வரலாற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நினைவு கூர்வது முக்கியமானது. எனினும், உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா என்று சிலாகிக்க ஏதும் இல்லை.
எனக்கு நரசிம்ம ராவ் இப்படித்தான் ஞாபகத்துக்கு வருகிறார். மைனாரிட்டி அரசாக இருந்தும் ஐந்து வருடங்கள் ‘சாமர்த்திய’மாக ஆட்சியில் நீடித்தவர் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடத்திய குதிரை பேரத்திலிருந்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக்கொடி காட்டியது வரையிலான அவரது போக்குகளின் உச்சம், அவரது நந்தியால் வெற்றி. நந்தியால் தொகுதியில் உள்ள பல வாக்கு மையங்களில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமான ஓட்டுகள் பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எப்படி மறப்பது, என்னவென்று எழுதுவது?
நரசிம்ம ராவ் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘இன்சைடர்’ (உள்ளாள்). அவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தபோது பல அரசியல் கட்டுரைகளை ‘இன்சைடர்’ என்கிற புனைபெயரில் ‘மெயின் ஸ்ட்ரீம்’ என்ற ஆங்கில அரசியல் இதழில் எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் ஆசிரியர் யார் என்பது பலருக்கும் அந்நாட்களில் புரிபடவில்லை. அவற்றை ஆராய்ந்து, நரசிம்ம ராவ்தான் புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதிவந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் என்.ராம். ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவில் இருந்துகொண்டே அக்குழுவின் முடிவுகளை புனைபெயரில் கட்டுரையாக விவாதிக்கும் ‘சாமர்த்தியம்’ நரசிம்ம ராவுக்கு மட்டுமே சாத்தியம்.
மறைக்கப்பட்ட ராவின் முகம்
நரசிம்ம ராவின் பல முகங்களை மறைத்துவிட்டு, தாராளமயமாக்கலின் தந்தை என்று இன்றைக்குப் பலர் அவரைப் பாராட்டிக் கொண்டாடுவது அறியாமை அல்லது புரட்டு என்றே சொல்ல வேண்டும். ராவ் மட்டும் அல்ல; வாஜ்பாய், மோடி இவர்கள் எல்லோரின் வரலாறுமே இப்படிப்பட்டதுதான். ‘சாமர்த்திய’ வரலாறு.
இந்தியாவை முழுமையாகத் தம் வசப்படுத்த ஏகாதிபத்தியம் நெடுநாட்களாகக் காத்திருந்தது. ராவ் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோது, ‘சாமர்த்திய’மாக அதைச் செய்துகொடுத்தார். மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார் மயக்கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சொற்கள் அரசின் தாரக மந்திரமாக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த புரட்சியும் உடன் சேர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொல்லைப்புறமாக மாறியது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தனியார்மயமாக்கல் பெருமளவில் சட்டத் தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டே உள் நுழைக்கப்பட்டது என்பதுதான். தனியார்மயமாக்கல் தொடர்பான கொள்கை அறிவிப்புகள் பொது மேடைகளில் பெரிய அளவில் வந்தனவே ஒழிய, நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் அதற்கான விவாதங்கள் ஒலிக்கவில்லை. விஷயம் அதோடு முடியவில்லை. சட்டம் இயற்றும் மன்றங்கள் சரியாகச் செயல்படாதபோது, மக்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றங்கள்தான்.
தனியார்மயம் விரோதம் இல்லையா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளில், இந்தியா ஒரு ‘சோஷலிஸ குடியரசு’ என்று போடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? அரசின் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமானது இல்லையா? இப்படியான கேள்விகளோடு ‘பால்கோ’ நிறுவனத் தொழிலாளர்கள் போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? வழக்கைத் தள்ளுபடி செய்தது. “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.
மேலும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள சோஷலிஸம் என்ற வார்த்தையைக் கேலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது: “சோஷலிஸம் என்பது நம்முடைய சரித்திரத்திலிருந்து கிடைத்த கவர்ச்சிகரமான வார்த்தையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளிலும் காணப்படலாம். இந்தியச் சமூகம், இன்றியமையாத கூறாக சோஷலிஸத்தை மணம் புரிந்துள்ளது என்ற கருத்தாக்கம், மத்திய அரசு 1990-களின் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவால் உதிரத் தொடங்கியுள்ளது.” (உ.பி. மாநில வெண்கலப் பொருட்கள் நிறுவனம் வழக்கு, 2006).
மேலும் அதே தீர்ப்பில் குறிப்பிட்டது: “உலக மயமாக்கலினால் நாட்டின் பொருளாதார, சமூகக் காட்சிகளில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விளக்கும்போது மாறிவரும் பொருளாதாரக் காட்சிகளை மனதில் கொண்டு யதார்த்தமான பார்வையுடன் நீதிமன்றம் செயல்பட வேண்டும்.”
பிறகு உச்ச நீதிமன்றம் இப்படியும் சொன்னது: “நிர்வாக அதிகாரிகள் விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் தொடங்க எண்ணிவருகின்றனர். இதன் மூலம் சமூகம் பொதுவில் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பெருநகரங்களில் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தத்துவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், மாறிவரும் காட்சிகளைக் கணக்கில்கொண்டு, யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்!”
உச்ச நீதிமன்றத்தின் பச்சைக்கொடி
உச்ச நீதிமன்றம் உலகமயமாக்க லுக்கும் தனியார்மயமாக்கலுக்கும் பச்சைக்கொடி காட்டியதோடு மட்டும் அல்லாமல், வெவ்வேறு தரு ணங்களில் அதன் போக்குக்கும் சென்றது என்று சொல்லலாம். மதுக் கடைகளில் மாலை நேரங்களில் பெண்கள் மது விற்பனையாளராக இருப்பதைத் தடை செய்த டெல்லி அரசின் உத்தரவை 2007-ல் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு ஒருபடி மேலே போய் 2013-ல் மராட்டிய அரசு மதுக் கடை பார்களில் பெண்களின் நடனங்களைத் தடைசெய்யும் சட்டத்தையும் ரத்துசெய்தது. சட்டம் இயற்றும் மன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கும் மன்றங்களும் உலகமயமாக்கலை வாரி அணைத்துக்கொண்டபோது மக்கள் நிலை என்னவானது? முதலாளிகள் பார்வையிலிருந்து அல்ல; தொழிலாளர்கள் நிலை மூலமாகவே அதை நாம் அறிய முடியும்.
இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவர்கள் நேரடித் தொழிலாளர்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்கள் எனும் அங்கீகாரம்கூட அவர்களுக்கு இல்லை. எல்லா நிறுவனங்களிலும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மறைமுகத் தொழிலாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. அயல் பணி ஒப்படைப்பு முறையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை, நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதன் காரணம், குறைந்த கூலியில் அதிக வேலை என்பதோடு, அவர்கள் ஒன்று திரண்டு, சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராட மாட்டார்கள் என்பதும்தான்!
தொழிலாளர்களுக்குப் பொருந்தா சட்டங்கள்
‘ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை சம்பந்தப்பட்ட அரசுகள் தடை செய்தால், அந்தத் தொழிலில் அதுவரை ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுத் துறை நிறுவனங்கள் நேரடித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘ஏர் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (1997) உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு ‘ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா’ வழக்கில் ரத்து செய்தது (2001). இன்றைக்குப் பல கோடித் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்கள் எனும் அடிப்படைத் தகுதிக்கான உரிமைகள்கூட இல்லை.
இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி அமைக்கப்போகிறோம் என்கிறது இன்றைய மோடி அரசு. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளின் வேண்டுகோளின்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
மோடி ராஜஸ்தான் அரசைத் தனது தனியார்மயமாக்கலின் சோதனைச் சாலையாகச் செயல்படுத்திவருகிறார். அங்குள்ள பாஜக தலைமையிலான தொழிற்சங்க அமைப்புகளே இச்சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவருகின்றன. அதையும் மீறி, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குத் தொழிலாளர் சட்டங்களிலுள்ள முக்கியமான பிரிவுகள் திருத்தங்களின் மூலம் மாற்றி அமைக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகமயமாக்கலின் வெள்ளிவிழா ஆண்டைப் பாராட்டி வசனம் எழுதுபவர்கள் எல்லாம், தொழிலாளர் துறையையும் அதற்கான சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், அவர்களுக்கு உலகமயமாக்கலின் குரூரம் புரியும்.
நரசிம்ம ராவ் ஏற்றிப் பிடித்த தீச்சட்டியை நரேந்திர மோடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய வீரர்போல் ஓடி வருவதையும் பின்னாளில் ஒரு கும்பல் ‘சாமர்த்தியம்’ கருதிப் புகழலாம். ஆனால், ராவ்கள், வாஜ்பாய்கள், மோடிகளின் ‘சாமர்த்தியம்’ தேசம் கொண்டாடக் கூடிய வரலாறு அல்ல. மக்களின் கடைக்கோடி மனிதன் அந்த வரலாற்றைக் கண்ணீரினூடேதான் பார்ப்பான்!
- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்
************
************
உலகின் நிலப் பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன. அந்த நிலத்துக்கு கோந்த்வானா (கோண்ட்வானா) என்று பெயர். இந்த வார்த்தையின் வேர், இந்தியாவின் பண்டைய கோந்த் பழங்குடிகளிடமிருந்து தொடங்குகிறது. இவர்கள் திராவிட வழி வந்தவர்கள். இவர்கள் பேசுவது திராவிட மொழி என்று பேராசிரியர் பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் வாழும் இந்தப் பழங்குடிகளின் மையமாக இருப்பது நியமகிரி மலை. இந்த மலையை அவர்கள் கடவுளைப் போலக் கருதுகிறார்கள். எழுத்தறிவற்ற பழங்குடிகள் மலையைப் பற்றி என்ன நினைத்தால் நமக்கென்ன? நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் கண்டுபிடித்த அனைத்துப் பேரியந்திரங்களும், அந்த இயந்திரங்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகளை இந்த மண்ணுலகுக்குத் தருவதையே ஒரே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவத்துக்கும் அது அலுமினிய மூலப்பொருளின் சுரங்கம். காலம்காலமாக இயற்கையோடு இசைந்து வாழும் அந்தப் பழங்குடிகள் நாகரிகமற்றவர்கள். அறிவில் சிறந்த நாமோ, நாகரிக வளர்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த ஆகச் சிறந்த ‘பண்பான’ மலிவு விலைக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் இந்திய-பன்னாட்டு முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தாவுக்கு அந்த மலையைத் தாரை வார்க்க முயற்சிக்கிறோம்.
நியமகிரிக்கு எதிரான கோந்த் மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும், அதே ஒடிசாவில் கொரிய பன்னாட்டு நிறுவனமான பாஸ்கோ அமைக்க இருந்த இரும்பு ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்குக் கிடைத்த முடிவும் சரி, மந்தையிலிருந்து வழிதவறிய இரண்டு ஆடுகள் மட்டுமே. இந்தியாவின் இயற்கை வளத்தைக் காவு கேட்கும் மற்ற அனைத்துத் திட்டங்களும், பெரும்பாலும் வெற்றி எனும் மந்தையில் சேர்ந்துவிடுவதே வழக்கமாக இருக்கிறது.
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ஆசிஷ் கோத்தாரியும் சூழலியல் பொருளியல் அறிஞர் அசீம் வாஸ்தவாவும் எழுதிய 'Churning the Earth: The Making Of Global India' என்ற புத்தகம் உலகமயமாக்கலுக்கும் இந்திய சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி விரிவான தரவுகளோடு ஆராய்ந்து இருக்கிறது. இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட தாக்கத்தை எடுத்துரைக்க, அந்நூல் முன்வைக்கும் முக்கிய வாதங்கள்:
உலகமயமாக்கம் இந்திய சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய அடிப்படைத் தாக்கங்கள் என்ன?
உலகமயமாக்கத்தின் முதன்மைக் கூறுகளில் ஒன்றான தாராளமயமாக்கம், இரண்டு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் ராக்கெட் வேகத்தில் இயற்கை வளம் சூறையாடப்பட்டுள்ளது. மற்றொன்று, இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் தயாரிப்புகளும் குப்பையும் கடுமையாக அதிகரித்துவிட்டன. இயற்கையைச் சீர்குலைப்பதால் உருவாகும் கழிவையும், நுகர்வோர் பயன்பாட்டால் உருவாகும் கழிவையும் அகற்றும் வேலையும் மோசமடைந்துள்ளது. உடல்நலப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மற்றும் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் ஏகபோகமாக உற்பத்தியாவதை உலகமயமாக்கத்தின் முக்கியச் சாதனையாகச் சொல்லலாம்.
அந்நிய நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களின் முதலீ்ட்டை ஈர்ப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக்கொண்டு, சுற்றுச்சூழல் சட்டங்கள், தரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து அவப்பெயரெடுத்த நிறுவனங்கள், இந்தியாவுக்கு வரும்போது ஏற்கெனவே உறுதியில்லாமல் இருக்கும் சுற்றுச்சூழல், சமூக சமத்துவ நெறிமுறைகளைத் தளர்த்த வலியுறுத்துகின்றன. உள்நாட்டுப் பெரு நிறுவனங்களும் இதை வழிமொழிகின்றன. முன்பு டாடா, எஸ்ஸார் நிறுவனங்களின் நிலம் கையகப்படுத்துதலை காங்கிரஸ் ஆட்சி விமர்சித்துவிட்டுப் பின்வாங்கியதும், அதானி குழுமத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.200 கோடி சுற்றுச்சூழல் அபராதத்தை பாஜக அரசு திரும்பப் பெற்றதும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக முந்தைய அரசு விதித்த தடையை விலக்கி, மரபணு மாற்றுக் கடுகை அறிமுகப்படுத்துவதில், சுதேசி பொருளாதாரம் பேசிய பாஜக அரசு தீவிரம் காட்டிவருகிறது.
நாட்டில் குவிந்த முதலீட்டுக்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன?
உலகமயமாக்கத்துக்குப் பின் ஒவ்வொரு நாளும், இந்திய அரசு சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கும் பெருந்திட்டங்களின் எண்ணிக்கை சராசரியாக மூன்று. கனிமச் சுரங்கம், தொழிற்சாலை அல்லது கட்டுமானத் திட்டங்களே இவற்றில் முதன்மையானவை.
கோயில் கருவறைக்குச் சிறப்பு டிக்கெட் இருப்பதைப் போல, அதிரடியாக அனுமதிக்கப்படும் திட்டங்கள் அதற்குப் பிறகு குறைந்தபட்சமாகக்கூட 3-4 ஆண்டுகள் கழித்தே கண்காணிக்கப்படுகின்றன. இங்கே கண்காணிப்பு என்பதே பெரிய வார்த்தை. ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளில் பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலச் சட்டம் போன்றவற்றை நீர்த்துப்போகச் செய்யும் 30-க்கும் மேற்பட்ட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருபுறம் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுவதுடன், மறுபுறம் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து ஒழுங்குபடுத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையும் ஒரு சதவீதமாக மட்டுமே இருக்கிறது. சுருக்கமாக சுற்றுச்சூழல் என்பது மதிப்பில்லாத, அதே நேரம் அநாவசியத் தொந்தரவு என்று உலகமயத்துக்குப் பிந்தைய மத்திய அரசுகள் நினைப்பதுதான் நிதர்சனம்.
எதை விற்கிறோம், எதை இழக்கிறோம்?
இந்தியாவில் அந்நிய முதலீடு குவிந்துவருவதைப் பற்றி இந்நாள், முன்னாள் பிரதமர்கள் அடிக்கடி சிலாகிப்பது உண்டு. அந்த சிலாகிப்புக்குப் பின்னால், அவர்கள் மறைக்கும் விஷயம் காடுகளையும், எளிய உழைப்பாளிகளின் உழைப்பையும் விற்றே அந்த முதலீடு வாங்கப்படுகிறது என்பதுதான். 1980-81-க்குப் பிறகு, காடுகள் திருத்தப்பட்ட செயல்பாடுகளில் பாதிக்கு மேல் (55 %) 2001-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில் நிகழ்ந்தவை. அதேபோல், 1997-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில்தான் 70% காடுகள் கனிமச் சுரங்கத்துக்காகத் திறந்துவிடப்பட்டன.
என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள், இந்தியாவின் 70% மக்கள் காடுகள், நீர்நிலைகள், கடல், வயல் என நிலத்தை மையமாகக் கொண்ட தொழில்களை நம்பியே வாழ்கிறார்கள். இவர்களுக்கான தண்ணீர், உணவு, எரிபொருள், இருப்பிடம், கால்நடைத் தீவனம், மருந்து என எல்லா அடிப்படைத் தேவைகளையும் இந்த இயற்கை அமைப்புகளே பூர்த்திசெய்கின்றன. 10,000 வகைத் தாவரங்களும், நூற்றுக்கணக்கான உயிரினங்களும் மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. காடுகளில் வெட்டு மரமல்லாத மற்ற வாழ்வாதாரங்களுக்காக 28 கோடிப் பேர் காடுகளைச் சார்ந்திருக்கிறார்கள். உலகமயமும் பெருநிறுவனங்களும் இந்தச் சூழலியல் தொகுப்புகளை நேரடியாக அழித்தொழிக்கும் போது, இந்த மக்கள் தங்கள் நிலத்திலிருந்து துரத்தப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்வாதாரமும் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?
உலகமயமாக்கத்தின் காரணமாக, இந்தியாவின் பேரளவு மக்கள் பல்வேறு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை, வாழ் வாதாரம் பறிக்கப்பட்டு, மாற்று வேலைவாய்ப்பும் சொற்பமாக இருப்பது போன்றவையே அந்த நெருக்கடிகள்.
உணவுப் பாதுகாப்பை எடுத்துக்கொள்வோம். உலக மயமாக்கத்துக்கு முன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போர் தொகை 24% ஆக இருந்தது.
15 ஆண்டுகளுக்குப் பின் சொற்பமாக, அதில் 2% மட்டும் குறைந்திருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘உணவு, வேளாண் நிறுவனம்’(FAO) தெரிவிக்கிறது. உணவு உற்பத்திக்கோ, கிடங்கில் உள்ள உணவு சேகரிப்புக்கோ குறைவில்லை. ஆனாலும், நான்கில் ஒருவர் உணவின்றியே வாழ்கிறார். உலகமயமாக்கம், கண்மூடித்தனமான தொழில் வளர்ச்சியால் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வாழ்ந்த சூழலியல் தொகுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதே இதற்கு முதன்மைக் காரணம்.
சிறு விவசாயிகளாகவும், இயற்கையில் கிடைத்த பொருட்களை உண்டும் வாழ்ந்துவந்த பலர் சந்தைப் பொருளாதாரத்துக்குள் பிடித்துத் தள்ளிவிடப்பட்டுள்ளனர். தங்கள் அடிப்படை வளங்களை இழந்த அவர்கள், காசு கொடுத்து மட்டுமே உணவை வாங்கும் நெருக்கடியில் உள்ளனர். ஒவ்வொரு தனிநபருக்கும் 1990-களில் கிடைக்க வாய்ப்பிருந்த பருப்பின் அளவு, தற்போது 26% குறைந்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. உலகமயத்துக்குப் பின் காசு இருந்தால் வாங்கிச் சாப்பிடலாம், இல்லாவிட்டால் செத்துத்தான் போக வேண்டும். அதேபோல கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் குடிக்கும் தண்ணீருக்கு இன்றைக்கு அல்லாடுகிறோம், அதிகபட்சமாகக் காசு கொடுத்து வாங்குகிறோம். கோக கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான ஆலைகளுக்குத் தண்ணீர் மிகக் குறைந்த காசுக்கு விற்கப்படுகிறது. அதேநேரம், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் வேலைவாய்ப்பு-மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
உலகமயம் உத்தரவாதம் அளித்த முதன்மை அம்சம், மிகப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. வாழ்வாதாரத் துக்கும் வேலைக்கும் முன்பு இருந்த குறைந்தபட்ச உத்தரவாதம் பறிபோய், நெருக்கடி மோசமடைந்திருக்கிறது. சூழலியல் தொகுப்பு சிதைக்கப்படுதல், நிலம்/நீர் சீரழிவு தீவிரமடையும்போது, இயற்கை வளத்தைப் பெறுவதற்கான சாத்தியம் பாரம்பரிய நுகர்வோரிடம் குறைகிறது. அவர்கள் அவ்வளவு காலம் மேற்கொண்டுவந்த சுயதொழிலும் சேர்ந்து பறிபோகிறது. காடு வாழ் பழங்குடிகள், மீனவர்கள், கால்நடை மேய்ச்சல் சமூகங்கள், உழவர்கள், கைவினைக் கலைஞர்களைப் போன்று இயற்கை வளங்களை ஆதாரமாகக் கொண்ட தொழில்களில் உலகமயமாக்கத்துக்குப் பின் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அல்லது வேலை இழந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு இல்லாதது, இந்தத் துறைகள் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறது.
உலகமயமாக்கத்தால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையா?
வல்லரசாகத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியா, சுற்றுச்சூழல் சீரழிவு சார்ந்த விஷயங்களில் ஏற்கெனவே முன்னணியில்தான் உள்ளது. ‘சூழலியல் தடம்’ அதாவது, இயற்கைச் சுற்றுச்சூழல் மீது மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில், அதன் தாங்கும் திறனை மீறி இரண்டு மடங்கு சுரண்டிவருகிறோம். ‘உலகத் தட வலைப் பின்னல்’ (Global Footprint Network) என்ற அமைப்பும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பும்(CII) இணைந்து 2008-ல் வெளியிட்ட அறிக்கையில்தான் இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.
அதிலும், இந்திய மக்கள்தொகையில் 0.01 % மட்டுமே இருக்கும் அதி பணக்காரர்கள், இந்தியாவில் ஏழ்மையில் வாடும் 40% மக்களைவிட 330 மடங்கு அதிகமாக இயற்கையைச் சுரண்டுகிறார்கள். உலக அளவிலும் இது மிகமிக அதிகம், வளர்ந்த நாடொன்றில் வாழும் மக்களைவிட 12 மடங்கு அதிகமாக இந்திய அதி பணக்காரர்கள் இயற்கையைச் சுரண்டுகிறார்கள். இந்த வசதியை உருவாக்கிக் கொடுத்தது உலகமயமாக்கத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான். மற்றொருபுறம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் கடைத்தேற வழியின்றி வறுமையின் ஆழத்தில் புதையச் செய்திருக்கிறது.
இந்தச் சீரழிவுகள் அனைத்துக்கும் உலகமயமாக்கத்தை ஒற்றைக் காரணமாகச் சுட்ட முடியாது என்பது என்னவோ உண்மைதான். நாடு விடுதலை பெற்ற பிறகு எப்படிப்பட்ட வளர்ச்சி மாதிரி முன்னெடுக்கப்பட்டது என்பதையும், ஆட்சி நிர்வாகத்தில் புதைந்துகிடக்கும் பிரச்சினைகள், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்படாதது போன்றவையே இந்தியா இன்றைக்கு உள்ள மோசமான சூழ்நிலைக்குக் காரணம். ஆனால், இதையெல்லாம் போக்கிவிடும் சர்வரோக நிவாரணி என்றே 25 ஆண்டுகளுக்கு முன் உலகமயமாக்கம் முன்மொழியப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்திருப்பது என்ன? இந்தியா சந்தித்த நெருக்கடிகளை உலகமயமாக்கம் தீவிரமடையச் செய்துள்ளது, அது மட்டுமல்லாமல், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் புதிய ஆபத்துகளையும் அது கொண்டுவந்து சேர்த்திருக்கிறது!
**********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக