குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பாபு ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
பிஹாரில் பிறந்தவர். 5 வயதில் ஒரு மவுல்வியிடம் பாரசீக மொழி கற்றார். சாப்ரா மாவட்டத்தில் தொடக்கக் கல்வி, டி.கோஷ் அகாடமியில் 2 ஆண்டுகள் பயின்றார்.
கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றதால் மாதந்தோறும் ரூ.30 உதவித் தொகை கிடைத்தது. கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தார்.
பணிபுரியும்போதே சட்ட மேற்படிப்பு பயின்று முதல் மாணவராக தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பணியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
விவசாய சாகுபடிகளுக்கு ஆங்கில அரசு விதித்த கட்டுப்பாட்டை எதிர்த்து சம்பாரன் என்ற இடத்தில் விவசாயிகள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாகப் போராடிய காந்திஜி, அங்குள்ள நிலையை அறிந்து வருமாறு இவரை அனுப்பிவைத்தார்.
உண்மை அறியும் குழுவுக்குத் தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியத்துவம் வாய்ந்த தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது காந்திஜியின் அஹிம்சை போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. ராஜேந்திர பிரசாத் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது.
தொண்டர்கள் இவரை ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைத்தனர். இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவரானார். காந்திஜியின் எளிமையால் கவரப்பட்டார். பணியாளர்களை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளை அவரே செய்தார்.
1934-ல் பிஹாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ ரூ.38 லட்சம் நிதி திரட்டினார். வைஸ்ராயால் அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிதி திரட்ட முடிந்தது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1946-ல் அரசியலமைப்பு அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3-வது முறையாகப் பதவியேற்றார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முதன் முதலாக அமைந்த அரசில் கேபினட் அமைச்சரானார்.
இந்திய அரசியல் சாசனம் வகுக்கும் பணிக் குழுவுக்குத் தலைமை ஏற்றார். இந்தியக் குடியரசு அமைந்ததில் இவரது பங்கு மகத்தானது. 1950-ல் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். 1962 வரை அந்த பதவியில் இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர்களில் 2-வது முறையாக அந்த பதவியை வகித்தவர் இவர் மட்டுமே.
இந்தியக் குடியரசை திறம்படவும் உறுதியாகவும் வழிநடத்தியவர் என்று போற்றப்படும் இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், 78-வது வயதில் காலமானார்.
------
டென்னிஸ் போட்டியில் இளம்வயதிலேயே முதலிடம் பிடித்த மோனிகா செலஸ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 2). அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
* யுகோஸ்லேவியா நாட்டில் பிறந்தவர். கார் நிறுத்தும் இடத்தில் அப்பாவிடம் டென்னிஸ் விளையாட கற் றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 5. தன்னை விட 8 வயது மூத்தவனும் அப்போதைய ஜூனியர் லெவல் டென்னிஸ் சாம்பிய னுமான அண்ணனைத் தோற் கடிப்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்தாள் அந்த சிறுமி.
* ‘ஒரு பெண் பிள்ளை டென்னிஸ் விளையாடுவதா?’ என்று அம்மாவும் பாட்டியும் கடும் எதிர்ப்பு. அதை கண்டுகொள்ளாத இந்த அப்பா-மகள் ஜோடி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுவந்தது. 1998-ல் இறக்கும் வரை தன் பயிற்சியாளர் பணியை அப்பா நிறுத்தவே இல்லை.
* டென்னிஸ் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார் மோனிகா. ஆரம்பம் முதலே அதிரடிதான். தொடர்ந்து வெற்றி பெற்று முன்னணி ஆட்டக்காரராக முன்னேறினார். 13 வயதில் ஜூனியர் நிலையில் நம்பர் ஒன் ஆட்டக்காரரானார். 1994-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
* 16 வயதில் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஸ்டெபிகிராபை தோற்கடித்தார். குறைந்த வயதில் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை என்று புகழ் பெற்றார். 17 வயதில் உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடம் பெற்றவரும் இவர்தான். 178 வாரங்கள் முதலிடத்தைத் தக்கவைத்திருந்தார்.
* 1993-ல் புகழின் உச்சியில் இருந்த இந்த 19 வயது வீராங்கனை மகளிர் டென்னிஸ் உலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதுவரை 8 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றிருந்தார்.
* 1993-ல் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் தோற்கடித்தார். அதே ஆண்டில், ஜெர்மனியில் வேறொரு போட்டியில் மோனிகா விளையாடினார். ஆட்ட இடைவேளையின்போது, ஸ்டெபிகிராபின் வெறி பிடித்த ரசிகன் ஒருவன் இவரைக் கத்தியால் குத்திவிட்டான்.
* அந்த காயம் ஒரு மாதத்தில் ஆறிவிட்டாலும், அதன் அதிர்ச்சியில் இருந்து அவரால் எளிதில் மீளமுடியவில்லை. 2 ஆண்டு காலம் டென்னிஸ் பக்கமே வராமல் இருந்தார்.
* 1995-ல் மீண்டும் களமிறங்கி வெற்றியோடு அடுத்தசுற்று பயணத்தைத் தொடங்கினார். மேலும் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்றார். மொத்தம் 9 கிராண்ட்ஸ்லாம், 53 ஒற்றையர் போட்டிகள், 6 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார்.
* 2008-ல் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பது எப்படி என்று மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் இறங்கினார். 2009-ல் ‘கெட்டிங் எ கிரிப்: ஆன் மை பாடி, மை மைண்ட், மைசெல்ஃப்’ என்ற புத்தகத்தை எழுதினார். ‘தி அகாடமி’ என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
* நடனம், மாடலிங், கூடைப்பந்து, கிடார் வாசிப்பு, சுயசரிதை கள் படிப்பது, நீச்சல், பிசினஸ் என பலவற்றில் ஆர்வம் கொண்டவர். தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விலங்குகள் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
--------------
மொழியியல் வல்லுநர், எழுத்தாளர், அரசியல் தத்துவவாதி என பன்முகத் தன்மை கொண்ட நோம் சாம்ஸ்கி பிறந்தநாள் இன்று (டிசம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
அமெரிக்காவில் பிறந்தவர். பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பயின்றார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பல மொழியியல் அறிஞர்களிடம் பயிற்சி பெற்றார். தத்துவம், கணிதமும் பயின்றார்.
புத்தகம் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். எண்ணிலடங்கா புத்தகங்கள் படித்துள்ளார். இவர் எழுதிய சொற்றொடர் இயல் அமைப்புகள் (Syntactic Structures) என்ற புத்தகம் முக்கிய மொழியியல் புத்தகமாகக் கருதப்படுகிறது.
பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதைக் கேள்விப்பட்டு, பாசிசக் கொள்கைகள் பரவும் ஆபத்து இருப்பதாக இவர் எழுதிய கட்டுரை பள்ளி பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 10.
மாமாவின் பொறுப்பில் இருந்த செய்தித்தாள் கடையில் மாலை நேரங்களில் வேலை பார்த்தார். பெரிதாக லாபம் இல்லை என்றாலும், பலரும் பல கருத்துகளையும் விவாதிக்கும் களமாக இருந்தது அந்த இடம். தனது அரசியல் அறிவு அங்குதான் விரிவடைந்தது என்கிறார் சாம்ஸ்கி.
மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) உட்பட பல கல்வி நிறுவனங்களில் 50 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலகின் மனிதவியல் வல்லுநர்களில் மிகச் சிறந்த 10 பேரில் ஒருவராக கருதப்படுகிறார்.
மொழியியல் துறை பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர். உள்ளம், அறிவுத் திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் ஆகியவற்றைத் தொடர்புகொள்ளும் அறிதிறன் அறிவியல் (Cognitive Science) துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள், செயல்பாடுகளைத் திறனாய்வு செய்து அவற்றின் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அரசியல், மொழியியல் குறித்து சுமார் 90 புத்தகங்கள் எழுதியுள்ளார். கணினியியலிலும் புத்தகம் எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் உரையாற்றியுள்ளார். உலக அளவில் கலை, இலக்கிய வட்டாரத்தில் அதிகம் சுட்டிக்காட்டப்படும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்குகிறார். உலகப் புகழ்பெற்ற அரசியல் தத்துவவாதியாகப் போற்றப்படுகிறார்.
எல்லா மனிதர்களும் சமூக, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்று கூறும் இவர், மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல்தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார்.
வாழ்நாளின் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. நோபல் பரிசுக்கு இணையான ஜப்பான் நாட்டு கியோட்டோ விருது உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக