளோடு ‘பால்கோ’ நிறுவனத் தொழிலாளர்கள் போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? வழக்கைத் தள்ளுபடி செய்தது. “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.
மேலும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள சோஷலிஸம் என்ற வார்த்தையைக் கேலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது: “சோஷலிஸம் என்பது நம்முடைய சரித்திரத்திலிருந்து கிடைத்த கவர்ச்சிகரமான வார்த்தையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளிலும் காணப்படலாம். இந்தியச் சமூகம், இன்றியமையாத கூறாக சோஷலிஸத்தை மணம் புரிந்துள்ளது என்ற கருத்தாக்கம், மத்திய அரசு 1990-களின் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவால் உதிரத் தொடங்கியுள்ளது.” (உ.பி. மாநில வெண்கலப் பொருட்கள் நிறுவனம் வழக்கு, 2006).
மேலும் அதே தீர்ப்பில் குறிப்பிட்டது: “உலக மயமாக்கலினால் நாட்டின் பொருளாதார, சமூகக் காட்சிகளில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விளக்கும்போது மாறிவரும் பொருளாதாரக் காட்சிகளை மனதில் கொண்டு யதார்த்தமான பார்வையுடன் நீதிமன்றம் செயல்பட வேண்டும்.”
பிறகு உச்ச நீதிமன்றம் இப்படியும் சொன்னது: “நிர்வாக அதிகாரிகள் விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் தொடங்க எண்ணிவருகின்றனர். இதன் மூலம் சமூகம் பொதுவில் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பெருநகரங்களில் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தத்துவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், மாறிவரும் காட்சிகளைக் கணக்கில்கொண்டு, யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்!”
உச்ச நீதிமன்றத்தின் பச்சைக்கொடி
உச்ச நீதிமன்றம் உலகமயமாக்க லுக்கும் தனியார்மயமாக்கலுக்கும் பச்சைக்கொடி காட்டியதோடு மட்டும் அல்லாமல், வெவ்வேறு தரு ணங்களில் அதன் போக்குக்கும் சென்றது என்று சொல்லலாம். மதுக் கடைகளில் மாலை நேரங்களில் பெண்கள் மது விற்பனையாளராக இருப்பதைத் தடை செய்த டெல்லி அரசின் உத்தரவை 2007-ல் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு ஒருபடி மேலே போய் 2013-ல் மராட்டிய அரசு மதுக் கடை பார்களில் பெண்களின் நடனங்களைத் தடைசெய்யும் சட்டத்தையும் ரத்துசெய்தது. சட்டம் இயற்றும் மன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கும் மன்றங்களும் உலகமயமாக்கலை வாரி அணைத்துக்கொண்டபோது மக்கள் நிலை என்னவானது? முதலாளிகள் பார்வையிலிருந்து அல்ல; தொழிலாளர்கள் நிலை மூலமாகவே அதை நாம் அறிய முடியும்.
இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவர்கள் நேரடித் தொழிலாளர்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்கள் எனும் அங்கீகாரம்கூட அவர்களுக்கு இல்லை. எல்லா நிறுவனங்களிலும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மறைமுகத் தொழிலாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. அயல் பணி ஒப்படைப்பு முறையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை, நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதன் காரணம், குறைந்த கூலியில் அதிக வேலை என்பதோடு, அவர்கள் ஒன்று திரண்டு, சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராட மாட்டார்கள் என்பதும்தான்!
தொழிலாளர்களுக்குப் பொருந்தா சட்டங்கள்
‘ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை சம்பந்தப்பட்ட அரசுகள் தடை செய்தால், அந்தத் தொழிலில் அதுவரை ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுத் துறை நிறுவனங்கள் நேரடித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘ஏர் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (1997) உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு ‘ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா’ வழக்கில் ரத்து செய்தது (2001). இன்றைக்குப் பல கோடித் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்கள் எனும் அடிப்படைத் தகுதிக்கான உரிமைகள்கூட இல்லை.
இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி அமைக்கப்போகிறோம் என்கிறது இன்றைய மோடி அரசு. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளின் வேண்டுகோளின்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
மோடி ராஜஸ்தான் அரசைத் தனது தனியார்மயமாக்கலின் சோதனைச் சாலையாகச் செயல்படுத்திவருகிறார். அங்குள்ள பாஜக தலைமையிலான தொழிற்சங்க அமைப்புகளே இச்சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவருகின்றன. அதையும் மீறி, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குத் தொழிலாளர் சட்டங்களிலுள்ள முக்கியமான பிரிவுகள் திருத்தங்களின் மூலம் மாற்றி அமைக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகமயமாக்கலின் வெள்ளிவிழா ஆண்டைப் பாராட்டி வசனம் எழுதுபவர்கள் எல்லாம், தொழிலாளர் துறையையும் அதற்கான சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், அவர்களுக்கு உலகமயமாக்கலின் குரூரம் புரியும்.
நரசிம்ம ராவ் ஏற்றிப் பிடித்த தீச்சட்டியை நரேந்திர மோடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய வீரர்போல் ஓடி வருவதையும் பின்னாளில் ஒரு கும்பல் ‘சாமர்த்தியம்’ கருதிப் புகழலாம். ஆனால், ராவ்கள், வாஜ்பாய்கள், மோடிகளின் ‘சாமர்த்தியம்’ தேசம் கொண்டாடக் கூடிய வரலாறு அல்ல. மக்களின் கடைக்கோடி மனிதன் அந்த வரலாற்றைக் கண்ணீரினூடேதான் பார்ப்பான்!
- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்

************
உலகின் நிலப் பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன. அந்த நிலத்துக்கு கோந்த்வானா (கோண்ட்வானா) என்று பெயர். இந்த வார்த்தையின் வேர், இந்தியாவின் பண்டைய கோந்த் பழங்குடிகளிடமிருந்து தொடங்குகிறது. இவர்கள் திராவிட வழி வந்தவர்கள். இவர்கள் பேசுவது திராவிட மொழி என்று பேராசிரியர் பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் வாழும் இந்தப் பழங்குடிகளின் மையமாக இருப்பது நியமகிரி மலை. இந்த மலையை அவர்கள் கடவுளைப் போலக் கருதுகிறார்கள். எழுத்தறிவற்ற பழங்குடிகள் மலையைப் பற்றி என்ன நினைத்தால் நமக்கென்ன? நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் கண்டுபிடித்த அனைத்துப் பேரியந்திரங்களும், அந்த இயந்திரங்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகளை இந்த மண்ணுலகுக்குத் தருவதையே ஒரே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவத்துக்கும் அது அலுமினிய மூலப்பொருளின் சுரங்கம். காலம்காலமாக இயற்கையோடு இசைந்து வாழும் அந்தப் பழங்குடிகள் நாகரிகமற்றவர்கள். அறிவில் சிறந்த நாமோ, நாகரிக வளர்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த ஆகச் சிறந்த ‘பண்பான’ மலிவு விலைக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் இந்திய-பன்னாட்டு முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தாவுக்கு அந்த மலையைத் தாரை வார்க்க முயற்சிக்கிறோம்.
நியமகிரிக்கு எதிரான கோந்த் மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும், அதே ஒடிசாவில் கொரிய பன்னாட்டு நிறுவனமான பாஸ்கோ அமைக்க இருந்த இரும்பு ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்குக் கிடைத்த முடிவும் சரி, மந்தையிலிருந்து வழிதவறிய இரண்டு ஆடுகள் மட்டுமே. இந்தியாவின் இயற்கை வளத்தைக் காவு கேட்கும் மற்ற அனைத்துத் திட்டங்களும், பெரும்பாலும் வெற்றி எனும் மந்தையில் சேர்ந்துவிடுவதே வழக்கமாக இருக்கிறது.
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ஆசிஷ் கோத்தாரியும் சூழலியல் பொருளியல் அறிஞர் அசீம் வாஸ்தவாவும் எழுதிய 'Churning the Earth: The Making Of Global India' என்ற புத்தகம் உலகமயமாக்கலுக்கும் இந்திய சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி விரிவான தரவுகளோடு ஆராய்ந்து இருக்கிறது. இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட தாக்கத்தை எடுத்துரைக்க, அந்நூல் முன்வைக்கும் முக்கிய வாதங்கள்:
உலகமயமாக்கம் இந்திய சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய அடிப்படைத் தாக்கங்கள் என்ன?
உலகமயமாக்கத்தின் முதன்மைக் கூறுகளில் ஒன்றான தாராளமயமாக்கம், இரண்டு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் ராக்கெட் வேகத்தில் இயற்கை வளம் சூறையாடப்பட்டுள்ளது. மற்றொன்று, இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் தயாரிப்புகளும் குப்பையும் கடுமையாக அதிகரித்துவிட்டன. இயற்கையைச் சீர்குலைப்பதால் உருவாகும் கழிவையும், நுகர்வோர் பயன்பாட்டால் உருவாகும் கழிவையும் அகற்றும் வேலையும் மோசமடைந்துள்ளது. உடல்நலப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மற்றும் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் ஏகபோகமாக உற்பத்தியாவதை உலகமயமாக்கத்தின் முக்கியச் சாதனையாகச் சொல்லலாம்.
அந்நிய நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களின் முதலீ்ட்டை ஈர்ப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக்கொண்டு, சுற்றுச்சூழல் சட்டங்கள், தரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து அவப்பெயரெடுத்த நிறுவனங்கள், இந்தியாவுக்கு வரும்போது ஏற்கெனவே உறுதியில்லாமல் இருக்கும் சுற்றுச்சூழல், சமூக சமத்துவ நெறிமுறைகளைத் தளர்த்த வலியுறுத்துகின்றன. உள்நாட்டுப் பெரு நிறுவனங்களும் இதை வழிமொழிகின்றன. முன்பு டாடா, எஸ்ஸார் நிறுவனங்களின் நிலம் கையகப்படுத்துதலை காங்கிரஸ் ஆட்சி விமர்சித்துவிட்டுப் பின்வாங்கியதும், அதானி குழுமத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.200 கோடி சுற்றுச்சூழல் அபராதத்தை பாஜக அரசு திரும்பப் பெற்றதும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக முந்தைய அரசு விதித்த தடையை விலக்கி, மரபணு மாற்றுக் கடுகை அறிமுகப்படுத்துவதில், சுதேசி பொருளாதாரம் பேசிய பாஜக அரசு தீவிரம் காட்டிவருகிறது.
நாட்டில் குவிந்த முதலீட்டுக்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன?
உலகமயமாக்கத்துக்குப் பின் ஒவ்வொரு நாளும், இந்திய அரசு சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கும் பெருந்திட்டங்களின் எண்ணிக்கை சராசரியாக மூன்று. கனிமச் சுரங்கம், தொழிற்சாலை அல்லது கட்டுமானத் திட்டங்களே இவற்றில் முதன்மையானவை.
கோயில் கருவறைக்குச் சிறப்பு டிக்கெட் இருப்பதைப் போல, அதிரடியாக அனுமதிக்கப்படும் திட்டங்கள் அதற்குப் பிறகு குறைந்தபட்சமாகக்கூட 3-4 ஆண்டுகள் கழித்தே கண்காணிக்கப்படுகின்றன. இங்கே கண்காணிப்பு என்பதே பெரிய வார்த்தை. ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளில் பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலச் சட்டம் போன்றவற்றை நீர்த்துப்போகச் செய்யும் 30-க்கும் மேற்பட்ட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருபுறம் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுவதுடன், மறுபுறம் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து ஒழுங்குபடுத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையும் ஒரு சதவீதமாக மட்டுமே இருக்கிறது. சுருக்கமாக சுற்றுச்சூழல் என்பது மதிப்பில்லாத, அதே நேரம் அநாவசியத் தொந்தரவு என்று உலகமயத்துக்குப் பிந்தைய மத்திய அரசுகள் நினைப்பதுதான் நிதர்சனம்.
எதை விற்கிறோம், எதை இழக்கிறோம்?
இந்தியாவில் அந்நிய முதலீடு குவிந்துவருவதைப் பற்றி இந்நாள், முன்னாள் பிரதமர்கள் அடிக்கடி சிலாகிப்பது உண்டு. அந்த சிலாகிப்புக்குப் பின்னால், அவர்கள் மறைக்கும் விஷயம் காடுகளையும், எளிய உழைப்பாளிகளின் உழைப்பையும் விற்றே அந்த முதலீடு வாங்கப்படுகிறது என்பதுதான். 1980-81-க்குப் பிறகு, காடுகள் திருத்தப்பட்ட செயல்பாடுகளில் பாதிக்கு மேல் (55 %) 2001-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில் நிகழ்ந்தவை. அதேபோல், 1997-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில்தான் 70% காடுகள் கனிமச் சுரங்கத்துக்காகத் திறந்துவிடப்பட்டன.
என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள், இந்தியாவின் 70% மக்கள் காடுகள், நீர்நிலைகள், கடல், வயல் என நிலத்தை மையமாகக் கொண்ட தொழில்களை நம்பியே வாழ்கிறார்கள். இவர்களுக்கான தண்ணீர், உணவு, எரிபொருள், இருப்பிடம், கால்நடைத் தீவனம், மருந்து என எல்லா அடிப்படைத் தேவைகளையும் இந்த இயற்கை அமைப்புகளே பூர்த்திசெய்கின்றன. 10,000 வகைத் தாவரங்களும், நூற்றுக்கணக்கான உயிரினங்களும் மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. காடுகளில் வெட்டு மரமல்லாத மற்ற வாழ்வாதாரங்களுக்காக 28 கோடிப் பேர் காடுகளைச் சார்ந்திருக்கிறார்கள். உலகமயமும் பெருநிறுவனங்களும் இந்தச் சூழலியல் தொகுப்புகளை நேரடியாக அழித்தொழிக்கும் போது, இந்த மக்கள் தங்கள் நிலத்திலிருந்து துரத்தப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்வாதாரமும் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?
உலகமயமாக்கத்தின் காரணமாக, இந்தியாவின் பேரளவு மக்கள் பல்வேறு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை, வாழ் வாதாரம் பறிக்கப்பட்டு, மாற்று வேலைவாய்ப்பும் சொற்பமாக இருப்பது போன்றவையே அந்த நெருக்கடிகள்.
உணவுப் பாதுகாப்பை எடுத்துக்கொள்வோம். உலக மயமாக்கத்துக்கு முன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போர் தொகை 24% ஆக இருந்தது.
15 ஆண்டுகளுக்குப் பின் சொற்பமாக, அதில் 2% மட்டும் குறைந்திருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘உணவு, வேளாண் நிறுவனம்’(FAO) தெரிவிக்கிறது. உணவு உற்பத்திக்கோ, கிடங்கில் உள்ள உணவு சேகரிப்புக்கோ குறைவில்லை. ஆனாலும், நான்கில் ஒருவர் உணவின்றியே வாழ்கிறார். உலகமயமாக்கம், கண்மூடித்தனமான தொழில் வளர்ச்சியால் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வாழ்ந்த சூழலியல் தொகுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதே இதற்கு முதன்மைக் காரணம்.
சிறு விவசாயிகளாகவும், இயற்கையில் கிடைத்த பொருட்களை உண்டும் வாழ்ந்துவந்த பலர் சந்தைப் பொருளாதாரத்துக்குள் பிடித்துத் தள்ளிவிடப்பட்டுள்ளனர். தங்கள் அடிப்படை வளங்களை இழந்த அவர்கள், காசு கொடுத்து மட்டுமே உணவை வாங்கும் நெருக்கடியில் உள்ளனர். ஒவ்வொரு தனிநபருக்கும் 1990-களில் கிடைக்க வாய்ப்பிருந்த பருப்பின் அளவு, தற்போது 26% குறைந்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. உலகமயத்துக்குப் பின் காசு இருந்தால் வாங்கிச் சாப்பிடலாம், இல்லாவிட்டால் செத்துத்தான் போக வேண்டும். அதேபோல கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் குடிக்கும் தண்ணீருக்கு இன்றைக்கு அல்லாடுகிறோம், அதிகபட்சமாகக் காசு கொடுத்து வாங்குகிறோம். கோக கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான ஆலைகளுக்குத் தண்ணீர் மிகக் குறைந்த காசுக்கு விற்கப்படுகிறது. அதேநேரம், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் வேலைவாய்ப்பு-மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
உலகமயம் உத்தரவாதம் அளித்த முதன்மை அம்சம், மிகப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. வாழ்வாதாரத் துக்கும் வேலைக்கும் முன்பு இருந்த குறைந்தபட்ச உத்தரவாதம் பறிபோய், நெருக்கடி மோசமடைந்திருக்கிறது. சூழலியல் தொகுப்பு சிதைக்கப்படுதல், நிலம்/நீர் சீரழிவு தீவிரமடையும்போது, இயற்கை வளத்தைப் பெறுவதற்கான சாத்தியம் பாரம்பரிய நுகர்வோரிடம் குறைகிறது. அவர்கள் அவ்வளவு காலம் மேற்கொண்டுவந்த சுயதொழிலும் சேர்ந்து பறிபோகிறது. காடு வாழ் பழங்குடிகள், மீனவர்கள், கால்நடை மேய்ச்சல் சமூகங்கள், உழவர்கள், கைவினைக் கலைஞர்களைப் போன்று இயற்கை வளங்களை ஆதாரமாகக் கொண்ட தொழில்களில் உலகமயமாக்கத்துக்குப் பின் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அல்லது வேலை இழந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு இல்லாதது, இந்தத் துறைகள் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறது.
உலகமயமாக்கத்தால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையா?
வல்லரசாகத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியா, சுற்றுச்சூழல் சீரழிவு சார்ந்த விஷயங்களில் ஏற்கெனவே முன்னணியில்தான் உள்ளது. ‘சூழலியல் தடம்’ அதாவது, இயற்கைச் சுற்றுச்சூழல் மீது மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில், அதன் தாங்கும் திறனை மீறி இரண்டு மடங்கு சுரண்டிவருகிறோம். ‘உலகத் தட வலைப் பின்னல்’ (Global Footprint Network) என்ற அமைப்பும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பும்(CII) இணைந்து 2008-ல் வெளியிட்ட அறிக்கையில்தான் இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.
அதிலும், இந்திய மக்கள்தொகையில் 0.01 % மட்டுமே இருக்கும் அதி பணக்காரர்கள், இந்தியாவில் ஏழ்மையில் வாடும் 40% மக்களைவிட 330 மடங்கு அதிகமாக இயற்கையைச் சுரண்டுகிறார்கள். உலக அளவிலும் இது மிகமிக அதிகம், வளர்ந்த நாடொன்றில் வாழும் மக்களைவிட 12 மடங்கு அதிகமாக இந்திய அதி பணக்காரர்கள் இயற்கையைச் சுரண்டுகிறார்கள். இந்த வசதியை உருவாக்கிக் கொடுத்தது உலகமயமாக்கத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான். மற்றொருபுறம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் கடைத்தேற வழியின்றி வறுமையின் ஆழத்தில் புதையச் செய்திருக்கிறது.

இந்தச் சீரழிவுகள் அனைத்துக்கும் உலகமயமாக்கத்தை ஒற்றைக் காரணமாகச் சுட்ட முடியாது என்பது என்னவோ உண்மைதான். நாடு விடுதலை பெற்ற பிறகு எப்படிப்பட்ட வளர்ச்சி மாதிரி முன்னெடுக்கப்பட்டது என்பதையும், ஆட்சி நிர்வாகத்தில் புதைந்துகிடக்கும் பிரச்சினைகள், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்படாதது போன்றவையே இந்தியா இன்றைக்கு உள்ள மோசமான சூழ்நிலைக்குக் காரணம். ஆனால், இதையெல்லாம் போக்கிவிடும் சர்வரோக நிவாரணி என்றே 25 ஆண்டுகளுக்கு முன் உலகமயமாக்கம் முன்மொழியப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்திருப்பது என்ன? இந்தியா சந்தித்த நெருக்கடிகளை உலகமயமாக்கம் தீவிரமடையச் செய்துள்ளது, அது மட்டுமல்லாமல், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் புதிய ஆபத்துகளையும் அது கொண்டுவந்து சேர்த்திருக்கிறது!
**********************

மான்டேக் சிங் அலுவாலியா பேட்டி

*
மன்மோகன் சிங் அணியின் முக்கியமான தளகர்த்தர் மான்டேக் சிங் அலுவாலியா. பிரதமர் பதவியில் மன்மோகன் அமர்ந்திருந்த 10 ஆண்டுகள் அவருக்கு உறுதுணையாகவும் ஆலோசகராகவும் மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர். உலகமயமாக்கல் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
1991 பொருளாதார நெருக்கடி மீட்புக் குழுவில் நீங்கள் முக்கிய உறுப்பினர்; அதற்குப் பிறகு நம்பிக்கை பல மடங்கு பெருகியது. அதே போன்ற நெருக்கடி பிறகு ஏற்படவில்லை; பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அதே போன்ற துணிச்சலும் நெஞ்சுரமும் அதற்குப் பிறகும் இருந்ததாகக் கூற முடியுமா?
1991 நெருக்கடி மிகவும் தீவிரமானது. உடனடியான, துணிச்சலான பதில் நடவடிக்கை தேவைப்பட்டது. நிதியமைச்சர் மன்மோகன் சிங், பிரதமர் நரசிம்ம ராவின் முழு ஆதரவோடு விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டார். நெருக்கடியைச் சமாளிக்க மட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நெருக்கடியையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமைப்பு முறையையே மாற்றியமைக்கும் அளவுக்குக் கட்டமைப்புகளில் மாறுதல்களைக் கொண்டுவந்தார். 1950-களிலும் 1960-களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிர்வாக முறைமை அதற்குப் பிந்தைய காலத்துக்குப் பொருந்தாமல் போய்விட்டது. அதைப் பற்றிப் பலமுறை பேசிவிட்டனர். தொழில், வர்த்தகக் கொள்கையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர். தனியார் துறைக்கும் சந்தைகளுக்கும் முழு வாய்ப்பைத் தர வேண்டும் என்றனர். அரசியல் நிலையில் அவற்றுக்கு ஆதரவில்லை. அதிலும் குறிப்பாக இடதுசாரிகள் ஏற்கவேயில்லை. அதற்குப் பிறகு அத்தகைய துணிச்சலை நான் பார்க்கவேயில்லை. அதே சமயம், அதே போன்ற நெருக்கடியும் ஏற்படவில்லை. மகிழ்ச்சி தரும் அம்சம் என்னவென்றால், நரசிம்ம ராவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துப் பிரதமர்களுமே சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதுதான். திட்டங்களுக்கு இப்போது புதிய பெயர் சூட்டப்பட்டாலும் அவை பழைய திட்டங்களே. 1955 முதல் 1990 வரையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 4% தான் இருந்தது. இதேபோல், தனிநபர் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 2% என்ற அளவில்தான் வளர்ந்தது. சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், சராசரியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக அதிகரித்தது. மக்கள்தொகை பெருகும் வேகம் மட்டுப்பட்டது. நபர்வாரி உற்பத்தி வளர்ச்சி 5.5% ஆனது. அதுதான் வித்தியாசம். வருவாய் வேகமாக உயர்ந்தது, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், தொழில் தொடங்கலாம் என்ற அளவுக்குப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட வறுமை வேகமாகக் குறைந்தது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் மாறிவிட்டன. வறுமைக்கோட்டுக்கு மேலே தள்ளப்படுவது மட்டும் போதாது என்று ஏழைகள் கருதுகின்றனர். தரமுள்ள வேலை, கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற சேவைகளைப் பெறுவதில் சம உரிமை வேண்டும் என்கின்றனர். நாம் இத்துறையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.
சீர்திருத்தங்களுக்கு முன்னால், இந்தியாவின் வளர்ச்சி பிற வளரும் நாடுகளை விடக் குறைவாக இருந்தது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு வளர்ந்த நாடுகளைவிட அதிகமாகிவிட்டது. சீனம் மட்டுமே விதிவிலக்கு.
மாற்றங்களின் வேகம் தொடர்பான தன்னுடைய கருத்துகள் மாறிவிட்டன என்று மன்மோகன் கூறியிருக்கிறார்; “மெதுவாக மாற வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால், நாட்டின் சூழலைப் பார்த்தபோது, மெதுவாகச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. அடிப்படையான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கான நேரம் இது என்றே முடிவு செய்தேன்” என்கிறார் மன்மோகன். அவரே பிரதமராகப் பதவி வகித்தபோது ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ வந்துவிட்டதாகப் பின்னர் கூறப்பட்டது. அதைப் பற்றிக் கூறுங்களேன்?
சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால் தொழில் திட்டங்களின் காத்திருப்பு எண்ணிக்கை உயர்ந்தது, அரசு - தனியார் பங்கேற்பில் (பி.பி.பி.) தீர்க்கப்படாத பூசல்கள், அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் போன்றவற்றைத்தான் ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ என்று நீங்கள் கூறுவதாகப் புரிந்துகொள்கிறேன். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது நிச்சயம் பிரச்சினையாக இருந்தது. 2012 இறுதியில் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 8% வளர்ச்சி என்பது ஆதரவான அரசின் கொள்கைகளைப் பொறுத்தது என்று கூறியிருந்தோம். கொள்கை வகுப்பதில் தேக்கநிலை ஏற்பட்டால், வளர்ச்சி வேகம் 5% முதல் 5.5% ஆகக் குறைந்து விடும் என்று எச்சரித்தோம். தேக்கநிலைக்கு முக்கியக் காரணம், தீர்வு காண ஒத்துழைக்காமல் அமைச்சகங்கள் செயல்பட்டதுதான். அதற்கும் தீர்வு காண வழிகள் ஆராயப்பட்டன. அதற்குள் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது.
வெகு உறுதியுடன் நாங்கள் செயல்பட்டது பல முறை. அவற்றிலிருந்து சிலவற்றைக் கூறுகிறேன். 2013-ல் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்பாக அழுத்தம் தரப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இறக்குமதி மதிப்பு அதிகம் - ஏற்றுமதி மதிப்பு குறைவு) அதிகமாகி மொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆனது. அந்நிய மூலதனமும் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அதனால், ரூபாயின் மாற்று மதிப்பு வேகமாகச் சரிந்தது. செலாவணி மாற்று மதிப்பை நெகிழ்ச்சியாக வைத்திருந்ததால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் உதவியைப் பெறாமலேயே நிலை மையைச் சமாளித்தோம். நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தே தீருவது என்ற உறுதியான முடிவை நிதியமைச்சர் அப்போது எடுத்ததும், கைவசம் அதிகளவில் இருந்த அந்நியச் செலாவணி மதிப்பும் கைகொடுத்தன. அப்போது நாங்கள் தயங்கியிருந்தால் விளைவுகள் வேதனை தந்திருக்கும்.
2007-08 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த நிதித் தூண்டல் நடவடிக்கைகளால் பொருளாதாரத் துயர் அதிகமானது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். அந்த முடிவுகளை எடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்…
அந்த நிதித் தூண்டல் முடிவுகளின் பின்னால் நான் இருந்தேன் என்று அவர் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். நிதி நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நிதியமைச்சகம்தான். நெருக்கடிக்கு எதிராக தொடக்கமாகச் சில ஊக்குவிப்புகளை வழங்கலாம் என்பதை ஆதரித்தேன். அப்போதைக்கு அதுதான் சரியான நடவடிக்கை. ஜி-20 அமைப்பும் அதைத்தான் பரிந்துரைத்தது. 2009-10-ல் வளர்ச்சி வீதத்தைப் பாதுகாத்ததற்குப் பிறகு 2010-ல் அவற்றைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாம் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருப்போம் என்று கருதுகிறேன்.
திட்டக் குழு தன்னைப் புதிதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். திட்டக் குழு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?
எல்லா நிறுவனங்களுமே தாங்கள் தோற்றுவிக்கப் பட்டதற்கான லட்சியத்தை நிறைவேற்றுகிறோமா என்று அவ்வப்போது பரிசீலித்து வர வேண்டும். புதிய பொருளாதாரச் சூழலில் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாகத் திட்டக் குழு போன்ற நிறுவனம் எப்படிச் செயல்பட முடியும் என்று சிந்திக்குமாறு மன்மோகன் எங்களைக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பாக விரிவான அறிக்கை அளித்த நான், அடுத்து வரும் அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றேன். துறைவாரியான கொள்கைகள், தனியான திட்டங்கள் தொடர்பாக திட்டக் குழு சுதந்திரமாக அதே சமயம் உள்ளுக்குள் மட்டும் பரிமாறிக்கொள்ளும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்திருந்தேன். திட்டமிடல் என்பது எந்தத் திட்டத்துக்கு, எந்த மாநிலத்துக்கு, எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதில்தான் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தியதே தவிர, துறைவாரியான திட்டங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அதேபோல, திட்டங்களை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டுப் பார்த்ததில்லை. தேவைப்படும்போது நிபுணர்களை வரவழைத்துப் பயன் படுத்திக்கொள்ளும் வசதி திட்டக் குழுவுக்கு இருந்தது.
பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தில் பெரும்பாலான திட்டங்களுக்குத் தேவைப்பட்ட நிபுணத்துவ ஆலோசனை, துறைகளுக்கு உள்ளே 80% அளவுக்கும் வெளியே 20% அளவுக்கும் கிடைத்தது. இப்போது அது தலைகீழ் விகிதமாகிவிட்டது. முக்கியமான துறைகளில் இப்போது தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளியில் இருக்கும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறை ஏதும் அரசிடம் இல்லை. ஆலோ சனைக் குழுக்களோ, நிபுணர்க ளின் வழிகாட்டலோ போதாது. அந்தந்தத் திட்டங்களை மேற் பார்வை பார்த்து அமல் செய்யக் கூடிய நிபுணர்கள் நிர்வாகப் பொறுப்பிலே அரசின் சிறப்பு அதிகாரியாகவே இருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2 கோடியில் அந்தந்த வேலைகளுக்கு நிபுணர்களைச் சிறப்பு அதிகாரியாகப் பணியில் அமர்த்திக்கொள்ள தீர்மானம் கொண்டுவந்தேன். அதை வரவேற்றவர்கள், அப்படி ஒருவரைக் கொண்டுவரும் நடைமுறை சிக்கலானது என்று குறிப்பிட்டனர். ஒரு பத்திரிகை அந்தத் தொகை ரொம்ப அதிகம் என்றுகூடக் குற்றம் சாட்டியிருந்தது!
திட்டக் குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. முந்தைய அமைப்பில் இருந்த குறைகளைக் களையும் விதத்தில் இது இருக்கிறதா, இப்போதைய தேவைக்கு ஏற்ப அமைந்துள்ளதா?
நீங்கள் கூறியபடி இது தொடங்கப்பட்டு சில காலம்தான் ஆகிறது. அங்கே என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாத போது கருத்துச் சொல்ல முடியவில்லை. புதிய அமைப்பு நன்றாகச் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தரமான ஆய்வும் கூர்மையான ஆலோசனைகளும் அரசின் கொள்கையைச் சிறப்பாக அமல்படுத்த உதவும். அதுதான் நிதி ஆயோக்கின் வரம்பு என்று கேள்விப்படுகிறேன்.
வளர்ச்சி தொடர்பாக மத்திய புள்ளிவிவரத் துறை அளித்த மதிப்பீடுகள் சரியாகத்தான் கணக்கிடப்பட்டுள் ளனவா என்ற சந்தேகம் இருப்பதாக ப.சிதம்பரம் உட்பட பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தொழில்துறையில் உண்மையிலேயே மீட்சி ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. தரவுகள் சுட்டிக்காட்டும் அளவுக்கு உண்மையில் அத்துறை மீட்சி பெற்றுவிடவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விவாதத்தில் உங்களுடைய நிலை என்ன? புள்ளிவிவர மதிப்பீடுகளுக்கும் உண்மை நிலைக்கும் இடையே எப்படித் தொடர்பில்லாமல் போக முடியும்?
சிதம்பரம் மட்டும் இந்த சந்தேகத்தை எழுப்பவில்லை. அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே வியப்பு தெரிவித்திருக்கிறது. எனவே, தீர்க்கப்படாத சில அம்சங்கள் இதில் இருக்கின்றன. வளர்ச்சி வீதம் தொடர்பான புதிய புள்ளிவிவரங்கள் பழைய குறியீடுகளைவிட அதிகமாக இருக்கின்றன. இதைப் பற்றி விசாரிக்க பிரணாப் சென் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் வெகு விரைவில் இதைத் தீர்த்துவைக்க வேண்டும்.
இப்போது சீனத்தில் வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது. சீனத்தைவிட நம்முடைய வளர்ச்சி வேகம் அதிகம். சீனத்தின் புள்ளிவிவரம் உண்மையான வளர்ச்சியை மிதமிஞ்சிக் காட்டுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனத்தின் புள்ளிவிவரமே கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நம்முடையதும் அப்படியே கேள்விக்குள்ளாக்கப்படும். நம்மிடம் உள்ள தகவல்களை எந்த அளவுக்கு வேகமாக பரிமாறிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
இருண்டு காணப்படும் உலகப் பொருளாதாரச் சூழலில் இந்தியா அமைதியான தனித் தீவாகக் காட்சி தருகிறது. பன்னாட்டுச் சூழலின் அதிர்ச்சியால் பாதித்துவிடாமல், உள்நாட்டுத் தொழில் துறை அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது இப்படியே நீடிக்குமா? இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தி, நுகர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா?
ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி நடைமுறையை நாம் சார்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. அதனாலேயே நாம் உலக அளவிலான அதிர்ச்சிகளால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறோம் என்று பொருள் அல்ல. முன்பைவிட நாம் இப்போது வெளிப்படையாகச் செயல்படுகிறோம். எனவே, உலகின் எந்தப் பகுதியில், எது நடந்தாலும் நமக்கும் அது முக்கியமே. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு என்ற அதிர்ச்சி இப்போது நமக்குச் சாதகமாக இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டு அம்சங்களைப் பொறுத் திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் தனியார் முதலீட்டைப் புதுப்பிப்பதும் முக்கியம். இவ்விரண்டுமே இறக்குமதியைத்தான் ஊக்குவிக்கும். வெளி வர்த்தகப் பற்றுவரவை நிர்வகிக்க ஏற்றுமதியை அதிகரித்தாக வேண்டும். இந்தியத் தொழில்துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த நேரடி அந்நிய முதலீடும் அவசியம். நமது உற்பத்தி உலக சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அதற்கு நாம் வர்த்தகப் பேச்சுகளை நடத்த வேண்டும். எனவே, உலகப் பொருளா தாரத்துடன் தொடர்புகொள்வது அவசியம். உலகப் பொருளாதாரத்தை அலட்சியம் செய்தால் நமக்கு அது ஆபத்தைத் தரும்.
ரகுராம் ராஜனுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க மறுத்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. பாஜக அவரை விரட்டிவிட்டது என்றும் கூறுகின்றனர். ராஜன் இந்தியாவில் ஆற்றிய பணி குறித்தும் அவர் வெளியேற்றப்படும் விதம் குறித்தும் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
‘‘மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்கிறேன்’’ என்று ராஜனைச் சொல்ல வைத்தது எது என்று தெரியாது. இந்தியப் பொருளாதார நிர்வாகக் குழுவினருக்கு இது உண்மையிலேயே பேரிழப்பு. மிகச் சிறந்த ஆளுநராக அவர் பணியாற்றினார். சர்வதேச அளவில் அவர் மீது மரியாதை அதிகம். இப்படிப்பட்ட திறமைசாலி ஆளுநராக இருந்தால் இந்தியாவின் கொள்கைகளுக்கே தனி மதிப்பு ஏற்படும்.
2013-ல் ஏற்பட்ட நெருக்கடியை நன்றாகக் கையாண்டார். அவர் தொடங்கிய சீர்திருத்தங்களை வெகு விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்போது இருப்பதைவிட மோசமான நிலைக்கு சீனம் செல்லுமா?
சீனத்தின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கவலை உலக நாடுகளிடையே காணப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாகப் பராமரித்துவந்த வளர்ச்சி வேகத்திலிருந்து அவர்கள் குறைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 6.5% ஆக அதன் வளர்ச்சி குறைந்தாலும், இந்த நிலையை அது பராமரிக்க முடிந்ததே பாராட்டுக்குரியது என்று கருதப்பட்டது. ஆனால், அந்தத் தரவும் உண்மைதானா என்கிற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. சிலர் அது 4.5% என்று கூறுகின்றனர். அப்படியானால், வேலைவாய்ப்பு குறைந்து சீனத்திலேயே பதற்றம் அதிகரித்துவிடும். சர்வதேச நெருக்கடிகளுக்குப் பிறகும் கடன் வழங்கியதால் மனை வணிகத் துறை அதிக அடுக்கங்களைக் கட்டி பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க உதவியது. ஆனால், வேலைவாய்ப்பும் வருமானமும் மற்ற துறைகளில் இல்லாததால் அந்த வீடுகளை வாங்க ஆட்கள் இல்லை. சீனப் பொருளாதார வளர்ச்சியின் அச்சாணியே ஏற்றுமதிதான். இப்போது உலக நாடுகள் நெருக்கடிகளில் ஆழ்ந்திருப்பதால் சீனத்தின் ஏற்றுமதி பெருகுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. சீனம் பாதிக்கப்பட்டால் அது அலையலையாக பிற நாடுகளிலும் எதிரொலிக்கும்.
பிரெக்ஸிட் சொல்வது என்ன? ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஏற்பாடு வெற்றியா, தோல்வியா? இதன் பொருளாதார விளைவுகள் என்னவாக இருக்கும்?
பிரெக்ஸிட் முடிவு வியப்பளித்தது. மேல்தட்டு வர்க்கம் எவ்வளவோ இனிமையாகப் பேசினாலும் சாமானிய பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கையில் வளம் இல்லை. அந்த விரக்தியே பிரெக்ஸிட் ஆதரவாக மாறியிருக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்ல; ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. வேலைவாய்ப்பு, வருவாய் குறைந்துவிட்ட நிலையில் வேற்று நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது எல்லோரையும் பீதியில் ஆழ்த்திவருகிறது. பிரிட்டன் வெளியேறித்தான் ஆக வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. புதிய பிரதமர் இதை நாடாளுமன்றத்தின் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற சோதனை முயற்சி இனி சரி செய்ய முடியாத அளவுக்குத் தோற்று விட்டது என்று இப்போதே முடிவு கட்டிவிட முடியாது. பிரெக்ஸிட் டால் ஏற்படக்கூடிய ஆக்கபூர்வ முடிவை யூகிக்க முடிய வில்லை. எதிர்மறையாகப் பலது நடக்கும் என்று தெரிகிறது.
உலகம் முழுக்க தேசியவாதம் வலுத்துவருகிறது. இது பொருளாதாரச் சூழலுடன் தொடர்புள்ளதா? உலகப் பொருளாதாரம் எப்போது மீட்சி பெறும்? எந்தவிதப் பொருளாதாரம் மீட்சிக்குத் தலைமை தாங்கும்?
பொருளாதாரம் சார்ந்த தேசியவாதத்தின் எழுச்சிக்கு இப்போதைய நிரந்தரமான பொருளாதார இன்னல்களே காரணம். நிலைமை திருந்திவிடும் என்று அரசுகள் தொடர்ந்து அலறுகின்றன. உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை. சீனா இன்னும் பிரச்சினைகளில் ஆழ்ந்திருப்பதால் இந்த ஆண்டு மீட்சி வரும் என்று நினைக்கவில்லை. ஐரோப்பாவில் பிரச்சினைகள் ஏற்கெனவே அதிகம், பிரெக்ஸிட் வேறு பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டது. அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நாடுகளில் பொருளாதாரம் மீட்சி அடைந்தால், ஓரளவுக்குப் பலவீனமான மீட்சியை அடுத்த ஆண்டு பார்க்க முடியும். கச்சா எண்ணெய் விலை இப்போதைக்கு அதிகமாக உயராது, இது நமக்கு நன்மை தான். ஆனால், ஏற்றுமதிச் சந்தையில் கடும் போட்டி இருக்கும், அது நமக்கு பாதகமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அமைப்புரீதியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டால் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க முடியும்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி,
© ‘தி இந்து’ ஆங்கிலம்
***********
சுதந்திர இந்தியாவின் பொருளாதாரத்தில் ஐந்தாண்டுத் திட்டங்கள் முக்கியமானவை. 1951-56 காலகட்டத்துக்கான முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் அறிக்கை ‘மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமமான பொருளாதார வளர்ச்சியை அடையவும், பொருளாதாரம் ஒரே இடத்தில் குவிவதைத் தடுக்கவும், நாட்டின் வளங்களைப் பல்வேறு துறைகளுக்குப் பங்கிட்டு மேலே கூறிய குறிக்கோள்களை அடையத் திட்டமிட வேண்டும்’ என்கிறது.
பொருளாதாரத் திட்டமிடல் பற்றிய இந்தப் பார்வை 1991-ல் முற்றிலும் மாறியது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை (1992-97) ‘திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறும்போது நமது சமூக-கலாச்சார அமைப்பை நசுக்காத வண்ணம் மாற்றத்தை மேலாண்மை செய்வதற்கான திட்டம்’ பற்றிப் பேசுகிறது.
எட்டு முதல் பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் வரை, அரசின் திட்டச் செலவுகள் குறைந்துள்ளன. அரசின் கவனம் தொழில் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்வதிலிருந்து விலகியது. அதே நேரத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர், கிராமப்புற வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் செலவுகள் அதிகரித்தாலும், கூடவே தனியார் துறையும் இதில் ஊக்கப்படுத்தப்பட்டது. பொருளாதார முழுமைக்குமான திட்டமிடல் என்பது ஒரு சில துறைகளுக்கு மட்டுமே என்று சுருங்கியது. இனிமேல் அந்தத் திட்டமிடலும் கிடையாது.
தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு, திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிடல் என்பது அரசியல்ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. மாநில அரசுகளும் இந்த மாற்றத்தை ஒப்புகொண்டன. ஆனால், திட்டமிடலை உள்ளாட்சி அமைப்புகள் வரை பரவலாக்க வேண்டும் என்பதுதான் சிறந்த அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்குப் பதிலாகத் திட்டமிடலையே கைவிடுவதால் பொருளாதாரத்தை வழிநடத்துவதில் அரசுக்கு இருந்த பிடிப்பும் அதிகாரமும் கைநழுவிப் போகிறது. இதனை மீண்டும் அடைவது சிரமம். திட்டமிடலை வெறுப்பதுதான் உலகமயம் போலிருக்கிறது!
- இராம.சீனுவாசன், பேராசிரியர்

வெள்ளி, 8 ஜூலை, 2016

தோனியின் கேப்டன்சி சாதனைகள் -35-வது பிறந்த தினம்

பல கேப்டன்சி சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் கேப்டன் தோனி இன்று (வியாழன்) 35-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

2007-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை தோல்வி, கிரெக் சாப்பல் ஊதிப்பெருக்கிய சர்ச்சைகள் என்று தடுமாறிக் கொண்டிருந்த போது கேப்டனாக்கப்பட்ட தோனி முதல் டி20 உலகக்கோப்பையை வென்று தன்னம்பிக்கை இழந்து கொண்டிருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தார். 

2008-ம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதன் முதலாக ஆஸ்திரேலியாவை 3 இறுதிப் போட்டிகளில் 2-ல் தொடர்ச்சியாக வென்று கோப்பையைக் கைப்பற்றினார். 2011 உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, நிறைய இருதரப்பு ஒருநாள் தொடர்களில் வெற்றி என்று தோனியின் கேப்டன்சி சாதனைகளை அடுக்கலாம். 

டெஸ்ட் போட்டிகளிலும் அதிக வெற்றியுடன் நம்பர் 1 கேப்டனாகவே திகழ்ந்தார் தோனி. 60 போட்டிகளில் இவர் 27 போட்டிகளில் தன் தலைமையில் வென்றுள்ளார். மொத்தம் 191 ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையில் இந்திய அணி 104 போட்டிகளில் வென்றுள்ளது. 

டி20 போட்டிகளில் ரிக்கி பாண்டிங்குக்கு இணையாக 63 போட்டிகளில் 36 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 2009-ம் ஆண்டு தோனியின் கேப்டன்சியில்தான் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்தது. பிறகு 2010-ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனி தலைமையில் இந்தியா 1-1 என்று தொடரை சமன் செய்ததோடு, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-1 என்று தோனி தலைமையில் இந்திய அணி சமன் செய்தது. ஸ்ரீசாந்தின் அந்த ஸ்பெல்லை மறக்க முடியாது. குறிப்பாக ஜாக் காலீசை வீழ்த்திய பவுன்சர் அபாரமானது. 

ஆஸ்திரேலியர் அல்லாத ஒரு கேப்டன் 100 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சியில் வெல்வது என்ற சாதனைக்கும் தொனி சொந்தக்காரர். 100 ஒருநாள் போட்டிகளில் தன் தலைமையில் வெற்றி பெற்ற 3-வது கேப்டன் என்ற சாதனையும் தோனியின் வசமே. முன்னதாக ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங் 100 ஒருநாள் போட்டிகளில் தங்களது கேப்டன்சியில் வென்றுள்ளனர்.

90 டெஸ்ட் போட்டிகள் ஆடிய தோனி 4,876 ரன்களை எடுத்தார். இதில் அவருக்குப் பிடித்த சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த அதிரடி 224 ரன்களே அவரது அதிக பட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். டெஸ்ட் சராசரி 38.09.

278 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8,918 ரன்களை 51.25 என்ற சராசரியின் கீழ் அவர் எடுத்துள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 183 நாட் அவுட். இதனை அவர் இலங்கைக்கு எதிராக எடுத்தார். இலக்கைத் துரத்துவதில் அப்போது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் இது. 

71 டி20 போட்டிகள் ஆடியுள்ள தோனி இதுவரை அரைசதம் கண்டதில்லை என்பது ஆச்சரியமே. 1069 ரன்களை அவர் எடுத்துள்ள நிலையில் அதிகபட்ச ரன் எண்ணிக்கை 48 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் பரவலை முடக்குவதா?

தவிர்க்க முடியாத, நீக்க முடியாததாகப் பஞ்சாயத்து ராஜ் வளர்ந்திருக்கிறது
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை மூட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்திருப்பது உண்மை என்றால், அடித்தள வளர்ச்சிக்கான அடித்தள ஜனநாயகத்தை அவரது அரசு அணுகும் விதம் பற்றிய அச்சம் உறுதிப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.
தற்போது மத்திய அரசின் செயல்பாடுகளில் வெளிப்படும் இந்தக் கோளாறு வெகுகாலத்துக்கு முன்பே ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’யில் இருந்தது என்பதற்கான ஆதாரம் இது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாம் ஆட்சியின்போது, மாநிலங்கள் பிரத்யேகமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உரையாற்றுவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முயற்சியில் இருந்தேன். அப்போது என்னைத் தனது மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுத்த ஒரே முதலமைச்சர், நரேந்திர மோடிதான்.
அதிகாரப் பகிர்வுக் குறியீட்டெண்
பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளித்தலை வலுப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்த முன்னெடுப்புகளில் ஒன்று, ‘அதிகாரப் பகிர்வுக் குறியீட்டெண்’. அமைப்புசாரா நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட அந்தத் திட்டம், அரசியல் சட்டத்தின்படியும், தங்கள் மாநிலச் சட்டங்களின்படியும் அதிகாரப் பகிர்வு விஷயத்தில் முந்தைய ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இவ்விஷயத்தில், மிக மெதுவாகச் செயல்படத் தொடங்கிய பிஹார், திரிபுரா, சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள், பின்னர் நல்ல முன்னேற்றம் அடைந்ததுடன் முறையான அங்கீகாரத்தையும் பெற்றன. இதில் குஜராத் மட்டும் ஒருபோதும் இடம்பெறவில்லை. ஏனெனில், அதிகாரப் பகிர்வு எனும் விஷயத்தில் அம்மாநிலம் உறைநிலையிலேயே இருந்தது. மோசமான விஷயம் என்னவென்றால், குஜராத்தில் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட, நிதி அடிப்படையில் இயங்கும் பஞ்சாயத்துகளால் கிராம அளவிலான ஜனநாயகம் மறுக்கப்பட்டதுதான்.
உள்ளூர் சுய அதிகார நிர்வாகத்தின் தேவையை, மாநில முதல்வர்களிடமும், மாநிலங்களின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்களிடமும் எடுத்துச் சொல்ல மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் முன்வரவில்லையென்றால், உள்ளூர் நிர்வாகத்தின் ஜனநாயகத்தன்மையைச் சிதைக்கும் வேலைகள் அதிகரிக்கும். அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது பகுதியாகத் தற்போது இணைந்திருக்கும் 73-வது சட்டத் திருத்தம், மத்திய - மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்புதான். அரசியல் சட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவில் நீண்ட, விரிவான திருத்தத்தை மேற்கொள்வதற்கான வழிகளை முன்னெடுத்துச் செல்வதிலும், பாதுகாப்பதிலும் இந்தக் கூட்டுப் பொறுப்பு தேவையாக இருந்தது.
நீர்த்துப்போகும் நோக்கங்கள்
1992 டிசம்பரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத் திருத்தம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருமித்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மாநில அமைச்சர்களை ஒன்றிணைப்பது, கல்விசார் அறிஞர்கள், களச் செயல்பாட்டில் ஈடுபட்டி ருக்கும் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளிடையே சிறப்பான செயல்பாடுகளை வளர்த்தெடுப்பது, பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவது, பஞ்சாயத்து ராஜ் தொடர்பான தரவுகளைக் கொண்ட தகவல் களஞ்சியத்தைப் பராமரிப்பது போன்றவற்றின் மூலம் இந்த ஒருமித்த நடவடிக்கை நீடிக்க வேண்டும். இந்த அமைச்சகம் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் இவை. இந்நிலையில், அகில இந்திய அளவில் இப்படியான பார்வையை மத்திய அரசு அளிப்பது, இந்த நோக்கங்களை நீர்த்துப்போகச்செய்துவிடும் என்பதுடன், இதற்கான தனி அமைச்சகமே இல்லாமல் செய்துவிடும்.
மேலும், தேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்துடன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை இணைப்பது அல்லது அதன்கீழ் கொண்டுவருவது என்பது அரசியல் சட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாத தன்மையைக் காட்டுகிறது.
சுயசார்பு நிறுவனம்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைப்பது என்பது ஒரு மீறல்; பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சட்ட பங்கைச் சிதைக்கும் செயல். பஞ்சாயத்து அமைப்புகள், ஒரு சுயசார்பு அரசின் நிறுவனமாகச் செயல்படும் அளவுக்கு அவற்றுக்கு அதிகாரம் வழங்கும் அதிகாரப் பகிர்வு தருவதற்காக 73-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இங்கு ‘சுயசார்பு அரசு’ என்பது முக்கியமானது. இது ‘சுயசார்பு நிர்வாகம்’ அல்ல. அதாவது, மாநில அரசுத் துறைகள் அல்லது மத்திய அமைச்சகங்களின் திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனமாக அல்லாமல், பஞ்சாயத்து ராஜ் அமைப்பை அரசின் மூன்றாவது அடுக்காக உருவாக்குவதுதான் இந்தச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். இதன்படி, சுயசார்பு நிறுவனமாக இயங்க பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்குத் தேவையான செயல்பாடுகள், நிதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியிருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கும் மாநில அரசியல் செயற்பாட்டு முறைக்கும் இடையிலான இதுபோன்ற புரட்சிக்கு, நேரமும் பொறுமையும் அவசியம். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இதைத்தான் வலியுறுத்திவருகிறது. இதுபோன்ற ஆலோசனைப் பணிகளில் ஈடுபடுவதுதான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முதன்மையான கடமை.
நிர்வாகத்தில் மாற்றங்கள்
மாநிலப் பட்டியலில் பஞ்சாயத்து ராஜ் நீடிக்கிறதுதான் என்றாலும், அரசியல் சட்டத்தின் 73-வது சட்டத் திருத்தத்தின்படி, அரசியல் சட்ட விதிகளின் நோக்கங்களை நிறைவேற்ற மாநிலங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மத்திய அரசின் பொறுப்பு. இந்தப் புரட்சிகரப் பணிக்கு, தனி அமைச்சகம் அவசியம். குறிப்பாக, நல்ல செல்வாக்குள்ள அமைச்சரின் தலைமையில் அந்த அமைச்சகம் இயங்குவது அவசியம். இல்லையெனில், பஞ்சாயத்து ராஜ் செயல்படாமல் முடங்கிவிடும்.
மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்களுக்கான இந்த மேற்பார்வை நடவடிக்கைகளுக்கான உத்தரவை, 2004 நவம்பர் முதல், 2013 ஆகஸ்ட் வரை, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் துறைச் செயலாளர்களுக்கும், அமைச்சரவைச் செயலாளர் மூலம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கு அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் இதற்கு மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவிலான நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 5,000 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன், சுமார் 28 லட்சம் கிராமப்புறப் பிரதிநிதிகள், சுமார் 14 லட்சம் நகர்ப்புறப் பிரதிநிதிகள் உள்ளனர். 14 லட்சம் பேர் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்கள். இவர்கள் இணைந்துதான், உலகின் மிகப் பெரிய பிரதிதித்துவ ஜனநாயகமாக இந்தியாவை உருவாக்குகிறார்கள். இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, உலகில் உள்ள மொத்த பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். அத்துடன் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு நாம் சரிசமமான பிரதிநிதித்துவத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.
இந்தச் சாதனைகள் அனைத்தும் வரலாற்றிலோ அல்லது சமகாலத்திலோ முன்னுதாரணமற்றவை. சமூக மாற்றத்துக்கான இந்தப் பிரம்மாண்ட அமைப்பு ஒரு மத்திய இணையமைச்சர் வசம் ஒப்படைக்கப்படுகிறது என்றால், என்ன மோசமான பின்னடைவு இது!
அதிகாரமளித்தலின் விளைவாகப் பல தடைகளுக்கு மத்தியில், வெவ்வேறு வேகத்தில், பன்முகத்தன்மையுடன், சந்தேகமில்லாமல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் கணிசமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தவிர்க்க முடியாத, நீக்க முடியாததாகப் பஞ்சாயத்து ராஜ் வளர்ந்திருக்கிறது. அதன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை. இந்நிலையில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை வேறு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவது, ஜனநாயகப் பரவலில் கடந்த கால் நூற்றாண்டில் நடக்காத மிகப் பிற்போக்கான நடவடிக்கை. உண்மையில் திருவாளர் மோடி விரும்புவது இதைத்தானா?
- மணிசங்கர் அய்யர், மத்திய பஞ்சாயத்து ராஜ் முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் தலைவர்.
‘தி இந்து’(ஆங்கிலம்) தமிழில் சுருக்கமாக: வெ.சந்திர

உலகமயமாக்கலும் இந்தியாவும்: ஒரு மீள்பார்வை

கட்சி 1999 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது. அதன் புதிய பொருளாதாரக் கொள்கை எளியவர்களுக்கு எதிரானது என்ற தீவிரமான பிரச்சாரமும் அதற்கு ஒரு காரணம். 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி அரசு தேவ கௌடா தலைமையில் மத்தியில் அரசமைத்தது. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தீர்ப்பு என்பதால், அடுத்துவரும் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று எல்லாரும் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ்
காங்கிரஸில் இருந்த ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் மூலமாக ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையின் வெளிப்படையான அம்சங்கள் இல்லை. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகளை மீண்டும் செய்ய வேண்டும் என்று தொழில் துறையினரும், பன்னாட்டு நிறுவனங்களும் கூறிவந்தன. இந்தச் சூழலில்தான் 1997-ம் ஆண்டில் பிப்ரவரி 28-ல் இரண்டாவது வரவு- செலவு அறிக்கையைச் சிதம்பரம் தாக்கல் செய்தார். அது புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சியாக இருந்தது. இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் அதில் இருந்ததால் ‘கனவு பட்ஜெட்’ என்று வர்ணிக்கப்பட்டது. அரசியல் சமூகக் களத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான சூழலில், இந்த முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தனி நபர் மற்றும் பெருநிறுவனங்களின் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. கருப்புப் பணத்தை வெளிக்கொணர தானே முன்வந்து கணக்கு காட்டுபவர்களுக்குத் தண்டனை இல்லாமல் வரி செலுத்த ஒரே ஒரு வாய்ப்பு அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. இறக்குமதியின் மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அரசும் மற்ற நிறுவனங்களைப் போலக் கடன் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவை எல்லாமே புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சிதான். இதனால், அன்று சிதம்பரம் வரவு- செலவு அறிக்கையை வாசித்து முடித்தவுடன் மும்பை பங்கு சந்தைக் குறியீடு 6.5% உயர்ந்தது. உலகமயத்தின் அடுத்தகட்ட பயணமாக அந்த வரவு செலவு அறிக்கை அமைந்தது.
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.

*****************
சீர்திருத்தம் எனும் சொல்லை நமக்கு அவர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். மூன்று இலக்கணங்களோடு: 1. தாராளமயம், 2. தனியார்மயம், 3. உலகமயம். மொத்தத்தில் நவீன தாராளமயம்! 1991-ல் நவீன தாராளமயச் சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. “தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் இணைந்த நவீன தாராளமயத்தால் பன்னாட்டு, உள்நாட்டு முதலீடுகள் பெருகும், வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை மறையும்” என்றார்கள். கடந்த 25 ஆண்டுகளின் அனுபவம் என்ன?
இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி அவர்கள் தங்கு தடையின்றி லாபம் ஈட்டுவதை ஊக்குவிப்பதையே நவீன தாராளமயமாக நாம் அறிந்திருக்கிறோம். தனியார்மயத்தின் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது. இன்னொரு அம்சம், அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டுவந்த, பொது நன்மை நோக்கில் செயல்பட வேண்டிய கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, லாபத்தின் அடிப்படையில் அவற்றைச் செயல்படுத்துவது.
தாராளமயமும் தனியார்மயமும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், லாப நோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின் மீது சமூக நெறிமுறைகளை விதித்துச் செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விஷயங்களாகிவிட்டன. பொருளாதாரரீதியில் உலகமயத்துக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு: 1. சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு வணிகத்துக்கு முழுமையாகத் திறந்துவிடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும். 2. நிதி வடிவில் மூலதனம் நாட்டுக்குள்ளே வருவதையும் அதன் விருப்பப்படி நாட்டை விட்டு வெளியே செல்வதையும் தங்கு தடையில்லாமல் அனுமதிப்பது.
பொருளாதார வளர்ச்சி
உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1991-2003 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6%-க்குச் சற்றுக் குறைவாக இருந்தது. 1991-க்கு முந்தைய 10 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமும் இப்படித்தான் இருந்தது. 2௦௦3-2௦௦8 காலகட்டத்தில் இது கணிசமாக அதிகரித்தது. பின்னர் சரிந்தது. 1980-81 - 2013-14 காலகட்டத்தில் சராசரியாக 6.1%.
தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதத்தில் கூடுதல் வேகம் இருந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6%-க்கும் சற்று அதிகமான வளர்ச்சி விகிதம் இருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது. இதற்கான காரணங்கள் பல. 1980-களுக்கு முன் மேற்கொண்ட அரசு முதலீடுகள்; அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தந்த பலங்கள்; 1980-களில் தொடங்கி, பன்னாட்டு அரங்கில் கடன் பெறும் வாய்ப்புகளில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றங்கள்; ஆங்கிலமும் தொழில்நுட்பமும் அறிந்த மலிவான உழைப்புப் படை, லட்டாகக் கிடைத்த மென்பொருள் ஏற்றுமதி வாய்ப்புகள், தாராளமயக் கொள்கை களால் கிடைத்த கூடுதல் லாப வாய்ப்புகள் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை உலகமயத்தின் ‘மாஜிக்’ என்று புரிந்துகொள்வது சரியல்ல. மேலும், உலகமயம் தந்துள்ள வளர்ச்சியின் தன்மையால் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பிரச்சினைகள் முளைத்துள்ளன.
வளர்ச்சியின் தன்மை
1984-85 - 1994-95 காலகட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.1%. 1994-95 - 2004-05 காலகட்டத்தில் ஆண்டுக்கு 0.6%. மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவுக்குக்கூட உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக, தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப் பின் 1950-1995 காலத்தில் இந்த நிலைமை ஏற்படவில்லை. தொழில் துறையின் வளர்ச்சி 1984-85 முதல் 1994-95 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6.2% ஆக இருந்தது, 1994-95 முதல் 2004-05 காலட்டத்தில் ஆண்டுக்கு 5% எனக் குறைந்தது. இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்தால், தாராளமயத்தின் முதல் 15 ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி மந்தமாகவே இருந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
சேவைத் துறை வளர்ந்தது என்றவுடன் பலரும் வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள். ஆனால், இத்துறைகள் சேவைத் துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறு பகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும்கூடக் கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிகளில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர். மறுபுறத்தில் சேவைத் துறையில் சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுய வேலைகளில் ஏராளமான உழைப்பாளிகள் உள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள் உற்பத்தி வளர்ச்சியைப் பெருமளவிற்குச் சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத் துறை வளர்ச்சியும், ஒரு சிறிய பகுதி நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தித் திறன் உயர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான். இதையடுத்து, 2004-14-ல் ஓரளவு வேளாண் வளர்ச்சியில் மீட்சி ஏற்பட்டபோதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இடையிடையே அதிகரித்தபோதிலும், தாராளமயம் பாய்ச்சல் வேக வளர்ச்சி தரவில்லை என்பது தெளிவு.
வேளாண் நெருக்கடி
வேளாண் நெருக்கடியின் துயரமான அம்சம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997-2012 காலகட்டத்தில் 2,80,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இத்துயரம் தொடர்கிறது. வேளாண் மக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளே காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையைக் குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவுக் கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண் பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால் உள்நாட்டு விளைபொருட்கள் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. நிதித்துறைச் ‘சீர்திருத்தங்கள்’ விவசாயக் கடனைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தின. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமயக் கொள்கை கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண் விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது விநியோக முறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன் வலையில் வீழ்ந்தன. மறுபுறம், அரசின் கொள்கைகள் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நில உச்சவரம்புச் சட்டங்களை நீக்குகின்றன. விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துகளை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்குப் பன்னாட்டு இன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும் விவசாயிகளின் துயரம் தொடர்கிறது.
வேலைவாய்ப்புகள் பெருகினவா?
உலகமயத்தால் நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப் புகளைப் பெருக்கவில்லை. தொழில் துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், முறைசார் பணியிடங்கள் அதிகரிக்கவே இல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் அமைப்புசாராப் பணியிடங்கள். 1993 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுய வேலை உட்பட) இருப்போர் எண்ணிக்கை 1.20 கோடி அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒரு செய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.
சாகாக் கோடு
அரசின் வறுமைக் கோடு என்பது ஒரு சாகாக்கோடு என்றுதான் சொல்ல வேண்டும். 2011-12-ல் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூ.50-க்கும் குறைவாக செலவு செய்தவர்கள் கிராமப்புறங்களில் 80%. நகரப்புறங்களிலும் கிட்டத்தட்ட 50% பேர். நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80%-க்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில்கூட இந்த விகிதம் நான்கில் ஒரு பங்குதான்.
ஏற்றத்தாழ்வுகள்
தொழிலிலும் நிலவுடைமையிலும் பொதுவாகச் சொத்து விநியோகத்திலும் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்கெனவே இருந்துவந்துள்ளது என்றாலும், கடந்த 25 ஆண்டுகளில் இவை பல மடங்குகள் அதிகரித்துள்ளன. 2008-ல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் - அதாவது, 100 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்ட இந்தியச் செல்வந்தர்கள் எண்ணிக்கை 41. அதன் பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராகப் பெரிதும் சரிந்தது, இந்த எண்ணிக்கையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, 2013-ல் இந்த எண்ணிக்கை 53, 2014-ல் 70 என்று அதிகரித்து, 2016-ல் நூறைக் கடந்தது. 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் 100 ஆகப் பெரிய செல்வந்தர்களின் சொத்து நாட்டின் வருமானத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக உள்ளது.
இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துகளைப் பிரம்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்கள் அவற்றின் இணைய தளத்தில் தரும் தகவலின்படியே பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது. மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறைகூட இன்றி நிற்கிறார்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்த சோகையில் வாடும் வளரிளம் பெண்கள், பிறக்கும் 1000 சிசுக்களில் 40 சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவல நிலை இப்படி தொடர்கிறது கொடுமைப் பட்டியல்!
பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் கட்டற்ற தாராளமயத்தின் முக்கிய இலக்கணம். கல்வி, வேலை, மக்கள் நல்வாழ்வு, அனைவருக்கும் நாகரிக வாழ்க்கை ஆகிய இலக்குகளை அடைய, மக்கள் நலனை மையப்படுத்தும் மாற்றுப் பாதை அவசரம், அவசியம்!
- வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர், தொடர்புக்கு: venkatesh.athreya@gmail.com
*************************
ஜூலை, 1991 தொடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தெரிவதற்கு முன் நாட்டை ஒரு பெரிய வங்கி - பங்குச்சந்தை ஊழல் உலுக்கியது. ஹர்ஷத் மேத்தா என்ற முன்னாள் காப்பீட்டுத் துறை ஊழியர் திடீரென பங்குச்சந்தையில் நுழைந்து, இந்தியப் பங்குச்சந்தையின் போக்கையே மாற்றினார். அவரால் வங்கிகளுக்கு ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டது; மும்பை பங்குச்சந்தைக் குறியீடு மூன்று மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்து விழுந்தது.
ஒவ்வொரு வங்கியும் தங்களிடம் உள்ள வைப்புத்தொகைக்கு ஏற்ப அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் அவ்வப்போது வைப்புத்தொகை அளவு மாறுவதால், சில வங்கிகள் தங்களிடம் உள்ள அரசு கடன் பத்திரங்களை விற்கும், சில அவற்றை வாங்கும். இவர்களுக்கு இடையே தரகு வேலை செய்யும் ஹர்ஷத் மேத்தா, ஒரு வங்கியிடம் முன்பணம் பெற்று, மற்றொரு வங்கியில் அரசு கடன் பத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை சிறிது நாட்களுக்குப் பிறகு செலுத்துவது; இந்த இடைப்பட்ட காலத்தில் வங்கிப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கி விற்பது. இதிலும், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலையை மிக அதிக அளவில் உயர்த்தி விற்று லாபம் பார்ப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டார். ஏசிசி என்ற நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் ரூ. 200-லிருந்து ரூ.10,000 ஆக உயர்ந்தது என்றால், அப்போது இவர் ஆடிய ஆட்டத்தைப் புரிந்துகொள்ளலாம். 1991-92-ல் ஹர்ஷத் மேத்தா கட்டிய வருமானவரி முன் பணம் மட்டுமே ரூ.28 கோடி!
இந்த ஊழல் வெளிவந்த உடன், ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 28 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இறந்துபோனார். மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி காங்கிரஸுக்குள்ளிருந்தும்கூடக் குரல்கள் கேட்டன. இந்த ஊழல் புதிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்படவில்லை; மாறாக, விதிமீறல்களினால் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பு சொன்னது. “பங்குச்சந்தையில் நடப்பதை நினைத்து நான் தூங்காமல் இருக்க முடியாது” என்று அப்போது மன்மோகன் சிங் உதிர்த்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
*********************
1991 பிப்ரவரியில் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யாரைச் சந்தித்தார் மணி சங்கர் ஐயர். “நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கிறது, வெளிநாட்டுக் கடன்களுக்குத் தவணை கட்டுவதற்குக்கூட இயலாத நிலை காணப்படுகிறது” என்று ஐயரிடம் கவலை தெரிவித்தார் நய்யார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராஜீவ் காந்தியிடம் இதை ஐயர் தெரிவிக்க, “உடனே பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கிடம் இதுபற்றிப் பேசுங்கள்” என்றார் ராஜீவ்.
ராஜீவுக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.டி. பிரதான் ஒரு தகவலை சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். “தான் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதை ராஜீவ் காந்தி 1991 மே மாதம் உணர்ந்தார். புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நான் அவரிடம் 7 பக்க அறிக்கையை அளித்திருந்தேன். அதைப் படித்த அவர் பன்னாட்டுச் செலாவணி நிதியம், உலக வங்கி உதவியுடன்தான் பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கும். அதற்கான பொருளாதார வல்லுநரை அடையாளம் காண வேண்டும் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வெங்கிட ரமணன், ஐ.ஜி. படேல், மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்கள் அவருடைய பரிசீலனையில் இருந்தன” என்று தெரிவிக்கிறார்.
நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்கவிருந்த நாளில் காலை 6.30 மணிக்கு பி.சி.அலெக்சாண்டர் புதிய அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில் நிதியமைச்சகப் பொறுப்பை மன்மோகன் சிங்குக்கு வழங்கலாம் என்றார். அதை உடனடியாக ஏற்ற நரசிம்ம ராவ், நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்குமாறு மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு நரசிம்ம ராவ் துணையாக இருப்பார் என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே மன்மோகன் சிங் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
- ராமசீனிவாசன், பேராசிரியர்.
******************
உலகமயமாக்கல் எனும் புதிய உலகுக்குள் 1991-ல் இந்தியா நுழைந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம்; வாங்கிய கடனுக்குத் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலை என்று தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் அந்த முடிவை எடுத்தது. இதோ இன்றைக்கு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது!
1991 பொருளாதார நெருக்கடி: என்ன பின்னணி?
வெளிநாட்டில் வாங்கிய கடனின் ஒரு தவணையைக்கூட இந்தியா செலுத்தத் தவறிவிடுமோ என்ற இக்கட்டான பொருளாதாரச் சூழல் அக்காலகட்டத்தில் உருவாகி யிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் 26%, உள்நாட்டுக் கடன் 55%. அப்போது இந்தியாவிடம் இருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வார இறக்குமதிக்குக்கூடப் போதவில்லை. இச்சூழலில், வெளிநாட்டுக் கடன் தவணையை எவ்வாறு கொடுப்பது? இதுமட்டுமல்லாமல், ஏற்றுமதி - இறக்குமதி இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. அரசின் உள்நாட்டுக் கடன் பெருகியதால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன ஒன்று, பண அளிப்பு அதிகரித்து விலைவாசி 15%-தைக் கடந்தது. இரண்டு, வட்டி விகிதம் உயர்ந்து தனியார் முதலீடும் தேய்ந்தது.
இந்தச் சிக்கல் வர என்ன காரணம்?
பொருளாதாரச் சிக்கல் என்பது, நேற்று பெய்த மழையில் நனைந்து இன்று காய்ச்சல் வருவது போலன்று. பல ஆண்டுகளாக நடந்துவரும் பொருளாதார நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாதது, சாதுரியமான அரசியல் ஆளுமை இல்லாமல் - சரியான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுக்காமல் இருந்ததன் ஒட்டுமொத்த விளைவுதான் 1991 பொருளாதாரச் சிக்கல்.
அப்படியானால், 1950-90 காலகட்டத்தின் 40 ஆண்டு பொருளாதாரக் கொள்கைகள்தான் இதற்குக் காரணமா?
இல்லை. பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கை களும் தொடர் நிகழ்வுகளாக இருந்தாலும், 1980-களில் இந்தச் சிக்கலுக்கான விதை ஆழமாக ஊன்றி வளர்ந்தது. இந்த 10 ஆண்டுகளில் 8 நிதி அமைச்சர்கள் இருந்துள்ளனர். இதில், கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் 6 நிதி அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர். இப்படியான நிலையில், பொருளாதாரக் கொள்கைகளில் தொடர்ச்சி எப்படி இருந்திருக்கும்?
1980 நிலவரம்தான் இந்தச் சிக்கலின் தொடக்கமா?
1980-ல் நாம் இதுபோன்ற ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தோம். அன்றும் இறக்குமதிக்குப் போதிய அந்நியச் செலாவணி இல்லாமல், அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிக ரித்து, பணவீக்கம் உயர்ந்து, இந்தச் சூழலில் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் ஒரு பில்லியன் டாலர் வரை கடன் வாங்கினோம். இதில் பெரும் பகுதி பெட்ரோலியத் துறையில் முதலீடு செய்யப்பட்டது. 1981-82-ம் ஆண்டு பட்ஜெட்டின் பற்றாக்குறையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதற்காக வரி வருவாய் பெருக்கப்பட்டது, பெட்ரோல், உரம், மின்சாரம் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டே இந்த முயற்சிகள் கைவிடப்பட்டு, மீண்டும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை உயர ஆரம்பித்தது.
1980-களில் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?
1980-கள் முழுவதும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 7% முதல் 10% வரை இருந்தது. ஒருபுறம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கவே இல்லை. வரி வருவாயும், வரி அல்லாத வருவாய்களாக இருக்கும் அரசு நிறுவனங்களின் லாபம், அரசுத் துறைகளின் வசூல் என எதுவும் உயரவில்லை. அவற்றை உயர்த்த அரசும் முனையவில்லை. அரசின் செலவுகள் பல வகைகளில் உயர்ந்தது - அரசுத் துறை நிறுவனங்களின் முதலீட்டினை உயர்த்தியது, அதிகக் கடனை அதிக வட்டிக்கு வாங்கியதும் அடுத்த ஆண்டுகளில் அரசின் வட்டிச் செலவை உயர்த்தின. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியச் செலவுகள் உயர்ந்தன.
அந்நியச் செலாவணிச் சிக்கலுக்கு என்ன காரணம்?
1980-களின் முற்பகுதியில் அரசுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை அரசு உயர்த்தியது. அதே நேரத்தில், அரசு நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. முதலீடுகள் உயர்ந்தாலும், அரசு நிறுவனங்களின் லாபம் உயராமல் இருந்ததால், வாங்கிய கடனுக்கான முதலும் வட்டியும் 1980-களின் பிற்பகுதியில் பெருகிக்கொண்டே போனது. இவற்றை அந்நியச் செலாவணி கொண்டுதான் அடைக்க வேண்டும். 1980-களின் பிற்பகுதியில் இந்தியாவில் அந்நிய முதலீடும், இறக்குமதியும் தாராளமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இறக்குமதி உயர்ந்ததுபோல ஏற்றுமதி உயராமல் இருந்ததால் அந்நியச் செலாவணி செலுத்துநிலையில் இடைவெளி அதிகரித்தது.
இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த அந்நிய நாட்டுக் கொடைகளும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் வைத்திருந்த சேமிப்புக் கணக்கு வைப்பு நிதியும் குறைய ஆரம்பித்தது.
இது எப்படிப் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது?
1970-களுடன் ஒப்பிடும்போது 1980-களில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. 1980-வரை இந்தியாவின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 3.5% வரைதான் இருந்தது. இதனை ‘இந்து வளர்ச்சி விகிதம்’என்றே பழித்தனர். அதாவது, இந்தியா இதற்கு மேல் வேகமாக வளர முடியாது என்ற எண்ணம் அது. இதைப் பொய்யாக்கும் விதத்தில் 1980-களில் 5% பொருளாதார வளர்ச்சியை அடைந்தோம். ஆனால், இந்த வளர்ச்சி நிலையில்லாதது என்பதை வெகுவேகமாகப் புரிந்துகொண்டோம். 1991-92-ல் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.2%தான்.
பணவீக்கம் அதிகரித்ததற்கு என்ன காரணம்?
அப்போதுள்ள நடைமுறைப்படி இந்திய அரசு பட்ஜெட் பற்றாகுறையைச் சரிக்கட்ட இரண்டு வழிகளில் கடன் வாங்கலாம். ஒன்று, மத்திய ரிசர்வ் வங்கியிடம். மற்றொன்று, அதனிடம் உள்ள அரசு வங்கிகளிடம். மத்திய ரிசர்வ் வங்கிக்கு அரசு தன் கடன் பத்திரங்களைக் கொடுத்து, மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கலாம். மத்திய ரிசர்வ் வங்கியும் அதற்கு இணையாகப் பணத்தை அச்சிட்டு வழங்கும். இதனால் பணவீக்கம் ஏற்படும். அரசுத் துறை வங்கிகளிடம் மத்திய அரசு கடன் வாங்கும்போது, வங்கியினால் தனியார் துறைக்குக் கடன் கொடுக்கப் பணம் இருக்காது. அல்லது அதிக வட்டிக்குத்தான் கடன் கொடுக்க வேண்டும். இதனால், தனியார் உற்பத்திச் செலவு உயர்ந்து பணவீக்கம் ஏற்படும். எனவே, அரசு தொடர்ந்து அதிக பட்ஜெட் பற்றாக்குறை வைத்திருந்ததால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போனது.
இதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் நமக்குத் தெரியவில்லையா?
1980-களில், மத்திய அரசு ‘தொடர்ந்து பட்ஜெட் பற்றாக் குறையை வைத்திருப்பது தவறு, அதனைச் சரிசெய்ய மத்திய ரிசர்வ் வங்கிடம் கடன் வாங்குவதும் தவறு’ என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மன்மோகன் சிங்கும்(1982-85), ஆர்.என். மல்ஹோத்ராவும் (1985-90) சுட்டிக்காட்டினர். இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டி எச்சரித்தனர். இதை யாரும் கேட்கவில்லை. குறிப்பாக ஆர்.என்.மல்ஹோத்ரா மத்திய அரசுக்கு 1989 மே மாதம் எழுதிய கடிதத்தில், “தீர்க்கமான முடிவுகள் எடுக்கா விடில், அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை விரிவடையும். குறிப்பாக, குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதால், ஏற்றுமதி - இறக்குமதி இடை வெளியைக் குறைக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
உலக வங்கி தனது ஆண்டு அறிக்கைகளில் அவ்வப் போது இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தது. குறிப்பாக, கட்டுக்கடங்காமல் போகும் அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை, பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றை அந்த அறிக்கைகள் சுட்டிக்காட் டின. உலக வங்கியிடம் கடன் வாங்கப்போவதில்லை என்று நினைத்ததால் அவர்கள் சொல்வதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.
இந்தியா தங்கத்தை அடமானம் வைத்ததாகச் சொல்லப்பட்டதே?
1991 மே 16-ல் இந்திய ஸ்டேட் வங்கி 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை சுவிட்சர்லாந்த்தைச் சேர்ந்த ஒரு வங்கியிடம் விற்றது. 1991 ஜூன் 21-ல் நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஜூலை 4-18, 1991 ஆகிய இரண்டு வாரங்களில் நான்கு தவணைகளில் மத்திய ரிசர்வ் வங்கி, இங்கிலாந்து வங்கியிடம் 47 டன் தங்கத்தை அடமானம் வைத்து 400 மில்லின் டாலர் கடன் வாங்கியது. தங்கத்தை அடமானம் வைக்கும் முடிவு முந்தைய அரசு மே மாதமே எடுத்தாலும் அதனைச் செயல்படுத்த ஜூலை மாதம் ஆனது. இதுமட்டுமல்லாமல் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் 220 மில்லியன் டாலர் அவசரக் காலக் கடன் வாங்கினோம். ஜூலை 24, 1991 மன்மோகன் சிங் தனது முதல் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.
இதுதான் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பமா?
ஆம். அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல், உரம், சர்க்கரை, சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தப்பட்டனர். கருப்புப் பணத்தையும் சொத்தையும் மீண்டும் கணக்கில் கொண்டுவந்து வரி செலுத்த ஒரு முறை வாய்ப்பு வழங்கப் பட்டது. வட்டி வருமானம், கமிஷன் வருமானம் வழங்கும் போது வருமான வரிப் பிடித்தம் செய்ய வழி செய்யப்பட் டது. ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடு களை இந்தியா கவர புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஏற்றுமதித் தொழிலில் உள்ள நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன. இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் ஜூலை 1 அன்று 9% மீண்டும் ஜூலை 3 அன்று 11% குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவானது.
அடுத்த சில மாதங்களில் பல பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்தன. வரி விதிப்பு எளிமையாகி, வரி விகிதங்கள் குறைந்தன. அரசு செலவுகளைக் குறைக்க முடிவு கள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை முதலீடுகள் தனியாருக்கு விற்கப்பட்டன. இறக்குமதி எளிமையாக்கப்பட்டு, அதன் மீது வரி விகிதமும் குறைக்கப்பட்டது. பங்குச் சந்தையைக் கண் காணித்து முறைப்படுத்த ‘செபி’க்கு அதிகாரம் வழங்கப்பட் டது. வங்கிகளில் அரசு கடன் வாங்குவது குறைந்து, தனியாருக்குக் கடன் கொடுப்பது ஊக்குவிக்கப்பட்டது. தொழில் துறை மீதான எல்லா கட்டுப்பாடுகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. எல்லாத் துறைகளிலும் தனியார் துறை பங்களிப்பு ஊக்கப்படுத்தப்பட்டது.
நவீன இந்தியாவில் உலகமயம் பிறந்தது!
- இராம. சீனுவாசன்
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
***************************
அந்த நேரத்துல வீட்டுல ரொம்ப கஷ்டம். வீடே ‘நிறைஞ்ச பாக்கியமா’ இருந்துச்சு. ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. எல்லாத்தையும் அடகுவச்சுத்தான் சமாளிச்சோம்” என்று சொல்லும் அளவுக்குப் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு கசப்பான கடந்தகாலம் இருக்கும். அப்படிப்பட்ட நிலை 1990-களில் இந்தியாவுக்கே இருந்தது.
அப்போது வளைகுடா நாடுகளில் போர் நடந்தது. எண்ணைய் விலை உயர்ந்தது. உலக நாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய தொகை பல மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கரைந்தது. இரண்டு வாரங்களுக்கான இறக்குமதிகளைச் சமாளிக்கும் அளவுதான் நம்மிடம் பணம் இருந்தது. சர்வதேச நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு நாடு திரும்பத் தர முடியாமல் போவது என்பது அவமானமாகக் கருதப்படும். அதன் பிறகு, உலக நாடுகளிடம் நம்பிக்கை போய்விடும்.
அந்தக் காலகட்டத்தில் பிரதமராக சந்திரசேகர் இருந்தார். அவரது அரசாங்கம் இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அப்போதுதான் இந்தியா டன் கணக்கில் தங்கத்தை உலக வங்கியில் அடகு வைக்கும் நிலைக்கு வந்தது. அவருக்கு அடுத்தபடியாக 1991 ஜூன் 21-ல் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு நாட்டின் பொருளாதார நிலை பற்றி உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று கோரினார்கள். நரசிம்ம ராவ் பதவியேற்றதும் அவரது அலுவலகத்தில் இரவு பகலாகத் தொடர் கூட்டங்கள் நடந்தன. நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் பரபரப்பாக இயங்கின. பிரதமர் நரசிம்ம ராவும் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் நிலைமையைச் சிறப்பாகச் சமாளித்தனர்.
ஜூலை 1 மற்றும் 3 தேதிகளில் இரண்டு கட்டமாக ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது. பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பின. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு நாடு பணிந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ‘‘உலக சமூகம் சந்தோஷப்படுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்தால் நம் நாட்டின் பொருளாதாரம் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்” என்றார் மன்மோகன் சிங்.
இன்றைக்கு ரூபாய் ஒரு நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக உருவாகியுள்ளது. அப்போதைய பொருளாதார நிலையைவிட மேம்பட்டதாக நாடு தற்போது மாறியுள்ளது. தங்கம் உள்ளிட்ட அந்நியச் செலாவணி கையிருப்புகள் 11 மாதங்களுக்குத் தேவையான அளவு நம்மிடம் உள்ளது.
**********************