புதன், 29 ஏப்ரல், 2015

சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் பின்னால்

1929-ம் ஆண்டு ஏப்ரல் 29. இதே நாள். கோயம்புத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வீதிகள் தோறும் தண்ணீர்க் குழாய்களுக்கு மக்கள் பொட்டு வைத்து, பூக்களை சூட்டி இருந்தனர். பெரும்பாலோரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
அன்றுதான் முதல்முறையாக நகரத்துக்கு சிறுவாணி குடிநீர் வந்தது. கோயம்புத்தூரின் பெருமைகளில் ஒன்று சிறுவாணி நீர். ஆனால், அந்தப் பெருமைக்கு பின்னால் 40 ஆண்டுகால போராட்டம் இருப்பது இன்று பலரும் அறியாத விஷயம்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி. மெட்ராஸ் மாகாண பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் 1927-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், "இந்த மெட்ராஸ் மாகாணத்தின் தண்ணீரில் மிக மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இந்த மோசமான தண்ணீரால் மக்களுக்கு பொருள் இழப்பும், உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது.
மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் கோயம்புத்தூர் நகராட்சி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத் தப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
நொய்யல் நதி நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறை யிட்டார்கள். அன்று தொடங்கியது குடிநீருக்கான போராட்டம்.
1889-ம் ஆண்டில் சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்தி குளம் அருவி நீரை கொண்டு வரலாம் என்றார் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்கிற பத்திரிகையாளர். மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. ஏனென்றால் அவ்வளவு அடர்ந்த வனம் அது. பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பிவிட்டார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும்.
யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஏராளமாக இருந்தன. பல நாட்கள் பல இடையூறுகளைத் தாண்டி முத்தி குளம் அருவியை அடைந்தார் அவர்.
அங்கு ஏராளமான நீர் இருந்தது. ஆய்வு நடத்தி, ஊர் திரும்பியவர், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அந்த அருவி நீரை நொய்யலுக்கு திருப்பினால் கோயம்புத்தூரின் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், நிதி ஆதாரம் இல்லை என்று மறுத்தது அரசு. மக்களின் தொடர் போராட்டங்களால் 1892-ம் ஆண்டு ஒரு பொறியாளரை அரசு நியமித்தது. அவர் சிறுவாணி திட்டம் சாத்தியமில்லை என்று சொல்லி, நொய்யல் நீரை பயன்படுத்த திட்டம் தீட்டினார். நதியின் ஒரு பகுதியில் வெள்ளலூர் அணைக்கட்டில் ஓரளவு நீர் இருப்பதால், அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தந்தார்.
அதற்கும் நிதி இல்லை என்று அரசு கைவிரித்தது. நொய்யலை மையமாக வைத்தே பல திட்டங்கள் தீட்டப்பட்டு, கழிக்கப்பட்டன.
இதற்கிடையில் கோயம்புத் தூரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒரு சொம்பு தண்ணீரை சும்மா கொடுப்பதற்கே மக்கள் யோசித்தார்கள். பத்தாண்டுகள் ஓடிய நிலையில் சிறுவாணி திட்டம் மீண்டும் எடுக்கப்பட்டது. இதற்கு காரணம் அப்போது இந்தியா முழுவதும் மின் உற்பத்திக்கான ஆய்வுகள் நடந்து வந்தன. சிறுவாணியிலும் ஆய்வு செய்தார்கள். திட்டம் வெற்றி பெற்றால் மின் உற்பத்தி மூலம் திட்டச் செலவை ஈடுகட்டிவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தென்னிந்திய ரயில்வே நிறுவனம் (அப்போது அது தனியார் நிறுவனம்) சிறுவாணி நீர் மின் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. ஏனெனில் கோயம்புத்தூரில் தனது தொழிற் சாலை அமைக்கும் எண்ணம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. ஆனால் ஆய்வில் சிறுவாணியின் மழைப்பொழிவு குறித்து கேள்வி எழுந்தது. மீண்டும் திட்டம் கைவிடப்பட்டது.
1921-ம் ஆண்டு சி.எஸ். இரத்தினசபாபதி என்பவர் நக ராட்சித் தலைவரானார். அவர் ஏற்கெனவே சிறுவாணி ஆய்வு களில் பங்கு பெற்றவர். இந்த முறை அவரது இடைவிடாத முயற்சியால் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 1924-ம் ஆண்டு சிறுவாணி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் தொடங்கின.
சாலை, மின்சாரம், தொழில் நுட்பம் எதுவும் இல்லாத சூழலில் நகராட்சியின் நிதிப் பற்றாக் குறையால் அவ்வப்போது திட்டம் திணறியது. யானைகள், புலிகள், அட்டைக்கடி, மலேரியா என தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். கூடவே, திட்டத்துக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன.
மூன்று ஆண்டுகளில் மலை மேலிருந்து குகைப் பாதை மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிந்தன. அப்போதுதான் அந்த விபரீதம் ஏற்பட்டது. 1927-ம் ஆண்டு கடுமையான மழை. கூடவே பெரும் நிலச்சரிவு. கட்டுமானங்கள், கருவிகள் எல்லாம் மண் மூடிப்போயின. 40 ஆண்டு கால போராட்டம் வீணாகிப்போனதே என்ற மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இறங்கி வந்தாள் சிறுவாணி. இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள்!
- சி.ஆர். இளங்கோவன், - எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.

Information about Earthquake

பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்ந்து, நிலநடுக்கம் உண்டாகிறது!

நேபாளத்தில் கடந்த 25 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும்.
நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடிய அண்டார்க்டிகா கண்டமோ இன்னும் தொலைவில் இருப்பதை அறிய முடியும். ஆனால், சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் புறத்தில் இணைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் புறத்தில் இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகியவை இணைந்திருந்தன. இவை அனைத்தும் சேர்ந்து ஒரே கண்டமாக விளங்கின. விஞ்ஞானிகள் இதற்கு கோண்டுவானாலாந்து என்று பெயர் வைத்துள்ளனர்.
உயரும் இமயம்
கோண்டுவானாலாந்துக்கு வடக்கே லௌராசியா என்ற கண்டம் இருந்தது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா முதலியவை ஒன்றிணைந்து இவ்விதம் ஒரே கண்டமாக விளங்கின. அப்போது உலகில் மனித இனம் கிடையாது. சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானாலாந்து உடைய ஆரம்பித்தது. கண்டங்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தன. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. இதற்குள் லௌராசியாவும் உடைய ஆரம்பித்தது. இந்தியத் துணைக் கண்டமானது சுமார் 4 கோடி ஆண்டு களுக்கு முன்னர் ஐரோப்பா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய யுரேசியாவுடன் தென்பகுதியில் வந்து ஒட்டிக்கொண்டது. மோதியது என்றும் சொல்லலாம். இந்த மோதலின்போது விளிம்புகள் மேல் நோக்கிப் புடைத்துக்கொண்டன. இப்படியாக இமயமலை உண்டாயிற்று. இந்தியத் துணைக் கண்டம் தொடர்ந்து நெருக்குவதால் இமயமலை இன்னமும் உயர்ந்து வருகிறது.
கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அல்ல கண்டங்கள். அவை எப்படி இடம் மாறும் என்று கேட்கலாம். சிதறு காய் போடுவதுபோல ஒரு தேங்காயை ஓங்கித் தரையில் அடிக்கிறீர்கள். அது பல துண்டுகளாகச் சிதறும். இவ்விதம் சிதறிய சில்லுகள் அனைத்தையும் பொறுக்கி ஒன்றோடு ஒன்று பொருத்தி மறுபடியும் அதை முழுத் தேங்காயாக ஆக்குகிறீர்கள். இப்போது அந்தத் தேங்காய் பல சில்லுகளால் ஆனதாக இருக்கும். பூமியின் மேற்புறமானது இவ்விதம் பல சில்லுகளால் ஆனதே. மொத்தம் ஏழு எட்டுச் சில்லுகள் உள்ளன. சிறிய சில்லுகள் பல உள்ளன. பூமியின் மீதான இந்தச் சில்லுகள் மீதுதான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகள்தான் நகர்கின்றன. ஆங்கிலத்தில் இவை பிளேட்ஸ் எனப்படுகின்றன. சில்லுகள் இடம்பெயர்வதை பிளேட் டெக்டானிக்ஸ் என்கிறார்கள். பூமியின் உட்புறத்தில் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்கின்றன. பொதுவில் சில்லுகள் சந்திக்கும் இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்திய - ஆஸ்திரேலியச் சில்லு
இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா இந்து மாக்கடல் ஆகிய அனைத்தையும் சேர்த்து இந்திய - ஆஸ்திரேலிய சில்லு என்று குறிப்பிடுகின்றனர். இந்தியச் சில்லு பல கோடி ஆண்டுகளாக யுரேசிய சில்லுக்கு அடியில் அதாவது, நேபாளத்துக்கு அடியில் செருகிக்கொண்டு வடக்கே நகருகிறது. ஆகவேதான் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடி வரை இமயமலை அடிவாரம் நெடுக அவ்வப்போது நிலநிடுக்கங்கள் நிகழ்கின்றன. இந்தியச் சில்லு நெருக்குகிறது என்றால் வாரா வாரம், தினம் தினம் ஏன் நிலநடுக்கம் நிகழ்வதில்லை என்று கேட்கலாம். ரயில் வண்டியில் செல்லும்போது இரவு இரண்டு மணி வாக்கில் பார்த்தால் எதிர் பெஞ்சில் பச்சை சட்டை போட்டவர் தமக்கு அருகே அமர்ந்துள்ள மஞ்சள் சட்டைக்காரர் மீது மெல்லச் சாய்வார். தொடர்ந்து மேலும் மேலும் சாய்வார். ஒரு கட்டத்தில் ‘விலுக்’ என்று இருவருமே விழித்துக்கொள்வர். அதுபோல இந்தியத் துணைக் கண்டத்தின் நெருக்குதல் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போகும்போது ஒருகட்டத்தில் ‘விலுக்’ ஏற்பட்டுக் கடும் நிலநடுக்கம் நிகழும். ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று அளவிடப்பட்டுள்ளது. இந்த ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உண்டு. ரிக்டர் அளவில் 6 என்று சொல்லப்படுகிற நிலநடுக்கத்தைவிட, ரிக்டர் அளவில் 7 என்ற நிலநடுக்கமானது 30 மடங்கு கடுமையானது. ரிக்டர் அளவில் 8 என்பது அதைவிட 30 மடங்கு கடுமையானது.
தெரியாத ரகசியம்
ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படுமா என்று முன்கூட்டி அறிந்துகொள்ள இதுவரை வழி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனினும், பிராணிகள் முன்கூட்டி அறிந்து கொள்கின்றன. ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்றால் ஏராளமான தவளைகள், பாம்புகள் ஆகியவை பல மணி நேரத்துக்கு முன்பே வெளியேறிவிடுகின்றன. இதன் ரகசியத்தை நம்மால் அறிய முடியும் என்றால், ஏராளமான உயிர்களைக் காக்க இயலும். ஆனால் ஒன்று, நிலநடுக்கங்கள் மனிதர்களைச் சாகடிப்பதில்லை. கட்டிடங்கள்தான் மனித உயிர்களைப் பலி கொள்கின்றன என்று சொல்வதுண்டு. அது பெருமளவுக்கு உண்மை.
நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அடிப்படையில் இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்கள் உட்பட அசாம், பிஹார், இமாசலப் பிரதேசம் முதலியன ஐந்தாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, கடும் நிலநடுக்க வாய்ப்பு உள்ள இடங்கள் என்று பொருள். முதல் மண்டலம் என்பது நிலநடுக்க வாய்ப்பு அனேகமாக இல்லாதது. அடுத்து, இரண்டாவது மண்டலம். தமிழகம் முன்பு இரண்டாவது மண்டலத்தில் இருந்தது. ஆனால், இப்போது சென்னை மற்றும் கோவையை அடுத்த பகுதி ஆகியன மூன்றாவது மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஓரளவு நிலநடுக்க வாய்ப்பு உள்ளது என்பது இதன் பொருள். கட்டிடங்களைக் கட்டும் விஷயத்தில் எந்தெந்த மண்டலத்தில் எவ்விதமான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளன. ஆகவேதான், நிலநடுக்கம் ஏற்படாமலேயே அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுகின்ற நிலைமை உள்ளது.
எச்சரிக்கை விளக்குகள்!
இந்தியாவில் வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களில் இந்த வசதி உண்டு, அந்த வசதி உண்டு எனப் பிரமாதமாக வர்ணித்துக்கொள்கின்ற அதே நேரத்தில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டவை என்ற வாசகத்தைச் சேர்ப்பதே கிடையாது. ஏன்? உண்மையில், நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் 50 மாடிக் கட்டிடங்களையும்கூடக் கட்ட முடியும். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இப்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தைத் தாங்கி நிற்கின்ற வகையில் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சர்வ சாதாரணமாகக் கட்டிவருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் இவ்விதக் கட்டிடங்கள் முன்னும் பின்னுமாக லேசாக அசைகின்றன. ஆனால், கட்டிடத்தில் விரிசல் கிடையாது. தகர்ந்து விழுவதும் கிடையாது. உலகில் பெரும் ஜனநெருக்கடி மிக்க நாடுகளில் ஒன்றான இந்தியா, கட்டிடக் கட்டுமான விஷயத்தில் கண்டிப்புடனும் தொலைநோக்குடனும் புது விதிமுறைகளை வகுத்து அமல்படுத்துவது அவசியம். ஒருவகையில், இதுபோன்ற சம்பவங்கள் நம்க்கான எச்சரிக்கை விளக்குகள்!
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர். 
தொடர்புக்கு: nramadurai@gmail.com

று மற்றும் குறுந்தொழிலுக்கு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு

1967ம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பொருட்களை சிறு மற்றும் குறுந்தொழில் மூலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. காலப்போக்கில் அதில் இருந்த பொருட்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டன. கடைசியாக 20 பொருட்கள் மட்டுமே அந்த பட்டியலில் இருந்தன. அந்த 20 பொருட்களையும் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொருட்களில் ஊறுகாய், தீப்பெட்டி, பட்டாசு, ஊதுபத்தி, ஸ்டீல் மற்றும் அலுமினிய பாத்திரங்கள், ரொட்டி, நோட்டு புத்தகங்கள், கண்ணாடி வளையல் உள்ளிட்டவை உள்ளன. சிறுதொழிலுக்காக இந்த பொருட்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரிய தொழில் நிறுவனங்கள் அதை சட்டவிரோதமாக கொள்முதல் செய்து தங்கள் பிராண்ட் பெயரில் விற்பது நீண்ட காலமாகவே நடந்து வந்ததால் பட்டியலில் இருந்த எல்லா பொருட்களும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அதோடு, சிறுதொழிலுக்கான ஒதுக்கீடு என்பதே லைசன்ஸ் ராஜ்ஜியத்தின் எச்சங்கள், அவற்றை துடைத்தெறிந்துவிட்டோம் என்றும் சொல்லியுள்ளனர்.
அரசின் ஆணையை பெரிய நிறுவனங்கள் மீறுவதை தடுக்க முடியாததால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

எதிலிருந்து வருகிறது மண்வாசனை?

முதல் மழைத் துளி மண்ணில் பட்டதும், சட்டென்று புறப்பட்டு வந்து நமது நாசியைத் துளைக்கும் அந்த இனிமையான நறுமணம் எப்படி வருகிறது, எங்கேயிருந்து வருகிறது?
அதை ‘மண்வாசனை' என்று சொல்லிவிடுகிறோம். ஆனால், மண்ணிலிருந்தா வருகிறது அந்த வாசனை? இல்லை.
பாக்டீரிய வித்து
மண்வாசனைக்கு ஆங்கிலத்தில் petrichor என்று பெயர். மண் மீது மழைத் துளிகள் பட்டவுடன் வேதிவினை நடப்பதால் மண்வாசனை தோன்றுகிறது.
மண்ணில் வாழும் ஆக்டினோமைசீஸ் அல்லது ஸ்டிரெப்டோமைசீஸ் என்ற பாக்டீரியாக்கள், வெளியிடும் வேதிப்பொருட்களே இனிமை யான மண்வாசனை.
இந்தப் பாக்டீரியா வகைகள் உலகம் முழுவதும் மண்ணில் இழைகளாக வாழ்கின்றன. மண் காய்ந்து போகும்போது, இவை தங்கள் வித்துகளை வெளியிடுகின்றன. மழை வரும்போது மழைத்துளிகள் மண் மீது விழும் வேகத்தில் இந்த வித்துகள் காற்றை நோக்கி மேலே வீசப்படுகின்றன. அதில் வெளிப்படும் வேதிப்பொருள் டைமெதில் 9 டிகலால். நாம் சுவாசிக்காத வித்துகள் மீண்டும் ஈரமான மண்ணில் விழுந்து பாக்டீரிய இழைகளாக மாறிவிடுகின்றன.
ஓசோனும் காரணம்
அதேபோல மழை வருவதற்கு முன்பாகவும் ஒரு வாசனை வரும். அது ஓசோனின் வாசனை. இடி மின்னலுடன் மழை வரும்போது ஏற்படும் மின்சாரம் ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகளைப் பிளக்கும். அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. இது வளிமண்டலத்தில் உள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து ஓசோனை உருவாக்குகிறது.
ஒரு பகுதியை நோக்கி வரும் புயல் மேகங்கள் இந்த ஓசோனைச் சுமந்துவருகின்றன. அது நமது நாசியை அடைவதால் மழை வருவதை முன்கூட்டியே உணர முடிகிறது.
பண்டைக்காலத்தில் மழைதான் உலகுக்கு வளம் தரும் ஒரே விஷயமாக இருந்தது. அதனால், நமது மூதாதையர் களுக்கு மழை ரொம்ப பிடித்த விஷயமாக இருந்தது. அது மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு, நமக்கும் மண்வாசனை பிடித்தமான விஷயமாக இருக்கிறது.

Moore's Law

http://www.monolithic3d.com/uploads/6/0/5/5/6055488/gordon_moore_1965_article.pdf

நீங்கள் ஐபோன் அபிமானியோ, ஆண்ட்ராய்டு ஆர்வலரோ... அது அல்ல முக்கியம். ஸ்மார்ட்போன்களின் செயல்திறனிலும் ஆற்றலிலும் வளரும் வேகத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நேற்று பார்த்த போன் இன்று அவுட்டேடாகி நாளைய போன் இப்போதே கைகளில் தவழும் காலத்தில் இருக்கிறோம். ஸ்மார்ட்போன் உலகில் இன்னும்கூட அதிசயங்கள் நிகழ காத்திருக்கின்றன. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் பாஸ்ட் ஃபார்வேர்டாகி கொண்டிருக்கிறது.
உள்ளங்கை கம்ப்யூட்டர்களாக வியக்க வைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு மூலக்காரணம் சின்னஞ்சிறிய சிப்புகள்தான் என்பது பலரும் அறிந்ததது. ஆனால் சிப்புகள் இப்படி ஆற்றலில் பெருகிக்கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஒரு மூன்று பக்க கட்டுரை என்பது உங்களுக்கு தெரியுமா? அந்தக் கட்டுரைக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஒரு கருத்து தான் கம்ப்யூட்டர் உலகின் முதலாம் விதியாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், மூர் விதி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்தக் கோட்பாடுதான் சிப்புகளின் அசுர வளர்ச்சிக்கு பின்னே இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. சிப்களின் நாலு கால், எட்டு கால் பாய்ச்சலை மூர் விதி சரியாக கணித்துச் சொன்னதோடு இப்போது பொன்விழா காண்கிறது என்பது வியப்பிலும் வியப்பு.
மூர் விதி தொழில்நுட்ப தீர்க்கதரிசனமாக அமைந்ததுடன், கால வெள்ளத்தில் தாக்குப் பிடித்து தொடர்ந்து செல்லுபடியாகி கொண்டிருப்பதுதான் அதிசயம்.
அதென்ன மூர் விதி? என்று கேட்லாம். கார்டன் மூர் எனும் சிப் உலக முன்னோடி முன்வைத்த கருத்து இது. சிப் ஜாம்பவான் இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனரும் இவர்தான்.
கம்ப்யூட்டர் சிப்புகளில் பொருத்தக்கூடிய டிரான்சிஸ்டட்டர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் இருமடங்காகி கொண்டே இருக்கும் எனும் கணிப்பு தான் மூர் விதி என்று குறிப்பிடப்படுகிறது.
இதன் உட்பொருள் என்ன என்றால், சிப்களின் ஆற்றல் அல்லது வேகம் இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கும் என்பதுதான். அது மட்டும் அல்ல, சிப்களின் வேகம் இரட்டிப்பாகும் அதேநேரத்தில் அதை உருவாக்குவதற்கான செலவும் குறைந்துகொண்டே போகும் என்பது இதன் முக்கியமான உப கருத்து.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல கார்டன் மூர் இந்தக் கருத்து மூலம் சிப்கள் மேலும் மேலும் ஆற்றலில் வளர்ந்து கொண்டே இருக்கும், அதற்கான தயாரிப்பு செலவும் குறைந்து கொண்டே போகும் என்று கூறி கம்ப்யூட்டர் உலகிற்கு ஊக்கமளித்து வழிகாட்டினார்.
சிப்களும் மூரின் கருத்துக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொண்டு மூர்த்தியின் சுருங்கி ஆற்றலில் பெருகி கொண்டு ஸ்மார்ட்போனிலும் ஸ்மார்ட்வாட்சிலும், பிட்ன்ஸ் பட்டைகளிலும் விஸ்வரூப தரிசனம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
மூரின் கணிப்பில் ஒரு நம்ப முடியாத மாயம் இருக்கிறது. சிப்களின் வளர்ச்சி அவர் கணித்தபடியே முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இதனால் அவரது கணிப்பு நிருபணமாகி இருக்கிறது என்றால், இந்த வகை முன்னேற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கையை அளித்ததே மூரின் விதிதான். அந்த விதி தந்த தைரியத்தில்தான் சிப் நிறுவனங்கள் மேலும் மேலும் செயல்திறன் வாய்ந்த சிப்களை உருவாக்க முற்படுகின்றனர். சிப்களும் அவர்கள் சொல் பேச்சு கேட்டு இன்னும் எத்தனை லட்சம் டிரான்சிஸ்டர்களை வேண்டுமானால் கொடுங்கள் உள்ளே அடுக்கி கொள்கிறோம் என தங்களுக்குள் வைத்துக்கொள்கின்றன.
ஆக, சிப் உலகை இயக்குவதே மூர் விதி தான். இதனால்தான் கார்டன் மூரை கம்ப்யூட்டர் உலகில் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்.
ஆரம்ப கால கம்ப்யூட்டர் எப்படி இருந்தன தெரியுமா? என்று கேட்டு ஒரு பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்தன என்று விவரிக்கப்படும் மெயின்பிரேம் கால கம்ப்யூட்டரை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அதுகூட கற்கால சங்கதி விட்டு விடுங்கள். பத்து, பதினைந்தாண்டுகளுக்கு முந்தையை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை நினைத்துப் பாருங்கள். மெயின்பிரேமுடன் ஒப்பிட்டால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர்கள் என்று சொல்ல வேண்டும்.
இப்போது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை அருகில் கொண்டு வைத்தால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மிரண்டுவிடும். இந்தத் திறன் பெருக்கத்திற்கு மூலக்காரணம் சிப்களின் வளர்ச்சி தான். இது மட்டுமா, மெமரி கார்டு முதல் சென்சார் வரை சின்னஞ்சிறிய சிப்புக்குள் பேராற்றல் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆற்றலை தனது தீர்க்கதரிசனத்தால் கண்ட கார்டன் மூர் 1965-ம் ஆண்டில் எல்க்ட்ரானிக்ஸ் இதழில் எழுதிய கட்டுரையில் இதனை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அந்த இதழ் வெளியானது. இண்டெக்ரேட்டட் சர்க்யூட்டில் மேலும் அதிக பாகங்களை பொருத்துவது... என தலைப்பிலான அந்த கட்டுரையில் மூர் சிப்களுக்கான எதிர்கால பாதையை சுட்டிக்காட்டியிருந்தார். கம்ப்யூட்டர்களின் மூளையாக திகழும் சிப்களின் ஆண்டுதோறும் திறனில் இரட்டிப்பாகும் எனும் கணிப்பையும் வெளியிட்டு விரிவாக விளக்கியிருந்தார்.
இந்தக் கட்டுரை வெளியான காலத்தில் இந்த கணிப்பு சாத்தியம் என்று நம்ப பலரும் தயாராக இல்லை என்பதை மீறி இன்று வரை மூர் விதி செல்லுபடியாகி கொண்டிருக்கிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், மூர் விதி என்று குறிப்பிடப்பட்டாலும் இது நியூட்டன் விதி போன்றது அல்ல. அடிப்படையில் இது ஒரு கருத்து அல்லது கணிப்பு உண்மையில் மூர் இதை விதி என்றும் குறிப்பிடவில்லை.
இந்தக் கட்டுரை வெளியான 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப கழக பேராசிரியரும் மூரின் சகாவுமான கார்வர் மியட் (Carver Mead ) என்பவர்தான் மூர் விதி என குறிப்பிட்டார். அதன் பிறகே இது பரவலாக கவனத்தை ஈர்த்தது. இதனிடையே மூர் தனது கணிப்பை ஒராண்டுக்கு ஒரு முறை என்பதற்கு பதில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சிப்பின் ஆற்றல் பெருகும் என சின்னதாக திருத்தம் செய்தார்.

இந்த மாற்றத்திற்கு பிறகும் மூர் விதி தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது. இப்போது பொன்விழாவும் காண்கிறது. 50 ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகின் அடைப்படை உந்துசக்தியாக இருந்து வருகிறது.
மூர் விதியை எடுத்துவிட்டால் தானியங்கி காரை இயக்க கூடிய வகையில் வேகமான சிப்பை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் சொல்கின்றனர். இந்தத் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒருங்கிணைந்த கணிப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை என்பதே விஷயம்.
1969-ல் செலுத்தப்பட்ட ராக்கெட்டை இயக்கிய கம்ப்யூட்டர் சிப்பை விட தற்போது நவீன காரில் உள்ள நேவிகேஷன் அமைப்பிற்கான சின் 1.8 மில்லியன் மடங்கு வேகமானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல ஐபோன் நவீன சிப் 1975 ஐபிஎம் கம்ப்யூட்டரைவிட ஒரு மில்லியன் மடங்கு ஆற்றல் கொண்டிருக்கிறது. ஐபிஎம் கம்ப்யூட்டரின் அளவு திமிங்கலம் என்றால் ஐபோனில் அளவு தங்க மீன் அளவு தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் மூர் விதியின் மகிமை தான் காரணம்.
மூர் விதி 50 ஆண்டுகளை கம்ப்யூட்டர் உலகுக்கான அடிப்படை இயக்க விதியாக இருந்து வழிகாட்டி வந்திருக்கும் நிலையில் இப்போதுள்ள முக்கிய கேள்வி... இன்னும் எத்தனை காலம் மூர் விதி கைகொடுக்கும் என்பதுதான்!
மூர் விதி வெளியான எலக்ட்ரானிக்ஸ் இதழ் கட்டுரை: Cramming more components onto integrated circuits


1891 ஏப்ரல் 29-ல் பிறந்தவர் கனக சுப்புரத்தினம் -- பாரதிதாஸன்

“பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் பல. அவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்” என்று புதுமைப்பித்தன் பாரதிதாசனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
புதுவையில், 1891 ஏப்ரல் 29-ல் பிறந்தவர் கனக சுப்புரத்தினம். பிரெஞ்சுப் பள்ளியில் படித்தவர் என்றாலும், தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் அவர். தமிழ்ப் பண்டிதர்களின் மேற்பார்வையில் தமிழை ஆர்வத்துடன் கற்றார்.
இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றுவதில் தேர்ந்தார். தமிழில் நல்ல புலமையைப் பெற்ற பாரதிதாசனுக்கு காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. பாரதியின் பாடல்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த அவருக்கு, பாரதியின் முன்னிலையிலேயே தனது பாடல்களைப் பாடிக்காட்டும் சந்தர்ப்பமும் வந்தது. அவரது திறமையைக் கண்ட பாரதி அவரைப் பாராட்டினார். அன்று முதல் பாரதி தாசனானார், கனகசுப்புரத்தினம். பத்திரிகைகளிலும் எழுதத் தொடங்கினார். கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் என்று பல பெயர்களில் எழுதியிருக்கிறார்.
பெரியாரின் மீது பற்று கொண்டிருந்த பாரதிதாசன், திராவிட இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு பல முறை சிறை சென்றிருக்கிறார். பெரியார் அவரைப் ‘புரட்சிக் கவிஞர்’ என்று அழைத்தார். அண்ணா, ‘புரட்சிக் கவி’ என்று பட்டம் அளித்துக் கவுரவித்தார். ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’ என்று அவரது படைப்புகளின் பட்டியல் நீளமானது. பாரதிதாசனின் படைப்புகளைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் உண்டு. அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் புதுமைப்பித்தன் இவ்வாறு குறிப்பிட்டார்:
“பாரதிதாஸனின் இன்னும் இரண்டொரு விசேஷ அம்சங் களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் ஏதோ சுய மரியாதைக் கொள்கைகளுக்கு அடிமையானவர், அதனால் அவரிடம் தேசபக்திப் பாட்டுகளைப் பார்க்க முடியாது; அந்த மட்டில் அவர் மட்டமான கவிஞரெனச் சிலர் சித்தாந்தம் பண்ணுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ‘உன்னை விற்காதே’ என்ற பாட்டை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்
ஈனர் அஞ்சிக் கிடக்கிற நேரத்தில்
ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்
உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்வதால்
என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை
எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே !
அன்பி ருந்திடில் நாட்டின் சுகத்திலே
ஆயிரம் கதை ஏன் வளர்க்கின்றனர்?
இப்படிப் பாடுவோரைத் தேசப்பற்று இல்லாதவர் என்று குற்றம்சாட்ட வேண்டும் எனில், பாரதியார் தொடுத்துவைத்த பாணியில், அவர் கற்பனையை அவலமாக்கி, உயிரற்ற கொடிப் பாட்டு, நாட்டுப்பாட்டு என்ற எதிரொலிச்சான் கோவில்களைப் பிறர் போல இவரும் கட்டவில்லை என வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதெல்லாம் மறைவாக நமக்குள்ளே பேசிக்கொள்கிற கதைகளாக இருக்க முடியுமே தவிர, மேடை ஏறாது”.

இந்தியா வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் அல்ல ??? .......!!!!!

சமீப காலமாக பங்குச்சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக குறைந்த பட்ச மாற்று வரி (எம்ஏடி) இருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஊசலாட்டத்துக்கு இதுதான் காரணம்.
சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் குறைந்த பட்ச வரியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீக்குவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.
இந்த நிலையில் இதற்கு முந்தைய ஆண்டுகளில், (அதாவது எம்ஏடி இருந்த காலத்தில்) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் கிடைக்கும் வருமானத்துக்கு குறைந்தபட்சம் 20 சதவீதம் வரி செலுத்த சொல்லி வருமான வரித்துறை பலருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தொகை சுமார் 40,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் அல்ல, இது சட்டபூர்வமானது இதில் விலக்கு ஏதும் கொடுக்க முடியாது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். சட்டபூர்வமாக வரி வசூல் செய்வது வரித் தீவிரவாதம் ஆகாது என்றார்.
சில நாட்கள் கழித்து இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட (டிடீஏஏ) நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த தேவை இல்லை என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏதாவது ஒரு நாட்டில் வரி செலுத்தி இருந்தால் போதுமானது, இந்தியாவில் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா 88 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை போட்டுள்ளது. மொரீஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இதில் விலக்கு என்று சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும்.
இந்திய பங்குச்சந்தையில் 20 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீடு உள்ளது. மொத்த அந்நிய முதலீட்டில் அமெரிக்காவில் இருந்து 32 சதவீதமும், மொரீஷியஸில் இருந்து 22 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீடு வருகிறது.
ஒப்பந்தம் இருக்கும் நாடுகளுக்கு வரி விலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், சமீபத்தில் 602 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 68 நபர்கள்/நிறுவனங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மக்கள வையில் எழுத்து பூர்வமாக தெரிவித்தார்.
40,000 கோடி ரூபாயிலிருந்து 600 கோடி ரூபாய் அளவுக்கு சுருங்கிவிட்டது. அதை விட தெளிவான கொள்கை இல்லை என்று மும்பையில் உள்ள பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் ஒன்றையும் செயலாளர் வேறு ஒன்றையும் தெரிவிக்கிறார்கள்.
இதே பிரச்சினைதான் முந்தைய காங்கிரஸ் அரசிலும் இருந்தது என்றார். இதுவரை பிஜேபி அரசு பேசுவதை தவிர வேறு எதையும் செய்ய வில்லை என்று சர்வதேச ஹெட்ஜ் பண்ட் மேனேஜர் ஜிம் ரோஜர்ஸ் கூறி இருக்கிறார்.
நடக்கும் நிகழ்வுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன!

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

ஜெர்மன் தொழிலதிபரும் நாஜிக்களிடம் இருந்து ஏராளமான யூதர்களின் உயிரைக் காப்பாற்றியவருமான ஆஸ்கர் ஷிண்ட்லர் (Oskar Shindler) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஜெர்மனியில் இருந்த ஸ்விட்டாவ் (தற்போது செக் குடியரசில் உள்ளது) பகுதியில் 1908-ல் பிறந்தவர். கல்லூரி யில் தொழில்நுட்பக் கல்வி பயின்ற பிறகு, தந்தையின் விவசாயக் கருவி கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றினார்.
l அப்போது ஜெர்மனியில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வந்தது. தன் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் அக்கட்சியில் சேர்ந்தார்.
l போலந்து மீது ஹிட்லர் 1939-ல் படையெடுத்தார். ஒரே வாரத்தில் ஷிண்ட்லரும் அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு நலிவடைந்திருந்த சமையல் பாத்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலையை விலைக்கு வாங்கினார். ராணுவத்துக்கு சமையல் பாத்திரம் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை லஞ்சம் கொடுத்து பெற்றார். தன் தொழிற்சாலையில் சொற்ப சம்பளத்தில் யூதர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டார்.
l போலந்தில் யூதர்கள் இழிவாக நடத்தப்படுவதையும் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுவதையும் கண்டு இவரது மனம் இளகியது. தன்னிடம் வேலை செய்பவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதிபூண்டார்.
l யூதர்கள் அடைக்கப்பட்டிருந்த முகாம்கள் மற்றும் இவரது தொழிற்சாலையை மூட 1943-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஷிண்ட்லர் சுதாரித்துக்கொண்டார். தனக்குத் தெரிந்த அதிகாரியி டம் லஞ்சம் கொடுத்து, ராணுவத் தளவாட தொழிற்சாலையாக மாறிவிட்ட தன் தொழிற்சாலையை செக்கோஸ்லேவியாவுக்கு மாற்றவும் தனக்குத் தேவையான தொழிலாளிகளைத் தெரிவுசெய்து அழைத்துச் செல்லவும் அனுமதி பெற்றார்.
l யூதத் தொழிலாளர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்தார். ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என வரலாற்றில் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் சுமார் 1,200 பேர் இருந்தனர். உயிரைப் பணயம் வைத்து அவர்களை செக்கோஸ்லேவியாவுக்கு அழைத்துச் சென்றார். அவரது தொழிற்சாலையில் ஒரு ஆயுதம்கூட தயாரிக்கப்படவில்லை. யூதர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவே ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதை நடத்திவந்தார்.
l இரண்டாம் உலகப்போர் 1945-ல் முடிவுக்கு வந்தது. ஜெர்மனி சரணடைந்தது. ரஷ்யப் படையினரால் பிடிபடுவோம் என்ற பயத்தில் குடும்பத்துடன் ஜெர்மனிக்கு தப்பினார் ஷிண்ட்லர். ‘ஷிண்ட்லரின் யூதர்கள்’ 1,200 பேரும் ரஷ்ய ராணுவ அதிகாரி உதவியுடன் தப்பினர்.
l போருக்குப் பின் திவாலான இவருக்கு யூதர்கள் இறுதி வரை உதவி செய்துவந்தனர். 1968-ல் இவருக்கு இஸ்ரேலில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
l இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
l அதிக லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிகளை நேசிக்கும் மனிதநேயம் கொண்டவர். ஏராளமான யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றி உலக வரலாற்றிலும், யூதர்களின் மனங்களிலும் நீங்காத இடம்பிடித்த ஆஸ்கர் ஷிண்ட்லர் 66 வயதில் (1974) மறைந்தார். அவரது விருப்பப்படி இஸ்ரேலில் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Best GRE Coaching

https://gre.magoosh.com/plans

Super 30 - Bihar

http://super30.org/

http://www.hindustantimes.com/chunk-ht-ui-htnext-archive/discovery-channel-to-telecast-film-on-bihar-s-super-30/article1-389741.aspx

IIT coaching centers

http://indiatoday.intoday.in/education/story/top-10-coaching-institutes-in-india-for-competitive-exams/1/350550.html

http://allen.ac.in/bengaluru/

http://byjusclasses.com/


http://www.aakash.ac.in/


http://super30.org/

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

Indian Acadamy of Sciences

http://www.ias.ac.in/

http://www.ias.ac.in/chemsci/index.html

http://www.ias.ac.in/what.html#lecwork


http://www.ias.ac.in/academy/pjubilee/book.html


http://www.ias.ac.in/academy/oha/

Department of Science & Technology (DST)



http://www.inspire-dst.gov.in/

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) is an on-going National Program of Fellowship

http://www.kvpy.org.in/main/index.htm

Indian Institutes of Science Education and Research

http://www.iiseradmission.in/welcome.phpx


http://www.inspire-dst.gov.in/Inspire-Advertisement.pdf

செர்னோபில் அணு மின்உலை விபத்து.

இது வரை நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோசமான விபத்து, செர்னோபில் அணு மின்உலை விபத்து. அமெரிக்காவின் த்ரீ- மைல் தீவு அணு மின்உலையில் 1979-ல் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோச மான விபத்து இது.
அப்போது சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகில் உள்ள செர்னோபில் நகரத்தில் இந்த அணு மின்உலை அமைந் திருந்தது. இதில் 4 அணு உலைகள் செயல்பட்டன. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் பெற்றவை. 1986 ஏப்ரல் 26 அதி காலையில் அந்த விபரீதம் நடந்தது. சரியாகத் திட்டமிடப்படாத சோதனை ஒன்றை 4-வது அணு உலையில் நடத்திக் கொண்டிருந்தபோது, விபத்து நேர்ந்தது. இதையடுத்து, மின் கட்டுப் பாட்டு அமைப்பு மற்றும் அதன் அவசர காலப் பாதுகாப்பு அமைப்பைத் தொழி லாளர்கள் மூடினர்.
பல்வேறு மனிதத் தவறுகள் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத் தின்போது சங்கிலித் தொடர்வினை ஏற்பட்டு அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அணுக் கதிர்வீச்சு வேகமாகப் பரவத் தொடங்கியது. பாது காப்பு விதிகளை மீறி அணு உலை ஆபரேட்டர்கள் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. அணு உலையின் வடிவமைப்பில் இருந்த கோளாறே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறு கின்றனர். தொடக்கத்தில், இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததை மறைக்க சோவியத் அரசு முயன்றதாகக் குற்றம்சாட்டப் படுகிறது. எனினும், அணுக் கதிர்வீச்சு பரவுவதைச் சுட்டிக்காட்டிய ஸ்வீடனைச் சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள், இது குறித்து விளக்கம் தருமாறு சோவியத் ஒன்றிய அரசை வலியுறுத்தின. இதை அடுத்து, செர்னோபில் அணு உலையில் விபத்து நடந்ததை ஏப்ரல் 28-ல் ஒப்புக்கொண்டது சோவியத் அரசு.
ஏப்ரல் 27-ல்தான், அதாவது விபத்து நடந்து ஒரு நாளுக்குப் பின்னரே பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத் தப்பட்டனர். எனினும், விபத்துபற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதற்குள் பலரது உடலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத் தியிருக்கிறது. அப்பகுதிகளில் வசித்தவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக் கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைவிட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ் விபத்தின் மூலம் வெளியேறியது. பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின. இன்று பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன. இங்கு மனிதர்கள் வாழ் வதற்கான சூழல் ஏற்பட இன்னும் 20,000 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் கல்வி... நம் உரிமை!

ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள், இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் மொத்தம் 20 பள்ளிகளுக்குக் குறைந்தவையே அரசுப் பள்ளிகள். மற்றவையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அல்லது உதவி பெறும் தனியார் பள்ளிகள். இந்த இரு வகைப் பள்ளிகளுக்கும் அரசு மானியம் மட்டும் வழங்கிவந்தது. அப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆய்வு நடத்தும் கடமை கல்வித் துறைக்கு இருந்தது. ஆண்டாய்வும், திடீர் ஆய்வுகளும் நடத்தப்பெற்றதால் பள்ளிகள் சீராக இயங்கின.
விடுதலை பெற்ற சமயத்தில் நான்கு நிலைகளில் ஆசிரியர் கல்வி அளிக்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு முடித்தவருக்கு கீழ்நிலை ஆசிரியர் (Lower Grade) சான்றிதழும், எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நிலைச் சான்றிதழும் (Higher Grade), எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவருக்கு இடைநிலைச் சான்றிதழும் (Secondary Grade) ஆசிரியர் கல்வி முடித்த பின் கல்வித் துறையால் வழங்கப்பட்டது. பட்டப் படிப்புக்குப் பின் ஆசிரியர் கல்வி முடித்தவர் பல்கலைக்கழகப் பட்டயம் பெற்றனர். பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களை ரத்துசெய்ய அரசுக்கு அதிகாரமில்லை என்பதால், ஆசிரியர் கல்வி முடித்தவரும் பொதுக் கல்வி இயக்குநர் அளிக்கும் ஆசிரியர் சான்றிதழைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் மீது அரசு ஒரு கண் எப்போதும் வைத்திருக்கும். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ரத்துசெய்யப்பட்டால் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய முடியாது.
சுதந்திரத்துக்குப் பின் புதிய பள்ளிகள் பட்டிதொட்டி யெல்லாம் தொடங்கப்பட்டன. அவற்றுக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பயிற்சி பெறாதவர்களையும் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கான பணித் தகுதி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலை ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இத்தகைய ஆசிரியர்களிடம் கற்றவர்கள் பல துறைகளிலும் முத்திரை பதித்துவருகிறார்கள். ஆசிரியர் பயிற்சிக்கும் கற்றலுக்கும் தொடர்பு இல்லையோ என்ற ஐயம் எழக்கூடும். இந்த தற்காலிக ஆசிரியர்கள் வேறு பணி கிடைக்கும் வரையில்தான் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். செய்யும் பணியை ஒரே நாளாயினும் நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதியே அவர்களது தொழில் வெற்றிக்குக் காரணம்.
ஒருகட்டத்தில் கீழ்நிலையும், பின்னர் உயர்நிலையும் நிறுத்தப்பட்டன. தற்போது இடைநிலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி மேனிலைக் கல்வியாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் பொதுத் தகுதி, ஆசிரியர் கல்விப் படிப்போடு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஆக, இன்றைய ஆசிரியரது தகுதிகள் முன்னர் இருந்ததைவிடப் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பழைய ஆசிரியர்களுக்கு இணையாக இவர்கள் இல்லை என்ற கூற்றை ஏற்பது கடினமாக உள்ளது.
அக்கால ஆசிரியர்கள்
அக்காலத்தில் மிகச் சாதாரணமான குடும்பங்களிலிருந்து தான் பெரும்பாலானோர் ஆசிரியர் தொழிலுக்கு வந்தனர். அவர்கள் ஆசிரியர் கல்வி படிக்கும்போது உதவித்தொகை கொடுப்பார்கள். ஆசிரியர் கல்வி பயிலக் கட்டணம் ஏதும் கிடையாது. உதவித்தொகை விடுதிக் கட்டணத்துக்கும் பிற செலவுகளுக்கும் போதுமானது. இன்னும் ஒரு வகை ஆசிரியர்கள் உண்டு. நிலபுலம் உள்ளவர்கள், வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள். பெரும்பாலும் உள்ளூரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணி மேற்கொள் வார்கள். வறுமை நிலையிலுள்ள ஆசிரியர்கள் தனிப்படிப்பு எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்வாகி உண்டு. அவர் பள்ளியின் செயல்பாட்டில் அக்கறை கொண்டிருப்பார். ஆசிரியர்கள் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருப்பார். விடுப்புகூட எடுக்க இயலாத நிலையில் ஆசிரியர்கள் இருப்பார்கள். நெடுங்காலத்துக்கு அரசு ஓய்வூதியம், விடுப்பு விதிகள் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது. 1971-ல்தான் அவை தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் அலைமோதிய அத்துமீறல்களை எதிர்த்து ஆசிரியர்கள் போராட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் 1976-ல் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளின் மீதான கல்வித் துறையின் பிடி இறுகியது மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் சிறிதளவு சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அதேசமயம், ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட இச்சட்டமே காரணமென்று நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
சுயநிதித் தனியார் பள்ளிகள்
1978-ல் அரசு மானியம் பெறாது நடத்த சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவை பல்கிப் பெருகிப் பட்டிதொட்டியெல்லாம் இன்று கோலோச்சுகின்றன. இப்பள்ளிகளுக்குத் தனியார் பள்ளி (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பொருந்தாது என்று அரசு முடிவெடுத்தது. ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பின்மை, விடுப்பு விதிகள் இல்லாமை போன்ற பல குறைபாடுகளுடன் இவை இயங்கிவருகின்றன. ஆசிரியர்களில் பலரும் தகுதி பெறாதவர். அரைச் சம்பளத்தில் எவ்விதச் சலுகையும் இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பள்ளி மீதோ மாணவர் மீதோ எப்படி உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடுதான் பெரும்பான்மையான சுயநிதிப் பள்ளிகள் நடைபெற்றன. ஒரு காலகட்டத்தில் பணியிலிருந்துகொண்டே சுயநிதிப் பள்ளிகளை ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கினார்கள். தம் முழு நேரப் பணியை ஓரங்கட்டிவிட்டு, தம் கவனம் முழுவதும் தம் சொந்தப் பள்ளிக்குச் செலுத்த ஆரம்பித்ததும் அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
இதேபோல தனியார் உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி களும் அதே வளாகத்திலோ அருகிலோ தம் பள்ளிக்குப் போட்டியாக சுயநிதிப் பள்ளியையும் தொடங்கி, அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொண்டனர். சுயநிதிப் பள்ளியில் சேர்க்கையை முடித்த பின்தான் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்க்கையைத் தொடங்குவார்கள்.
தமிழகக் கல்வித் துறை இம்முறைகேடுகளையெல்லாம் காணாதது மட்டுமின்றி ஆதரவும் கொடுத்தது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு.
உள்ளாட்சிப் பள்ளிகள்
உள்ளாட்சிப் பள்ளிகள் ஆங்கில ஆட்சியின்போது இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்கின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இவ்வமைப்புகள் செயல்பட்டன. இவற்றின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகள் சீராக இயங்குவதில் அவ்வமைப்பின் உறுப் பினர்கள் அக்கறை கொள்வார்கள். ஆசிரியர்கள் பணிபுரியும் ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்துக்குள் குடியிருக்க வேண்டும் என்பது விதி. பெரும்பாலும் ஆசிரியர்கள் அந்தந்த ஊரிலேயே வசித்துவந்தனர். மாணவர்களை மட்டுமின்றி அவர்களது பெற்றோரோடும் ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கம் இருந்தது. சமூகத்தின் சொத்தாக உள்ளாட்சிப் பள்ளிகள் திகழ்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வந்தவுடன் அவை அலசப்பட்டு, முன்னேற்றம் காண்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டும் சுணக்கமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டன.
படிப்படியாக இந்த உள்ளாட்சிப் பள்ளிகள் யாவும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1970-ல் கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தன. 35,000 தொடக்கப் பள்ளிகள், 8,000 உயர்நிலை-மேனிலைப் பள்ளிகளைச் சென்னையிலிருந்து நிர்வகிப்பது இயலாத காரியம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை.
ஆசிரியர்களால் முடியும்
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக் கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”
உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில் சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான் ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது 19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப் பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும் பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக தலைநிமிரும்!
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com

திங்கள், 27 ஏப்ரல், 2015

சுற்றுச்சூழல் புத்தகங்கள்:

சமீபத்தில் வெளியான சில சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
பொருட்களின் கதை, ஆனி லியோனார்டு
பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பயங்கரமான பாதிப்புகள் என்ன, நாம் சந்தோஷமாக அணிந்துகொள்ளும் ஒரு டி ஷர்ட் அதன் உண்மையான அடக்க விலையை பிரதிபலிக்கிறதா - அதில் மறைந்துள்ள செலவுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன என்பது போன்ற முக்கிய கேள்விகளை எழுப்புகிறது இந்தப் புத்தகம். இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இந்தப் பூவுலகை எப்படி கடுமையாக பாதிக்கிறது என்பதை விளக்குகிறார் நூல் ஆசிரியர். அதற்கான மாற்று என்ன, அந்த மாற்று நமது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332-273444
காடுகளுக்காக ஒரு போராட்டம் - சிக்கோ மென்டிஸ்
பலரது உயிர்த் தியாகம்தான் இந்தப் பூவுலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காட்டை காக்கப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிர் துறந்தவர் சிக்கோ மென்டிஸ். அவருடைய போராட்டம் நிறைந்த வாழ்க்கையின் கதை.
தமிழில்: பேராசிரியர் ச. வின்சன்ட், எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 9865005084
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள், வழக்குரைஞர் சுந்தரராஜன்
தமிழகம் எங்கும் சிறியதும் பெரியதுமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருகிவருகின்றன. அதற்கு எதிராக பலர் போராடி வருகின்றனர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசின் கடமைகள் என்ன, மக்களிடம் இருந்து பறிக்கப்படும் சட்டரீதியிலான உரிமைகள் என்ன என்று விளக்குகிறது இந்தப் புத்தகம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்கள் மூலமாக எப்படி சட்ட ரீதியில் தீர்வு காண்பது என்று வழிகாட்டுகிறது இந்த நூல்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006
இறகுதிர் காலம், கோவை சதாசிவம்
பறவைகள், பவழத் திட்டுகள், நீர்நிலைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களின் அழிவை கவனப்படுத்துகிறது இந்த நூல். உணவுச் சங்கிலியில் முதன்மைப் பங்காற்றும் காட்டுயிர்கள், தாவரங்கள், நீர்நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே இயற்கையிடம் இருந்து விலகி வாழும் மனிதர்கள் உயிரோடு இருக்க முடியும் என்பதை இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
வெளிச்சம் வெளியீடு,
தொடர்புக்கு: 98947 77291
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
கடந்த 2013-ல் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு. இயற்கை வேளாண்மையை பரப்புவதற்காக தமிழகம் எங்கும் அவர் சுற்றித் திரிந்தபோது கிடைத்த அனுபவங்களையும், இயற்கை குறித்த புரிதலையும் இதில் பதிவு செய்துள்ளார். இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய புரிதலை இந்நூல் விரிவுபடுத்தும்.
விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283
மேக வெடிப்பு, சுப்ரபாரதிமணியன்
இயற்கையைச் சுரண்டும் மனி தனின் பேராசை, இயற்கைச் சீற்றங்கள், உயிர் துறந்த சுற்றுச்சூழல் செயல் பாட்டாளர்கள் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொள்ள இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் புத்தகம் முன்னெச்சரிக்கை செய்கிறது.
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 04259-226012
யாருக்கானது பூமி, பா. சதீஸ் முத்து கோபால்
பறவைகள், உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள தொடர்பு, அவை ஏன் அழிந்துவருகின்றன என பல்வேறு விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. காட்டுயிர் சார்ந்து நூல் ஆசிரியரின் அனுபவங்கள் இந்த நூலில் பதிவாகியுள்ளன.
அகநாழிகை பதிப்பகம், தொடர்புக்கு: 9994541010
ஆணி வேர் - ஆர்கானிக் ஏன்? என்ன? எது?
மருந்தே உணவு, உணவே மருந்து என்பதுதான் நம்முடைய பாரம் பரியம். அப்படிப் பார்த்தால், இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுதான் பல்வேறு நோய் களுக்கான காரணமாக இருக்கிறது. எது நமக்கு உகந்த உணவு, இயற்கை வாழ்வியல் என்றால் என்ன என்பது குறித்த எளிமையான அறிமுக நூல் இது.
ஓம் பதிப்பகம், தொடர்புக்கு: 9445775478
சிறு வெளியீடுகள்
ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது, எஸ். ராமகிருஷ்ணன்
ஜப்பான் நகரமான ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஏற்படுத்திய பாதிப்புகள் மோசமானவை. அதைவிடவும் மோசமான அணுகுண்டுகள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இன்றைக்கு உள்ளன. இந்தியா, பாகிஸ்தானிலும் உள்ளன. இன்னொரு அணுகுண்டு வீச்சு நடந்தால் என்ன ஆகும் என்பதை வரலாற்றுப் பின்புலத்தில் அலசுகிறது இப்புத்தகம்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 044-43809132
உயிரைக் குடிக்கும் புட்டிநீர், நக்கீரன்
நாட்டிலேயே பாட்டிலில் அடைக்கப் பட்ட நீர் அதிகம் விற்பனை ஆவது தமிழகத்தில்தான். தூய்மையானது என்று நம்பப்படும் இந்த புட்டிநீர் நம் உடலையும் உலகையும் எப்படி குப்பை ஆக்குகிறது என்று அதிர்ச்சிகரமான உண்மைகளை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006.

1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் - 15 லட்சம் இந்திய வீரர்கள்

ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில், "அண்மையில் நான் பிரான்ஸ் நாடு சென்றிருந்த போது, முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு.
நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது ஒரு பக்கம், இது முதலாம் உலகப்போரில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் சாகசத்துக்கும் தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்த்துகிறது. மேலும் சேவா பரமோ தர்ம என்ற உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது; 15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம் செய்தார்கள் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
இந்தியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப் போரின் போது கிட்டத்தட்ட நமது 74000 இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதும் கூட பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு சாகசத்துக்கான விருது அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல, மேலும் 11 வீரர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே நமக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில், இந்தப் போர் நடைபெற்ற போது, 1915ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான் அங்கே என் அஞ்சலியைச் செலுத்தச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்துக்குத் தலைவணங்கச் சென்றேன்.
உலகின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், உயிர்த் தியாகமும் செய்கிறது; இதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா?" என்றார் பிரதமர் மோடி.

1958 ஏப்ரல் 27: அணுகுண்டுக்கு எதிராகத் திரண்ட குரல்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் அலமாகார்டோவில் 1945 ஜூலை 16-ல் உலகில் முதன் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசி லட்சக் கணக்கான மக்களைக் கொன்றது அமெரிக்கா. இதையடுத்து அணு ஆயுதங்களுக்கு எதிரான குரல் உலகமெங்கும் எழுந்தது.
அணுகுண்டுக்கு எதிராகப் போராடிய வர்களில் முக்கியமானவர் டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் மருத்துவர், இசைக் கலைஞர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர். மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் மருத்துவமனை யைத் தொடங்கி நடத்திய அவர், ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளித்தார். 1952-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. காரணம், காபோனில் இருந்த ஏழை மக்களுக்குச் சேவை அளிப் பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.
1954-ல் ஓஸ்லோ பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட அவர், ஏற்புரையில் அணுகுண்டு சோதனை யைக் கண்டித்துப் பேசினார். ‘மனசாட்சி யின் அறிவிப்பு’ எனும் பெயரில், 1957 ஏப்ரல் 23-ல் ஓஸ்லோ வானொலி யில், அணுகுண்டு சோதனைக்கு எதிராக உரையாற்றினார்.
தொடர்ந்து ஏப்ரல் 27-ல் அவருடன் சேர்ந்து பல்வேறு நாடு களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் 3 தலைப்புகளில் இதே கோரிக்கை அடங்கிய உரைகளை அவர் நிகழ்த்தினார். இந்த உரைகள் தொகுக்கப்பட்டு ‘அமைதியா, அணு குண்டுப் போரா?’ எனும் தலைப்பில் ஹென்றி ஹோல்ட் என்பவரால் வெளியிடப்பட்டன. பல மொழிகளிலும் அந்தப் பிரசுரம் மொழி பெயர்க்கப்பட்டது.
டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் ஆகிய 3 நாடுகளும் அணு குண்டு சோதனையை நிறுத்திக் கொள்வ தாக அறிவித்தன.

பயானிக்ஸ் எறும்பு

இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ்
இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் துறை. சுருக்கமாகச் சொன்னால், கண்ணதாசன் பாடிய, ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ ரகம். தமிழில் இதை உயிர் மின்னணுவியல் என்கிறார்கள்.
எறும்புகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு பயானிக் எறும்புகளின் தொகுதி அண்மையில் ஜெர்மனியில் உருவாகியிருக்கிறது. எறும்புகள்போல விரைவாக நகர, ஆறு கால்கள் கொண்ட உடலமைப்பு இது. ஒவ்வொரு எறும்பின் தலைப் பகுதியில் கேமராவும், என்ன மாதிரியான தரை என்று உணர உணரியும் (சென்சார்) உண்டு. பயானிக் எறும்பு செயல்பட வழி செய்யும் லித்தியம் மின்கலங்களை சார்ஜ் செய்யவும் இந்த அமைப்பு வழி செய்யும். அசல் எறும்புகள்போல, பொருட்களைப் பற்றி எடுத்துப் போக, பற்றுவான்களும் (க்ரிப்பர்) உண்டு. எந்தப் பளுவை நகர்த்த வேண்டுமோ அதை எப்படிப் பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் ஆற்றல் மிகுந்தவை இந்த பயானிக் எறும்புகள்.
பயானிக்ஸ் எறும்பின் வேகம்
எறும்புகள் கூட்டாக வாழ்பவை. ஒற்றை எறும்பால் இழுத்துப் போக முடியாத உணவுத் துண்டைக்கூட, கூட்டமாக வந்து நகர்த்திப்போக அவற்றால் முடியும். பயானிக் எறும்புகளும் இதேபோல் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு ஒருங்கிணைந்து பணிசெய்யும் ஆற்றல்கொண்டவை. இப்படியான தொடர்புக்கான ரேடியோ தொகுதி எறும்பின் வயிற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் ஹனோவரில் நடந்த உலகத் தொழில்நுட்பக் கண்காட்சியில் பயானிக் எறும்புகள் அறிமுகமாகியிருக்கின்றன.
பயானிக்ஸ் பார்வை
விபத்தில் கை உடைந்துபோவதோ, அலட்சியப் போக்கினால் நோய் முற்றிக் காலை அகற்ற வேண்டியிருப்பதோ சோகமானது மட்டுமில்ல; ஓடியாடிப் பரபரப்பாக நடத்திய வாழ்க்கையை முடக்கிவிடலாம் அது. முறிந்து விழுந்த உறுப்பை மறுபடி முளைக்க வைக்க முடியாது. ஆனால், அந்தக் குறை அநேகமாகத் தெரியாமல் வாழ்க்கை தொடர பயானிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கும். ‘பயானிக் பார்வை’ முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு கட்டமைப்பாகும். பார்வை இழந்தவர்களின் விழியில் சிறு மின்முனைகள் (எலெக்ட்ரோடு) பதிக்கப்படும். உடலில் இணைத்த சிறு கேமராக்கள் அவர்களுக்கு முன்னால் விரியும் காட்சியைப் படம் பிடித்து, அந்தப் படத்தை மின்னணு அலைகளாக அனுப்பும். மின்முனைகள் அவற்றை வாங்கி நேரடியாக மின்தூண்டுதலாக மூளைக்கு அனுப்பும். மூளை அந்த மின்தூண்டலைப் பகுப்பாய்வு செய்து, விழி இழந்தவருக்குக் காட்சியை உணர்த்தும். ஏற்கெனவே பார்வை இருந்து, திடீரென்று பார்வை போனவர்கள் என்றால் மூளைக்கு இந்தப் பகுப்பாய்வு முன்பே பழக்கமாகியிருக்கும். புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை.
பயானிக்ஸ் போதை
பயானிக் நாக்கு அடுத்தது. மிகச் சிறிய நானோ உணரிகள் இந்த நாக்கில் பதிக்கப்பட்டிருக்கும். திட உணவோ திரவமோ நாக்கில் படும்போது, உணரிகளால் அது பகுத்தறியப்படும். அந்த விவரம் ஒரு கணினிக்குப் போகும். ஒவ்வொரு வகை வேதியியல் அணுத் திரளுக்குமான ஒரு சுவை கணினியில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும். வந்த தகவலை அதோடு ஒப்பிட்டு, என்ன சுவை என்று கணினி உடனே சொல்லிவிடும்.
இது எங்கே பயன்படும்? ஒயின் போன்ற மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் சுவைஞர்கள் உண்டு. இவர்களின் வேலை, உற்பத்தியாகும் மதுவை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று நாள் முழுக்க ருசி பார்ப்பது. தொடக்கத்தில் சந்தோஷமான வேலையாக இருந்தாலும், சீக்கிரமே வெறுக்க வைத்து விடும் இந்தப் பணிக்கு, பயானிக் நாக்கு சம்பளமில்லாத வேலைக்காரன். சொந்த நிறுவனத் தயாரிப்பைச் சுவைப்பதோடு நிறுத்தாமல், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளோடு சொந்தச் சரக்கைப் போதையின்றி ஒப்பிடவும் இதை ஏவலாம்.
பயானிக் கணையம் உடலில் பொருத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தச் செயற்கை உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவை சதா கண்காணித்து, அதன் அடிப்படையில் இன்சுலின் சுரப்பைக் கூட்டும் அல்லது குறைக்கும். பயானிக் சிறுநீரகம் இது போன்றே இயற்கைச் சிறுநீரகத்துக்கு மாற்றாகலாம்.
பயானிக்ஸ் நடை
பயானிக் கையும் உண்டு. செயற்கைக் கரத்தில் மின்முனைகள் பதித்தது இது. இந்த மின்முனைகள் மூளையோடு பிணைக்கப்படும். கையை உயர்த்த வேண்டும் என்று தோன்றும்போது, அதற்கான நரம்பு அதிர்வுகளை மின்முனைகள் பெற்றுக் கையை இயக்கும். பயானிக் கால் நடக்க உதவுவதும் இது போன்ற ஒரு உயிர் மின்னணு அமைப்பே. காலில் பதித்த உணரிகள் எவ்விதமான தரையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து மூளைக்கு அறிவிக்க, நடை சீராகும். இயற்கைக் கைகால் போல் பயானிக் கைகால்கள் இயல்பாகவும் நுட்பமாகவும் செயல்பட தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. குறைபட்ட அங்கத்தை மாற்றி வைக்க மட்டும் உடல் உறுப்பு அடிப்படையிலான பயானிக்ஸ் பயனாகும் என்றில்லை.
பயானிக் மூக்கு இந்த இனம். சகலவிதமான வாடைகளும் பல்லிழை இயற்பியல் (பாலிமர் ஃபிஸிக்ஸ்) அடிப்படையில் கணினியில் பதிந்து பயானிக் மூக்கோடு இணைக்கப்படும். காற்றில் மாசு, வாயு கசிவதால் எழும் நச்சுத் தன்மை போன்றவற்றை உடனடியாக இந்த மூக்கு கண்டுணர்ந்து எச்சரிப்பதால், நச்சு வாயுக் கசிவு போன்ற உயிர்க்கொல்லி விபத்துகள் நிகழாமல் தடுக்கலாம்.
உடல் பாகங்களை இயக்கக் கட்டளையிட, மனித மூளை, முதுகுத் தண்டின் ஒத்துழைப்பைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. சில விபத்துகளால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. அப்போது மூளை கட்டளையிட முடியாமல் போய், அசைவு நின்றுவிடும். பேச்சும் வராது. முதுகு இப்படி பாதிக்கப்பட்டாலும், மகா மோசமான விபத்துகள் தவிர, மற்றவற்றில் நாக்கு சேதமின்றித் தப்பிவிடலாம். நேரடியாக மூளையோடு நரம்பு வழியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரே மனித உறுப்பு நாக்கு. உடம்பே மரத்த நிலையிலும், நாக்கு அசையும்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை யானவரும் நடமாட தொழில்நுட்பம் துணைபுரிகிறது. நோயாளி நாக்கில் ஒரு சிலிக்கன் சில்லு பதித்து, அவர் அமர ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்படும். நாக்கை மடித்தாலோ அல்லது இடம் வலமாக அசைத் தாலோ மட்டும் போதும். அசைவை நாக்கில் பதித்த சில்லு என்ன என்று பொருள் உணர்ந்து, அதை சக்கர நாற்காலியில் பொருத்திய சென்சாருக்குக் கட்டளையாக அனுப்பும். கட்டளைப்படி நாற்காலி நகரும்.
எல்லாம் சரி, பயானிக் மூளை? ரொம்ப கஷ்டம். தற்காலிகமான நினைவுகளைப் போட்டு வைத்துக் கொள்ளும் மூளையின் பாகத்தை சில்லில் வடித்திருப்ப தாகத் தெரிகிறது. ஒருவேளை, நூறு வருடம் சென்றபின் நம் சந்ததியினர் அவர்களுடைய பரம்பரை மூளையைத் தூர எறிந்துவிட்டு ஐன்ஸ்டைன் மூளையைப் பொருத்திக் கொள்ளலாம்.
- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: eramursukan@gmail.com

தியாகசீலர் கக்கன்

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.
கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.
கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.
ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.
இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:
ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.
குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?
ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.
குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.
அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்
என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.
ஆலயப் பிரவேசத்தில் கக்கன்
1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.
தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக
அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.
1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.
வளர்ப்பால் மகனானவர்
அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.
அரசு மருத்துவமனையில் அனுமதி
1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
எம்.ஜி.ஆர் நலம் விசாரிப்பு
ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவரைப் பார்த்து எம்.ஜி.ஆர்.கண்கலங்கிவிட்டார். காமராஜர் ஆட்சியில் போலீஸ் மந்திரியாக பணியாற்றியவர்.
உடனே எம்.ஜி.ஆர். 'உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?' எனக் கேட்க, 'உங்கள் அன்பு இருந்தால் போதும் நீங்கள் வந்ததே சந்தோஷம்' என்று கூறினார் கக்கன்.
எப்படி மனம் வந்தது?
'விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?' எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். 'வேண்டாம்' என மறுத்துவிட்டார் கக்கன்.
ஆனாலும் எம்ஜிஆர் மனம் பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ',இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?' என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நூல் பெயர்: தியாகசீலர் கக்கன்
நூல் ஆசிரியர்: இளசை சுந்தரம்
பக்.240, விலை: ரூ.100
நூல் வெளியீடு: மதுரா வெளியீடு,
மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்,
25-3, காந்தி இர்வின் சாலை,
எழும்பூர், சென்னை 600 008,