**********
(சென்னை மாகாண சட்டசபையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
ஆற்றிய உரை)
“ஆணின் திருமண வயதை 21 என்றும், பெண்ணின் திருமண வயதை 16 என்றும்
உயர்த்த வேண்டியது அவசியம் என்ற இந்த கருத்தை இந்திய அரசுக்குத் தெரிவிக்க, இந்த
அவை பரிந்துரைக்கிறது.”
நான் இந்தத் தீர்மானத்தை இந்த நாட்டு மக்களின், முக்கியமாக நம்
நாட்டுப் பெண்களின், சார்பில் கொண்டுவர விழைகிறேன். ஏனென்றால், இங்கே இளம்
பருவத்திலேயே திருமணம் செய்யும் வழக்கம் இந்து மேல்வகுப்பினரிடையே நடைமுறையில்
இருந்துவருவதால், ஒரு பெண் குழந்தையின் பிறப்பு வரவேற்கப்படுவதில்லை. ஒரு பெண்
குழந்தை பிறந்துவிட்டால், அதைப் பெரும் துர்ப்பாக்கியமாகப் பார்க்கின்றனர்.
முக்கியமாகப் பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தால் இப்படி நடக்கிறது. ஒரு கண்ணியமான,
தகுதி வாய்ந்த கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எந்த அளவுக்குப்
பெற்றோர்களுடையதாகிவிடுகிறது என்றால், அந்த உணர்வு தந்தைக்கும், தாய்க்கும்
குழந்தையிடம் உள்ள பாசத்தையே அழித்துவிடுவதாக இருக்கிறது. நிறைய ஏழைக்
குடும்பங்களில் பெண் சிசுக்கள், பிறந்த நிமிடத்திலிருந்தே
உதாசீனப்படுத்தப்படுகின்றன.
பிரசவ வேதனை முடிந்து, குழந்தையின் முதல் அழுகைச் சத்தம் கேட்டவுடன்
பெற்றோர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களில் ஒவ்வொருவரும் குழந்தையின்
பாலினத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். குழந்தை பெண்ணாக இருந்தால்,
மகிழ்ச்சியற்ற இந்தச் செய்தியை அவர்களிடம் கூறாமல் பல முறை நானே மறைத்திருக்கிறேன்.
ஏனென்றால், வசதி படைத்தவர்களிடையேகூட இந்தச் செய்தி, வருத்தத்துடனும்
ஏமாற்றத்துடனும்தான் உணரப்படு கிறது. பல முறை நான் இந்தச் செய்தியைத் தாயிடம் கூறு
வதைத் தவிர்த்திருக்கிறேன். இந்தச் செய்தி தாய்க்கு ஒரு அதிர்ச்சியாக இருந்துவிடக்
கூடாது.
பெண் சிசுவை வளர்க்கும் விதம்
பெண் சிசுவை இளம்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கும் கெட்ட
பழக்கத்தால் அவள் பிறந்ததிலிருந்தே கவலைக்குரியவளாகி, குடும்பத்துக்கு ஒரு
சுமையாகிறாள். எட்டு அல்லது ஒன்பதாவது வயதை எட்டும்போது, அவள் பெற்றோர்கள் அவளது
திருமணத்தைப் பற்றியும், அவளது வருங்காலக் கணவர் பற்றியும், ஆகக்கூடிய செலவைப்
பற்றியும் பேசத் தொடங்குவார்கள். குடும்பத்தின் கவனமும் கவலையும் இவளைச் சுற்றியே
இருக்கும்.
இளம் பெண்கள் கள்ளம்கபடமற்ற, தூய்மையான வாழ்க்கையைத் தியாகம்
செய்தும் இந்த வெறுக்கத் தக்க தீய பழக்கத்தை ஒழித்துக்கட்ட முடியவில்லை.
பழக்கவழக்கங்கள் எவ்வாறு நம் சமூகத்தில் வேரூன்றிப்போயிருக்கின்றன என்பதை இது
காட்டுகிறது. பல சமயங்களில் பெண் குழந்தை பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள்.
மாப்பிள்ளை நிச்சயமான பிறகு, திருமணத்தைப் பற்றியும் அதற்கான ஏற்பாடுகளைப்
பற்றியுமே வீட்டில் பேச்சு நடைபெறுகிறது.
இழப்புகளே அதிகம்
இளம் பெண், குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன் இயல்பை இழக்கிறாள்.
வெட்கப்பட்டு, பேசாது ஒதுங்கி நிற்கிறாள். வீட்டில் உள்ள வயதான பெண்களின் வழிமுறை
களைப் பின்பற்றத் தொடங்குகிறாள். வீட்டிலுள்ள பெண் களுக்கு வெளியில் எந்தப்
பொழுதுபோக்கும் இல்லாத தால், இந்த இளம் பெண்களின் மூளையில் முற்றிய பெண்களின்
பாலுறவுக் கருத்துகளை அவர்கள் புகுத்து கின்றனர். திருமணத்துக்குப் பிறகு,
மாப்பிள்ளையின் பெற்றோர் களுக்கான சொத்தாகிறாள் பெண். அவளது இயல்பான
செயல்பாடுகளுக்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன. அவள் தன் மாமியார், மற்ற அயலார்
முன்பு ஓடி விளையாடவோ, சத்தமாகப் பேசவோ, உரக்கச் சிரிக்கவோ கூடாது. இவ்வாறு அவளது
இளம்பெண் பருவம், மிகவும் ஒளிவாய்ந்த பருவம், அவளிடமிருந்து பறிக்கப்படுகிறது.
அவளுக்குக் குழந்தைப் பருவமும், முதிர்ந்த பெண்ணின் பருவமும் மட்டும்தான் தெரியும்.
“ஆகவே, சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் குழந்தை பெறும் பருவத்துக்குத்
தள்ளப்படுகிறாள்.”
சிறிய நகரங்களில் சூழ்நிலை மாறலாம். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள
நம் பெண்கள் எப்போதும் இதைப் போன்றுதான் இருக்கின்றனர். இதைப் போன்ற தாய்மை அடைவது
கருச்சிதைவுக்கும் கரு கலைந்துபோவதற்கும் காரணமாகிறது. கர்ப்பப்பை சிறிய வயதில்
வலுப்பெறாமல் இருப்பதால், தாய்மையின் மாற்றங்களைத் தக்கவைத்துக்கொண்டு, முழு
வளர்ச்சிக்கும், முழுப் பேறுகாலத்துக்கும் இருக்கும் வகையில் ஊட்டத்தைப் பெற
முடிவதில்லை.
குழந்தைத் தாய்
ஒரு வருடத்தில் இப்பெண்களுக்கு மூன்று நான்கு கருச் சிதைவுகள்
நிகழ்கின்றன. அப்படி முழுக் கர்ப்பகாலம் அடைந்தாலும் பலருக்கு மிக நீண்ட, சோர்வு
அளிக்கக் கூடிய, ஆயுதம் போட வேண்டிய நிலைமையே உண்டாகிறது. இது குழந்தையையும்
தாயையும் பலவீனமாக்கிவிடுகிறது.
நான் என்னுடைய 16 வருட மருத்துவப் பயிற்சியில், மேல்வகுப்பு இந்துக்
குடும்பங்களில் 12-லிருந்து 15 வரை வயதுள்ள குழந்தைத் தாய்களின் பிரசவ காலத்தைப்
பார்த்திருக்கிறேன். அவர்கள் பேறுகாலம் கடைசியில் என்னவாகுமோ என்ற பயத்தையும்
பிரசவத்தைப் பற்றிய பதற்றத்தையும் கொண்டிருந்தனர்.
நான் பல இரவுகள், பகல்கள் அவர்களது படுக்கை அருகே கனத்த இதயத்துடன்
உட்கார்ந்திருக்கிறேன். அவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கம்
கொண்டிருக்கிறேன். அந்த நிலைக்கு அவர்கள் பொறுப்பல்ல. எந்தத் தவறான செயலோ எண்ணமோ
இல்லாத அவர்களை இந்நிலைக்குத் தள்ளியது, சமூகத்தின் குருட்டுத்தனமான, பொருளற்ற
பழக்கங்களும் பெற்றோர்களின் அறியாமையும், மூடநம்பிக்கைகளும் அல்லவா?
இந்த இளம் பெண்கள் நன்கு வளர்ச்சி அடையாத உடம்புடன் கருத்தரித்து,
பிரசவத்தின்போது படும் வேதனைகளையும், வலியால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
அப்போதெல் லாம், பைத்தியக்காரத்தனமான பழக்கவழக்கத்துக்குத் தங்களது அருமையான
குழந்தைகளைப் பறிகொடுக்கும் குருட்டுத்தனமான மனித இனத்தைத் தோற்றுவித்த வானை யும்
மண்ணையும் தூற்றுவதைத் தவிர்க்க முடிந்ததில்லை. பிரசவத்துக்கு வரும் பலருக்குப்
பிரசவ வேதனை நீண்ட நேரம் நீடிப்பதோடு, பல நாட்கள்கூடத் தொடரும். முதிர்ச்சி அடையாத
பிறப்புறுப்பாலும், முழு வளர்ச்சி அடையாத தசைகளாலும் வலியால் இவர்கள்
துன்பப்படுகிறார்கள்.
ஒரு குழந்தைப் பிறப்பே தாயின் உடல்நிலையைக் குலைய வைக்கிறது. பல
வருடங்கள் வயதானது போன்ற தோற்றத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறது.
நம் நாட்டு இளம் தாய்களின் அவலமான நிலையைப் பற்றி நினைக்கும்போது என்
இதயத்தில் இவர்கள் மீது இரக்க உணர்வு மேலோங்குகிறது. இந்த இளம் தாய்மார்கள்
அடிக்கடி அனுபவித்த கருத்தரிப்பு, கருச்சிதைவு, கருக் கலைதல் போன்றவற்றால் உடல்நலம்
கெட்டுப்போன நிலையில், அவர்கள் எப்போதும் அழுதுகொண்டும் சிணுங் கிக்கொண்டும்
நோய்வாய்ப்பட்ட ஆறு, ஏழு குழந்தைகளை வேறு பார்த்துக்கொள்ள வேண்டும். நடுத்தர
வர்க்கத்திலும், ஏழை மக்களிடையேயும் சிறிதும் இரக்கமில்லாத கணவன், படிக்காத, கொடிய
உள்ளம் கொண்ட மாமியார் இவர் களிடையே, இளமையான ஏழை மருமகளின் நிலைமை மிகவும்
கொடுமையானது. அவள் சமையற்காரியாகவும் தனது குழந்தைகளுக்குத் தாதியாகவும், வீட்டில்
பொது வேலைக்காரியாகவும், மனைவியாகவும் இயங்க வேண்டும். இத்துடன் வீட்டில் உள்ள
பெரியவர்கள் விதிக்கும் முட்டாள்தன மான எல்லா ஆச்சாரங்களையும் பின்பற்ற வேண்டும்.
இந்தக் குழந்தைப் பருவத் தாய்மார்கள் வாழ்க்கையைச் சிறிதும்
அனுபவிப்பதில்லை. தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையில், தங்கள் கஷ்டங்களை
வாழ்க்கையின் ஒரு பாகமாக எடுத்துக்கொண்டு, கர்மவினைப் பயன் என்று வருந்துகின்றனர்.
இந்தப் பெண்களின் கணவர்களும் பெரும்பாலோர், இளமையாகவும், பொறுப்பற்றும் இருப்பதால்
தங்கள் வாழ்க்கைத் துணைவிக்குக் குழந்தை பெறும் பாட்டிலிருந்து விடுதலை அளிக்கும்
புலனடக்கத்தைப் பின்பற்றுவதில்லை.
சிறுமி-விதவைகளின் மாபெரும் சோகம்
எல்லாவற்றையும்விட மிக மோசமான விளைவு, இந்துக் குடும்பங்களில்
நம்மிடையே பெரும் எண்ணிக்கையில் உள்ள சிறுமி சமூக அந்தஸ்தில் மோசமான நிலையில் உள்ள
விதவைகள்.
ஒரு இந்துக் குடும்பத்தில் உள்ள சிறுமி-விதவை வெகு மோசமாகவும்
கண்ணியமற்றும் நடத்தப்படுகிறாள். அவளது இந்த விதவை நிலைக்கு அவள் காரணம் இல்லாத
போதும், அவளது வாழ்க்கை அவலமாக்கப்படுகிறது. நான் இங்கே நமது மாகாணத்தில் இந்தக்
கொடுமையான வழக்கம் எவ்வளவு அநீதியை இழைத்துள்ளது என்பதைக் காட்டக் கீழ்க்கண்ட
புள்ளிவிவரங்களை இந்த அவையின் முன்வைக்கிறேன்.
மொத்தப் பெண்களில் மணம் புரிந்தோர் 97 லட்சத்திலிருந்து 217 லட்சம்.
விதவையானோர் 40.2 லட்சம். விதவையான வர்கள், மணம்புரிந்த பெண்களில் கிட்டத்தட்ட
பாதியாக உள்ளனர்.
நாகரிக உலகின் எந்தப் பாகத்திலும் இந்த வழக்கம்
பின்பற்றப்படுவதில்லை. நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் பெண்ணின் வாழ்க்கையை இவ்வளவு
மலிவாகக் கருது வதில்லை. இதைப் போன்ற வழக்கங்கள் இல்லாத நாடு களில் மக்கள்
மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த வளத்துடனும் நம்மைவிட உடல் வலிமை
உடையவர் களாகவும் இருக்கின்றனர். மதத்தின் பெயரால் பொருளற்ற நடப்புகளில்
ஒட்டிக்கொண்டு, நாம் திறனற்றுத் துன்பப்படுகிறோம்.
ஏழ்மையாலும் நோய்களாலும் நாம் மிகவும் வருந்து கிறோம். நம்முடைய நாடு
சுதந்திரமானதும் இல்லை. இந்தக் கள்ளமில்லாத, துன்பத்தில் உழலும் உதவியற்ற சிறுமியர்
சார்பில், கோடிக் கணக்கான சிறுமியர்-மனைவிகள் சார்பில், கோடிக் கணக்கான சிறுமியர் -
தாய்கள் சார்பில், குழந்தை விதவைகள் சார்பில் நான் இங்கு சட்டசபையில் இருக்கும்
எல்லாப் பிரிவினர்களிடமும் இந்துக்கள், முகம்மதியர்கள், கிறிஸ்துவர்கள் என்று
அனைவரிடமும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கக் கோருகிறேன். இது கோடிக் கணக்கான
நம் சிறுமிகளை, அவர்கள் முதிர்ச்சி அடையாத வயதில் மனைவி ஆவதிலிருந்தும் தாய்
ஆவதிலிருந்தும், சுமத்தப்பட்ட விதவை வாழ்க்கையிலிருந்தும் காப்பாற்றி, இந்த மெலிந்த
தலைமுறைக்குப் பதிலாக எதற்கும் வளையாத, சக்தி வாய்ந்த வம்சத்தை உருவாக்க உதவும்.
(இந்தத் தீர்மானம் 1928 மார்ச் 27-ம் தேதி சென்னை மாகாண சட்டசபையால்
ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை என்ற நூலிலிருந்து சில
பகுதிகள்
**************
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, வாய்ப்பு குறைந்த ஒரு
சமூகத்திலிருந்து வந்தவர். பெண்கள் திருமணம் செய்துகொள்ளவே பிறந்தவர்கள் என்ற
எண்ணம் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. டாக்டர் ரெட்டியின் தளர்வுறாத ஆற்றலும்
துணிச்சலும், அவர் வழியில் குறுக்கிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு, 1912-ல்
இந்தியா வில் முதல் பெண் மருத்துவராகவும் 1927-ல் சட்ட சபையில் தலைமை வகித்த முதல்
பெண்ணாகவும் வரலாற்றில் இடம்பெற உதவின.
அவர் சட்டசபை உறுப்பினராகவும் சமூக சீர்திருத்த வாதியாகவும்
கல்வியாளராகவும் விளங்கியவர். சமுதாய அடிநிலை மக்களின் உயர்வுக்குப் பெரிதும்
உழைத்தவர். நேர்மையற்ற, அநீதியான தேவதாசி முறையை நீக்கியதும், குழந்தைகளைக்
கொடுமைக்கு ஆட்படுத்தும் வழக்கத்தைத் தடுத்ததும், பெண்களின் திருமண வயதை
உயர்த்தியதும் மற்றும் பலவும் அவர் தந்த கொடையாகும்.
சட்டசபை உறுப்பினராகவும் பெண்களை ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கும்
ஆர்வலராகவும் இருந்தார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
அவர் நினைவாக இன்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கிவரும் அவ்வை
இல்லமும், பள்ளிகளும் ஆதர வற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாதி, மத எல்லைகளைக்
கடந்து 1930-ல் அவர் உருவாக்கிய முதல் இல்லமாகும்.
டாக்டர் ரெட்டியின் மற்றொரு கொடை, சென்னை புற்றுநோய் நிறுவனத்தைத்
தோற்றுவித்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968-ல் மறைந்தபோது அப்போதைய இந்தியப்
பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வானொலியில் ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்
டாக்டர் சரோஜினி நாயுடுவும் இல்லாமல்போயிருந்தால், நாம் இன்று இத்தகைய
உயர்பதவிகளில் அமர்ந்திருக்க இயலாது’ எனப் பாராட்டினார். டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டி 1968 ஜூலை 22-ம் நாள் மறைந்தபோது, உலகம் அந்த உன்னதமான பெண்மணிக்குத் தன்
வணக்கத்தைத் தெரிவித்து மரியாதை செலுத்தியது.
- டாக்டர் வி. சாந்தா, தலைவர், புற்றுநோய் நிறுவனம், சென்னை
பிறப்பு: 30.8.1886 இறப்பு: 22.8.1968
பிறப்பு: 30.8.1886 இறப்பு: 22.8.1968
************************
சில மாதங்களுக்கு முன்னால் சென்னையில் இயங்கும் டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி நிறுவிய அவ்வை இல்லத்தில் படிக்கும் பெண் குழந்தைகளைச்
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலர் ஆதர வற்றவர்கள். மற்றவர்கள் எளிய
குடும் பங்களிலிருந்து வந்தவர்கள். 12-ம் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லத்
தயாராக இருப்பவர்கள். நம்பிக்கையோடு எதிர்காலத்தை அவர்கள் வரவேற்றது எனக்கு அசாதாரண
நிறைவை அளித்தது.
இந்தியாவுக்கே முன்மாதிரி
80 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வயதுள்ள, ஆதரவற்ற ஏழைப் பெண்
குழந்தைகள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு 60% கூட இருக்காது. உயிர் மிஞ்சியிருந்
தால் நிச்சயம் திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்திருக்கும். அந்தக்
காலகட்டத்தின் முக்கியமான தலைவர்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகக்
குரல்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு அடிமைத் தனத்தில் ஆணிவேர்
என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. இந்தப் புரிதல் இருந்த மிகச் சிலரில் டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். இன்று தமிழகத்தின் பெண்கள் இந்தியாவுக்கே
முன்மாதிரியாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு அடி கோலியவர் முத்துலட்சுமி ரெட்டி
என்று கூறலாம்.
முத்துலட்சுமி ரெட்டி மிகச் சிறந்த மருத்துவர். ஆனால், மிகச் சிறந்த
எழுத் தாளர் அல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை இலக்கியத் தரத்துக்கு உதாரண மாகக் கொள்ள
முடியாது. ஆனால், நூல் முழுவதும் ததும்பி வழியும் உண்மையும் நேர்மையும் அதை
முக்கியமான படைப் பாக ஆக்குகிறது.
19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்
தமிழகத்தில் பெண்களின் நிலை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் நிலை,
எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய முக்கியமான ஆவணமாக இந்தப் புத்தகத்தைக்
கொள்ளலாம்.
தடைகளைத் தாண்டி…
முத்துலட்சுமி ரெட்டி என்றால், தேவதாசி முறைக்கு எதிராகக்
குரல்கொடுத்தவர் என்றுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அந்தக் குரல்
மக்களிடையே ஒலிக்க, அவர் மிகப் பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது. பெரிய
வளானதும் பள்ளி செல்ல இயலாததால், தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி
வெற்றி பெற்ற முத்து லட்சுமி, புதுக்கோட்டையில் மிகவும் பாடுபட்டுக் கல்லூரியில்
சேர்ந்தார். இண்டர் வகுப்பு முடிந்தபின், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த
அவர் உடல்நலம் சீராக இல்லாத போதிலும், மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி
பெற்றார்.
மருத்துவராகத் தொழில்புரிந்து பல வெற்றிகளைப் பெற்றாலும், நமது
நாட்டின் அடித்தள மக்களின் தேவைகளைப் பற்றி அவர் மறக்கவேயில்லை. அவர் கூறுகிறார்:
இந்தியாவின் பெரிய நகரங்களில் 1,000 பிறப்புக்கு இறப்பு (ஒரு
வயதுக்குள்) 350-லிருந்து 400 வரை. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25
ஆண்டுகள்தான். அறியாமை, வறுமை, சுத்தமின்மை, குறைந்த கல்வியறிவு, சுகாதாரக் கட்டுப்
பாடுகள்பற்றிய அறியாமை ஆகியவையே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கொள்ள வேண்டும்.
எனவே, இலவசக் கட்டாய ஆரம்பக் கல்வி, இந்தியாவின் எல்லா இடங்களிலும் அவசரத் தேவையாக
இருக்கிறது.
சிசுக்களுக்குப் பால் வேண்டும். உழைக் கும் பெண்களின்
குழந்தைகளுக்குக் காப்பகங்கள் வேண்டும், ஏழைகளுக்கு இலவச மருத்துவமனைகள் வேண்டும்
என்று தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் முத்துலட்சுமி. மகாத்மா காந்தியிடம் மிகுந்த
பற்றுக்கொண்டிருந்த அவர், பெண்ணின் திருமண வயதை 16 வயது வரை உயர்த்தத் தனது
உறுதியான ஒப்புதலை காந்தி அளித்ததையும், தேவதாசி முறையை அவர் கடுமையாக
எதிர்த்ததையும் நன்றியோடு நினைவுகூர்கிறார்.
நாம் எங்கிருந்தோம், எங்கு வந்திருக் கிறோம் என்பதை அறிந்துகொள்ள
உதவி யாக இருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. புத்தகத்தின் தமிழ் வடிவம் இதற்கு
முன் வரவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. எனவே, மொழிபெயர்ப்பைச் செய்த பேராசிரியர்
ராஜலட்சுமிக்கு நாம் எல்லோரும் கடன்பட்டிருக்கிறோம். மொழி பெயர்ப்பு, எளிமையான
தமிழில் எல்லோ ருக்கும் புரியும்படி செய்யப்பட்டிருக்கிறது. பேராசிரியர் இன்று
நம்மிடையே இருந் திருந்தால், புத்தகம் மிகச் செம்மையாக வந்திருப்பதுகுறித்து
மகிழ்ச்சி அடைந் திருப்பார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, வெளியீடு: அவ்வை இல்லம் -
ராஜலட்சுமி அறக்கட்டளை, சென்னை. தொடர்புக்கு: 044 - 24421113
- பி.ஏ. கிருஷ்ணன், புலிநகக்கொன்றை, கலங்கிய நதி ஆகிய நாவல்களின்
ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
**********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக