வியாழன், 16 ஏப்ரல், 2015

சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கதை

சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கதை
தமிழகத்தில் இன்றைக்குக் கொஞ்சம் நிலைமை மேம்பட்டிருக் கிறது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவின் நிலை இதுவல்ல. குறிப்பாக, இந்தியாவின் ஆகப் பெரும் பகுதியைக் கொண்ட வட இந்தியாவின் நிலை இதுவல்ல. காலங்காலமாக நிலவுடைமை கோலோச்சும் இந்த நாட்டில், நிலம் என்பது வெறும் மண் அல்ல; அது ஒரு அடையாளம், அதிகாரம். ஒரு ஏழை விவசாயியிடம் இன்றைக்கு ஒரு பிடி மண் இருக்கிறது என்றால், ஒரு அடி நிலம் இருக்கிறது என்றால், அதற்குப் பின் எத்தனையோ தலைமுறைகளின் நூற்றாண்டுக் கனவு இருக்கிறது. நிலத்துக்குச் சொந்தக்காரரின் அனுமதிக்குப் புறம்பாக ஒரு அரசாங்கம் அதை அப்படியே பறித்து ஒரு தனியார் நிறுவனத்திடம் தாரைவார்ப்பது எப்படி முறையாகும்? ஒரு நிலம் ஒரு தலைமுறைக்கு மட்டும் வாழ்வளிப்பதல்ல; தலைமுறை தலைமுறையாக வாழ்வளிப்பது. இன்றைய வேலைக்கே முழு உத்தரவாதம் தராத தொழிற்சாலைகளிடம் வளர்ச்சியின் பெயரால் அதை ஒப்படைக்கிறது அரசாங்கம். ஆனால், அப்படி ஒப்படைக்கப்படும் நிலமேனும் உண்மையாகவே பயன்படுத்தப் படுகிறதா?
இன்றைக்கு வளர்ச்சி வளர்ச்சி என்று நிலம் கையகப் படுத்தலுக்கு ஆதரவாகக் கூச்சலிடும் பலருக்குத் தெரியாத கதை ஒன்று உண்டு. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கதை. தொழில் வளர்ச்சியின் பெயரால், விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கொத்துக்கொத்தாகப் பறித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் சுயரூபத்தை தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் சில மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்தியிருக்கிறது. தொழிற்சாலைகளை அமைப் பதாகக் கூறி நில ஒதுக்கீட்டையும் வரிச் சலுகைகளையும் பெற்ற பல நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தவில்லை / வேறு தேவைகளுக்குப் பயன்படுத்து கின்றன என்பதோடு வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகின்றன; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், இப்படிச் செயல்பாட்டுக்கு வராத நிறுவனங்களுக்கு அளித்த, நேரடி மற்றும் வரிச் சலுகைகள் மூலம், மத்திய அரசுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ரூ. 1.5 லட்சம் கோடியைத் தாண்டும் என்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம்.
நாட்டின் 377 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 196 மட்டுமே செயல்படுகின்றன (அதாவது, ஒரேயொரு தொழிற்சாலை இயங்கினாலும் அந்த மண்டலம் இயங்குவதாக எடுக்கப்பட்ட கணக்கின்படி). சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக - தனியார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் 63% நிலம் சும்மா கிடக்கிறது. அதாவது, தன்னுடைய விவசாயிகளுக்குச் சமமான நிலப் பங்கீட்டைத் தர முடியாத அரசு, அவர்களிடம், “உன்னுடைய கிராமத்தில் தொழிற்சாலை வரும், உன் மகனுக்கு வேலை வரும்” என்றெல்லாம் சொல்லி நிலத்தைப் பறிக்கிறது. அங்கு தொழிற்சாலையும் வரவில்லை; அதனால் வேலையும் கொடுக்கப்படவில்லை; ஆனால், அந்த விவசாயிகளின் நிலம் ஒரு பெருநிறுவனத்தின் கட்டுப்பாட்டில்; எவ்வளவு பெரிய அநீதி?
எது உண்மை முகம்?
மன்மோகன் சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் இந்த நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு, இப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தை அரசு / விவசாயிகளிடத்தில் திரும்ப ஒப்படைக்க அது வலி யுறுத்தியது. மோடி அரசு இதையும் சிதைக்கிறது. ஒரு நிறுவனம் தொழிற்சாலையை விரைவில் அமைக்கிறேன் என்று சொல்லி கால அவகாசம் குறிப்பிட்டு, அந்தக் காலகட்டம் வரை நிலத்தை அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்து இழுத்தடிக்க முடியும்.
இப்படியெல்லாம் தனியார் நலன்களுக்காக ஏன் நிலங்களை அரசு கைப்பற்றித் தர வேண்டும்? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தக் கேள்வியை ஒருவர் கேட்டார், அதன் கட்சி சார்பில். பாஜகவைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன். இன்றைக்கு மக்களவைத் தலைவராக இருப்பவர். “எந்த வளர்ச்சி அடைந்த நாடும்கூட இப்படியெல்லாம் செய்யாதபோது நாம் ஏன் செய்ய வேண்டும்?” என்ற கேள்வி அன்றைக்கு நியாயமாகப் பார்க்கப்பட்டது. அன்றைக்கு அப்படிக் கேள்வி கேட்டவர்களின் உண்மையான முகத்தைத்தான் இன்றைக்கு அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது பார்க்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக