நவீன கணிதவியல் வல்லுநரும் ‘அல்ஜீப்ரா’ பிதாமகருமான ஜார்ஜ் புல் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
* இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பின்போதே அறிவாற்றலுடன் விளங்கிய குழந்தை மேதை. 12 வயதில் லத்தீன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்க மொழிகளை சிறு பருவத்திலேயே கற்றுத் தேர்ந்தார்.
* தந்தை நடத்திய காலணித் தொழில் நொடித்ததால் 16 வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றார். பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 20 வயதில் சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினார். கணிதம் மீதான ஆர்வத்தால், ஆராய்ச்சிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். லிங்கன்ஸ் மெக்கானிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஐசக் நியூட்டனின் புத்தகங்களைப் படித்து அல்ஜீப்ராவில் உயர்நிலை கணக்குகளுக்குத் தீர்வு காணத் தொடங்கினார்.
* அவருக்கு சமூக அக்கறையும் அதிகம். சமூக அவலங்களை எதிர்த்தார். பாலியல் தொழிலாளர்களுக்காக மறுவாழ்வு இல்லம் தொடங்கினார்.
* 1838-ல் தொடங்கி கணிதத் துறை வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அல்ஜீப்ராவை ஆழ்ந்து படித்தார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
* மழைக்குக்கூட கல்லூரிப் பக்கம் ஒதுங்காதவர், அயர்லாந்தின் க்வீன்ஸ் கல்லூரியில் கணிதத் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டப்ளின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவப் பட்டங்கள் வழங்கின. ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* நுண்கணிதம், இயற்கணிதம், வகையீட்டு சமன்பாடுகள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய கோட்பாடுகளை வகுத்தார். 50-க்கும் மேலான அவரது ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரபலமாயின.
* கேம்பிரிட்ஜ் கணித இதழில் ‘அனலிடிகல் டிரான்ஸ்பர்மேஷன் தியரி’ குறித்த தொடர் கட்டுரைகளை 24-வது வயதில் எழுதினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய கட்டுரைகள் கணிதத் துறையின் புதிர்களை எளிமையாக புரியவைத்தன.
* 1884-ம் ஆண்டு பிலாஸபிகல் டிரான்ஸாக் ஷன் ஆப் தி ராயல் சொசைட்டி என்ற ஆய்வுக் கட்டுரைக்காக ராயல் சொசைட்டியின் தங்கப் பதக்கம் பெற்றார். அதில்தான் அல்ஜீப்ரா - கால்குலஸ் இணைப்பு குறித்து விளக்கியிருந்தார். தற்போது பூலன் அல்ஜீப்ரா எனப்படும் லாஜிக்கல் அல்ஜீப்ரா குறித்த ஆராய்ச்சியையும் தொடங்கினார்.
* இன்றைய டிஜிட்டல் கம்ப்யூட்டர் சர்க்யூட்களுக்கு அடிப்படை வடிவமைப்பு இவர் உருவாக்கிய பூலன் அல்ஜீப்ரா. அதனாலேயே அல்ஜீப்ராவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார்.
* கணித மேதையும் தத்துவவாதியுமான ஜார்ஜ், கணினி அறிவியல் துறை தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 49-வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
******************
ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.
• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.
• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.
• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.
• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.
• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.
• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.
• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.
• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.
• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.
*************************
வெற்றி சூத்திரங்களின் நாயகன் நெப்போலியன் ஹில்லின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
* அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்த சிறுவனை, தந்தையின் 2-வது மனைவிதான் நல்வழிப்படுத்தினார்.
* 15 வயதில் உள்ளூர் பத்திரிகையில் நிருபரானார். அங்கு பணி யாற்றிக்கொண்டே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். வருமானம் போதாமல் சட்டக் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
* 1908-ல் பிரபல சாதனையாளர்களை பேட்டி கண்டு எழுதினார். பிட்ஸ்பர்க் நகரத்தின் பிரபல எஃகு நிறுவன அதிபர் ஆண்ட்ரூ கார்னகியை பேட்டி கண்டது இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
* ஹில்லிடம் ஒரு சவால் விடுத்தார் கார்னகி. ‘‘எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் 20 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிக்கான கோட்பாடுகளை ஆவணப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்’’ என்பதுதான் அது. இதன்மூலம் நிறைய சாதனையாளர்களை ஹில்லிடம் அறிமுகப்படுத்தினார் கார்னகி.
* 20 ஆண்டு காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தியோடர் ரூஸ்வெல்ட், தாமஸ் எடிசன், ஜான் டி. ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் உள்ளிட்டவர்களை சந்தித்து வெற்றிக் கோட்பாடுகளைத் திரட்டினார்.
l‘‘இலக்கில் உறுதியோடு இருப்பது, தனக்கு என்ன தேவை என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பது.. இந்த இரண்டும் இருந்தால் வெற்றி பெறுவது சிரமமாக இருக்காது’’ என்ற கார்னகியின் கோட்பாடுகள்தான் ஹில்லின் சுய முன்னேற்றப் படைப்புகளுக்கு அடித்தளம்.
* வெற்றிக் கோட்பாடுகளுக்காக ஹில் தொடங்கிய பத்திரிகை பெரும் வெற்றி பெற்றது. கடந்த 50 ஆண்டு காலத்தில் மாபெரும் சாதனையாளர்களின் வெற்றி சூத்திரங்கள் அடங்கிய ‘தி லா ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை 1928-ல் வெளியிட்டார். இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இவரது இன்னொரு படைப்பு ‘திங்க் அண்ட் குரோ ரிச்’ 1930-ல் வெளியானது. கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது.
* உட்ரோ வில்சன், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகிய இரு அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
lதனி நபர் சாதனைக்கான இவரது தத்துவம் ஆழமானது, விசாலமானது. ஒருவருக்குள் புதைந்துக்கிடக்கும் ஆற்றலை அவரே கண்டறிய உதவுவதுதான் இவரது படைப்புகள் என்கிறார்கள்.
* இவரது வெற்றித் தத்துவங்கள் உலகம் முழுவதும் பல கோடி பேரை வெற்றியாளர்களாக, செல்வந்தர்களாக மாற்றி வருகின்றன. ‘வெற்றி அறிவியலின் தந்தை’ என்று போற்றப்படும் நெப்போலியன் ஹில் 87-ம் வயதில் காலமானார்.
*****************
அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் சில்வியா பிளாத். பாஸ்டன் நகரில் 1932-ல் இதே நாளில் சில்வியா பிளாத் பிறந்தார். அவரது தந்தை ஓட்டோ பிளாத். 1940-ல் ஓட்டோ மரணமடைந்தபோது சில்வியாவுக்கு 8 வயதுதான். தந்தையின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. பின்னாட்களில், தந்தையின் நினைவாக ‘டாடி’ என்ற கவிதையை எழுதினார்.
பள்ளியில் மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். இளம் வயதிலேயே சிறு கதைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ‘சண்டே அட் மின்டன்ஸ்’ என்ற முதல் சிறுகதை ‘மேட்மோசெல்’ என்ற பெண்கள் இதழில் வெளியானது. ஒரு கோடை விடுமுறையின்போது, கவுரவ ஆசிரியராகப் பணிபுரிய அந்த இதழி லிருந்து அழைப்பு வந்தது. 1950-களில் பிரிட்டனுக்குச் சென்றார். கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, டெட் ஹியூக்ஸ் என்ற கவிஞருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி, 1956-ல் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
‘கொலாசஸ்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை 1960-ல் வெளி யிட்டார் சில்வியா. அதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இதற்கிடையே தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்து, சில்வியா அதிர்ச்சி அடைந்தார். சில்வியா - ஹியூக்ஸ் பிரிந்தனர். அப்போது இரண்டு குழந்தை களுக்குத் தாய் அவர். மனது உடைந்த நிலையில் இருந்த சில்வியா, தொடர்ந்து பல கவிதைகள் எழுதினார். 1963-ல் தனது ஒரே நாவலான ‘தி பெல் ஜார்’ என்ற நாவலை வெளியிட்டார். வாழ்வின் நெருக்கடிகள் தந்த வலியின் காரணமாக 1963-ல் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 30-தான். அதன் பின்னர், அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டார் ஹியூக்ஸ். அவற்றில் ஒன்றான ‘தி கலெக்டட் போயம்ஸ்’ என்ற தொகுப்பு 1982-ல் புலிட்சர் விருதைப் பெற்றது.
*****************
நியுயார்க் நகரின் பிட்ஸ்டவுனில் பிறந்தவர். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், எங்கெங்கோ சுற்றி, கிடைத்த வேலைகளைச் செய்து ஒரு மெக்கானிக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
* மெக்கானிக்காக இருந்த அவர் ஓயாமல் ஏதாவது புதிய பொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 1839-ல் இல்லினோயிசில் இருந்தபோது, பாறை துளையிடும் இயந்திரத்தைக் கண்டறிந்தார். அதன் காப்புரிமையை விற்றார். நடிகனாக வேண்டும் என்ற ஆசையால், அந்தப் பணத்தில் ‘மெரிட் ப்ளேயர்ஸ்’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கி, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஐஸக் மெரிட் என்ற பெயரில் மேடைகளில் தோன்றினார்.
* ஒன்பது வருடங்கள் தொடர்ந்த இந்த நாடகக் குழுவின் தொடர் தோல்விகளால் குழு கலைக்கப்பட்டது. நடிப்புத் தொழில் கை கொடுக்கவில்லை என்பதால் சிங்கர் துவண்டுவிடவில்லை. மீண்டும் மெக்கானிக்காகவும், கண்டுபிடிப்பாளராகவும் மறுஅவதாரம் எடுத்தார்.
* 1949-ல் மரம் மற்றும் உலோகம் செதுக்கும் கருவியை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றார். சொந்தமாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கி உற்பத்தியைத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அங்கு ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் தொழிற்சாலை தரைமட்டமானது.
* 1950-ல் ஒரு தையல் இயந்திரக் கடையில் பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்தார். முதலாளி அவரிடம் தையல் இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்கும்படி கூறினார். சிங்கரின் கண்டுபிடிப்பாளர் மூளை உடனே செயல்பட்டது. ஒரு சில நாட்களிலேயே உயர்தரம் வாய்ந்த புதுமையான முறையில் அதை மேம்படுத்தினார். மிகவும் சவுகரியமாகவும், ஒரு நிமிடத்திற்கு 900 தையல் போடக்கூடிய அதி வேகத் திறன் வாய்ந்ததாகவும் அது செயல்பட்டது.
* அதற்கு சிங்கர் தையல் மிஷின் என்று பெயரிட்டார். இதற்கான காப்புரிமைக்காக இவர் விண்ணப்பித்தபோது, இதன் அடிப்படை எலியாஸ் ஹவ் என்பவருடைய கண்டுபிடிப்பு என்பதால், அவர் சிங்கர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கில் எலியாஸ் வென்றார். இந்தத் தோல்வியும் இவரை ஒன்றும் செய்துவிடவில்லை. அதிர்ஷ்டவசமாக, அவர் தான் தயாரித்த இயந்திரங்களைத் உற்பத்திசெய்யக் கூடாது என்று தீர்ப்பில் தடை விதிக்கப்படவில்லை. 1857-ல், எட்வர்ட் கிளார்க் என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து ஐ.எம். சிங்கர் & கம்பெனியைத் தொடங்கினார்.
* இந்த நிறுவனம் புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து, வேலைக்குச் செல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தையல் இயந்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்தது.1860-ல் உலகிலேயே மிகப் பெரிய அளவில் தையல் இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இது உயர்ந்தது. மேலும் 22 புதிய தயாரிப்புகளுக்கான காப்புரிமைகளை இந்த நிறுவனம் பெற்றது.
* முதன்முதலாக வீட்டு உபயோகத் தையல் இயந்திரத்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சிங்கர். இவரது கண்டுபிடிப்புகளால் அமெரிக்கா அதுவரை கண்டிராத மிகப் பெரிய தொழிற்துறை வளர்ச்சியைக் கண்டது.
* இவர் பல திருமணங்கள் செய்துகொண்டவர். திருமணங்கள் மூலமாகவும் திருமணம் இல்லாமலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உண்டு.
* சிங்கர் ஆறடி ஐந்தங்குலம் கொண்ட ‘உயர்ந்த’ மனிதர். பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தன் உழைப்பாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் மேதைமையாலும் மிக உயர்ந்த இடத்தை எட்டினார். தனது 63-வது வயதில் மரணமடைந்தார் இந்தச் சாதனையாளர்.
******************
கணினி ஜாம்பவான் பில்கேட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• வாஷிங்டனில் பிறந்தவர். அம்மா செல்லம். சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆச்சர்யமூட்டும் வகையில் அசத்தினார்.
• கணினி நிறுவனம் ஒன்று மாணவர்களுக்குக் கணினிப் பாடம் சொல்லித்தர முன்வந்தது. கணினியைப் பார்த்தவுடனே காந்தம்போலக் கவரப்பட்டார் பில்கேட்ஸ். குறுகிய நாட்களிலேயே அடிப்படை கணினி லாங்குவேஜில் டிக்-டாக்-டோ என்கிற தனது முதல் கணினி நிரலை வடிவமைத்தார்.
• பால் ஆலனைச் சந்தித்தது கேட்ஸுக்கு மட்டுமல்ல... கணினி உலகத்துக்கே திருப்புமுனை. 1970-ல் இருவரும் இணைந்து நகரின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கணினி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். கேட்ஸுக்கு அப்போது வயது 15. இருவரும் இணைந்து நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டனர். ஆனால், கேட்ஸின் பெற்றோர் ஆசையோ வேறாக இருந்தது. வலுக்கட்டாயமாக வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்க அனுப்பிவிட்டார்கள்.
• கணினியை மறக்க முடியாதவர் கல்லூரிப் படிப்பை பாதியில் உதறினார். ஆலன் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ‘ஆல்டர் 8800’ தொழில்நுட்பம் பற்றி கேட்ஸ் அறிந்தார். இதை நியு மெக்சிகோ நகரில் உள்ள மைக்ரோ இன்ஸ்ட்ருமன்டேஷன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம் (எம்.ஐ.டி.எஸ்) என்ற சிறுநிறுவனம் உருவாக்கியிருந்தது.
• 1975-ல் இருவரும் இணைந்து ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தைத் தொடங்கினர். 1978-ம் ஆண்டு அந்த நிறுவனம் இரண்டரை மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. அப்போது கேட்ஸுக்கு வயது 23.
• மென்பொருள் வடிவமைப்பில் மட்டுமல்லாமல் வியாபார உத்திகளிலும் புரட்சியைப் புகுத்தினார் கேட்ஸ். 1980-ல் ஐ.பி.எம்-உடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
• 1983-ல் பிரிட்டனிலும், ஜப்பானிலும் மைக்ரோசாஃப்ட் கிளை பரப்பியது. போட்டி நிறுவனங்களாக இருந்தாலும், ஆப்பிளும் மைக்ரோசாஃப்டும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டன. உங்கள் கைகளில் தவழும் வின்டோஸ் பிறந்தது இப்படிதான்.
• கேட்ஸ் நூலாசிரியரும்கூட. தனது சகாக்களுடன் இணைந்து இரண்டு நூல்களை எழுதினார். தனி நபர் கணினிப் பயன்பாட்டுப் புரட்சி மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பின் வரவு உலகை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றி அவர் அதில் எழுதினார்.
• தன் நிறுவனத்தின் பணிபுரிந்த மெலின்டாவை திருமணம் புரிந்தார். மெலின்டாவின் மனிதநேயம் இவரையும் பற்றிக் கொண்டது. ‘வில்லியம் ஹெச். கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ தொடங்கப்பட்டன. உலகம் முழுவதும் நலிவுற்றோருக்கு கல்வியும் மருத்துவமும் அளிக்கின்றன அந்த அமைப்புகள்.
• 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த நபர் என்றது டைம் பத்திரிகை. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கேட்ஸுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கி, கவுரவம் தேடிக் கொண்டன.
***********************
போலந்து நாட்டு வானியல் அறிஞர்
போலந்தின் தலைசிறந்த கணிதவியலாளர் ஜான் ப்ரொஸக் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 போலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ப்ரொஸக் - கணித வியலாளர், வானியலாளர், மருத்துவர், கவிஞர், எழுத்தாளர், இசைக் கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்.
 தந்தை அளித்த ஊக்கம் இவருக்குள் கற்கும் ஆர்வத்தை பெருக்கெடுக்க வைத்தது. படித்து முடித்த பல்கலைக்கழகத்திலேயே தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்தார்.
 17-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித அறிஞராக புகழ்பெற்றார். எண் கோட்பாடு, குறிப்பாக நிறைவெண் கோட்பாடு, வடிவவியல் குறித்த இவரது ஆய்வுகள் கணிதத் துறையில் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன.
 மருத்துவம், புவி அளவியல், இறையியல் தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
 தேனீக்கள் ஏன் அறுங்கோண வடிவிலேயே தேன் அடை களை உருவாக்குகின்றன என்பதை ஆராய்ந்தார். திறன் வாய்ந்த வகையில் மெழுகைப் பயன்படுத்தவும், தேனை சேமிக்கவும் மிகச் சிறந்த வழி இதுதான் என்பதை தேனீக் கள் தெரிந்துவைத்திருக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார்.
 மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இவர் வகுத்த வழிகாட்டி நெறிகள், மருத்துவத் துறையின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தன. நோய்களைக் கண்டறியும் பரிசோதனை முறைகள், நோய்த் தடுப்பு சிகிச்சை முறைகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். ஒவ்வாமை குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் அதற்கான சிகிச்சைகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தன.
 சிறு வயதில் இருந்தே புத்தகம் சேகரிப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ‘‘மேல் அங்கியை விற்றாவது புத்தகம் வாங்கவேண்டும்’’ என்பார். பணத்தை சிறிது சிறிதாக சேமித்து, புத்தகம் வாங்குவார்.
 நல்ல புத்தகமா, மோசமான புத்தகமா என்பதை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லும் திறன் படைத்தவர். இவரது நூலகத்தில் கலிலியோ, கார்டேசியஸ், மார்கடார், நேபர், டீ சார்கோ போஸ்கோ, கோபர்நிகஸ் உட்பட மிகவும் பிரபலமான, முக்கியமானவர்களின் நூல்கள் இடம்பெற்றிருந்தன. இறுதிக் காலத்தில் தன்னிடம் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களை ஒரு நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.
 வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸின் கோட்பாடு களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பல கட்டுரைகளை வெளியிட்டார். கோபர்நிகஸின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுத வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனாலும் கோபர்நிகஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சைமன் ஸ்டார்வால்ஸ்கி என்ற வரலாற்று ஆசிரியருக்கு அரிய தகவல்களை வழங்கி, அந்த நூலை எழுதி முடிக்க பேருதவி செய்தார்.
வாழ்க்கை முழுவதும் மருத்துவம், கணிதம், வானவியல் உட்பட பல்வேறு துறைகளில் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்து வந்த ப்ரொஸக் 67-ம் வயதில் காலமானார்
*************************
மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆஸ்வால்டு தியடோர் ஏவரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
# கனடாவில் பிறந்தவர். அமெரிக் காவின் நியூயார்க் நகரில் உள்ள தேவாலயத்தில் தந்தைக்கு வேலை கிடைத்ததால் குடும்பத் தோடு குடிபெயர்ந்தார். சிறுவ னாக இருந்த ஏவரியின் கார்னட் வாத்திய இசை, தேவாலய பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திறமை அவருக்கு உதவித் தொகை யையும் பெற்றுத் தந்தது.
# 1904-ம் ஆண்டில் மருத்துவக் கல்வி முடித்து மருத்துவ ராகப் பணியாற்றினார். சக மனிதன் குறித்த இவரது கவலை, மருத்துவ ஆராய்ச்சியாளராக களமிறக்கியது.
# குணப்படுத்த முடியாத நோய்கள் தொடர்பாக இவருக்குள் இருந்த அடுக்கடுக்கான கேள்விகள், பாக்டீரியா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டியது.
# ப்ரூக்ளினில் உள்ள ஹோக்லாண்ட் மருத்துவ ஆய்வுக்கூடத்தின் இணை இயக்குநர் பொறுப்பை 1907-ல் ஏற்றார். இங்கு நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் ரசாயன மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
# காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா குறித்து இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, ராக்ஃபெல்லர் மருத்துவ ஆய்வு மைய இயக்குநர் ருஃபஸ்கோலை மிகவும் கவர்ந்தது. அவரது அழைப்பை ஏற்று, அங்கு பணியில் சேர்ந்தார். 1948-ல் ஓய்வு பெறும் வரை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
# நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியா தொடர் பான முக்கிய ஆய்வை வேறு இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார். சுமார் 20 காலன் பாக்டீரியாக்களை ஒவ்வொரு கட்டமாகத் தூய்மைப்படுத்தி ஆய்வு நடத்தியபோது, டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் டி.என்.ஏ. ரகசியத்தைக் கண்டறிந்தார்.
# மரபணுக்கள் புரோட்டீன்களால் மட்டுமே ஆனவை என்று அதுவரை மருத்துவ உலகம் ஆணித்தரமாக நம்பியிருந்ததை இந்த கண்டுபிடிப்பு தகர்த்தது.
# பரம்பரை அடிப்படையிலான மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டுபிடித்தார். ஆனாலும் இதை பகிரங்கமாக அறிவிக்காமல், நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டார்.
# 1944-ல் டி.என்.ஏ. குறித்து இவரும் இவருடைய சகாக்களும் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டி.என்.ஏ. குறித்த ஏவரியின் வேறொரு ஆராய்ச்சிக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஜோஷுவா லெடர்பெர்க் என்ற மருத்துவ மாணவர், பாக்டீரியா அடிப்படையிலான மரபணுவியல் குறித்து ஆய்வு செய்து 1959-ல் நோபல் பரிசு பெற்றார்.
# ஏவரி மேற்கொண்ட டி.என்.ஏ. ஆராய்ச்சியை அடித்தளமாக கொண்டு அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இவரது வரலாற்றுப் பெருமைவாய்ந்த கண்டுபிடிப்பை உறுதி செய்தன. மரணத்துக்குப் பிறகுதான் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
***********************
ஹாலந்து ஆராய்ச்சியாளர் ஆன்டனி வான் லியூவன்ஹாக்கின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர், உறவினரிடம் கணிதம், இயற்பியல் கற்றார். தெரிந்த ஒரே மொழி, தாய்மொழி டச்சு.
• 22 வயதில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார். உள்ளூர் அரசியலிலும் பிரபலமானார். நூல்இழைகளின் தரத்தைப் பரிசோதிக்க ஜவுளி வியாபாரிகள் பூதக்கண்ணாடி பயன்படுத்துவது வழக்கம். இவர் அதுபோலச் செய்தது நூலிழைகளுக்கும் அப்பாற்பட்ட நுணுக்கமான ரகசியங்களைக் கண்டறியும் ஆர்வத்தை தூண்டியது.
• 1668-ல் சாதாரண லென்ஸ்களை தயாரிக்கக் கற்றார். ராபர்ட் ஹூக் எழுதிய ‘மைக்ரோகிராஃபியா’ என்ற புத்தகத்தைப் பார்த்த இவருக்கு மைக்ரோஸ்கோப் தயாரிப்பதில் ஆர்வம் பிறந்தது. மெல்லிய லென்ஸ், மைக்ரோஸ்கோப் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கினார். ஒருசெல் உயிரினம் குறித்து முதன்முதலில் அறிவித்தார்.
• பொருளை 30 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மைக்ரோஸ்கோப் கருவிகள்தான் இவரது காலத்தில் இருந்தன. இவர் உருவாக்கிய மைக்ரோஸ்கோப் 200 மடங்குக்கும் அதிகமாக பெரிதாக்கிக் காட்டின. இதுகுறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி இதழில் கட்டுரை வெளியானதும் பிரபலமடைந்தார்.
• ரத்த அணுக்கள், உயிரினங்களின் விந்தணுக்களை முதன்முதலில் கண்டறிந்தார். ரத்தச் சிவப்பு அணுக்கள் பற்றி முதன்முறையாகப் பதிவு செய்தார். மைக்ரோஸ்கோப் வழியாக உயிரினங்களில் காணும் காட்சிகளை ஓவியர் உதவியுடன் வரைந்து உரிய விளக்கங்களை குறிப்பிட்டு, லண்டன் ராயல் சொசைட்டிக்கு தொடர்ந்து அனுப்பினார்.
• 500-க்கும் மேற்பட்ட ஆப்டிகல் லென்ஸ்களை தயாரித்தார். 25 விதமான மைக்ரோஸ்கோப்களை உருவாக்கினார்.
• ஒரு ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிப் புத்தகம்கூட இவர் எழுதியது இல்லை. ஆனால், ராயல் சொசைட்டிக்கு இவர் அனுப்பிய 1677 கடிதங்களும் நுண்ணுயிரியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன. ராயல் சொசைட்டி நூலகத்தில் இந்த கடிதங்கள் முக்கிய ஆவணங்களாக இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
• அவரது நுணுக்கமான ஆய்வுத் திறனும், தணியாத ஆர்வமும் ‘நுண்ணுயிரியல் தந்தை’ என்ற பெருமையை பெற்றுத் தந்தன.
• அறிவியல் மேதைகள் மட்டும் அங்கம் வகிக்கும் லண்டன் ராயல் சொசைட்டி, இவரது ஆய்வுத் திறனை கவுரவித்து இவரையும் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது.
• கடைசிவரை நுண்ணுயிரி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் 90-வது வயதில் இறந்தார்.
*****************
முதன்முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஆப்ரிக்க வீராங்கனை மே கரோல் ஜெமிசனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• அமெரிக்காவில் ஆப்ரிக்க வம்சாவளித் தம்பதிக்கு பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே அறிவியலில் ஆர்வம் மிக்கவர்.
• விண்வெளி அறிவியல் தொடர்பான தகவல்களை பள்ளி நூலகத்தில் தேடித் தேடிப் படிப்பார். நடனம், நாடகத்திலும் கெட்டிக்காரர். இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் பெற்றோர்.
• பள்ளியில் கறுப்பின மாணவ அமைப்பின் தலைவராக இருந்தார். தேசிய உதவித்தொகை பெற்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் இன்ஜினீயரிங், ஆப்ரிக்க அமெரிக்கன் ஸ்டடீஸ் என இரட்டை பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவக் கல்வியையும் முடித்தார். கியூபா, கென்யா, தாய்லாந்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.
• லாஸ்ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தபோது, விண்வெளி ஆசை விஸ்வரூபம் எடுத்தது. நாசா பயிற்சிக்கு விண்ணப்பித்தார். அப்போது, ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்துச் சிதறி 7 பேர் இறந்ததால், பயிற்சித் திட்டத்தை நாசா ஒத்திவைத்தது.
• ஜெமிசனின் லட்சிய தாகத்தை இச்சம்பவம் தணித்துவிடவில்லை. மீண்டும் விண்ணப்பித்தார். ‘‘பலியானவர்களுக்காக வருந்துகிறேன். ஆனால், விண்வெளிப் பயணம் குறித்த எனது ஆர்வம் சிறிதும் குறையவில்லை’’ என்றார்.
• 2000 பேரில் ஜெமிசன் உட்பட 15 பேர் தேர்வாகினர். இவர் உட்பட 7 பேர் எண்டோவர் விண்கலத்தில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டனர். விண்வெளியில் 8 நாள் தங்கியிருந்த ஜெமிசன், விண்வெளி வீரர்களின் எடைக்குறைவு, உடல்நலக்குறைவு குறித்து ஆய்வு செய்தார். உலகமே பதைபதைப்புடன் காத்திருக்க.. செப்டம்பர் 10-ம் தேதி ஜெமிசன் குழுவினர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.
• விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க, ஆப்ரிக்க வீராங்கனை என்று சாதனை படைத்த இவருக்கு பாராட்டு குவிந்தது. ‘‘ஜெமிசன் கம்பீரமான, புத்திசாலித்தனமான, உண்மையான, உறுதியான இளம்பெண்’’ என புகழாரம் சூட்டியுள்ளார் நாசாவின் முக்கிய அதிகாரி.
• குழந்தைப் பருவ ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் பணியில் ஜெமிசன் பணியாற்றி வருகிறார். அன்றாட வாழ்வில் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த ஆய்வு நிறுவனம் நடத்துகிறார்.
• அமெரிக்காவின் இனவெறிக் கொடுமைக்கு ஜெமிசனும் தப்பவில்லை. ஒருமுறை போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் இருந்து இவரை இறக்கிய காவல் அதிகாரி, மணிக்கட்டை முறுக்கி கீழே தள்ளி அவமானப்படுத்தினார்.
• இந்த உலகத்தையும் சமுதாயத்தையும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் தாங்கள் என்பதை பெண்கள் இன்னும் உணரவில்லையே என்பதுதான் ஜெமிசனின் ஆதங்கம்
*********************