அமெரிக்க தத்துவமேதை, உயிரியல் ஆர்வலர் டெரன்ஸ் கெம்ப் மெக்கென்னா பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
அமெரிக்காவில் பிறந்தவர். மாமா மூலமாக புவியியல் பற்றி அறிந்தார். இயற்கைக் காட்சிகளையும் அறிவியல் அற்புதங்களையும் ரசிக்கத் தொடங்கியவர் அவற்றை போற்றவும் ஆரம்பித்தார். 10 வயதில் கார்ல் ஜங்கின் உளவியல் மற்றும் ரசவாதம் புத்தகத்தைப் படித்தபோது உளவியலிலும் ஆர்வம் பிறந்தது.
மாயத் தோற்றங்கள் பற்றி அல்டோயஸ் ஹக்லே எழுதிய ‘தி டோர்ஸ் ஆஃப் பெர்செப்ஷன்’, ‘ஹெவன் அண்ட் ஹெல்’ புத்தகங்கள் மற்றும் ‘த வில்லேஜ் வாய்ஸ்’ என்ற புத்தகம் மூலமும் மாயத் தோற்றங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
கல்லூரிப் படிப்பின் நடுவே, உலகம் சுற்றும் ஆசை வந்தது. ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா என்று பயணமானார். திபெத்திய ஓவியங்களிலும், மந்திர, தந்திரங்கள், சூனியங்கள் பற்றிய ஷாமனிஸத்திலும் ஆர்வம் ஏற்பட, அதுபற்றி ஆராய நேபாளம் சென்றார்.
திபெத் மொழி கற்றார். சிறிது காலம் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றினார். இந்தோனேஷியாவில் வண்ணத்துப் பூச்சி சேகரிக்கும் பணியில் இறங்கினார்.
உயிரியல் பாடத்தை தனது ‘முதல் காதல்’ என்பார் மெக்கன்னா. அதன் மீது மீண்டும் ஆர்வம் ஏற்பட்டதால், சொந்த ஊருக்குத் திரும்பி, உயிரியல் கற்கத் தொடங்கினார். சூழலியல், ஷாமனிசம், இயற்கைவளப் பாதுகாப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.
மன மயக்கமும், மாயத் தோற்றமும் தரும் அமேசான் பகுதி தாவரங்கள் குறித்து தனது சகோதரர் மற்றும் 3 நண்பர்களுடன் சேர்ந்து ஆராய்ந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய முதல் நூல் ‘அமேசானியன் ஹாலுசினோஜன்ஸ்’ 1971-ல் வெளிவந்தது.
ஷாமனிசம், ரசவாதம், மொழி, கலாச்சாரம், சுய முன்னேற்றம், சமயச் சார்பு, பரிணாம வளர்ச்சி, வர்ச்சுவல் ரியாலிட்டி, அழகியல் கோட்பாடு உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பல நூறு மணி நேரங்கள் உரையாற்றியுள்ளார். அந்த உரைகள் கேசட்களில் பதிவு செய்யப்பட்டு அமோகமாக விற்பனையாயின. 1990-களில் பல புத்தகங்களை வெளியிட்டார்.
இவர் 19 ஏக்கரில் உருவாக்கிய தாவரத் தோட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மூலிகைச் செடி வகைகளை சேகரித்து வளர்த்தார். இவை பல்வேறு வகையான மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்பட்டன.
மன மயக்கம் தரும் காளான்கள், கஞ்சா போன்ற செடிகள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பிரபஞ்சத்தின் மர்மங்களை அறியவும், கற்பனை வளத்தைத் தூண்டவும் இயற்கையுடன் நல்லிணக்க உறவை மீண்டும் உருவாக்கவும் உதவும் இயற்கையான சாதனங்கள் என்று அவற்றை வர்ணித்தார்.
புதிய, வித்தியாசமான கருத்துகளைக் கூறியதால் தொலைநோக்குவாதி, பித்தர், சுவாரஸ்யமான அறிவுஜீவி என்று பலவாறாக அழைக்கப்பட்டார். 53-வது வயதில் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக