உலகம் போற்றும் ஆன்மிக ஞானி, அத்வைத வேதாந்த நெறிகளை போதித்த மகான் ‘பகவான் ரமண மஹரிஷி’ அவதரித்த நாள் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர். இயற்பெயர் வேங்கடராமன். மதுரை ஸ்காட் பள்ளியில் படித்தார். தந்தை மறைவுக்குப் பிறகு மதுரையில் மாமா வீட்டில் அம்மாவுடன் வசித்தார்.
* திருவண்ணாமலையில் இருந்து வந்த மாமாவின் நண்பர், அந்த ஊர் பற்றி கூறிய விஷயங்கள் இவருக்குள் ஆழமாக வேரோடின. அப்போதே பெரியபுராணம் உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களைப் படித்துவந்தார்.
* இறைவனை அறியும் உந்துதல் பிறந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். 17 வயதில் சித்தப்பா வீட்டில் இருந்தபோது, திடீரென மரண அனுபவம் போன்ற உணர்வுக்கு ஆளானார். தன்னையே உள்முகமாக கேள்வி கேட்டுக்கொள்ளும் சுய அறிதலை நாடியது அவரது மனம்.
* ‘மரணத்தின்போது உடல் மட்டுமே இறக்கிறது; ஆன்மா அல்ல. நான் என்பது வெறும் உடல்தான். ஆன்மாதான் எல்லாம்வல்ல பரம்பொருள்’ என உணர்ந்தார்.
* உறவினர்கள், வீடு, வாசலைத் துறந்து ரயில் ஏறி திருவண்ணாமலையை அடைந்தார். அருணாசலேஸ்வரர் கோயிலில் தியானம் செய்துவந்தார். சிறுவர்களின் விஷமம் அவருக்குத் தொந்தரவாக இருந்ததால், கோயிலின் பாதாள லிங்கம் அருகே சென்று தியானத்தில் மூழ்கினார்.
* இவரது மகத்துவத்தை உணர்ந்து பலரும் சீடர்களாயினர். அதன் பிறகு விருப்பாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களுக்குச் சென்றார். திரும்பவும் திருவண்ணாமலை அடிவாரம் வந்து தங்கினார். பெரும்பாலும் தியானத்தில் இருந்த அவரை ‘மவுன குரு’ என்றனர் மக்கள். அங்கு ரமணாஸ்ரமம் உருவானது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து இவரிடம் தீட்சை பெற்றனர்.
* இவரது சீடர் காவ்யகண்ட கணபதிமுனி, சமஸ்கிருத பண்டிதர். அவர்தான் இவருக்கு ‘ரமண மஹரிஷி’ என்று பெயர் சூட்டினார். உபநிடதங்கள், அத்வைத வேதாந்த நெறிகளை எல்லோருக்கும் புரியும் வகையில் உபதேசித்தார் ரமணர்.
* அவரது உபதேசங்கள் தொகுக்கப்பட்டு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் முதன்மையானது ‘நான் யார்?’ என்ற புத்தகம். ஆதிசங்கரரின் ‘ஆத்மபோதம்’ நூலை தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், ஆன்ம வித்தை உள்ளிட்ட பல நூல்களை அருளியுள்ளார்.
* கருணையே உருவானவர். எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பது ஆன்மாதான் என்பதை முழுமையாக உணர்ந்தவர். நாய், பசு, அணில் போன்ற ஜீவராசிகளையும் அவன், இவள் என்றே குறிப்பிடுவார்.
* 58 வயதில் நிர்வாண நிலை அடைந்தார். 71 வயதில் முக்தி அடைந்தார்.
*********
இந்திய ஆன்மீக அறிஞரான ரஜ்னீஷ் சந்திர மோகனின் (ஓஷோ) பிறந்த நாள் (டிசம்பர் 11) இன்று. அவரை பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
மத்திய பிரதேசத்தில், குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தவர். பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். சாகர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் 21-ஆம் வயதில் ஞானமடைந்தார்.
ராய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். ஒன்பது வருட பணிக்குப் பிறகு, அந்த வேலையை ராஜினாமா செய்தார். மனித குலத்தின் விழிப்புணர்வு நிலையை உயர்த்தும் லட்சியத்துடன் புனே நகரில் ஆஸ்ரமம் நிறுவினார்.
யோகா, ஜென், தாவோயிசம், தந்த்ரா மற்றும் சூஃபியிசம் உள்ளிட்ட அனைத்து விதமான தத்துவங்களை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்து, ஆன்மிகத்தில் உயர்நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்ட சீடர்களுக்கு வழிகாட்டினார். ஏறக்குறைய 15 வருடங்கள் இவர் உரையாற்றியுள்ளார்.
டைனமிக் தியான முறையை அறிமுகம் செய்தார். ஏராளமான தியான முகாம்களை நடத்தினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இவரை நாடி சீடர்கள் குவிந்தனர், ரஜனீஷ் என்று போற்றப்பட்டார்.
இவரது உரைகள் 600க்கும் மேற்பட்ட தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காதல், பொறாமை, தியானம், ஆன்மிகம், அரசியல், மனித மனோபாவங்கள், உடல், மனம், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகியவை குறித்து இவர் விளக்கமளித்த கேள்வி-பதில் அமர்வுகள் 40 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு அரிய சம்பவங்களையும் மனித குல மேம்பாட்டுக்கு வழிகாட்டும் முன்னுதாரண நிகழ்வுகளையும் தெள்ளத் தெளிவாகவும், எளிமையாகவும் விவரித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒரேகான் என்ற இடத்தில் பாலைவனமாக இருந்த 64 ஏக்கர் நிலத்தை இவர் சீடர்கள் வாங்கினர். விவசாய கம்யூனாக அது மாற்றப்பட்டது. ரஜனீஷ்புரம் உருவானது. அங்கே 5000 பேர் வசித்தனர்.
அரசியல், மதம் சம்பந்தமான புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியதால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளானார். இதனால், வெகு விரைவில் இந்த கம்யூன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆனால், சர்ச்சைக்கு இடமான ஆன்மீகக் குடியிருப்பாக மாறியது.
1985ல் அமெரிக்க அரசு ஏதோ காரணம் காட்டி இவரை கைது செய்தது. சிறையில் அவருக்கு ‘தாலியம்’ என்ற மெல்லக் கொல்லும் கொடிய விஷம் செலுத்தப்பட்டதாக இவரது சீடர்கள் குற்றம்சாட்டினர். விடுதலைக்குப் பிறகு, இவர் வருவதற்கு 21 நாடுகள் தடைவிதித்தன. இறுதியாக, 1987ல் தனது பூனா ஆஸ்ரமம் திரும்பினார்.
1989ல் சீடர்கள் ‘ஓஷோ’ என்று இவரை அழைக்கத் தொடங்கினர். மதம் என்ற பெயரில் தங்களது சொந்த ஆதாயத்துக்காக மூடத்தனங்களைப் பரப்புவோருக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த ஓஷோ 59-ஆவது வயதில் தன் உடலை விட்டு நீங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக