செவ்வாய், 23 டிசம்பர், 2014

Books Like to Buy (Tamil - Bharthy Kavithaigal; Vu.Ve.Sa)

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்களின் தனிச்சிறப்பு அவற்றில் இடம்பெற்ற முன்னுரைகள் என்பதில் சந்தேகமில்லை. பதிப்பாசிரியர் ப.சரவணன் உ.வே.சா. முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிக்கவிருக்கிறார். காலச் சுவடு பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் கொடுத்த அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் இங்கே…
உ.வே. சாமிநாதையரின் முன்னுரைகள் பெரும் தகவல் களஞ்சியங்களாகவும் ஆவணத் தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை பலதரப்பட்டவை. நூற்செய்திகள் அனைத்தையும் ஒருசேரக் கொடுத்துவிடும் முன்னுரைகள் உண்டு. தமிழ்விடு தூது நூலுக்கான முன்னுரை அதற்கு பொருத்தமான சான்று. தூது இலக்கணம் தொடங்கி தமிழ் விடு தூதின் பொருளைச் சுருக்கித் தருதல் எனத் தொடர்ந்து பதிப்பு சார்ந்த விஷயங்களைப் பேசி முடிகிறது அது. பல சிறு நூல்களுக்கு இத்தகைய முன்னுரைகள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலான சிற்றிலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் முன்னுரைகள் இத்தன்மையவை. சில பொதுச் செய்திகளையும் பதிப்புத் தகவல்களையும் மட்டும் கொடுக்கும் முன்னுரைகள் இன்னொரு வகை. சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்டவற்றின் முன்னுரைகளை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். இத்தகையவற்றில் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என விரிவான பகுதி தனியே எழுதப்பட்டிருக்கும்.
அவர் பதிப்பித்த நூல் பட்டியலைக் காணும்போது சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் பதிப்பித் தவர் சாதாரணமான புராணங்களையும் சிற்றிலக்கியங் களையும் பதிப்பிக்க ஏன் முனைந்தார் என்று தோன்றும். அந்நேரத்தைச் சிறந்த நூல் ஒன்றைப் பதிப்பிக்கச் செலவிட்டிருக்கலாமே என்றும் எண்ணம் வரும். அகநானூற்றைப் பதிப்பிக்க எண்ணியுள்ளார். கம்பராமாயணத்தைப் பதிப்பிக்கும் எண்ணமும் இருந் துள்ளது. இம்முன்னுரைகளை வாசிக்கும்போது சாதாரண நூல்களைப் பதிப்பிக்க அவர் நேரம் செலவிட அவசியம் நேர்ந்துள்ளது எனப் புரிகிறது. அவர் நபர்களையும் மரபான நிறுவனங்களையுமே சார்ந்து தம் பணிகளைச் செய்ய முடிந்தது. அச்செயல்பாட்டில் ஒருவரின் வேண்டு கோளை ஏற்று அதற்காக ஒரு சாதாரண நூலைப் பதிப்பிக்க நேர்ந்திருக்கிறது.
தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு முறையாக எழுதப்பட இவற்றில் பல தரவுகள் உள்ளன. ஏடுகளின் குடிவழி அறிவதற்கு அவர் ஏடு தேடிய இடங்கள், குடும்பங்கள், புலமை மரபினர் பற்றிய பல்வேறு தகவல்கள் சான்றாகும். பதிப்பை உருவாக்கவும் அதை அடுத்தடுத்து மேம்படுத்தவும் அவர் கையாளும் முறைகள், அவற்றைக் கற்றுக்கொண்ட செயல்கள், நாடிய உதவிகள், பின்னிணைப்புகளின் அருமையை உணர்ந்த பாங்கு ஆகியவற்றைக் கண்டறியலாம். தமிழ் நூல் பதிப்புகளுக்கென உள்ள தனித்தன்மைகளை விரிவாக இவை கொண்டிருக்கின்றன. ஒரு நூலின் முன்னுரையில் அடுத்து அவர் பதிப்பிக்க உள்ள நூல் பற்றிய விவரத்தை வெளிப்படுத்துவது உண்டு. அதன் தேவையும் அப்படிப்பட்ட பதிப்பு மரபு ஒன்றையே அவர் உருவாக்கியமையும் முக்கியமானவை.
ரூ. 1000 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 650-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com

*************

பதிப்பாசிரியர்: பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட பாரதி கவிதையில் அவர் என்ன நவீனமான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் இன்றைய நவீன வாசகனுக்குப் பொருள் தெரியாத சொற்கள் அதிகமாக இருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்கள், தமிழாகிய சம்ஸ்கிருதச் சொற்கள், சித்தாந்த சொற்கள், சென்ற நூற்றாண்டில் மிகுதியும் பயன்படுத்தி, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள் என அவை பலவாறு அமையும்.
பழந்தமிழ் சொற்களில் சில அல், எல், அளி, முரல், வாலை, நால்வாய், தூத்திரை என்பன சில சான்றுகள். தமிழாகிய சம்ஸ்கிருத சொற்களில் சில கன்னன் (கர்ணன்), வன்னக் களஞ்சியம் (வர்ணக்களஞ்சியம்) போன்றன. தொடக்க காலத்தில் கர்ணனை, தமிழாக்கி கன்னன் என்றெழுதிய பாரதி பின்னால் பாஞ்சாலி சபதத்தில் கர்ணன் என்றே குறிப்பிடுகிறார் (150). சித்தாந்த சொற்கள் அத்துவாக்கள், கரணம், கைதவம் முதலியன. சென்ற நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்பட்டு, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள். அவையாவன: நவை, நசை, மிசை, நிருதர், கரிசகல், நொய்ம்பு, மொய்ம்பு.
நூறாண்டு கடந்த பின்னரே பாரதிக்குப் பொருள் எழுத வேண்டியிருக்கிறது என்று எண்ண வேண்டியதில்லை. பாரதியே பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்துக்குப் பொருள் விளக்கமும் குறிப்புகளும் எழுதி வைத்துள்ளார். அக்குறிப்புகள், இப்பதிப்பில் அவ்வவ் இடத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஓரிரண்டு.
மலர் விழிக் காந்தங்கள் காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில் செய்து கொண்டிருக்கும் (மாதர்) விழிகள். உரியோர் பந்துக்கள் (பந்துகளுக்கு உறவினர் என்று பொருள் கொடுக்க வேண்டியது இன்றைய நிலைமை), கதலி ஒருவகை மான்.
இந்தப் பதிப்பு யாருக்கு?
பாரதி கவிதைகளை இக்காலத் தலைமுறையினரும் வெகு சரளமாக படிக்க இப்பதிப்பு வசதி செய்துள்ளது. சந்தியின் இருப்பால் சரளமாகப் படிக்க இயலாதவர்கள் இனி வேகமாகப் படித்துச் செல்ல முடியும். பாரதியின் தமிழைப் பொருள் புரிந்து நுணுக்கமாகப் படிக்க இப்பதிப்பு உதவி புரியும். பாரதி ஆய்வில் ஈடுபடுவர்களுக்கும் பாரதியை மொழி பெயர்ப்பவர்களுக்கும் இப்பதிப்பு உதவும்.
என் மகள் ஆழி அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் காலை நான் படித்துக்கொண்டிருந்த பாரதி பாடலைப் பக்கத்தில் வந்து நின்ற அவளை எதேச்சையாய் வாசிக்கச் சொன்னேன். அவளால் வாசிக்க முடியவில்லை. அவள் வாசிக்குமாறு பாரதியை எழுதித் தருவதாக அப்போது உறுதி அளித்தேன். பள்ளி இறுதிக்குள்ளாவது முடித்துத் தருவதாகச் சொன்ன நான் அவளது மூன்றாண்டுக் கல்லூரி கல்வி நிறைவுறும் சமயம் வாயில் நுரை தள்ள அப்பணியை முடித்து அவள் கையில் தருகிறேன். இனி அவள் தடுமாறாமல் படிக்கக்கூடும் ஆயிரமாயிரம் இளைய தமிழ்த் தலைமுறையுடன் இணைந்து.
ரூ. 750 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 490-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக