சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர், காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும் காந்தியின் பரிந்துரையால் முதல் நிதியமைச்சராக நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் என்ற சிறப்புகளையெல்லாம் கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.
நீதிக் கட்சியில் இருந்த சண்முகம் செட்டியார், 1920-ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார். பிறகு, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். 1924-ல் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரானார். மத்திய சட்ட சபையின் துணைத் தலைவர், தலைவர் ஆகிய இரு பதவிகளையும் இவர் வகித்திருக்கிறார். முதல் நிதியமைச்சராக இருந்தபோது இவர் தயாரித்த முதல் பட்ஜெட் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும், அவருடைய நிதித் துறை நிர்வாகத்தை காங்கிரஸ் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
பெரியாருடைய சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, தனது பதவிக் காலத்தில் அவற்றை அமல்படுத்தினார். காந்தி, தாகூர், அன்னி பெசன்ட், சித்தரஞ்சன் தாஸ், அவ்வை டி.கே. சண்முகம், சி.என். அண்ணாதுரை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுடனும் சண்முகம் செட்டியார் நட்புகொண்டிருந்தார்.
டெல்லி தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் அவருடைய பங்களிப்புகள் ஏராளம்.
*********************
தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
• ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.
• ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.
• தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.
• இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
• புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.
• பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.
• ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.
• ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.
• 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
***************************
# பழமையான தபோவன முறையில் ஆன்மிகக் கல்வி கற்றார். இவரது தந்தை வைஜ்நாத் ஆத்வலே நிறுவிய ஸ்ரீமத் பகவத்கீதா பாடசாலாவில் 22 வயதில் இருந்தே கீதை, உபநிஷத சொற்பொழிவுகள் நிகழ்த்தத் தொடங்கினார்.
# இந்தியாவின் தத்துவஞானி, ஆன்மிக குரு, சமூக மறுமலர்ச்சியாளர் என்று பல்வேறு வகையில் புகழ் பெற்றிருந்த அவரை ‘தாதாஜி’ என்று மக்கள் அன்புடன் அழைத்தனர்.
# ராயல் ஏஷியாடிக் நூலகத்தில் உள்ள மார்க்சிய சித்தாந்தம் முதல் தொன்மையான இந்தியாவின் தத்துவம் குறித்து ஒயிட்ஹெட் எழுதிய படைப்பு வரை அத்தனை இலக்கியங்களையும் 14 ஆண்டுகளில் படித்து முடித்தார்.
# ஜப்பானில் 1954-ம் ஆண்டு நடந்த 2-வது உலக தத்துவ மேதைகள் மாநாட்டில் இந்திய வேதங்கள் மற்றும் பகவத் கீதை குறித்து இவர் ஆற்றிய உரை உலகப் புகழ் பெற்றது. நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் டாக்டர் ஆர்தர் ஹோலி காம்ப்டன், இவரது உரையில் கவரப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்தார்.
# வேத தத்துவங்களின் அடிப்படையில் ‘ஸ்வத்யாய’ (சுயம் குறித்த ஆய்வு) என்ற அமைப்பை உருவாக்கினார். இது தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டது. நடைபயணமாகவும் மிதிவண்டியிலும் கிராமந்தோறும் சென்று அனைத்து தரப்பு மக்களும் இறைவனின் குழந்தைகளே என்ற கருத்தைப் பரப்பினார்.
# அஹமதாபாத்தில் இவர் தொடங்கிய ‘பவ் நிர்ஜார்’ கல்வி நிலையத்தில் யோகேஷ்வர் ஆலயத்தை எழுப்பினார். அங்கு நடக்கும் வருடாந்திர உற்சவத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை பங்கேற்கச் செய்தார்.
# ‘‘வெறும் கோட்பாடுகள் அடிப்படையிலான தத்துவம் நமக்கு தேவையில்லை. நம் அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய தத்துவங்கள்தான் தேவை” என்று பிரச்சாரம் செய்தார். அதையே தானும் பின்பற்றினார்.
# கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கூட்டுறவு விவசாயம், மீன்பிடி தொழில், மரம் நடும் திட்டங்களை தொடங்கினார்.
# சமூக மறுமலர்ச்சிப் பணிக்காக 1996-ம் ஆண்டு மகசேசே விருது பெற்றார். ஒரு லட்சம் கிராமங்களில் பகவத் கீதை நெறிகளின் அடிப்படையில் மக்களின் சுய அறிவு மேம்பாட்டுக்கு பாடுபட்டதற்காக 1997-ம் ஆண்டு டெம்பிள்டன் விருது பெற்றார். அதே ஆண்டு பத்மவிபூஷண் விருதும் பெற்றார்.
# இவரது சோதனை முயற்சிகளை (ப்ரயோகா) அடிப்படை யாக வைத்து ஷியாம் பெனகல் 1991-ம் ஆண்டு தயாரித்த திரைப்படம் ‘அந்தர்நாத்’ (அகக்குரல்). கடைசி வரை அடித்தட்டு மக்களுக்காக உழைத்த பாண்டுரங்க வைஜ்நாத் ஆத்வலே 83-வது வயதில் காலமானார்.
******************************************
இந்தியாவின் வேதாந்தக் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிய சுவாமி ராம தீர்த்தரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து…
# பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் முராரிவாலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சில நாட்களில் தாயை இழந்ததால் அண்ணன் பராமரிப்பில் வளர்ந்தார்.
# சிறு வயதிலேயே ஆன்மிக கதை களைக் கேட்பதில் அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆன்மிக உரையாற்றும் பெரியவர்களிடம் கேள்விகள் கேட்பதுடன் பல சந்தர்ப்பங்களில் உரிய விளக்கமும் அளிப்பார்.
# இறை பக்தியும், ஆன்மிக நாட்டமும் அவரிடம் ஆழமாக குடிகொண்டிருந்ததைக் கண்ட தந்தை, மகன் துறவியாகிவிடப் போகிறானே என்ற பயத்தில் 10 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட்டார்.
# பள்ளியில் பாரசீக மொழி கற்றுத் தந்த மவுல்விக்கு தட்சணை கொடுக்க பணம் இல்லை. ஒரே ஒரு கறவை எருமை மாட்டின் உதவியுடன்தான் அவர்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்பாவை சம்மதிக்கவைத்து, அந்த கறவை மாட்டையும் குருவுக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டார்.
# பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பும், லாகூர் அரசு கிறிஸ்தவ கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிப் பருவத்தில் கீதையை ஆழ்ந்து படித்ததால் கிருஷ்ண பக்தராக மாறினார்.
# கல்லூரி விடுதிக்கு மாத வாடகை 4 ரூபாய் கொடுக்கமுடியாததால் ஒரு ரூபாய் வாடகையில் பாழடைந்த அறையில் தங்கினார். 2 நண்பர்களுடன் தங்கியிருப்பதாக சக மாணவர்களிடம் கூறியிருந்தார். ஒருநாள் மாணவர் ஒருவர் இவரது அறைக்கு வந்தார். கூரைகூட இல்லாமல் இருந்த இடத்தைப் பார்த்து திடுக்கிட்டார். உங்களுடன் தங்கியிருக்கும் 2 நண்பர்கள் எங்கே என்று கேட்டபோது, அந்த அறையின் பொந்தில் இருந்த 2 பாம்புகளைக் காட்டினார் ராம தீர்த்தர்.
# அதே கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற் றினார். அப்போது லாகூரில் விவேகானந்தரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இவரைத் துறவியாக மாற்றியது. இமய மலைக்குச் சென்று தவம் செய்தார். வேதாந்தக் கருத்துகளை மக்களிடம் பரப்பினார்.
# சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். பெண்கள், ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார். படித்த இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் நலனுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவித் தொகை வழங்கினார்.
# ஜப்பானில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து வேதாந்த கோட்பாடுகள் குறித்து உரையாற்றினார். அமெரிக்காவில் ஒன்றரை ஆண்டு காலம் சுற்றுப்பயணம் செய்து, இந்து தர்ம சிறப்புகளை விவரித்தார். அமெரிக்கப் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி செய்திகள் வெளியிட்டன. இந்தியா திரும்பும் வழியில், எகிப்தில் கெய்ரோ நகர மக்களின் அழைப்பை ஏற்று அங்கு பாரசீக மொழியில் உரையாற்றினார்.
# 33-வது வயதில் சுவாமி ராம தீர்த்தர் உயிர் நீத்தார். தீபாவளித் திருநாளில் இவர் பிறந்தார். சந்நியாசம் ஏற்றது, உயிர் துறந்ததும் தீபாவளி நாளில்தான்.
*******************
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.
• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!
• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
*******************
இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த நாளான இன்று, அவரை பற்றிய அரிய முத்துகள்.
• மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டார்.
• பட்டப் படிப்பு முடித்தவுடன் மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிப்பதற்காக அவரை பெற்றோர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவருக்கு இயற்பியலில்தான் ஆர்வம். அப்பாவிடம் அணு இயற்பியல் படிக்க விரும்புவதாக கூறினார்.
• அதன்படியே, பாபாவை அவரது அப்பா இயற்பியல் படிக்க வைத்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
• 1934-ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்த கால கட்டத்தில் இவர் நீல்ஸ் போர் என்பவருடன் மேற்கொண்ட ஆய்வுகள் குவாண்டம் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மேலும் வால்டர் ஹைட்லருடன் மேற்கொண்ட இவரது ஆராய்ச்சிதான் காஸ்மிக் கதிர்களைப் புரிந்துகொள்வதில் மிக முக்கிய பங்கு வகித்தது.
• இந்தியா திரும்பிய அவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.
• அமெரிக்காவில், 1942-ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மும்பையில் இதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிலையத்தின் இயக்குநராக ஹோமிபாபா பொறுப் பேற்றார்.
• இந்தியா விடுதலை அடைந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக பணிபுரியத் தொடங்கினர்.
• அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
• 1955ல் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவை அடுத்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.
• ஜஹாங்கீர் ஹோமி பாபா ஸ்விட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 56-ஆவது வயதில் மரணமடைந்தார்.
****************
எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். ‘நேதாஜி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.
• சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், ‘வாலி’யான ரகசியம் இதுதான்.
• சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ‘ஆண்டவனே’ என்பார். சிவாஜிக்கோ இவர் ‘வாத்தியார்’. வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.
• விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.
• காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.
• வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், ‘தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே’ என்பார் பெருமையாக.
• தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.
• கோபம் அதிகம். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். ‘‘பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம்’’ என்றார் சூடாக!
• 15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். ‘வடைமாலை’ என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
• பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.
**********
பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்; இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த வெளி நாட்டினர்களில் முக்கியமானவர்; விவேகானந்தரின் முக்கியமான சீடர்: சகோதரி நிவேதிதா.
அயர்லாந்தின் டைரோன் கவுன்ட்டியில் உள்ள டங்கனான் நகரில் 1867-ல் இதே நாளில் பிறந்தவர் நிவேதிதா. இவருடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவரின் தந்தை மத குருவாக இருந்தவர். எலிசபெத்துக்கு இயல்பாகவே கடவுள் பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தது.
ஆசிரியையாகப் பணிபுரிந்த அவர், பின்னர் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார்.
1895-ல் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது, அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து நிறைய சந்தேகங்களைக் கேட்டு அவரது கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் விவேகானந்தருடன் கொல்கத்தா நகருக்கு வந்தார். ராமகிருஷ்ணரின் மனைவியும் ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவருமான அன்னை சாரதா தேவியுடனான சந்திப்பு அவரது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவியது. அதுவரை எலிசபெத் என்று அறியப்பட்ட அவர் ‘சகோதரி நிவேதிதா ’என்று அழைக்கப் பட்டார்.
கொல்கத்தாவில் பெண்கள் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அந்நகரில்
1899-ல் பிளேக் நோய் தாக்கியபோது, ஏழை மக் களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவை
களைச் செய்தார். தெருக்களைச் சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார்.
ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திரபோஸ், அரவிந்தர் உள்ளிட்டவர்களுடன் நட்பு ஏற்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தேவையானது என்று ஆரம்பத்தில் கருதி வந்த நிவேதிதா, பிரிட்டிஷாரின் அடக்கு முறையை உணர்ந்ததும் இந்தியாவின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக