ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் மனிதர்கள் புதுப் புது சாதனைகளை நோக்கிப் பயணப்படவே விரும்புவார்கள். பெண்களும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களைச் சமாளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சமாளித்து எழுகிறவர்களை இந்தச் சமூகம் கொண்டாடும், சில சமயம் சர்ச்சைக்கும் உள்ளாக்கும். ஆனால் சுழலில் அடித்துச் செல்லப்படாமல் உறுதியாக நிற்கும் பெண்களே தடம்பதிக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் அப்படி தனித்து நின்று கவனம் ஈர்த்த சில பெண் ஆளுமைகள் இவர்கள்.
விளையாட்டு
தங்க மங்கைகள்
விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு பெண்களுக்கான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். தொடர்ச்சியான வெற்றிகளும் பதக்கங்களுமே அதற்கு சாட்சி.
2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை பிரிவில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை பிரிவில் முதல் பதக்கம் பெற்ற இந்தியர் இவரே. மணிப்பூரின் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த மேரி கோம், வெற்றியின் உச்சம் தொட இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணம். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மேரி கோம்’ என்ற இந்தித் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
காமன்வெல்த் போட்டியில் 55 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பபிதா குமாரி தங்கம் வென்று இந்தியாவின் வெற்றி மகுடத்தின் பிரகாசத்தைக் கூட்டினார். காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக ஜோடி ஜோஷ்னா சின்னப்பா-தீபிகா பள்ளிக்கல் தங்கம் வென்று வரலாறு படைத்தனர்.
காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார். ஓபன் மற்றும் வேர்ட்ல்டு டூர் பைனலில் பெண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான்.
பாட்மிண்டன் அரங்கிலும் இந்தியாவின் கொடி உயரப் பறந்தது. சாய்னா நேவால், பி.வி. சிந்து இருவரும் குறிப்பிடத்தகுந்த அளவில் பதக்கங்ளைக் குவித்தனர்.
சளைக்காத சரிதா
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவரின் ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, தனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். சரிதாவின் அதிரடி முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான சரிதாவின் முடிவு, தவறிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.
*************
உலக அளவில் பல துறைகளிலும் பெண்கள் தடம்பதித்தனர். மேரி பாரா, உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமைச் செயல் அலுவலராகப் (சி.இ.ஓ.) பொறுப்பேற்றார். சர்வதேச கார் நிறுவனத்தின் தலைமைப் பதவி வகிக்கும் முதல் பெண் இவர். அதுவும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கு தலைமைப் பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல. பல போராட்டங்களைத் தாண்டியே மேரிக்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
அவளுக்காக அவன்
ஹாலிவுட் மாயாஜால படமான ஹாரிபாட்டரில் ஒன்பது வயதில் அறிமுகமான எம்மா வாட்சன் இன்று இளம் நடிகையாக மட்டுமல்ல, ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராகவும் அறியப்படுகிறார். ‘அவளுக்கான அவன்’ என்ற பரப்புரையைத் தொடங்கிய எம்மா, ‘பெண்ணியம் என்பது பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல. பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுப்பது’ என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் கவனத்தை எம்மா மீண்டும் தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.
வலைத்தள வெற்றி
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஷெரில் காரா சாண்ட்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரியாகக் (C.O.O) கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே பேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராகவும் ஷெரில் பதவி வகித்திருக்கிறார். போட்டி நிறைந்த சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் வெளிப்படுகிறது ஷெரில் காராவின் திறமை.
உலகம் மலாலா
தலிபான்களுக்கு எதிராக எழுத்தையும் கல்வியையும் உயர்த்திப் பிடித்த மலாலா, நோபல் பரிசுக்காகக் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொதுமக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜாத்’ எனும் தைரியமான பெண் விருது பெற்ற பெருமையும் மலாலாவுக்கு உண்டு. மலாலா கடந்துவந்த எத்தனையோ விருதுகளுக்கு மகுடம் சூட்டும்விதமாகத் தற்போது கிடைத்திருக்கும் நோபல் பரிசை, பெண் கல்விக்கும் பெண்ணுரிமைகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக