செவ்வாய், 28 ஏப்ரல், 2015

செர்னோபில் அணு மின்உலை விபத்து.

இது வரை நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோசமான விபத்து, செர்னோபில் அணு மின்உலை விபத்து. அமெரிக்காவின் த்ரீ- மைல் தீவு அணு மின்உலையில் 1979-ல் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோச மான விபத்து இது.
அப்போது சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகில் உள்ள செர்னோபில் நகரத்தில் இந்த அணு மின்உலை அமைந் திருந்தது. இதில் 4 அணு உலைகள் செயல்பட்டன. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் பெற்றவை. 1986 ஏப்ரல் 26 அதி காலையில் அந்த விபரீதம் நடந்தது. சரியாகத் திட்டமிடப்படாத சோதனை ஒன்றை 4-வது அணு உலையில் நடத்திக் கொண்டிருந்தபோது, விபத்து நேர்ந்தது. இதையடுத்து, மின் கட்டுப் பாட்டு அமைப்பு மற்றும் அதன் அவசர காலப் பாதுகாப்பு அமைப்பைத் தொழி லாளர்கள் மூடினர்.
பல்வேறு மனிதத் தவறுகள் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத் தின்போது சங்கிலித் தொடர்வினை ஏற்பட்டு அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அணுக் கதிர்வீச்சு வேகமாகப் பரவத் தொடங்கியது. பாது காப்பு விதிகளை மீறி அணு உலை ஆபரேட்டர்கள் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. அணு உலையின் வடிவமைப்பில் இருந்த கோளாறே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறு கின்றனர். தொடக்கத்தில், இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததை மறைக்க சோவியத் அரசு முயன்றதாகக் குற்றம்சாட்டப் படுகிறது. எனினும், அணுக் கதிர்வீச்சு பரவுவதைச் சுட்டிக்காட்டிய ஸ்வீடனைச் சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள், இது குறித்து விளக்கம் தருமாறு சோவியத் ஒன்றிய அரசை வலியுறுத்தின. இதை அடுத்து, செர்னோபில் அணு உலையில் விபத்து நடந்ததை ஏப்ரல் 28-ல் ஒப்புக்கொண்டது சோவியத் அரசு.
ஏப்ரல் 27-ல்தான், அதாவது விபத்து நடந்து ஒரு நாளுக்குப் பின்னரே பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத் தப்பட்டனர். எனினும், விபத்துபற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதற்குள் பலரது உடலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத் தியிருக்கிறது. அப்பகுதிகளில் வசித்தவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக் கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைவிட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ் விபத்தின் மூலம் வெளியேறியது. பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின. இன்று பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன. இங்கு மனிதர்கள் வாழ் வதற்கான சூழல் ஏற்பட இன்னும் 20,000 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் கல்வி... நம் உரிமை!

ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள், இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் மொத்தம் 20 பள்ளிகளுக்குக் குறைந்தவையே அரசுப் பள்ளிகள். மற்றவையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அல்லது உதவி பெறும் தனியார் பள்ளிகள். இந்த இரு வகைப் பள்ளிகளுக்கும் அரசு மானியம் மட்டும் வழங்கிவந்தது. அப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆய்வு நடத்தும் கடமை கல்வித் துறைக்கு இருந்தது. ஆண்டாய்வும், திடீர் ஆய்வுகளும் நடத்தப்பெற்றதால் பள்ளிகள் சீராக இயங்கின.
விடுதலை பெற்ற சமயத்தில் நான்கு நிலைகளில் ஆசிரியர் கல்வி அளிக்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு முடித்தவருக்கு கீழ்நிலை ஆசிரியர் (Lower Grade) சான்றிதழும், எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நிலைச் சான்றிதழும் (Higher Grade), எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவருக்கு இடைநிலைச் சான்றிதழும் (Secondary Grade) ஆசிரியர் கல்வி முடித்த பின் கல்வித் துறையால் வழங்கப்பட்டது. பட்டப் படிப்புக்குப் பின் ஆசிரியர் கல்வி முடித்தவர் பல்கலைக்கழகப் பட்டயம் பெற்றனர். பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களை ரத்துசெய்ய அரசுக்கு அதிகாரமில்லை என்பதால், ஆசிரியர் கல்வி முடித்தவரும் பொதுக் கல்வி இயக்குநர் அளிக்கும் ஆசிரியர் சான்றிதழைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் மீது அரசு ஒரு கண் எப்போதும் வைத்திருக்கும். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ரத்துசெய்யப்பட்டால் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய முடியாது.
சுதந்திரத்துக்குப் பின் புதிய பள்ளிகள் பட்டிதொட்டி யெல்லாம் தொடங்கப்பட்டன. அவற்றுக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பயிற்சி பெறாதவர்களையும் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கான பணித் தகுதி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலை ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இத்தகைய ஆசிரியர்களிடம் கற்றவர்கள் பல துறைகளிலும் முத்திரை பதித்துவருகிறார்கள். ஆசிரியர் பயிற்சிக்கும் கற்றலுக்கும் தொடர்பு இல்லையோ என்ற ஐயம் எழக்கூடும். இந்த தற்காலிக ஆசிரியர்கள் வேறு பணி கிடைக்கும் வரையில்தான் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். செய்யும் பணியை ஒரே நாளாயினும் நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதியே அவர்களது தொழில் வெற்றிக்குக் காரணம்.
ஒருகட்டத்தில் கீழ்நிலையும், பின்னர் உயர்நிலையும் நிறுத்தப்பட்டன. தற்போது இடைநிலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி மேனிலைக் கல்வியாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் பொதுத் தகுதி, ஆசிரியர் கல்விப் படிப்போடு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஆக, இன்றைய ஆசிரியரது தகுதிகள் முன்னர் இருந்ததைவிடப் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பழைய ஆசிரியர்களுக்கு இணையாக இவர்கள் இல்லை என்ற கூற்றை ஏற்பது கடினமாக உள்ளது.
அக்கால ஆசிரியர்கள்
அக்காலத்தில் மிகச் சாதாரணமான குடும்பங்களிலிருந்து தான் பெரும்பாலானோர் ஆசிரியர் தொழிலுக்கு வந்தனர். அவர்கள் ஆசிரியர் கல்வி படிக்கும்போது உதவித்தொகை கொடுப்பார்கள். ஆசிரியர் கல்வி பயிலக் கட்டணம் ஏதும் கிடையாது. உதவித்தொகை விடுதிக் கட்டணத்துக்கும் பிற செலவுகளுக்கும் போதுமானது. இன்னும் ஒரு வகை ஆசிரியர்கள் உண்டு. நிலபுலம் உள்ளவர்கள், வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள். பெரும்பாலும் உள்ளூரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணி மேற்கொள் வார்கள். வறுமை நிலையிலுள்ள ஆசிரியர்கள் தனிப்படிப்பு எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்வாகி உண்டு. அவர் பள்ளியின் செயல்பாட்டில் அக்கறை கொண்டிருப்பார். ஆசிரியர்கள் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருப்பார். விடுப்புகூட எடுக்க இயலாத நிலையில் ஆசிரியர்கள் இருப்பார்கள். நெடுங்காலத்துக்கு அரசு ஓய்வூதியம், விடுப்பு விதிகள் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது. 1971-ல்தான் அவை தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் அலைமோதிய அத்துமீறல்களை எதிர்த்து ஆசிரியர்கள் போராட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் 1976-ல் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளின் மீதான கல்வித் துறையின் பிடி இறுகியது மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் சிறிதளவு சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அதேசமயம், ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட இச்சட்டமே காரணமென்று நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
சுயநிதித் தனியார் பள்ளிகள்
1978-ல் அரசு மானியம் பெறாது நடத்த சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவை பல்கிப் பெருகிப் பட்டிதொட்டியெல்லாம் இன்று கோலோச்சுகின்றன. இப்பள்ளிகளுக்குத் தனியார் பள்ளி (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பொருந்தாது என்று அரசு முடிவெடுத்தது. ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பின்மை, விடுப்பு விதிகள் இல்லாமை போன்ற பல குறைபாடுகளுடன் இவை இயங்கிவருகின்றன. ஆசிரியர்களில் பலரும் தகுதி பெறாதவர். அரைச் சம்பளத்தில் எவ்விதச் சலுகையும் இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பள்ளி மீதோ மாணவர் மீதோ எப்படி உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடுதான் பெரும்பான்மையான சுயநிதிப் பள்ளிகள் நடைபெற்றன. ஒரு காலகட்டத்தில் பணியிலிருந்துகொண்டே சுயநிதிப் பள்ளிகளை ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கினார்கள். தம் முழு நேரப் பணியை ஓரங்கட்டிவிட்டு, தம் கவனம் முழுவதும் தம் சொந்தப் பள்ளிக்குச் செலுத்த ஆரம்பித்ததும் அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
இதேபோல தனியார் உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி களும் அதே வளாகத்திலோ அருகிலோ தம் பள்ளிக்குப் போட்டியாக சுயநிதிப் பள்ளியையும் தொடங்கி, அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொண்டனர். சுயநிதிப் பள்ளியில் சேர்க்கையை முடித்த பின்தான் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்க்கையைத் தொடங்குவார்கள்.
தமிழகக் கல்வித் துறை இம்முறைகேடுகளையெல்லாம் காணாதது மட்டுமின்றி ஆதரவும் கொடுத்தது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு.
உள்ளாட்சிப் பள்ளிகள்
உள்ளாட்சிப் பள்ளிகள் ஆங்கில ஆட்சியின்போது இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்கின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இவ்வமைப்புகள் செயல்பட்டன. இவற்றின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகள் சீராக இயங்குவதில் அவ்வமைப்பின் உறுப் பினர்கள் அக்கறை கொள்வார்கள். ஆசிரியர்கள் பணிபுரியும் ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்துக்குள் குடியிருக்க வேண்டும் என்பது விதி. பெரும்பாலும் ஆசிரியர்கள் அந்தந்த ஊரிலேயே வசித்துவந்தனர். மாணவர்களை மட்டுமின்றி அவர்களது பெற்றோரோடும் ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கம் இருந்தது. சமூகத்தின் சொத்தாக உள்ளாட்சிப் பள்ளிகள் திகழ்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வந்தவுடன் அவை அலசப்பட்டு, முன்னேற்றம் காண்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டும் சுணக்கமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டன.
படிப்படியாக இந்த உள்ளாட்சிப் பள்ளிகள் யாவும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1970-ல் கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தன. 35,000 தொடக்கப் பள்ளிகள், 8,000 உயர்நிலை-மேனிலைப் பள்ளிகளைச் சென்னையிலிருந்து நிர்வகிப்பது இயலாத காரியம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை.
ஆசிரியர்களால் முடியும்
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”
உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com

திங்கள், 27 ஏப்ரல், 2015

சுற்றுச்சூழல் புத்தகங்கள்:

சமீபத்தில் வெளியான சில சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
பொருட்களின் கதை, ஆனி லியோனார்டு
பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பயங்கரமான பாதிப்புகள் என்ன, நாம் சந்தோஷமாக அணிந்துகொள்ளும் ஒரு டி ஷர்ட் அதன் உண்மையான அடக்க விலையை பிரதிபலிக்கிறதா - அதில் மறைந்துள்ள செலவுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன என்பது போன்ற முக்கிய கேள்விகளை எழுப்புகிறது இந்தப் புத்தகம். இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இந்தப் பூவுலகை எப்படி கடுமையாக பாதிக்கிறது என்பதை விளக்குகிறார் நூல் ஆசிரியர். அதற்கான மாற்று என்ன, அந்த மாற்று நமது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332-273444
காடுகளுக்காக ஒரு போராட்டம் - சிக்கோ மென்டிஸ்
பலரது உயிர்த் தியாகம்தான் இந்தப் பூவுலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காட்டை காக்கப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிர் துறந்தவர் சிக்கோ மென்டிஸ். அவருடைய போராட்டம் நிறைந்த வாழ்க்கையின் கதை.
தமிழில்: பேராசிரியர் ச. வின்சன்ட், எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 9865005084
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள், வழக்குரைஞர் சுந்தரராஜன்
தமிழகம் எங்கும் சிறியதும் பெரியதுமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருகிவருகின்றன. அதற்கு எதிராக பலர் போராடி வருகின்றனர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசின் கடமைகள் என்ன, மக்களிடம் இருந்து பறிக்கப்படும் சட்டரீதியிலான உரிமைகள் என்ன என்று விளக்குகிறது இந்தப் புத்தகம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்கள் மூலமாக எப்படி சட்ட ரீதியில் தீர்வு காண்பது என்று வழிகாட்டுகிறது இந்த நூல்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006
இறகுதிர் காலம், கோவை சதாசிவம்
பறவைகள், பவழத் திட்டுகள், நீர்நிலைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களின் அழிவை கவனப்படுத்துகிறது இந்த நூல். உணவுச் சங்கிலியில் முதன்மைப் பங்காற்றும் காட்டுயிர்கள், தாவரங்கள், நீர்நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே இயற்கையிடம் இருந்து விலகி வாழும் மனிதர்கள் உயிரோடு இருக்க முடியும் என்பதை இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
வெளிச்சம் வெளியீடு,
தொடர்புக்கு: 98947 77291
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
கடந்த 2013-ல் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு. இயற்கை வேளாண்மையை பரப்புவதற்காக தமிழகம் எங்கும் அவர் சுற்றித் திரிந்தபோது கிடைத்த அனுபவங்களையும், இயற்கை குறித்த புரிதலையும் இதில் பதிவு செய்துள்ளார். இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய புரிதலை இந்நூல் விரிவுபடுத்தும்.
விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283
மேக வெடிப்பு, சுப்ரபாரதிமணியன்
இயற்கையைச் சுரண்டும் மனி தனின் பேராசை, இயற்கைச் சீற்றங்கள், உயிர் துறந்த சுற்றுச்சூழல் செயல் பாட்டாளர்கள் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொள்ள இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் புத்தகம் முன்னெச்சரிக்கை செய்கிறது.
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 04259-226012
யாருக்கானது பூமி, பா. சதீஸ் முத்து கோபால்
பறவைகள், உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள தொடர்பு, அவை ஏன் அழிந்துவருகின்றன என பல்வேறு விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. காட்டுயிர் சார்ந்து நூல் ஆசிரியரின் அனுபவங்கள் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
அகநாழிகை பதிப்பகம், தொடர்புக்கு: 9994541010
ஆணி வேர் - ஆர்கானிக் ஏன்? என்ன? எது?
மருந்தே உணவு, உணவே மருந்து என்பதுதான் நம்முடைய பாரம் பரியம். அப்படிப் பார்த்தால், இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுதான் பல்வேறு நோய் களுக்கான காரணமாக இருக்கிறது. எது நமக்கு உகந்த உணவு, இயற்கை வாழ்வியல் என்றால் என்ன என்பது குறித்த எளிமையான அறிமுக நூல் இது.
ஓம் பதிப்பகம், தொடர்புக்கு: 9445775478
சிறு வெளியீடுகள்
ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது, எஸ். ராமகிருஷ்ணன்
ஜப்பான் நகரமான ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஏற்படுத்திய பாதிப்புகள் மோசமானவை. அதைவிடவும் மோசமான அணுகுண்டுகள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இன்றைக்கு உள்ளன. இந்தியா, பாகிஸ்தானிலும் உள்ளன. இன்னொரு அணுகுண்டு வீச்சு நடந்தால் என்ன ஆகும் என்பதை வரலாற்றுப் பின்புலத்தில் அலசுகிறது இப்புத்தகம்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 044-43809132
உயிரைக் குடிக்கும் புட்டிநீர், நக்கீரன்
நாட்டிலேயே பாட்டிலில் அடைக்கப் பட்ட நீர் அதிகம் விற்பனை ஆவது தமிழகத்தில்தான். தூய்மையானது என்று நம்பப்படும் இந்த புட்டிநீர் நம் உடலையும் உலகையும் எப்படி குப்பை ஆக்குகிறது என்று அதிர்ச்சிகரமான உண்மைகளை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006.

1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் - 15 லட்சம் இந்திய வீரர்கள்

ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில், "அண்மையில் நான் பிரான்ஸ் நாடு சென்றிருந்த போது, முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு.
நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது ஒரு பக்கம், இது முதலாம் உலகப்போரில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் சாகசத்துக்கும் தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்த்துகிறது. மேலும் சேவா பரமோ தர்ம என்ற உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது; 15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம் செய்தார்கள் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
இந்தியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப் போரின் போது கிட்டத்தட்ட நமது 74000 இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதும் கூட பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு சாகசத்துக்கான விருது அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல, மேலும் 11 வீரர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே நமக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில், இந்தப் போர் நடைபெற்ற போது, 1915ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான் அங்கே என் அஞ்சலியைச் செலுத்தச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்துக்குத் தலைவணங்கச் சென்றேன்.
உலகின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், உயிர்த் தியாகமும் செய்கிறது; இதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா?" என்றார் பிரதமர் மோடி.

1958 ஏப்ரல் 27: அணுகுண்டுக்கு எதிராகத் திரண்ட குரல்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் அலமாகார்டோவில் 1945 ஜூலை 16-ல் உலகில் முதன் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசி லட்சக் கணக்கான மக்களைக் கொன்றது அமெரிக்கா. இதையடுத்து அணு ஆயுதங்களுக்கு எதிரான குரல் உலகமெங்கும் எழுந்தது.
அணுகுண்டுக்கு எதிராகப் போராடிய வர்களில் முக்கியமானவர் டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் மருத்துவர், இசைக் கலைஞர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர். மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் மருத்துவமனை யைத் தொடங்கி நடத்திய அவர், ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளித்தார். 1952-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. காரணம், காபோனில் இருந்த ஏழை மக்களுக்குச் சேவை அளிப் பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.
1954-ல் ஓஸ்லோ பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட அவர், ஏற்புரையில் அணுகுண்டு சோதனை யைக் கண்டித்துப் பேசினார். ‘மனசாட்சி யின் அறிவிப்பு’ எனும் பெயரில், 1957 ஏப்ரல் 23-ல் ஓஸ்லோ வானொலி யில், அணுகுண்டு சோதனைக்கு எதிராக உரையாற்றினார்.
தொடர்ந்து ஏப்ரல் 27-ல் அவருடன் சேர்ந்து பல்வேறு நாடு களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் 3 தலைப்புகளில் இதே கோரிக்கை அடங்கிய உரைகளை அவர் நிகழ்த்தினார். இந்த உரைகள் தொகுக்கப்பட்டு ‘அமைதியா, அணு குண்டுப் போரா?’ எனும் தலைப்பில் ஹென்றி ஹோல்ட் என்பவரால் வெளியிடப்பட்டன. பல மொழிகளிலும் அந்தப் பிரசுரம் மொழி பெயர்க்கப்பட்டது.
டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் ஆகிய 3 நாடுகளும் அணு குண்டு சோதனையை நிறுத்திக் கொள்வ தாக அறிவித்தன.

பயானிக்ஸ் எறும்பு

இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ்
இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் துறை. சுருக்கமாகச் சொன்னால், கண்ணதாசன் பாடிய, ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ ரகம். தமிழில் இதை உயிர் மின்னணுவியல் என்கிறார்கள்.
எறும்புகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு பயானிக் எறும்புகளின் தொகுதி அண்மையில் ஜெர்மனியில் உருவாகியிருக்கிறது. எறும்புகள்போல விரைவாக நகர, ஆறு கால்கள் கொண்ட உடலமைப்பு இது. ஒவ்வொரு எறும்பின் தலைப் பகுதியில் கேமராவும், என்ன மாதிரியான தரை என்று உணர உணரியும் (சென்சார்) உண்டு. பயானிக் எறும்பு செயல்பட வழி செய்யும் லித்தியம் மின்கலங்களை சார்ஜ் செய்யவும் இந்த அமைப்பு வழி செய்யும். அசல் எறும்புகள்போல, பொருட்களைப் பற்றி எடுத்துப் போக, பற்றுவான்களும் (க்ரிப்பர்) உண்டு. எந்தப் பளுவை நகர்த்த வேண்டுமோ அதை எப்படிப் பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் ஆற்றல் மிகுந்தவை இந்த பயானிக் எறும்புகள்.
பயானிக்ஸ் எறும்பின் வேகம்
எறும்புகள் கூட்டாக வாழ்பவை. ஒற்றை எறும்பால் இழுத்துப் போக முடியாத உணவுத் துண்டைக்கூட, கூட்டமாக வந்து நகர்த்திப்போக அவற்றால் முடியும். பயானிக் எறும்புகளும் இதேபோல் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு ஒருங்கிணைந்து பணிசெய்யும் ஆற்றல்கொண்டவை. இப்படியான தொடர்புக்கான ரேடியோ தொகுதி எறும்பின் வயிற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் ஹனோவரில் நடந்த உலகத் தொழில்நுட்பக் கண்காட்சியில் பயானிக் எறும்புகள் அறிமுகமாகியிருக்கின்றன.
பயானிக்ஸ் பார்வை
விபத்தில் கை உடைந்துபோவதோ, அலட்சியப் போக்கினால் நோய் முற்றிக் காலை அகற்ற வேண்டியிருப்பதோ சோகமானது மட்டுமில்ல; ஓடியாடிப் பரபரப்பாக நடத்திய வாழ்க்கையை முடக்கிவிடலாம் அது. முறிந்து விழுந்த உறுப்பை மறுபடி முளைக்க வைக்க முடியாது. ஆனால், அந்தக் குறை அநேகமாகத் தெரியாமல் வாழ்க்கை தொடர பயானிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கும். ‘பயானிக் பார்வை’ முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு கட்டமைப்பாகும். பார்வை இழந்தவர்களின் விழியில் சிறு மின்முனைகள் (எலெக்ட்ரோடு) பதிக்கப்படும். உடலில் இணைத்த சிறு கேமராக்கள் அவர்களுக்கு முன்னால் விரியும் காட்சியைப் படம் பிடித்து, அந்தப் படத்தை மின்னணு அலைகளாக அனுப்பும். மின்முனைகள் அவற்றை வாங்கி நேரடியாக மின்தூண்டுதலாக மூளைக்கு அனுப்பும். மூளை அந்த மின்தூண்டலைப் பகுப்பாய்வு செய்து, விழி இழந்தவருக்குக் காட்சியை உணர்த்தும். ஏற்கெனவே பார்வை இருந்து, திடீரென்று பார்வை போனவர்கள் என்றால் மூளைக்கு இந்தப் பகுப்பாய்வு முன்பே பழக்கமாகியிருக்கும். புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை.
பயானிக்ஸ் போதை
பயானிக் நாக்கு அடுத்தது. மிகச் சிறிய நானோ உணரிகள் இந்த நாக்கில் பதிக்கப்பட்டிருக்கும். திட உணவோ திரவமோ நாக்கில் படும்போது, உணரிகளால் அது பகுத்தறியப்படும். அந்த விவரம் ஒரு கணினிக்குப் போகும். ஒவ்வொரு வகை வேதியியல் அணுத் திரளுக்குமான ஒரு சுவை கணினியில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும். வந்த தகவலை அதோடு ஒப்பிட்டு, என்ன சுவை என்று கணினி உடனே சொல்லிவிடும்.
இது எங்கே பயன்படும்? ஒயின் போன்ற மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் சுவைஞர்கள் உண்டு. இவர்களின் வேலை, உற்பத்தியாகும் மதுவை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று நாள் முழுக்க ருசி பார்ப்பது. தொடக்கத்தில் சந்தோஷமான வேலையாக இருந்தாலும், சீக்கிரமே வெறுக்க வைத்து விடும் இந்தப் பணிக்கு, பயானிக் நாக்கு சம்பளமில்லாத வேலைக்காரன். சொந்த நிறுவனத் தயாரிப்பைச் சுவைப்பதோடு நிறுத்தாமல், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளோடு சொந்தச் சரக்கைப் போதையின்றி ஒப்பிடவும் இதை ஏவலாம்.
பயானிக் கணையம் உடலில் பொருத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தச் செயற்கை உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவை சதா கண்காணித்து, அதன் அடிப்படையில் இன்சுலின் சுரப்பைக் கூட்டும் அல்லது குறைக்கும். பயானிக் சிறுநீரகம் இது போன்றே இயற்கைச் சிறுநீரகத்துக்கு மாற்றாகலாம்.
பயானிக்ஸ் நடை
பயானிக் கையும் உண்டு. செயற்கைக் கரத்தில் மின்முனைகள் பதித்தது இது. இந்த மின்முனைகள் மூளையோடு பிணைக்கப்படும். கையை உயர்த்த வேண்டும் என்று தோன்றும்போது, அதற்கான நரம்பு அதிர்வுகளை மின்முனைகள் பெற்றுக் கையை இயக்கும். பயானிக் கால் நடக்க உதவுவதும் இது போன்ற ஒரு உயிர் மின்னணு அமைப்பே. காலில் பதித்த உணரிகள் எவ்விதமான தரையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து மூளைக்கு அறிவிக்க, நடை சீராகும். இயற்கைக் கைகால் போல் பயானிக் கைகால்கள் இயல்பாகவும் நுட்பமாகவும் செயல்பட தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. குறைபட்ட அங்கத்தை மாற்றி வைக்க மட்டும் உடல் உறுப்பு அடிப்படையிலான பயானிக்ஸ் பயனாகும் என்றில்லை.
பயானிக் மூக்கு இந்த இனம். சகலவிதமான வாடைகளும் பல்லிழை இயற்பியல் (பாலிமர் ஃபிஸிக்ஸ்) அடிப்படையில் கணினியில் பதிந்து பயானிக் மூக்கோடு இணைக்கப்படும். காற்றில் மாசு, வாயு கசிவதால் எழும் நச்சுத் தன்மை போன்றவற்றை உடனடியாக இந்த மூக்கு கண்டுணர்ந்து எச்சரிப்பதால், நச்சு வாயுக் கசிவு போன்ற உயிர்க்கொல்லி விபத்துகள் நிகழாமல் தடுக்கலாம்.
உடல் பாகங்களை இயக்கக் கட்டளையிட, மனித மூளை, முதுகுத் தண்டின் ஒத்துழைப்பைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. சில விபத்துகளால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. அப்போது மூளை கட்டளையிட முடியாமல் போய், அசைவு நின்றுவிடும். பேச்சும் வராது. முதுகு இப்படி பாதிக்கப்பட்டாலும், மகா மோசமான விபத்துகள் தவிர, மற்றவற்றில் நாக்கு சேதமின்றித் தப்பிவிடலாம். நேரடியாக மூளையோடு நரம்பு வழியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரே மனித உறுப்பு நாக்கு. உடம்பே மரத்த நிலையிலும், நாக்கு அசையும்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை யானவரும் நடமாட தொழில்நுட்பம் துணைபுரிகிறது. நோயாளி நாக்கில் ஒரு சிலிக்கன் சில்லு பதித்து, அவர் அமர ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்படும். நாக்கை மடித்தாலோ அல்லது இடம் வலமாக அசைத் தாலோ மட்டும் போதும். அசைவை நாக்கில் பதித்த சில்லு என்ன என்று பொருள் உணர்ந்து, அதை சக்கர நாற்காலியில் பொருத்திய சென்சாருக்குக் கட்டளையாக அனுப்பும். கட்டளைப்படி நாற்காலி நகரும்.
எல்லாம் சரி, பயானிக் மூளை? ரொம்ப கஷ்டம். தற்காலிகமான நினைவுகளைப் போட்டு வைத்துக் கொள்ளும் மூளையின் பாகத்தை சில்லில் வடித்திருப்ப தாகத் தெரிகிறது. ஒருவேளை, நூறு வருடம் சென்றபின் நம் சந்ததியினர் அவர்களுடைய பரம்பரை மூளையைத் தூர எறிந்துவிட்டு ஐன்ஸ்டைன் மூளையைப் பொருத்திக் கொள்ளலாம்.
- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: eramursukan@gmail.com

