Hindu Magazine
உளவியல் அறிஞரான சிக்மண்ட் ஃபிராய்ட் கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து ‘ஈடிபஸ்’கதையை வைத்தே மனிதனின் மனச் சிக்கலைக் காண்பித்தார். உலக அளவில் இன்றும் பேசப்படுகின்ற சிண்ட்ரல்லாவின் மனவியலை வர்ணிக்கும் கூறுகள் இன்றைய நவீன மனிதக் கூறுகளைக் காட்டுகின்றன. ஒருவேளை பிராய்ட், எரிக் எரிக்ஸன், ஆட்லர், யுங் போன்ற உளவியல் அறிஞர்கள், மரபார்ந்த நமது இந்தியக் கதை மரபுகளைக் கேட்டிருந்தால் மனித குணங்களை விவரிக்க இப்பாத்திரங்களின் பெயர்களைக்கூட அவர்கள் வைத்திருக்கக்கூடும். ஆனால், நமக்கோ எல்லாம் தேவையற்றவையாக மாறிவிட்டன.
கொடுத்தல், யார் கேட்டாலும் கொடுத்தல், எதைக் கேட்டாலும் கொடுத்தல், கொடுத்தலின் மூலமாகக் கிடைத்த தர்மங்களையெல்லாமும் தாரைவார்த்துக் கொடுத்தல் எனும் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றைக்கு நினைத்துப்பாருங்கள். இந்த நவீன உலகுக்கு கர்ணனின் கொடை ஏன் வேண்டாதது ஆகிவிட்டது என்று யோசித்துப்பாருங்கள். இந்த நவீன உலகம் ஏன் இவ்வளவு இரக்கமற்றுப்போய்விட்டது என்பதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும்.
அண்ணல் காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிவந்ததற்குக் காரணம், அவர் லண்டனில் படித்த பாரீஸ்டர் வக்கீல் படிப்பல்ல. தனது இளம்பிராயத்தில் கேட்ட ஹரிச்சந்திர புராணமும் தாய் - தந்தையர்களைக் காத்த சிரவணன் கதையும்தான். சத்ரபதி சிவாஜி வீர மகனாக உருவெடுத்ததற்குக் காரணம், சிறுபருவத்தில் அவருடைய அன்னை சொன்ன கதைகளே.
கதைகள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய படைப்புத் திறனுக்கு உயிர்கொடுக்கின்றன. உங்களுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போகலாம். கொஞ்சகொஞ்சமாக அறக்கூறுகள் யாவும் அழிந்துவரும் இவ்வுலகில், எல்லாம் அற்றுப்போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில், நிர்க்கதியான சூழலில் பற்றிக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பற்றுக்கோல் வேண்டும். அதற்காகவேனும் தயவுசெய்து கதைசொல்லிகளைத் தேடுங்கள்!
தேனுகா, மூத்த எழுத்தாளர், கலை விமர்சகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக