இன்றைய சூழலில் வெளிப்பார்வைக்குப் புலப்படாமல் ஏராளமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற கோட் பாடு ஹாங்காங்குக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைச் சித்தரிப்பதற் காகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? அமெரிக்க-சீனப் பொருளாதாரங்களின் எதிர்காலம் இன்று ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக் கிறது. எந்த அளவுக்கு என்றால் அவைதான் நாம் உற்றுநோக்க வேண்டிய ‘ஒரே நாடு: இரண்டு அமைப்புகள்’ என்கிற அளவுக்கு.
ஆண்டுதோறும் இரு தரப்புக்கும் இடையில் 60,000 கோடி டாலர்கள் அளவில் நடக்கும் வர்த்தகம்; அமெரிக்காவில் படிக்கும் 2,75,000 சீன மாணவர்கள், சீனாவில் படிக்கும் 25,000 அமெரிக்க மாணவர்கள்; அமெரிக்க வேளாண் பொருட்களுக்கான மிகப் பெரிய சந்தையாக சீனா இருப்பது; சீனாவிடம் அதிகமாகக் கடன் வாங்கிய நாடாக அமெரிக்கா இருப்பது; சீனாவில் அமெரிக்கா செய்துவரும் முதலீட்டைவிட அமெரிக்காவில் சீனா செய்யும் முதலீடு கடந்த ஆண்டு முதல்முறையாக அதிகரித்திருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் ஆழத்தில் சென்று பார்த்தால் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் மற்ற நாட்டினால் மேலும்மேலும் குழப்பமடைந்துகொண்டே இருக்கின்றன. சீன அதிகாரத் தரப்பினர் அமெரிக்காவைத்தான் தங்கள் பொருளாதார முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார்கள்; முதலாளித்துவத்தை அவர்கள் கற்றதும் அங்கேதான். ஆனால், 2008-ல் உலகப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் அளவுக்கு அமெரிக்கா அசிரத்தையாக இருந்தது அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணம் சீனாவில் ஏற்படத் தொடங்கியது. அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து சீன அதிகாரத் தரப்பினர் இன்னும் மீளவேயில்லை.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை சீனா உருவாக்க முயன்றபோது அமெரிக்காவின் பொருளாதாரக் கூட்டாளிகளான தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் அதில் சேராமல் இருப்பதற்கான வேலைகளை ஒபாமா வட்டாரம் செய்ய முயன்றபோது சீன அதிகாரத் தர்ப்பு குழம்பிப்போனது. அமெரிக்காவின் கவலையெல்லாம் அந்த வங்கி சர்வதேசத் தரத்துடன் இயங்க வேண்டும் என்பதுதான் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜாக் லீயு வெளிப்படையாகவும், பொறுப்பாகவும் வலியுறுத்திவந்த அதே நேரத்தில் ஒபாமாவின் வட்டாரம் அமெரிக்காவின் கூட்டாளிகள் அந்த வங்கியில் சேருவதைத் தடுப்பதற்கான வேலைகளில் முனைப்பாக இருந்தது.
ஜப்பானைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவை உதாசீனப்படுத்திவிட்டு சீனத் தலைமையில் இயங்கும் அந்த வங்கியில் சேர்ந்துகொண்டன. அமெரிக்கா சீனாவைத் தனக்குக் கீழே வைத்திருக்கத்தான் விரும்புகிறதே தவிர தனது பங்காளியாக வைத்திருக்க அல்ல என்ற உறுதியான எண்ணத்தை சீன விமர்சகர்களிடையே இந்த ஒட்டுமொத்த விவகாரமும் மேலும் மேலும் வலுப்படுத்தவே செய்தது.
இந்தச் சூழலில் அமெரிக்கர்கள் சீன அதிபர் ஜீயிடம் கேட்கிறார்கள்: “என்ன விஷயம்?”
புரையோடிய ஊழலால் சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறை நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான ஜியின் நடவடிக்கைகள் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிரான அச்சுறுத்தல்களை ஒழித்துக்கட்டுவதை இலக்காகக் கொண்டவை என்பது தெளிவு. அதைப் போலவே, அவர் தனது அரசியல் எதிரிகளையும் ஒழித்துக்கட்டிக் கொண்டிருப்பதுபோலவும் தோன்றுகிறது. ராணுவம், பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் அதிக அளவில் அதிகாரங்களைத் தன்னிடத்தில் ஜி வைத்திருக்கிறார். மாவோவின் காலத்துக்குப் பிறகு இவ்வளவு அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்ட பிறிதொரு தலைவர் சீனாவில் கிடையாது.
“கம்யூனிஸக் கட்சியின் அதிகார பீடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்துக்கொண்டிருக் கிறார் ஜி” என்கிறார் வில்லி வோ-லாப் லாம் என்ற அரசியல் நோக்கர். “சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குக் காரணமே ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான அதிகாரத்தை கம்யூனிஸக் கட்சி இழந்ததுதான் என்று ஜி நம்புகிறார்” என்பது வில்லியின் வாதம்.
சோவியத் எப்படி சரிந்தது என்பதில்தான் அவர் அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறாரே தவிர அமெரிக்கா எப்படி வெற்றி பெற்றது என்பதில் அவர் கவனம் செலுத்தவில்லை. அவருடைய களையெடுப்பு நடவடிக்கைகளால் அதிகார மட்டம் உறைந்துபோயிருக்கிறது. பெரிய பெரிய முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள். ஜியின் களையெடுப்பு நடவடிக்கைகளின் இலக்கு ஊழல் மட்டுமல்ல, மெலிதாக வெளிப்படும் எதிர்ப்புகளும் அவற்றின் இலக்கே.
பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டுப் பாடப் புத்தங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. இணையத்தில் பதிவுகள் இடுவது, சீனாவின் முக்கியமான இணையதளங்களைத் தேடுவது போன்ற செயல்களெல்லாம் இந்த அளவுக்கு என்றுமே கட்டுப்படுத்தப்பட்டதில்லை. அதே சமயம், ‘கண்டுபிடிப்புகள்’ என்ற திசையை நோக்கி சீனாவை வலுவாக நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் ஜி. உற்பத்தி செய்வது, இயந்திர பாகங்களை ஒன்றுசேர்ப்பது போன்ற நிலையிலிருந்து சீனப் பொருளாதாரத்தை அதிக அளவு அறிவுழைப்பு தேவைப்படும் வேலைகளை நோக்கி நகர்த்துகிறார். ஆனால், களையெடுப்புகள் எந்தப் புத்தாக்க முயற்சிக்கும் வித்திடுவதுபோல் தெரியவில்லை.
முதலீட்டாளர் அந்துவான் வான் அக்ட்மால் என்னிடம் சொன்னது போல்தான்: சீனாவிலேயே புத்தாக்கம் செய்வது என்பதை சீனா வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், சீனாவில் தொழிலாளர் ஊதியமும், அமெரிக்காவில் புத்தாக்கமும் அதிகரித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா தனது நாட்டுத் தொழில் நிறுவனங்களை அவற்றின் அடுத்த உற்பத்திப் பிரிவுகளை சீனாவில் அல்ல, அமெரிக்காவில் தொடங்கும்படி தூண்டிக்கொண்டிருக்கிறது.
விலை மலிவான எரிசக்தியும், மேலும் இலகுவான, திறந்த அறிவுப் பங்கேற்பும் கலந்த செயல்முறையை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் புதுத் தொழில் நிறுவனங்களும் தங்கள் அறிவுசக்தியை பெரும் தொழில் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதால் புதுப் புதுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. இதனால் எல்லாமே முன்பைவிட விரைவாகவும் நுட்பமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படுகின்றன.
இதனால்தான் ‘புதிதாக முளைவிடும் மகத்தான சந்தை’யாக அமெரிக்கா உருவாகிவருவதாக வான் அக்ட்மாயேல் குறிப்பிடுகிறார். “பெரிய மாற்றம் இது,” என்கிறார் அவர். “யார் மலிவாக உற்பத்தி செய்வார்கள் என்பதைப் பற்றித்தான் இருந்தன கடந்த 25 ஆண்டுகளும். அடுத்த 25 ஆண்டுகளோ, யார் சாமர்த்தியமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள் என்பதைப் பற்றித்தான் இருக்கும்” என்கிறார் அவர்.
ஆனால், அதிபர் ஜி இணையத்தையும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு சீனா பெரியது, புத்திசாலித்தனமானது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் புத்தாக்கத்தில் சாதித்துவிட முடியும் என்றும் அவர் நம்புவதைப் போல் தோன்றுகிறது. இன்றைய உலகில் இதுதான் பெரும் சவால்.
- © தி நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
***********
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
***********
மூன்று நாட்கள் பயணமாக சீனாவுக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, சீனா - இந்தியா இடையிலான உறவுகளில் மட்டு மல்லாமல், பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சீனாவின் வட மேற்கு மாகாணமான ஷான்ஜியின் தலைநகரான ஜியானிலிருந்து தனது சீன சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் மோடி. கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்த அதிபர் ஜி ஜின்பிங், மோடியின் சொந்த ஊரான அகமதாபாதிலிருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கமான நடை முறையில் அல்லாத இந்த ‘சொந்த ஊர்’ அரசு நடைமுறை, இரு நாடுகளும் தங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றங்களை அதிகரிப்பதிலும் இரு தலைவர்களுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்துவதிலும் உறுதியுடன் இருப்பதை உணர்த்துகிறது.
இந்தியப் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியத் தலைநகரான புது டெல்லிக்குச் செல்லாமல், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு முதலில் சென்றார் அதிபர் ஜி ஜின்பிங். இதற்குப் பதில் மரியாதை செலுத்தும் வகையில் ஜியான் நகரில் தரையிறங்க மோடி முடிவுசெய்தார்.
வரலாற்றைப் பார்த்தோமானால், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும் பயணியுமான யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்தை ஜியான் நகரிலிருந்துதான் தொடங்கினார். அப்போது சீனாவின் டாங் வம்ச அரசின் தலைநகராக ஜியான் இருந்தது. இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கி புத்த மத வேதங்களைச் சேகரித்தார் யுவான் சுவாங். மோடியின் மாநிலமான குஜராத்துக்கும் யுவான் சுவாங் சென்றிருக்கிறார் என்ற தகவல் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக வளர்ந்துவரும் இருதரப்பு உறவு, இந்த இரண்டு பிராந்திய சக்திகளை ஒன்றுக்கொன்று ஈர்க்கச் செய்திருக்கிறது. கடந்த பத்தே ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு ரூ. 44 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 4.4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ. 6.3 லட்சம் கோடியாக இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராக சீனாதான் இருக்கிறது. சீனா இறக்குமதி செய்யும் நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கிகள் நிறுவப்பட்டதில் இந்தியாவும் சீனாவும் முக்கியப் பங்கை வகித்தன.
இத்தனை இருந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆரோக்கியமானதாகவும் பல காலம் நீடிக்கக்கூடிய தாகவும் வைத்திருப்பதில் சீனாவும் இந்தியாவும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், வர்த்தக நிலைப்புத் தன்மையின்மை, குறைந்த அளவிலான நேரடி முதலீடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருக்கிறது.
இந்தியத் தொழில்துறை மற்றும் உள் கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடு இன்னும் 5 ஆண்டுகளில் ரூ. 1.26 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்தபோது அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு வரும் மோடி தன்னுடன் 3 மாநில முதல்வர்களையும் அழைத்து வந்தார். உள்நாட்டு வளர்ச்சியில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகிறது.
இருநாடுகளுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியான தடைக்கல்லாகவும், சில சமயம் இருநாட்டு உறவு மேம்பாடு அடைவதற்குத் தடையாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை. எனினும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடைபிடிப்பதால், எல்லையில் இருநாடுகளும் ஒரு முறை கூடத் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளவில்லை என்பது ஆறுதலான விஷயம். அமைதி மற்றும் ராஜாங்கக் கொள்கையில் சீனாவும் இந்தியாவும் கவனம் செலுத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் மட்டுமல்லாமல் ஆசிய வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும்.
தமிழில்: வெ. சந்திரமோகன்.
- சீன நாளிதழ்
************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக