வெள்ளி, 22 மே, 2015

கியூபா

மேற்கிந்திய தீவுகள் என்பது ஒரு நாடு - இப்படித்தான் தீவிர கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
கியூபா, ஜமைக்கா, ஹைதி, டொமினிகன் குடியரசு, பியூர் போரிகோ, வாஜின் தீவுகள், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் போன்ற பல தீவுகளும் இணைந்ததுதான் மேற்கிந்தியத் தீவுகள். இப்படி ஒரு பொதுவான அரசியல் பெயர் இதற்குக் குறைந்த காலத்துக்குதான் இருந்தது. அதாவது பிரிட்டிஷ் காலனிகளாக இவை இருந்தபோது ஜனவரி 3, 1958 முதல் 1962 மே 31 வரை இப்படி அழைக்கப்பட்டது. இவையெல்லாம் கரிபியன் கடல் பகுதியில் உள்ளன. தோராயமாக தென் அமெரிக்காவுக்கு மேலாகவும், வட அமெரிக்காவுக்குக் கீழாகவும் உள்ள நடுப்பகுதி.
முதலில் கியூபாவைப் பார்ப்போம்.
கியூபா நாட்டு மக்களால் இன்னமும்கூட அந்த மாற்றத்தை முழுவதுமாக நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியை உற்றுப் பார்க்கிறார்கள். ஐம்பது வருடப் பகைமை முடிவுக்கு வந்திருக்கிறதா?!
அமெரிக்காவும், கியூபாவும் கடும் பகைவர்களாகவே இருந்து வந்தன. ஒரு டஜன் அமெரிக்க அதிபர்கள் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தும் விரோதம் மாறவில்லை. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. சமீபத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான ஓர் அறிக்கை இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அது - ‘‘தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து கியூபாவின் பெயர் நீக்கப்படும்’’.
அமெரிக்காவில் இப்படி ஓர் பட்டியல் உண்டு. அதில் ஈரான், சிரியா, சூடான் போன்ற நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளுடன் தூதரக நல்லுறவை அமெரிக்கா வைத்துக் கொள்ளாது. மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவும் கியூபாவும் தங்களுடைய தூதரக உறவுகளை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘இது நியாயமான முடிவு. சொல்லப்போனால் இந்தப் பட்டியலில் எங்கள் நாடு இடம் பெற்றிருக்கவே கூடாது’’ என்று கூறியுள்ளார் கியூபாவின் அதிபரான ரவுல் காஸ்ட்ரோ.
பாரீஸில் சார்லி ஹெப்தோ பத்திரிகை அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் பலரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை, ‘’அராஜகமான தாக்குதல்’’ என்று கியூபா வர்ணித்தது அந்நாட்டின் தீவிரவாதத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என்று கூறுகிறது வெள்ளை மாளிகை.
நெல்சன் மண்டேலா இறந்தபோது தென்னாப்ரிக்காவில் ஒருமுறை ஒபாமாவும், காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டார்கள். மற்றபடி அமெரிக்க அதிபர்களும், கியூபா அதிபர்களும் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டதுகூட இல்லை.
அமெரிக்காவின எதிர்கட்சியான குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார்கள். கியூபாவுடன் நெருக்கம் கொண்டால் அது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்பது அவர்கள் வாதம்.
அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).
அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.
அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.
ஏன் இந்தப் பகைமை என்பதற்கு சில முக்கிய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டியே ஆகவேண்டும்.
(உலகம் உருளும்)
*************
கடந்த 1492-ல்தான் கொலம்பஸ் கியூபாவைக் கண்டுபிடித்தார். பின்னர் (வழக்கம்போல!) அது ஸ்பெயினுக்குச் சொந்தம் என்றார்.
அடுத்த இருபது வருடங்களில் ஸ்பெயின் நாட்டினர் அங்கே கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினர்.
குடியேறியவர்களில் பெரும்பாலான வர்கள் தேர்ந்தெடுத்தது விவசாயத்தை. கரும்பு, புகையிலை ஆகியவை அங்கு அமோகமாக விளைந்தன. நாளடைவில் அங்கு நிறைய பருத்தி மில்கள் செயல்படத் தொடங்கின.
விரைவிலேயே கியூபா பணக்கார நாடானது. ‘அமெரிக்கன் இண்டியன்ஸ்’ எனப்படும் உள்ளூர்வாசிகள் மட்டுமே வேலைக்காக அமர்த்தப்பட்டனர். குறை வான கூலி, மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் காரணமாக நாள டைவில் இவர்களின் எண்ணிக்கை சுருங்கிப் போனது. மாற்று ஏற்பாடாக, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்து, அவர்களின் உழைப்பில் கொழிக்கத் தொடங்கினார்கள், கியூபாவில் குடிபுகுந்த ஸ்பானிஷ்காரர்கள்.
1527-ல் இப்படிக் கடும் வேலைகளைச் செய்வதற்காக ஆப்ரிக்காவிலிருந்து கியூபாவுக்கு வரவழைக்கப்பட்ட அடிமை கள், தாங்கள் மிகக் கேவலமாக நடத்தப் படுவதைக் கண்டு புரட்சியில் ஈடுபட, அது அரசால் நசுக்கப்பட்டது. 1607-ல் கியூபாவின் அதிகார பூர்வமான தலைநகரமாக ஹவானா அறிவிக்கப்பட்டது.
1649-ல் அங்கு பரவிய கொள்ளை நோயால் கியூபாவில் வசித்தவர்களில் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்தனர்.
சுமார் நானூறு வருடங்கள் கியூபாவை ஸ்பெயின் ஆண்டது. அவ்வப்போது புரட்சிகள் ‘மினி’ சைஸில் வெடிப்பதும், தன் ‘மாக்ஸி’ படைகளைக் கொண்டு அவற்றை ஸ்பெயின் அடக்குவதும் வாடிக்கையானது.
பக்கத்து நாடான ஐமைகாவுடன் வணிகம் செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி பிரிட்டிஷ்காரரின் படைகள் கியூபாவின் நகரமான சாண்டியாகோவை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். இதை ஸ்பெயின் எதிர்த்தது. ஆனால் நாளடைவில் ஐமைகா இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்பதை ஸ்பெயின் வெளிப்படையாக அங்கீகரித்தது. பதிலுக்கு சாண்டியா கோவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கின.
‘’கியூபாவை நாமே ஆக்கிரமித்தால் என்ன?’’ - இப்படியொரு எண்ணம் தென் அமெரிக்காவின் அப்போதைய (1826) தளபதியான சைமன் பொலிவியருக்குத் தோன்றியது. அவரும், அதே கருத்தைக் கொண்ட மெக்ஸிகோ நாட்டுத் தலைவர் களும் சேர்ந்து ஒரு ராணுவத்தை உருவாக்கினார்கள். கியூபாவுக்குச் சென்று ஸ்பெயினுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த இந்த படை தயாரானது.
நடுவில் அமெரிக்கா புகுந்தது. சண்டை மூண்டால் ஸ்பெயினுக்கே தன் ஆதரவு என்று அறிவித்தது. வேறு வழியில்லாமல் தென் அமெரிக்கா - மெக்ஸிகோ கூட்டுப்படை பின்வாங்கிவிட்டது. நாளடைவில் ‘’கியூபாவை நம்முடனேயே இணைத்துக் கொண்டால் நன்றாயிருக்குமே’’ என்று கருதத் தொடங்கியது அமெரிக்கா! ஆனால் ஸ்பெயின் ஆர்வம் காட்டவில்லை.
அதேசமயம், கொடுமைக்குள்ளான கியூபாவின் உள்ளூர்வாசிகள் சுதந்திரத் துக்கு ஏங்கினார்கள், கிளர்ச்சி செய்தார்கள்.
1898-ல் ஹவானா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் ஒன்று வெடித்தது. கியூபாவிலுள்ள தங்கள் நாட்டுக்காரர்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பிய ராணுவக் கப்பல் இது. மர்மமான முறையில் அந்தக் கப்பல் வெடித்துச் சிதறியதில் 275 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
வெடித்த கப்பலின் பெயர் MAINE. எதனால் வெடித்தது? இன்றுவரை தெரியவில்லை. என்றாலும் அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் பிரகடனம் வெளி யிட்டது. ஆக ஸ்பானிய - அமெரிக்கப் போர் தொடங்கியது. (கியூபாவை அப்போது ஆட்சி செய்தது ஸ்பெயின்தானே).
ஸ்பெயின் ராணுவம் சரணடைந்தது. ‘பாரிஸ் ஒப்பந்தம்’ இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. கியூபா மீது தான் கொண்டிருந்த சகல உரிமைகளையும் விட்டுத் தந்தது ஸ்பெயின்.
கியூபாவில் தனது ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா. சில வருடங்கள் தான். கியூபாவாசிகள் ஸ்பெயினுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக் காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்கா பணிந்தது. கியூபா தன்னைத் தானே ஆளட்டும் என்று விட்டுக் கொடுத்தது.
ஆனால் ’கியூபாவிலுள்ள காண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக் குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்’ என்பது போன்ற நிபந் தனைகளை விதித்தது. அன்றைய அவசரத் துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது.
படிஸ்டா என்பவர் சுதந்திர கியூபாவின் அதிபரானார். தான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்பித்த போது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.
இதைக் கண்டு குமுறினார் ஓர் இளம் வழக்கறிஞர். குறிப்பாக வெளிநாட்டு முதலீடு களை படிஸ்டா வரவேற்பதற்கு எதிர்ப்பு காட்டினார். படிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி யில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானவுடன், மெக்ஸிகோவுக்குச் சென்று திட்டங்களைத் தீட்டிய அந்த இளம் வழக்கறிஞர் பிடல் காஸ்ட்ரோ!.
(உலகம் உருளும்)
****************
யாருக்கும் இல்லாத ஒரு பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.
1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.
படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.
1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.
பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும். இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டா லும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.
கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை.
என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.
ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற் கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் காஸ்ட்ரோ.
இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)
ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று `இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.
அப்போது பிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு அடுத்த ஆண்டு பிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.
கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் பிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.
கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!
பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.
கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. பிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.
(உலகம் உருளும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக