செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஊழல்

வெளிப்படையாகவும் முறையான வழிமுறைகளிலும் ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்துக்காக 1993 முதல் வழங்கப்பட்ட நிலக்கரி வெட்டியெடுப்பு உரிமைகளுக்கான 214 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறது.
முறையாக விலையை நிர்ணயிக்காமல் ஆட்சியாளர்களின் விருப்பப்படி இந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதால் அரசுக்குக் கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டது; தனியாருக்கோ கொள்ளை லாபம்! நிலக்கரித் துறையின் செயலாளர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் இந்த ஒதுக்கீடுகள் நடந்திருக்கின்றன. ஆட்சேபித்த அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட்டார். ஆளும் தரப்பும் அதிகார வர்க்கமும் ஊழலால் எந்த அளவுக்குப் புரையோடிப்போயிருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம்தான் இந்த மாபெரும் ஊழல். சற்றுத் தாமதமாக விழித்துக்கொண்டாலும் சாட்டையைக் கொஞ்சம் கடுமையாகவே சுழற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
வளர்ச்சி என்ற உச்சியை அடைய ஊழல் என்ற ஏணியையே பயன்படுத்தும் தொழில்துறைக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தரப்புக்கும் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எப்படி உவப்பானவையாக இருக்க முடியும்? தொழில் நிறுவனங்களுக்கும் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலக்கரி கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும் என்றும், அபராதம் விதித்திருப்பதால் தொழில் முனைவோருக்கு முதலீட்டு ஆர்வம் குறையும் என்றெல்லாம் போலி அக்கறையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 214 நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும்போது, நிலக்கரி அகழ்வில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. அதற்காக மத்திய அரசிடம் முன்கூட்டியே பேசி, அந்த நிலையைச் சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு உறுதியளித்த பிறகுதான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இவ்வளவு நாளாக மிகக் குறைந்த விலையில் நிலக்கரியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்த நிறுவனங்கள், தாங்கள் சம்பாதித்த லாபத்தின் சிறு பகுதியைத்தான் - டன்னுக்கு ரூ.295 - அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இருப்பினும், நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 31, 2015 வரை தொடர்ந்து நிலக்கரியை வெட்டி எடுத்துக்கொள்ள அனுமதி தந்திருக்கிறது. அதற்குள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுடையது.
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் திறனை நம்பியே மத்திய அரசு இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறது. இந்திய நிலக்கரி நிறுவனத்தால் இது முடியும் என்றால், தனியாரிடம் எதற்காக நிலக்கரி அகழ்வை விட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
நிலக்கரி தொடர்ந்து இதே அளவில் கிடைக்குமா, விலை உயராமல் பார்த்துக்கொள்ளப்படுமா, நிலக்கரி ஒப்பந்ததாரர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் கடனைப் புதிய ஏலதாரர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் திருப்தியான பதில் கிடைப்பதில்தான் இந்த முடிவின் எதிர்காலம் இருக்கிறது.
லாப வேட்டைக்காரர்களான பெருநிறுவனங்கள் மட்டுமல்லாமல், அரசும்கூட உச்ச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கையைக் கட்டிக்கொண்டு நிற்பதுதான் பெரும் அவலம். இது போன்ற தீர்ப்புகள்தான் அந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

********************
மேற்கு வங்கத்தின் சாரதா முதலீட்டு நிறுவன மோசடிகளைத் தோண்டத் தோண்ட அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைக்கின்றன. அன்னை சாரதா தேவியின் பெயரில் இந்நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.
சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சதாப்தி ராய், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, குனால் கோஷ் போன்றோர் அதன் ‘பிராண்ட் அம்பாசடர்’களாகச் செயல்பட்டார்கள். இவையெல்லாம் மக்களை இந்த நிறுவனத்தின்பால் மேலும்மேலும் ஈர்த்தன.
இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட ‘செபி’ அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 2009-ல் ‘செபி’ நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங் களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, ‘செபி’யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. ஒருநாள் விஷயம் வெடித்து முறைகேடு வெளியே வந்தது.
சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டபோது, மேற்கு வங்கக் காவல் துறை விசாரித்தால் போதும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி சியாமள சென் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். ஊழலை வெளிக்கொணர்வதைவிட, மறைக்கவே மாநில அரசு முயல்கிறது என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. இப்போது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சாரதாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். அவர்களில் 83% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகச் செலுத்தியவர்கள். ஏமாந்த ஏழைகளின் பணத்தைத் திருப்பித் தருவதற்காக மாநில அரசு ரூ. 500 கோடியை ஒதுக்கும், நான் முன்னின்று பணத்தை வாங்கித் தருகிறேன் அமைதியாக இருங்கள் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மம்தா. தனியார் நிறுவனம் அடித்த கொள்ளைக்கு மாநில அரசு ஏன் ஈடு நிற்க வேண்டும்? அதன் நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்து, அவர்களுடைய சொத்துகளை விற்று, முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதுதானே சரியான நடவடிக்கை?
இப்படி நிதி மோசடி நிறுவனங்கள் மோசடி செய்யும்போதெல்லாம், சட்டத்தின் முன் கொண்டுவரப்படுபவர்கள் நிறுவன ஆட்களும் அவர் களுடைய பினாமிகளும் மட்டுமே. அப்பாவி மக்களை அவர்களிடம் இழுத்துச் செல்லும் அரசியல், அதிகாரவர்க்கத் தரகர்களும் பிரபலங் களும் எந்தத் தண்டனையும் இல்லாமல் தப்பிவிடுகிறார்கள்.
இதுபோன்ற நிறுவனங்கள் உண்டுகொழிக்க வழிவகுக்கும் நிதித் துறையின் விதிமுறை ஓட்டைகள் முற்றிலுமாக அடைக்கப்பட வேண்டும். மக்கள் பணத்தைத் தின்ற ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
****************************
இந்திய அரசியலையே ஒரு கணம் உறையவைத்திருக்கிறது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.தன்னுடைய முந்தைய ஆட்சியின்போது சட்ட விரோதமான வகையில், சொத்துகளைக் குவித்தார் என்று தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (1) (இ) மற்றும் 13 (2) பிரிவுகளின் கீழ், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதத்தையும் விதித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்திருக்கிறார்.
இந்தத் தீர்ப்பின் தொடர்ச்சியாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, முதல்வர் பதவியையும் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்ததோடு, தண்டனைக் காலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகான 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்திருக்கிறார் ஜெயலலிதா.
இதுவரையிலான ஜெயலலிதாவின் எழுச்சிகள், வீழ்ச்சிகளோடு பட்டியலிட்டு ஒப்பிடக் கூடிய விஷயம் அல்ல இது. அதேபோல, ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு அரசியல் தலைவர் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுவதும் சரியான வழிமுறை அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கோடு ஒப்பிட்டு நாம் அணுக வேண்டிய விவகாரம் இது.
இந்திய அரசியலைச் செல்லரிக்கும் மிகப் பெரிய புற்றுநோயாக உருவெடுத்துவருகிறது ஊழல். அரசியல் வர்க்கத்துக்கு இணையாக அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது. நாட்டின் எந்த மாநிலமும் ஊழலுக்கு விதிவிலக்கானதாக இல்லை. அறத்தின் மையமாக இருக்க வேண்டிய அமைப்புகளும், அதைப் பாதுகாக்க வேண்டிய மனிதர்களும் நெறி பிறழும்போது, சாதாரணக் குடிமக்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பின் மீது மட்டுமல்லாமல், அறத்தின் மீதே நம்பிக்கையற்றவர்களாக மாறிப்போகிறார்கள்.
நீதிமன்றங்கள் தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்யும்போது சமூகத்தில் நடக்கும் முக்கியமான பணி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோ, அவர்கள் தண்டிக்கப்படுவதோகூட இல்லை; அறத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் இப்படிப்பட்ட சாதாரண மக்களை மீட்டெடுப்பதே ஆகும். அறத்தின் முன் அனைவரும் ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற ஒளிவிளக்கைக் காப்பதே ஆகும்.
ஏறத்தாழ 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இது. அதிகார உச்சத்தின் உக்கிரத்தை, அழுத்தங்களை, எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட விசாரணை. இறுதியில், அரசுத் தரப்பும் இந்த வழக்கை வெவ்வேறு காலங்களில் விசாரித்த பல்வேறு நீதிபதிகளும் எல்லா இடர்ப்பாடுகளையும் தாண்டி, தம்முடைய கடமையை நிறைவேற்றியிருக்கிறார்கள். நீதியின் முன் எல்லோருமே சமம் எனும் ஒளி பொருந்திய உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்திய நீதித் துறையின் பணி இந்திய ஜனநாயகத்தின் மீதான கம்பீரத்தை மேலும் ஒருபடி உயர்த்தியிருக்கிறது. எப்போதும் வாய்மையே வெல்லட்டும்!
*********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக