செவ்வாய், 5 மே, 2015

Water Source for Chennai




நதிமூலம் தேடி...
தமிழக எல்லையை கிருஷ்ணா நீர் வந்தடையும் இடத்தில் தொடங்கி, கண்டலேறு அணை, சோமசீலா அணை, கிருஷ்ணா நீர் வந்து சேரும் பிரம்மாண்ட ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் வரை சுமார் 450 கி.மீ. தூரத்துக்கு, சவாலான பயணத்தை நிருபர்கள் எஸ்.சசிதரன், டி.செல்வகுமார், கி.கணேஷ், வி.சாரதா, புகைப்பட செய்தியாளர் க.ஸ்ரீபரத் ஆகியோரைக் கொண்ட ‘தி இந்து’ குழுவினர் மேற்கொண்டனர். அடர்ந்த காடுகள், குக்கிராமச் சாலைகள் என கிருஷ்ணா கால்வாய் வழியாக பயணித்து ஏராளமான விவரங்களையும் சுவையான தகவல்களையும் இக்குழு சுமந்து வந்திருக்கிறது. கிருஷ்ணாவுடன் பயணித்த உணர்வை வாசகர்களுக்கு அளிக்கும் முயற்சி இது.
நீரின்றி அமையாது உலகு! ஒரு லிட்டர் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கும் நிலை உருவாகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தோ என்னவோ, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் இப்படி எழுதியிருக்கிறார். மூன்றாவது உலகப்போர் என ஒன்று நிகழுமானால், அதற்கு தண்ணீர் தொடர்பான சச்சரவுகளே முக்கிய காரணமாக இருக்கும் என்ற சூழல் இப்போது உலகில் நிலவுகிறது.
நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சினை, மாநில அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. ஜீவநதிகளே (தாமிரவருணி ஆற்றை தவிர்த்து) இல்லாத தமிழகம், இதற்கு விதிவிலக்கா என்ன? குடிநீர் மற்றும் பாசனத்துக்காக வெளிமாநி லங்களையே பெரிதும் நம்பியிருக்கிறது.
குறிப்பாக, தலைநகர் சென்னையின் குடிநீர்த்தேவை மூன்று மாநிலங்களின் தயவால்தான் பூர்த்தியாகிறது. கூவம், அடையாறு ஆறுகள், கழிவு களைச் சுமந்து செல்லும் சாக்கடை யாக உருமாறிவிட்டதால், குடிநீர்த் தேவைகளுக்காக, வடகிழக்குப் பருவ மழையையே சென்னை சார்ந்திருக் கிறது. ஆனால், அது ஓர் ஆண்டு முழு மைக்கும் போதுமானதாக இல்லை. அடைமழைக்காலங்களில் தண்ணீரைத் தேக்கிவைப்பதற்கானகட்டமைப்பு களும் இல்லை.
முதல் திட்டம்
கி.பி. 1870 வரை சென்னை மாநகருக் கென முறையான குடிநீர் விநியோக அமைப்பு இல்லை. பிரேசர் என்ற ஆங்கிலேய கட்டுமானப் பொறியாளர், வேலூர் அருகே உற்பத்தியாகும் கொசஸ் தலையாற்றில் இருந்து தண்ணீரை சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்குத் திருப்பி, கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்தார். அதுதான் சென்னையில் முறையான கொண்டு வரப்பட்ட முதல் குடிநீர் விநியோகத் திட்டம்.
1960-களில் மக்கள் தொகை பெருகிய நிலையில், வீராணம் திட்டமும் தோல் வியடைந்தது. இதனால் சென்னையின் குடிநீர்த்தேவைக்காக ஒரு மாற்று ஏற்பாட்டை செய்தே தீர வேண்டிய கட் டாயத்துக்கு தமிழக அரசு வந்தது. அதன் விளைவாகவே, கிருஷ்ணா நதியில் இருந்து ‘மதராஸ்’ நகரத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் கருத்துருவினை, செயல்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. 1968-ல் மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் ஆண்டுதோறும் தலா 5 டி.எம்.சி. நீரை, அதாவது 15 டி.எம்.சி.யை, தமிழகத்துக்குத் தருவது என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், பல ஆண்டுகளாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
முட்டுக்கட்டை போடும் தெலங்கானா
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தெலுங்கு கங்கை திட்டத்துக்கு, ஆந்திரத்தில் இருந்து பிரிந்து உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தால், முட்டுக்கட்டை ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. நீர் பங்கீடு தொடர்பாக புதிய பிரச்சினைகளை தெலங்கானா கிளப்பி வருகிறது. கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம் வரை இவ்விவகாரம் சென்றுள்ளது. ஸ்ரீசைலம் அணையின் இடதுபகுதி தெலங்கானாவிலும், வலப்பகுதி ஆந்திராவிலும் அமைந்துள்ளது. இருபுறங்களிலும் தலா ஒரு மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் தெலங்கானா விதிமுறைகளை மீறி, மின்னுற்பத்திக்கு அதிக தண்ணீரை எடுத்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது பற்றி கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்திடம் புகார் செய்துள்ளபோதிலும், தெலங்கானா செவிமடுத்தபாடாக இல்லை என்று ஆந்திரம் புகார் கூறுகிறது. மேலும், அதிக ஒதுக்கீட்டையும் கேட்டுவருகிறது. இப்பிரச்சினையால், ஆந்திரம் கவலை அடைந்துள்ளது.
இதனால், சென்னைக்கு பல ஆண்டுகளாகக் கிடைத்து வரும் கிருஷ்ணா நீர்வரத்து தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திரத்தில் நெல்லூர், சித்தூர் மாவட்ட விவசாயிகளுக்கிடையேயும் கிருஷ்ணா கால்வாயில் இருந்து பாசனத்துக்கு பம்ப் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பது போன்ற பல தடைகளையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க வந்து கொண்டிருக்கிறது கிருஷ்ணா நீர்.
என்டிஆர்- எம்ஜிஆர்
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரத்தின் வறட்சியான தென்பகுதிகளுக்குப் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையை மனதில் கொண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற இருமாநில முதல்வர்களும், திரையுலக நண்பர்களு மான என்.டி.ராமராவும், எம்.ஜி.ஆரும் மிகுந்த முனைப்புகாட்டினர். 1983-ல் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்துக்காக ஆந்திரம் ரூ.2 ஆயிரம் கோடி, தமிழகம் ரூ.500 கோடி செலவிட்டன. கர்நூல் மாவட்டத்தின் எல்லையில் ஸ்ரீசைலத்தில் இருந்து கிருஷ்ணா நீரை நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சோமசீலா அணைக்கும் பின்னர், சென்னைக்கு 152 கி.மீ. தொலைவில் உள்ள கண்டலேறு அணைக்கும் கொண்டு வந்து அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்துக்கும் கொண்டு வருவதற்கான கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்த நிலையில் 29.9.1996-ல் முதல் முதலாக சென்னைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. அதுமுதல், முழு அளவைத் தராவிட்டாலும் (ஆவியாதல் இழப்பு 3 டி.எம்.சி. போக, 12 டி.எம்.சி), சென்னைக்கு ஆந்திரம் தொடர்ந்து தண்ணீரைத் தந்து தாகத்தைப் போக்க துணைபுரிந்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மஹா பலேஷ்வரில் கிருஷ்ணா உற்பத்தியாகி, கர்நாடகத்தைக் கடந்து, ஸ்ரீசைலத்தைக் அடைந்து அந்நதியின் பெயராலேயே அழைக்கப் படும் கிருஷ்ணா மாவட் டத்தில் ஹம்சலா தேவி என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.
ஆனால், ஸ்ரீசைலத்தில் இருந்து, கிருஷ்ணாவின் ஒரு பகுதியை தெற்கு நோக்கி கால்வாய்கள் மூலம் ஆந்திர அரசு செயற்கையாக திசை திருப்பி, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சோமசீலா அணை- கண்டலேறு அணைக்கு தண்ணீரைக் கொண்டு வருகிறது. இவ்வாறாக ஸ்ரீசைலத்தில் இருந்து 408 கி.மீ. பயணம்செய்து தமிழ கத்தில் ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நீர் நுழைகிறது.
கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், 4 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் நுழையும். முன் பெல்லாம் இது 9 நாட்களுக்கும் மேல் ஆனது. தவிரவும், கண்டலேறுவில் திறந்துவிடப்படும் நீரின் அளவைக் கணக்கில்கொண்டால், தமிழக எல் லையை அடையும் தண்ணீரின் அளவு பெரிதும் குறையத் தொடங்கியது.
இதனால் கால்வாயை பராமரிக்க ஸ்ரீசத்யசாய் பாபா டிரஸ்ட், ரூ.300 கோடி நிதி அளித்தது. அதைத் தொடர்ந்து, கண்டலேறு-பூண்டி கால்வாய் கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதனால் தண் ணீர் விரைவாக தமிழகத்துக்கு வந்தது. அதன்பிறகு, ‘தெலுங்கு கங்கை’ என்றிருந்த பெயரை ‘சாய்-கங்கா கால்வாய்’ என்று ஆந்திர அரசு புதிய பெயரைச் சூட்டியது.
ஒத்துழைப்பு
சுமார் 1,800 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு ஒவ்வோராண்டும் தவறாமல் நீரை ஒதுக்கும் மகாராஷ் டிரம், காவிரிப் பிரச்சினையில் நீதிமன் றத்தில் மல்லுக்கட்டினாலும் கிருஷ்ணா நீரைத் தவறாமல் தரும் கர்நாடகம், வறட்சியிலும் சென்னைக்குக் குடிநீர் திறந்துவிடும் ஆந்திர அரசின் நிலைப் பாடு போன்ற மிகப்பெரிய ஒத்துழைப்பு நடவடிக்கையால்தான் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
கிருஷ்ணா நீர் கடந்து வரும் கர்நூல், நெல்லூர், கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. எனினும், அதைப் பொருட்படுத்தாமல், தமிழகத் துக்கு கடந்த மாதம் இறுதிவரை கிருஷ்ணா நீரை ஆந்திரம் தந்துள்ளது. அதனால் மேலும் இரு மாதங் களுக்குக் சென்னைக்கு குடிநீர்ப் பிரச்சினை இருக்காது என்று தமிழக அரசு அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
வரலாற்றில் எம்.ஜி.ஆரும்., என்.டி.ஆரும்
கடந்த 19 ஆண்டுகளாக சென்னை மக்களின் தாகம் தீர்க்க எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும் நிறைவேற்றிய மகத்தான திட்டம்தான் தெலுங்கு கங்கை திட்டம்.
1970,80-களில் எம்.ஜி.ஆரும் என்.டி.ராமாராவும் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்கள். என்.டி.ராமராவை ஆந்திர மக்கள் கடவுளாகவே பார்த்தனர். அதுபோல எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் எந்தளவுக்கு நேசித்தார்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம். இந்த இரண்டு பிரபலங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இருந்த உணர்வுப்பூர்வமான உறவே சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதற்கு ஆந்திர மக்கள் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு போல இடியாப்பச் சிக்கலும் கிருஷ்ணா நீர் விநியோகத்தில் இருந்ததில்லை என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
பொறியாளர்களின் நூற்றாண்டுகால கனவு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஆந்திராவும் தமிழ் நாடும் இணைந்து மதராஸ் மாகாணமாக இருந்தபோது கிருஷ்ணா நதிநீரில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை, வறட்சிப் பகுதிகளை வளப்படுத்த பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் கர்னல் எல்லிஸ் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், கிருஷ்ணா நதியையும், பெண்ணாறு நதியையும் இணைக்கும் திட்டத்தை 1881-ல் முன்மொழிந்தார்.
வேளாண் உற்பத்தித் திறன் வீழ்ந்து கொண்டிருந்த ராயலசீமா பகுதிகளின் விவசாயத்தை மேம்படுத்துவதுடன், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுமே அத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
ஆனால், முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தனது கவனத்தைக் குவித்திருந்த பிரிட் டிஷ் அரசு, பொறியாளரின் முன் மொழிவை கிடப்பில் போட்டது. பிற்காலத் தில், கிருஷ்ணா நதியையும் பெண்ணார் நதியையும் இணைப்பது குறித்து சர் ஆர்தர் காட்டன் ஆய்வு நடத்தியுள்ளார்.
சுதந்திரத்துக்குப்பின் 1951-ம் ஆண்டில், கிருஷ்ணா நதியையும், பெண்ணாறு நதியையும் இணைப்பதற் கான ஒப்புதலை மதராஸ் மாகாண அரசு அளித்து, விரிவான ஆய்வினை நடத்தியதன் விளைவாக கே.பி.பி. என்று அழைக்கப்படும் கிருஷ்ணா பெண் ணாறு திட்டம் பிறந்தது. இத்திட்டத்தை அமலாக்க அனைத்தும் தயாராக இருந்த வேளையில், 1953-ல் மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, இத்திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கிருஷ்ணா கோதாவரி ஆறுகளின் நீர் பங்கீட்டு விவகாரங்களை கையாள மத்திய அரசால் அமைக்கப்பட்ட குல் ஹாத்தி ஆணையத்திடம், 1962-ம் ஆண்டு ஜனவரி மாதம் கிருஷ்ணா நீருக்காக மதராஸ் அரசு கோரிக்கை மனு அளித்தது.
அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குல்ஹாத்தி ஆணைய உறுப்பினர் களுடன் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் உபரி நீரை சென்னைக்கு தர வேண்டும் என்றும் மதராஸ் அரசு கோரிக்கை மனு அளித்தது. அதன் பிறகு, 1963-ம் ஆண்டு மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் ஹபீஸ் மஹமத் இப்ராஹீம் சென்னையின் குடிநீர் தேவைக்காக மூன்று மாநிலங்களும் நீர் தருவது கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்று மக்களவையில் அறிவித்தார். அதன்பின், நடந்தவை வரலாறு.
கே.பி.பி. என்று அழைக்கப்படும் கிருஷ்ணா பெண்ணாறு திட்டத்தை அமலாக்க அனைத்தும் தயாராக இருந்த வேளையில், 1953-ல் மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, இத்திட்டம் கைவிடப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாய் ஓர் ஒப்பந்தம்
வடகிழக்குப் பருவமழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கிருஷ்ணா நீரால் மட்டுமே தீர்க்க முடியும் என்று மத்திய அரசின் கருத்துருவில் கூறப்பட்டி ருந்தது. அதிலிருந்த நியாயத்தை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் உணர்ந்தன. அதனால் கிருஷ்ணா நீரை அளிக்க அவை முடிவெடுத்தன.
அதன்பின் 1973-ல் கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம், கிருஷ்ணா நீரை தருவதற்கான முதல் அனுமதியை அளித்தது. பின்னர், 1976-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தாமே முன்வந்து ஆந்திர கர்நாடக மற்றும் மகாராஷ்டிர முதல்வர்களின் அனுமதியையும் பெற்று சென்னை நகருக்கு மூன்று மாநிலங்களும் தலா 5 டிஎம்சி நீரை தருவதற்கு ஒப்புக்கொண்ட முக்கிய அறிவிப்பை சென்னையில் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின்படி, 1976-ல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக் கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சைலம் அணையில் இருந்து ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் திறந்த வெளிக் கால்வாய் மூலம் சென்னைக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து 1978 ஜூன் 15-ல், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் மற்றும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் ஐதராபாத்தில் சந்தித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அம்சங்களையும் விவாதித்து, இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வு நடத்த முடிவெடுத் தனர். முடிவில், இது பயனுள்ள திட்டமாகத் தோன்றியதால், 1983 ஏப்ரல் 18-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் இடையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
கிருஷ்ணா நதிக்கு சம்பந்தமில்லாத ஒரு மாநிலத்துக்கு அந்த நதியின் நீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கான அளப்பறிய திட்டம் இப்படித்தான் படிபடிப்பாக அமலானது. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மாநிலங்களின் ஒற்றுமைக்கும் சான்றாக ஒரு திட்டம் விளங்குகிறது என்றால் அது இந்த கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம்தான்.

**************
சென்னைக்கு தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக தண்ணீரைத் தரும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கப் பகுதியின் பிரம்மாண்டத்தையும், அழகையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கிழக்குத் தொடர்ச்சி மலையில், ஒன்றுபட்ட ஆந்திரத்தின் நல்கொண்டா மாவட்டம் முதல் சித்தூர் மாவட்டம் வரை நீளும் நல்லமலைத் தொடரின் இதயப்பகுதியில், மலைகளுக்கிடையே அமைந்துள்ளது.
தெலங்கானா (மஹபூப் நகர் மாவட்டம்) மற்றும் ஆந்திர மாநிலத்துக்கிடையே (கர்நூல் மாவட்டம்) செங்குத்தான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 980 அடி. 885 அடி வரை நீரைத் தேக்கலாம். அதாவது 253 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்டது. 12 பெரிய மதகுகளுடன் கூடிய 1680 அடி நீளம் கொண்டது. மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 லட்சம் சதுர கி.மீட்டருக்கு அதிகமான நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்தும், துங்கபத்ரா (கர்நாடகம்) மற்றும் ஜூராலா (தெலங்கானா) அணைகளில் இருந்தும் இங்கு தண்ணீர் வருகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்கும் அளவு 120 அடி மட்டுமே. மேட்டூரை விட இரு மடங்குக்கும் மேலாக இது பெரிதானது. “இங்கு 834 அடிக்கும் கீழே நீர்மட்டம் குறைந்தால் குடிநீருக்கும், 854 அடி வரை இருந்தால் விவசாயத்துக்கும், அதற்கு மேலும் இருந்தால் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய நீர்ட்டம் 805 அடி,” என்கிறார் அணையின் கண்காணிப்பு பொறியாளர் அப்பல நாயுடு.
1960-ல் தொடங்கி, 1980-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்நீ்ர்த் தேக்கம் முதலில், மின்னுற்பத்திக்காக தொடங்கப்பட்ட போதிலும் பாசனம், குடிநீர்த்தேவை என ஆந்திரத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் பிற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் இடப்புறத்தில் உள்ள தெலங்கானாவின் சுரங்க மின்னுற்பத்தி நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். வலப்புறத்தில் உள்ள ஆந்திர ஆலையில், 770 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யலாம். இந்தியாவிலேயே மிகப் பெரிய நீர்மின்னுற்பத்தி வளாகம் இது.
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் வருவதற்கு முன்பாகவே, 3 கி.மீ. தொலைவில் உள்ள போத்திரெட்டிப்பாடு நீர்போக்கி வழியாக சோமசீலா அணைக்கு நீர் அனுப்பப் படுகிறது. இதுதவிர, நாகார்ஜுனசாகர் அணைக்கும் தென் மாவட்டங்களுக்கும் நீர் திறந்துவிடப்படுகிறது.

சோமசீலா அணை: பிரமிக்கவைக்கும் 101 அடி ஆழ கால்வாய்

- டி.செல்வகுமார்
ஆந்திராவின் 3 அணைகள் வழி யாக சென்னைக்கு கிருஷ்ணா நீர் வருகிறது. இதில், நடுநாயகமாக இருப்பதுதான் சோம சீலா அணை. இதன் பக்கவாட்டு கிரானைட் மலையில் 101 அடி ஆழத் துக்கு கால்வாய் வெட்டப்பட்டு கிருஷ்ணா ஓடி வருகிறது.
ஸ்ரீசைலம் அணையில் புறப்பட்டு 177.941 கி.மீ. தூரத்தில் உள்ள சோம சீலா அணைக்கு வருகிறது கிருஷ்ணா நீர். அங்கிருந்து 45.172 கி.மீ. தூரத்தில் உள்ள கண்டலேறு அணைக்கு வந்து, பின்னர் 177.975 கி.மீ. பயணமாகி பூண்டி ஏரியை வந்தடைகிறது.
ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டம், சோமசீலா என்னுமிடத்தில் பெண் ணாறு ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது . இவ்வணை, சோமசீலா திட் டத்தை 5-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்ப்பதற்காக 1973-ல் திட்ட கமிஷன் அனுமதி அளித்தது. அப்போது திட்ட மதிப்பீட்டு ரூ.17.20 கோடி. அணை கட்டுமானப் பணி 1976-ம் ஆண்டு தொடங்கி, 1989-ல் நிறைவுபெற்றது.
சோமசீலா அணையின் மொத்த கொள்ளளவு 78 டி.எம்.சி. இதன் பாசனப் பகுதி 4.5 லட்சம் ஏக்கர். புதிய பாசனப் பகுதி 1.79 லட்சம் ஏக்கர். இந்த அணையில் இருந்து 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்டு, கண்டலேறு அணை வழியாக பூண்டி ஏரிக்கு வருகிறது. சோமசீலாவில் அதிகபட்சமாக 2010-ம் ஆண்டு 73 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இங்கிருந்து நெல்லூர் மாநக ராட்சிக்கு 1.8 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மே 1-ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்இருப்பு 11.094 டி.எம்.சி. கடந்த ஆண்டு இதேநாளில் நீர்இருப்பு 33.121 டி.எம்.சி. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 169 கனஅடி. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் நீர் வெளியேற்றம் இல்லை. இதனால், கிருஷ்ணா நீர் கால்வாய் வறண்டு கிடக்கிறது.
சோமசீலா அணையின் தென்பகுதி யில் உள்ள கிரானைட் மலையில் 101 அடி ஆழத்துக்கு கிருஷ்ணா கால் வாய் வெட்டப்பட்டிருப்பது பிரமிப்பை அளிக்கிறது. அங்கிருந்து சிறிது தூரத்துக்கு கிரானைட் மலையை ஒட்டியே கால்வாய் செல்கிறது. அணை முகப்பு பின்னணியில் மலைமீது சோமேஸ்வர சுவாமி கோயில் அமைந்திருப்பது அழகு. இப்பகுதியை சுற்றுலா தலமாகவும் பராமரிக்கிறது ஆந்திர அரசு.

எம்ஜிஆரால் சாத்தியமானது: பண்ருட்டி ராமச்சந்திரன் பெருமிதம்

கிருஷ்ணா நதிநீர் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தான போது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இருந்த வர் அப்போதைய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன். 'தி இந்து'வில் வெளியாகும் கிருஷ்ணா தொடரையொட்டி அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:
‘தி இந்து’ இதழில் கிருஷ்ணாவின் பயணம் என்ற தொடர் கட்டுரையின் முதற் பகுதியைப் படித்தேன். நல்ல தொடக்கம், பாதி நிறைவேற்றம் என்ற பழமொழிக்கேற்ப, இத்தொடர்க் கட்டுரையின் முதற் பகுதியே நல்ல தொடக்கமாக அமைந் துள்ளது. எம்.ஜி.ஆர் .உடன் கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வர ஒப்பந்தம் போட உறுதுணையாக இருந்தவன் என்ற முறையில் இத்தொடர்க் கட்டுரை இன்றைய நெருக்க டியில் பயன்படக் கூடியது.
கிருஷ்ணா ஆற்றில் இருந்து சென்னைக்கு குடிநீரை குழாய்கள் மூலம் கொண்டு வர திட்டமிட்டோம். ஆனால் அது பெரும் செலவுக்கு வழி வகுக்கும். அதற்கு மாறாக இயற்கை யாக உள்ள வாய்க்கால்களை பயன்படுத்தியும், தேவைப்படும் இடத்தில் கால்வாய்களை வெட்டியும் இந்நீரை கொண்டு வருகிறபொழுது, வழியில் பாசனத்துக்கும் பயன்படுத்தக் கூடும் என்பதால், ஏற்படும் செலவை ஆந்திர அரசும், தமிழக அரசும் பகிர்ந்து கொள்வதன் மூலம், இத்திட்டம் சிக்கனமான ஒன்று.
சென்னை பெருநகரம் வளர்ந்து வருகிறபொழுது மேலும் குடிநீர் தேவைப்பட்டால் அதற்கேற்ப வாய்க்கால்களையும், கால்வாய்களையும் அகலப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அப்பொழுது ஒப்புக் கொள்ளப்பட்டது. கிருஷ்ணாவில் இருந்து பெறப்படுகிற குடிநீர் சென்னைக்கு வர இடையில் மின்சாரத்தைக் கொண்டு இயக்கும் பம்பு செட்டுகள் தேவை இல்லை. இயற்கையாகவே வந்து சேரும்.
சென்னை பெருநகர வளர்ச்சி என்று பார்க்கிறபொழுது அதைத் தமிழ்நாட்டின் தலைநகரமாக மட்டும் பார்க்கக் கூடாது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தென்னக மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. ஆகவேதான் அந்த நோக்கோடு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எம்.ஜி.ஆரின் அணுகுமுறையே இந்த வரலாற்று சாதனைக்குக் காரணமாகும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்துக்கான அளவு
ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஆந்திரா தரவேண்டிய கிருஷ்ணா நீர் விவரம்: ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல், வினாடிக்கு 1000 கன அடிக்கு மிகாமல் அக்டோபர் மாதம் வரை தரவேண்டும். அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வினாடிக்கு 1000 கன அடிவீதம் திறந்து விட வேண்டும். இந்த அடிப்படையில் தமிழக, ஆந்திரா எல்லையான ஜீரோ பாயின்ட்டில் இருமாநில நீர்வளத்துறை அதிகாரிகளும் நீர் திறப்பு அளவை சரிபார்க்கின்றனர்.
ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் அடுத்ததாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் அளிக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் தண்ணீர் இருப்பை பொறுத்து சென்னைக்கு தண்ணீர் தரப்பட்டு வருகிறது. சைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் நீர் இருப்பையும், ஆந்திராவின் தேவையையும் கருத்தில் கொண்டு திறந்துவிடப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரை, 5.358 டிஎம்சி நீர் சென்னைக்கு வந்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்டத்துக்கு அடித்தளம்

- கி.கணேஷ்/ வி.சாரதா
ஸ்ரீசைலத்தில் தனது பயணத்தை தொடங்கினாலும் கடைசியாக கண்டலேறு அணையில் இருந்து தான் சென்னைக்குத் தண்ணீர் திறக்கப் படுகிறது. கண்டலேறு ஆற்றின் குறுக்கே இந்த நீர்த்தேக்கம் அமைந்திருந்தாலும் இதன் முக்கிய நீர் ஆதாரம் கிருஷ்ணாநீர் தான். இது 10752 மீட்டர் நீளமும், 49 அடி உயரமும் கொண்டது. 390 சதுர கி.மீ. பரப்பு நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டது. இந்த நீர்த்தேக்கம் அமைந்த பின்னரே தெலுங்கு கங்கை திட்டம் அமலுக்கு வந்தது.
ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு கால்வாயில் பயணிக்கும் கிருஷ்ணா நீர் அங்கிருந்து 45 கி.மீ. தூரத்தில் நெல்லூர் மாவட்டம் ராப்பூர் அருகே கண்டலேறு அணைக்கு வருகிறது. கண்டலேறுவில் தேக்கி வைக்கப்பட்டு பின் 152 கி.மீ. தூரம் கண்டலேறு- பூண்டி கால்வாயில் தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு வருகிறது.
1996-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளவு 69 டி.எம்.சி. இங்கிருந்து குடிநீர் தேவைக்காக 22.695 டி.எம்.சி நீர் ஒதுக்கப்படுகிறது.
இதில் 15 டி.எம்.சி. நீர் சென்னைக்கும், 5.88 டி.எம்.சி. நீர் நெல்லூர் மாவட்டங் களுக்கும், ஒரு டி.எம்.சி நீர் திருப்பதிக்கும், 0.25 டி.எம்.சி நீர் காளஹஸ்தி நகருக்கும், 0.5 டி.எம்.சி நீர் வெங்கடகிரிக்கும், 0.3 டி.எம்.சி நீர் கூடுருக்கும், 0.05 டி.எம்.சி நீர் ராப்பூரில் உள்ள பாசனதிட்டங்களுக்கும், 0.025 டி.எம்.சி நீர் பொதலுகூரில் உள்ள 15 கிராமங்களுக்கும், 0.04 டி.எம்.சி நீர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மூன்று மண்டலங்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் 5 டி.எம்.சி. தேக்கி வைப்ப தற்கான இடம் சென்னைக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பொதுவாக ஜீரோ பாயின்ட் வந்தடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். சைலம் மற்றும் சோமசீலா அணைகளில் இருந்து திறக்கும் நீர், கண்டலேறு வர தாமதமாகும் என்பதால் அதை எதிர்பார்க்காமலேய கண்டலேறுவில் இருந்து பலமுறை நீர் திறக்கப்பட்டதற்கு சேமிப்பு வசதி பெரிதும் உதவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை 5.3 டி.எம்.சி. நீர் கண்டலேறுவிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையில் ஒரு முதன்மை நீர்போக்கி, ஒரு உயர் நிலை மதகுப்பகுதி மற்றும் ஒரு தாழ்நிலை மதகும் (low level shutter) விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தலைமை நீர்போக்குப் பகுதியில் இருந்து 9 மெகாவாட் மின்உற்பத்திக்கான வசதியும் உள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி அணைப் பகுதியை பார்வையிட சென்ற நிலையில் அப்போதைய நீர்த்தேக்க அளவு 8.825 டிஎம்சியாக இருந்தது. கடந்த 2014 ஏப்ரல் 24-ம் தேதி 19.956 டி.எம்.சி. நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பயணிப்போம்...

***************

தமிழகத்துக்கு இதுவரை ரூ.662 கோடி செலவு

-டி.செல்வகுமார்
தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கியதில் இருந்து (1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.662 கோடி கொடுத்துள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதியில் ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் தலா 3.9 டிஎம்சி வீதம் 15.6 டிஎம்சி தண்ணீர் எடுத்து சைலம் அணையில் தேக்குகிறது. பின்னர், அங்கிருந்து சோமசீலா, கண்டலேறு அணைகள் வழியாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி-யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி-யும் சென்னை குடிநீருக்கு திறந்துவிடப்படுகிறது.
கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான செலவு முழுவதும் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப் படையில் ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது ஒப்பந்தம். கிருஷ்ணா நீர் கால்வாயில் இரு மாநிலங்களுக்கான பொது கால் வாய் பகுதிகளில் (மொத்தம் 14 இடங்கள்) பராமரிப்பு உள்ளிட்ட செல வினங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டிருப்பதாக ஆந்திரம் கூறுகிறது.
இருமாநிலங்களுக்கும் பொது வான கால்வாய் பகுதிகளில், கள ஆய்வு செய்தும், சம்பந்தப் பட்ட ஆவணங்களை சரிபார்த்தும் அவ்வப்போது செலவுத் தொகையை கொடுத்து வருகிறது தமிழக அரசு. அந்த அடிப்படையில் தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கிய 1983-ம் ஆண்டு முதல் இந்தாண்டு மார்ச் வரை ரூ.662 கோடியை ஆந்திராவுக்கு தமிழ்நாடு வழங்கியுள்ளது. 1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடியும், குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும், அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.50 கோடியும் தமிழகம் வழங்கியுள்ளது. கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.
நீர் திறக்கப்படும் காலத்தை மாற்ற திட்டம்
ஜூன் 1 முதல் மே 31 வரையிலான தண்ணீர் ஆண்டைக் கணக்கிட்டு கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதால், இரண்டு போகம் சாகுபடி செய்யும் ஆந்திர விவசாயிகள், 3-வது போகம் சாகுபடி செய்யவும் முயற்சிக்கிறார்கள். இதனால், சென்னைக்கு தேவையான அளவு கிருஷ்ணா நீர் வந்து சேராமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, கிருஷ்ணா நீர் திறந்துவிடும் காலத்தை மாற்றுவது குறித்தும், சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நீர் வரும்போது அதனை தேக்கி வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றியும் பொறியாளர்கள் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது. அது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

சென்னைக்கு நீரைப் பிரிக்கும் சாய்கங்கா கால்வாய்

- கி.கணேஷ்
சென்னைக்கான கிருஷ்ணாநீரின் பங்கு சைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தாலும் அந்த நீரை ஒழுங்குபடுத்தி நமக்கு அனுப்புவது கண்டலேறு அணையில் அமைந்துள்ள முதன்மை நீர்ப்போக்கிதான். கண்டலேறு அணைக்கு தென்பகுதியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முதன்மை நீர்ப்போக்கி வழியாக தான் கண்ட லேறு- பூண்டி கால்வாயில் நீர்திறந்து விடப் படுகிறது.
கண்டலேறு முதன்மை நீர்ப்போக்கி பகுதியை பார்வையிட சென்ற போது அங்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் கட்டப் பட்டுள்ள சுவரில் உள்ள கசிவை அடைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. முதன்மை நீர்ப்போக்கியின் ஐந்து மதகுகளும் மாற்றப்பட்டு, நவீன அமைப்புடன் கூடிய மின்சக்தியில் இயங்கும் மதகுகள் ரூ.1.6 கோடியில் அமைக்கப் பட்டுள்ளன.
இம்மதகுகள் வழி யாகதான் சென்னைக் கான 12 டிஎம்சி, நெல் லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பாசனத்துக்கான நீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறுவில் 8.4 டிஎம்சியை விட அதிக மான நீர் இருக்கும் போது வினாடிக்கு 1000 முதல் 1600 கன அடி சென்னையின் குடி நீருக்காகவும், 100 அல்லது 200 கன அடி அளவுக்கு பாசனத்துக்காகவும் தண்ணீர் திறக்கப் படுகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதுடன் தலா 3 மெகாவாட் வீதம் 9 மெகா வாட் மின்சாரமும் இங்கு கிடைக்கிறது. மதகுகள் வழியாக தயாரிக்கப்படும் மின்சாரம் அதே மதகை இயக்க பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
சாய் கங்கா கால்வாய்
கண்டலேறு முதன்மை கால்வாயில் இருந்து திறக்கப்படும் நீர், கால்வாய் வழியாக 2.6 கி.மீ., இயற்கையாகவே அமையப்பெற்ற சிறிய நீர்த்தேக்கத்துக்கு வருகிறது. அங்குதான் சென்னைக்கு கிருஷ்ணா நீரை தனியாக பிரித் தனுப்பும் சாய்கங்கா கால்வாய் அமைந்துள்ளது.
இங்குள்ள ஆறு மதகுகள் வழியாக அப்பகுதி யில் சாய்கங்கா கால்வாய் என்றழைக்கப்படும் கண்டலேறு -பூண்டி கால்வாயில் நீர் திறக்கப் படுகிறது. இங்கிருந்து தான் சென்னைக்கான பிரதான கால்வாயும் தொடங்குகிறது.
சாய்கங்கா கால்வாய், கண்டலேறு நீர்ப்போக்கி மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள 5 மதகுகளை இயக்குபவர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போத்திரெட்டிபாடு முதன்மை நீர் போக்கி
ஸ்ரீசைலம் அணைக்கு அருகில் போத்தி ரெட்டிபாடு முதன்மை நீர் போக்கி அமைந் துள்ளது. சைலம் அணையில் 842 அடிக்கும் மேல் நீர் இருந்தால் மட்டுமே இந்த நீர் போக்கிக்கு தண்ணீர் கிடைக்கும்படி இது கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு நீர் திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் போக்கியில் வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி திறந்து விட முடியும். ஆனால், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இந்த நீர்போக்கியின் திறனை அதிகரிக்க முயன்ற போது, தெலங்கானா பகுதிகளுக்கு கிடைக் கும் நீரின் அளவு குறைந்து விடும் என்று அப்பகுதி யினர் எதிர்த்தனர். அதே நேரம், வறட்சியான ராயலசீமா பகுதிகளுக்கு அதிக நீர் தேவைப் பட்டதால், நீர் போக்கியின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றும் குரல்கள் வலுத்தன.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடும் திறன் கொண்டதாக போத்திரெட்டிபாடு நீர் போக்கி மேம்படுத்தப்பட்டது. ஸ்ரீசலைம் அணை யில் 854 அடிக்கு மேல் நீர் இருந்தால்தான் போத்தி ரெட்டிபாடு நீர் போக்கி முழு திறனுடன் செயல்பட முடியும். இதையடுத்து, 16.34 கி.மீ தூரத்தில் பானக்செர்லா என்ற இடத்தில் மற்றொரு நீர் போக்கி அமைந்துள்ளது

முடுக்கிவிடப்பட்ட கிருஷ்ணா திட்டம்: நினைவுகூர்கிறார் மு.க.ஸ்டாலின்

- எஸ்.சசிதரன்
சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போதுதான் கிருஷ்ணா நதிநீர் சென்னை வந்தது. இதை யொட்டி ‘தி இந்து’வில் வெளி யாகும் கிருஷ்ணா பயணக்கட்டு ரைக்காக அவரை சந்தித்து கருத்து கேட்டபோது, அவர் கூறியது:
எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் உருவாக்கிய “தெலுங்கு கங்கை” திட்டப்பணிகள், நான் சென்னை மேயராக இருந்த போது முடுக்கிவிடப்பட்டு, சென் னைக்கு முதன் முதலில் கிருஷ்ணா நீர் கொண்டு வரப் பட்டது. கண்டலேறு முதல் பூண்டி வரையுள்ள கால்வாய்கள் பலப் படுத்தப்பட்டு, நீர் தங்கு தடை யின்றி சென்னைக்கு வருவது உறுதி செய்யப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். அதற்காக ரூ.200 கோடி நிதியளித்து சத்ய சாய் பாபா பேருதவி தெய் தார். அவரை, 21.7.2007-ல் திமுக தலைவர் கருணாநிதி கவர வித்து விழா நடத்தினார். அவ்விழா வில் பேசிய அவர், “ஆன்மிக வாதியாக பாபாவும், அரசியல் வாதியாக நானும் ஒரே மேடை யில் பங்கேற்பது பலருக்கு ஆச்சரியமூட்டும்” என்றார். மக்கள் பணி என்றால் ஆன்மிகவாதிகளின் உதவியையும் பெறத் தயங் காதவர் அவர்.
இது மட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் போக்கு வதற்காக மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங் களை நிறைவேற்றிக் கொடுத்த தும் திமுக ஆட்சிதான். குடிநீர் திட்டங்களை நிறை வேற்றுவதற்காக குடிநீர் வடிகால் வாரியம் என்ற தனி வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டம், நாகை கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை திமுக ஆட்சியில் நிறைவேற்றப் பட்டவை.
இப்போது நிலுவையில் உள்ள வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான்.
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை முதலில் அமல்படுத்தியதும் திமுகதான். அதேபோல் மாநிலத்துக்குள் நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்து, இரு திட்டங்களை அறிவித்தவர் கருணாநிதி. ரூ.2180 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ.180 கோடி-க்கு மேல் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதேபோல், ரூ.369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டமும் திமுக அறிவித்த திட்டம்தான்.

தெலுங்கு கங்கை தொடங்கும் வெளுகோடு நீர் தேக்கம்

-வி.சாரதா
வெள்ளோடு நீர்தேக்கம்
நந்தியால் அருகில் 11 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது வெளு கோடு சமநிலை (balancing reservoir) பராமரிப்பு நீர்த்தேக்கம். குடிநீர், பாசனம் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொள் ளாமல், அதிகபட்ச நீரினை குறிப்பிட்ட காலம் தேக்கி வைத்து உரிய பகுதிகளுக்கு அனுப்புவதற்காக கட்டப்படுவதே சமநிலை பராமரிப்பு நீர்த்தேக்கம் எனப்படும்.
இதில் அதிகபட்சமாக 16.95 டி.எம்.சி நீர் தேக்கி வைக்க முடியும். இது சென்னையில் உள்ள நான்கு முக்கிய நீர் தேக்கங்களின் ஒட்டுமொத்த கொள்ளளவை (11.05 டி.எம்.சி) விட அதிகமாகும். போத்திரெட்டிபாடு நீர்போக்கியிலிருந்து ஈர்ப்புவிசையால் ஓடிவரும் கிருஷ்ணா நீர் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னைக்கு மட்டு மல்லாமல், கடப்பா, கர்னூல், மாவட்டங்களுக்கும் நீர் மொத்தமாக திறந்துவிடப்படுகிறது.
இங்கு தொடங்கும் கால்வாயே தெலுங்கு கங்கை கால்வாய் எனப்படுகிறது. இதன் குறைந்தபட்ச நீர் தேக்க அளவு (டெட் ஸ்டோரேஜ்) 0.046 டி.எம்.சி. அதற்கு கீழே நீர் இருப்பு இருந்தால், கால்வாய் மூலம் வெளியேற்ற முடியாது. இதற்கும் சோமசீலா அணைக்கும் இடையே, பத்வேல் என்ற இடத்தில் பொத்லூரூவீர பிரம்மேந்திர ஸ்வாமி நீர் தேக்கம் அமைந்துள்ளது.
பயணிப்போம்..

******************************

உயிரைப் பணயம் வைத்து தெலுங்கு கங்கை ஆய்வு - ஆந்திர நீர்வளத் துறை அதிகாரியின் அனுபவம்

- வி.சாரதா
தெலுங்கு கங்கை திட்டத்தில் கால்வாய் அமைப்பதற்கான குழுவில் இளம் பொறியாளராக இருந்து, தற்போது தலைமைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார் ஏ. சுதாகர். இவரது மேற்பார்வையில்தான் சோமசீலா, கண்டலேறு அணைகள், கண்டலேறு பூண்டி கால்வாய் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. அவர் இத்திட்டத்துடனான தனது நீண்ட அனுபவங்களை ‘தி இந்து’-விடம் பகிர்ந்து கொண்டார்.
தெலுங்கு கங்கை திட்டத்தில் எப்படி இணைந்தீர்கள்?
1978-ல் திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் எம்.டெக் படித்து முடித்தேன். ஜூலை மாதத்தில் மெட்ராஸ் நீர் விநியோக ஆய்வுத் திட்டத்தில், கடப்பா வட்டத்தின் முதல் இளநிலைப் பொறியாளராக 21 வயதில் சேர்ந்தேன். 16 பேர் கொண்ட ஆய்வுக் குழுவில் 4 பேர் என்னுடன் படித்தவர்கள். 1978-ல் ஆந்திர அரசின் உத்தரவின்படி, அப்போதைய தலைமைப் பொறியாளர் என்.வி. முத்தைய கிருஷ்ண செட்டி தலைமையில் தெலுங்கு கங்கை வழித்தடத்தை ஆய்வு செய்யும் பணி, பானக செர்லா நீர்போக்கியிலிருந்து அக்டோபர் மாதம் தொடங்கியது.
வழித்தடத்தை முடிவு செய்தது எப்படி?
எங்கள் ஆய்வின்போது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1958-ல் மெக்கின்சி என்ற பொறியாளர் ஆய்வு செய்து பதித்திருந்த கிருஷ்ணா- பெண்ணாறு திட்டத்தின் அலைன்மெண்ட் கற்களை (பாதை வழி காட்டும் கற்கள்) கண்டெடுத்தோம். மிகவும் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் செல்லும்போது அடுத்த அடியில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. 10 அடி நடந்தாலே வந்த பாதை மறைந்துவிடும். சுண்ணாம்பு வைத்து பாதையைக் குறித்த படியே நடந்தோம்.
திட்டம் எங்கே தொடங்கி எங்கே முடிய வேண்டும் என்பது மட்டுமே தெரியும். ஆய்வு மற்றும் வரை பட ஆவணங்களை தயாரிக்கும் ‘சர்வே ஆப் இந்தியா’விடமிருந்து நாங்கள் செல்ல வேண்டிய நிலப்பரப்பின் தகவல்கள் கிடைத்தன. அதன் உதவியோடு, கால்நடையாகப் பயணம் செய்து மேடு, பள்ளம், மண் தன்மை ஆய்வு ஆகியவற்றை மேற்கொண்டு கால்வாய்க்கான பாதையை அமைத்தோம்.
காடுகளுக்குள் பயணம் எப்படி இருந்தது?
கல்லூரி நண்பர்கள் உடனிருந்ததும், இளம் வயதும் எங்களுக்கு ஒரு திகிலான, சுவாரசியமான பயண உணர்வைக் கொடுத்தது. இன்னொரு தருணத்தில் சிறுத்தை மிக அருகில் வந்தும் தப்பித்தோம். ஒரு துண்டுத் துணியை மட்டுமே உடுத்தி, காய்கறிகள் உண் ணாமல், மாமிச உணவை மட்டும் உண்ணும் பழங்குடிகளை சந்தித்தோம். முதலில் எங்கள் மீது கோபமடைந்த பழங்குடிகள் பிறகு நண்பர்களாகிவிட்டார்கள்.
கால்வாய் வெட்டும் பணிகள் குறித்து..
1980-களில் நவீன இயந்திரங்கள் கிடை யாது. அனைத்து வேலைகளையும் தொழிலாளர்களே செய்தனர். குறிப்பாக, போத்திரெட்டிபாடு நீர்போக்கியிலிருந்து கட்டப்பட்ட பிரதான கால்வாய் முழுவதும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது. 12 மணி நேரத்துக்கு ரூ. 4 கூலி. தொழி லாளர்கள் உயிரைப் பணயம் வைத் துத்தான் உழைத்தார்கள்.
1996-ல் முதன் முறையாக நீர் திறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
20 ஆண்டு உழைப்புக்கு பலன் கிடைத்த போது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் பட்ட துயரங்கள் எல்லாம் பறந்து போயின.
தெலுங்கு கங்கை திட்ட கால்வாய்களை அகலப்படுத்த முடியுமா?
இத்திட்டத்தின் மூலம், தேவையான அளவு மட்டுமே நீர் வழங்கப்பட்டு வருவதால், கால்வாயை அகலப்படுத்துவது அவசியமும் இல்லை, சாத்தியமும் இல்லை. கால்வாய் பராமரிப்புக்காக, 2015 ஏப்ரல் முதல் மார்ச் 2016 வரை ஒவ்வொரு மாதமும் ரூ. 10 கோடி தருவதாக தமிழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
*

கிருஷ்ணா வருகைக்கு முன்பும், பின்பும்

-டி.செல்வகுமார்
சென்னைக்கு வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூடுதலான மழைநீர் கிடைக்கிறது. அந்த மழை பொய்த்துவிட்டால் அடுத்த 6 மாதங்களுக்கு திண்டாட்டம்தான்.
1986-ல் பருவமழை பொய்த்ததால் ஏரிகள் வறண்டுபோயின. நிறம் மாறி நாற்றம் அடித்த தண்ணீரை முதல் முறையாக அதிக செலவு பிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரித்து விநியோகித்தனர். 1993-ல் பருவமழை மீண்டும் பொய்த்து, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. லாரிகள், டிராக்டர்கள், ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
மீஞ்சூர், பஞ்சட்டி, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் விவசாய போர்வெல்களில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு 5 குடம் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. அந்த ஆண்டுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது முதல் முறையாக நிறுத்தப்பட்டது.
சென்னைக்கு கிருஷ்ணா நீர் 29-9-1996 அன்றுதான் முதன் முதலில் வந்தது. தெலுங்கான மாநில பிரிவினை போராட்டம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் குறைவான நீர் இருப்பு, தெலுங்கு கங்கை கால்வாய் பராமரிப்புப் பணிகள் போன்ற காரணங்களால் 2003-ம் ஆண்டில் மட்டும் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேரவில்லை. இருப்பினும், நிலத்தடி நீர், புறநகர் பகுதிகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது.
இப்போது தெலுங்கான மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், கிருஷ்ணா நதி நீரில் சமபங்கு உரிமை இருப்பதாக கூறி அதைப் பெறும் முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. இருப்பினும், தேசிய நீர்க் கொள்கையின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
சென்னை குடிநீர் வாரிய முன்னாள் தலைமைப் பொறியாளர் எஸ். சுந்தரமூர்த்தி கூறும்போது, ‘1993-94 இல் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பெரும் சிரமப்பட்டோம். அந்த காலக் கட்டத்தில் சென்னையில் தினமும் பல்லவன் பஸ்கள் 10 ஆயிரம் டிரிப்கள் இயக்கப்பட்டன. ஆனால், தண்ணீர் லாரிகள், டிராக்டர்கள் 18 ஆயிரம் டிரிப்கள் ஓடின. கிருஷ்ணா நதி நீர் சென் னைக்கு வந்தபிறகு அத்தகைய நிலைமை ஏற்படவில்லை’ என்றார்.

‘நீரைத் தேக்க போதிய கட்டமைப்பு இல்லை’

- தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழக மக்கள் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் அடையாளமாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சியால், சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டம் 1983-ல் தொடங்கப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டிஎம்சி. ஆனால், சென்னைக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது. இதை முழுமையாக தேக்கி வைக்கவோ, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தவோ நம்மிடம் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகர் மக்கள் தொகை 1 கோடியை நெருங்கும் நிலையில், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க எவ்வித புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
இச்சூழலில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சென்னை மாநகர மக்களின் அடிப்படை பிரச்சினையாகக் கருதப்படுகிற குடிநீர் சம்பந்தமான கட்டுரைகளை, குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் திட்டம் குறித்த கட்டுரையை வெளியிடுவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு, தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

‘ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்’

- கும்மிடிப்பூண்டி தேமுதிக எம்எல்ஏ சேகர்
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியை உள்ளடக்கிய கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ சேகர் (தேமுதிக), கிருஷ்ணா நீர் குறித்து கூறியதாவது:
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரையிலான கால்வாயில் பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்ததாகத் தெரியவில்லை. சேதத்தாலும் வெப்பத்தாலும் நமக்கு தண்ணீர் வீணாகிறது. இதுபோன்ற பிரச்சினகளில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
2012-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 110 அறிவிப்பின் கீழ் தேர்வாய் கண்டிகை, ராமன்சேரி, திருத்தண்டலம் ஆகிய பகுதிகளில் 3 டிஎம்சி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், அதில் மற்ற 2 இடங்கள் கைவிடப்பட்டு, தேர்வாய் கண்டிகையில் மட்டுமே தற்போது பணிகள் நடக்கின்றன. தேர்வாய் கண்டிகையில் இருந்து சென்னக்கு நீர் தருவார்களா அல்லது அருகில் உள்ள ஆலைகளுக்குத் தண்ணீர் தரப் போகிறார்களா எனத் தெரியவில்லை.
எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி அவற்றை இணைத்து கிடைக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் என்றார்.
- சி.கணேஷ்

சென்னை குடிநீர் விநியோகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ஆண்டு

- எஸ்.சசிதரன்
சென்னை குடிநீர் வரலாற்றில் குறிப் பாக, கிருஷ்ணா கால்வாய் திட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத் திய ஆண்டாக 2007-ஐ குறிப்பிடலாம்.
1996-ம் ஆண்டில் இருந்து தெலுங்கு கங்கை திட்டக் கால்வாய் வழியாக தமிழகத்தின் ஊத்துக்கோட்டையில் (ஜீரோ பாயின்ட்) நுழையும் கிருஷ்ணா நீர், முதலில் பூண்டி நீர்த் தேக்கத்தை சென்றடையும். அங்கிருந்து, இணைப்புக் கால்வாய், ஃபீடர் கால்வாய் வழியாக செங்குன்றம் நீர்த் தேக்கத்துக்கு (புழல் ஏரி) கொண்டு செல்லப்பட்டு, நகரின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
கிருஷ்ணாவில் இருந்து பெறப் படும் நீரை, சென்னையின் மற்ற ஏரிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. அதே போல, சென்னையில் அதிக மழை பொழிந்து ஏரிகள் நிரம்பினாலோ, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப் பட்டாலோ, பூண்டி மற்றும் செங் குன்றம் நீர்த் தேக்கங்களில் மட்டுமே சேமிக்கும் நிலை இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்துக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை (நீர்வளத் துறை) அதிகாரிகள் கூறிய தாவது: தெலுங்கு கங்கை திட்டத்தில் அதிக தண்ணீர் வரும்போது சேமித்து வைக்க முடியாத நிலை இருந்ததைக் கருத்தில் கொண்டு, பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து செம்பரம் பாக்கம் நீர்த் தேக்கத்துக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கும் பணி 1996-1997 ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த இணைப்புக் கால்வாய், கூவம் ஆற்றை தரைக்கு அடியில் கடப் பதற்கான அமைப்பை (சைஃபன்) கட்டு வது சவாலாக இருந்ததால் பணிகள் தாமதமாயின.
2000-ல் கால்வாய்ப் பணி முடிந் தாலும், சுத்திகரிப்பு நிலையம் இல்லாத தால் செம்பரம்பாக்கத்துக்கு நீர் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து, தமிழக அரசு, வெளிநாட்டு உதவியுடன் ரூ. 256 கோடி யில் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியது. நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீரைச் சுத்திகரிக்கும் அந்த அமைப்பு, நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய தாகும். அது 2007-ல் திறக்கப்பட்டது.
அப்போது, பூண்டியிலிருந்து செம் பரம்பாக்கத்துக்கு நேரடியாக நீரை கொண்டு சென்று, விநியோகிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஆந்திரத்திலும் நல்ல மழை பெய்ததால், அந்த ஆண்டிலேயே (2007), முதல் முறையாக, பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு கிருஷ்ணா நீர் நேரடியாக கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட்டது.
இதேபோல், 2007-ம் ஆண்டில்தான் முதல் முறையாக பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து செங்குன்றம் ஏரி மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு ஒரே நேரத்தில் நீர் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.
பயணிப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக