வியாழன், 8 ஜனவரி, 2015

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனியில் விவசாயம் அழிந்திடும்


நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன், மலைப்பகுதி விவசாயமும் அழிந்துவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டை வஞ்சிப்பதிலேயே குறியாக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அரசு இன்னொரு அழிவுத் திட்டத்திற்கு நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியில் பொட்டிப்புரம் கிராமத்தில், இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐ.என்.ஏ.) ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கின்றது. 2010 மே மாதம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், இதற்கான கருத்துரு வெளியிடப்பட்டபோதே அதை முதன் முதலில் வன்மையாகக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டேன். மீண்டும் 2013 இல் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுத்தபோதும், கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தால் இயற்கை சுற்றுச் சூழல் நாசமாகி, அந்த மலைப்பகுதிகளே அழிந்துவிடும் என்பதால், தேனி மாவட்ட மக்களும், விவசாயிகளும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். எனவே, மத்திய அரசு அப்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் பின்வாங்கியது.
முதலில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இமயமலை தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்பதால் கைவிடப்பட்டது. பிறகு அஸ்ஸாமிலும், கேரளாவிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, வனவிலங்கு சரணாலயம் இருப்பதாலும், எதிர்ப்புகள் வந்ததாலும் முயற்சி கைவிடப்பட்டது.
இப்போது, தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் மலைத்தொடரான 'ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை' என்று மக்கள் அழைக்கும் பகுதியை இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் தேர்வு செய்து இருக்கின்றது.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து 1.5. கிலோ மீட்டர் ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட ஒரு சுரங்கம் அமைக்கப்படும். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம் கொண்ட இன்னொரு குகைச் சுரங்கமும் அமைக்கப்படுகிறது. சுமார் 2.5. லட்சம் கன சதுர மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டுவதற்காக, மலையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, அந்தப் பகுதி முழுவதுமே பூமி அதிர்ச்சி ஏற்படுவதைப்போல குலுங்கும். மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும், ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும், கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படும். இதனால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன், மலைப்பகுதி விவசாயமும் அழிந்துவிடும்.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொழிற்சாலையோ, வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனமோ அல்ல. இது முழுக்க முழுக்க ஆராய்ச்சிப் பணி மட்டுமே!
இத்தாலி நாட்டில் கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ரசாயனக் கசிவு ஏற்பட்டதன் விளைவாக போராட்டம் வெடித்தது. மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டதால் இத்தாலி அரசு, நியூட்ரினோ ஆய்வு மையத்தை 2003 இல் மூடியது.
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் இயற்கையை அழித்து மக்களை வெளியேற்ற நடக்கும் சதித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.

KNOW ABOUT ISREAL

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பிடித்துவிட வேண்டும் என்று பாலஸ்தீனம் நியாயமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு ‘நாடு’ என்கிற அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றத்தில் சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்திருக்கின்றன.
வெறும் ‘பார்வையாளர்’ என்ற அந்தஸ்திலிருந்து, ‘உறுப்பினர் அல்லாத பார்வையாளர்’ என்ற அந்தஸ்தை வழங்கக் கோரி ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் 2012-ல் 138 நாடுகளால் கொண்டு
வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்தன என்பதும் இங்கே நினைவுகூரப்பட வேண்டும். “மேற்குக் கரைப்பகுதி யிலிருந்து 2017-க்குள் இஸ்ரேலியத் துருப்புகளை வாபஸ் பெற வேண்டும், கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனர்களுக்கான தலை நகரத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று ஜோர்டான் கொண்டுவந்த அந்தத் தீர்மானம் ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் தோற் கடிக்கப்பட்டது. 1967-ல் நடந்த 6 நாள் போரின்போது இஸ்ரேல் கைப்பற்றிய காஸா நிலப் பரப்பிலிருந்தும் வெளியேற வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோரியது.
இஸ்ரேலுடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் முட்டுக்கட்டை நிலைமையே நீடிப்பதால், நியாயமான தீர்வு ஏதாவது ஏற்படாதா என்ற நம்பிக்கையில் பாலஸ்தீன ஆணையத் தலைவர் முகம்மது அப்பாஸ் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கவரும் என்றும் அவற்றின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் என்றும் அவர் நம்பினார்.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீனத்தின் தீர்மானம் டிசம்பர் மாதம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு உட்பட்ட நாடாக பாலஸ்தீனத்தை இடம்பெறச் செய்யும் முயற்சியில் அடுத்து உடனடியாக ஈடுபட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொள்ளும்படி பாலஸ்தீன ஆணையத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
இந்த அமைப்பில் சேர்ந்தால், சில இஸ்ரேலியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளிகளாக, ‘தி ஹேக்’ நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று பாலஸ்தீனத் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை இஸ்ரேல் மீதான பாலஸ்தீன ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தலைப் பட்டால் ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகளும் அதன் விசாரணை வரம்புக்குள் வரும் என்பது நிச்சயம். ஆனால், எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரிக்கையாக இருக்கின்றன. எனவேதான், பிரச்சினை தீரத் தங்களிடம் மட்டும்தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. பாலஸ்தீனத்தின் இந்த முயற்சிக்குப் பதிலடியாக மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பாலஸ்தீனப் பகுதி மீது விதிக்கப்போவதாகவும் பாலஸ்தீனத் தலைவர்களின் பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு பயங்கரவாதச் செயல்பாடுகளைக்கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், இஸ்ரேலின் செயல்பாடுகளை என்னவென்று சொல்வது?
உலகின் இன்னொரு பெரிய அண்ணனாக இஸ்ரேல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் உண்மை.

திங்கள், 5 ஜனவரி, 2015

NEW Land Acquisition Law in India

தொழிற்பேட்டைகள் அமைக்க, கிராமப்புற அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்த, ராணுவத் தேவைகளுக்கு, வீட்டு வசதித் திட்டங்களுக்கு, அரசும் தனியார் துறையும் இணைந்து மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று அரசுக்குத் தேவைப்படும் நிலங்களை உரிய இழப்பீடு தந்து கையகப்படுத்த வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியிருக்கிறது.
அரசின் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், நிலங்களை இழப்போருக்கு உரிய நஷ்டஈடு தரப்பட வேண்டும், தேவைப்படும் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவோரில் 70% பேர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று முன்னரே கொண்டுவரப்பட்ட சட்டத்தில்தான் இப்போது அவசரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன்படி, நிலங்களை வைத்திருப்போரின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. இந்த நிலத்தை அரசு வளர்ச்சித் திட்டங் களுக்கு எடுத்துக்கொள்வதால், சமூகத்துக்கு அதனால் ஏற்படக்கூடிய பிற பாதிப்புகளைக் கணக்கில்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. இவ்விரண்டும்தான் நெருடலை ஏற்படுத்துகின்றன.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் தேவைப் படும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பலவந்தமாக வாங்கித் தருவதற்குத்தான் இந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்களைக் களையவும், நீண்ட தாமதத்தைத் தவிர்க்கவும் இதை மேற்கொண்டிருப்பதாக அரசுத் தரப்பில் விளக்கம் தரப்படுவது, அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. சில விதிவிலக்குகளின் அடிப்படையில் மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஒன்றே போதும், பெருநிறுவனங்களும் அரசும் தங்களுக்கான விதிவிலக்கு களை இஷ்டம்போல் உருவாக்கிக்கொள்ள. எந்தத் திட்டத்துக்கு, எந்த நிலம் தேவை என்பதை இனி அதிகார வர்க்கமே முடிவெடுத்துச் செயல் படுத்திவிட முடியும். சாதாரண மக்களை மேலும் சக்தியற்றவர்களாக இது மாற்றிவிடக் கூடும்.
கிராமப்புறங்களில் நிலங்களைக் கையகப்படுத்தினால் அதன் மதிப்பைப் போல நான்கு மடங்கும், நகர்ப்புறமானால், சந்தை மதிப்பைப் போல இரண்டு மடங்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய அம்சம் ஓரளவுக்கு இழப்பீட்டை உத்தரவாதம் செய்யக்கூடும். தொழில் வளர்ச்சியும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் அவசியம் என்பதை அனைவருமே ஏற்கிறார்கள். அதற்காக எதைத் தியாகம் செய்வது, யார் தியாகம் செய்வது என்பதில்தான் பிரச்சினையே. கிராமப்புற மக்கள், வனவாசிகள், பழங்குடிகள், ஆதிவாசிகள் ஆகியோருடைய வாழ்க்கை நலனையும் கவனிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் சொந்தமாக நிலம் ஏதும் இல்லாதவர்கள். எனவே, நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அதைச் சார்ந்த நிலமற்ற தொழிலாளர்களும் வேரற்ற மரங்களைப் போல வாழ்வாதாரத்தை இழந்துவிடுவதைப் பார்த்துவருகிறோம். வனப் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுப்பதாக இருந்தாலும், தொழிற்சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் நேரடிப் பாதிப்பு அவர்களுக்குத்தான்.
இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வரும் போதாவது, விரிவாக விவாதித்து முடிவு காண்பதே நன்மையைத் தரும். ஏழை விவசாயிகளின் நிலங்கள் மீதும் அவர்கள் வாழ்க்கையின் மீதும்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சிவப்புக் கம்பளத்தை அரசு விரிக்க வேண்டுமா என்ற கேள்வியைப் புறக்கணித்துவிடலாகாது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

நிதி ஆயோக் & தேசிய சுகாதாரக் கொள்கை

இந்தியாவில் திட்டக் குழுவின் யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. மாற்றாக, ‘நிதி ஆயோக்’என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த புதிய தீர்மானத்தை இயற்றியிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவை வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கி மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் என்ற பொருளில் ‘நிதி’ என்ற சொல் இணைக்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைப்புக்குப் பிரதமர் தலைவராக இருப்பார். இதற்கொரு துணைத் தலைவரைப் பிரதமரே தேர்ந்தெடுப்பார். அவர் முழு நேரப் பொறுப்பாக இதன் செயல்பாடுகளைக் கவனிப்பார். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இதில் முழு நேர உறுப்பினர்களாகச் செயல் படுவார்கள். இருவர் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். திட்டக் குழுவில் உறுப்பினர்-செயலர் என்ற பதவியில் ஒருவர் இருந்தார். புதிய அமைப்பில் ‘தலைமை நிர்வாக அதிகாரி’ அந்த இடத்தில் இருப்பார். மத்திய அமைச்சர்கள் 4 பேர் இதில் பதவி வழி உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். இந்த அமைப்புக்குப் பெரியதொரு நிர்வாகக் குழுவும் ஏற்படுத்தப்படும். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களின் துணை நிலை ஆளுநர்களும் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அரசின் அறிவிப்பு, “இந்த அமைப்பு, கொள்கைகளை வகுக்கும் உயர் சிந்தனை அமைப்பாகச் செயல்படும். தேசிய வளர்ச்சி மன்றத்துக்குப் பதிலாக, இந்த அமைப்பு தேசியப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண உதவும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டமைப்புத் தத்துவத்தை உயர்த்துவதே ‘நிதி ஆயோக்’கின் நோக்கம்” என்று சொல்கிறது.
கொள்கைகளை அமல்படுத்த எந்த வகையிலான தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது, நிதி ஆதாரத்தை எப்படிப் பெறுவது, எந்த அமைப்புகள் மூலம் செயல்படுத்துவது என்பதையெல்லாம் இந்த அமைப்பு முடிவெடுக்கும். திட்டமிடல் தனியாகவும் அதை அமல்படுத் தும் உத்திகள் தனியாகவும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அரசின் நோக்கம் இதில் உள்ளடங்கியிருக்கிறது. வகுக்கப்படும் திட்டங்களை விரைவாகவும் செறிவாகவும் நிறைவேற்ற இது உதவும் என்றும் நல்ல நிர்வாக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். பொருந்திருந்து பார்ப்போம்.
எந்த ஒரு அமைப்பும் காலப்போக்கில், கொஞ்சம் கலகலத்துப் போவது இயல்பானது. அதற்காக ஒரு அமைப்பை முற்றிலுமாகக் கலைத்துவிடலாமா என்று கேட்டால், அப்படிக் கலைப்பது குழப்பத்தி லும் குளறுபடியிலும்தான் போய் முடியும் என்கின்றன வரலாற்று அனுபவங்கள். மத்திய திட்டக் குழுவின் பணிகள் முழுத் திருப்தி அளிக்கக்கூடியவை இல்லை என்றாலும், நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அதன் பங்களிப்பை நாம் என்றைக்கும் மறக்க முடியாது. மேலும், இந்நாட்டில் வறுமை ஒழிப்புப் பணிகளிலும் அது ஆற்றிய பணியைப் புறந்தள்ளிவிட முடியாது. புதிய அமைப்பு எப்படிச் செயல்படும் என்று போகப்போகத்தான் தெரியும். இப்போதே இதை விமர்சிப்பதும் வரவேற்பதும்கூட ஒருவகையில் பொருத்தம் இல்லாமல்தான் இருக்கும்.
மாறிவரும் அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப நம்முடைய திட்டமிடலிலும் மாற்றம் வேண்டும். அப்படியான மாற்றங்கள் ஆக்கபூர்வ மானதாகவும் துடிப்பான செயல்பாட்டுக்கு வழிவகுப்பதாகவும் இருக்க வேண்டும்.
மோடி அரசு தொடர்ந்து மாற்றங்களைப் பற்றியும் துடிப்பான செயல்பாட்டைப் பற்றியும் பேசுவது நன்றாக இருக்கிறது. ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்குப் பதிலாக, அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்திலேயே போய்ச் சேர்வதுதான் கவலையைத் தருகிறது!
************மருத்துவ வசதிகளை இந்தியக் குடிமக்கள் பெறுவதை அடிப்படை உரிமையாக்க, புதிய தேசிய சுகாதாரக் கொள்கை வகுக்கப்படுகிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் தயாரித்து பொதுப் பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது.
மாநில அரசுகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அமைப்புகள், மருத்துவர்கள், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தக் கொள்கையை அலசி ஆராய்ந்து, அதில் சேர்க்க வேண்டிய கருத்துகளையும் விலக்க வேண்டியவற்றையும் யோசனையாகப் பரிந்துரைக்கலாம். வரும் பிப்ரவரி 28 வரையில் இதற்குக் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவு வாசகத்தின்படி, மருத்துவ வசதி பெறுவது இந்தியர் யாவருக்கும் இனி சட்டபூர்வமான உரிமையாகும். கல்வி பெறுவதுபோல, மருத்துவ வசதியும் அடிப்படை உரிமையாகும்.
ஒரு ஜனநாயக அரசு ஆளும் நாட்டில், கல்வியும் மருத்துவமும்கூட இப்போதுதான் அடிப்படை உரிமையாகிறது என்பதற்காக வேதனைப்படுவதா அல்லது இப்போதாவது நடக்கிறதே என்று ஆறுதலடைவதா என்று தெரியவில்லை.
இவ்வாறு சுகாதார வசதிகளை அடிப்படை உரிமையாக்குவதைத் தொழில்வள நாடுகள் என்றோ செய்துமுடித்துவிட்டன. பிரேசில், தாய்லாந்து போன்ற வளரும் நாடுகள்கூட இதற்கான சட்டங்களை இயற்றிவிட்டன. நாம் பின்தங்கியிருக்கிறோம். 13 ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசு தேசிய சுகாதாரக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்த பிறகு, இப்போது மோடி தலைமையிலான புதிய அரசு இந்த யோசனையை வெளியிட்டிருக்கிறது. சுகாதாரத்தை அளிப்பதில் மட்டுமல்ல, அதைப் பற்றிய சிந்தனையிலும் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும், பேறு காலங்களில் கர்ப்பவதிகளின் இறப்பு தடுக்கப்பட வேண்டும், பிறந்த சிசுக்கள் ஊட்டச்சத்துக் குறைவாலோ, மருத்துவக் கவனிப்பின்றியோ இறப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கங்களை எல்லாம் இந்தக் கொள்கையால் சாத்தியப்படுத்த முடியும். வசதி படைத்தவர்களுக்கும் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கும் மட்டும்தான் நவீன சிகிச்சைகள் என்ற நிலையை மாற்ற முடியும். ஆனால், இவையெல்லாம் நடக்க வெறுமனே ஏட்டளவோடு நிற்காமல், அதற்கேற்றக் கட்டமைப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) குறைந்தபட்சம் 2.5 சதவீதமாவது தேசிய சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று தேசியக் கொள்கை கருதுகிறது. இது நபர்வாரியாக சுமார் ரூ.3,800 ஆக இருக்கும். ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் சுகாதார வசதிகளும் செய்துதர ஜி.டி.பி-யில் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது ஒதுக்கப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த தலைமை மருத்துவமனை அமைக்கப்படுவது அவசியம். மாவட்டந்தோறும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி, மருத்துவக் கருவிகளைக் கையாள்வோருக்கான தொழில் பயிற்சி மையம் போன்றவற்றுக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும். அரசுத் துறையில் மருந்து தயாரிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சித் துறையில் பெருமளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மனிதர்களுக்கான இந்தச் சட்டபூர்வ உரிமை கால்நடைகளுக்கும் பறவையினங்களுக்கும்கூட விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையான அக்கறையும் முனைப்பும் இருந்தால் அரசால் இது எல்லாமும் சாத்தியம்!

Rich and Poor

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக்கொண்டிருக்கும் அதே சமயம், ஏழைகள் நிலையில் மாற்றமில்லை
வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு வெகுவாக அதிகரித்துவருவது 2014-ல்தான் உரிய கவனத்தைப் பெற்றது. தாமஸ் பிக்கட்டி எழுதிய ‘இருபத்து ஓராவது நூற்றாண்டில் மூலதனம்’ என்ற நூல் அந்த அதிசயத்தை நிகழ்த்தியதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இந்த நூல் கூறும் உண்மைகளையும் சந்தேகப் பிராணிகள் வழக்கம்போல நம்ப மறுத்தாலும், வருமானமும் செல்வமும் ஒரு சிலருடைய கைகளில்தான் போய்ச் சேருகின்றன என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை இப்போதைக்கு மாறும் என்ற அறிகுறியும் ஏற்படவில்லை.
வருமானமும் செல்வமும் ஒரு சிலர் கைகளுக்கே மீண்டும் போய்ச் சேருவது என்பது, நாடுகளுக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், பிக்கட்டியின் அலசல்களை ஆராய்ந்தால், நாம் வாழும் உலகு ஒரே மாதிரியானது அல்ல என்று புரிகிறது. அதில் நல்லது, மோசமானது, சகிக்க முடியாதது என்று மூன்று வகைகள் இருக்கின்றன.
சீனா, இந்தியாவில்…
நியூயார்க் பட்டதாரிகள் மையத்தைச் சேர்ந்த சிட்டி யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பிராங்கோ மிலனோவிக் தயாரித்துள்ள உலக வருமான வரைபடத்தை ஆய்வு செய்துபாருங்கள். ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது முதல் - உலகின் வருமானம் உயர் பணக்காரர்களிடமே தொடர்ந்து சேர்ந்துவருகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகிக்கொண்டு வருகின்றனர். அதே சமயம், சீனாவிலும் இந்தியாவிலும் நடுத்தர வர்க்கம் வருமான உயர்வால் பலனடைந்துவருகிறது.
வளரும் நாடுகளில் வருமானம் உயர்வதால் ஏராளமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயிருந்து மீண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது.
துயரமான செய்தி
உலக வருமானம் உயருகிறது, அது பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே சேர்கிறது என்பதுடன் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடுத்தர வர்க்கமும் பயனடைந்துவருகிறது என்பதுடன் இன்னொரு துயரச் செய்தியும் சேர்ந்தே வருகிறது. அதுதான், இவ்விரு உதாரணங்களுக்கு இடையே வாழும் ‘பிற மக்களுக்கு’வருமான உயர்வு என்பது மிகமிக மந்தமாகத்தான் இருந்துவருகிறது. யார் இவர்கள்? வளர்ந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தினர்தான்.
மிலனோவிக்கின் புத்தகம் 2008 வரையிலான வருமான உயர்வை மட்டும்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றாலும், அதற்குப் பிறகும் வளர்ந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தவரின் ஊதியம் பெரிதாக உயர்ந்துவிடவில்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, முடங்கிவிட்ட ஊதியம், அரசின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இவர்களுடைய நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
வளரும் நாடுகளின் தொழிலாளர்களுடைய துயரம் என்பது அவர்களைவிட அதிக ஊதியம் பெறுவோருக்கும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கும் கிடைக்கும் சில சலுகைகள், உயர்வுகளைக்கூடப் பெற முடியாத இக்கட்டான சூழலாகும். வளரும் நாடுகள் தங்களுடைய ஏற்றுமதிகளைப் பெருக்கிக்கொள்ளக் கடுமையாக முயற்சிப்பதால் வளர்ந்த நாடுகளில் ஊதியத்தை மேலும் உயர்த்த முடியவில்லை. கீழே இருக்கும் பலருடைய ஊதியங்களை வெட்டித்தான் மேலே இருக்கும் நிர்வாகிகளுக்கு ஊதியங்களை உயர்த்தித் தருகின்றனர். ஊதியங்களை மட்டும் வெட்டுவதில்லை, சலுகைகளைப் பறிக்கின்றனர், தொழிற்சங்கங்களை நசுக்குகின்றனர், கிடைக்கும் மூலதனத்தை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் வேறு முதலீடுகளுக்கும் லாபங்களுக்கும் திருப்பிவிடுகின்றனர்.
பணக்காரர்கள் ஆதிக்கம்
பெரும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும்தான் அரசின் கொள்கைகளுக்குத் திசைவழி காட்டுகின்றனர். தங்களுக்கு வேண்டிய சலுகைகளைத் தாராளமாகக் கேட்டுப் பெறுகின்றனர். மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்கின்றனர். அரசின் முக்கிய கடமை பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் என்று கூறி, அரசின் செலவைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் சமூக நலத் திட்டங்களுக்கும் மக்களுடைய நல்வாழ்வுக்கும் அரசுகளால் அதிகம் செலவழிக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதனாலும், வருவாயிலும் செல்வத்திலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறது.
​பெரும் பணக்காரர்களுக்கும் நவீன நடுத்தரவர்க்கத்துக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான உழைக்கும் மக்க
ளுக்காகப் பரிந்துபேச யார் இருக்கிறார்கள்? வழக்கமான இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களைத்தானே எதிர்பார்க்கிறீர் கள்? ஆனால், பிரான்ஸின் அதிபர் பிராங்குவா ஹொலாண் டேவும் பிரிட்டனின் எட் மிலிபேண்டும் குரல் கொடுக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவுக் குரல் மிகச் சன்னமாக ஒலிக்கிறது. அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக ஒபாமா செயல்பட்டிருந்தாலும் அவருடைய நிலைமையே இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.
தலைவர்களின் பிரச்சினை
உழைக்கும் வர்க்கத்துக்காகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், பணக்காரர்கள் முன்னிலைப்படுத்தும் விஷயங்களைக் கண்டிப்பதற்குத் தயங்குகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு அரசின் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதைக் கண்டித்தால், பொறுப்பற்றவர்கள் என்று தங்களைக் கூறிவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க, இதுவரை தலைமை தாங்கியிராத புதுமுகங்கள் முன்வரத் தொடங்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களுடைய கவலை, கோபம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முற்படும் அவர்களைப் பார்த்தால் சிறிது அச்சம்கூட ஏற்படுகிறது.
கிரேக்க நாட்டில் இம்மாத இறுதியில் இடதுசாரிகள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்கள் கடன் நிவாரணத்தையும் அரசின் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதையும்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். பிற நாடுகளில் தேசியவாதிகள், குடியேறிகளுக்கு எதிரானவர்கள்தான் தலைதூக்குவார்கள் என்று தெரிகிறது. பிரான்ஸில் தேசிய முன்னணியினர், பிரிட்டனில் இண்டிபெண்டன்ஸ் கட்சியினர் போலப் பலர் காத்திருக்கின்றனர். இவையெல்லாம் வரலாற்றுரீதியிலான சில சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன.
பொருளாதார மந்தநிலை இத்தனை ஆண்டுகள் நீடிப்பதும் அதன் பிறகு நிதி நெருக்கடி ஏற்படுவதும் உலக அளவில் இப்போதுதான் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. அப்போதும்கூட இப்போதிருப்பதைப்போலத்தான், அரசின் வருவாயும் செலவும் சமமாக இருக்க வேண்டும், செலாவணியின் மாற்று மதிப்பு சரியக் கூடாது என்றெல்லாம் அரசுகளுக்கு ஆலோசனைகள் கூறிக்கொண்டிருந்தனர். கடைசியில் என்ன ஆனது, மக்களுடைய கைகளுக்கு அதிகாரம் சென்றது; அப்படி நேரடியாகச் செல்வது நல்லதில்லை அல்லவா?
1930-களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சி இப்போது ஏற்பட்டுவிட்டது என்று நான் கூறவில்லை. அரசியல் தலைவர்களும் மக்களுடைய எண்ணங்களை மதிக்கிறவர்களும் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது நாம் ஏற்படுத்தியிருக்கும் உலகப் பொருளாதார முறைமை எல்லோருக்கும் ஏற்றதாக இல்லை. பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக இருக்கிறது, வளரும் சில நாடுகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்த எல்லைக்கு அப்பாலிருக்கும் மக்களுடைய எண்ணிக்கை மிகமிக அதிகம். அவர்களுடைய நிலைமையைக் கவனித்து நாம் பரிகார நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.
- ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

ஆஸ்துமா

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.
காரணங்கள்
ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.
நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.
இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.
ஏற்படும் விதம்
இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.
இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக அதிலும் மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.
தவிர்ப்பது எப்படி?
ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்….. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்கவிடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.
படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.
இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.
பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக் கூடாது. இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில உயிரினங்களின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு சொல்லக்கூடியவை.
பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.
உணவில் கவனம்!
ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது.
ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான உணவு வகைகள்:
பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.
வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.
புகை – பெரிய பகை!
ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்து மாவைத் தூண்டுகிற காரணி.
மூச்சுப்பயிற்சி முக்கியம்!
தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம். பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.
என்ன சிகிச்சை?
‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலைச் சென்றடையும். அதன்பின்புதான் அவை பலன் தரும். இதற்குச் சிறிது நேரம் ஆகலாம். ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழல் தசைகளைத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத் திணறல் உடனடியாக கட்டுப்படும்.
ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் எதற்கு ஒவ்வாமை என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மரபணுத் திருத்தம்

சிகை திருத்தம் செய்துகொள்வதுபோல மரபணுத் திருத்தம் செய்துகொள்ளலாமா?
யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது.
பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை
களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பிறக்கிற பிள்ளைகளைக்கூட நம்மால் அடை யாளம் காண முடிகிறது. இதற்குத் தனித்துவம் என்று பெயர்.
மரபணுக்களின் மாய உலகம்
பாரம்பரியத்துக்கும் தனித்துவத்துக்கும் காரணமாவது மரபணு (ஜீன்) எனப்படுகிற அடிப்படைக்கூறு. இயற்பி யலிலும் வேதியியலிலும் அணு என்பது அடிப்படைக் கூறாக இருப்பதைப் போல உயிரியலில் மரபணு ஓர் அடிப்படைக் கூறாக விளங்குகிறது. தலைமயிர் கருப்பா, சிவப்பா, பொன்னிறமா, சுருட்டையா, நீளமா, மூக்கு சப்பையா, கிளி மூக்கா என்பன போன்ற அம்சங்களை நிர்ணயிப்பது மரபணுதான்.
தலை வழுக்கை, பார்வைக் கோளாறுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனநோய் போன்ற பல வேண்டாத விஷயங்களும் பெற்றோரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பிள்ளைகளுக்கு மரபணுக்கள் மூலமாகவே வந்து சேருகின்றன.
மேற்சொன்ன ஒவ்வொரு குணாம்சத்துக்கும் ஒரு மரபணு பொறுப்பு வகிக்கிறது. இவ்வாறான 25 ஆயிரம் குணாம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அதாவது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணு வகைகள் உள்ளதாகப் பொருளாகிறது.
மரபணுக்கள் சரம்போல வரிசையாக அமைந்து ‘டியாக்சிரிபோ நியூக்ளிக் அமிலம்’ (டி.என்.ஏ.) என்ற அமைப்பாக அணிவகுத்திருக்கும். அந்த அமைப்பு ‘குரோமோசோம்’ எனப்படும் புரத உறைக்குள் பொதிந் திருக்கும். ஏராளமான குரோமோசோம்கள் செல் கரு என்ற உருண்டையாகத் திரண்டிருக்கும். அது செல் எனப்படும் நுண்ணறையில் குடியிருக்கும்.
செல்களில் எத்தனை ரகங்கள்
செல் என்பது ஓர் அதிசய, அற்புதப் படைப்பு. வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியைத் தவிர, மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் செல்தான் கட்டுமான அலகு. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரி வைரஸ்தான்.
உயிர் உள்ளது என நிர்ணயிப்பதற்கு செல்களின் இனப்பெருக்கம்தான் சாட்சி. ஜெராக்ஸ் நகலெடுப்பதைப் போல ஒரு செல் இரண்டாகி, இரண்டு நாலாகி கணத்துக்குக் கணம் இரட்டித்துக்கொண்டே போகிற நிகழ்வுதான் உயிர். அது நின்றுபோவது மரணம்.
செல் மிக நுண்ணியது. அதன் உறையாக பிளாஸ்மா சவ்வு அமைந்துள்ளது. செல்களில் உடல் செல்கள், பாலின செல்கள் என இரு வகையுண்டு. பாலின செல்கள் ஆண்களின் விந்தகத்திலும் பெண்களின் முட்டையகத்திலும் மட்டுமே காணப்படும். உடல் செல்களில் 46 குரோமோசோம்களும் பாலின செல்களில் 23 குரோமோசோம்களும் இருக்கும்.
ஆண் பாலின செல், விந்து மூலம் பெண்ணின் கருப்பையில் நுழைந்து பெண் பாலின முட்டையைச் சந்திக்கிறபோது விந்து செல்லின் கரு முட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கருவில் ஒட்டிக்கொள்ளும். தன் கருவுக்குள் 46 குரோமோசோம்கள் வந்துவிட்டன என்பதை உணர்ந்ததும் பெண் முட்டை வியப்பூட்டும் மாற்றங்களை அடைகிறது. அதனுள் பல பொருட்கள் உருவாகின்றன. அதன் பருமன் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது இரண்டிரண்டாகப் பிரிந்து, எல்லா வகையிலும் ஒத்த நகல் செல்களாகப் பெருகுகிறது.
சினையுற்ற கரு சிசுவாகப் பரிணமிக்கிறபோது உருவாகிற உடல், மயிர், எலும்புகள் போன்ற எல்லா உறுப்புகளுமே அந்த ஆதியாரம்ப முட்டையின் சந்ததி களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு செல்லும் தான் இருக்கும் இடத்துக்குத் தக்கபடி குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்கிறது. இதயத் திசுவிலுள்ள செல்கள் சுருங்கியும் விரிந்தும் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றன. எலும்பில் உள்ள செல்கள் அசைவின்றிப் பொருந்தியிருக்கின்றன. தசைகளில் உள்ள செல்கள் மூளையின் ஆணைகளுக்கு இணங்கி அசைவுகளை உண்டாக்குகின்றன. மூளையில் உள்ள செல்கள் மிகப்பெரும் சிக்கலமைப்பு கொண்ட மின் வேதியியல் சுற்றுக்களடங்கிய கணினியாகச் செயலாற்றுகின்றன.
கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்பு
களிலுள்ள செல்கள் திறன் மிக்க வேதித் தொழிலகங் களாகச் செயல்பட்டு, விசேஷ வகை நொதிகளையும் இன்சுலின் போன்ற வேதிகளையும் உற்பத்தி செய்கின்றன.
குரோமோசோம்கள் பல தலைமுறைகளை இணைக் கிற பாலங்கள். அவற்றிலுள்ள டி.என்.ஏ-க்கள் பல நூற்றாண்டுகள் வரை மாறாமல் இருக்கின்றன. உதாரணமாக, மனித குலத்தில் இதுவரை சுமார் 2,500 தலைமுறைகள் கழிந்திருக்கும். எனினும், சில மேலோட்டமான மாற்றங்களைத் தவிர, மனித உடலின் அமைப்பில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. குறிப்பாக, மனித மூளையின் பரிமாணம் கூடவோ குறையவோ இல்லை.
டி.என்.ஏ. சங்கிலி
டி.என்.ஏ. என்பது ஒரு சங்கிலி. நியூக்ளியோடைடு என்னும் மூலக்கூறு அதன் கண்ணிகள். அது பாஸ்பேட், ரிபோஸ் சர்க்கரை, நைட்ரஜன் காரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. டி.என்.ஏ. ஒரு ஏணியை முறுக்கியது போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்து வாட்சன், கிரிக் என்ற இரண்டு விஞ்ஞானிகள் நோபல் பரிசைப் பெற்றுவிட்டார்கள். அந்த ஏணியின் கால்களாக பாஸ்பேட் சர்க்கரை இழைகளும் படிகளாக நைட்ரஜன் காரங்களும் அமைந் துள்ளன.
பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் வெள்ளை நிறமுள்ளவர்களாக இருக்கிறபோது, குழந்தை கருப்பாகப் பிறந்திருக்குமானால், அதற்கு டி.என்.ஏ-வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏதாவது காரணமாயிருக்கலாம். மயில், புலி போன்றவற்றில் வெள்ளை உடல் கொண்டவை தோன்றவும் இதுவே காரணம். மரபணு மாற்றத்தால் ஏற்படுவதுதான் புற்றுநோய். செல்லில் உள்ள குரோமோசோம்களின் அமைப்பு அல்லது எண்ணிக்கை செல் இரட்டிப்பின்போது மாறிவிடுவது, மரபணு மூலக்கூறில் வேறுபாடுகள் ஏற்படுவது போன்றவை மரபணு மாற்றங்களுக்கு உதாரணங்கள். டி.என்.ஏ-வில் ஒரே ஒரு நியூக்ளியோடைடு இடம் மாறி அமர்ந்தாலும் வெளிப்படையான மாற்றங்கள் தென்படும். அணுக்கதிர் வீச்சு, வெப்பம், வேதிகள் போன்ற காரணிகள் டி.என்.ஏ-வின் கட்டமைப்பை மாற்றி மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும்.
மரபணுக் கலப்பு
மரபணுவில் மாற்றங்களைச் செயற்கையாகவும் உண்டாக்கி கலப்பின உயிரினங்களை உருவாக்க முடியும். மாடுகள் முதல் நெல், கோதுமை வரை யான உயிரினங்களில் மரபணுக் கலப்புசெய்து சிறப்பான பண்புகளைக் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கத்தரி, பருத்தி போன்ற செடிகளில் கிருமிகளின் மரபணுக்களைப் புகுத்தி அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியுள்ளனர். மரபணுத் திருத்தங்களின் மூலம் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த முடிந்திருக்கிறது.
மனிதர்களின் 46 குரோமோசோம்களையும் சோதித்து ஒவ்வொரு குரோமோசோமிலுள்ள குறைகளால் இன்னன்ன உடல் நலக்கோளாறுகள் வர முடியுமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த சிசுவின் குரோமோசோம்களைப் பரிசோதித்து எதிர்காலத்தில் அதற்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஊகித்துக்கொள்வதன் மூலம், ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலப் பாதிப்புகளைத் தடுக்க இயலும்.
மரபணுக்களை இஷ்டப்படி மாற்றியமைத்து மன்மதனைப் போன்ற அழகுள்ள ஆண்களையும் ரதியைப் போன்ற பெண்களையும் கொண்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிவிடலாம் என்று அறிவியல் புனைகதை ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், மரபணுக்களைத் திருத்தியமைப்பதன் மூலமாகச் சமூகத்தில் பெரிதாக எதையும் மாற்றிவிட முடியாது. இதுவரை மனித உடல் செல்களில் மட்டுமே மரபணுத் திருத்தம் செய்ய முடிந்திருக்கிறது. அதன் மூலம் தனிநபர்களின் சில குறைகளை நிவர்த்தி செய்தாலும் பாலின செல்களிலுள்ள மரபணுக்களைச் சரிப்படுத்தாதவரை அவர்களுடைய சந்ததிகளுக்கு மரபுப்பிழை மூலமான கோளாறுகள் வந்துகொண்டேதான் இருக்கும். பாலின செல்களில் உள்ள கோளாறுகளைச் சரிப்படுத்தாமல், உடல் செல்களை மட்டும் சரி செய்தால் ஓர் ஆபத்து வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, ஒருவரது வலிப்பு நோயை மரபணுத் திருத்தம் செய்து குணப்படுத்தி விட்டால், அவர் ஊக்கமும் வலுவும் பெற்றுத் திருமணம் செய்துகொண்டு அதே மரபணுக் கோளாறுள்ள பிள்ளைகளைப் பெற்றுத்தள்ளி விடலாம். அவர்களில் பலருக்கு வலிப்பு நோய் வரும்.
ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்ளும் முன் தமது மரபணுக்களைப் பரிசோதிப்பதன் மூலம் மரபுக் கோளாறுள்ள சந்ததிகளைப் பெறுவதைத் தவிர்க்க முடியும்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).