கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட் டுள்ளன என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 1993- முதல் 2009 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்க உரிமங்களை ரத்து செய்துள்ளது.
நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு சுமார் 1.86 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தலைமைத் தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நிலக்கரி சுரங்கத் தொழிலில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாகவும், சில நிறுவனங்கள் சுரங்கப் பணிகளை பல ஆண்டு களாகத் தொடங்காமல் இருப்ப தாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இவ்வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்தது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்தது. இதுதொடர்பாக பொதுநல வழக் குகளும் தொடரப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இவ்வழக்கின் தீர்ப்பை திங்கள்கிழமை வெளி யிட்டது. மொத்தம் 165 பக்கம் உள்ள தீர்ப்பில், “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக் குழுவின் செயல் பாடுகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இல்லை. வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் ஏதும் சுரங்க ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட வில்லை. தேசத்தின் சொத்து நியாயமற்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதிக்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்த சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அதன் பின்விளைவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான மேலும் ஒரு விசாரணை வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.
அதே சமயம், மிகக் குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, பெரிய மின்திட்டங்களுக்கு (அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்ஸ்-யுஎம்பிபி) ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படமாட்டாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த திட்டங் களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
இரு ஆட்சியிலும்..
கடந்த 1993-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுரங்க ஒதுக்கீடு களை சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள் ளது. இதில், கடந்த 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியும், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஆட்சியில் இருந்தன.
இந்த சுரங்கங்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிஸா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
***********************
***********************
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருநிறுவனங்கள் ஆகியோர் கூட்டுசேர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நடத்திய கொள்ளையைப் பற்றி என்ன சொல்வது? ஊழல்தான் அரசின் நடைமுறையா என்ற கேள்விதான் எழுகிறது!
நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்குவதில் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை; வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டவும், பினாமிகள் மூலம் பணம் சம்பாதிக்கவும் கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்தவர்கள் தவறாகச் செயல்பட்டுவந்துள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
நாட்டின் பொதுச் சொத்துகளான இயற்கை வளங்களை நேரடியாகத் தங்களால் வசப்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலையில், பொது நன்மை கருதியே செயல்படுவதாகப் பாவனை காட்டி, ஊழல் செய்வதே இப்போதைய அரசியல் தலைவர்களின் நடைமுறையாகி விட்டது. மணல் கொள்ளை, நிலத்தடி நீர் திருட்டு, சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவதில் ஊழல் என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதை ஆட்சியாளர்கள் தங்களுடைய சுயநலத்துக்காகவே வளைத்துக்கொண்டுவிடுகின்றனர். நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதிகாரத்துக்கு அஞ்சியோ, தங்களுக்கும் அதில் சிறிது ஆதாயம் கிடைக்கிறது என்பதாலோ இதற்கெல்லாம் மௌன சாட்சி களாகிவிடுகின்றனர் அல்லது ஊக்கமாகத் துணை நிற்கின்றனர்.
1993 முதல் 2012 வரையில் இந்த முறைகேடுகள் நடந்திருப்பதால், இந்தக் கட்சி மட்டும்தான் ஊழல் செய்தது என்று கூற முடியாதபடி இரு பெரிய தேசியக் கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் இதேபோல நடந்தது என்பதை அறிந்ததும் அந்த ஒதுக்கீடுகளையே உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது நிலக்கரி வயல்கள் சிமென்ட் தயாரிப்பு ஆலைகளாலும் மின்னுற்பத்தி நிலையங்களாலும் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பதால் ரத்துசெய்யும் முடிவை உடனே அறிவிக்காமல் அவகாசம் தந்திருக்கிறது.
நிலக்கரி வயல்களைப் பொறுத்தவரையில், ஊழல் செய்ததல்லாமல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் உரிய நேரத்தில் நிலக்கரி கிடைக்காதபடிக்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனாலேயே வெளிநாடுகளிலிருந்து பெருமளவு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. நிலக்கரி இறக்குமதியிலும் தரகுப் பணம் பெறப்பட்டது. அதனால், மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கும் பிற ஆலைகளுக்கும் உற்பத்திச் செலவு கூடியது, லாபம் குறைந்தது.
நிலக்கரி வயல்களைப் பொது ஏலம் மூலம், அனைவரும் பங்கேற்க வசதி செய்துவிட்டு அரசு மறு ஏலம் விட வேண்டும். இதுவரை மிகக் குறைந்த கட்டணத்தைச் செலுத்திவிட்டு நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொள்ளை லாபம் சம்பாதித்த நிறுவனங்கள் அனைத்தும், அரசுக்குச் சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்டுச் செலுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
கனிமங்களை அரசுகள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதால் பொருளாதாரம் மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமா, சுரங்க நிறுவனங்கள் செல்லும் இடமெல்லாம் அங்குள்ள மக்களின் உரிமைகள் சூறையாடப்படுவதையும் நாம் கண்டிருக்கிறோம். எனவே, சுரங்க ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருநிறுவன முதலாளிகள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்குவதன் மூலம் சுரண்டலற்ற ஓர் எதிர்காலத்தை நமக்கு உறுதிசெய்ய வேண்டும்.
****************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக