இந்தியாவில் திட்டக் குழுவின் யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. மாற்றாக, ‘நிதி ஆயோக்’என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த புதிய தீர்மானத்தை இயற்றியிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவை வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கி மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் என்ற பொருளில் ‘நிதி’ என்ற சொல் இணைக்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைப்புக்குப் பிரதமர் தலைவராக இருப்பார். இதற்கொரு துணைத் தலைவரைப் பிரதமரே தேர்ந்தெடுப்பார். அவர் முழு நேரப் பொறுப்பாக இதன் செயல்பாடுகளைக் கவனிப்பார். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இதில் முழு நேர உறுப்பினர்களாகச் செயல் படுவார்கள். இருவர் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். திட்டக் குழுவில் உறுப்பினர்-செயலர் என்ற பதவியில் ஒருவர் இருந்தார். புதிய அமைப்பில் ‘தலைமை நிர்வாக அதிகாரி’ அந்த இடத்தில் இருப்பார். மத்திய அமைச்சர்கள் 4 பேர் இதில் பதவி வழி உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். இந்த அமைப்புக்குப் பெரியதொரு நிர்வாகக் குழுவும் ஏற்படுத்தப்படும். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களின் துணை நிலை ஆளுநர்களும் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அரசின் அறிவிப்பு, “இந்த அமைப்பு, கொள்கைகளை வகுக்கும் உயர் சிந்தனை அமைப்பாகச் செயல்படும். தேசிய வளர்ச்சி மன்றத்துக்குப் பதிலாக, இந்த அமைப்பு தேசியப் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண உதவும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டமைப்புத் தத்துவத்தை உயர்த்துவதே ‘நிதி ஆயோக்’கின் நோக்கம்” என்று சொல்கிறது.
கொள்கைகளை அமல்படுத்த எந்த வகையிலான தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது, நிதி ஆதாரத்தை எப்படிப் பெறுவது, எந்த அமைப்புகள் மூலம் செயல்படுத்துவது என்பதையெல்லாம் இந்த அமைப்பு முடிவெடுக்கும். திட்டமிடல் தனியாகவும் அதை அமல்படுத் தும் உத்திகள் தனியாகவும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அரசின் நோக்கம் இதில் உள்ளடங்கியிருக்கிறது. வகுக்கப்படும் திட்டங்களை விரைவாகவும் செறிவாகவும் நிறைவேற்ற இது உதவும் என்றும் நல்ல நிர்வாக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். பொருந்திருந்து பார்ப்போம்.
எந்த ஒரு அமைப்பும் காலப்போக்கில், கொஞ்சம் கலகலத்துப் போவது இயல்பானது. அதற்காக ஒரு அமைப்பை முற்றிலுமாகக் கலைத்துவிடலாமா என்று கேட்டால், அப்படிக் கலைப்பது குழப்பத்தி லும் குளறுபடியிலும்தான் போய் முடியும் என்கின்றன வரலாற்று அனுபவங்கள். மத்திய திட்டக் குழுவின் பணிகள் முழுத் திருப்தி அளிக்கக்கூடியவை இல்லை என்றாலும், நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அதன் பங்களிப்பை நாம் என்றைக்கும் மறக்க முடியாது. மேலும், இந்நாட்டில் வறுமை ஒழிப்புப் பணிகளிலும் அது ஆற்றிய பணியைப் புறந்தள்ளிவிட முடியாது. புதிய அமைப்பு எப்படிச் செயல்படும் என்று போகப்போகத்தான் தெரியும். இப்போதே இதை விமர்சிப்பதும் வரவேற்பதும்கூட ஒருவகையில் பொருத்தம் இல்லாமல்தான் இருக்கும்.
மாறிவரும் அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப நம்முடைய திட்டமிடலிலும் மாற்றம் வேண்டும். அப்படியான மாற்றங்கள் ஆக்கபூர்வ மானதாகவும் துடிப்பான செயல்பாட்டுக்கு வழிவகுப்பதாகவும் இருக்க வேண்டும்.
மோடி அரசு தொடர்ந்து மாற்றங்களைப் பற்றியும் துடிப்பான செயல்பாட்டைப் பற்றியும் பேசுவது நன்றாக இருக்கிறது. ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்குப் பதிலாக, அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்திலேயே போய்ச் சேர்வதுதான் கவலையைத் தருகிறது!
************மருத்துவ வசதிகளை இந்தியக் குடிமக்கள் பெறுவதை அடிப்படை உரிமையாக்க, புதிய தேசிய சுகாதாரக் கொள்கை வகுக்கப்படுகிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் தயாரித்து பொதுப் பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது.
மாநில அரசுகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அமைப்புகள், மருத்துவர்கள், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தக் கொள்கையை அலசி ஆராய்ந்து, அதில் சேர்க்க வேண்டிய கருத்துகளையும் விலக்க வேண்டியவற்றையும் யோசனையாகப் பரிந்துரைக்கலாம். வரும் பிப்ரவரி 28 வரையில் இதற்குக் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவு வாசகத்தின்படி, மருத்துவ வசதி பெறுவது இந்தியர் யாவருக்கும் இனி சட்டபூர்வமான உரிமையாகும். கல்வி பெறுவதுபோல, மருத்துவ வசதியும் அடிப்படை உரிமையாகும்.
ஒரு ஜனநாயக அரசு ஆளும் நாட்டில், கல்வியும் மருத்துவமும்கூட இப்போதுதான் அடிப்படை உரிமையாகிறது என்பதற்காக வேதனைப்படுவதா அல்லது இப்போதாவது நடக்கிறதே என்று ஆறுதலடைவதா என்று தெரியவில்லை.
இவ்வாறு சுகாதார வசதிகளை அடிப்படை உரிமையாக்குவதைத் தொழில்வள நாடுகள் என்றோ செய்துமுடித்துவிட்டன. பிரேசில், தாய்லாந்து போன்ற வளரும் நாடுகள்கூட இதற்கான சட்டங்களை இயற்றிவிட்டன. நாம் பின்தங்கியிருக்கிறோம். 13 ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசு தேசிய சுகாதாரக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்த பிறகு, இப்போது மோடி தலைமையிலான புதிய அரசு இந்த யோசனையை வெளியிட்டிருக்கிறது. சுகாதாரத்தை அளிப்பதில் மட்டுமல்ல, அதைப் பற்றிய சிந்தனையிலும் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும், பேறு காலங்களில் கர்ப்பவதிகளின் இறப்பு தடுக்கப்பட வேண்டும், பிறந்த சிசுக்கள் ஊட்டச்சத்துக் குறைவாலோ, மருத்துவக் கவனிப்பின்றியோ இறப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கங்களை எல்லாம் இந்தக் கொள்கையால் சாத்தியப்படுத்த முடியும். வசதி படைத்தவர்களுக்கும் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கும் மட்டும்தான் நவீன சிகிச்சைகள் என்ற நிலையை மாற்ற முடியும். ஆனால், இவையெல்லாம் நடக்க வெறுமனே ஏட்டளவோடு நிற்காமல், அதற்கேற்றக் கட்டமைப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) குறைந்தபட்சம் 2.5 சதவீதமாவது தேசிய சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று தேசியக் கொள்கை கருதுகிறது. இது நபர்வாரியாக சுமார் ரூ.3,800 ஆக இருக்கும். ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் சுகாதார வசதிகளும் செய்துதர ஜி.டி.பி-யில் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது ஒதுக்கப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த தலைமை மருத்துவமனை அமைக்கப்படுவது அவசியம். மாவட்டந்தோறும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி, மருத்துவக் கருவிகளைக் கையாள்வோருக்கான தொழில் பயிற்சி மையம் போன்றவற்றுக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும். அரசுத் துறையில் மருந்து தயாரிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சித் துறையில் பெருமளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மனிதர்களுக்கான இந்தச் சட்டபூர்வ உரிமை கால்நடைகளுக்கும் பறவையினங்களுக்கும்கூட விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையான அக்கறையும் முனைப்பும் இருந்தால் அரசால் இது எல்லாமும் சாத்தியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக