பன்மைப் பண்பாட்டு அடையாளம் கொண்ட சென்னை என்னும் ஊர்த் தொகுதியை ஒரு சிமிழுக்குள் அடக்க இயலாது!
1970-களின் ஓர் ஆண்டில்… ஒரு மதியப் பொழுதில்… மவுன்ட் சாலையில் வந்து இறங்கினேன். பி.ஆர்.அன். சன்ஸ் கட்டிடத்துக்கு அருகில் இருந்த ஒரு தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் நின்று, நான் வாழ வந்த பூமியை உணரலானேன். இன்று வரை சென்னை மரங்கள் எனக்கு நிழல் தர மறுத்ததில்லை.
என் மனம் நிறைந்து பொங்கி வழிந்தது. சென்னைக்கு வந்து சேர்வது எத்தனை ஆண்டுக் கனவு? என் முன்னால் இருந்த மவுண்ட் சாலையின் நீளத்தையும் அகலத்தையும் அளந்துகொண்டு நின்றேன். மிக விசாலமான ஒரு தெருவை ஒரு சங்கக் கவி ‘ஆறு கிடந்தன்ன அகல நெடுந்தெரு' என்று வர்ணித்தது நினைவில் வந்தது. ஆறு படுத்துக்கிடப்பதுபோல் இருக்கிறதாம் அவன் பார்த்த தெரு. அவன் பார்த்த தெருவில் தேர்கள் ஓடியிருக்கும். புரவிகள், யானைப் படைகள் இடித்துக்கொள்ளாமல் நடந்திருக்கும். எனக்கு முன் வெளிகளை நிறைத்துக்கொண்டு உலோக ரதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நான் பார்த்து வியந்த அந்த இயக்கத்தின் ஜீவத்துடிப்பு மிகுந்த கணம் இன்னும் என் நினைவில் நிற்கிறது.
சென்னைக்கு வந்த புதிதில் நான் காலை நேரங்களில் மிகவும் அவஸ்தைப்பட்டுவிட்டேன். உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அந்தக் கணங்களை இட்டுநிரப்பும் ஓசைகளும் வாசனைகளும் கிடைக்க வில்லை. சென்னையில் உறங்கி எழுந்த இரண்டாம் நாள் என் அறையைக் கண்டு நான் பயந்துபோனேன். என்னை யாரோ கடத்திக்கொண்டு வந்து இங்கு போட்டது மாதிரி இருந்தது. அது நான் எடுத்த அறை என்பது எனக்கு உறைக்க வெகு நேரம் பிடித்தது.
ஓசையற்ற இரைச்சல்
புதுச்சேரியில் பல விதமான ஓசைகளும் வாசனை களுமே எனக்கு உறக்கம் கலைக்கும் விஷயங்களாக இருந்தன. எங்கள் தோட்டத்து மரங்களில் விடிந்தும் விடியாததுமாக வந்துசேர்ந்து அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகள். சமையல்கட்டிலிருந்து வரும் வாசனை. இந்த இரண்டும்தான் நான் எழுந்திருக்கும் நேரம் என்பது என் பிரக்ஞையாக இருந்தது. தஞ்சாவூரில் ஐயன் கடைத்தெரு விழித்துக்கொண்டு ஊதுபத்தி வாசனையோடு காலை நேரத்தை வரவேற்கும். வெங்கடேசப் பெருமாள் அக்ரகாரத்துக்கே உரிய சப்தங்கள், காய்கறி வியாபாரிகள், பால் வாங்கப்போகும் மாமிகளின் கால் சரசரப்புச் சத்தங்கள், அவர்களுக்குப் பால் தர நடக்கும் மாடுகளின் குளம்புச் சத்தங்கள், கறப்பவர்களை உசுப்பேற்றும் கிருஷ்ணக் கோனாரின் அதட்டல் குரல்.
சென்னையில் எந்த ஓசையும் வாசனையும் இல்லாமல் பொழுது விடிந்தது. சிட்டுக்குருவிகள் இல்லாத கான்கிரீட் காடு. பொறியில் மாட்டிக்கொண்ட எலி மாதிரி ஆட்டோக்கள் கிறீச்சிட்டன.
இங்குதான் நான் 30 வருஷங்களாக வாழ்கிறேன். இங்கிருந்து போக முடியவில்லை. சென்னைக்கு ஏதோ அமானுஷ்ய, ஆகர்ஷண சக்தி இருக்கிறது.
நாம் வாழும் வீடுகளுக்கு முகம் இருக்கிறது; அவை பேசும் என்று எழுதினார் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தா யெவ்ஸ்கி. எனக்குத் தோன்றுகிறது, வாசனையும் இருக்கிறது என்று. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனியாக அவற்றை ஞாபகப்படுத்தும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் வாசனை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.
சென்னையின் வாசனை என்ன? முதலில் சென்னை என்பதுதான் என்ன? இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் அதைச் சுற்றி இருந்த மீனவர் குடி யிருப்பே தொடக்ககாலச் சென்னை. ஒரு தீப்பெட்டி அளவுக்குச் சின்ன ஊர் அல்லது பேட்டை. அப்போதே கோட்டைக்கு வெளியே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் எல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர்கள். வெள்ளையர் அதிகாரமும் ஆதிக்கமும் வளர வளர, எல்லா ஊர்களும் அவர்களின் ஜேபிகளில் வந்து விழுந்தன. இன்று வட சென்னை என்று அறியப்படும் புறக்கணிக்கப்பட்ட பகுதியே வெள்ளையர் மற்றும் அவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் பல புகழாளர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது. இராமலிங்க அடிகள், பி.டி. தியாகராயர், வள்ளல் பச்சையப்பர் முதலான பலரும் வாழ்ந்த பகுதி அது.
எதுதான் சென்னை?
சென்னை என்று இன்று அறியப்படுவது பல ஊர்களின் தொகுதியே. அந்த ஊர்களும் சாதி, வர்க்கம், செய்தொழில் காரணங்களால் தனித்தனி வாழ்க்கை முறை கொண்ட சிற்றூர்களாகும். எனவே, பன்மைப் பண்பாட்டு அடையாளம் கொண்ட சென்னை என்னும் ஊர்த் தொகுதியை ஒரு சிமிழுக்குள் அடக்குதல் சாத்தியம் இல்லை.
ஆர்க்காடு நவாபுகள் காலத்து சையது கான் பேட்டையும் (சைதாப்பேட்டை), பார்த்தசாரதிப் பெருமாளை லட்சியமாகக் கொண்ட ஒரு பக்கத் திருவல்லிக்கேணியும், ஆர்க்காடு இளவரசர்கள், வாலாஜா மரபினைச் சார்ந்த இசுலாமியர்க் குடியிருப்புத் திருவல்லிக்கேணியும், கபாலீசுவரரை மையம் கொண்ட பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார், கடற்கரையை ஒட்டிய கிறித்துவர்களின் வாழிடமான மயிலாப்பூரும், சாந்தோமும் என்று எல்லாராலும் அடர்த்தி கொண்ட ஊர்களின் ஒட்டுமொத்தத் தொகுதியே இன்று சென்னை எனப்படுவது.
இந்து, சமணம், பொளத்தம் போன்ற பல்வேறு மதத்தினருக்கும் வாழிடமாகச் சென்னை விளங்குவதே அதன் சிறப்பு. எழுத்தாளர்கள் பலர் சென்னையை ருசித்து, சென்னையின் பயன் கொண்டு வாழ்ந்தாலும், சென்னையைப் பற்றி ஒரு நரகத்தின் சித்திரத்தையே இன்னும் தந்துகொண்டிருக்கிறர்கள். தன்னிடம் இருக்கும்படி சென்னை யாரையும் கட்டாயப் படுத்தியதே இல்லை. வெறுப்பாளிகள் சென்னையின் மண்ணைத் தட்டிவிட்டு ஊர் போய்ச்சேர வேண்டியதுதானே? யாரும் போவதாகத் தெரியவில்லை. காரணம், சென்னையின் ருசியை உணர்ந்தவர்கள் சென்னையை விட்டுப் பிரிதல் சாத்தியமே இல்லை.
எல்லோருக்குமான நகரம்
நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ அதற்குத் தக தன்னைத் தகவமைத்துக்கொண்ட சீர்மை மிக்கது சென்னை. இரண்டு ரூபாய்க்கும் நல்ல தேநீர் உங்களுக்குக் குடிக்கக் கிடைக்கும். 75 ரூபாய்க்கும் ஒரு கப் தேநீரை அருந்த முடியும். மாடிப்படியின் கீழ் ‘மாது’ மாதிரியும் காலம் தள்ள முடியும். நட்சத்திர விடுதிகளிலும் உங்களைச் சீராட்டிக்கொள்ள முடியும். கூடைச் சோறும், தள்ளுவண்டி உணவும், உயர் ரக சர்வதேசத் தர உணவும் நீங்கள் பெறக்கூடிய இடம் சென்னை.
அடுத்த வேளை உணவுக்கும் உத்தரவாதமில்லாத மக்கள், சென்னையில் காற்று வெளியில் நீட்டப்படும் கருணைக் கரத்தைப் பற்றிக்கொண்டுதான் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்துகிறார்கள். அதற்கும் அடுத்த வேளை அவர்களுக்கு உணவு வழங்கத் தேவதூதர்கள் வருவதில்லைதான். அவர்களை விடவும் உன்னதமான சக மனிதர்கள் வந்துவிடவே செய்கிறார்கள்.
நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான சொர்க்க பூமி சென்னைதான். நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, மேட்டு நிலமோ, பள்ளமோ எதுவானாலும் என்ன, மக்கள் எப்படியோ அப்படித்தான் ஊரும் இருக்கும். மக்களிடம் இருந்து ஊருக்கும் ஊர்க் குணம் மக்களுக்கும் பரிமாற்றம் கொள்வதுதானே இயற்கை. சென்னையின் வண்ணத்தை மக்களும், மக்களின் வண்ணத்தைச் சென்னையும் பூசிக்கொள்கிறார்கள்.
எல்லோரையும் தனக்குள் உள்ளடக்கிக்கொண்டு, எல்லோருக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பங்களித்து எல்லோரையும் வாழ வைக்கும் பெரும் கருணையே சென்னையின் வாசனை.
கௌரவமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்னை வந்து, அகௌரவமாக வாழ நேர்ந்தவர்கள், இந்த ஊர் தம்மை வஞ்சித்துவிட்டதாக நினைக்கிறவர்கள், எல்லோரும் விடிந்து எழுவது சென்னையாகத்தான் இருக் கிறது. ஏதோ ஒரு மந்திரக் கயிற்றால் சென்னை அவர் களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. என்னையும்தான்.
***************************
நகரம் வளர்வதற்கேற்ப அதன் கட்டமைப்புகள் திட்டமிடப்படுவதில்லை.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் நான் சென்னை நகரில் குடியேறியபோது, இப்போது நான் வசிக்கும் கலைஞர் கருணாநிதி நகர் பகுதி வயலாக இருந்தது. நான் குடியேறுவதற்கு 40 வருடங்கள் முன்னால்தான் தியாகராய நகர் புதிய குடியிருப்புப் பகுதியாக உருவாகியிருந்தது. இன்றைய மொத்த தியாகராய நகரும் ஒரு பிரம்மாண்டமான ஏரியாக இருந்தது என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அமைந்திருக்கும் ஏரியும் தியாகராய நகர் ஏரியும் அடுத்தடுத்து அமைந்திருந்த ஏரிகள் என்பதை 1921-ம் வருட சென்னை வரைபடத்தைப் பார்த்தால் தெரியும்.
சென்னை என்பதே பல கிராமங்களின் தொகுப்புதான். கிழக்கிந்திய கம்பெனி வாங்கி ஜார்ஜ் கோட்டை கட்டிய மதராஸ்பட்டினம் என்ற கிராமம், இன்றைய பெருநகர் சென்னையாக விரிவடைந்ததற்கு அதைச் சுற்றிலும் இருந்த பல கிராமங்களை, சிற்றூர்களைப் படிப்படியாக ஆங்கிலேயர் விலைக்கு வாங்கி இணைத்ததுதான் காரணம். தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், கத்திவாக்கம், சாத்தாங்காடு, வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம் பாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், புலியூர் என்று எல்லாமே தனித்தனி கிராமங்களாக இருந்து இணைந்தவை.
ஒருங்கிணைக்கப்படாத போக்குவரத்து
இப்படி இணையும்போது அவற்றைச் சாலை களாலும், ரயில் பாதைகளாலும் இணைப்பதிலும், பாதாளச் சாக்கடை, குடிநீர்க் குழாய்கள் அமைப்பதிலும் காட்டிய அக்கறையை, இணைப்பையொட்டிப் புதிதாக உரு வாகும் பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படுத்துவதில் ஆங்கிலேய ஆட்சி காட்டவில்லை. மும்பையின் புறநகர் ரயில் பாதையும் சென்னையின் புறநகர் ரயில் பாதையும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை. அங்கே சர்ச்கேட் தொடங்கி விரார் வரையிலும் இருக்கும் சுமார் 30 ரயில் நிலையங்களிலும் இரு புறமும் வெளியே பேருந்து முனையங்கள் விசாலமாக ஏற்படுத்தப்பட்டன. ஆனால், சென்னையில் ரயில் நிலையங்கள் எதிலும் அப்படிப்பட்ட ஏற்பாடே கிடையாது. பொதுப் போக்குவரத்தின் அடிப்படைத் தத்துவமே ரயில், பேருந்து, டிராம், டாக்சி, ஆட்டோ போன்றவை எளிதில் பயணிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற வசதியாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். இதை ஐரோப்பா நெடுகிலும் காண முடியும்.
சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்தில் தவறவிட்ட இந்த அம்சத்தை சுமார் 60 வருடங்களுக்குப் பின் தொண்ணூறுகளில் பறக்கும் ரயில் எனப்படும் மேம்பால ரயிலை ஏற்படுத்தியபோதும் சரிசெய்யவே இல்லை. பல இடங்களில் ரயிலடியிலிருந்து இறங்கி பேருந்து பிடிக்க நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கும். தற்போதைய மெட்ரோ ரயில் பாதையில்தான் ரயிலடி களை ஒட்டி, பேருந்து இணைப்பு வசதி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையின் புறநகர் ரயில் திட்டங்களும் மெட்ரோ ரயில் திட்டங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் படிப்படி யாக அமைக்கப்பட்டபோதும் அவற்றுக்கிடையே சீரான இயைபும் இணைப்பும் தவறவிடாமல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் இந்த அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.
நீர்நிலைகள், சந்தைகள்
மும்பையின் வளர்ச்சியில் அதன் நீர்நிலைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. மும்பை பெருநகரத்துக்கு நடுவிலேயே இன்னமும் மூன்று பெரிய ஏரிகள் இருக்கின்றன. சுமார் 40 கிராமங்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட சென்னையில் இருந்த 40 ஏரிகளும் காணாமல் போய்விட்டன. இன்னும் எஞ்சியிருப்பவை போரூர் ஏரி, ஆலந்தூர் ஏரி, வேளச்சேரி ஏரி, விருகம்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி ஆகியவைதான்.
கிராமங்களாக இருந்தபோது, அவை தன்னிறைவு உடைய பகுதிகளாக அமைந்திருந்தன. காய்கறிச் சந்தை களை எடுத்துக்கொள்வோம். கிழக் கிந்திய கம்பெனி உருவாக்கிய ஜார்ஜ் டவுனில்தான் கொத்தவால் சாவடி என்ற பெரிய சந்தை இருந்தது. மயிலாப்பூர் கிராமத்தில் பக்கிங்காம் கால்வாய் வழியே படகுகளில் செங்கற்பட்டு மாவட்டத்திலிருந்து வருவித்து காய்கள், தானியங்களை விற்ற தண்ணீர்த் துறை சந்தை இன்றும் இருக்கிறது. ராயப்பேட்டை, மீர்சாகிப் பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை போன்ற பழைய சிற்றூர்களில் தனியே கட்டப்பட்ட காய்கறி, அசைவ அங்காடி வளாகங்கள் இன்னமும் இருக்கின்றன.
ஆனால், இந்த ஊர்களை இணைத்து நகரமாக மாற்றியபோது உருவான புதிய குடியிருப்புப் பகுதிகளில், இப்படித் தனியே சந்தைகள் கட்டத் தவறினோம். கருணாநிதி நகர், அண்ணா நகர் போன்று வயல்களை அழித்துத் திட்டமிடப்பட்டுக் கட்டிய குடியிருப்புப் பகுதிகளில், பூங்காக்கள், மைதானங்களுக்கு இடம் ஒதுக்கியதுபோல தனியே காய், கனி, பூ, மீன், இறைச்சி வணிக வளாகங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால், இப்போது இந்தப் பகுதிகளில் எல்லாத் தெருக்களும் கடைத்தெருக்களாக மாறிவிட்டன.
நகரம் வளரும்போது, ஒவ்வொரு பகுதியிலும் அதன் ரயிலடி, பேருந்து நிலையம், சந்தை அருகருகே அமையும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. இதன் விளைவாக போக்குவரத்தின் அவசியமும் சிரமமும் அதிகரித்தன.
ஆக்கிரமிப்புகள்
ஆக்கிரமிப்புகளைக் கையாள்வதில் நிர்வாகங்களின் போக்கு நிலைமையை இன்னும் சிக்கலாக்கியிருக்கிறது. கருணாநிதி நகரின் பெரும்பாலான சாலைகள் டிராவல்ஸ் நடத்துவோருக்கான இலவச பார்க்கிங் இடமாக்கப்பட்டுவிட்டன. சுமார் 40, 50 கார்களை வைத்துக்கொண்டு டிராவல்ஸ் நடத்துபவருக்கு அவற்றை நிறுத்த இடம் இல்லாதபோது எப்படி உரிமம் வழங்கப்படுகிறது என்பது ஒன்றும் புதிரல்ல. இங்குள்ள மிக அகலமான அண்ணா சாலை முழுவதும் வேன்கள், லாரிகள், டிராக்டர்கள், கிரஷர் வண்டிகள் நிரந்தரமான பார்க்கிங் செய்யப்பட்டுப் போக்குவரத்தை நெரிசலாக்கும் விதத்தில் வண்டி ஓட்டும் பாதை குறுகியிருக்கிறது. சாலையை அடைத்துக்கொண்டு தெருவையே கூரை இல்லாத மெக்கானிக் ஷெட்டாக்கியிருக்கிறார்கள்.
தினமும் முளைக்கும் நடைபாதைக் கோயில்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் முதலியவற்றில் அக்கறை காட்டாத நிர்வாகம், சென்னையின் ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடிசைவாசிகளை அகற்றுவதில் எப்போதும் பெரும் தீவிரம் காட்டிவருகிறது. ஒரு புயல் நாளன்று கொட்டும் மழையில்கூட குடிசைவாசிகளைத் துரத்தி, அவர்களின் குடிசைகளை புல்டோசர் வைத்து அகற்றும் கொடுமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நகரின் வளர்ச்சி திட்டமிடப்படாதது என்பதன் அடையாளமே இந்தக் குடிசைகள்.
சிங்காரச் சென்னை எது?
கருணாநிதி நகர், அண்ணா நகர், பெசன்ட் நகர் போன்று உயர் நடுத்தர வகுப்புக் குடியிருப்புகளை அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் உருவாக்கியபோது, அந்தக் குடியிருப்புகளுக்கும், அருகில் அமையும் அலுவலகங்களுக்கும் தேவைப்படும் வெவ்வேறு வகையான பணியாளர்கள் எங்கே குடியிருந்து வேலைக்கு வருவார்கள் என்று யோசிப்பதே இல்லை. சிங்காரச் சென்னை என்ற பெயரில், கூவம் கரை குடிசைவாசிகளை 30 மைலுக்கு அப்பால் கண்ணகி நகரில் குடியேற்றியது ஒரு சமூகக் கொடுமை. இதனால், ஏழைகளின் அன்றாட வாழ்க்கையும் அவர்களுடைய குழந்தைகளின் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புதிய இடத்தில் பள்ளிகள் திட்டமிடப்படவே இல்லை. எல்லோருக்குமான நகரமாக இருந்த சென்னை, மெல்ல மெல்ல பணக்காரர்களுக்கான நகரமாக ஆகிவருகிறது.
இப்படிப்பட்ட கோளாறுகளோடேதான் சென்னை வளர்ந்துகொண்டிருக்கிறது. இவற்றில் பெரும் பாலானவை தீர்க்கப்படக்கூடியவைதான். ஒட்டுமொத்தப் பெருநகர சென்னை என்ற பார்வை மட்டும் இதற்குப் போதாது. அதிகாரப் பரவலாக்குதல்போல அக்கறை பரவலாக்குதலும் தேவை. ஒவ்வொரு வார்டாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மாநகராட்சி மண்டலமாக எடுத்துக்கொண்டு, அந்த மண்டலத்துக்குள் என்னென்ன தேவைகள், வசதிகள், வாய்ப்புகள் உள்ளன என்று பார்த்து, செய்து தீர்வுகளை யோசித்துச் செயல்படுத்தத் தொடங்க வேண்டும்.
இதற்கெல்லாம் தேவை விமர்சனங்களை அக்கறை யுடன் பரிசீலிக்கக்கூடிய ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம். எனக்குத் தெரிந்து கடந்த 40 வருடங் களில் அப்படி எதையும் காணோம். விதிவிலக்காக இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகள், நிர்வாகிகளாலும் பெருவாரியான மக்களின் சகிப்புத்தன்மையாலும்தான் சென்னை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.
- ஞாநி, மூத்த பத்திரிகையாளர்,
*********************
நான்தான் சென்னை பேசுறேன். இந்த வருஷத்தோட நான் பொறந்து 375 வருஷம் ஆயிடுச்சு தெரியுமா?
அப்படின்னா, நீ பிறக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்துல எதுவுமே இல்லையான்னு உங்களுக்கு சந்தேகம் வரும். நிச்சயமா இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சென்னைன்னு சொல்லப்படுற ஊரா, அது பின்னாடிதான் மாறுச்சு. அதுக்கு முன்னாடி வரைக்கும், நான் ஒரு சின்ன கடற்கரை கிராமமாகத்தான் இருந்தேன்.
ரொம்ப காலத்துக்கு முன்னாடி எனக்கு புலியூர்னு பேரு இருந்துச்சாம். அப்போ புலியும், சிறுத்தைப் புலியும் இங்கே இருந்ததா சொல்றாங்க. இப்பவும்கூட செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்துல சிறுத்தைப் புலி இருக்கிறதா படிக்கிறப்ப, புலியூர்னு எனக்குப் பேரு இருந்திருக்கலாம்கிறத நம்ப முடியது.
அந்தக் காலத்துல வெளிநாட்டுல இருந்து இந்தியாவுக்கு வர்றதுக்கான சுலபமான வழியா, கடல் வழிதான் இருந்துச்சு. ஐரோப்பிய நாடுகள்ல இருந்து வந்த பயணிகள், வணிகக் கப்பல்கள், கடற்படைகள் துறைமுகங்கள்லதான் வந்திறங்கின. பெரும்பாலான வெள்ளைக்காரங்க தீபகற்ப இந்தியாவுல இருந்த துறைமுகங்கள்லதான் வந்து இறங்கி இருக்காங்க.
17-ம் நூற்றாண்டுல வணிகம் செய்யவும், மற்ற வியாபார நடவடிக்கைகளுக்காகவும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுல இடம் தேடிக்கிட்டு இருந்துச்சு. அந்தக் கம்பெனிக்கு சோழ மண்டலக் கடற்கரைல இருந்த, அன்றைய சென்னை துறைமுகம் நல்ல இடமா பட்டிருக்கு.
அப்போ இந்தப் பகுதியை ஆண்டுக்கிட்டிருந்த தாமர்ல வேங்கடாத்ரி நாயக்கர் என்பவர்கிட்ட அந்தக் கம்பெனியோட ஆட்கள் இடம் கேட்டிருக்காங்க.
இன்னைக்கு தமிழக அரசோட சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும் செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த இடம்தான், கிழக்கிந்திய கம்பெனி கேட்ட இடம்.
கடற்கரை பக்கத்துல மூன்று மைல் நீளத்துக்கு இருந்த இந்த இடத்தை வாங்குறதுக்காக, கிழக்கிந்திய கம்பெனியோட பிரதிநிதி ஃபிரான்சிஸ் டே, வேங்கடாத்ரி நாயக்கருடன் ஒப்பந்தம் போட்டுக்கிட்டார். அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நாள் 1639 ஆகஸ்ட் 22. இதைத்தான் என்னோட பிறந்த நாளாக சமீபகாலமா கொண்டாடுறாங்க. வெள்ளைக்காரங்க இந்தியாவுல வாங்குன முதல் இடமும் அதுதான்.
வெள்ளைக்காரங்க கட்டின செயின்ட் ஜார்ஜ் கோட்டைய சுத்தி கொஞ்சம் கொஞ்சமா ஒரு நகரம் வளர்ந்துச்சு. ஆங்கிலத்துல மெட்ராஸ்னு என்னைய கூப்பிட ஆரம்பிச்சாங்க. தமிழ்ல மதராசபட்டினம்னும் கூப்பிட்டிருக்காங்க.
சென்னைல இஸ்லாமிய மதராசா பள்ளிகள் அதிகம் இருந்ததால, மெட்ராஸ்னு பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. அதுக்குக் காரணம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிச்ச பிறகும்கூட, மொகலாயர்களோட ஆட்சில சென்னை கொஞ்ச காலம் இருந்திருக்கு.
1687-ல் கோல்கொண்டா அரசை வீழ்த்தி மொகலாயர்கள் சென்னையைக் கைப்பத்தினாங்க. மெட்ராஸ் நகரை வளர்க்கவும், விரிவாக்கவும் வெள்ளைக்காரங்களுக்கு அவங்க அனுமதி கொடுத்தாங்க.
மெட்ராஸ் நகரம் வளர்ந்ததுக்கு இன்னொரு காரணம் மெட்ராஸ் துறைமுகம். 18-ம் நூற்றாண்டுல இந்தத் துறைமுகத்தை கட்டுனாங்க. அதுக்குப் பின்னாடி இந்தியா - ஐரோப்பா இடையிலான முக்கிய வணிக மையமா மெட்ராஸ் மாறிடுச்சு. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் இணைஞ்ச மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராவும் மெட்ராஸ் இருந்துச்சு.
ஒரு பக்கம் வெள்ளைக்காரங்க நம்ம நாட்டை அடிமைப்படுத்தி வைச்சிருந்தாலும், என்னைப் போன்ற நகரங்களை உருவாக்குனதும் வளர்த்ததும் அவங்கதான்.
இந்தியா விடுதலை வாங்குன பின்னாடி தமிழ்நாட்டோட தலைநகரா மெட்ராஸ் ஆகிடுச்சு. 1998-ல மெட்ராஸுனு இருந்த என் பேரை சென்னைன்னு மாத்தினாங்க.
தாமர்ல வேங்கடாத்ரி நாயக்கர்னு ஒருத்தர்கிட்ட வெள்ளைக்காரங்க இடம் வாங்கினாங்கன்னு ஆரம்பத்துல சொன்னேன்ல, அவரோட அப்பா சென்னப்ப நாயகடு. அவரை கௌரவப்படுத்துற வகைல, புதுசா உருவான ஊருக்கு சென்னப்பட்டினம் வேங்கடாத்ரி அப்போ பேரு வைச்சிருந்தார். அந்தப் பேராலயே இப்ப என்னை கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.
இந்தியாவோட முதல் நவீன நகரம்னு என்னைய பெருமையா சொல்றாங்க. இதைவிட வேறென்ன பெரிய பெருமை வேணும்!
சென்னையும் கிழக்கிந்திய கம்பெனியும்
தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரத்தை, தங்களுடைய முதல் கோட்டையைக் கட்ட கிழக்கிந்திய கம்பெனி தேர்ந்தெடுத் ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் மெட்ராஸ் துறைமுக நகரை தங்கள் வசமாக்க போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் (நெதர்லாந்து) கடுமையாக முயன்று கொண்டிருந்தனர்.
அது மட்டுமில்லாமல், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்பட்ட நறுமணப் பொருள்களின் விலையும் அப்போது உயர்ந்திருந்தது. அதன் காரணமாக, லண்டனைச் சேர்ந்த 24 வணிகர்கள் சேர்ந்து, ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி இந்த இரண்டையும் சமாளிக்கத் திட்டமிட்டனர். அதுவே கிழக்கிந்திய கம்பெனி.
இந்திய வணிகத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தது. பின்னால் அவர்களுடைய நோக்கம் வணிகத்திலிருந்து வளர்ந்து, நாட்டைப் பிடிப்பதாகவும், இந்திய வரலாற்றையே மாற்றுவதாகவும் மாறிவிட்டது.
**************************
சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எதிரே உள்ள சென்னை அரசுப் பொது
மருத்துவமனை, ஏராளமான வரலாற்று நினைவுகளையும், மருத்துவத் துறையின் பல சாதனைகளையும்
உள்ளடக்கியது. புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், ஆங்கிலேய படைவீரர்களுக்காக 1664
நவம்பர் 16-ல் தொடங்கப்பட்ட மருத்துவமனை இது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக
இருந்த எலிஹூ யேல் என்பவர், கோட்டைக்குள்ளேயே மற்றொரு இடத்துக்கு, இந்த மருத்துவ
மனையை மாற்றினார். 1772-ல்தான் இந்த மருத்துவமனை தற்போது இருக்கும் இடத்துக்கு
மாற்றப்பட்டது.
இந்த மருத்துவமனையின் வளாகத்துக்குள், 1835-ல் ஒரு மருத்துவப்
பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 1850-ல் இது மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண் டாவது மருத்துவக் கல்லூரி என்ற பெருமை இதற்கு உண்டு.
முதலில் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் மருத்துவம் என்ற நிலை மாறி, 1842 முதல் இந்திய
நோயாளிகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேரி ஆன் டாகம்ப் ஷார்லீப் என்ற பெண் இந்த மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்தார். அதன் பின்னர், மிசஸ் ஒயிட், பீலே மற்றும் மிஷேல் ஆகிய மூன்று ஆங்கிலோ -
இந்தியப் பெண்களும் இந்தக் கல்லூரியில் மருத்துவம் பயின்றனர். இந்தியாவின் முதல்
பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி பயின்றதும் இங்குதான்.
1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தியின் உடல் கொண்டுவரப்பட்டது இந்த மருத்துவ மனைக்குத்தான். அந்த
நினைவாக, 2011-ல் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை என்று பெயர்
மாற்றப்பட்டது.
இங்கு சுமார் 3,000 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். புற
நோயாளிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10,000 முதல் 12,000 வரை. மருத்துவமனையில் 52
அறுவைக் கூடங்கள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மட்டும் மொத்தம் 213
படுக்கைகள் உள்ளன. உறுப்பு மாற்று சிகிச்சையில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தை
வகிக்கிறது இந்த மருத்துவமனை.
சென்னை மத்திய சிறைச்சாலையின் அனைத்துப் பிரிவுகளும் புழல் சிறை
வளாகத்துக்கு மாற்றப்பட்ட பிறகு பழைய மத்திய சிறைச்சாலை இடிக்கப்பட்டு அந்த இடம்
மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கத்துக்காக அளிக்கப்பட்டது. 3,25,000 சதுர அடி
பரப்பளவில் 6 அடுக்கு மாடிகட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு
1,250 மாணவர்கள், 400 ஆசிரியர்களுக்கு போதிய இட வசதி கொண்டிருக்குமாம்.
இன்றைக்கும் தமிழகத்தில் அரசு மருத்துவமனை என்றால் அதை மரியாதையாகப் பார்க்க
வைக்கும் மருத்துவமனை களில் முன் வரிசையில் உள்ள மருத்துவமனை இது.
******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக