யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' என்று கூறலாம்.
டிசம்பர் 2, 1984 அன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த விஷவாயு கசிவு சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்த 5 அமைப்புகளுமே போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்படவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்றுத் தருவதற்காக போராடி வருகின்றன.
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கிய, பல நூறு சந்ததிகளை இன்றளவும் நோயாளிகளாக உலாவ விட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தான போபால் சம்பவத்தின் 30-வது நினைவு தினத்தையொட்டி இக்கடிதத்தை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளனர்.
கடிதத்தின் சாராம்சம்:
"போபால் சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், பேரழிவை ஏற்படுத்திய விபத்துக்கு காரணமான டோ கெமிக்கல்ஸ் நிறுவனம் போபால் மாவட்ட நீதிமன்றம் முன்னர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில்தான், அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தி வருகிறது.
இந்தியாவை உற்பத்தியாளர்களின் கூடாரமாக்க வேண்டும் என்ற முனைப்பில் அரசு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வலியுறுத்தப்பட வேண்டும்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்ய அறைகூவல் விடுப்பதில் உற்சாகமாஅ செயப்லடும் தங்கள் அரசு அவர்களை இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படவும் அறிவுறுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' என்று கூறலாம்.
எனவே எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்" இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய உர மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்த குமாருடன் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சி சொல்லும் அருங்காட்சியகம்:
போபால் சம்பவத்தின் 30-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி “Remember Bhopal” என்ற அருங்காட்சியம் ஒன்று பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு ஒழிப்பேழைகளாக வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக 50 ஒழிப்பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்தனையும் வேதனையின், பேரழிவின் சாட்சியங்கள். அதுதவிர, சில நினைவுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அவையும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்தவையேயாகும்.
இந்த அருங்காட்சியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமா லட்சுமி ஒரு பத்திரிகையாளராவார். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளிலும் நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அருங்காட்சியத்தை தொடங்க காரணம் என்றும் இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தானமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல எனவும் அவர் கூறினார்.
தமிழில்: பாரதி ஆனந்த்
***********
அந்தப் புகைப்படத்துக்கு வயது 30. ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு இரண்டு வயதுகூட இருந்திருக்காது. விஷவாயுவால் மரணமடைந்த எண்ணற்ற உயிர்களில், பெயர் தெரியாத அந்தக் குழந்தையும் அடக்கம். உலகின் ‘புகழ்’பெற்ற 10 புகைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புகைப்படம், இந்தியாவில் நடைபெற்ற ஒரு கொடிய படுகொலையின் (விபத்தென்று எப்படிச் சொல்வது?) நினைவுச்சின்னமாக ஆகிவிட்டது.
1984-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதியின் நள்ளிரவில் தொடங்கியது அந்தப் பேரழிவு. பூச்சிமருந்து உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில், வெளியான மீத்தைல் ஐசோசயனைடு நிகழ்த்திய கோரதாண்டவம்தான் அந்தப் பேரழிவு. 3,787 பேர் மரணமடைந்தார்கள் என்றும், 5,50,000 பேர் கடும் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்கள் கொடுத்திருந்தது. ஆனால், அதிகாரபூர்வமற்ற கணக்குகள் தெரிவிக்கும் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம். கிட்டத்தட்ட குட்டி ஹிரோஷிமாவே நிகழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஹிரோஷிமாவைப் போலவே இன்னும் போபாலில் பின்விளைவுகள் கடுமையாகத் தொடர்வதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் போபால் பேரழிவு என்பது வெறும் செய்தியாக மாறி நினைவுகளின் ஒரு மூலையில் புதைந்துபோனதுதான் பெருந்துயரம்.
இதுபோன்ற பேரழிவுகளுக்கும் சரி, சிறு விபத்துக்களுக்கும் சரி, எளிய இலக்காவது ஏழை மக்கள்தான். இந்தியாவில் ஏழைகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. பெரும்பாலான விபத்துக்களும் பேரழிவுகளும் அரசுகளின், நிர்வாகங்களின் அலட்சியத்தால்தான் நடைபெறுகின்றன என்பதற்கு போபாலைவிடப் பொருத்தமான உதாரணம் இன்னொன்று இருக்க முடியாது. எந்தத் தீங்குமற்ற தொழிற்சாலை என்றும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தரும் என்றும் தொடங்கப்பட்ட ஒரு தொழிற்சாலை, இறுதியில் மக்களுக்கு மரணத்தையும் தொடர் பாதிப்புகளையுமே அள்ளித்தந்தது.
உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் அதில் இருந்த ரசாயனங்கள் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டுகளைப் போன்றவை. உற்பத்தி இல்லாத தொழிற்சாலைக்குத் தீவிர பராமரிப்பு அநாவசியம் என்று கருதிய நிர்வாகத்தையும், அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையில் என்னென்ன ரசாயனப் பொருட்களை வைத்திருக்கிறார்கள், அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும், சரியான பராமரிப்பு நடைபெறுகிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பாத அரசையும் தவிர, போபால் பேரழிவுக்கு யார் காரணமாக இருக்க முடியும்? அங்கே பணிபுரிந்த ஊழியர்களுக்குக்கூட அங்கே வைக்கப் பட்டிருந்த பொருட்களின் அபாயத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சரிவரத் தெரிவிக்கப்படவில்லை என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும், அணுஉலைகள் உட்பட.
போபாலுக்கு முன்னும் பின்னும் ஏராளமான தொழிற்சாலை விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், போபால் அளவு ஒரு தொழிற்சாலைப் பேரழிவு இந்திய வரலாற்றில் வேறெதுவும் கிடையாது.
அப்படிப்பட்ட பேரழிவுக்குப் பிறகும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனில், வேறு எதற்குத்தான் இங்கே நீதி கிடைக்கும்? அப்படிப்பட்ட ஒரு பேரழிவுக்குப் பிறகும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனில், வேறு எப்போதுதான் நாம் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோம்?
********
********
வறுமையிலிருந்து மீள்வதற்காக பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக சேர்கின்ற நாயகன், ஒற்றை மனிதனாக பத்திரிகை நடத்தி அப்பாவி மனிதர்களை அறியாமையிலிருந்து மீட்கக் பார்க்கும் பத்திரிகையாளர், வேலையில் பிழை ஏதும் நிகழ்ந்திடக் கூடாது என்று பொறுப்பாக நடந்து கொள்ளும் இன்ஜினியர், பேட்டி எடுப்பதற்காக இந்தியா வரும் பெண் பத்திரிகையாளர், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் சிந்தனையில் மட்டும் விழுந்து கிடக்கும் அமெரிக்க முதலாளி, இன்னபிற உதிரி கதாபாத்திரங்களின் கட்டமைப்பில் படத்தின் கதையம்சம் அமைந்திருக்க, இப்பேரழிவு நடப்பதற்கு முன் நடக்கின்ற நிகழ்வுகளை கோர்க்கின்ற ஊசியாக படத்தின் திரைக்கதை அமையப் பெற்றிருந்தது.
யதார்த்தமாக ஒரு திரைப்படம் பார்க்கும்போது படத்தின் நடிகர்கள், திரைக்கதை, பின்னணி இசை, இயக்கம் இதைப் போன்ற அம்சங்களை நாம் கவனிப்பதுண்டு. ஆனால், இப்படத்தில் நாம் முக்கியமாக உற்று நோக்குவது, படத்தின் மையக்கதையினையே. கதையின் பின்னணி எப்படி கூறப்பட்டிருக்கிறது? இதுவே இப்படத்தில் நாம் பொதுவாக தேடும் அம்சம்.
வருடங்கள் பல கடந்தபோதும், போபால் பேரழிவைப் பற்றி கூறுவதற்கு பெரிய பெரிய இயக்குனர்களே முன்வராதபோது நமக்கு பரிச்சயம் அற்ற ஓர் இயக்குனர் இக்கதையை எப்படி கையாள்வார் என்ற ஐயப்பாடு மனதில் இருந்தது. சர்வதேச மேடைகளில் படைக்கப்பட்ட படம் இது என்பதால் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு மறைமுகமாக வளைந்து கொடுத்திருக்குமோ என்கிற சந்தேகமும் இருந்தது. ஆனால் இவை யாவும் படம் பார்த்த பிறகு தகர்த்தெறியப்பட்டது.
போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பாதுகாப்பு மூன்றாம் தரமாக கருதப்பட்டதை இப்படம் சாடுகிறது. பேரழிவு நடக்கும் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பொறியாளர் மீதேன் ஐசோசைனேட் என்கிற விஷ வாயுவின் தாக்கத்தால் முச்சுத் திணறி இறக்கிறார். அந்த ஓர் உயிரின் இழப்பு நிறுவனத்தாலும் அன்றைய அரசாங்கத்தாலும் கண்டுக்கொள்ளப்படாமல் போகின்றது.
தவறு நிகழ்ந்தபோது அதை சரி செய்யும் உடனடி நடிவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நிறுவனத்தில் காசை மிச்சப்படுத்தும் பொருட்டு தகுதியற்ற ஊழியர்கள் சரியான பயிற்சியின்றி கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்துடன் மட்டும் யூனியன் கார்பைட் நிறுவனம் இயங்கியதாகவும் இப்படம் கடுமையாக சாடுகிறது.
இந்தியாவிற்கு வருகை தரும் யூனியன் கார்பைடின் நிறுவனராகிய வாரன் ஆண்டேர்சனை அமெரிக்க பத்திரிகையாளர் சந்திக்கும்போது "உங்கள் நிறுவனத்தில் நாற்பதாயிரம் கிலோ மீதையில் யசோ சைனைட் பயன்படுத்துகின்றீர்களே அது மிக அதிகமென்று உங்களுக்குத் தெரியாதா? அமெரிக்காவில் இவ்வளவு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதென்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்கிறார்.
"நீ ஒரு அமெரிக்க பெண் தானே? இது அமெரிக்காவல்ல, இந்தியா. இங்கு பிரச்சினை என் நிறுவனமல்ல, மலேரியா. அதை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லிகளையே நான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறேன்" என்கிற வசனம் படத்தில் வருகிறது.
நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு கோளாறுகளையும், வரம்பு மீறல்களையும் அறிந்தும், அதைக் கண்டுகொள்ளாதவாறு நிறுவனர் செயல்பட்டார் என்பதையும் இப்படம் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கர்கள் ஆராய்ச்சி செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் இந்திய உயிர்கள் எலி போல மலிவாக விற்கப்படுவதையும், அத்தனை உயிர்களின் இழப்பினை வர்த்தக இழப்பாக மட்டும் கண்ட வாரன் ஆண்டேர்சனின் மனப்பாட்டையும், உயிர்களின் இழப்பிற்கு மன்னிப்பு கூட கேட்க மறுத்த அன்றைய அரசாங்கத்தையும், யூனியன் கார்பைடு நிறுவனத்தையும் இப்படம் கடுமையாக சாடுகிறது.
எந்த ஒரு நிறுவனம் இயங்குகின்றபோதும் கோளாறு நடப்பதற்கான சாத்தியம் என்ன என்பதையும், அப்படி ஒரு பிரச்சினை என்று வரும் போது உயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் அப்போது என்ன எடுக்கப் பட்டதென்றும் இயக்குனர் கேட்கிறார்.
இந்நிகழ்விற்கு அன்றைய அரசாங்கமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும், பொருள் ஈட்டும் பொருட்டில் இந்திய மக்கள் சுய பாதுகாப்பில் அலட்சியம் காட்டுகின்றனர் என்பதையும் இப்படம் வன்மையாக பதிவு செய்துள்ளது.
இத்தனை தைரியமாக ஒரு பேரழிவின் பின்புலத்தை இப்படத்தில் வைத்து, தான் உணர்ந்த நிகழ்வுகளை இணைத்து, அதை வளைந்து கொடுக்காமல் தான் நினைத்ததை நினைத்தவாறே வெளிப்படுத்திய விதத்தில் இயக்குனர் ரவி குமார் சிறப்பு பாராட்டு பெறுகிறார்.
இன்று வரை போபாலில் நிலத்தடி நீரில் நச்சுக் கழிவுகள் கலந்துள்ளதையும் கான்சர் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் மக்கள் வேறு வழியின்றி அந்நீரையே அருந்தி வருவதையும் இயக்குனர் பதிவு செய்துள்ளார்.
திரைப்படம் முடிந்தபின்னும் நம் மனதில் ஏற்படுத்தும் நீடித்த தாக்கத்தை வைத்தே அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது.
A pray for rain - Movie
**************
**************
1984, டிசம்பர்-2 அதிகாலை அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.
ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.
மரணத்தின் திசை
போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.
இறப்பிலும் ஆதாயம் தேடி…
முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்! பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: “யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”
உண்மையான வில்லன்
உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம்தான். போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக