ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில், "அண்மையில் நான் பிரான்ஸ் நாடு சென்றிருந்த போது, முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு.
நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது ஒரு பக்கம், இது முதலாம் உலகப்போரில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் சாகசத்துக்கும் தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்த்துகிறது. மேலும் சேவா பரமோ தர்ம என்ற உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது; 15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம் செய்தார்கள் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
இந்தியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப் போரின் போது கிட்டத்தட்ட நமது 74000 இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதும் கூட பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு சாகசத்துக்கான விருது அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல, மேலும் 11 வீரர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே நமக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில், இந்தப் போர் நடைபெற்ற போது, 1915ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான் அங்கே என் அஞ்சலியைச் செலுத்தச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்துக்குத் தலைவணங்கச் சென்றேன்.
உலகின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், உயிர்த் தியாகமும் செய்கிறது; இதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா?" என்றார் பிரதமர் மோடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக