செவ்வாய், 18 நவம்பர், 2014

தலாய் லாமா

திபெத்திய புத்த மதப் பிரிவின் தலைவர் தலாய் லாமா என்று அழைக்கப்படுகிறார். தலாய் லாமா மறுபிறப்பு எடுப்பதாக திபெத் புத்த மதத்தினரால் நம்பப்படுகிறது. இதனால், அவர் இறக்கும் தருணத்தில் பிறக்கும் குழந்தைகளில் ஒருவரை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அவர்களிடம் உள்ளது.
13-வது தலாய் லாமாவாக இருந்த துப்தன் கியாட்ஸோ 1933-ல் இறந்தார். புதிய தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தலாய் லாமா தகனம் செய்யப்படும்போது, சிதையிலிருந்து காற்றில் பரவும் புகை எந்தத் திசையில் செல்கிறதோ அந்தத் திசையில் புதிய தலாய் லாமா கிடைப்பார் என்பதும் அவர்களின் நம்பிக்கை
களில் ஒன்று. 13-வது தலாய் லாமாவின் உடல் தங்க சிம்மாசனத்தில் வைக்கப் பட்டிருந்தபோது, அவரது தலை வட கிழக்குப் பகுதியை நோக்கித் திரும்பியதாம். இதைத் தொடர்ந்து, புதிய லாமாவைத் தேர்ந்தெடுக்கும் குழுவினர் அந்தத் திசையில் பயணம் மேற்கொண்டனர். சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள தாக்ட்ஸர் எனும் இடத்தில்
1935-ல் பிறந்த லாமோ தோண்ட்ரப், 13-வது தலாய் லாமாவின் மறுபிறப்புதான் என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 2 வயது லாமோவுக்குப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. 13-வது தலாய் லாமா பயன்படுத்திய பொருட்கள் மற்ற பொருட்களுடன் கலந்து மேஜை மீது வைக்கப்பட்டன. அவற்றில் சரியான பொருட்களை அந்தச் சிறுவன் கண்டுபிடித்தான். இதுபோன்ற சோதனை களின் முடிவில் 14-வது தலாய் லாமாவாக லாமோ தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனது பெயர் டென்சின் கியாட்சோ என்று மாற்றப்பட்டது. எனினும், தலாய் லாமாவாக முறைப்படி பதவியேற்றது 1950-ல் இதே நாளில்தான். அப்போது டென்சினுக்கு 15 வயது ஆகியிருந்தது. 1959-ல் சீன அரசின் கெடுபிடிகளுக்கு எதிராக, திபெத் மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். சீன அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த தலாய் லாமா இந்தியாவிடம் தஞ்சம் புகுந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக