வியாழன், 23 ஜனவரி, 2014

விவசாயிகள் என்ற விஞ்ஞானிகள்

NANDRI HINDU MAGAZINE

நமக்கு உணவு தரும் உழவுத்தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது?
ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும் காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய அளவில் முன்னேற உதவியது.
ஆனால், அப்போது நிலம் வயலாக மாற்றப்பட்டிருக்க வில்லை. உழுவதற்கும் விதைப்பதற்கும் நிலத்தைப் பண்படுத்த வேண்டியிருந்தது. நிலங்களில் மரங்களும் பாறைகளுமே இருந்தன. பள்ளத்தாக்குகள், குன்றுகள் என்று ஏற்றத்தாழ்வான நிலஅமைப்பும் இருந்தது. மனிதர்கள் மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. ஏற்றத் தாழ்வான பகுதிகளைச் சமப்படுத்த வேண்டியிருந்தது.
மனிதர்கள் தங்கள் கடுமையான உழைப்பால் நிலத்தைப் பண்படுத்தினர். இப்படி மண்ணைப் பண்படுத்தி, உணவு உற்பத்தி செய்யும் முறையே விவசாயம். ஆதிகால விவசாயிகள் இயற்கையாக விளைந்த ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் இருந்து விவசாயத்துக்கு ஏற்றவற்றைக் கண்டறிந்து, அவற்றைக் கவனமாகப் பயிர் செய்து பெருக்கினர்.
இந்த வேலைகளைச் செய்வதற்கு மனித உழைப்பு மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமும் அறிவைப் பயன்படுத்தும் திறனும் வேண்டியிருந்தது. விவசாயத்தை எளிமைப்படுத்தத் தேவையான கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது.
நிலத்திலிருந்து உணவுப் பயிர்களை விளைவிக்கும் அறிவியல்தான் விவசாயம் என்று அறியப்படுகிறது. உலகில் அனைத்து நாகரிகங்களிலும் விவசாயத்துக்குப் பின்னரே எழுத்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தின் வளர்ச்சி இயற்கை யாக நடந்த ஒன்றல்ல: மற்ற அறிவியல் தொழில்நுட்பங்களைப் போல விவசாயமும் மனிதர்களின் கண்டுபிடிப்புதான்.
கி.மு. 8000க்கும்
கி.மு. 3000க்கும் இடையே விவசாயத்தையும் வீட்டு விலங்கு வளர்ப்பையும் சார்ந்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளைக் கல்லால் உருவாக்கினர். மரத்தாலும் தோலாலும் செய்யப்பட்ட கருவிகள் பின்னர் உருவாகின. அதற்குப் பிறகு இரும்பாலும் மற்ற உலோகங்களாலும் விவசாயக் கருவிகள் செய்யப்பட்டன.
அன்றைய சமூக நிலை
விவசாயத்துக்கு இந்தியாவில் நீண்ட வரலாறு உண்டு. மேய்ப்பர்கள் விலங்குகளைப் பழக்கி வளர்க்கத் தொடங்கியபோது இறைச்சியும் பாலும் பால் சார்ந்த உணவுப் பொருட்களும், தோல் மற்றும் கம்பளி போன்ற மற்றப் பயன்பாட்டு பொருட்களும் கிடைத்தன. அதேநேரத்தில் காளைகளும் எருமைகளும் உழவுக்கும் வண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்டன.
ஐரோப்பாவில் குதிரைகளைக் கொண்டு உழுதனர். இந்தியர்களோ இந்தக் கடினமான வேலைக்கு மாடுகளைப் பழக்கினர். வண்டி இழுக்க ஐரோப்பாவில் குதிரைகளும் இந்தியாவில் மாடுகளும் உதவின. குதிரைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.
இறக்குமதியான குதிரைகள் மீது சவாரி செய்த படைவீரர்களும் தேரோட்டிகளும் இன்றும் புகழப்படுகின்றனர். ஆனால், மாடுகளை நுகத்தில் பூட்டி உழுத உழவர்களுக்கு இன்றைக்கு மதிப்பில்லை. நிலத்தை உழுது உணவு தந்த சாதியினரும் சமூகக் குழுக்களும் ‘சூத்திரர்’ என்று அழைக்கப்பட்டுச் சமுதாயத்தின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டனர். பண்டிதர்கள் எனப்பட்டவர்கள் விவசாய வேலையை, அறிவிலிகள் செய்யும் தொழிலாகக் கருதினர். பயிர்களை உணவாக மாற்றியவர்களுக்கு, அவர்களது மனசில் மரியாதை இல்லை. நிலத்திலிருந்து உணவு தயாரிக்கிற உழைப்பையும் அது சார்ந்த திறன்களையும் மதிக்காத மதமும் தத்துவமும் ஒரு சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை அழித்துவிடும்.
தொடக்கத்தில் விவசாய வேலைகள் அனைத்தையுமே மனிதர்களே முழுமையாகச் செய்து வந்தனர். கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் விலங்குகள் விவசாய வேலைகளுக்குப் பழக்கப்பட்டன. இது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. அதேநேரம், கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் வேத யாகச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. பௌத்தர்களின் ஆதரவுடன் இந்த யாகப் பலிகளை விவசாயிகள் எதிர்த்தனர். மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவதையும் பால் பொருட்களின் உற்பத்திக்காக வளர்ப்பதையும் பௌத்த மதம் ஊக்குவித்தது.
விவசாயம் என்ற அறிவியல்
இன்று விவசாயம் ஓர் அறிவியலாக அறியப்பட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருக்கிறது. ஆனால் விவசாயிக்கு காலங்காலமாக நிலத்தை எப்போது, எப்படிப் பண்படுத்துவது என்று தெரிந்திருந்தது. கட்டாந்தரையில் மாடுகளை ஏரில் பூட்டி உழுவதற்குக் கடுமையான பயிற்சி தேவை. பல தலைமுறைகளாக விவசாயிகள் தங்கள் சந்ததிகளுக்கு இதுபோன்ற திறமைகளைப் பயிற்றுவித்துவந்தனர்.
அதேநேரம் அந்த விவசாயிகளின் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் படிக்கப் பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தடை செய்யப்பட்டன. விவசாய வேலைகளில் பெற்றோர் தந்த பயிற்சி மட்டுமே அவர்களுக்குக் கல்வியாக இருந்தது. விவசாயிகளுக்கு எழுதவோ, படிக்கவோ முடியாததால் அவர்களது பாரம்பரிய அறிவு, அறிவாக மதிக்கப்படவில்லை.
வயலை உழுவதற்கு அறிவும் திட்டமிடும் திறனும் தேவை. கடலை விதைக்கும்போது ஆழ உழுத சால் (furrow) அவசியம் என்று விவசாயிகளுக்குத் தெரியும். பச்சைப்பயற்றுக்கு அவ்வளவு ஆழமான சால் தேவையில்லை. அதேபோல, பருவத்துக்கு உகந்த பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்ய வேண்டும். விவசாயிக்குத் தன் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை தெரியும். தான் பழக்கும் விலங்குகளின் இயல்பு தெரியும். உடலும் மனமும் சார்ந்த திறன்களை விவசாயம் ஒருசேரப் பயன்படுத்துகிறது. சொல்லப்போனால், எல்லா உடல் உழைப்புக்கும் மூளை உழைப்பும் அவசியம் தேவை. ஆனால், மூளை உழைப்புக்கு உடல் உழைப்புத் தேவையில்லை.
விவசாயிகள் பல்வேறு பயிர்களைக் கவனமாகப் பயிரிட்டு, அறுவடை செய்திருக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பட்டினி கிடந்திருப்போம். விவசாயிகளும் அவர்களுடன் வயல்வேலை செய்பவர்களும் சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறியப்படுகிறார்கள். இவர்களும், தலித்துகளும், பழங்குடியினரும்தான் நிலத்தைப் பண்படுத்தி நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுடைய உழைப்பில் விளைந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அவர்களை மதிக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும்?
நன்றி: பானை செய்வோம் பயிர் செய்வோம்: நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு, தூளிகா பதிப்பகம்

அதிகம் விற்ற 10 புத்தகங்கள் -2014

அதிகம் விற்ற 10 புத்தகங்கள்
1. ஆறாம் திணை - கு.சிவராமன் - விகடன் பிரசுரம்
2. அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் - கண்ணதாசன் பதிப்பகம்
3. கொற்கை - ஜோ டி குரூஸ் - காலச்சுவடு பதிப்பகம்
4. இது யாருடைய வகுப்பறை? - ஆயிஷா நடராஜன் - பாரதி புத்தகாலயம்
5. வெள்ளை யானை - ஜெயமோகன் - எழுத்து பிரசுரம்
6. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - என்சிபிஹெச்
7. கிமு – கிபி - மதன் - கிழக்குப் பதிப்பகம்
8. பூமித்தாய் - கோ.நம்மாழ்வார் - இயல்வாகை
9. மழைக்காடுகளின் மரணம் - நக்கீரன் - பூவுலகின் நண்பர்கள் வெளியீடு
10. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - எஸ்.ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம்

புதன், 22 ஜனவரி, 2014

வழிகாட்டிகள்

From Hindu Magzine

இங்கே நமக்கு இருக்கும் வழிகாட்டிகள் எப்படிப்பட்டவர்கள்?

இவர்களை எடுத்துக்கொள்வோமா?
* நடிகர்கள் நடிக்க வேண்டும், விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் திறமையைக் காட்ட வேண்டும், ஒரு பொருளின் தரத்தைப் படித்து, உணர்ந்து தெரிந்துகொள்ள முடியாத கல்வித் தரத்தில், குறைகளை எதிர்த்து எளிதில் குரல் கொடுக்க முடியாத சமூகத்தில், உருவாக்கிய விஞ்ஞானியோ, உபயோகிக்கும் பாமரனோ கொடுக்க முடியாத உத்தரவாதத்தை எந்தப் பொருளுக்கும் இவர்கள் எப்படிக் கொடுக்கிறார்கள்?
* பட்டா இல்லாத நிலங்களை வாங்கச் சொல்லுகிறார்கள், கரியமில வாயு நிறைந்த பானத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்கள், வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டால் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்துப் பின்னே வருவார்கள் என்கிறார்கள்.
* கூவி கூவி விற்கும் நிலத்தில், ஏதோ ஒரு விவசாயியின் மறைந்திருக்கும் கண்ணீர் தெரிவதில்லை, நம் நீரை உறிஞ்சி, அதில் சந்ததி கொல்லும் விடம் கலந்து விற்பது தெரியவில்லை, நம் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்து ஆண்கள் பின்னே செல்பவர்களா என்ற சூடு உணர்ச்சிக் கூட இல்லை, பணத்துக்காக ஒரு கூட்டமும், அறியாமையில், ஏதோ ஓர் இயலாமையில் மற்றொரு கூட்டமும் இங்கே மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
* அடுத்துத் தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள். ஒரு கல்லை எறிந்து கூட்டத்தில் எளிதில் கலகம் உண்டாக்கி கட்சி மோதல் செய்கின்றனர், ஓர் ஊர்வலத்தில் ஒரு சிலையின் மேல் செருப்பை வீசி எறிந்து, மதக் கலவரம் உண்டாக்குகின்றனர். தனிப்பட்ட ஒரு விரோதத்தை, ஏதோ ஒரு வன்மத்தை தீர்க்க, ஏதோ ஓர் ஆதாயம் பெற, சாதிக் கலவரமாக மாற்றம் செய்கின்றனர், யாரோ ஒருவரை கொலை செய்கின்றனர், ஏதோ ஒரு காதலை கொலைக்களமாக மாற்றுகின்றனர். ஏதோ ஒரு கூட்டத்தில் அப்பாவிகளைக் கொல்ல வெடி வைக்கின்றனர், அந்தப் பற்றி எறியும் நெருப்பில் அரசியல் செய்கின்றனர், ஆட்சி நெருக்கடி செய்கின்றனர்.
* இப்படியான நெருக்கடியில் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும், இன்னொரு பலி கேட்கும் வன்மத்தை உருவாக்குகிறது, சாதிய அமைப்பு வலுப்பெறுகிறது, வாய்ச்சொல் வீரர்கள் போலி சாமியார்களாகவும், உடல் பலம், அமைப்புப் பலம் கொண்டவர்கள் ரௌடிகளாகவும் உருவாகின்றனர்.
* ஒவ்வொரு நிகழ்வும் வாக்குச் சாவடியில் விழும் வாக்குகளை மாற்றி அமைக்கிறது.
* மக்கள் எல்லோரும் தெளிவுப் பெற நல்ல கல்வி அவசியம். ஆனால் கல்வியின் திசை இங்கே மாற்றி அமைக்கப்படுகிறது, அடித்தட்டு மக்களுக்கு அதுவும் மறுக்கப்படுகிறது, படித்தவன் சுயநலவாதியாகவும், படிக்காதவன் உணர்ச்சியின் குவியலாகவும் மாறிப்போகின்றனர், இரண்டுமே ஒரு சமுதாயத்திற்கு நல்லதில்லை.
* இப்படிப்பட்ட கல்வித்தரம் அமைந்த சமுதாயத்தில் குற்றங்கள் உணர்ச்சி வேகத்தில் நடக்கின்றன, நீதி, பணம் ஆடும் ஆட்டத்தில் தள்ளாடி தள்ளாடி சில வேளைகளில் வெல்கிறது, பல நேரங்களில் குமுறிக் குமுறி சாகிறது.
* பயப்படும் மக்களைத் திசை திருப்பி, கேள்வி கேட்க துணியாவண்ணம் ஒரு நெருப்பை அவ்வப்போது கொளுத்திபோட்டால் போதும், உணர்ச்சி வசப்படுபவனைச் சாதி கொண்டு மதம் கொண்டு, இனம் கொண்டு கட்டிபோட்டால் போதும், படித்தவனுக்கு மேலும் வசதி, ஆதாயம், இல்லை ஒரு மிரட்டல் போதும்.
* திரைகாட்சியின் மாயையில் ஒரு பக்கமும், அச்சம் தரும் சமூக அமைப்பில் மறுபுறமும் இந்தத் தலைமுறைகள் தள்ளாடி கொண்டிருக்கிறது. சாதி மத, கட்சி அமைப்புகளில் பழைய தலைமுறைகள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கேள்விக் கேட்கும் திறன் இன்றி வருங்காலத் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
* யாரோ ஒரு சாமியார் கனவில், புதையல் இருக்கும் சேதி தெரிந்தது என்பதற்காக, விண்வெளியில் ஏவுகணை செலுத்தி சாதனை செய்யும் ஓர் அரசு, பொருட் செலவு செய்து புதையல் தேடுகிறது. நல்ல வாழ்க்கைச் செய்திகளை மட்டும் விட்டு விட்டு, மதங்களைக் கூட மூளைச்சலவைக்குதான் பயன்படுத்துகின்றனர்.
* இலவசம் என்று வருவதெல்லாம் மக்கள் பணமே, யாரும் அவர் பணத்தைத் தந்து எதையும் இலவசமாய்த் தரவில்லை என்ற உணர்வும் இல்லை, மக்கள் பணத்தை மக்களுக்காக என்று செலவு செய்து தரும் பொருட்களும் தரமானதாய் இல்லை.
* 2G, 3G என்று ஊழல் பட்டியல் படிப்பதோடு சில பத்திரிக்கைகளின் கடமை முடிந்து விடுகிறது.
* வேலை வெட்டி இல்லாமல் லுங்கியை மடித்துக் கொண்டு, காதல் செய்பவன், சாராயம் குடித்துக் கொண்டு, பெண்ணை இழிவுபடுத்திக் கானாப் பாடல் பாடிக்கொண்டு திரிபவன், ஒற்றை விரலில் பத்துப் பேரை சுழற்றி அடித்துத் துவசம் செய்து கொண்டு இருப்பவன் எல்லாம் பெரும் வீரன் என்றும், பொழுதுபோக்கு என்ற பெயரில் வன்முறையையும், விடலைபருவக் காதலை புனிதமெனவும் காட்டி பள்ளிக்கூடக் குழந்தைகளை, இளைஞர்களை வழி மாற்றி, திரைப்படமும் தன் சமூகக் கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.
* பகுத்தறிவு கொண்ட மனிதன் உண்மையில், சாதிக்காக, தன் முன்னேற்றத்தை சாய்த்துக் கொள்வதில்லை, மதத்துக்காகத் தன் மரணத்தை நிர்ணயிப்பதில்லை, எந்த ஓர் அரசியல் தலைவனும் ஒரு தொண்டனுக்காகத் தீக்குளித்ததில்லை.
* அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் சக மனிதனிடம் அன்பு காட்டியே வருகிறான், சாதி மதங்களைக் கடந்த ஒரு பிணைப்பில் இயைந்து வாழ்கிறான், இருந்தும் ஆய்ந்து அறியும் திறன் இல்லாமல், சக உயிரிடத்தில் அன்பு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வெறும் பொருட்களில் நிரம்பி விடும் ஒரு கலாசாரமாக, காட்சி மாயையில் மனம் நிரம்பி விடும் ஒரு சூதாக, வெறும் உணர்ச்சிக் கூப்பாட்டில் தணிந்து விடும் விடுதலையாக நீர்த்துப் போகிறது.
* இப்போதும், அந்த ஆப்பிள் மரம், அவனுடைய பொம்மைகளுக்காக அதன் கனிகளைத் தந்தது, பின் அவனுடைய வீட்டிற்காக, தன் கிளைகளைத் தந்தது, பின் அவன் சுற்றுலா செல்லும் கனவை நிறைவேற்ற, படகு செய்யத் தன் உடலினை தந்தது, கடைசியில் அவன் சாயத் தன் வேரினால் அவனைத் தாங்கியது என்ற பாடம் தான் பிள்ளைகளுக்குப் பாடத்திட்டத்தில் இருக்கிறது, ஒருநாளும் மரங்கள் இருக்க வேண்டிய அவசியத்தை, அவைகளில் வாழும் உயிர்களைப் பற்றி , அவைகளின் உணர்வுகளைப் பற்றி, எதையும் கேள்விக் கேட்டுத் தெளிய வேண்டும் என்ற அடிப்படையையும் நம் கல்விமுறை போதிப்பதேயில்லை.
* பெரும் பாடத்திட்ட சூழ்ச்சியில் நாம் பணம் செய்யும் எந்திரங்களாக, எல்லாவற்றையும் உணராமல் அசைப் போடும் மாடுகளாக, ஓட்டிற்குப் பின்னே, பிரியாணி ஆகும் ஆடுகளாகவே வாழ்கிறோம்.
காத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக!

Blogs I liked..



http://www.nisaptham.com/2014/01/blog-post_4.html

http://amudhamanna.blogspot.in

முரண்

Article from HINDU (8-Dec-13)

குற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்!

மு. அமுதா


வாழ்க்கைக்கு, சுதந்திரத்திற்கு ஆதாரமான எதையும் கேட்கவும், தெளிவுப்படுத்தி கொள்ளவும் நமக்கு நேரமில்லை. மாறாக இந்தச் சமுதாயம், நடிகையின் தொப்புளைப் பற்றிய கிசுகிசுப்பில் லயித்துக் கிடக்கும், திரைப்படம் வெளி வரவில்லை என்றால் பெரும் போராட்டம் நிகழ்த்தும், காந்தி ஜெயந்திக்குச் சாராயக் கடை திறந்தால் என்ன என்று விவாதிக்கும், வாங்கிய வரியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்தது என்று கேட்கத் தவறும், கேட்டாலும் சட்டங்கள் பாயும், சட்டம் படித்த வல்லுனர்களும் வாய்தா வாங்கிப் போராடிக் கொண்டிருப்பார்கள், சாதி மதம் எனப் பிளவுபட்டு, ஒற்றுமை இழக்கும், வளர்ச்சியை இழக்கும், நிலத் தரகர்களின் பிடியில் விவசாயியைக் கொல்லும், உள்ளூர் வியாபாரிகளைக் கொன்று விட்டு, சீனத்து வணிகம் வளர்க்கும், பிறகு சீனா, அருணாச்சலத்தை அளக்க பதற்ற நாடகம் செய்யும், தமிழர்களின் ஓட்டு கேட்கும், மறுபக்கம் ஆயுதம் தந்து அவர்களைக் கொல்லும், சாலை விதிகளைப் பற்றிய சட்டம் இயற்றும், சாராயக் கடைகளும் அதுவே நடத்தும், படித்தவனைக் கடினமாகப் பிழியும், அதிகாரி ஆக்கும், பதவி பெற்ற ஏதோ ஒரு ரௌடிக்கோ, ஊழல் செய்யும் ஒரு பெருசாளிக்கோ அவனைச் சேவகம் செய்யச் சொல்லும், மரம் வளர்க்கச் சொல்லும், மறுபக்கம் சுரங்கம் தோண்டி காடு அழிக்கும், வளங்கள் திருடும்.

I need Stories

Hindu Magazine

உளவியல் அறிஞரான சிக்மண்ட் ஃபிராய்ட் கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து ‘ஈடிபஸ்’கதையை வைத்தே மனிதனின் மனச் சிக்கலைக் காண்பித்தார். உலக அளவில் இன்றும் பேசப்படுகின்ற சிண்ட்ரல்லாவின் மனவியலை வர்ணிக்கும் கூறுகள் இன்றைய நவீன மனிதக் கூறுகளைக் காட்டுகின்றன. ஒருவேளை பிராய்ட், எரிக் எரிக்ஸன், ஆட்லர், யுங் போன்ற உளவியல் அறிஞர்கள், மரபார்ந்த நமது இந்தியக் கதை மரபுகளைக் கேட்டிருந்தால் மனித குணங்களை விவரிக்க இப்பாத்திரங்களின் பெயர்களைக்கூட அவர்கள் வைத்திருக்கக்கூடும். ஆனால், நமக்கோ எல்லாம் தேவையற்றவையாக மாறிவிட்டன.
கொடுத்தல், யார் கேட்டாலும் கொடுத்தல், எதைக் கேட்டாலும் கொடுத்தல், கொடுத்தலின் மூலமாகக் கிடைத்த தர்மங்களையெல்லாமும் தாரைவார்த்துக் கொடுத்தல் எனும் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றைக்கு நினைத்துப்பாருங்கள். இந்த நவீன உலகுக்கு கர்ணனின் கொடை ஏன் வேண்டாதது ஆகிவிட்டது என்று யோசித்துப்பாருங்கள். இந்த நவீன உலகம் ஏன் இவ்வளவு இரக்கமற்றுப்போய்விட்டது என்பதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும்.
அண்ணல் காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிவந்ததற்குக் காரணம், அவர் லண்டனில் படித்த பாரீஸ்டர் வக்கீல் படிப்பல்ல. தனது இளம்பிராயத்தில் கேட்ட ஹரிச்சந்திர புராணமும் தாய் - தந்தையர்களைக் காத்த சிரவணன் கதையும்தான். சத்ரபதி சிவாஜி வீர மகனாக உருவெடுத்ததற்குக் காரணம், சிறுபருவத்தில் அவருடைய அன்னை சொன்ன கதைகளே.
கதைகள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய படைப்புத் திறனுக்கு உயிர்கொடுக்கின்றன. உங்களுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போகலாம். கொஞ்சகொஞ்சமாக அறக்கூறுகள் யாவும் அழிந்துவரும் இவ்வுலகில், எல்லாம் அற்றுப்போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில், நிர்க்கதியான சூழலில் பற்றிக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பற்றுக்கோல் வேண்டும். அதற்காகவேனும் தயவுசெய்து கதைசொல்லிகளைத் தேடுங்கள்!
தேனுகா, மூத்த எழுத்தாளர், கலை விமர்சகர் 

ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும்

HIndu magazine
சில நாட்களுக்கு முன்னால் நான் படித்த, என் காதில் விழுந்த தகவல்கள் இவை: நமது வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 1,76,547. தொகை ரூ.31,000 கோடி. கடந்த 25 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கு மேல் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 61. தொகை ரூ.13,000 கோடி.
சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் சொத்து வரி ஒரு சதுர அடிக்கு ரூ. 4.30 சொத்து வரி இவ்வளவு அதிகமாக இருந்தாலும், அந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் ஏதும் கிடையாது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நேரில் சென்று பார்க்கவில்லை. சென்னை போட் கிளப் சாலையில் சொத்து வரி சதுர அடிக்கு ரூ. 4. அண்ணா நகரில் சதுர அடிக்கு ரூ. 1.25.
அண்ணா நகரில் இருக்கும் எனது சகோதரியின் வீட்டில் வேலை செய்யும் பெண் கூவத்துக்கு அருகில் இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறார். குடிசையின் பரப்பு ஒன்பதுக்கு எட்டு சதுர அடி. கழிப்பறை வசதி கிடையாது. வாடகை ரூ.3,000. சதுர அடிக்கு வாடகை ரூ. 40-க்கும் மேல். இணையத்தில் தேடினால், அண்ணா நகரில் நடுத்தரக் குடும்பத்தினருக்கான வீடுகள் மாதம் ரூ.20,000-த்துக்கு வாடகைக்குக் கிடைக் கின்றன. 1,000 சதுர அடி. இரண்டு படுக்கை அறைகளுடன். சதுர அடிக்கு வாடகை ரூ. 20.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி 10% உயர்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.18,000 கோடிக்கும் மேல். இந்த வருடம் மட்டும் 18% உயர்ந்திருக்கிறது. மொத்த செலவு ரூ. 34,000 கோடிக்கும் மேல். மாநில அரசு ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.70,000 கோடிக்குக் குறையாது. அரசுக்குப் பணத் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தத் தகவல்கள் நமக்குத் தெரிவிப்பது என்ன? வங்கி ஊழல்களில் இழந்த பணத்தில் 25%தான் மீட்க முடியும் என்று சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிடப் பெரிய ஊழல்களில் எந்தத் தொகையையும் மீட்க முடியாமலேயே போகலாம். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் நாடகம் ஆமையே ஆச்சரியப்படும் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக: ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் கடவுளைச் சந்திக்க 12 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சென்று விட்டார். வழக்குகள் இன்னும் தொடர்கின்றன.
ஊழல் நம் மீது நடத்தப்படும் மிகப் பெரிய வன்முறை என்பதில் நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அரசு பேரூழல் செய்பவர்களின் தரப்பில் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். ஆனால், நமது வட்டத்துக்கு வெளியே இயங்குபவர்கள் மீது நடக்கும் மறைமுகமான வன்முறைகளைப் பற்றி நமக்கு எந்தப் பிரக்ஞையும் கிடையாது. மாறாக, அரசு அவர்களுக்காகக் கொண்டுவரும் திட்டங்களைப் பற்றி நாம் தொடர்ந்து கடுமையாக விமரிசனம் செய்துவருகிறோம். பணத்துக்காக அரசு வீட்டுவரியை 50 பைசா உயர்த்தினால் புரட்சி வெடிக்கும் என்று பயமுறுத்துகிறோம். போட் கிளப்பில் வாழ்பவர்களுக்கு அண்ணா நகரில் இருப்பவர்களைப் பற்றிக் கவலை கிடையாது. அண்ணா நகரில் இருப்பவர்களுக்கு மாதவரத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. அருகில் இருக்கும் குடிசைகளில் வாடகை என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. ஆனால், வீட்டு வேலை செய்பவர் சம்பளம் அதிகம் கேட்டால் உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.
இந்திய மக்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல நிலைகளில், பல பரிமாணங்களில் இயங்குகின்றன. அரசு அதிக மாறுதல்களை விரும்புவதாகத் தெரியவில்லை. மிக்க வசதி படைத்தவர்க ளுக்கு அரசும் அரசு இயந்திரங்களும் மிகுந்த முனைப்போடு உதவி செய்கின்றன. மேல் நடுத்தர வகுப்பினர்களிடம் அரசுக்குப் பரிவு இருக்கிறது. ஊடகங்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. கீழ் நடுத்தர மக்கள் சார்பிலும் ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்கத் தயாராக இருக்கின்றன. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்களுக்கென்று தனியான அடையாளம் ஏதும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஊக்கத்தொகை, மிகை நேரக் கூலி போன்ற அதிக வருவாய்களை எதிர்பார்த்துக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இவர்க ளுக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மேற்கூறிய அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நமது மக்கள்தொகையில் 25% அல்லது 30% இருப்பார்கள்.
இவர்கள் எல்லோரும் இயங்குவது ஒரு தளத்தில் என்று வைத்துக்கொண்டால், மற்றொரு தளத்தில், பெரிய ஆதரவு ஏதும் இல்லாமல், அரசு மிகுந்த தயக்கத்தோடு தரும் சிறிய சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, அவற்றால் மகிழ்ச்சியைப் பெறலாம் என்ற கனவோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் நமது நாட்டின் பெரும் பகுதியினர்.
நமது தளத்துக்குள் உராய்வுகள் இருந்தாலும், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஏழைகளாகவே, அதிக எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால் நமக்கு ஆதாயம். அரசுக்கும் அதிகத் தொல்லைகள் இல்லை.
நம்மில் பலருக்கு - அரசு ஊழியர்கள் உட்பட - இந்தியாவில் அரசு நிர்ணயித்திருக்கும் சராசரி தினக்கூலி என்ன என்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கிராமங்களில் வேலை செய்யும் பயிற்சி பெறாத தொழிலாளி ஒருவரது சராசரித் தினக்கூலி 2012-ல் ரூ. 145. இது 2004-ல் ரூ. 70. எட்டு வருடங்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. தினக்கூலியாக வேலை செய்பவருக்கு மாதம் அதிகபட்சமாக 25 நாட்கள்தான் வேலை கிடைக்கும். எனவே, அவரது சராசரி மாதக் கூலி ரூ. 3,750.
இனி, அரசுக் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரை எடுத்துக் கொள்்வோம். 2004-ல் அவரது சம்பளம் சுமார் ரூ. 15,000. 2012-ல் குறைந்தது ரூ. 50,000. எட்டு வருடங்களில் மூன்று மடங்குக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அரசுக் கல்லூரி ஆசிரியர் தினக் கூலி வேலை செய்பவரைவிட 13 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். இது எங்கள் அறிவுக்குக் கொடுக்கும் விலை என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் உதாரணத்தைக் காட்டலாம். அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் ஆண்டுக்குச் சுமார் 15,000 டாலர்கள். அங்கு கல்லூரி ஆசிரியர்களின் (Assistant Professors) ஆண்டு சராசரி ஊதியம் 55,000 டாலர்கள். வித்தியாசம் நான்கு மடங்குக்கும் குறைவுதான். நியூயார்க்கில் துப்பரவுத் தொழிலாளரின் ஆண்டு வருமானம் ஆரம்பத்தில் 33,000 டாலர்கள். ஐந்து வருடங்களில் 70,000 டாலர்களாக உயர்கிறது. சென்னையில் துப்புரவுத் தொழிலாளரின் தினக்கூலி ரூ. 235.
அகவிலைப்படி ஆண்டுக்கு 18% உயர்த்தியிருப்பது போதாது என்று சொல்லும் எனது நண்பர்களில் பலர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் சோம்பேறிகளை உருவாக்கிவிட்டது என்று என்னுடன் வாதிடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மாறாமல் இருந்தால்தான் நமக்கு வசதி. நாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை!
பி.ஏ. கிருஷ்ணன், கட்டுரையாளர், எழுத்தாளர்.

Sugar - Medicine

Nandir Hindu :

முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற புகார்களுடன் மருத்துவர்களை அணுகினால், உடனடியாக சர்க்கரை நோய் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக, நாட்டில் சர்க்கரை நோய் தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. நல்லது. ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு ‘சர்க்கரை நோய்’இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் குணப்படுத்தும் மருந்து யாரிடம் உள்ளது? அலோபதி மருத்துவத் துறைதான், நோய்களின் பிரச்சாரத்தை உலகப் போர் நடத்துவதைப் போல் நடத்திக்கொண்டிருக்கிறது. சரி, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அலோபதியில் இருக்கிறதா? இல்லை என்பதுதான் அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்ள வேண்டிய விடை. அதுதான் உண்மையும்கூட.
இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் 1940, 1945, 1995, தனது அட்டவணை ஜெ பிரிவில் 51 நோய்களை வகைப்படுத்தியுள்ளது. ‘இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ மக்களுக்கு அளிக்கக் கூடாது’என்கிறது அச்சட்ட விதி. இந்த 51 நோய்களின் பட்டியலைப் பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்று புரிந்துவிடும். இந்தப் பட்டியலில் 14-வது நோயாக சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் சட்டம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இந்திய அரசின் பிரமாண்டமான கட்டமைப்பில் எவரும் இல்லை. மருத்துவம் என்பது ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த நோயைத் தீர்த்து, நோயாளியை முழு நலமுடைய மனிதராக வாழச் செய்ய வேண்டும். அந்தத் திறன் அலோபதிக்கு இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய் விஷயத்தில். சட்டப்படியும் நடைமுறைப்படியும் மருந்து இல்லாத நிலையில், எந்த மருத்துவராவது தம்மிடம் வரும் நோயாளியிடம், ‘எங்கள் முறையில் இதற்கு மருந்து இல்லை. ஆகவே, வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’என்று கூறுவதுண்டா? எவரேனும் இருந்தால், அவர் நேர்மையாளர். மாறாக, ‘சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்’என்றுதான் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்கிவிட்டு, இறுதியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, பரிதாபமான நிலையை அடைகிறார்கள் மக்கள். புண்கள் வந்தால் உறுப்புகளே நீக்கப்படுகின்றன.
சர்க்கரை ஒன்றும் புத்தம் புதிய நோய் அல்ல. பல காலமாக இருந்துவருவதுதான். சர்க்கரை நோயை நம்முடைய மரபு மருத்துவ முறைகள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்திலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சமீபமாகப் பரவலாகிவரும் தொடுசிகிச்சை முறையும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இவ்வளவு ஏன்? உணவுப் பழக்கத்தையும், சில வாழ்க்கை முறைகளையும் மாற்றினாலே போதும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த உண்மைகள் இப்போது மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால், பெரும் வணிக நோக்கம் இருக்கிறது.
சர்க்கரை நோயை மையமாக வைத்து எவ்வளவு பொருட்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்பதைச் சற்றே உற்றுப் பாருங்கள். மருந்து மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச் சத்துப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள், செருப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் என எல்லாமே வணிகமயம். இவ்வளவு பொருட்களும் சேர்ந்து, சர்க்கரை நோயைத் தீர்த்தால்கூடச் சகித்துக்கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் சேர்ந்து, அலோபதி மருத்துவர்கள் மொழியில் கூறுவதானால், ‘சர்க்கரையைக் கட்டுப்பாட்டில்’வைக்கின்றன.
இந்திய அரசின் சுகாதாரத் துறைக்கென என்னதான் கொள்கை இருக்கிறது என்று புரியவில்லை. ஒருபுறம் சட்டத்தில் ‘இந்த நோய்களுக்கு அலோபதியில் குணமளிக்கும், தடுக்கும் மருந்துகள் இல்லை’என்கிறது. மறுபுறம், அந்த நோய்களைத் தீர்க்கும் உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டி வைக்கிறது. மக்கள் நோயினால் நொந்து, சிகிச்சையினால் கடன்பட்டு, சொத்துகளை இழந்து, உறுப்புகளை இழந்து மாண்டுபோகட்டும் என்பதுதான் அதன் கொள்கையா?
பல கோடிகள் செலவிட்டு, நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும்போது, அந்த நோய்களை எந்த மருத்துவ முறைகளில் தீர்க்க முடியும் என்பதை ஏன் அரசு கூறுவதே இல்லை? என்ற கேள்வியைக் குடிமக்கள் கேட்க வேண்டும்.
சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டுவருகின்றனர். தமிழக அரசு 30+ விளம்பரங்களோடு கடமையை முடித்துக்கொண்டால், அதன் அறுவடையும் அலோபதி கருவூலங்களுக்குத்தான் சென்று சேரும். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சட்டப்படியும் மனித நேயப்படியும் மரபு மருத்துவ முறைகளை நெறிப்படுத்தி, சர்க்கரையை விரட்டி, மக்களைக் காக்க வேண்டும்.
செந்தமிழன், இயக்குநர். சர்க்கரை நோயை மையமாக வைத்து அவர் எடுக்கும் ‘இனிப்பு’ ஆவணப்படத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இதுதானா கல்வி?

Hindu Magazine : 


ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் பிளஸ் டூ சின்ட்ரோம் என்றொரு நோய் ஆட்டிப்படைத்துவருகிறது. எந்த ஊரில், எந்தப் பள்ளியில் படித்தாலும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் முகம் ஒன்றுபோல இறுகிப்போயிருக்கிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பதுபோல மாணவர்கள் இரவு, பகலாகப் படிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் இயல்பாகச் சாப்பிடுவதில்லை, உறங்குவதில்லை, வீட்டாருடன் பேசுவதில்லை, சிரிப்பதில்லை. தீவிரமான மனச்சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதன் விளைவு, மனச்சிதைவும் மீள முடியாத போதைப் பழக்கமும் தற்கொலைகளும் என்பதைப் பல்வேறு நாளிதழ் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இதுபற்றி ஒரு கல்வி அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், “சென்ற ஆண்டு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்ந்து எட்டரை லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ பரீட்சை எழுதினார்கள். இவர்களில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் பேர் நீங்கள் சொல்லும் பிளஸ் டூ சின்ட்ரோம் கொண்டவர்கள். மாணவர்கள் இப்படி நடந்துகொள்ளக் காரணம், எப்படியாவது மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் பணம் கொடுக்காமல் இடம் வாங்கிவிட வேண்டும் என்ற வெறி. இவர்கள் தனியார் பள்ளிகளில், டியூஷன்களில் இரண்டு லட்சம் வரை பணம் கட்டிப் படிக்கிறார்கள். இவர்கள் மண்டைக்குள் பாடத்தை எப்படியாவது திணித்து மதிப்பெண் வாங்க வைத்துவிடுகின்றன தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சிறப்பு வகுப்புகள், நெருக்கடிகள் கிடையாது.
ஆனால், இதற்கு மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் பள்ளி இறுதியாண்டு வந்தபோதும் அடிப்படைப் பாடங்களைக்கூடக் கற்காதவர்கள், அடுத்து என்ன படிக்கப்போகிறோம் என்று தெரியாதவர்கள், அறிவியல் சாதனங்கள் அதிகம் இல்லாத பள்ளியில் பயின்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மாணவர்கள். ஆகவே, நகர்ப்புற மாணவர்களை மட்டுமே மனதில் கொண்டு எதையும் மதிப்பிடாதீர்கள். இன்றுள்ள சூழலில் சிறுநகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிர்காலப் படிப்பு என்பது எட்டாக் கனி. மருத்துவம், பொறியியல், உயர் தொழில்நுட்பம் தவிர்த்து, மற்ற கலை அறிவியல் படிப்புகள் படித்தால் சரியான வேலை கிடைக்காது. வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியது அரசின் குற்றம். லட்சலட்சமாகப் பணம் கொடுத்தால் மட்டுமே நல்ல கல்வி கிடைக்கும் என்பது தவறான முன்னுதாரணம்’’ என்றார்.
உண்மைதான். பெட்ரோல் பங்குகளில் வாகனத்தின் மூடியைத் திறந்து குழாயைச் சொருகிக் கடகடவென பெட்ரோல் ஊற்றுவதைப் போல மாணவன் தலைக்குள் பாடங்களைக் கொட்டிவிடப்பார்க்கிறார்கள் ஆசிரியர்கள். மனப்பாடம் செய்யும் மாணவனே இங்கே அறிவாளி.
உயர் கல்வி பயில்வதற்கு ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் என்று அரசு நிறுவனங்களைக் குறிவைக்கும் நாம் ஆரம்பக் கல்விக்கு மட்டும் ஏன் தனியார் பள்ளிகளைத் தேர்வுசெய்கிறோம்?
பெரும்பான்மை பெற்றோர் இதற்குச் சொல்லும் காரணம், தனியார் பள்ளிகள் மாணவர்களை எப்படியாவது மதிப்பெண்கள் வாங்க வைத்துவிடும். அங்கே கண்டிப்பும் கட்டுப்பாடுகளும் மிகுதி.
அரசுப் பள்ளிகளின் மீது இந்த நம்பிக்கை ஏன் வர மறுக்கிறது? இவ்வளவுக்கும் பல அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். நல்லாசிரியர் பலர் அரசுப் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். என்றாலும், அரசுப் பள்ளி என்றாலே, பொதுப்புத்தியில் அது தரமற்ற கல்வி என்ற எண்ணமே இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.
அதற்காக எல்லா அரசுப் பள்ளிகளும் வெகு அற்புதமாகச் செயல்படுகின்றன என்று அர்த்தமில்லை. அரசுப் பள்ளிகளில் நிறைய பிரச்சினைகள், சிக்கல்கள் இருக்கின்றன. அதன் ஆசிரியர்களில் பலர் அதைச் சம்பளம் தரும் ஒரு வேலை என்று மட்டுமே நினைக்கிறார்கள். மாணவர் நலனில் அக்கறை காட்டுவதில்லை.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர்களின், தேர்ந்த கற்றுத்தருதலும் தொடர்ந்த ஊக்கப்படுத்துதலும் குறைவாக உள்ளன. இதுபோன்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாகக்கொண்டு, தனியார் பள்ளிகள் கல்வியை மிகப் பெரிய சந்தை வணிகமாக மாற்றிவிட்டிருக்கின்றன.
பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இது மோசமான மனநிலை. இன்னொரு பக்கம் பெற்றோர்களைப் பள்ளிவளாகத்தில் எதையும் கேட்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தடுமாறுகிறார்கள் மாணவர்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்களும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும் சொல்ல முடியாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதே நிஜம்.
பணம் இருந்தால் மட்டுமே தரமான கல்வி, மேற்படிப்பு. இல்லாதவர்கள் எப்படியோ போகட்டும் என ஒதுக்கிவிடுவது மாபெரும் சமூக அநீதி. இந்தப் பிரச்சினையின் புறவடிவம்தான் பிளஸ் டூ மாணவர்களின் நெருக்கடி நிலை.
இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் அவலம் இல்லை. உலகெங்கும் கல்விதான் இன்று முக்கிய வணிகப் பொருள். இந்தச் சந்தை பெற்றோர்களை மூச்சுமுட்டச் செய்கிறது. ஆசிரியர்கள் முதுகில் பணிச்சுமையை ஏற்றி அவர்களை ஒடுக்குகிறது. மாணவர்களைச் சிறைக் கைதிகளைப் போல நடத்துகிறது. கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த இழிநிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமை மட்டுமில்லை. நம் அனைவரின் பொறுப்புணர்வும் அக்கறையும் என்றே சொல்வேன்!
எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்,

கடவுள்' துகளுக்கு நன்றி

Hindu Magazine

அனைவருக்கும் அறிமுகமாகிவிட்ட 'கடவுள் துகள்' இப்போது நோபல் பரிசைக்கூட பெற்றுத்தரக்கூடிய 'அதிர்ஷ்டக்கார'த் துகளாகிவிட்டது. 'பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள எண்ணற்ற துகள்களின் நிறை, பன்மைத்தன்மை போன்றவற்றுக்குக் காரணம், கண்ணுக்குத் தெரியாத பெருங்கடலான ஆற்றல் எங்கும் நிறைந்திருப்பதுதான்' என்று கூறிய இரு இயற்பியலாளர்களுக்குத்தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் டபிள்யு. ஹிக்ஸ் (84), பெல்ஜியத்தில் உள்ள லிபர் டி பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபிரான்ஸ்வா ஆங்லெர் (80) ஆகியோர் நோபல் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான சுமார் ஏழரைக் கோடி ரூபாயை இவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள். நோபல் விருதும் விருதுத் தொகையும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும்.
'ஹிக்ஸ் போஸான்'என்று இதைப் பற்றி முதலில் கூறிய ஹிக்ஸ் பெயரால் இந்தத் துகள் அழைக்கப்பட்டாலும் ஊடகங்களால் கடவுள் துகள் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. கடவுள் துகள் குறித்த கருதுகோள் 1964-லேயே உருவாகிவிட்டது. ஆனால், ஒரு தலைமுறை விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து, கடந்த ஆண்டில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுடித்துவிட்டனர். சுவிட்சர்லாந்தில் உள்ள 'செர்ன்'ஆய்வகத்தில் துகள் தாக்குவிப்பான்களில் கோடிக்கணக்கான முறை அணுத் துகள்களை மோதவிட்டுப் பார்த்ததில் ஒருவழியாகக் கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸானின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது.
அணுவின் அமைப்பைப் பற்றி 'செர்ன்'அறிவியலாளர்கள் உருவாக்கிய வடிவம்தான் படித்தர வடிவம் (Standard Model). இந்த 'படித்தர வடிவம்'நம் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களையும் அதற்கு ஆதாரமான விசைகளையும் (ஈர்ப்புவிசையைத் தவிர) அவற்றுக்கு இடையேயான தொடர்பையும் வரையறுத்தாலும் அது முழுமையடையத் தேவையான கடைசிக் கூறு இந்த ஹிக்ஸ் போஸான்தான். இந்தப் 'படித்தர வடிவ'த்தைப் பொறுத்தவரை, பிரபஞ்சப் பாகுபோல் செயல்படும் ஆற்றலால் இந்தப் பிரபஞ்சமே நிரம்பியிருக்கிறது. அதன் ஊடாகச் செல்லும் துகள்களுக்கு அந்த ஆற்றல் நிறையைக் கொடுக்கிறது. இந்த ஆற்றல் புலம்தான் 'ஹிக்ஸ் புலம்'. காந்தத்தைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதைப் போலத்தான் ஹிக்ஸ் போஸானைச் சார்ந்து 'ஹிக்ஸ் புலம்' விரவியிருக்கிறது. ஹிக்ஸ் புலம் இல்லையென்றால், எலெக்ட்ரான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் ஒளிவேகத்தில் சென்று ஒன்றையொன்று இறுக்கிக்கொள்ளும். அப்புறம் அணுக்களும் இருக்காது, நாமும் இருக்க மாட்டோம்.
இந்தப் பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, எழில்மிகு இயற்கை விதிகளுக்கு உள்பட்டு இயங்குகிறது என்பதை ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த எழிலில் காணப்படும் குறைகளும் இடைவெளிகளும்தான் எல்லாவற்றையும் (நாம் உட்பட) விநோதமானவையாகத் தோன்றச் செய்கின்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய ஆற்றலைப் போருக்குத் தேவைப்படும் அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதிலிருந்து திசைதிருப்பி இயற்கையை ஆராயத் தலைப்பட்டதால்தான் மேற்குறிப்பிட்ட பார்வை உருவாகியது. பேரண்டத்தை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்ட அவர்களின் ஆய்வின் விளைவுதான் ஹிக்ஸ் போஸான்.
ஹிக்ஸ் போஸான் என்பது இயற்கையின் சீர்மையுடன் தொடர்புடையது. எல்லாவற்றிலும் இயற்கை ஒரு சீர்மையையும் ஒழுங்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படை விசைகள் யாவுமே, இயற்கையானது எல்லாவற்றிலும் சீர்மையையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முயல்வதால்தான் என்று 1954-ல் ஆராய்ச்சியாளர்கள் சென் நிங் யாங், ராபர்ட் எல். மில்ஸ் என்போர் அறிவித்தனர். அவர்கள் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் விளைவாகவும் ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பைக் கருதலாம்.
1964-ல் மூன்று வெவ்வேறு இயற்பியல் அறிஞர்கள் ஹிக்ஸ் துகள் குறித்து வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இது குறித்து முதலில் பதிப்பித்தவர்கள் டாக்டர் ஆங்லெரும் அவருடைய சகா ராபர்ட் பிரௌட்டும்தான். ராபர்ட் பிரௌட் 2011-ல் இறந்துவிட்டார். ஆராய்ச்சியில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு என்றாலும், இறந்தவர்களுக்கு விருது தருவது மரபு இல்லை என்பதால், அவருக்கு விருது தர மாட்டாது.
டாக்டர் ஆங்லெர் பெல்ஜியம் நாட்டின் எட்டர்பீக் நகரில் 1932-ல் பிறந்தார். பொறியியல், இயற்பியல் படித்தார். 1959-ல் பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது டாக்டர் பிரௌட்டுடன் சேர்ந்துகொண்டார். ஆங்லெர் பெல்ஜியத்துக்குத் திரும்பியபோது டாக்டர் பிரௌட் அவருடன் சென்றார். இருவரும் இந்தக் கோட்பாடு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோதுதான் இங்கிலாந்து நாட்டின் நியூகேசலைச் சேர்ந்த டாக்டர் ஹிக்ஸ் என்ற இளைஞரும் இந்தத் துகள் குறித்துத் தன்னுடைய பாணியில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார்.
ஹிக்ஸ் அனுப்பிய ஆய்வறிக்கையை செர்னில் உள்ள 'பிசிக்ஸ் லெட்டர்ஸ்' பிரசுரிக்க ஏற்க மறுத்தது. அந்த அறிக்கையை அவரே திருத்தி அதன் போட்டியாளரான 'பிசிகல் ரெவ்யூ லெட்டர்ஸ்' நிறுவனத்துக்கு அனுப்பினார். அந்த அறிக்கையின் கடைசிப் பகுதியில் அடிக்குறிப்பாக, புதிய துகள் குறித்தது இந்த ஆய்வு என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுதான் ஹிக்ஸ் போஸான் என்று இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்ட கடவுள் துகள். டாக்டர் ஆங்லெர், பிரௌட் ஆகியோரின் ஆய்வுகளையும் குறிப்பிட்டே தீர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்க ஏற்கப்பட்டது.
இதனிடையே லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாம் கிப்பிள், ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் ஹேஜன், பிரௌன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெரால்ட் குரால்நிக் என்ற மூன்று இயற்பியலாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை அறிக்கையாகத் தயாரித்துவந்தனர். அவர்கள் அதைப் பிரசுரத்துக்காக அனுப்ப முற்பட்டபோது தபால்துறையினர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். எனவே, ஹிக்ஸ், ஆங்லெர் –பிரௌட் ஜோடி தயாரித்த இரண்டு அறிக்கைகள் மட்டுமே பிரசுரத்துக்கு வந்தன. அதிலிருந்தே யார் முதலில் ஆய்வு செய்தது, யார் முதலில் கண்டுபிடித்தது என்று அவர்களுடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் வட்டத்தில் பெருத்த சர்ச்சை நடந்துகொண்டேயிருக்கிறது.
கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸான் குறித்து ஜூலை 4-ம் தேதி இறுதியாக அறிவித்ததை அடுத்து சர்ச்சைகள் ஓய்ந்தன. அன்றுதான் ஹிக்ஸும் ஆங்லெரும் முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர்.
நோபல் விருது கிடைத்த செய்தியை நிருபர்கள் எங்க்லெர்ட்டிடம் கூறி வாழ்த்துத் தெரிவித்தனர். அவரும் நகைச்சுவையாக, 'இது வருத்தத்துக்குரிய செய்தியல்ல என்றே நீங்களும் நினைத்திருப்பீர்கள்' என்றார்.
சுவீடன் நாட்டு ராயல் அறிவியல் அகாதெமி நிர்வாகிகளால் ஹிக்ஸைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. “வரும் செவ்வாய்க்கிழமை நான் ஊரிலேயே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுத்தான் எங்கோ போனாராம். இயற்பியலில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்தாலும் கைபேசியையும் கணினியையும் அவர் பயன்படுத்தவே மாட்டாராம் என்கிறார் அவருடைய நண்பரும் மற்றொரு இயற்பியல் அறிஞருமான ஆலன் வாக்கர்.
ஹிக்ஸ் மிகவும் எளிமையானவர். அவர் ஆய்வுக்கு வருவதும் ஆய்வுக்கூடத்தைவிட்டுப் போவதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு விருது கிடைக்கும் என்று மோப்பம் பிடித்து, பேட்டி வாங்கிவிட ஒரு நிருபர் எப்படியோ அவருடைய வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். ஒரு ஈயைப் பிடித்து அவருடைய காதில் போட்டு வெளியே அனுப்பிவிட்டாராம் ஹிக்ஸ். ஆனால், எடின்பர்க் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். அடிப்படை அறிவியலுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் இது போன்ற நுண் ஆராய்ச்சிகளுக்குள்ள முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்தும் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹிக்ஸ் துகள் குறித்த ஆய்வை ஆயிரக் கணக்கான அணுத்துகள் இயற்பியலாளர்கள் செர்ன் நகரில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆண்டுக் கணக்காக மேற்கொண்டுவந்தனர். 2012 ஜூலை 4-ம் தேதி இறுதியாக ஹிக்ஸின் கண்டுபிடிப்பை உறுதிசெய்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்கான நோபல் விருதின் பெருமையில் செர்ன் இயற்பியலாளர்களுக்கும் பங்கு இருக்கிறது. செர்ன் கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல குழுக்களில் ஒன்றின் தலைவரான பேபியோலா கியானட்டி என்பவர், இது மிகவும் பெருமிதத்தையும் திருப்தியையும் தந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
(எங்கும் நிறை பரப்பிரம்மம், யாதுமாகி நின்றது, எங்கெங்கு காணினும் சக்தி என்றெல்லாம் வெவ்வேறு மகனீயர்களால் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் இந்தத் துகளுக்குப் பொருந்துகிறது. அதனாலேயே இதைக் கடவுள் துகள் என்று பெயரிட்டுவிடவில்லை. இந்தக் கூத்தைச் செய்தது லியோன் லெடர்மேன் என்பவர். பெர்மிலேப் என்பதன் முன்னாள் இயக்குநர். டிக் தெரசி என்பவருடன் சேர்ந்து இந்தத் துகள் குறித்து அவர் புத்தகம் எழுதினார். “இதுவென்ன சனீஸ்வரன் துகள்” என்பதுபோல் எழுதவந்து, வார்த்தைச் சிக்கனம் கருதி – “ஈஸ்வரன் துகள்” என்பதுபோல எழுதிவிட்டார். அதாவது, “கடவுள் படைத்த கண்றாவி துகள்” என்று எழுதப் புகுந்து “கடவுள் துகள்” என்று கைதவறி எழுதி, திருத்தச் சோம்பல்பட்டு அப்படியே அச்சாகியதுதான் இந்தப் பட்டப்பெயர். பத்திரிகையாளர்கள் எப்போதுமே நல்லதை விட்டுவிட்டு, பஞ்ச் வசனங்களையே தேடுகிறவர்கள் என்பதால், இந்தப் பெயரே அவர்களுக்குப் பிடித்துவிட, கடவுள் துகள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.)
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

WAR

ஜார்ஜ் க்ளெமாசோ, “போர் என்பது வெற்றியில் முடியும் பேரழிவுகளின் தொடர்ச்சி” என்பார். நவீன உள்நாட்டுப் போர்கள் பேரழிவுகளில் முடியும் குழப்பங்களின் தொடர்ச்சி.

பாரம்பரிய மருத்துவம்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தன்னுடைய ‘மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்’ கட்டுரையில் (‘தி இந்து’அக்.29) நவீன மருத்துவத் துறையின் சில பக்கங்களை வாசகர்களுக்குச் சொல்லி, பாரம்பரிய மருந்துகள் இன்றைய அறிவியலின் கேள்விகளுக்குப் பதிலளிக்காதவை என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை, தவறான தரவுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறார்.
நவீன மருந்துகளின் மகத்துவத்தையும் நம் மக்கள் நலவாழ்வுக்கு அவற்றின் பங்களிப்பையும் ஒருபோதும் யாராலும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. தொற்றுநோய்க் கூட்டத்தைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்தியதிலும் சரி, அவசர காலச் சிகிச்சையில் அதன் முக்கியத்துவமும் சரி அளப்பரியன. அதேசமயம், பாரம்பரிய மருத்துவ அறிவியலும் அதன் புரிதலும் இதுவரை நம்மை, நம் நலவாழ்வைக் காத்துவந்தன என்பதை மறந்து, ஏதோ பாரம்பரிய மருத்துவம் ‘குறளி வித்தை’என்ற ரீதியில் எழுதுவது, ஏகோபித்த அளவில் சித்தமருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கும்.
நோய்கள் எல்லாம் கர்மவினையினால், அமானுஷ்ய சக்தியினால் ஏற்படுகின்றன என கிரேக்கம் உள்ளிட்ட உலகின் முன்னோடிச் சமூகங்கள் பேசிவந்த காலத்திலேயே, நோய்களுக்கு எந்தக் கர்மவினையும், பேய் பிசாசும் காரணமல்ல; உடலில் மாறுபாடு அடைந்துள்ள முக்குற்றங்களாலான வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றும்தான் காரணம் என்றார் வள்ளுவர் (‘மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’ - திருக்குறள் 941).
பஞ்ச பூதங்களான மண், நீர், காற்று, தீ, ஆகாயத்தின் கூட்டுறவில், இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு ஆகிய ஆறு சுவைகள் தோன்றி, அந்த ஆறு சுவைகளால் ஆன உணவைச் சாப்பிடும்போது, சாப்பிடும் சுவைக்கு ஏற்றபடி, மூன்று குற்றங்களும் மாறுகின்றன என்ற புரிதலில்தான் சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் இன்ன பிற இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளும் இயங்குகின்றன. இது ஒரு பண்டைய புரிதல். தெளிவான ஓர் அறிவியல். தற்கால அறிவியலின் தர்க்கவாதப்படி துல்லியமானது (ப்ரேசிஸ்டு), பாரபட்சமற்றது (டிஸ்பாஷனேட்), தர்க்கரீதியிலானது (ரேஷனால்), தேவைப்படும் விளைவை எப்போதும் தரக்கூடியது (ரீபுரொடியூசபில் கான்டெக்ஸ்ட்).
பல காலம் இந்தப் புரிதலை அறிவியலாக ஏற்றுக்கொள்ள நவீன அறிவியலால் முடியவில்லை. ஆனால், வெகு சமீபத்தில் தன் ஆய்வுக் கண்களை அகலமாக விரித்து, சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் சீன மருத்துவமும் சொல்லிவரும் ‘பிரக்ருதி’(வாத பித்த கப உடல்வாகுகள்) சரிதான் என்றும், ஒவ்வோர் உடலுக்கேற்ற மருந்தையும் படைத்தாக வேண்டும் என்றும் நவீன மருத்துவ உலகின் மரபணு மருந்தறிவியல் (ஜினோஃபார்மசூட்டிக்ஸ்) துறை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அந்த மரபணுவியல் (ஜினோமிக்ஸ்) அடிப்படையில், ஏதாவது புது மருந்து அஸ்வகந்தாவில் வந்திருக்கிறதா என அறியாமையில் கேட்ட கட்டுரை ஆசிரியருக்கு, வெகு சமீபத்தில் அஸ்வகந்தாவுக்குத் தடுப்பு மருந்துக்கான துணை மருந்துக்கான (நியூ வேக்சின் அட்ஜுவண்ட்) அமெரிக்கக் காப்புரிமைகூட வழங்கப்பட்டிருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்வகந்தா எந்த அளவில் வேலை செய்யும், எவ்வளவு சரியான மருந்து எனச் சொல்லும் 697 ஆய்வுக் கட்டுரைகள் இருப்பதாவது அவருக்குத் தெரியுமா?
சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் எல்லா வல்லுநர்களுக்கும் பதில் சொல்லும்படியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற பிம்பத்தைக் கட்டுரையாசிரியர் எழுப்ப முயல்வதும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் ‘ஆயுஷ்’ துறைக்குக் கீழ் இயங்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி ஆணையங்கள் தத்தம் மருத்துவத் துறையின் மருந்துகளுக்கான தர நிர்ணயங்களை இன்றைய அறிவியல் கூறுகளின்படி நிர்ணயித்து, சித்த மருத்துவ மருந்தறிவியல் நூல், ஆயுர்வேத மருத்துவ மருந்தறிவியல் நூல், யுனானி மருத்துவ மருந்தறிவியல் நூல் ஆகிய நூல்களைக் கொண்டுவந்து, மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டையும், மருந்துத் தயாரிப்பின் தர மேம்பாட்டையும் கொண்டுவந்திருக்கின்றன.
சித்த, ஆயுர்வேத மருந்துகள் வாதத்தைக் குறைக்கக் கூடியவையா, வலி நிவாரண வழிமுறையா (காக்ஸ்-2 இன்ஹிபிட்டர்) என்ற ரீதியிலான ‘இரட்டை ஆய்வுகள்’ இந்தியாவெங்கும் நடைபெற்றுவருகின்றன. புற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று கண்டறியப்பட்ட மஞ்சளும் வெண்கொடிவேலியும் நவீன மருத்துவப் புரிதல் அடிப்படையிலான ‘பி-53’ மரபணு வெளிப்பாட்டில் (பி-53 ஜீன் எக்ஸ்பிரெஷன்) எவ்விதம் பணிபுரியும் என்பதும், தீர்மானிக்கப்பட்ட செல் மரணத்தை (அப்போப்டோஸிஸ்) எவ்விதத்தில் ஊக்குவிக்கும் என்பதையும் கண்டறிந்து, உயர் மதிப்பீட்டுப் பன்னாட்டு மருத்துவ ஏடுகள் வெளியிட்டு வெகு காலம் ஆயிற்று.
சமீபத்தில், ஒட்டுமொத்தத் தமிழகமே பயந்துபோன சிக்குன் குனியாவையும் டெங்குவையும் நிலவேம்புக் குடிநீர் கட்டுப்படுத்தியதையும் அடுத்தகட்டமாக நிலவேம்பின் ஆண்ட்ரொக்ராஃபைனும் பானிகுலேட்டும் எப்படி வைரஸைக் கட்டுப்படுத்துகின்றன என்ற ஆய்வு தொடங்கியதையும் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் அறியும்.
கேலன் சொன்னதையும் கலிலியோ சொன்னதையும் மறுத்துப் பின்னூட்டம் தரும் ஆய்வுகள்தாம் மேற்கத்திய மருத்துவ வளர்ச்சிக்கு வித்து என்று வாதாடும் கட்டுரையாசிரியர், “இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது?” என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, “கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா” என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி; அறிவியல்தான் அடித்தளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பாரா?
அன்று மதச் சித்தாந்தத்துக்குள் மாட்டிக்கொள்ள மறுத்த நியூட்டனும், ‘நட்ட கல்லும் பேசுமோ?’ என்ற சிவவாக்கியரும் ஒரே புள்ளியில்தான் அறிவியலைப் பார்த்தனர். மேற்கில் நியூட்டனுக்கும் டார்வினுக்கும் அவர்தம் அறிவியலுக்கும் கிடைத்த அங்கீகாரம், அதே தேடலை வேறோர் அறிவியல் புரிதலுடன் இன்னும் பல நூறு ஆண்டுகள் முன்னரே சொன்ன ஆசிவகக் கணியனுக்கோ வள்ளுவனுக்கோ சிவவாக்கியருக்கோ கிடைக்கவில்லை. பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான். கூடவே, ‘தான் மட்டும்தான்’, ‘நானே கடவுள்’, ‘பழசு புரட்டு எனும் பார்வை’, ‘காப்புரிமை’ என்ற கட்டமைப்புக்குள் சிக்கியுள்ள மருத்துவ உலகம்.
ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல், இன்னும் தினசரி காலையில் ஏராளமாய் மருத்துவமனையின் வாசலில் குத்தவைத்துக் காத்திருக்கும் நம் ஊர் விளிம்பு நிலை சாமானியர்களுக்கும் நலவாழ்வைத் தருவதற்கு, காய்த்தல் உவத்தல் இல்லாத பார்வையில் ஒருங்கிணைந்த ஆய்வாலும் சிகிச்சையாலும் மட்டும்தான் முடியும்!
- கு.சிவராமன், மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர்

மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்


 Hindu :

சுஷில் குமார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.) என்னுடன் வேலை பார்த்தவர். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார். ராம்தேவ் சொல்லாதது, சில சமயம் சுரைக்காய் சாறு விஷமாக ஆகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் நண்பர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது. அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவ முறைகளின் மீது எவ்வளவு மாளாத, அறிவுபூர்வமற்ற பற்று கொண்டுள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது.
நான் இவ்வாறு சொல்வதால், பழைய மருத்துவ முறைகளையோ அவை பரிந்துரைக்கும் மருந்துகளையோ முழுவதுமாக நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. நமது பாரம்பரிய மருந்துகள், மருத்துவ முறைகள் சிறந்தவை. அதேசமயம், அவற்றால் தீதற்ற நன்மை மட்டுமே விளையும் என்ற முன்முடிவோடு அவற்றை அணுகுவது அறிவுபூர்வமான செயலாகாது. நமது மூதாதையர்கள் தந்தவை என்பதால் அவை கடவுளர் நிலையினை அடைந்துவிட்டன, அவற்றைக் கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது என்று கருதுவது அபாயகரமானது. மேற்கத்திய மருத்துவ முறையின்படி, ஒரு மருந்து மக்களைச் சென்றடைவதற்கு முன்னால் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனவோ அதே சோதனைகளுக்கு இந்திய மருத்துவ முறைப்படி பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
மேற்கத்திய மருத்துவ முறை என்றால் என்ன?
மேற்கத்திய மருத்துவ முறைகளும் மருந்துகளும் அறிவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல் அணுகுமுறைஎன்றால் என்ன என்பதை எனக்கு இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரான நர்லீகரைச் சந்தித்தபோது தெளிவாக விளக்கினார். கோட்பாடு, சோதனை, கண்டறிதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு இந்த அணுகுமுறை. இது படைப்பின் முழு ரகசியங்களையும் நமக்குக் காட்டும் திசையை நோக்கிச் செல்லும், முடிவே இல்லாத சுழற்படிக்கட்டு போன்றது. பயணத்தின்போது இடர்களும் சறுக்கல்களும் ஏற்படலாம். இந்தப் பாதை முழுவதும், தவறான சோதனைகள், பிழையான கண்டறிதல்கள் போன்றவற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்புக்கொள்பவர்களின் முதல் வரிசையில் விஞ்ஞானிகள் இருப்பார்கள்.
உதாரணமாக, ரத்தம் உடலினுள் கடல் நீரைப் போல விரிவதும் சுருங்குவதுமாக இருக்கும் என்று மேற்கில் நினைத்த காலம் ஒன்று இருந்தது.முன்னோடிகளில் ஒருவரான கேலன் அவ்வாறுதான் நினைத்தார். கல்லீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது, அதைத் திசுக்கள் உண்கின்றன என்று அவர் சொன்னார். ரத்த ஓட்டம் என்றால் என்ன என்பதை முதலில் உணர்ந்தவர் இபின் அன் நஃபீஸ் என்ற பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய விஞ்ஞானி. ஆனால், பல சோதனைகள் செய்து ரத்தம் எவ்வாறு உடலில் ஓடுகிறது என்பதை நமக்குக் காட்டியவர் ஹார்வி. கேலன் சொன்னதெல்லாம் சரி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தச் சுதந்திரம் அவர்களுக்கு இருந்ததால்தான் மேற்கத்திய அறிவியலும் மருத்துவமும் முன்னேற முடிந்தது.
வரலாற்றைப் புதைக்க முடியாது
மேற்கத்திய மருந்துகளைப் பற்றிக் குறை கூறுபவர்கள், அதனால் உலகுக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். பென்சிலின் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், இன்று உலகில் இருப்பவர்களில் 75% உயிரோடு இருக்க மாட்டார்கள். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள்காலம் சுமார் 22 வயதுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று சுமார் 66 வயது என்றால் அதற்கு முக்கியமான காரணம், மேற்கத்திய மருந்துகள். அம்மையும் ப்ளேக்கும் போலியோவும் முழுவதுமாக மறைந்துவிட்டன. காலரா, காசநோய் என்றாலே மரணம்தான் என்ற நிலை மாறிப் பல நாட்கள் ஆகிவிட்டன. தலைவலிக்கு உடனே நிவாரணம் ஆஸ்பிரினும் பாரஸடமாலும் தருகின்றன. வலியே தெரியாமல் அறுவைச் சிகிச்சை நடக்கிறது. இன்சுலின், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பேருதவிசெய்கிறது. மனநோயாளிகளுக்கு தோரஸைன் ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கர்ப்பத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது பெண் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.
இந்த வெற்றிகளுக்குக் காரணம், மேற்கத்திய மருந்துகள் கடும் சோதனைகளுக்குப் பிறகே மக்களைச் சென்றடைகின்றன என்பதுதான். ஒரு புது மருந்து, கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சந்தையை அடைவதற்கு 12 ஆண்டுகள் எடுக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் 5,000-ல் ஒன்றே எல்லாச் சோதனைகளையும் கடந்து சந்தையை அடைகிறது. அடைந்த மருந்துகளும் சில சமயங்களில் திரும்பப் பெறப்பட்டு மறுசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பெரு நிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்களையும் மீறி உயிர் காப்பாற்றும் மருந்துகள் பல மக்களைச் சென்றடைந்திருக்கின்றன.
இத்தகைய சோதனைகளைப் பாரம்பரிய மருந்துகள் கடந்துவந்திருக்கின்றனவா என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதில். அஸ்வகந்தா மூலிகையின் பயன்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்துவிட்டன. ஆனால், இதுவரை உருப்படியான ஒரு மருந்துகூட வரவில்லை. மேற்கத்திய வழிமுறைகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும், எங்களுக்கு என்று தனி வழிமுறை இருக்கிறதே என்று ஓர் ஆயுர்வேத மருத்துவர் கேட்கலாம். தவறேயில்லை. ஆனால், எந்த வழிமுறை இருந்தாலும் அது வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏன் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்குச் சரியான பதில் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். சதி, சூழ்ச்சி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது.
இது நாட்டுப் பற்று சார்ந்ததல்ல. மனித உயிர் சார்ந்தது. உடல்நலம் சார்ந்தது.
பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர்


இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு

From Hindu Magazine
தாகூர் “இந்தியாவில் அனைத்துத் துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மை” என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங்கில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென்னும் பொருளாதார வல்லுநர் ழான் டிரீஸும். பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் “கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றுதான் சொல்கிறார்.
அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியும். தனியார் பள்ளிகளின் குறைபாடுகளோ சரிசெய்ய இயலாதவை. தனியாரிடம் கல்வி என்பது பண்டம். பொருளின் தரத்தை, சந்தையில் போட்டியே தீர்மானிக்கிறது. கல்வி வணிகப் போட்டியின் தன்மையே வேறு. சந்தை விதிகளும்கூட கல்வி என்னும் பண்டத்துக்குப் பொருந்தாது. எனவே, தனியாரால் தரமான கல்வியைத் தர முடியாது. ஆனால், அரசாங்கம் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது.
புதிய திட்டம்
பொதுப்பள்ளி முறையில் உள்ள குறைகளைக் களைந்து வலுப்படுத்தாமல் நட்டாற்றில் விட்டுவிட்ட அரசு, இப்போது தன் பணத்தில் ஒரு தனியார்மயக் கல்வித் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதுதான் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்படவுள்ள (பிபிபி) பள்ளிக்கூடத் திட்டம். கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகள் என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்தப் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. கல்வி முறை, பயிற்றுமொழி ஆங்கிலம் என்கிறது அரசு.
இதில், 40% மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கும். 60% மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தன் விருப்பம்போல் சேர்த்துக்கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேல் கட்டணம் உண்டு. 60 விழுக்காடு மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம், இதர பணி நிலைகள் எல்லாம் தனியார் விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். பள்ளியைப் பள்ளிசாரா பணிக்கும் பயன்படுத்தலாம். மத்திய அரசின் மானியம் 10 ஆண்டுகள் மட்டுமே.
இப்போதைய நிலையில், மாநில அரசு களின் பணி, நிலம் ஒதுக்குதல் அல்லது ஏற்கெனவே இருக்கும் பள்ளியை ஒப்படைத்தல் மட்டுமே. பள்ளியின் முழுக் கட்டுப்பாடு, பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். நாடு முழுவதும் 3,162 பள்ளிகள் இப்படித் தொடங்கப்பட உள்ளன (தமிழ்நாட்டில் 355).
தனியார் தங்கள் இஷ்டம்போல் பள்ளிக்குப் பெயர் வைத்துக்கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதுவே அரசு-தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளைப் பற்றிய சுருக்கம்.
பாதிப்புகள் என்ன?
இதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் குறிப்பு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அவை: 1. தனியார் துறை என்பது எல்லா விதத்திலும் பொதுத்துறையைவிட மேம்பட்டது என்பதை அரசே இத்திட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்கிறது. 2. அரசுப் பள்ளி முறையைவிட, தனியார் கல்விமுறையே சிறந்தது என அரசே முதல்முறையாக ஒப்புக்கொண்ட திட்டம் இது. 3. அனை வருக்கும் சமமான தரமான கல்வி தரப்படும் என்ற அரசியல் சாசனச் சட்ட விதி இதன் மூலம் அப்பட்டமாக மீறப்படுகிறது. 4. கல்வியின் நோக்கம், தேசத்தையும் சமூகத்தையும் ஆரோக்கியமானதாகக் கட்டமைக்கும் செயல்பாடு என்ற அரசியல் சாசனமும் கைவிடப்பட்டிருக்கிறது. 5. உலகில் எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் அதிகமாக உள்ளது. அதே சமயம், எங்கெல்லாம் தனியாரிடம் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் குறைவாகவே உள்ளது. 6. இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறலாம் என்பது, இந்திய அரசின் அடிப்படைக் கல்விக் கொள்கைக்கும் ஆவணங்களுக்கும் எதிரானது. காரணம், கல்வி ஒரு வணிகப் பொருள் என எங்கும் சொல்லப்படவில்லை. 7. இத்திட்டமே லாபம் ஈட்டும் துறைகளுக்கானது. லாபம் வராத துறைகளுக்கு இவற்றைப் பொருத்துவதில் சிக்கல் உள்ளது. 8. கல்வியுரிமைச் சட்டம், தேசிய கலைத் திட்டம் ஆகியவற்றை மீறும் பல அம்சங்கள் இதில் உள்ளன. 9. சமூகப் பங்கேற்பும் சமூகக் கண்காணிப்பும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. 10. தனியாரின் கல்வித் தரம், திறமை, சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி அரசு மிகை மதிப்பீடு கொண்டிருக்கிறது. 11. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைகளை மீறுவது என்பது மாநகரங்களில்கூட சர்வசாதாரண நிகழ்வு. இந்நிலையில், அரசுப் பணத்தையும் நிலத்தையும் கொடுத்துத் தனியாரை நிர்வகிக்கச் சொல்வது விதிமுறை மீறலே; நீதித் துறையில்கூட இவர்களது ஒழுங்குமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது. 12. இத்திட்டம் கட்டற்ற லஞ்சலாவண்யத்தை ஊடுருவச் செய்து, மிக மோசமான விளைவுகளைச் சமூகத்தில் உருவாக்கும். 13. ஜனநாயக நாடுகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானதே. இதைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வித் துறையில் தனியார்மயத்துக்கு வித்திடுவது, அளவிட முடியாத, சரிசெய்ய இயலாத விளைவுகளை இந்தியக் கல்வி முறையில் உருவாக்கும். 30-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது.
அவசரநிலைக் காலக் கோலம்
இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட பல பாதகங்களில் ஒன்றுதான் இந்தத் திட்டம். மாநில அரசு என்பது மத்திய அரசின் உதவியாளர் என்ற பாணியில் மத்திய அரசு நடத்துகிறது. எனவேதான் மாநில அரசுகளின் கருத்தைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மத்திய அரசு வேகமாக இயங்குகிறது. மத்திய அரசு பள்ளிக்கல்வி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியது எல்லாம் மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது மட்டுமே.
அதேபோல், பன்முகத்தன்மை, பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் ஒற்றைக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முனைவது தவறு என மத்திய அரசு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இன்று இயங்கிவரும் எந்தப் பள்ளியும் பள்ளியல்ல, இனி வரவிருக்கும் பள்ளிகளே பள்ளிகள் என்னும் தொனியை மாதிரிப் பள்ளிகள் என்ற அறிவிப்பு தோற்றுவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலு கையை அள்ளித் தருகிற அரசு, கனிமவள மேலாண்மையில் தனியார்மயமாக்கல் கொள்கை வழியாகச் சட்டரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பான வழிகளிலும் பல லட்சம் கோடி ரூபாய்களை அதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் அரசு இப்போது கல்வித் துறையையும் முழுக்க தாரைவார்க்க நினைக்கிறது.
ஆப்பிரிக்காவுக்கும் பின்னே
உலகில் முன்னேறிய நாடுகள் மட்டுமல்ல, ஏழை நாடுகள்கூட நம்மைவிட அதிகமாகக் கல்வியில் முதலீடு செய்கின்றன. 16 ஆப்பிரிக்க நாடுகளைப் பட்டியலிட்டு, அந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் தனிநபர் வருவாயும் நம் நாட்டைவிடப் பன்மடங்கு குறைவு எனக் கூறிவிட்டு, அந்நாடுகளின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளும் மனிதவள மேம்பாடும் நம்மைவிடப் பன்மடங்கு அதிகம் என்று சென்னும் டிரீஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் என்னும் ஒரு அளவீட்டில்கூட நாம் இன்னும் எத்தியோப்பியாவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாது. இதெல்லாம் தற்போதைய மத்திய அரசின் அக்கறையில் இல்லை. கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள்நலன் மலரும் என்ற மூடநம்பிக்கையில் மத்திய அரசு அது ஆழமாக மூழ்கியுள்ளது!
- நா. மணி, பேராசிரியர்

தாய் மொழி

பா. மதிவாணன்


Thanks to Hindu 

ஜெயமோகன் முன்வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. “இனி, ஆங்கிலம் தவிர்க்கவே முடியாதது.”
தவிர்க்கவே முடியாத ஆங்கிலத்தோடு தமிழையும் நம் பள்ளிகளில் இயல்பாகக் கற்ற மிகப் பலர் இப்போதும் இருக்கின்றார்கள். அண்மைக்கால ஆங்கிலப் பிரமை என்பது அரசியல் - வணிகக் கூட்டின் விளைவு.
2. “எழுத்துப் பயிற்சி குழந்தைகள் மீது திணிக்கப்படும் கடின உழைப்பு.’’
சீனம் முதலிய மொழிகளின் பயிற்சியோடு ஒப்பிட்டால், தமிழ் கற்றல் மிகக் குறைந்த உழைப்பே ஆகும்.
3. “தாய் மொழிகள் இந்தியாவில் கைவிடப்படு கின்றன.”
முதல் கூற்றுக்குச் சொல்லப்பட்டதே இதற்கும் பொருந்தும். சில சமூகமேட்டிமைக் குழுக்களை நோக்கிய ஏக்கமும் போலித் தமிழ்க் கூத்தடிப்புகளால் விளைந்த ஏமாற்றமும் பெரும்பான்மை மக்களைத் தாய்மொழித் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாக்கி விட்டன. மேலும் ஒன்று உண்டு. திருச்சியி லிருந்து மயிலாடுதுறை வரை மட்டும் செல்லும் தொடர் வண்டியில் சீட்டு வாங்கினேன். அதில் தமிழே இல்லை. கைவிட்டது மக்களா? அரசா? அரசியலா?
4. “எழுத்துகள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல.”
அடையாளங்களை வலிந்து புகுத்துவதும் கூடாது. மேலும், இந்திய மொழிகள் அனைத்துக்கும் நாகரி வடிவைக் கையாளலாம் என்ற கருத்துக்குப் புதுமைப்பித்தன் முதலியோர் ஆற்றிய எதிர்வினையைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். (புதுமைப்பித்தன், 1998, அன்னையிட்ட தீ, காலச்சுவடு பதிப்பகம், பக். 354 - 357.)
5. “இன்றைய தொழில்நுட்பத்தில் எந்த எழுத்துருவையும் பிறிதொன்றுக்கு மாற்றலாம்.”
தொழில்நுட்ப முன்னேற்றத்தை எழுத்துப் பயிற்சிக்கும் பயன்படுத்த முயலலாம்.
6. “எல்லா மாற்றங்களும் முதலில் அதீதமாகத் தோன்றும்.”
தமிழைப் படிப்படியே கைவிட்டு ஆங்கிலத்தையே ‘தாய்மொழி’ஆக்கிக்கொள்ளலாம் என்கிற அதீதாதீத மாற்றம்கூடத் தமிழகத்தில் எப்போதோ முன்வைக்கப்பட்டுவிட்டது. வரிவடிவம் உட்பட மரபின் உயிர்ப்போடு மாற்றங்களை இயல்பாக உள்வாங்கிக்கொண்டு தமிழ் தொடர வேண்டும்; தொடர முடியும். ஆனால், பிழைப்புவாதமும் வறட்டுப் பகுத்தறிவும் ஆதிக்க சக்திகளும் அதீத அறிவாண்மையரும் கைகோத்துக்கொண்டால், அப்பாவித் தமிழ் மக்கள் என்னாவார்கள்? ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ? ’- பாரதி.
- பா. மதிவாணன், கல்வியாளர்,

அறிவியலுக்கு பாரத ரத்னா

பி.ஏ. கிருஷ்ணன்

- Hindu Magazine
இந்திய அரசு, சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்திருக்கிறது. நண்பர் ஒருவர் கூறியபடி, ராவ் யார் என்பதே 99 சதவீத இந்தியர்களுக்குத் தெரியாது. இவ்வாறு சொல்வதால், அவரது புகழை நான் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியர்கள் அறிவியல்மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
பேரறிஞர்
79 வயதான ராவின் சாதனை உலக அளவில் மெச்சப்படுகிறது. வேதியியல் துறையிலும் நானோடெக்னாலஜி துறையிலும் 1,500 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 45 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹெர்ஷ் அளவீடு (ஹெர்ஷ் இண்டெக்ஸ்) என்று ஒன்று உலகம் முழுவதும் கையாளப்படுகிறது. இது விஞ்ஞானி ஒருவர் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவு மற்ற விஞ்ஞானிகளால் கவனிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும். இதன்படி, ராவின் அளவீட்டு எண் 93+. இவரது கட்டுரைகள் 44,000 முறை விஞ்ஞானிகளால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே இந்த அளவு உலக விஞ்ஞானிகளால் கவனம் பெற்றவர் இவர் ஒருவர்தான்.
காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராவ் அமெரிக்காவில் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் முனைவருக்கான ஆராய்ச்சி செய்தார். பின்னர், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1959-ம் ஆண்டு இந்தியா திரும்பியதும் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) சேர்ந்தார். பின்னர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பணிபுரிந்தார். 1984-ம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அவர், அங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு முதுநிலை அறிவியல் ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் நிறுவியவர் இவரே. மையத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பல ஆண்டுகள் இயங்கினார். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதன் காரணங்களில் இரண்டைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, இவர் அறிவியல் நிறுவனங்களைக் கட்டமைத்தது. மற்றது, அவை திறமையாக இயங்க உறுதுணையாக நின்றது. நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் ராவை இருமுறை சந்தித்திருக்கிறேன். எளிமையானவர். அதிகம் பேசாதவர். செய்வதைத் திறமையாக, தவறேதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு செய்யவில்லை என்றால், மிகுந்த கோபம் கொள்வார் என்று அவரிடம் பணிபுரிந்த சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவரது மேற்பார்வையில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று, கருத்துத் திருட்டு சம்பந்தமாக, சென்ற ஆண்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பழியைத் தனது மாணவர்மீது போட்டு, தான் தப்பித்துக்கொள்ள முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது வைக்கப்பட்டது. ஆனால், இவருடைய திறமையைப் பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அரசுகளும் இவரைக் கௌரவித்துள்ளன.
இந்தியாவில் அறிவியலின் நிலைமை
இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் இருப்பதே இத்தனை நாளும் நம்மில் பலருக்குத் தெரியாதது இந்தியாவில் அறிவியலின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. “இந்திய அறிவியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது” என்று அறிவியல் அமைச்சகத்தில் பணிபுரியும், தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், சில நாட்களுக்கு முன்னால்தான் என்னிடம் கவலையோடு சொன்னார். நாடு முழுவதும் அறிவியல் துறையில் சேர்ந்து படிப்பவர்களில் திறமையானவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பக் கல்விதான் வேலைவாய்ப்புகளைத் தரும் என்ற மந்தைபுத்தி இளைய தலைமுறையினரை அறிவியலிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது.
ராவின் ஹெர்ஷ் அளவீட்டு எண் 93+ என்று சொன்னேன். இந்தியாவிலேயே முதன்மையானது அவருடையதுதான் என்று எண்ணுகிறேன். ஆனால், உலக அளவில் ஒப்பிடும்போது இவரது சாதனை பெரும் உயரத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. வேதியியல் துறையிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் வைட்சைட்ஸ் என்பவர் 169 பெற்று முதல் நிலையில் இருக்கிறார்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சியை உலகம் எப்படி மதிப்பிடுகிறது?
உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழான ‘நேச்சர்’, ஒவ்வொரு ஆண்டும் அது வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. 2012-ம் ஆண்டின் அறிக்கை சமீபத்தில் வந்தது. அது தந்திருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றன. ‘நேச்சர்’ இதழ்களில் 2,236 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு, அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சீனாவுக்கு ஆறாவது இடம். இந்தியாவின் இடம் 24. உலகின் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலையும் அது வெளியிட்டிருக்கிறது. 200 நிறுவனங்கள்! ஒன்றுகூட இந்தியாவிலிருந்து இல்லை. சீனத்தின் ஒன்பது நிறுவனங்கள் பட்டியலில் இருக்கின்றன. இதைவிட ஆச்சரியம் தரக்கூடிய தகவல் என்னவென்றால், எதிர்காலத்தில் அறிவியல் துறையில் கவனிக்கப்பட வேண்டியவை என்று ஐந்து நாடுகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவை சீனா, அயர்லாந்து, பிரேசில், கென்யா, மற்றும் சவூதி அரேபியா. இந்தியா, கணக்கிலேயே வரவில்லை. ஆசியாவில்கூட, இந்தியா ஏழாவது இடத்தில் தைவானுக்கும் சிங்கப்பூருக்கும் பின்னால் இருக்கிறது. மொத்த அறிக்கையில் இந்தியாவின் பெயர் இரண்டு இடங்களில்தான் வருகிறது.
வழிதான் என்ன?
இந்த அறிக்கையை வைத்து இந்திய அறிவியலைக் குறைத்து அளவிட முடியாது என்று சொல்வதில் சிறிது உண்மை இருக்கிறது. ஆனால், பிரச்சினைகளையும் குறைத்து அளவிட முடியாது. துடிப்பான பல ஆராய்ச்சியாளர்களிடம் நான் பேசியிருக்கிறேன். ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், இந்திய அறிவியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசு நிறுவனங்களுக்கும், இளைய தலைவர்கள் வேண்டும் என்கிறார்கள் அவர்கள். பெரியவர்கள் வெளியில் நின்று ஆலோசனை வழங்கலாம். ஆனால், நேரடி நிர்வாகத்தில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இளைய விஞ்ஞானிகளின் குரல்கள் அரசுக்குச் சென்றடைய எந்த ஒரு சாதனமும் இல்லை என்பதும் உண்மை. எனவே, வெளிநாடுகளிலிருந்து கனவுகளோடு வந்த பலர், திரும்பச் சென்றுவிட்டனர்.
எதிர்காலம்
சுடர்மிகும் அறிவு படைத்த இளைஞர்களை அறிவியலை நோக்கி வரச் செய்வதே நாம் இன்று செய்ய வேண்டியது. இதை மிக முனைப்போடு செய்துவருபவர் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ராமசாமி அவர்கள். தமிழகத்தைச் சார்ந்தவர். இவரால் கொண்டுவரப்பட்ட ‘இன்ஸ்பையர்’ திட்டம் நாடெங்கும் போற்றப்படுகிறது. 10 வயதில் தொடங்கி 32 வயது வரை அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்காமலே இன்று ஒரு திறமையான மாணவனால் அறிவியலில் உயர்கல்வி பெற முடியும். தமிழகத்தில் இந்தத் திட்டம் அதிகக் கவனிப்புப் பெறாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.
சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி, இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்பும் என்று நம்புகிறேன். குறிப்பாக, தமிழக இளைஞர்களை.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற நால்வரில் மூவர் தமிழர்கள் என்பதை நமது இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.