இன்றைக்கு இந்த நாட்டில் விவசாயிகள் எந்தச் சூழலில் இருக்கிறார்கள் என்பதிலிருந்தே நிலம் கையகப்படுத்தும் மசோதாவைப் பற்றி யோசிக்க வேண்டும்.
வெள்ளம், வறட்சி, இடுபொருட்கள் விலை அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு நியாய விலை கிடைக்காதது, கந்துவட்டிக் கொடுமை என்று இந்திய விவசாயம் அழிகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 2,96,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தச் சூழலில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் இப்போது குறைத்துவிட்டனர்.
ஏற்கெனவே, ஒதுக்கிய நிதியில் 14.7 % மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கொண்டுவரத் துடிக்கிறது பாஜக அரசு. அதாவது, வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் விவசாயிகளிடம், “விவசாயம்தான் நொடித்துவிட்டதே, அதை ஏன் செய்கிறாய்? நிலத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடு” என்று மறைமுகமாகக் கேட்கிறது.
தன்னுடைய அட்டூழியங்களுக்கெல்லாம் இந்த அரசு சொல்லும் ஒரே பதில் ‘வளர்ச்சி’. கடந்த காலங்களில் ‘வளர்ச்சி’யின் பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட்ட சம்பவங்களை எடுத்துக்கொள்வோம். 2014-ல் 491 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 45,635 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் 56.64% நிலம் பயன்படுத்தபடவே இல்லை. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சொல்லும் விவரம் இது.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உருவாக்கப்பட்ட தொழில்களுக்கு சுமார் ரூ. 83,104.76 கோடி வரிச் சலுகை அளிக்கப் பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கிய அளவுக்கு, வரிச் சலுகை அளித்த அளவுக்குப் பொருளாதார, தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பது கண்கூடு.
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசத்தின் நெடுஞ்சாலை மற்றும் இருப்புப் பாதைக்கு இருமருங்கிலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் நிலத்தை தொழில் வளாகங்களுக்காக கையகப்படுத்தலாம் என்கிறது புதிய சட்டம். இதன்படி நாட்டின் மூன்றில் ஒரு பகுதி விவசாய நிலம் பறிக்கப்படும்.
ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 11 நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 6,309 கோடி கடன் வாங்கியுள்ளன. இப்படிக் கடன் வாங்கினால் - கடனைத் திருப்பி அளிக்காத பட்சத்தில் வங்கிகள் அந்த நிலத்தை மீட்டு விற்க முடியாது. அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்றால், அது வாராக்கடன்தான். இப்படியாகக் கடந்த காலத்தில் நிலம் கையகப்படுத்தியதன் மூலம் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு பலன் அடைந்திருக் கின்றன தெரியுமா?
இதற்குக் கண் முன் உதாரணமாக இருக்கிறது, ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா நிறுவனம். அந்த நிறுவனத்துக்கும் அது சார்ந்த ஐந்து நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கொடுத்தது அரசு. ஒரு ஏக்கர் நிலம் ரூ. 8 லட்சம் என்ற விலைக்கு வாங்கி அதை ரூ. 4 லட்சத்துக்கு நோக்கியாவுக்குக் கொடுத்தது மாநில அரசு. முதல் ஐந்தாண்டுகளுக்கு முழுமையான வரி விலக்கு; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 50% வரி மட்டுமே. தவிர, மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் கட்டிய ரூ.850 கோடி மதிப்புக்கூட்டப்பட்ட வரியை மாநில அரசு திருப்பிக் கொடுத்தது.
தமிழகத்தில் அந்த நிறுவனம் செய்த முதலீடு ரூ. 650 கோடி. அதன் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 1,50,000 கோடி. கடைசியில் என்ன ஆனது? இழுத்து மூடிவிட்டுப் போய்விட்டார்கள். தமிழகத்துக்கு என்ன லாபம்? சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலை இழந்ததுதான் மிச்சம்.
இப்படித்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களைத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். இதில், பெரிய கொடுமை என்னவென்றால், மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த சட்டத்தில் நில உரிமையாளர்களுக்குச் சாதகமாக இருந்த சில அம்சங்களையும் நீக்கியிருப்பது. இது சர்வாதிகாரத்தின் உச்சம்.
முந்தைய சட்டத்தின்படி ஒரு நிலத்தைக் கையகப்படுத்தும்போது சமூகத் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். அதாவது, குறிப்பிட்ட நிலத்தைக் கையகப் படுத்தும்போது, அதனால் சமூகத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்று ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கையகப்படுத்தலாம். உதாரணத்துக்கு, தமிழக டெல்டாவில் நிலத்தை எடுத்தால் அது விவசாயத்தை, நெல் உற்பத்தியைப் பாதிக்கும். அப்படி எனில், நிலத்தை எடுக்கக் கூடாது. ஆனால், இந்தப் புதிய சட்டத்தில் சமூகத் தாக்க மதிப்பீட்டை நீக்கிவிட்டார்கள்.
பழைய சட்டத்தின்படி தனியாருக்காக நிலம் எடுத்தால் 80% நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அரசு மற்றும் தனியாருக்குக் கூட்டாக நிலம் எடுத்தால் 70% நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். இப்போது எந்த ஒப்புதலும் தேவையில்லை. 1894-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைவிடக் கொடுமையாக இருக்கிறது, மோடி கொண்டுவர நினைக்கும் இந்தச் சட்டம். சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவை விற்கத் துணிந்துவிட்டது பாஜக அரசு.
- ஜி. ராமகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.
தொகுப்பு: டி.எல். சஞ்சீவிகுமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.
தொகுப்பு: டி.எல். சஞ்சீவிகுமார்
************
எழுத்தால் எழுதி இதனைப் புரிய வைத்துவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. யாருக்குப் புரிய வைக்கிறோம், புரிந்து எதுவும் நடக்கப் போவதில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரிகிறது.
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்பதெல்லாம் தெரிந்தும் அவனது பாரம்பரியத் தொழிலைத் தொடரவே நினைக்கிறான். அவனது உழைப்பில் உடல் வளர்த்து, உயிர் வளர்த்துக் கொண்டிருக்கும் மக்களும், அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் விட்டது போல் இயற்கை யும் அவனை கைவிட்டுக் கொண்டிருக் கிறது. அவனும் அவனது குடும்பமும் மற் றவர்களைப் போல் வாழ வேண்டுமென யாருமே நினைப்பதில்லை.
தங்களது ஊதிய உயர்வுக்காகவும் இன்னும் பிற தேவைகளுக்காகவும் இந்த நாட்டில் ஒரு உழவனைத் தவிர, யார் வேண்டுமானாலும் போராடி வெற்றி பெற்றுவிட முடியும். காலம் முழுக்க உழைத்து ஏற்கெனவே பட்டினியில் கிடக்கும் அவன், யாரை நம்பிப் போராடுவது?
எந்த ஒரு உழவனும் அவன் உற்பத்தி செய்த பொருட்களை, தன் குடும்பத்துக் காக வைத்துக் கொள்வதில்லை. இர வோடு இரவாக அதை கால் விலைக்கும் அரை விலைக்கும் கொடுத்துவிட்டு, கடன்காரனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா என்றுதான் நினைக் கிறான். நடைபாதையில் கைக்குட்டை களையும், விளையாட்டுப் பொருட்களை யும் விற்றுப் பிழைக்கிறவனுக்குக் கிடைக் கிற வருமானத்தில் கால் பகுதிகூட ஒரு குடும்பமே உழவு மாடுகளை வைத்துக் கொண்டு, இரவும் பகலும் நிலத்திலேயே உழன்றாலும் ஆண்டுக்கு ஒருமுறைகூட உழவனுக்குக் கிடைப்பதில்லை.
இந்தியாவுக்கு என்றைக்கு விடுதலை கிடைத்ததோ அப்போதே உழவனும், இந்த நிலங்களும் விலங்கிடப்பட்டன. இருப்பவற்றைக் கொண்டே யார் கையை யும் எதிர்பார்க்காமல் செய்துவந்த உழவுத் தொழிலை, கடன் வாங்கி பெரும்பொருள் செலவழித்து செய்யும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். நிலத்தில் கால் படாதவர்களும், ஒருபிடி மண்ணை தொட்டுக்கூடப் பார்க்காத ஆட்சி யாளர்களும், வேளாண்மை விஞ்ஞானி களும்தான் ஓராண்டுத் திட்டம், ஐந்தாண் டுத் திட்டம் எனத் தீட்டி இந்தத் தொழி லையும், உழவனையும் படுகுழியில் தள் ளினார்கள். திட்டங்களைத் தீட்டியவர் களுக்கும், செயல்படுத்தியவர்களுக்கும் பெருவாழ்வு கிடைத்தது.
மூலைக்கு மூலை, கிராமத்துக்கு கிராமம் ஓசையின்றி உழவன் தற்கொலை செய்துகொள்கிறான். இவன் இவ்வாறு சாகக் கூடாது என்பதற்காகத் தான் கால்வயிறு கஞ்சி குடித்துக் கொண் டிருந்த அவனது நிலத்தையும் பிடுங்க, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுதங்களைக் கொண்டுத் தாக்கி கொலை செய்வதுதான் கொலைப் பட்டி யலில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு திட் டங்களைத் தீட்டி செய்யப்படும் கொலை கள் எந்தப் பட்டியலிலும் சேருவதில்லை. புது தில்லியில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னாலேயே தூக்கில் தொங்கிய உழவன் கஜேந்திர சிங், ஆசைக்காகவா செத்தான்? “என்னால் எனது மூன்று பிள்ளைகளுக்கு உணவும், உடையும், வசதியும் செய்து தர முடியவில்லை. என் நிலம் என்னைக் காப்பாற்றவில்லை. என் குடும்பத்தை நடுத் தெருவில் விட்டு விட்டு அவர்களை கடனாளியாக்கிச்விட்டு போகிறேனே!” எனக் கதறிவிட்டுத்தான் செத்தான்.
‘மற்றவர்களைப் போல அவன் போராடாமல் ஏன் செத்தான்’ என் கிறார்கள். எதிரி யார் என்பதே தெரிய வில்லை. யாரை எதிர்த்து, எப்படிப் போராடுவது?
கால்நடைக் கழிவுகளைக் கொண்டு பயிர் செய்தவனிடத்தில் இரசாயன உரங் களைக் கொடுத்தார்கள். சாம்பல் தெளித்து, பூச்சிகளை விரட்டியவ னிடத்தில் இரசாயன பூச்சிக்கொல்லி களைக் கொடுத்தார்கள். மழை நீரைக் கொண்டு இயற்கையாக உழவுத் தொழில் செய்தவனிடத்தில் கடன் கொடுத்து கிணறு வெட்டச் சொல்லி, கனரக இயந் திரங்களைக் கொடுத்து கடனாளியாக்கி னார்கள்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏரி களையும், குளம், குட்டைகளையும், ஆறுகளையும் தங்கள் வசமாக்கி மூடி விட்டார்கள். நிலவளம் அழிந்து, தன் னிடம் இருந்த கால்நடைகளும் அழிந்து ஒவ்வொரு உழவனும் மன நோயாளியாக, உற்பத்தி செலவு பல மடங்குக் கூடிப் போய் வாழவழியின்றி குடும்பத்தையே காலம் முழுக்க தீராதக் கடனாளியாக்கிவிட்டுச் சாகிறான்.
சென்ற வாரம் வீசிய பெருங்காற்று மழையில், இன்னும் அறுவடைக்கு மூன்று மாதங்களே இருக்கிற நிலையில் இருந்த இரண்டு ஏக்கர் வாழை மரங் களும் முறிந்து சேதமடைந்தன. அதைப் பார்த்து ஏற்கெனவே இருக்கிற கட னோடு இதற்காக வாங்கியக் கடனும் சேர்ந்துவிட்டதே எனக் கலங்கிப்போன எனக்குத் தெரிந்த ஒரு ஏழை உழவன், தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனான். சென்ற மாதம் எங்கள் கிரா மத்தில் இதேபோன்று ஒரு தற்கொலை. இவையெல்லாம் நமக்கு உணர்த்தும் சேதி என்ன? எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, எல்லோராலும் புது தில்லிக்குச் சென்று ஊடகத்தினரின் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் தற்கொலை செய்துகொள்ள முடியுமா?
இம்மக்களுக்கு உணவளித்த, கணக் கில் வெளிவராத இலட்சக்கணக்கான உழவர்கள் மாண்டுகொண்டே இருப் பதை இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் அனுமதிக்கப் போகிறோம்? இதன் பாதிப்பை ஆட்சியாளர்கள்தான் உணரவில்லையென்றால், மக்களும்கூட உணரவில்லை. ஒரு தோசைக்கு 100 ரூபாய் கொடுக்கத் தயாராகிவிட்ட வர்கள், குளுகுளு அறைக்குச் சென்று ஒரு உடைக்கு 5 ஆயிரம் ரூபாய் தாராளமாக செலவு செய்பவர்ச்கள், உழவன் பொருளுக்கு மட்டும் பேரம் பேசுவார்கள்.
ஒரு காலத்தில் தொழில் போட்டி என்பதுகூட நம் நாட்டில் குடும்பத்துக்கு உள்ளேயே இருந்ததால், சூதாட்டத்தில் பணம் வைத்துத் தோற்றால்கூட , அந்தப் பணம் நம்மிடமே இருந்தது. இப்போது குடும்பத்துடன் போட்டியிட கார்ப்பரேட் எனும் பன்னாட்டு முதலாளிகளை இறக்கி விடுகிறார்கள். கால் காணி, அரைக் காணி வைத்திருந்தவன் எல்லாம் இந்த கார்ப்பரேட் முதலாளிகளிடம் உழவுத் தொழில் செய்து போட்டிப் போட முடி யுமா? இத்தொழிலையும், உழவர்களை யும் கொன்றுவிட்டு இயற்கை வளங்களை அழித்து நம் பணத்தை மூட்டைக்கட்டி அவர்களின் நாடுகளுக்குக் கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்.
தற்கொலை செய்துகொண்டவனுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையோ, சலுகையோ, நிவாரணமோ தீர்வைக் கொடுத்துவிடுமா? அல்லது செய்தி களில் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமா?
நாடு முழுக்க 32 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, எதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களின் ஆராய்ச்சியெல்லாம் அரைக் காணி, ஒருகாணியை வைத்துக்கொண்டு தலைமுறை தலைமுறையாக செத்து மடியும் பெரும்பான்மை உழவர்களுக் குப் பயன்படுவதே இல்லை. 10 ஆண்டு களுக்குப் பின் எது நடக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டங்களை வழி வகுக்க உதவுபவர்கள்தான் விஞ்ஞானி கள். அவர்களின் திட்டங்கள் இத்தொழி லுக்கு எதிரானதாகவும், அழிவைத் தருவதாகவும் உணரும்போது மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமா?
நீர்நிலைகளை மீட்டெடுத்து, நில வளங்களைக் காப்பாற்றி செலவில்லாத பழையமுறை உழவுத் தொழிலை நடைமுறைப்படுத்தும்படியான நடவடிக் கைகளை உடனடியாகச் செய்யவேண் டியதுதான் இதற்கெல்லாம் உடனடி யான ஒரே தீர்வு. இதை விட்டுவிட்டு ஆட்சியில் பொறுப்பேற்ற உடனே, அவ னிடம் இக்கிற மீதி உயிரான நிலத் தையும் பிடுங்குவதற்கான சட்டத்தை உருவாக்குவதையே முதன்மையாக நினைத்தால், இனி இந்நாட்டின் உழவர்கள் மட்டுமல்ல; பிற மக்களும் பட்டினியால்தான் தற்கொலை செய்துகொள்வார்கள்.
உழவுத் தொழிலுக்காக தனி நிதிநிலை அறிக்கையை உருவாக்கி செயல்படுத் தாத ஆட்சியாளர்களே இந்நாட்டுக்குத் தொடர்ந்து வாய்த்திருக்கிறார்கள். தொடர்வண்டி சேவைகளுக்காக தனி நிதிநிலை உருவாக்குபவர்களுக்கு, இது கட்டாயம் என்பது புரிவதில்லை. ஒதுக்குவதே சிறு தொகை. அதையும் இத்தொழில் என்னவென்றே தேரியாத அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகி களிடம் கொடுத்துவிட்டு மானியத்தை யும், நிவாரணத்தையும், கடன்களை யும் கொடுத்துவிட்டால் போதும் என இருந்துவிடுவது தொடரும்வரை இந்தத் தற்கொலைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். நிலங்களும் அழிந்து கொண்டுதான் இருக்கும்.
இதற்கு ஒரு தீர்வு எட்டும் வரை இந்நாட்டின் அவமானச் சின்னங்கள் தற்கொலை செய்துகொள்ளும் இந்த அப்பாவி உழவர்களா? இல்லை அவர் களைக் கண்டுகொள்ளாமல் எல்லா வற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
- Director Thankar pachan
*********
- Director Thankar pachan
*********
நாம் முதலில் இந்த விவகாரத்தைப் புரிந்துகொள் வோம். கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்தியா வளர்ந்து கொண்டிருந்தாலும், அந்த வளர்ச்சிக் கதையில் தாங்களும் பங்குதாரர்களாக இல்லையே என்பது கோடிக் கணக்கான இந்தியர்களின் முறையீடு. இந்த முறையீட்டுக்கு அரசு செவி சாய்த்ததன் அடையாளம்தான் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த ‘நிலம் கையகப்படுத்தல் சட்டம்-2013’. இதுவேகூடத் தாமதமான நடவடிக்கைதான்.
உண்மையிலேயே, தங்களைப் பலிகடாக்களாகக் கொண்டுதான் வளர்ச்சி என்பது எட்டப்பட்டிருக்கிறது என்றே ஏராளமான மக்கள் நினைக்கிறார்கள். சுதந்திரக் காலகட்டத்திலிருந்து இன்றுவரை வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் வாழிடங்களை இழந்த மக்களின் எண்ணிக்கை 6 கோடி. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மறுபடியும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் எந்த வித சொத்துகளும் இல்லாத கிராமப்புற ஏழைகள், சிறு விவசாயிகள், ஏழை மீனவர்கள், குவாரித் தொழிலாளர்கள்.
இவர்களில் கிட்டத்தட்ட 40% ஆதிவாசிகள், 20% தலித் மக்கள். ஆனால், வளர்ச்சித் திட்டங்களின் அனைத்துக் குறியீடுகளிலும் தலித் மக்களும், ஆதிவாசிகளும்தான் மிகமிகக் குறைவாக பலன் அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது ஒருபுறம் இருக்க, கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆக, அவர்கள் நினைப்பது சரியா, தவறா?
வலுக்கட்டாயமாக நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிரான கோபத்தை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 90% நிலக்கரிப் படுகைகள், 50%-க்கும் மேல் கனிம வளங்கள், அணைகள் கட்டுவதற்கு உகந்த இடங்கள் போன்றவையெல்லாம் ஆதிவாசிகள் பிரதேசங் களில்தான் இருக்கின்றன. இந்தக் காரணங்களால்தான், நிலம் கையகப்படுத்தலைப் பொறுத்தவரை தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன, இனியும் ஏற்படும்.
துடிப்பு மிகுந்த இன்றைய ஜனநாயகத்துக்குப் பொருந்தாத, 19-ம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குத் தேவைப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான காலனியாதிக்கச் சட்டம் ஒன்றுக்கு முடிவுகட்டிக் கொண்டுவரப்பட்டதுதான் நிலம் கையகப்படுத்தல் சட்டம் - 2013. இந்தச் சட்டம் மேற்குறிப்பிட்ட மக்களைச் சென்றடைய முயன்றது.
யாருடைய நிலம் கையகப்படுத்தப்படுமோ அவர்களிடம் சம்மதம் பெறுவதும், நிலம் கையகப்படுத்தலால் வாழ்வாதாரங்களை இழப்பவர்களுக்காக அக்கறை கொள்வதும்தான் இந்தச் சட்டத்தின் மையம். இதையெல்லாம் கடாசியெறியும் மோடியின் முயற்சியானது 1894-ம் ஆண்டின் சட்டம் அரசுக்கு வழங்கிய ‘கேள்வி கேட்க முடியாத அதிகார’த்தை மறுபடியும் உயிர்ப்பிப்பது போன்றது.
வளர்ச்சித் திட்டங்களுக்கென்று நிலங்கள் தேவைப்படு வதையோ, அதனால் நிலம் வழங்குபவர்கள் பலனடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதையோ நான் மறுக்கவில்லை. யாருடைய நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அவர்களிடம், அவர்கள் அடையக்கூடிய பலன்களைச் சொல்லி சம்மதத்தைப் பெறுவதில் என்ன தீங்கு நேர்ந்துவிட முடியும்? விவசாயிகளுக்குத் தெளிவானதும் மிகுந்த பலன் அளிக்கக் கூடியதுமான மாற்று ஏற்பாடுகளை முன்வைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்களா என்ன? விவசாயிகளிடம் நிலங்களைப் பெற்று, அதில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களால் அவர்களுக்கு அதிக நன்மை கிடைக்குமா என்பதையும் தங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் விவசாயிகள்தானே மதிப்பிட வேண்டும்?
இந்தியாவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டும் அவற்றில் பயன்படுத்தப்படாமல் ஏராளமான நிலங்கள் இருப்பதே நிதர்சனம்.
உண்மையில், 2013-ம் ஆண்டு சட்டம் என்பது மற்ற நாடுகள் வெகு காலமாகச் செய்துகொண்டுவரும் விஷயத்தைப் பின்பற்றுவதற்கான தாமதமான முயற்சியே. உள்ளூர் மக்களையும் வளர்ச்சித் திட்டத்தின் பிரிக்க முடியாத பங்காளிகளாகக் கொள்வதன் மூலம் ‘மோதல் தவிர்ப்பு’ என்பதை மேற்கொள்வதற்கான சக்திவாய்ந்த வழிமுறை அது. நியாயமாக நிலம் கையகப்படுத்தல் அமைய வேண்டும் என்றால், முந்தைய சட்டத்தில் உள்ள ‘நில உரிமையாளரின் சம்மதம்’, ‘சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை’ ஆகிய இரண்டும் நிச்சயமாக நீக்கப்படக் கூடாது.
எல்லா அக்கறைகளும் தேசம்குறித்த உளப்பூர்வமான அக்கறைகளே. இந்த தேசத்துக்கு நிறுவனமயமாதலும் நகர்மயமாதலும் தேவையாக இருக்கின்றன. ஆனால், எந்த வகையில் என்பது விவாதத்துக்குரியது. மிகக் குறைந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், சுற்றுச்சூழலில் முக்கியமாக நீராதாரங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுமான பெருந்தொழில் அமைப்புகளை நாம் நிச்சயமாகத் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது.
இன்றைய நமது நகரங்கள் எத்தகைய கொடுங்கனவாக மாறியிருக்கின்றன என்பது குறித்து நாம் சந்தோஷப்பட முடியாது. தேச நலன் என்ற பெரிய விஷயத்தைச் சொல்லி, அதற்காக நிலங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்று நம் தேச மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்படியென்றால், அவர்களின் தியாகம் அர்த்தமுள்ள ‘பொதுக் காரியம்’ ஒன்றுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, கடந்த காலத்தைப் போல அநீதியையும் மோசடிகளையும் சந்திக்கும்படி ஆகிவிடக் கூடாது!
- மிஹிர் ஷா,
மத்திய இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளுடன் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் செயல்பாட்டாளர்.
- © ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
மத்திய இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளுடன் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் செயல்பாட்டாளர்.
- © ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
Keywords: நிலம் கையகப்படுத்தும் மசோதா,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக