வியாழன், 1 ஜனவரி, 2015

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.
காத்திருக்க முடியுமா?
அப்படியென்றால், மொத்தம் 85 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலை இல்லாமல்தானே கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள்? (இதில் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரங்கள் வேறு). ஏதோ கண்துடைப்பு வேலையாக ஊர், பேர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களிலெல்லாம் வேலைக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டு, பின்னர் ‘எங்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று கைவிரிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது.
சரி, கல்லூரிகளையும் பாடத்திட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய ‘அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம்’ என்ன சொல்கிறது? “கவலைப் படாதீர்கள், தரமற்ற கல்லூரிகளையெல்லாம் காலப் போக்கில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் அவர்களே மூடிவிடுவார்கள். தரமான கல்வியைக் கொடுக்கும் நல்ல கல்லூரிகள் மட்டுமே நிலைக்கும். அதுவரைக்கும் சற்றுப் பொறுமையாகக் காத்திருங்கள்” என்கிறது.
இளைஞர்களின் கதி என்ன?
ஏதோ நினைத்த மாத்திரத்தில் திறந்து மூடும் சாலையோர உணவகங்கள்போல, அவர்களே மூடிவிடு வார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து உழைத்த பெற்றோரின் உழைப்பினால் வந்த காசைக் கொடுத்து, தங்கள் இளம் பருவத்தைத் தொலைத்து, எந்தத் திறமையும் அறிவும் இல்லாமல் பட்டம் பெற்று வெளியில் வந்து வேலை கிடைக்காமல் தெருவில் நிற்கும் இளைஞர்களின் கதி என்ன? வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்?
2013-ல் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களில் பலர் முதல் செமஸ்டர் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சித் தகவல். 12-ம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்றவர்கள், கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது பேரதிர்ச்சி.
பள்ளிகளை விட்டுக் கல்லூரிக்கு வந்தால் அங்கும் அதே கதைதான். பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்களைவிட மாணவர்களை மிகவும் கடுமையாக நடத்துகின்றன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பல்கலைக்கழக ரேங்க். எப்படியாவது செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் முதல் ரேங்க் பெற்றுவிட வேண்டும், கல்லூரி வாசலில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும். இதுதான் பிரதானக் குறிக்கோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக