புதன், 6 ஜூலை, 2016

உலகமயமாக்கல் 25 ஆண்டுகள் ---வளர்ச்சிக்கு அடிகோலிய தீர்க்கதரிசி

உலகமயமாதல் என்பதற்கான பொருளியல் அர்த்தம், நாடுகளிடையே பொருட்கள், பணிகள், முதலீடுகள் எல்லாம் தடையின்றிச் சென்று வர வேண்டும். அதாவது, 1.ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தடை இருக்கக் கூடாது. அதன்மீது வரி விகிதங்களும் குறைவாக இருக்க வேண்டும். 2. முதலீடுகள் தடையின்றி வந்து செல்ல வேண்டும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு செய்தி, ஒரு நாட்டின் நாணய மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, அரசு தன்னிச்சையாக நாணய மதிப்பை நிர்ணயிக்கக் கூடாது.
1992-93 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது. அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்கவும், படிப்படியாகச் சந்தை முறையில் ரூபாய் மாற்று மதிப்பை நிர்ணயிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1993 டிசம்பர் 15-ல் உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்க வரையப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. அதன் உறுப்பு நாடாகவும் சேர்ந்தது.
இந்த அமைப்புதான் இன்று உலக நாடுகளின் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பொருளாதார அம்சங்களையும் தீர்மானிக்கிறது.
இந்திய இறையாண்மையை எதிர்க்கும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற ஓர் அமைப்பை ஏற்கக் கூடாது என்றும், இதன் பல அம்சங்கள் இந்திய மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் எதிரானது என்றும் விமர்சனக் குரல்கள் எழுந்தாலும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும், 128 நாடுகளும் கையெழுத்திட்டன. ‘இதனால் பன்னாட்டு வர்த்தகம் வளர்ந்து, எல்லா நாடுகளின் பொருளாதாரங்களும் வளரும். மிகக் குறைந்த வளர்ச்சி உள்ள நாடுகளுக்குச் சலுகைகள் உண்டு. எனவே, சிறிய மற்றும் வளரும் நாடுகள் அச்சம் அடையத் தேவை இல்லை’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அம்சங்களில் சட்டரீதியான மாற்றங்களைச் செய்து, இப்போது முழுமையாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்த ஒரு நாடாக உள்ளது இந்தியா!
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
***********
ஆழி செந்தில்நாத
வாஸ்கோ ட காமா போன்ற ஐரோப்பியக் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசிக்கும் முன்பு, சீனாவின் மிங் வம்சத்தைச் சேர்ந்த அதிசயக் கடல் தளபதியான ட்சங் ஹ, அவரது உலகக் கடல் பயணத்தின் ஒரு பகுதியாக இப்பகுதிக்கு ஒரு பெரும் படையோடு வந்தார். 1409-ல், இலங்கையில் காலி நகரில் அவர் ஒரு மும்மொழிக் கல்வெட்டை நிறுவினார். உலக அளவில் தமது வர்த்தகம் செழிப்புற வேண்டும் என்பதற்காக, அவர் அல்லாவையும் புத்தனையும் தென்னாவரம் நாயனாரையும் அதில் வேண்டிக்கொண்டிருந்தார். அந்தக் கல்வெட்டு சீன, பாரசீக, தமிழ் மொழிகளில் இருந்தது.
அல்லாவையும் புத்தனையும் உங்களுக்குத் தெரியும். ஆனால், தென்னாவரம் கோயிலின் தெய்வத்தை உங்க ளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. வாஸ்கோ ட காமாவை உங்களுக்குத் தெரியும். ட்சங் ஹ பற்றி? ஆசியப் பிரதேசத்தில் சீனமும் அரபியும் பாரசீகமும் வர்த்தக மொழிகளாக இருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்தப் பட்டியலில் நமது தமிழும் இருந்தது என்பதை? தென்னாவரம் கோயிலின் இறைவனை மிங் வம்சத்தின் கீர்த்திமிக்க கடற்தளபதி வேண்டிக்கொள்ள பின்னிருந்த காரணம் பக்தி அல்ல; குமரிப் பெருங்கடலின் அன்றைய புவிசார் அரசியல்.
வரலாற்றின் சதுக்க பூதம்
இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழர்களையும் தமிழகத்தையும் தமிழையும் பற்றி யோசிக்கும்போது, வரலாற்றின் சதுக்க பூதம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. வண்டிவண்டியாய் மயில்பீலிகளைப் பழைய ஏற்பாடு சாலமனின் தேசத்துக்கு அளித்த காலம் முதல் ட்சங் ஹ தென்னாவரம் இறைவனை வேண்டிய காலம் வரை, எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதியின் வர்த்தக உரிமையைத் தம்மிடம் வைத்திருந்தது பண்டைய தமிழகம். அவரவர் பகுதியில் அவரவர் வர்த்தகம் என்பது அன்றைய கடல்சார் பட்டுப் பாதை நியதியாக இருந்தது. நமது இடம் நம்மிடம் இருந்தது.
14,15-ம் நூற்றாண்டுகளில் தமிழகம் தன் அரசியல் இறையாண்மையை இழந்தது. ஆனால், அந்தக் காலம் தமிழர்களின் மரபணுக்களில் பதிந்துவிட்டதை யாரும் மாற்ற இயலவில்லை. அதனால்தான் 90-களில் புதிய உலகமயமாதல் ஒன்று அமெரிக்கத் தலைமையில் ஏற்பட்டபோது, அந்தப் புதிய ஒழுங்கில் வெகு இலகுவாகத் தமிழகமும் சென்று ஒட்டிக்கொண்டது.
அன்றைய தமிழர்கள் பிரமாதமான உலக வர்த்தகர்கள். கிபி முதல் நூற்றாண்டின் கிரேக்க நூலான
‘பெரிப்ளஸ் மேரீ எரித்ரேயி' தமிழகத்தின் சேர, பாண்டிய துறைமுகங்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் வர்த்தக வாசல்களாக இருந்தன என்பதைக் காட்டுகிறது. தமிழ் வணிகர்கள் தங்கள் நாட்டின் விளைபொருட்களான முத்தையும் ஆடைகளையும் மட்டும் அங்கே விற்கவில்லை. இமயத்திலிருந்தும் வடகிழக்கு இந்தியாவிலிருந்தும் வாசனைத் திரவியங்களைக் கொள்முதல் செய்து, அவற்றைக் கிழக்குலகுக்கும் மேற்குலகுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். தமிழக, இந்திய, மேற்குலகப் பண்டங்களின் படங்களுடனான அழகான பட்டியல் ஒன்றை எடுத்துக்கொண்டுதான், தங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை நல்க வேண்டும் என்று கோருவதற்காக, பிற்காலச் சோழர்களின் தூதுவர்கள் சீனப் பேரரசர்களைச் சந்தித்தார்கள். கடலோடிச் சமூகத்துக்கு வேறென்ன தெரியும்?
உலகமயமாதல் விதை
அந்த மரபணு இன்னும் இருக்கிறது. தமிழகம் நவீன காலத்தின் ஒவ்வொரு பொருளாதார யுகத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. நேருவின் திட்டமிடப்பட்ட பொருளாதார யுகத்தின் அரசு, பொதுத் துறை வேலைகளைப் பெறுவதற்கு இடஒதுக்கீடு என்கிற கருவியை ஏந்தியது. பிறகு, தமிழ் அடையாள, மாநில உரிமை மனநிலையும் இடஒதுக்கீடும் மாநிலம் தழுவிய உள்கட்டமைப்பு வசதியும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தின. 1965 மொழிப் போராட்டத்தினூடாக நாம் தக்கவைத்துக்கொண்ட ஆங்கிலமும் 80-களில் எம்ஜிஆர் காலத்தில் தொடக்கக் கல்வியில் சத்துணவும் இடைநிலைக் கல்வியில் ப்ளஸ் டூ முறையும் உயர் கல்வியில் தனியார் பொறியியல் கல்லூரிகளும் தமிழ் நிலத்தை எதையோ எதிர்பார்த்துப் பண்படுத்திவைத்திருந்தன. 90-களில் உலகமயமாதல் வந்தபோது, அந்த நிலத்தில் விதைகள் விழுந்தன. உலகின் தகவல்நுட்பத் தேவைகளுக்கான சேவைகளை அளிக்க நம்மை நொடிப்பொழுதில் தகவமைத்துக்கொண்டோம். மெய்நிகர் பட்டுப்பாதையில் நமக்கான ஓர் இடத்தை உருவாக்கத் தெரிந்துகொண்டோம்.
இந்த அழகான சித்திரத்தின் மறு பகுதியில் நாம் அபாயகரமான தீங்குகளையும் வெகுவிரைவில் கண்டோம். மனித வளத்தின்மீதும் இயற்கையின்மீதும் உள்நாட்டுப் பொருளாதார இறையாண்மையின்மீதும் வாழ்வின் ஒவ்வொரு கூறின்மீதும் இந்த உலகமயமாதல் ஏற்படுத்திவரும் தீங்குகளை வெகுவிரைவில் கண்டறிந்தோம். அதனால்தான் எவ்வளவு வேகமாக உலகமயமாதலுக்கு உட்பட்டோமோ அதே வேகத்தில் அதன் தீங்குகளுக்கு எதிரான போராட்டங்களையும் நாம் நடத்தத் தொடங்கினோம்.
கார்ல் மார்க்ஸ்தான் சரி
உலகமயமாதல், அது செல்லும் இடங்களில் எல்லாம் உருவாக்கும் ஏற்றத்தாழ்வை தமிழகமும் இன்று காண்கிறது. உலகமயமாதலின் தொடக்க பதிற்றாண்டுகளில் (1990-2010) அந்த ஏணியில் சரசரவென ஏறிய இளைஞர்களின் சமூகப் பின்புலம் வேறு. அவர்களில் பெரும்பாலானோர் மேல், மேல்-இடைநிலைச் சாதிகளிலிருந்து வந்தவர்கள். அந்த ஏணியில் ஏறுவதற்கான வாய்ப்புகள் அற்ற அல்லது மறுக்கப்பட்ட ஒரு பெரும் சதவீத மக்கள் குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அதனால், கொதித்துப்போயிருக்கிறார்கள். இந்த முரண்தான் இன்று தமிழ்நாட்டில் திராவிட - எதிர் தமிழ்த் தேசியம், ஆதிக்க சாதி எதிர் - தலித் அரசியல், இயற்கைவள மாஃபியா எதிர் - பசுமை இயக்கம் என உருவெடுத்திருக்கிறது. வரலாற்றில் பொருளாயத பின்புலத்தைக் கருத்தில்கொள்ளாமல் எந்த முரணையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. மீண்டும் கார்ல் மார்க்ஸ்தான் சரி: ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகளே.
இதற்கிடையில், உலகமயத்தின் இறக்கைகளை அணிந்து மீண்டும் பறந்துசென்றான் தமிழன். சோழர் காலத்துக்குப் பிறகு, கூலிகளாக மட்டுமே சென்றவன், 90-களிலிருந்து சம்பளக்காரனாகச் செல்லத் தொடங்கினான். மெல்ல மெல்ல தனக்கான உலக உறவுகளையும் கலாச்சாரத்தையும் அவன் உருவாக்கிக்கொள்ளத் தொடங்குகிறான். தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கிறான். இன்று உலகத் தமிழர் என்றொரு வலைப்பின்னல் இருக்கிறது. அது ஈழத்துக்கும் சென்னை வெள்ளப் பேரிடருக்கும் எதிர்வினை புரிகிறது. அது நூறு உலக நகரங்களிலிருந்துகொண்டு ‘கபாலி’யையும் செல்லினத்தையும் தரவிறக்கம் செய்கிறது. தமிழ்க் கணினி உலகம் ஒன்றே சாட்சி, உலகத் தமிழர்களின் உறவுக்கு.
சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு, மீளத் திருப்ப முடியாத இந்த உலகமயமாக்கத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்வி. நாம் 90-களுக்கு முந்தைய காலத்துக்குத் திரும்புவது சாத்தியமில்லை. நாம் போக வேண்டிய வழி என்ன?
நமது பலம் எதில்?
நமது வரலாறே நமக்கான அந்த வழியைக் காட்டுகிறது. நவீன வர்த்தகத்தில், புதிய சமூகப் பொறுப்புகளின் வரையறையின் கீழ், நாம் நமக்கான இடத்தை அடைவது மட்டுமே நமது அக, புற நெருக்கடிகளுக்கான தீர்வாகும். தமிழகத்தில் சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறவுகோலும் அங்கேதான் இருக்கிறது.
உலகமயமாதல் என்பது, இனி ஒருவழிப் பாதையோ ஒற்றைப் பரிமாணமுடையதோ அல்ல. உலகப் பொருளாதாரத்துக்கு ஒவ்வொரு சமூகமும் ஆற்றக்கூடிய பிரத்யேகப் பங்களிப்புகள் உண்டு. இன்ன பொருளை, இன்ன தேசத்திலிருந்து வாங்கினால் சிறப்பு. அப்படியானால், இன்ன பொருளைத் தமிழகத்திலிருந்து வாங்கினால்தான் சிறப்பு என்று கூறும்படியான பொருட்களையும் சேவைகளையும் நாம் அளிக்க முடியுமா? முத்து, பாண்டிய தேசத்திலிருந்து வந்தால்தான் பெருமை. தேறல், யவன தேசத்திலிருந்து வந்தால்தான் கிறக்கம். கார், ஜப்பானிலிருந்தும் ஆலோசனைச் சேவைகள் அமெரிக்காவிலிருந்தும் வந்தால்தான் சரி.
உலக அங்காடியில் நமது பங்கு என்ன என்பதையும், அதை மனித/இயற்கை வளத்துக்குத் தீங்கின்றி உருவாக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டறிய வேண்டும். நமது பலம் எதில்? திரைப்பட நுட்பங்களா? மென்பொருளா? இயற்கை உணவா? இட்லி - தோசையா? டி-ஷர்ட்டா? எதிர்வரும் காலத்தில் எதில் நாம் கில்லாடிகளாக இருக்கப்போகிறோம்? தகவல் தொழில் நுட்பத்திலா, பசுமை ஆற்றலிலா? நாம் பட்டியலிட்டாக வேண்டும். அதில் நிபுணத்துவம் பெற்றாக வேண்டும். நாம் சுமங்கலித் திட்டங்களை அனுமதிக்கத் தேவையில்லை. நியாயச் சந்தை முறைகளை கைக்கொள்ளும் வணிகங்களுக்கே இனி எதிர்காலம் உண்டு. அதே சமயத்தில்,
‘அவுட்சோர்ஸிங்' முறையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பிராண்டுகளை உருவாக்கி எடுத்துச்செல்ல வேண்டும்.
தமிழர்களுக்கான அலிபாபா
தமிழ்நாட்டில் இன்று நிலவும் பதற்றங்கள் அனைத்துக்கும் பொருளாதாரமே தீர்வாகிவிட முடியாது. ஆனால், பொருளாதார அடிப்படையைப் புதுப்பிக்காமல் எந்தச் சமூக மேம்பாட்டையும் காண முடியாது, பதற்றத்தையும் தவிர்க்க முடியாது. இன்றைய தமிழக இளைஞர்கள் - குறிப்பாகச் சிறு நகர, கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு - உற்பத்தி சார்ந்த வேலைகள் பெரிதும் இல்லை. மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களும் மயக்க மருந்துகளும் நம்மைக் கரைசேர்க்கப் போவதில்லை. அதேசமயம், வளர்ச்சி என்ற பெயரால் இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் நம்மைத் திசைபுரியாத குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. இத்தனையையும் மீறி நாம் பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், இது நமது பிரத்யேகமான சிக்கல் அல்ல, உலகம் முழுக்கவே இதுதான் சிக்கல்.
இன்றைய பாணியிலான உலகமயமாதல்தான் நமக்குப் புதிது. ஆனால், உலகப் பொருளாதாரம் என்பது மிகப் பழையது. அதில் வேறு சாத்தியங்களைத் தேடி நாம் நமது கப்பல்களைச் செலுத்தியாக வேண்டும். உலகிலுள்ள எல்லாச் சமூகங்களுமே உலகப் பொருளாதாரத்தில் பங்கெடுப்பதற்கான உரிமைகளும் வாய்ப்புகளும் உள்ளவைதான். நாம் நமக்கான பங்கை விட்டுக்கொடுத்துவிட முடியாது. வலுவான ஏற்றுமதிப் பொருளாதாரம் இல்லாமல், எந்த நாடும் முன்னேறிவிட முடியாது. தற்சார்புப் பொருளாதாரம் என்பது கதவை உள்ளிருந்து சாத்திக்கொள்வதல்ல.
ட்சங் ஹவின் மும்மொழிக் கல்வெட்டில் தமிழ் இடம்பெற்றதைப் போல, அதே சீனாவைச் சேர்ந்த ஜாக் மாவின் உலக வர்த்தக இணையதளமான அலிபாபா.காமில் தமிழ் இடம்பெறும் ஒரு நாளுக்காக அல்லது தமிழர்களுக்கான ஒரு அலிபாபா.காம் உருவாகும் ஒரு நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததை பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதை நினைவுகூர்வோம். உலக வணிகம் அவ்வளவு இயல்பானது தமிழனுக்கு. வெறும் ஆறு, ஏழு நூற்றாண்டுகள்தான் அதை நாம் தவறவிட்டிருக்கிறோம். இந்த உலகம் உலகமயமாவதற்கு முன்பே உலகமயமான ஒரு கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரனாக தமிழனுக்கு ஒரு மீளெழுச்சி அசாத்தியமானதல்ல.
- ஆழி செந்தில்நாதன் மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கத்தின் (CLEAR) கூட்டக ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர், தொழில்முனைவோர்.
***************

பொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. கிறிஸ்தவக் கல்வி அமைப்பு ஒன்று நடத்திய அந்தக் கூட்டம் ‘இந்துத்துவம்’ பற்றி விவாதித்தது. பல தரப்பினரும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தும் எதிரொலிக்க வேண்டும் என்று கூட்டத்தை நடத்தியவர்கள் நினைத்தார்கள். அவர்களது அழைப்பை ஏற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பில் இருந்த கி.ரவி என்பவர் அதில் கலந்துகொண்டார். இந்துத்துவம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் சொன்ன அவர், இந்துத்துவம் என்பது இந்த நாட்டின் மண் சார்ந்தது என்னும் கருத்தை முன்வைத்தார். இன்று நாம் இந்துத்துவம் பற்றிப் பேசுகிறோம், ஆனால், நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை பெரிதாக வளர்ந்துவருகிறது என்றார். டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் ஆகியவையே அந்த அபாயங்கள் என்று சொன்னவர், இவை எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தையும், அதிலுள்ள அனைத்து சாதி, மத, பண்பாட்டு அம்சங்களையும் பாதிக்கும் என்று விளக்கினார்.
நிறைவுரை ஆற்றிய கோவை ஞானி, இந்துத்துவத்தை விட்டுவிட்டு டங்கலைப் பிடித்துக்கொண்டார். டங்கல், காட் ஆகிய திட்டங்களின் பொருளாதார, பண்பாட்டு ரீதியான விளைவுகளை எடுத்துச் சொன்னார். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணையும் புள்ளியாக உலகமயப் பொருளாதாரம் இருந்தது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
மாற்றுப் பொருளாதாரச் சிந்தனைகள்
சங்கப் பரிவார அமைப்பினர் தொண்ணூறுகளில் இரண்டு விஷயங்களை முன்வைத்துப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். ஒன்று ராமர் கோயில், இன்னொன்று சுதேசி. ராமர் கோயில் தொடர்பான பேச்சுகள் 1992 மசூதி இடிப்புக்குப் பிறகு நீர்த்துப்போகத் தொடங்கி, வேறு வடிவங்களை எடுத்தன. ஆனால், சுதேசிப் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்பதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவை தீவிரமாகக் குரல்கொடுத்தன. நரசிம்ம ராவ் அரசு லைசன்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டியதைப் பொதுவாக வரவேற்ற பாஜக, தங்கத்தை அடகு வைத்தது, பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைத்தது, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலான பல அம்சங்களில் அரசைக் கடுமையாகக் குறை கூறியது.
இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகளைக் காரணம் காட்டிய பாஜக சித்தாந்திகள், இந்தியாவின் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான பொருளாதாரச் சிந்தனை காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இல்லாததே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பேசினார்கள். சுதேசி உணர்வைத் தட்டி எழுப்புவதன் மூலம் நாட்டு மக்களின் ஆற்றல்களைப் பெருக்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்களைப் பாடுபடவைக்க முடியும் என்றது. நாட்டின் அடிப்படை வலிமையான விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்கலாம். அந்நிய சக்திகளை நம்ப வேண்டாம் என்பது ஆர்.எஸ்.எஸ். வாதம்.
கே.என்.கோவிந்தாசார்யா, எஸ்.குருமூர்த்தி, முரளி மனோகர் ஜோஷி, கே.எஸ்.சுதர்சன் ஆகியோர் இந்த சுதேசிப் பிரச்சாரத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்தார்கள். பண்டித தீனதயாள் உபாத்யாயா முன்வைத்த பொருளாதாரச் சிந்தனையான ‘ஏகாத்ம மானவவாதம்’ (ஒருங்கிணைந்த மானுடக் கோட்பாடு) அவர்களது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாக அமைந்தது. தனது உள்ளார்ந்த இயல்பு, உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு சமூகம் அல்லது தேசம் தனக்கான அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீனதயாள் உபாத்யாயா விரிவாகப் பேசுகிறார். கோவிந்தாச்சார்யா, குருமூர்த்தி, சுதர்சன் போன்றோர் இதை அடியொற்றி நமக்கான பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிவந்தார்கள். நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகள் எந்த விவாதமும் இன்றி அமல்படுத் தப்பட்டது என்று குருமூர்த்தி அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். அதற்கு மாற்றாக காந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை குருமூர்த்தி போன்றவர்கள் முன்வைத்தார்கள்.
இடதுசாரிகளும் உலகமயமாதலைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவை அந்நிய சக்திகளுக்கு விற்பதாகத்தான் அது முடியும் என்றார்கள். சுதேசி முழக்கத்தை அவர்கள் எழுப்பவில்லை என்றாலும் நாட்டின் வளம் அதன் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதையும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் எனவும் வாதிட்டார்கள். டங்கல் திட்டம் முதலாளித்துவ அமெரிக்காவின் அடிவருடியாக இந்தியா மாறவே வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டினார்கள். அந்நிய முதலீட்டை நம்புவது, அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியத் தொழில்துறையைத் திறந்துவிடுவது ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் மீதான இந்தியர்களின் பிடியை வலுவிழக்கச் செய்துவிடும் என்றார்கள். தொழிலாளர்கள் நலன் பேணப்படுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை எனவும் எச்சரித்தார்கள்.
விடைபெற்றுக்கொண்ட கொள்கைகள்
ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டுத் தனியார்மயமாவதைப் பெரிதாக எதிர்க்கவில்லை. உலகளாவிய தாராளமயமாக்கலையே தீவிரமாக எதிர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோ உள்நாட்டுத் தனியார்மயமாக்கலையும் சேர்த்தே எதிர்த்தன. வாதங்களின் அம்சங்களில் இப்படிச் சில மாறுபாடுகள் இருந்தாலும், இடதுசாரிகளும் வலதுசாரிகளும் உலகமயமாதலை எதிர்த்தன.
ஆனால், பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இடங்களில், இருந்த தருணங்களில் எப்படி நடந்துகொண்டன? மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையோ சுதேசிப் பொருளாதாரத்தையோ அவை முன்னெடுத்தனவா? நந்திகிராமங்களும் குஜராத் முன்மாதிரிகளும் நமக்குச் சொல்லும் கதை வேறு. காங்கிரஸ் தன் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதைத் தடுக்க இடதுசாரிக் கட்சிகள் போதிய நெருக்கடிகளைக் கொடுக்கவில்லை.
பேசப்பட்ட தேசியப் பெருமிதங்கள்
கம்யூனிஸ்ட்டுகள் நேரடி அதிகாரத்தில் இருந்த இடங்கள் இரண்டு மாநிலங்களோடு நின்றுவிட்டன. ஆனால், பாஜகவின் நிலை அப்படி அல்ல. ஒரு முறை அரைகுறையாகவும் ஒரு முறை முழுமையாகவும் மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் அக்கட்சி இருந்திருக்கிறது. இப்போது அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக மத்திய அரசைத் தன் வசம் வைத்திருக்கிறது. 90-கள் தொடங்கி இன்றுவரை எல்லாச் சமயங்களிலும் குறைந்தது 3 மாநிலங்களிலேனும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. சுதேசிப் பொருளாதாரத்தின் மேல் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கட்சிக்கு இருந்துவருகிறது. எனினும், நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் போட்டுக்கொடுத்த பாதையில்தான் பாஜகவின் ஆட்சியும் பெருமளவில் பயணிக்கிறது.
அது மட்டுமல்ல, காங்கிரஸ் பாணியிலான பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸைக் காட்டிலும் வேகமாகவும் தீவிரமாகவும் செயல்படுகிறது. பண்பாட்டுப் பிரச்சினைகளையும் தேசிய உணர்வையும் முன்னிறுத்தும் மரபைக் கொண்ட அக்கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘வளர்ச்சி’அஸ்திரத்தைக் கைப்பற்றி அதை வைத்தே போரிட்டது. குஜராத்தில் நரேந்திர மோடி சாதித்துக் காட்டிய ‘வளர்ச்சி’யை முன்னிறுத்தியது. தேசியப் பெருமிதங்கள் பேசப்பட்டன. ஆனால், சுதேசி உணர்வோ நமது பொருளாதாரம் நமது உள்ளார்ந்த ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்னும் பார்வையோ முன்னிறுத்தப்படவில்லை. ‘மேற்கத்திய நுகர்வுக் கலாச்சார’த்தின் தீமைகள் பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி வந்த வலதுசாரி சித்தாந்திகளின் ஆட்சியில் நுகர்பொருள் சந்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு அகலமாகத் திறந்துவிடப்பட்டது. தேசப் பாதுகாப்பைத் தாரக மந்திரமாக ஜபிப்பவர்களின் ஆட்சியில் பாதுகாப்பு சார்ந்த உற்பத்தித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. பாஜக, சுதேசிக் கொள்கையைக் கைவிட்டு விட்டது என்று சங்கப் பரிவார் அமைப்புகளில் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்க அமைப்பு விமர்சிக்கிறது.
பாஜக அரசுகள் கடைப்பிடித்த பொருளா தாரக் கொள்கைகள் நாட்டுக்கு நன்மை விளை வித்திருக் கின்றனவா இல்லையா என்பது இங்கே விவாதப் பொருள் அல்ல. இதே கொள்கைகளை முன்னிறுத்திய காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்து சுதேசியை முன்னிறுத்திய அவர்கள் கொள்கை என்ன ஆனது என்பதுதான் கேள்வி. மகாராஷ்டிர மாநிலத்தில் என்ரான் என்னும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்க அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (விழிப்புணர்வு இயக்கம்) கடுமையாகப் போராடியது. என்ரானுக்கு எதிரான பிரச்சாரம் சென்னையிலும் நடந்தது. என்ரான் போன்ற நிறுவனங்களை உள்ளே விடுவதன் ஆபத்து பற்றிப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் நடந்தது. சொற்பொழிவுகள், நூல்கள் என்று திமிலோகப்பட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று என்ரானுக்கு அனுமதி வழங்கும் கோப்பு.
அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரையிலும் சுதேசிப் பொருளாதாரம் பேசிய கட்சி, பதவிக்கு வந்ததும் உலகமயமாதல் கொள்கையைப் பின்பற்றுவது என்றால் அந்தக் கொள்கைதான் செல்லுபடி ஆகும் என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்? சுதேசிக் கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்?
மாற்றுப் பாதை சாத்தியம்தானா?
ஆர்.எஸ்.எஸ்.ஸோ கம்யூனிஸ்ட்டுகளோ முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கான வெற்றிகரமான முன்னுதாரணங்கள் எங்காவது உள்ளனவா? அரசியல் அதிகாரம் கிடைத்தும் ஏன் அவர்களால் அதை உருவாக்க முடியவில்லை?
உலகமயமாகிவிட்ட சூழலில் மாற்றுப் பொருளா தாரத்தை முன்னெடுப்பது என்றால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். மக்கள் கருத்தையும் ஆற்றலையும் திரட்ட வேண்டும். பொருளாதாரத்தின் பாதையை மிகக் கவனமாகத் திசைதிருப்ப வேண்டும். இதற்கு, கொள்கையில் தீவிரமான பற்றுறுதியும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. சுதேசிப் பொருளாதாரத்துக்காக வரக்கூடிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கட்சி தயாராக இல்லை. அதற்கான தியாகங்களுக்கோ உழைப்புக்கோ தயாராக இல்லை. பெருநிறுவனங்களின் துணையோடு அரசியல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவற்றுக்கு ஒத்துவராத பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமும் அல்ல.
சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் இப்படி ஒரு வரி வரும்: “இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கார்ல் மார்க்ஸை ஏமாற்றிவிட்டார்கள்”. காங்கிரஸ்காரர்கள் காந்தியை ஏமாற்றினார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தீனதயாள் உபாத்யாயாவை ஏமாற்றினார்கள். உலகமயமாதலின் வெற்றி இந்தத் தத்துவங்களைப் பேசியவர்களைப் பார்த்துப் பரிகசிக்கிறது.
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
****************
தொண்ணூறுகளின் மத்தியில் இந்தியாவின் கிராமங்கள் வரை பரவியிருந்த அரசியல் நகைச்சுவைகளில் ஒன்று, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஒரு ‘மெளனச் சாமியார்’ என்பது. தமிழ் உட்பட எட்டு இந்திய மொழிகளும், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து அந்நிய மொழிகளும் அறிந்த பெரும் பண்டிதரான நரசிம்ம ராவ், அனைத்து மொழிகளிலும் மெளனம் காத்தவர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுபவர்களும் உண்டு. உண்மையில், 1990-களின் தொடக்கத்தில் வயது காரணமாக அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த நிலையில், ஆன்மிக அமைப்புகளிலிருந்து அழைப்பு வந்தது. குறிப்பாக, குற்றாலத்தில் உள்ள மெளனசாமி மடத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதே நரசிம்ம ராவ் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்சிக்கான பாதையை அகலத் திறந்துவைத்தார் என்பதுதான் வரலாற்றின் சுவாரஸ்ய முரண்!
ஆபத்தில்லாதவர்
இந்திரா அமைச்சரவையில் சிறிதுசிறிதாக முன்னேறி மேலே சென்ற ராவ், ராஜீவ் அமைச்சரவையிலும் முக்கியமான பதவிகளை வகித்தார். எந்த விதத்திலும் தலைமைக்கு ஆபத்து தராதவராக, கொடுத்த வேலையைத் திறம்படச் செய்பவராக இருந்தார் நரசிம்ம ராவ். அப்படியிருந்தும்கூட, 1991 தேர்தலில் 70 வயதான நரசிம்ம ராவ் கழற்றிவிடப்பட்டார். ராஜீவ் படுகொலைக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சோனியா காந்தி, கட்சித் தலைமையைக் கையில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
கோஷ்டி கோஷ்டியாக ராஜாங்கம் நடத்திய தலைவர்களை விட்டுவிட்டு கோஷ்டியைக் கையில் வைத்திராத நரசிம்ம ராவின் வசம் அந்தப் பதவி சென்று சேர்ந்தது. திறம்படக் காய்களை நகர்த்தி, காங்கிரஸின் தலைவராகி, தேர்தலில் நிற்காமலேயே பிரதமர் ஆனார் நரசிம்ம ராவ்.
திண்டாட்டத்தில் இந்தியா
பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் தீவிரவாதப் பிரச்சினை காரணமாகத் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற 521 இடங்களில் காங்கிரஸ் 232 இடங்களை மட்டுமே பெற்று, சிறுபான்மை அரசை உருவாக்கக்கூடியதாக இருந்தது. பாஜகவும் தேசிய முன்னணியும் இடதுசாரிகளும் சேர்ந்து, காங்கிரஸைவிட அதிக இடங்களைக் கையில் வைத்திருந்தனர்.
ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால், கட்சியிலேயே அவர்மீது பலருக்கும் மரியாதையும் அபிமானமும் இருக்கவில்லை. அர்ஜுன் சிங், சரத் பவார் போன்றவர்கள் ராவைக் கவிழ்க்கும் எண்ணத்தில் இருந்தனர். சோனியா தலை அசைத்திருந்தால் ராவைத் தூக்கிவிட்டு அந்த இடத்தில் வேறு யாரையாவது உட்கார வைத்திருக்க முடியும். கட்சி, ஆட்சி இரண்டிலுமே தடுமாற்றம். ஆனால் அதைவிட மோசமாக, தேசப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருந்தது. 1990 வளைகுடாப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. வி.பி. சிங், சந்திரசேகர் தலைமையிலான அரசுகள் நிலையற்றவையாக இருந்ததால், வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்குத் தம் பணத்தை அனுப்பத் தயாராக இல்லை.
1984-1989 காலகட்டத்தில் ராஜீவ் நிறைய அந்நியக் கடன்களை வாங்கியிருந்தார். அவற்றை 1991-ல் அடைக்க வேண்டியிருந்தது. இவை எல்லாமாகச் சேர்ந்து, இந்தியாவிடம் வெறும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான அந்நியச் செலாவணி மட்டுமே கையிருப்பில் இருந்தது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குத் தேவையான கையிருப்பாவது இருக்க வேண்டும். எனவே, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்த தங்கம் அந்நிய நாட்டில் அடகு வைக்கப்பட்டு, அந்நியச் செலாவணிக் கடன் பெறப்பட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கை
இந்தியப் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்றால், இந்தியா அதுவரையில் பின்பற்றிவந்த சோஷலிசக் கொள்கைகளைத் தூர எறிய வேண்டும். முற்றிலும் மாறுபட்ட, திறந்த பொருளாதாரக் கொள்கைகளை முன்மொழிய வேண்டும். அவற்றைச் செயல்படுத்த சரியான ஆட்களைக் கொண்டுவர வேண்டும். சோஷலிசத்திலேயே ஊறிவந்திருக்கும் தன் அமைச்சரவையையும் கட்சி உறுப்பினர்களையும் சமாளிக்க வேண்டும். தம்மைக் கவிழ்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ஜெயிக்க வேண்டும்.
புதிய பொருளாதாரக் கொள்கைகளை அதிவேகத்தில் அமல்படுத்தி, அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை முடுக்கி விட்டு, உற்பத்தியை அதிகரித்து, வரிகளைச் சீராகச் சேகரித்து, அரசு வருமானத்தை அதிகப் படுத்தி, கிடைக்கும் வருவாயில் மக்களுக்கான நலத் திட்டங்களைத் தர வேண்டும். தேவையற்ற மானியங்களை நிறுத்த வேண்டும். பழைய தொழிலதிபர்களுக்கு, அந்நிய முதலீடுகளைக் கண்டு அஞ்சாதீர்கள் என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இவற்றுக்கிடையே எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டும்.
ராவ் அருமையான குழு ஒன்றை உருவாக்கினார். நிதியமைச்சராக மன்மோகன் சிங், வர்த்தக அமைச்சராக ப.சிதம்பரம் போன்ற திறமைசாலிகள். அவர்களுக்கு உதவி செய்ய அமர்நாத் வர்மா, நரேஷ் சந்திரா, மாண்டேக் சிங் அலுவாலியா, ஜெய்ராம் ரமேஷ், அஷோக் தேசாய், ராகேஷ் மோகன் போன்ற அதிகாரிகள். தொழில்துறை அமைச்சகத்தை ராவ் தன் கையிலேயே வைத்துக்கொண்டார்.
என்னென்ன சீர்திருத்தங்கள்?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு கட்டங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மிகுந்த பயன் அடைந்தனர். இதன் காரணமாக, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அளித்துவந்த மானியம் நிறுத்தப்பட்டது.
24 ஜூலை 1991 அன்று புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதுவரையில், யார் எதை உற்பத்தி செய்யலாம் என்பதை அரசே தீர்மானித்துவந்தது. சில துறைகள் தவிர, இந்தக் கொள்கை முற்றிலுமாக நீக்கப்பட்டது. அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இயங்கலாம் என்று இருந்த துறைகள் குறைக்கப்பட்டன. பிற துறைகளிலும் தனியார் முதலீடுகளுக்குத் தடையில்லை என்று ஆனது.
ஏகபோகத் தடுப்புச் சட்டங்கள் தளர்த்தப்பட்டன. நிறுவனங்கள் பெரிதாக ஆக முடியாமல் இருந்த செயற்கையான தடைகள் நீக்கப்பட்டன. பல துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது.
அதே தினத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்த பல்வேறு தடைகள் நீக்கப்பட்டன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. உரம், சர்க்கரை போன்றவை மீதான மானியங்கள் குறைக்கப்பட்டன.
பிற சீர்திருத்தங்கள்
மேலே சொன்ன சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய பின் 1992-ம் ஆண்டின் இடையிலேயே அந்நியச் செலாவணிக் கையிருப்பு மூன்று மாதத் தேவையைத் தாண்டிவிட்டது. ராவ் நினைத்திருந்தால், அப்படியே பழைய சோஷலிசப் பாதைக்குத் திரும்பியிருக்க முடியும். ஆனால், கம்யூனிஸத்தைக் கடைப்பிடித்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அவர் பார்த்திருந்தார். சீனாவின் டெங் சியோபிங் சந்தைப் பொருளாதாரத்தைக் கையில் எடுத்து, சீனாவின் நிலையை வெகுவாக உயர்த்தியிருந்ததைக் கவனித்திருந்தார். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், தாய்லாந்து, மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைக் கவனித் திருந்தார்.
அரசுக் கட்டுப்பாட்டின் மூலம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவே முடியாது என்பதையும் தொழில் முனைவோரின் ஈடுபாடு இல்லாமல் தொழில் வளர்ச்சி சாத்தியமே இல்லை என்பதையும் ராவ் மிகச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தார். அதனாலேயே பழைய சோஷலிச மாதிரிக்கு ராவ் திரும்ப விரும்பவில்லை.
பங்குச்சந்தைச் சீர்திருத்தம்
இந்தியாவில் பங்குச் சந்தை என்ற ஒன்று புழக்கத்தில் இருந்தாலும் அதில் நிறுவனப் பங்குகளைப் பட்டியலிடுவது அரசின் கையிலேயே இருந்தது. நரசிம்ம ராவ் இதனை மாற்றினார். சந்தையே பங்கின் விலைகளைத் தீர்மானிக்கும் நிலை உருவாக்கப்பட்டது. ஹர்ஷத் மேத்தா ஊழல் போன்றவை இந்தக் காலகட்டத்தில் நடந்ததைத் தொடர்ந்து, அவற்றைத் தடுக்கும் முயற்சியாக, இவ்விஷயத்தில் கண்காணிப்பு வளையம் இறுக்கமானது. பதிவுசெய்யப்பட்டவர்கள் மட்டுமே பங்குச் சந்தையில் தரகர்களாக இருக்க முடியும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது.
இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் பணம் திரட்ட முடிந்தது இந்தச் சீர்திருத் தங்களால்தான். இந்திய மென்பொருள் துறை மிகப் பெரிய அளவு விரிவடைய இந்தச் சீர்திருத்தங்களே காரணம்.
1993-ல், தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டன. அரசுத் துறை மட்டுமே இயக்கிவந்த மின் உற்பத்தி, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்றவற்றில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. உள்கட்டுமானம் பெரிய அளவு விரிவடைந்தது. தொலைக்காட்சி சேவை, விமான சேவை, செல்பேசி சேவை ஆகிய துறைகளில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.
இறுதியாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பு நாடாகியது. உலக வர்த்தகத்தில் இந்தியா முக்கியமான பங்காற்றத் தொடங்கியது. ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே பெருகின.
1994, 1995, 1996 நிதியாண்டுகளில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் முறையே 6.7, 7.6, 7.5% என்று இருந்தது. முன்னெப்போதும் இருந்திராத வளர்ச்சி இது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 1991-ல் இருந்ததைப் போல 15 மடங்கு அதிகரித்திருந்தது. வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரித்தது. சம்பளங்கள் தனியார் துறையில் மட்டுமல்லாது, அரசுத் துறையிலும் அதிகரித்தன. இதன் காரணமாக வரி வருவாய் அதிகரித்தது. வரி வருவாய் அதிகரித்த காரணத்தால், மக்களின் வாழ்வு நிலை மேம்பட்டது. எனினும், 1996 தேர்தலில் நரசிம்ம ராவ் தோற்கடிக்கப்பட்டார்.
எப்படிச் சாதித்தார்?
கட்சிக்குள் எழும்பிய எதிர்ப்புகளை, நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்களைக் கொண்டே ராவ் அடக்கினார். எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படை நேரு, இந்திராவின் கருத்துகள்தான் என்று ராவ் சொன்னதை காங்கிரஸார் பெரும்பாலும் நம்பினர். அவர்களுடைய சிந்திக்கும் திறன் அதற்குமேல் இருக்கவில்லை. அமைச்சரவையில் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் ராவ் திறம்படக் கையாண்டார். சோனியாவை வாரம் ஒருமுறை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்து, அவரிடமிருந்து எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் சில ஆண்டுகளுக்குப் பார்த்துக்கொண்டார்.
பாஜகவின் எதிர்ப்பைச் சமாளிக்க அவர்களிடம் இடதுசாரிகள் பற்றிய எச்சரிக்கையை மறைமுகமாக உணர்த்துவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். அதேபோல், தனக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று இடதுசாரிகளுக்கு மெளன எச்சரிக்கையும் விட அவர் தயங்கவில்லை.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை ஒட்டுமொத்தமாகக் கைகழுவியது. கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்றிலிருந்து அவருடைய பெயர் அழிக்கப்பட்டது. அவர் இறந்ததும் அவருடைய பூத உடல்கூடக் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. அவரை எவ்வாறெல்லாம் அவமதிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சோனியா காந்தி ஆதரவாளர்கள் நடந்துகொண்டனர். நடந்துகொள்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி குறிப்பிடத் தக்கது. இந்த வளர்ச்சி நாட்டில் அனைவரையும் சென்றடையவில்லை என்பதும், ஏற்றத் தாழ்வு அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், 90-களுக்கு முன்பு இருந்ததைவிடவும், இன்றைக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதற்கான ஆதார விசையாக நரசிம்ம ராவ் இருந்தார் என்பதே வரலாறு!
- கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: badri@nhm.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக