புதன், 28 ஜனவரி, 2015

உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/article6820832.ece


சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...
இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.
இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.
மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.
இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.
இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார்.
சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லா தரப்பினரை யும் எழுச்சியூட்டியது. 25-1-1965 நெருங்க நெருங்க போராட்ட எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. 1965, ஜன. 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் இறங்கின.
சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், அன்றைய தினம் தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
நிலைமை மிகவும் மோசமானது. மாண வர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்து விட்டது. எல். கணேசன், விருதுநகர் பெ. சீனிவாசன், துரைமுருகன் என திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தக் குழுவில் தளகர்த்தகர்களாக இருந்தபோதும், மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த அண்ணாவால் முடியவில்லை.
இதனிடையே, இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார்.
'தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். இத னால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.
அந்தப் போராட்டத்தின் தாக்கம் அத்துடன் முடியவில்லை. 1967-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. தேசியத் தலைவராகப் போற்றப்பட்ட காமராஜரை, மாணவர் தலைவரான பெ. சீனிவாசன் தோற்கடித்தார். அன்று ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு இன்றளவும் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலுக்கு வெகுதூரத்தில்தான் நிற்கிறது. இந்தி மொழியின் ஆதிக்கத்தைத் தடுக்க முடிந்தது. எனினும், தமிழ் மொழியின் இன்றைய நிலைமை என்ன? தமிழே படிக்காமல் 1-ம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட முடியும் என்ற நிலைமை அல்லவா ஏற்பட்டு விட்டது.
மாநிலத்தில் ஆட்சி மொழியாக, அரசு அலுவலகங்களில் நிர்வாக மொழியாக, கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக, இங்குள்ள நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக என எந்த அங்கீகாரமும் இன்றி தமிழ் தள்ளாடி நிற்கிறது. 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் வெறும் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது மட்டும் போதுமா என்ற கேள்வி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஏக்க பெருமூச்சாக நிற்கிறது. இந்த சூழலில்தான் மொழிப் போரின் 50-ம் ஆண்டை தமிழ்நாடு கொண்டாடுகிறது.

***************************


தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு நடந்த மாபெரும் போராட்டம் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம். தமிழகத்தின் நவீன கால வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்துக்குக் காரணமாக அந்தப் போராட்டம் நடந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் நாள், அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் மரபு தொடர்கிறது.
50 ஆண்டுகள் கழித்து இன்று பார்க்கும்போது, அந்த அஞ்சலி மரபுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?
இருக்கிறது. ஏன்?
ஏனென்றால்…
அந்த மொழிப் போராளிகள்தான் இந்தியாவில் இந்தி பேசாத எல்லா மொழிச் சமூக மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதிலிருந்து காப்பாற்றினார்கள். இந்தியா குடியரசாக உருவான 1950 ஜனவரி 26-ம் தேதி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, இந்தியாவின் ஒன்றிய அரசாங்கத்தின் (the Union Government of India) அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மொழி அந்தஸ்தை இழக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த 15-வது ஆண்டுதான் 1965. அதற்கான கெடு நாள்தான் ஜனவரி 26. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால் அதை ஏற்க மாட்டோம் என்றும், ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தது யார்? 1965-ல் தமிழக மக்களும் மாணவர்களும்தான். அவர்களால்தான் நாம் ஒற்றை மொழி ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பினோம்.
ஏனென்றால்…
இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப்படுவது தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் விழுந்தன. அவையின் தலைவர் தனது ஒரே வாக்கை இந்திக்கு ஆதரவாக இட்டு இந்தியை ஆட்சி மொழியாக்கினார். இந்திக்கு எதிராக வாக்களித்த 77 வாக்குகள் தமிழகத்தின் வாக்குகள் மட்டுமல்ல; இந்தி பேசாத எல்லா மாநிலங்களின் பிரதிநிதிகளும் சேர்ந்ததால்தான் அந்த 77 வாக்குகளும் விழுந்தன. 1965-ல் அந்த மாநிலங்கள் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்தன. தமிழகம் மட்டும் சிலிர்த்தது. இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசாத மக்களின் பிரதிநிதிகளாகத் தமிழகம் அந்தச் சதியை மீண்டும் முறியடித்தது. முறியடித்தவர்கள், நமது மொழிப் போராளிகள்.
ஏனென்றால்...
இன்று கொல்கத்தாவிலும் மும்பையிலும் பெங்களூருவிலும் முறையே வங்காள மொழியையும் மராத்தியையும் கன்னடத்தையும் இந்தியும் இந்தி சினிமாவும் இந்தி வெகுசனக் கலாச்சாரமும் அழித்துவிட்டன என்று அந்தந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் புலம்புகிறார்கள். ஆனால், சென்னையில் அது நடக்கவில்லை. தமிழ் வெகுசனக் கலாச்சாரமும் திரைத் துறையும் வீதி மொழியும் இங்கே இன்னும் தமிழாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால்...
இந்தியாவின் மெத்தப் படித்த காங்கிரஸ் மேதாவிகளின் திட்டப்படி 1965-ல் ஆங்கிலம் முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட்டிருந்தால், இன்று இந்தியாவில் எதையெல்லாம் வளர்ச்சி, மேம்பாடு என்று சொல்கிறார்களோ அது எதுவுமே நடந்திருக்காது. குறிப்பாக, 1990-களுக்குப் பிறகு இந்தியாவின் உலக அடையாளமாக மாறிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி இங்கே சாத்தியப்பட்டிருக்காது. லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் தொழில் வாய்ப்புகளும் இருந்திருக்காது. தமிழகமும் தென் மாநிலங்களும் இந்தி மாநிலங்களைவிடக் கூடுதல் வளர்ச்சி பெற்றிருக்காது. தமிழர்கள் உலகெங்கும் தொழில்நுட்ப வேலைகளுக்குப் போயிருக்க மாட்டார்கள். நாம் நமது தாய்மொழியைப் பயன்படுத்தினால் இதைவிடப் பெரிய முன்னேற்றம் அடைய முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், எந்தப் பயனுமில்லாமல் இந்தியை மட்டும் படித்திருந்தால், நம் கதை என்னவாக ஆகியிருக்கும்? அது அந்தப் போராளிகளுக்குத் தெரிந்திருந்தது.
ஏனென்றால்...
இந்தி என்பது வெறும் மொழி சார்ந்த விவகாரம் அல்ல. அது வேலைவாய்ப்பு சார்ந்த விஷயம். இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், மத்திய அரசு வேலைவாய்ப்பில் வட இந்தியர்களைத் தவிர, வேறு யாரும் முன்னுக்கு வந்திருக்க முடியாது. யு.பி.எஸ்.சி-யில் ஆங்கிலம் சிறிய அளவில்கூட இருக்கக் கூடாது என்று இந்திக்காரர்கள் இன்றுவரை போராடுகிறார்கள். 1965-ல்
நமது முன்னோடிகள் களமாடியது ஆங்கிலத்துக்காக அல்ல; தமிழுக்காகத்தான் என்றாலும், காலத்தின் கட்டாயம் ஆங்கிலத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்களைப் போராடவைத்தது. அது ஓரளவுக்கு நமக்கு உறுதுணை புரிந்தது.
ஏனென்றால்...
நமது போராளிகள் இந்தியாவின் மொழி அரசியலை நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள். இந்தியாவில் காங்கிரஸ், இந்துத்துவ கட்சிகள் ஆகிய இரு தரப்பினருமே இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிற்பவர்கள். இந்து-இந்தி-இந்துஸ்தான் என்கிற ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்று கொடிபிடிக்கும் இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை சம்ஸ்கிருதமயமாக்கப் பட்ட இந்தி என்பது சம்ஸ்கிருதமேயாகும். இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று தொடங்கி, பிறகு இந்தி மட்டுமே தேசிய மொழி என்று நீட்டி ஆளுகிற நோக்கம் அவர்களுக்கு இருந்தது. தமிழகத்தின் தனிச் சிறப்பான அரசியல் சூழலின் காரணமாகவே, 1965-ல் நமது முன்னோடிகள் அந்த ஒற்றைக் கனவைத் தகர்த்தெறிந்துவிட்டார்கள்.
ஏனென்றால்...
ஏதோ நாம் இந்தி படிக்காததால்தான் வேலைவாய்ப்பை இழந்துவருகிறோம் என்று பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேவை ஏற்பட்டால் இந்தி மொழியைத் தெரிந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதனால்தான் நாம் வேலைவாய்ப்பை இழக்கிறோம் என்பது உண்மையானால், மிக மோசமான ஒரு சதிக்கு நாம் உள்ளாகிவிட்டோம் என்றுதான் அர்த்தம். அதைத்தான் தமிழகத்தின் மொழிப் போராளிகள் முக்கால் நூற்றாண்டாக நம்மை எச்சரித்துவருகிறார்கள். நமது மொழியின் அடிப்படையிலேயேதான் நமக்கு வேலை கிடைக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் எத்தனை மொழியையும் படிக்கத் தயங்க மாட்டார்கள் தமிழர்கள். பல்வேறு மொழி பேசுவோர் நடைபயின்ற காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் என்ன ஒற்றை மொழிவாதிகளாகவா இருந்திருப்போம்?
ஏனென்றால்...
உலகின் வளர்ந்த நாடுகளிலெல்லாம் தாய்மொழி அடிப்படையிலான மொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றன. 1996-ல் பார்சிலோனா நகரில் வெளியிடப்பட்ட மொழி உரிமைகளுக்கான பன்னாட்டுப் பிரகடனத்தின் அடிப்படையும் 1937 முதல் இன்றுவரை தமிழகத்தில் மொழிக்காகக் குரல்கொடுப்போரின் அரசியல் சித்தாந்த அடிப்படையும் ஒன்றுதான். ஐரோப்பிய யூனியன் எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறதோ அதே போன்ற மொழிக் கொள்கையைத்தான் இந்திய யூனியனும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் நமது போராளிகளின் கோரிக்கை. ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என்றால் ‘இந்தி மொழி ஒழிக, தமிழ் மட்டும் வாழ்க’ என்பது அர்த்தமல்ல. இந்தித் திணிப்பு ஒழிய வேண்டும், தமிழ் உட்பட இந்தியாவிலுள்ள மற்ற எல்லா மொழிகளுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பொருள். அதனால்தான் 1965-ல் போராடிய மாணவர்கள் அன்றே பிற மாநிலங்களிலுள்ள மாணவர் இயக்கங்களோடு தொடர்புகொண்டு தமது அரசியலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏனென்றால்...
அந்தப் போராட்டத்தின் விளைவாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசு தூக்கியெறியப்பட்டு, முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு இந்தியா முழுக்க மாநில சுயாட்சி பேசும் கட்சிகளும் தேசிய இன உரிமைகளைப் பேசும் அமைப்புகளும் உதயமாயின. அவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்கித்தந்து, காங்கிரஸின் ஏகபோகத்தை முறியடித்தவர்கள் 1965-ல் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்களும் பிறரும்தான்.
ஏனென்றால்...
துரதிர்ஷ்டவசமாக, அன்றையப் போராட்டத்தின் பலனை அறுவடை செய்தவர்கள் – இருபெரும் திராவிடக் கட்சிகள் – இன்று மொழிக் கொள்கைக்காகப் போராடும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே, காவல் துறையாலும் ராணுவத்தாலும் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்காக – குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக – இன்று அஞ்சலி செலுத்த யாருமில்லை. ஆனால், அவர்களின் போராட்டத்தால் பலன் பெற்ற இன்றைய தலைமுறைக்கு அந்தக் கடமை இருக்கிறது. இன்று ஒரு நிமிடம் அவர்களைப் பற்றிச் சிந்திப்போம். நமது போராளிகள் தீர்க்கதரிசனமாகச் சிந்தித்தார்கள், போராடினார்கள். எத்தகைய மொழிக் கொள்கை இந்தச் சமூகத்துக்கு வேண்டுமோ அதற்கான வித்தினை அவர்கள் இட்டுச்சென்றிருக்கிறார்கள்.
ஏனென்றால்...
அவர்கள் நமது தாய் தந்தையர். அவர்கள் அன்று ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவின் ராணுவம் தமது பிள்ளைகளைக் குறிவைத்ததைக் கண்டு நமது பாட்டன், பாட்டிமார் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களின் துயரத்தை நாம் எப்படி மறக்க முடியும்? அவர்களின் தியாகத்தை நாம் எப்படி மறைக்க முடியும்? அவர்களின் தீர்க்கதரிசனத்தை நாம் எப்படி மறுக்க முடியும்?
- ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம், zsenthil@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக