சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர்.
நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற
இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே
குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப்
பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும்.
தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம்மொழிகள். ஆனால், நிதி
ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று
நாடாளுமன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள
புள்ளிவிவரம் கீழே:
அரசின் நிதி ஒதுக்கீடு
|
||
ஆண்டு
|
தமிழ் மேம்பாட்டுக்கு
|
சமஸ்கிருத மேம்பாட்டுக்கு
|
2008 - 09
|
4.47 கோடி
|
72.10 கோடி
|
2009 - 10
|
8.61 கோடி
|
99.18 கோடி
|
2010 - 11
|
10.16 கோடி
|
108.75 கோடி
|
மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்
செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், இப்போது மோடியின் ஆட்சிக்
காலத்திலும் நிலை இதேதான்!
இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையாசிரியர்,
‘தமிழ் வாழ்க’என எழுதிவைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது
வேடிக்கை!
நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ்கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில்
எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழிகளுக்கு
இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும்
வங்க மொழிக்கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22
மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் 12
பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த
அடிப்படையில் இன்னும் சில உண்மைகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.
சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22
மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச்
சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத்திலும்
பேசப்படவில்லை என்னும் உண்மையையும் இங்கே பேசியாக வேண்டும்.
1961-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருதம்
பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக்
காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 15,000-க்கும்
குறைவானதாக ஆகியுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள்,
கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன. காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்
கணக்கானோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி
சமஸ்கிருதம் மட்டுமே!
அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி
மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழிகளையும்
புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டும் கோடிக்
கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி ‘வாரம்’கொண்டாடுவது ஜனநாயக
விரோதம் இல்லையா?
சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர்
பேரவையின் பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு: subavee11@gmail.com
**************
**************
மொழிகள் பலவிதம்
இந்தியாவில் இன்று பேச்சுவழக்கில் 406 மொழிகள் உள்ளன. பல மொழிகளைப்
பேசும் மக்கள் உள்ள நாடு இந்தியா மட்டுமல்ல. இந்தோனேசிய மக்கள் 706 மொழிகளைப்
பேசுகிறார்கள். சீனாவில் பேச்சுவழக்கில் 298 மொழிகள் உள்ளன. மிகச் சிறிய காமரூன்
நாட்டில்கூட 280 மொழிகள் உள்ளன. ஆனால், இந்த நாடுகளோடு இந்தியா மாறுபடுகிறது. மற்ற
நாடுகளில் ஒரு மொழி பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
உதாரணமாக, சீனாவின் 130 கோடி மக்களில் 98 சதவீதத்தினர் சீன மொழியை
(பல வடிவங்களில்) மட்டுமே பேசுகின்றனர். இந்தியா அப்படியல்ல. 42 கோடி மக்கள் இந்தி
பேசுகிறார்கள். வங்க மொழியை 8 கோடி மக்களும் தெலுங்கை 7.4 கோடி மக்களும், தமிழை 6
கோடி மக்களும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அதாவது, இந்தி பேசும் மக்களைவிட,
இந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் அதிகம் (40 :
60). இத்தகைய சூழலில், தங்கள் தாய்மொழியைத் தவிர, மற்றொரு மொழியை இந்தியர்கள்
அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். அந்த மொழி ஆங்கிலமாக இருக்கும் என்றால்,
அதனுடைய பயனும் வாய்ப்புகளும் மிக அதிகம்.
இன்று உலகின் 99 நாடுகளில், 33.5 கோடி மக்கள் பேசும் மொழி ஆங்கிலம்.
இதுதவிர 50.5 கோடி மக்கள் இன்று உலகில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அறிவு
பெற்றுள்ளவர்கள்.
2020-ம் ஆண்டு முடியும்போது, உலக மக்கள்தொகையில் 200 கோடி மக்கள்
ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தவர் களாக இருப்பார்கள். தொழில்துறைகள் தொடர்பான
பரிமாற் றங்கள் உலக அளவில் 55% ஆங்கிலத்திலேயே இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், ஐ.ஏ.எஸ். தேறி, நாளை பல்வேறு மாநிலங்களிலும்
பணியாற்றச் செல்லவிருப்பவர்களுக்கு 10-ம் வகுப்பு மாணவர் தெரிந்துகொள்ள வேண்டிய
ஆங்கில அறிவுகூடத் தேவையில்லை என்று எங்கள் பிரதமரே நீங்கள் எப்படி
முடிவெடுக்கலாம்?
தேர்தல்கள் வரும், போகும். ஆனால், தலைமுறைகள் என்னவாகும்?
*************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக