கட்சி 1999 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது. அதன் புதிய பொருளாதாரக் கொள்கை எளியவர்களுக்கு எதிரானது என்ற தீவிரமான பிரச்சாரமும் அதற்கு ஒரு காரணம். 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி அரசு தேவ கௌடா தலைமையில் மத்தியில் அரசமைத்தது. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தீர்ப்பு என்பதால், அடுத்துவரும் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று எல்லாரும் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ்
காங்கிரஸில் இருந்த ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் மூலமாக ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையின் வெளிப்படையான அம்சங்கள் இல்லை. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகளை மீண்டும் செய்ய வேண்டும் என்று தொழில் துறையினரும், பன்னாட்டு நிறுவனங்களும் கூறிவந்தன. இந்தச் சூழலில்தான் 1997-ம் ஆண்டில் பிப்ரவரி 28-ல் இரண்டாவது வரவு- செலவு அறிக்கையைச் சிதம்பரம் தாக்கல் செய்தார். அது புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சியாக இருந்தது. இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் அதில் இருந்ததால் ‘கனவு பட்ஜெட்’ என்று வர்ணிக்கப்பட்டது. அரசியல் சமூகக் களத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான சூழலில், இந்த முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தனி நபர் மற்றும் பெருநிறுவனங்களின் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. கருப்புப் பணத்தை வெளிக்கொணர தானே முன்வந்து கணக்கு காட்டுபவர்களுக்குத் தண்டனை இல்லாமல் வரி செலுத்த ஒரே ஒரு வாய்ப்பு அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. இறக்குமதியின் மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அரசும் மற்ற நிறுவனங்களைப் போலக் கடன் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவை எல்லாமே புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சிதான். இதனால், அன்று சிதம்பரம் வரவு- செலவு அறிக்கையை வாசித்து முடித்தவுடன் மும்பை பங்கு சந்தைக் குறியீடு 6.5% உயர்ந்தது. உலகமயத்தின் அடுத்தகட்ட பயணமாக அந்த வரவு செலவு அறிக்கை அமைந்தது.
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
*****************
சீர்திருத்தம் எனும் சொல்லை நமக்கு அவர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். மூன்று இலக்கணங்களோடு: 1. தாராளமயம், 2. தனியார்மயம், 3. உலகமயம். மொத்தத்தில் நவீன தாராளமயம்! 1991-ல் நவீன தாராளமயச் சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. “தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் இணைந்த நவீன தாராளமயத்தால் பன்னாட்டு, உள்நாட்டு முதலீடுகள் பெருகும், வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை மறையும்” என்றார்கள். கடந்த 25 ஆண்டுகளின் அனுபவம் என்ன?
இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி அவர்கள் தங்கு தடையின்றி லாபம் ஈட்டுவதை ஊக்குவிப்பதையே நவீன தாராளமயமாக நாம் அறிந்திருக்கிறோம். தனியார்மயத்தின் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது. இன்னொரு அம்சம், அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டுவந்த, பொது நன்மை நோக்கில் செயல்பட வேண்டிய கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, லாபத்தின் அடிப்படையில் அவற்றைச் செயல்படுத்துவது.
தாராளமயமும் தனியார்மயமும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், லாப நோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின் மீது சமூக நெறிமுறைகளை விதித்துச் செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விஷயங்களாகிவிட்டன. பொருளாதாரரீதியில் உலகமயத்துக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு: 1. சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு வணிகத்துக்கு முழுமையாகத் திறந்துவிடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும். 2. நிதி வடிவில் மூலதனம் நாட்டுக்குள்ளே வருவதையும் அதன் விருப்பப்படி நாட்டை விட்டு வெளியே செல்வதையும் தங்கு தடையில்லாமல் அனுமதிப்பது.
பொருளாதார வளர்ச்சி
உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1991-2003 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6%-க்குச் சற்றுக் குறைவாக இருந்தது. 1991-க்கு முந்தைய 10 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமும் இப்படித்தான் இருந்தது. 2௦௦3-2௦௦8 காலகட்டத்தில் இது கணிசமாக அதிகரித்தது. பின்னர் சரிந்தது. 1980-81 - 2013-14 காலகட்டத்தில் சராசரியாக 6.1%.
தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதத்தில் கூடுதல் வேகம் இருந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6%-க்கும் சற்று அதிகமான வளர்ச்சி விகிதம் இருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது. இதற்கான காரணங்கள் பல. 1980-களுக்கு முன் மேற்கொண்ட அரசு முதலீடுகள்; அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தந்த பலங்கள்; 1980-களில் தொடங்கி, பன்னாட்டு அரங்கில் கடன் பெறும் வாய்ப்புகளில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றங்கள்; ஆங்கிலமும் தொழில்நுட்பமும் அறிந்த மலிவான உழைப்புப் படை, லட்டாகக் கிடைத்த மென்பொருள் ஏற்றுமதி வாய்ப்புகள், தாராளமயக் கொள்கை களால் கிடைத்த கூடுதல் லாப வாய்ப்புகள் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை உலகமயத்தின் ‘மாஜிக்’ என்று புரிந்துகொள்வது சரியல்ல. மேலும், உலகமயம் தந்துள்ள வளர்ச்சியின் தன்மையால் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பிரச்சினைகள் முளைத்துள்ளன.
வளர்ச்சியின் தன்மை
1984-85 - 1994-95 காலகட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.1%. 1994-95 - 2004-05 காலகட்டத்தில் ஆண்டுக்கு 0.6%. மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவுக்குக்கூட உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக, தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப் பின் 1950-1995 காலத்தில் இந்த நிலைமை ஏற்படவில்லை. தொழில் துறையின் வளர்ச்சி 1984-85 முதல் 1994-95 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6.2% ஆக இருந்தது, 1994-95 முதல் 2004-05 காலட்டத்தில் ஆண்டுக்கு 5% எனக் குறைந்தது. இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்தால், தாராளமயத்தின் முதல் 15 ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி மந்தமாகவே இருந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
சேவைத் துறை வளர்ந்தது என்றவுடன் பலரும் வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள். ஆனால், இத்துறைகள் சேவைத் துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறு பகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும்கூடக் கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிகளில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர். மறுபுறத்தில் சேவைத் துறையில் சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுய வேலைகளில் ஏராளமான உழைப்பாளிகள் உள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள் உற்பத்தி வளர்ச்சியைப் பெருமளவிற்குச் சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத் துறை வளர்ச்சியும், ஒரு சிறிய பகுதி நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தித் திறன் உயர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான். இதையடுத்து, 2004-14-ல் ஓரளவு வேளாண் வளர்ச்சியில் மீட்சி ஏற்பட்டபோதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இடையிடையே அதிகரித்தபோதிலும், தாராளமயம் பாய்ச்சல் வேக வளர்ச்சி தரவில்லை என்பது தெளிவு.
வேளாண் நெருக்கடி
வேளாண் நெருக்கடியின் துயரமான அம்சம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997-2012 காலகட்டத்தில் 2,80,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இத்துயரம் தொடர்கிறது. வேளாண் மக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளே காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையைக் குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவுக் கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண் பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால் உள்நாட்டு விளைபொருட்கள் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. நிதித்துறைச் ‘சீர்திருத்தங்கள்’ விவசாயக் கடனைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தின. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமயக் கொள்கை கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண் விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது விநியோக முறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன் வலையில் வீழ்ந்தன. மறுபுறம், அரசின் கொள்கைகள் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நில உச்சவரம்புச் சட்டங்களை நீக்குகின்றன. விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துகளை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்குப் பன்னாட்டு இன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும் விவசாயிகளின் துயரம் தொடர்கிறது.
வேலைவாய்ப்புகள் பெருகினவா?
உலகமயத்தால் நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப் புகளைப் பெருக்கவில்லை. தொழில் துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், முறைசார் பணியிடங்கள் அதிகரிக்கவே இல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் அமைப்புசாராப் பணியிடங்கள். 1993 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுய வேலை உட்பட) இருப்போர் எண்ணிக்கை 1.20 கோடி அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒரு செய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.
சாகாக் கோடு
அரசின் வறுமைக் கோடு என்பது ஒரு சாகாக்கோடு என்றுதான் சொல்ல வேண்டும். 2011-12-ல் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூ.50-க்கும் குறைவாக செலவு செய்தவர்கள் கிராமப்புறங்களில் 80%. நகரப்புறங்களிலும் கிட்டத்தட்ட 50% பேர். நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80%-க்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில்கூட இந்த விகிதம் நான்கில் ஒரு பங்குதான்.
ஏற்றத்தாழ்வுகள்
தொழிலிலும் நிலவுடைமையிலும் பொதுவாகச் சொத்து விநியோகத்திலும் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்கெனவே இருந்துவந்துள்ளது என்றாலும், கடந்த 25 ஆண்டுகளில் இவை பல மடங்குகள் அதிகரித்துள்ளன. 2008-ல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் - அதாவது, 100 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்ட இந்தியச் செல்வந்தர்கள் எண்ணிக்கை 41. அதன் பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராகப் பெரிதும் சரிந்தது, இந்த எண்ணிக்கையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, 2013-ல் இந்த எண்ணிக்கை 53, 2014-ல் 70 என்று அதிகரித்து, 2016-ல் நூறைக் கடந்தது. 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் 100 ஆகப் பெரிய செல்வந்தர்களின் சொத்து நாட்டின் வருமானத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக உள்ளது.
இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துகளைப் பிரம்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்கள் அவற்றின் இணைய தளத்தில் தரும் தகவலின்படியே பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது. மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறைகூட இன்றி நிற்கிறார்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்த சோகையில் வாடும் வளரிளம் பெண்கள், பிறக்கும் 1000 சிசுக்களில் 40 சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவல நிலை இப்படி தொடர்கிறது கொடுமைப் பட்டியல்!
பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் கட்டற்ற தாராளமயத்தின் முக்கிய இலக்கணம். கல்வி, வேலை, மக்கள் நல்வாழ்வு, அனைவருக்கும் நாகரிக வாழ்க்கை ஆகிய இலக்குகளை அடைய, மக்கள் நலனை மையப்படுத்தும் மாற்றுப் பாதை அவசரம், அவசியம்!
- வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர், தொடர்புக்கு: venkatesh.athreya@gmail.com
*************************
ஜூலை, 1991 தொடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தெரிவதற்கு முன் நாட்டை ஒரு பெரிய வங்கி - பங்குச்சந்தை ஊழல் உலுக்கியது. ஹர்ஷத் மேத்தா என்ற முன்னாள் காப்பீட்டுத் துறை ஊழியர் திடீரென பங்குச்சந்தையில் நுழைந்து, இந்தியப் பங்குச்சந்தையின் போக்கையே மாற்றினார். அவரால் வங்கிகளுக்கு ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டது; மும்பை பங்குச்சந்தைக் குறியீடு மூன்று மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்து விழுந்தது.
ஒவ்வொரு வங்கியும் தங்களிடம் உள்ள வைப்புத்தொகைக்கு ஏற்ப அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் அவ்வப்போது வைப்புத்தொகை அளவு மாறுவதால், சில வங்கிகள் தங்களிடம் உள்ள அரசு கடன் பத்திரங்களை விற்கும், சில அவற்றை வாங்கும். இவர்களுக்கு இடையே தரகு வேலை செய்யும் ஹர்ஷத் மேத்தா, ஒரு வங்கியிடம் முன்பணம் பெற்று, மற்றொரு வங்கியில் அரசு கடன் பத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை சிறிது நாட்களுக்குப் பிறகு செலுத்துவது; இந்த இடைப்பட்ட காலத்தில் வங்கிப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கி விற்பது. இதிலும், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலையை மிக அதிக அளவில் உயர்த்தி விற்று லாபம் பார்ப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டார். ஏசிசி என்ற நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் ரூ. 200-லிருந்து ரூ.10,000 ஆக உயர்ந்தது என்றால், அப்போது இவர் ஆடிய ஆட்டத்தைப் புரிந்துகொள்ளலாம். 1991-92-ல் ஹர்ஷத் மேத்தா கட்டிய வருமானவரி முன் பணம் மட்டுமே ரூ.28 கோடி!
இந்த ஊழல் வெளிவந்த உடன், ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 28 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இறந்துபோனார். மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி காங்கிரஸுக்குள்ளிருந்தும்கூடக் குரல்கள் கேட்டன. இந்த ஊழல் புதிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்படவில்லை; மாறாக, விதிமீறல்களினால் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பு சொன்னது. “பங்குச்சந்தையில் நடப்பதை நினைத்து நான் தூங்காமல் இருக்க முடியாது” என்று அப்போது மன்மோகன் சிங் உதிர்த்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
*********************
1991 பிப்ரவரியில் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யாரைச் சந்தித்தார் மணி சங்கர் ஐயர். “நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கிறது, வெளிநாட்டுக் கடன்களுக்குத் தவணை கட்டுவதற்குக்கூட இயலாத நிலை காணப்படுகிறது” என்று ஐயரிடம் கவலை தெரிவித்தார் நய்யார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராஜீவ் காந்தியிடம் இதை ஐயர் தெரிவிக்க, “உடனே பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கிடம் இதுபற்றிப் பேசுங்கள்” என்றார் ராஜீவ்.
ராஜீவுக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.டி. பிரதான் ஒரு தகவலை சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். “தான் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதை ராஜீவ் காந்தி 1991 மே மாதம் உணர்ந்தார். புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நான் அவரிடம் 7 பக்க அறிக்கையை அளித்திருந்தேன். அதைப் படித்த அவர் பன்னாட்டுச் செலாவணி நிதியம், உலக வங்கி உதவியுடன்தான் பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கும். அதற்கான பொருளாதார வல்லுநரை அடையாளம் காண வேண்டும் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வெங்கிட ரமணன், ஐ.ஜி. படேல், மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்கள் அவருடைய பரிசீலனையில் இருந்தன” என்று தெரிவிக்கிறார்.
நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்கவிருந்த நாளில் காலை 6.30 மணிக்கு பி.சி.அலெக்சாண்டர் புதிய அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில் நிதியமைச்சகப் பொறுப்பை மன்மோகன் சிங்குக்கு வழங்கலாம் என்றார். அதை உடனடியாக ஏற்ற நரசிம்ம ராவ், நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்குமாறு மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு நரசிம்ம ராவ் துணையாக இருப்பார் என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே மன்மோகன் சிங் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
- ராமசீனிவாசன், பேராசிரியர்.
******************
உலகமயமாக்கல் எனும் புதிய உலகுக்குள் 1991-ல் இந்தியா நுழைந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம்; வாங்கிய கடனுக்குத் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலை என்று தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் அந்த முடிவை எடுத்தது. இதோ இன்றைக்கு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது!
1991 பொருளாதார நெருக்கடி: என்ன பின்னணி?
வெளிநாட்டில் வாங்கிய கடனின் ஒரு தவணையைக்கூட இந்தியா செலுத்தத் தவறிவிடுமோ என்ற இக்கட்டான பொருளாதாரச் சூழல் அக்காலகட்டத்தில் உருவாகி யிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் 26%, உள்நாட்டுக் கடன் 55%. அப்போது இந்தியாவிடம் இருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வார இறக்குமதிக்குக்கூடப் போதவில்லை. இச்சூழலில், வெளிநாட்டுக் கடன் தவணையை எவ்வாறு கொடுப்பது? இதுமட்டுமல்லாமல், ஏற்றுமதி - இறக்குமதி இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. அரசின் உள்நாட்டுக் கடன் பெருகியதால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன ஒன்று, பண அளிப்பு அதிகரித்து விலைவாசி 15%-தைக் கடந்தது. இரண்டு, வட்டி விகிதம் உயர்ந்து தனியார் முதலீடும் தேய்ந்தது.
இந்தச் சிக்கல் வர என்ன காரணம்?
பொருளாதாரச் சிக்கல் என்பது, நேற்று பெய்த மழையில் நனைந்து இன்று காய்ச்சல் வருவது போலன்று. பல ஆண்டுகளாக நடந்துவரும் பொருளாதார நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாதது, சாதுரியமான அரசியல் ஆளுமை இல்லாமல் - சரியான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுக்காமல் இருந்ததன் ஒட்டுமொத்த விளைவுதான் 1991 பொருளாதாரச் சிக்கல்.
அப்படியானால், 1950-90 காலகட்டத்தின் 40 ஆண்டு பொருளாதாரக் கொள்கைகள்தான் இதற்குக் காரணமா?
இல்லை. பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கை களும் தொடர் நிகழ்வுகளாக இருந்தாலும், 1980-களில் இந்தச் சிக்கலுக்கான விதை ஆழமாக ஊன்றி வளர்ந்தது. இந்த 10 ஆண்டுகளில் 8 நிதி அமைச்சர்கள் இருந்துள்ளனர். இதில், கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் 6 நிதி அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர். இப்படியான நிலையில், பொருளாதாரக் கொள்கைகளில் தொடர்ச்சி எப்படி இருந்திருக்கும்?
1980 நிலவரம்தான் இந்தச் சிக்கலின் தொடக்கமா?
1980-ல் நாம் இதுபோன்ற ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தோம். அன்றும் இறக்குமதிக்குப் போதிய அந்நியச் செலாவணி இல்லாமல், அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிக ரித்து, பணவீக்கம் உயர்ந்து, இந்தச் சூழலில் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் ஒரு பில்லியன் டாலர் வரை கடன் வாங்கினோம். இதில் பெரும் பகுதி பெட்ரோலியத் துறையில் முதலீடு செய்யப்பட்டது. 1981-82-ம் ஆண்டு பட்ஜெட்டின் பற்றாக்குறையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதற்காக வரி வருவாய் பெருக்கப்பட்டது, பெட்ரோல், உரம், மின்சாரம் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டே இந்த முயற்சிகள் கைவிடப்பட்டு, மீண்டும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை உயர ஆரம்பித்தது.
1980-களில் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?
1980-கள் முழுவதும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 7% முதல் 10% வரை இருந்தது. ஒருபுறம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கவே இல்லை. வரி வருவாயும், வரி அல்லாத வருவாய்களாக இருக்கும் அரசு நிறுவனங்களின் லாபம், அரசுத் துறைகளின் வசூல் என எதுவும் உயரவில்லை. அவற்றை உயர்த்த அரசும் முனையவில்லை. அரசின் செலவுகள் பல வகைகளில் உயர்ந்தது - அரசுத் துறை நிறுவனங்களின் முதலீட்டினை உயர்த்தியது, அதிகக் கடனை அதிக வட்டிக்கு வாங்கியதும் அடுத்த ஆண்டுகளில் அரசின் வட்டிச் செலவை உயர்த்தின. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியச் செலவுகள் உயர்ந்தன.
அந்நியச் செலாவணிச் சிக்கலுக்கு என்ன காரணம்?
1980-களின் முற்பகுதியில் அரசுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை அரசு உயர்த்தியது. அதே நேரத்தில், அரசு நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. முதலீடுகள் உயர்ந்தாலும், அரசு நிறுவனங்களின் லாபம் உயராமல் இருந்ததால், வாங்கிய கடனுக்கான முதலும் வட்டியும் 1980-களின் பிற்பகுதியில் பெருகிக்கொண்டே போனது. இவற்றை அந்நியச் செலாவணி கொண்டுதான் அடைக்க வேண்டும். 1980-களின் பிற்பகுதியில் இந்தியாவில் அந்நிய முதலீடும், இறக்குமதியும் தாராளமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இறக்குமதி உயர்ந்ததுபோல ஏற்றுமதி உயராமல் இருந்ததால் அந்நியச் செலாவணி செலுத்துநிலையில் இடைவெளி அதிகரித்தது.
இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த அந்நிய நாட்டுக் கொடைகளும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் வைத்திருந்த சேமிப்புக் கணக்கு வைப்பு நிதியும் குறைய ஆரம்பித்தது.
இது எப்படிப் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது?
1970-களுடன் ஒப்பிடும்போது 1980-களில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. 1980-வரை இந்தியாவின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 3.5% வரைதான் இருந்தது. இதனை ‘இந்து வளர்ச்சி விகிதம்’என்றே பழித்தனர். அதாவது, இந்தியா இதற்கு மேல் வேகமாக வளர முடியாது என்ற எண்ணம் அது. இதைப் பொய்யாக்கும் விதத்தில் 1980-களில் 5% பொருளாதார வளர்ச்சியை அடைந்தோம். ஆனால், இந்த வளர்ச்சி நிலையில்லாதது என்பதை வெகுவேகமாகப் புரிந்துகொண்டோம். 1991-92-ல் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.2%தான்.
பணவீக்கம் அதிகரித்ததற்கு என்ன காரணம்?
அப்போதுள்ள நடைமுறைப்படி இந்திய அரசு பட்ஜெட் பற்றாகுறையைச் சரிக்கட்ட இரண்டு வழிகளில் கடன் வாங்கலாம். ஒன்று, மத்திய ரிசர்வ் வங்கியிடம். மற்றொன்று, அதனிடம் உள்ள அரசு வங்கிகளிடம். மத்திய ரிசர்வ் வங்கிக்கு அரசு தன் கடன் பத்திரங்களைக் கொடுத்து, மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கலாம். மத்திய ரிசர்வ் வங்கியும் அதற்கு இணையாகப் பணத்தை அச்சிட்டு வழங்கும். இதனால் பணவீக்கம் ஏற்படும். அரசுத் துறை வங்கிகளிடம் மத்திய அரசு கடன் வாங்கும்போது, வங்கியினால் தனியார் துறைக்குக் கடன் கொடுக்கப் பணம் இருக்காது. அல்லது அதிக வட்டிக்குத்தான் கடன் கொடுக்க வேண்டும். இதனால், தனியார் உற்பத்திச் செலவு உயர்ந்து பணவீக்கம் ஏற்படும். எனவே, அரசு தொடர்ந்து அதிக பட்ஜெட் பற்றாக்குறை வைத்திருந்ததால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போனது.
இதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் நமக்குத் தெரியவில்லையா?
1980-களில், மத்திய அரசு ‘தொடர்ந்து பட்ஜெட் பற்றாக் குறையை வைத்திருப்பது தவறு, அதனைச் சரிசெய்ய மத்திய ரிசர்வ் வங்கிடம் கடன் வாங்குவதும் தவறு’ என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மன்மோகன் சிங்கும்(1982-85), ஆர்.என். மல்ஹோத்ராவும் (1985-90) சுட்டிக்காட்டினர். இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டி எச்சரித்தனர். இதை யாரும் கேட்கவில்லை. குறிப்பாக ஆர்.என்.மல்ஹோத்ரா மத்திய அரசுக்கு 1989 மே மாதம் எழுதிய கடிதத்தில், “தீர்க்கமான முடிவுகள் எடுக்கா விடில், அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை விரிவடையும். குறிப்பாக, குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதால், ஏற்றுமதி - இறக்குமதி இடை வெளியைக் குறைக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
உலக வங்கி தனது ஆண்டு அறிக்கைகளில் அவ்வப் போது இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தது. குறிப்பாக, கட்டுக்கடங்காமல் போகும் அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை, பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றை அந்த அறிக்கைகள் சுட்டிக்காட் டின. உலக வங்கியிடம் கடன் வாங்கப்போவதில்லை என்று நினைத்ததால் அவர்கள் சொல்வதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.
இந்தியா தங்கத்தை அடமானம் வைத்ததாகச் சொல்லப்பட்டதே?
1991 மே 16-ல் இந்திய ஸ்டேட் வங்கி 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை சுவிட்சர்லாந்த்தைச் சேர்ந்த ஒரு வங்கியிடம் விற்றது. 1991 ஜூன் 21-ல் நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஜூலை 4-18, 1991 ஆகிய இரண்டு வாரங்களில் நான்கு தவணைகளில் மத்திய ரிசர்வ் வங்கி, இங்கிலாந்து வங்கியிடம் 47 டன் தங்கத்தை அடமானம் வைத்து 400 மில்லின் டாலர் கடன் வாங்கியது. தங்கத்தை அடமானம் வைக்கும் முடிவு முந்தைய அரசு மே மாதமே எடுத்தாலும் அதனைச் செயல்படுத்த ஜூலை மாதம் ஆனது. இதுமட்டுமல்லாமல் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் 220 மில்லியன் டாலர் அவசரக் காலக் கடன் வாங்கினோம். ஜூலை 24, 1991 மன்மோகன் சிங் தனது முதல் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.
இதுதான் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பமா?
ஆம். அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல், உரம், சர்க்கரை, சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தப்பட்டனர். கருப்புப் பணத்தையும் சொத்தையும் மீண்டும் கணக்கில் கொண்டுவந்து வரி செலுத்த ஒரு முறை வாய்ப்பு வழங்கப் பட்டது. வட்டி வருமானம், கமிஷன் வருமானம் வழங்கும் போது வருமான வரிப் பிடித்தம் செய்ய வழி செய்யப்பட் டது. ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடு களை இந்தியா கவர புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஏற்றுமதித் தொழிலில் உள்ள நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன. இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் ஜூலை 1 அன்று 9% மீண்டும் ஜூலை 3 அன்று 11% குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவானது.
அடுத்த சில மாதங்களில் பல பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்தன. வரி விதிப்பு எளிமையாகி, வரி விகிதங்கள் குறைந்தன. அரசு செலவுகளைக் குறைக்க முடிவு கள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை முதலீடுகள் தனியாருக்கு விற்கப்பட்டன. இறக்குமதி எளிமையாக்கப்பட்டு, அதன் மீது வரி விகிதமும் குறைக்கப்பட்டது. பங்குச் சந்தையைக் கண் காணித்து முறைப்படுத்த ‘செபி’க்கு அதிகாரம் வழங்கப்பட் டது. வங்கிகளில் அரசு கடன் வாங்குவது குறைந்து, தனியாருக்குக் கடன் கொடுப்பது ஊக்குவிக்கப்பட்டது. தொழில் துறை மீதான எல்லா கட்டுப்பாடுகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. எல்லாத் துறைகளிலும் தனியார் துறை பங்களிப்பு ஊக்கப்படுத்தப்பட்டது.
நவீன இந்தியாவில் உலகமயம் பிறந்தது!
- இராம. சீனுவாசன்
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
***************************
அந்த நேரத்துல வீட்டுல ரொம்ப கஷ்டம். வீடே ‘நிறைஞ்ச பாக்கியமா’ இருந்துச்சு. ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. எல்லாத்தையும் அடகுவச்சுத்தான் சமாளிச்சோம்” என்று சொல்லும் அளவுக்குப் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு கசப்பான கடந்தகாலம் இருக்கும். அப்படிப்பட்ட நிலை 1990-களில் இந்தியாவுக்கே இருந்தது.
அப்போது வளைகுடா நாடுகளில் போர் நடந்தது. எண்ணைய் விலை உயர்ந்தது. உலக நாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய தொகை பல மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கரைந்தது. இரண்டு வாரங்களுக்கான இறக்குமதிகளைச் சமாளிக்கும் அளவுதான் நம்மிடம் பணம் இருந்தது. சர்வதேச நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு நாடு திரும்பத் தர முடியாமல் போவது என்பது அவமானமாகக் கருதப்படும். அதன் பிறகு, உலக நாடுகளிடம் நம்பிக்கை போய்விடும்.
அந்தக் காலகட்டத்தில் பிரதமராக சந்திரசேகர் இருந்தார். அவரது அரசாங்கம் இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அப்போதுதான் இந்தியா டன் கணக்கில் தங்கத்தை உலக வங்கியில் அடகு வைக்கும் நிலைக்கு வந்தது. அவருக்கு அடுத்தபடியாக 1991 ஜூன் 21-ல் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு நாட்டின் பொருளாதார நிலை பற்றி உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று கோரினார்கள். நரசிம்ம ராவ் பதவியேற்றதும் அவரது அலுவலகத்தில் இரவு பகலாகத் தொடர் கூட்டங்கள் நடந்தன. நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் பரபரப்பாக இயங்கின. பிரதமர் நரசிம்ம ராவும் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் நிலைமையைச் சிறப்பாகச் சமாளித்தனர்.
ஜூலை 1 மற்றும் 3 தேதிகளில் இரண்டு கட்டமாக ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது. பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பின. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு நாடு பணிந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ‘‘உலக சமூகம் சந்தோஷப்படுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்தால் நம் நாட்டின் பொருளாதாரம் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்” என்றார் மன்மோகன் சிங்.
இன்றைக்கு ரூபாய் ஒரு நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக உருவாகியுள்ளது. அப்போதைய பொருளாதார நிலையைவிட மேம்பட்டதாக நாடு தற்போது மாறியுள்ளது. தங்கம் உள்ளிட்ட அந்நியச் செலாவணி கையிருப்புகள் 11 மாதங்களுக்குத் தேவையான அளவு நம்மிடம் உள்ளது.
**********************