தியாகசீலர் கக்கன்

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.
கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.
கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.
ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.
இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:
ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.
குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?
ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.
குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.
அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்
என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.
ஆலயப் பிரவேசத்தில் கக்கன்
1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.
தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக
அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.
1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.
வளர்ப்பால் மகனானவர்
அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.
அரசு மருத்துவமனையில் அனுமதி
1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
எம்.ஜி.ஆர் நலம் விசாரிப்பு
ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவரைப் பார்த்து எம்.ஜி.ஆர்.கண்கலங்கிவிட்டார். காமராஜர் ஆட்சியில் போலீஸ் மந்திரியாக பணியாற்றியவர்.
உடனே எம்.ஜி.ஆர். 'உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?' எனக் கேட்க, 'உங்கள் அன்பு இருந்தால் போதும் நீங்கள் வந்ததே சந்தோஷம்' என்று கூறினார் கக்கன்.
எப்படி மனம் வந்தது?
'விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?' எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். 'வேண்டாம்' என மறுத்துவிட்டார் கக்கன்.
ஆனாலும் எம்ஜிஆர் மனம் பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ',இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?' என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நூல் பெயர்: தியாகசீலர் கக்கன்
நூல் ஆசிரியர்: இளசை சுந்தரம்
பக்.240, விலை: ரூ.100
நூல் வெளியீடு: மதுரா வெளியீடு,
மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்,
25-3, காந்தி இர்வின் சாலை,
எழும்பூர், சென்னை 600 008,